லேபிள்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

மருத்துவக்காப்பீட்டின் அதிர்ச்சி வைத்தியம்.

'ஐந்து லட்ச ரூபாய்க்கு மெடிக்ளைம் பாலிசி எடுத்தாச்சு. இனி எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வந்தாலும் எனக்கொன்றும் கவலை யில்லை!'' - இப்படி ஒரு நினைப்பு உங்களுக்கு இருந்தால் அதைக் கொஞ்சம் ஓரங்கட்டி ஒதுக்கி வையுங்கள். காரணம், இந்தியாவின் நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களும் ஒன்றாகச் சேர்ந்து, 'கேஷ்லெஸ்' வசதி இருக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் புகழ்பெற்ற பெரும்பாலான மருத்துவமனைகள் இந்த கேஷ்லெஸ் பட்டியலில் இடம் பெறாததுதான். முதல் கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் இது சோதனை முயற்சியாக அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. இதன் பிறகு மற்ற பெரிய நகரங்களுக்கும் அமல்படுத்தப்படுமாம். 

இந்தியாவில் இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வே சில ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தது. அதன் பிறகு இப்போதுதான் மெடிக்ளைம் பற்றிய விழிப்புணர்வு வந்திருக்கிறது. இதுவரை இந்தியாவில் சுமார் 3 சதவிகித மக்கள் மட்டுமே மெடிக்ளைம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் மெடிக்ளைம் பாலிசி எடுத்தவர்களில் பலரும் க்ளைம் பெறுகிறார்கள். அதாவது, ஒரு நிறுவனம் ஓர் ஆண்டில் வசூலித்த பிரீமியத்தைவிட க்ளைமுக்காக அதிகம் செலவு செய்கிறது. தற்போதைய நிலையில் சராசரியாக 130%-க்கு மேல் செலவு செய்கிறதாம். 

''கேஷ்லெஸ் விஷயத்தில் ஏன் இப்படி முடிவு?'' என அரசுத் துறையில் இருக்கும் சில முக்கிய அதிகாரிகளிடம் பேசினோம்.

''இது திடீரென்று ஏற்பட்டதல்ல. இரண்டு வருடத்துக்கு முன்னரே வாங்கும் பிரீமியத்துக்கும் கொடுக்கும் க்ளைம்களுக்கும் சரியாக இருந்தது. அதன் பிறகு அந்த விகிதம் மெள்ள அதிகரித்தது. அப்போதே இதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டோம். நான்கு பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்து தொடர்ச்சியாக ஆராய்ந் ததன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இதுவரை சாதாரண மக்களிடம் இந்த மெடிக் ளைம் பாலிசி பெரிய அளவில் சென்று சேர வில்லை. இதை எடுத்தி ருப்பவர்கள் எல்லாம் ஓரளவுக்குப் படித்த நகர்ப்புற மக்கள்தான். சாதாரண விஷயங்களுக்குக்கூட இவர்கள் பெரிய மருத்துவமனைகளுக்குத்தான் செல்கிறார்கள். சில லட்சங் களில் பாலிசி தொகை இருக்கிறது என்பதற்காக டீலக்ஸ் அறைகளில்தான் தங்குகிறார்கள். இதுவே அவர் களிடம் பாலிசி இல்லை என்றால் இது போன்ற டீலக்ஸ் ரூம்களில் தங்க மாட்டார்கள். பாலிசிதாரர்கள்தான் இப்படிச் செய்கிறார்கள் என்றால் மருத்துவமனைகள் செய்யும் காரியங்கள் சொல்லி மாளாது. சாதாரணமாக ஒருவருக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் மெடிக்ளைம் பாலிசிதாரருக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் காட்டுகின்றன மருத்துவமனைகள். சிகிச்சைக் கட்டணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் கட்டப் போகிறது என்று தெரிந்தவுடன் பில்லை எக்கச்சக்கமாக ஏற்றிவிடுகிறார்கள். இது தவிர, நூதனமான பல வழிகளிலும் தேவையில்லாமல் பணத்தைப் பறிக்கிறார்கள்.

படம்

மெடிக்ளைம் பாலிசி வைத்திருப்பவர்களுக்கு எப்போதுமே சாதாரண ரூம்களை தவிர்த்து டீலக்ஸ் ரூம்களை கொடுப்பது...

சாதாரணமான சிகிச்சைக்குச் சென்றால்கூட தேவையில்லாத பல சோதனைகளை எடுக்கச் சொல்வது... 

அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கச் சொல்வது...

சிறப்பு டாக்டர் வந்து பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் சிறப்பு டாக்டருக்காக எவ்வளவு கட்டணமோ அவ்வளவு கட்டணத்தை பில்லில் சேர்ப்பது...

இது போன்ற பல தேவையில்லாத காரணங்களால் க்ளைமின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. 

தவிர, எந்த விதமான சிகிச்சையைக் கொடுக்க வேண்டும் என்பதை டி.பி.ஏ. (மருத்துவமனையின் பில்லை அப்ரூவ் செய்யும் நிறுவனங்கள்) முடிவு செய்ய முடியாது என்று நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பும் அவர்களுக்குச் சாதகமாகவே இருக்கிறது. இப்படி பல விஷயங்களால் பாதிக்கப்பட்ட பிறகே இப்போது இப்படி ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறோம்'' என்றார்கள் அந்த அதிகாரிகள். 

படம்

மேலும், ''எங்களது டி.பி.ஏ. அதிகாரி களும் மருத்துவமனைகளிட பேசி கட்டணங்களைக் குறைத்துக் கொள்ளுங் கள் என்று கேட்க முடிவதில்லை. அப்படிக் கேட்டாலும் இதுதான் எங்களின் கட்டணம், இதற்குக் கீழே குறைக்க முடியாது என்று சொல்லவே, நாங்கள் எங்களின் முடிவை மறுபரிசீலனை செய்தோம். அதன் பிறகு எங்களது டி.பி.ஏ.க்கள் நான்கு முக்கியமான நகரங்களில் இருக்கும் மருத்துவமனை களில் பேச்சு நடத்தியதன் அடிப்படையில் ஒவ்வொரு நகரங்களிலும் கேஷ்லெஸ் வசதி கொண்ட மருத்துவமனைகளின் பட்டியலை வெளியிட்டோம்.

படம்

இப்போது மூன்று சதவிகித மக்கள் மட்டுமே மெடிக்ளைம் எடுத்திருக் கிறார்கள். ஒருவேளை அதிக மக்கள் மெடிக்ளைம் பாலிசியை எடுத்திருந்தால் க்ளைம் விகிதம் குறையக்கூடுமே தவிர, வேறு எந்த வழிகளிலும் க்ளைம் விகிதத்தைக் குறைக்க முடியாது'' என்றார் அந்த அதிகாரி.



''கேஷ்லெஸ் வசதி கொண்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டால் கஷ்டப்பட்டு பிரீமியம் கட்டிய சாதாரண மக்கள் பாதிக்கப் படுவார்களே! அவர்கள் அவசரச் சிகிச்சைக்கு எங்கே போவார்கள்'' என நியூ இந்தியா அஷ்யூரன்ஸின் மண்டல மேலாளர் ஹேமாமாலினியிடம் கேட்டோம். 

''நாங்கள் கேஷ்லெஸ் வசதியையே நிறுத்திவிட வில்லை. இந்த வசதி இருக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை மாற்றி அமைத்திருக்கிறோம், அவ்வளவுதான்! தற்போதைய நிலையில் சென்னையில் மட்டும் 65 மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் வசதி இருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் சில மருத்துவமனைகள் புதிதாகச் சேர்க்கப்படலாம். இப்போது இருப்பதில் சில நீக்கவும் படலாம். 

இந்த உத்தரவால் மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சையே எடுக்கக்கூடாது என்பதல்ல அர்த்தம். மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டு, அதற்கான பில்களை எங்களிடம் கொடுத்தால் அதற்கான க்ளைமை பெறலாம். முதலில் செலவு செய்துவிட்டால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பிற்பாடு பணம் தருமா, தராதா என மக்கள் பயப்படுகிறார்கள். விதிகளுக்கு உட்பட்டு நீங்கள் சிகிச்சை எடுத்திருந்தால் உங்களுக்கான க்ளைமை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மறுக்கப் போவதில்லை. மிகச் சில சமயங்களில் மட்டுமே முழுத்தொகையும் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. இதே வாய்ப்பு கேஷ்லெஸ் திட்டத்திலும் இருக்கிறது. உதாரணத்துக்கு நீங்கள் வாங்கும் வைட்டமின் மாத்திரைகளுக்கு கேஷ்லெஸ் திட்டத்திலும் பணம் கிடைக்காது. இதுபோல நிறைய விஷயங்களுக்கு கேஷ்லெஸ் திட்டத்திலும் விலக்கு இருக்கிறது. அதே விதிமுறைகள்தான் ரீஇம்பஸ்மன்ட் திட்டத்திலும் அனுசரிக்கப்படுகிறது. 

தவிர, திட்டமிட்டுச் செய்யப்படும் சிகிச்சைக்கு தான் இந்த 65 மருத்துவமனைகள். அவசரச் சிகிச்சைக்கு ஏற்கெனவே பட்டியலில் உள்ள மருத்துவ மனைகளிலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இந்த 65 மருத்துவமனைகள் என்பது தனிநபர் பாலிசிக்குத்தானே தவிர குரூப் பாலிசிக்குக் கிடையாது என்பதும் முக்கியமான விஷயம்'' என்று முடித்தார் ஹேமாமாலினி.

ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பாலிசி எடுத்த ஒரே காரணத்துக்காக நல்ல மருத்துவர்கள் இருக்கும் மருத்துவமனைகளை விட்டு விட்டு லிஸ்டில் இருக்கும் சாதாரண மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற முடியும் என்று ஆக்கியிருப்பது துரதிருஷ்டம்தான். மேலும் தனிநபர் பாலிஸிகளுக்கு மட்டும்தான் இந்த கெடுபிடி என்பது ஏற்கெனவே பாலிஸி எடுக்காத 97 சதவிகிதத்தினரை மெடிக்ளைம் பாலிஸி வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். இதற்கான தீர்வு மருத்துவமனைகள் நியாயமான கட்டணத்தை கடைபிடிக்கவேண்டும் என்பதேயாகும். தேவையென்றால் அரசாங்கம் தலையிட்டு எல்லோரும் பயன்படும்விதம் சட்டங்களை இயற்றலாம்.

கருத்துகள் இல்லை:

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts