லேபிள்கள்

வியாழன், 29 ஜூன், 2017

வீட்டை குத்தகைக்கு விடும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

{?} என் வீட்டை பத்து வருடத்துக்கு குத்தகைக்கு விடலாம் என்று இருக்கிறேன். என்னென்ன கவனிக்க வேண்டும்?

சுரேஷ்பாபு, வழக்கறிஞர், சென்னை.

''குடியிருக்கப் போகும் நபர் சரியானவரா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். வழக்கறிஞர் உதவியுடன் குத்தகை பத்திரத்தை தயார் செய்யுங்கள். முத்திரைத்தாளில் குத்தகை பத்திரம் இருக்க வேண்டும். தவிர, அது பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்யப்பட வேண்டும்.



வீட்டிலுள்ள வசதிகளை (அறைகள், லிஃப்ட்  வசதி, மின்சார வசதி) பற்றி குத்தகை பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். எதற்காக வீட்டை குத்தகைக்கு எடுக்கிறார் என்றும், இந்தந்த காரணங்களுக்கு வீட்டை உபயோகிக்கலாம், இதை தவிர்த்து வேறு காரணங்களுக்காக உபயோகிக்கக் கூடாது என்றும் குறிப்பிட வேண்டும்.

குத்தகைக்கு எடுப்பவர் வேறு ஒருவருக்கு வீட்டை குத்தகைக்குவிட வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தடுக்கும் விதத்தில் கவனம் அவசியம். மேலும், நீங்கள் குத்தகைக்கு விடப்போகும் தொகையையும், வரி உள்பட அனைத்து விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். மின்சாரக் கட்டணத்தை குடியிருப்போர்தான் கட்ட வேண்டும். குடியிருப்போர் பயன்படுத்தும் மின்சாரத்தை அளவிட மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் குறிப்பிட வேண்டும்.

குத்தகைக் காலம் நீட்டிக்கப்படுமா, இல்லையா என்பதைக் குறிப்பிட வேண்டும். குத்தகைக் காலம் முடிவடையும் முன்னரே வீட்டை காலி செய்யச் சொல்லும் உரிமை உரிமையாளருக்கு உள்ளதா என்பதையும் குறிப்பிட வேண்டும். உரிமை உள்ளது எனில் என்ன காரணத்துக்காக நீங்கள் காலி செய்யச் சொல்ல முடியும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

குடியிருப்போர் உங்களின் வீட்டை அடமானம் வைக்கவோ, மூன்றாம் நபருக்கு விற்கவோ வாய்ப்பிருக்கிறது. அதனால் குத்தகைக்கு விட்டபிறகு உங்கள் சொத்தின் வில்லங்க சான்றிதழை பதிவு அலுவலகத்தில் வருடம் ஒருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள். ஏதாவது பிரச்னை என்றால் உடனே தீர்வு காண முடியும். உங்களுக்கும் குடியிருப்போருக்கும் எதாவது பிரச்னை இருந்தால், புகார் தர நடுவர் ஒருவரையும் பத்திரத்தில் குறிப்பிடுங்கள்.''


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 27 ஜூன், 2017

நிதி... மதி... நிம்மதி –

குடும்ப நிதி மேலாண்மை தொடர்பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

திருமணம் என்னும் திருப்புமுனை!
'நீங்க போயிட்டு வாங்கடா, நான் வரலை. ஏற்கெனவே நான் 'கமிட்'ஆன செலவுக்கே என்ன பண்றதுன்னு தெரியல. இதுல, பார்ட்டி, ட்ரீட்ன்னு வேற நிறைய இருக்கு. கொஞ்ச நாளைக்கு என்னை விட்டுருங்க, ப்ளீஸ்!'


'அப்பா, ஆஃபிஸ்ல வேலை ரொம்ப இருக்குப்பா. அதனால நான் அடுத்த மாசமே வர்றேனே. இந்தச் செலவெல்லாம் அப்பவே வச்சிக்கலாமே!'
'சார்.. நம்ம கோபி, லீவு கேட்டானே. எனக்கு 'ஓவர்-டைம்' போட்டுக் குடுத்தீங்கன்னா, நான் வேணுமானா அவனோட வேலையெல்லாம் முடிச்சுக் குடுக்கட்டுமா?'
'முரளி... உனக்குப் பதிலா நான் பெங்களூரு போயிட்டு வர்றேனே... வேற ஒண்ணும் இல்லை... டூர் அலவன்ஸ் கிடைக்குமே! கொஞ்சம் பணம் தேவையா இருக்குடா...'
இன்றைய இளைஞர்களுக்கு மேற்சொன்ன உரையாடல்களின் 'அர்த்தம்' நன்றாகப் புரியும். ஆம், இ்வன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறான்.
நல்லதுதான். மனம் திறந்து வாழ்த்துவோம்.

மிக நிச்சயமாக, ஒரு விஷயத்தில் இளைஞர்களிடம் நல்ல தெளிவு பிறந்து இருக்கிறது. அதுதான், கல்யாண வாழ்க்கைக்குப் பிறகான  திட்டமிடல். குறிப்பாக, செலவு செய்யும் போக்கில் ஒரு மாற்றம் தானாகவே ஏற்பட்டுவிடுகிறது. நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து 'கும்பலாக'த் திரியும் நிலை, குறுகிய காலத்திலேயே மறைந்துவிடுகிறது. பதிலுக்கு, 'இரண்டு பேர்' மட்டுமே ஊர் சுற்றுகின்றனர்!
எண்ணிக்கை குறைந்து போனது மட்டுமே இல்லை. எதற்காக, எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதிலும் ஒரு மாற்றம். தனக்கான கேளிக்கை, விருப்பம் என்பது பின்னுக்குப் போய், தம் இருவருக்கும் பொது வான செலவு; அல்லது 'மற்றவருக்கான' தேவை முன்னுக்கு வந்துவிடுகிறது. அதனால் செலவிடுதலில் 'தரம் சார்ந்த மாற்றம்'
  (Qualitative change) பரிணமித்து விடுகிறது.
அன்றைய, அப்போதைய தேவையைவிடவும், சற்றே நீண்ட காலத்துக்குத் தேவை யானதை வாங்குவதில் அக்கறை பிறக்கிறது. நல்ல உடைகள், காலணிகள், அணிகலன்கள், அழகுப் பொருட்கள், கேளிக்கைச் செலவுகள் ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன.

இவையெல்லாம், சொத்துக்கள் (Assets) வகையைச் சேர்ந்தவை அல்ல என்றாலும், சமீபத்தில் இருக்கும் எதிர்காலத்துக்கு (Near Future) பயன்படக் கூடியன என்பதில் சந்தேகம் இல்லை. ஆக, 'இன்று' என்பதில் இருந்து, 'நாளை' என்று யோசிக்கத் தொடங்குகிற இந்த வயதுதான், வாழ்க்கையில் பணத்தின் அருமையை உணர ஆரம்பிக்கிற  பருவம்.

யாரும் சொல்லித் தராம லேயே, 'நம்' இருவரின் தேவைகள் தவிர்த்து வேறு எதற்காகவும் பணத்தைச் செலவிடக் கூடாது என்கிற எண்ணம் உதயமா கிறது. இதுதான் என்று அறியா மலேயே, 'நிதி திட்டமிடல்' நடை முறைக்கு வந்துவிடுகிறது!
எவையெல்லாம் வேண்டாத செலவுகள் என்று நாம் பட்டியல் இடுகிறோமோ, அவற்றை யெல்லாம் இவர்கள் இருவரும் 'பேசிப் பேசி' தாமாகவே விலக்கி விடுகிறார்கள். அநேகமாக அத்தனை பேர் வாழ்க்கையிலும் இது நடைபெறத்தான் செய்கிறது.

மற்ற நாடுகளில் எப்படியோ தெரியவில்லை; நம் நாட்டைப் பொறுத்தவரை, 'கல்யாணம் பண்ணிட்டா... பொறுப்பு தானா வந்துரும்...' காரணம், நமது சமுதாயத்தில், திருமணம் என்பது இன்னமும்கூட, ஒரு 'பந்தம்', ஒரு 'கட்டு', ஒரு 'மைல் கல்', வாழ்க்கையில் முக்கியமான 'திருப்புமுனை' என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்து இருக்கிறது.
திருமணம் என்கிற புள்ளியில் இருந்துதான் 'குடும்பம்' என்கிற நிறுவனம் எழுகிறது. இவ்வகை இந்தியக் குடும்பங்கள், உலக அளவில் யாராலும், அசைக்க முடியாத பொருளாதார அலகுகள் (Unassailable Units of Economy) என்பதுதான் நமது வலிமை; நமது வரம். (பலரது கண்களை இதுதான் உறுத்திக் கொண்டு இருக்கிறது.)

கடந்த சில ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் படும் பாட்டை நாம் நன்கு அறிவோம். ஆனானப்பட்ட ஐரோப்பிய நாடுகளே, அதிர்ச்சியில் விழி பிதுங்கி நிற்கின்றன. ஆனால், இத்தனை 'களேபரங்களுக்கு' மத்தியிலும், இந்தியா என்னும் யானை, கம்பீரமாக நடை போட்டுக்கொண்டு இருக்கிறதே... காரணம், நம் குடும்பங்கள் பின்பற்றி வரும் 'பொறுப்புத்தன்மை'யின் விளைவாக முகிழ்ந்தது இந்தச் சாதனை.
செலவு மேலாண்மைக்கு வருவோம். இப்போதெல்லாம், ஆண், பெண் இரு சாராருமே பணிக்குச் செல்பவர்கள்தாம். ஆகவே, 'ரெண்டு வருமானம்' என்பது சாதாரணம் ஆகிவிட் டது. இதற்கேற்ப, திட்டமிடல் வேண்டும்.

எல்லாரும் சொல்கிற எளிய விதிமுறைதான் முதலில். ஒருவரின் வருமானத்தில்       குடும்பச் செலவுகளைப் பார்த்துக்கொள்ளுங்கள்; மற்றதை 'அப்படியே' சேமியுங்கள்.
'உன் சம்பளம் உனக்கு; என் சம்பளம் எனக்கு.
  சுதந்திரமாகச் செலவு செய்வோம்' என்று நடந்துகொள்ளுதல் சரியல்ல. அதுதான் 'முற்போக்குத்தனம்' என்று தவறாகப் பொருள் கொண்டுவிட வேண்டாம். உண்மையில் அது  முட்டாள் தனம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உடனடிச் செலவுகள் என்று இரண்டை வகுத்து வைத்துக் கொள்ளுங்கள். 1. இருவரும் அலுவலகம் சென்று வர ஏதேனும் ஒரு வண்டி (அல்லது, இரண்டு வண்டிகள்) 2. சொந்தமாக ஒரு வீடு.
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் வசிப்பவர்கள், சொந்த வண்டியில் பணிக்குச் சென்று வருவதில் சில சௌகரியங்கள் உண்டு. எல்லா நாட்களிலும், பொதுப் போக்குவரத்தில் மட்டுமே போய்க்கொண்டு இருக்க முடியாது. ஆகவே, சொந்தமாக ஏதேனும் ஒரு வண்டி, கட்டாயம் வேண்டியதுதான். இருந்தாலும், இயன்றவரை, பேருந்துப் பயணத்தை மேற்கொள்வது நல்லது.
சொந்த வீடு. மொத்தப் பணத்தையும் ரொக்கமாகத் தந்து வீடு வாங்குவது இயலவே இயலாத காரியம். நம் முன் உள்ள ஒரே வழி வீட்டுக் கடன். திருமணம் ஆன உடனேயே, வீட்டுக்காக திட்டமிடுதலே மிக நல்லது.

குறைந்த வயதில் வீட்டுக் கடன் வாங்கும்போது, திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு அதிகம் கிடைக்கிறது; அதனால் கூடுதலாகக் கடன் தொகை பெற முடிகிறது; நம் விருப்பத் துக்கு ஏற்றாற்போல், வீடு வாங்குவது சாத்தியம் ஆகிறது.
அனைத்துக்கும் மேலாய், நாளுக்கு நாள் வீட்டின் விலை அதிகமாகிக் கொண்டுதான் செல்லும். ஆகவே, உடனடியாக வீட்டின் மீது முதலீடு செய்வது தான் புத்திசாலித்தனம். வாடகையாகத் தரும் பணத்தின் ஒரு பகுதியை, வீட்டுக் கடன் தவணையாய்ச் செலுத்தினால், சில ஆண்டுகளில் நமக்கென்று சொந்தமாக வீடு இருக்குமே!
ஆயுள் காப்பீட்டுத் தொகை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றையும், திருமணம் ஆன முதல் சில மாதங்களிலேயே, தொடங்கிவிட வேண்டும்.
பிள்ளைகளுக்கான கல்விக்காகத் தனியே சேமித்தே ஆக வேண்டும். கல்விக் கடன், உதவித் தொகை எல்லாம் கிடைக்கும்தான். இருந்தாலும், குழந்தைகளின் எதிர்காலத்துக் காக இப்போது இருந்தே சேமிப்பதே நல்ல வழிமுறை ஆகும். மிக முக்கியமாக, பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பிற முதியோர்களின் நலனுக்காக, தம் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்தே ஆகவேண்டும். இது, நமது குடும்பம், உறவு சார்ந்த விஷயம் மட்டுமல்ல; மனிதம் சார்ந்த, சமூகம் சார்ந்த கடமையும் கூட. மறந்துவிட வேண்டாம்.

ஒரு நினைவூட்டல். 'உன் உறவுக்காரங்க...' 'என் சொந்தம்...' என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். 'வேண்டிய வர்களுக்கு' உதவுவதே இல்லறத்தின் பண்பும் பயனும் ஆகும்.
நிறைவாக, அனேகமாக இருவருக்கும் சேர்ந்தேதான் வருமானம் அவ்வப்போது உயர்ந்துகொண்டே போகும். அதற்கேற்ப, இருவரின் திட்டமிடலும் மாற வேண்டும். 'அதுதான் நீ சேர்த்து வைக்கிறே இல்லை..? அப்புறம் என்ன..? என்னோட பணத்தை 'ஜாலியா' செலவு பண்ணலாமே...' என்கிற மெத்தனம் தோன்றிவிடாமல் கவனமாகச் செயல்படல் வேண்டும்.
'சீரான செலவு - சிறப்பான வாழ்க்கை.' இதுதான் இளம் தம்பதியினர் மனதில் கொள்ள வேண்டிய ஒரே வாசகம்.
இனி நாம் காண இருப்பது 'கடன்'! அதை நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோமே என்கிறீர்களா?
இல்லை. இது மற்றொரு கோணம். கடனின் மறுபக்கம்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 25 ஜூன், 2017

குறை கூறினால் கோபம் வருகிறதா?

நாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. நாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக தவறானது.


'நீங்க படிக்கட்டுல தடுமாறி விழுந்திங்களே... அதை கவனிச்சேன்; என்னமாய் விழுந்தீங்க தெரியுமா... வேற எவனாச்சும் இப்படி விழுந்திருந்தால், பல்லுப் படுவாயெல்லாம் உடைஞ்சிருக்கும்; எலும்பெல்லாம் முறிஞ்சிருக்கும்...' என்று படு செயற்கையாக ஒருவர் விழுந்ததைக் கூட பாராட்ட, 'அப்படியா சொல்றீங்க?' என்று முகம் பூரித்துப் போகும் முகரக் கட்டைகளும் இருக்கத் தான் செய்கின்றன.
'படிக்கட்டுன்னா பார்த்து நடக்க வேணாம்; புது இடமில்ல... வீட்டு படிக்கட்டா இது... ரெண்டு கையிலயுமா இப்படி பொருட்களை வச்சுக்கிறது. அந்தப் பையை தோளில மாட்டிக்கிட்டிருந்தா, படிக்கட்டோட நீள, உயரம் தெரிஞ்சுருக்கும்ல...' என்று எவரேனும் இவரது தவறை சுட்டிக் காட்டினால், 'யோவ்... (டேய்) உன் வேலையை பாத்துக்கிட்டு போவியா... பெரிசா படிக்கட்டு இறங்குறதுக்கு எனக்கு கத்துக்குடுக்க வந்துட்டே...' என்று, தவறை சுட்டிக்காட்டியவருக்கே, பதிலடி கொடுக்கவே நம்மில் பலர் தயாராக இருக்கிறோம்.

நம் தவறை பிறர் சுட்டிக்காட்டும் போது, அதை, 'ஆமா... நீங்க சொன்னது ரொம்ப சரி...' என்று ஒப்புக் கொள்ள முன் வர வேண்டும். இதன்மூலம், இரு நன்மைகள் நிகழ்கின்றன.
'முதலாவது, நம் மனம், நமக்குள் சென்று, 'இனி பார்த்து நட... அலட்சியத்திற்கும், கவனக்குறைவிற்கும் விலை மிக அதிகம்; பல்லாயிரம் ரூபாய் செலவும், பல மாதப் படுக்கையும் நிகழ்ந்திருக்கும்...' என்று உணர்த்துகிற போது, அது ஆழ்மனதில் கல்வெட்டாய் பதிகிறது; இது, அடுத்தமுறை படிக்கட்டில் இறங்கும் போது பயன்படும்.
இரண்டாவது, 'என்னைப் பார்த்து எவனாவது வாயை திறந்தீங்க... அப்புறம் நடக்கிறதே வேற...' என்கிற எச்சரிக்கை மணியை, எவர் முன்னும் அடிக்காத காரணத்தால், 'பார்த்துப் போங்க; ஒரே சகதி...' என்று சொல்ல பலரும் முன் வருவர்.

நான் சொல்வது நடக்கிற பாதைக்கு மட்டுமல்ல... வாழ்க்கை பாதைக்கும் சேர்த்து தான். ஆம்... 'நல்லது சொன்னால், இவர் கேட்டுக் கொள்வார். பொருட்படுத்திக் காதில் வாங்கிக் கொள்வார்; செயல்படுத்துவார். நம் அக்கறையை சரி வர புரிந்து கொள்கிறவர்...' என்பன போன்ற நம்பிக்கைகளை மற்றவர்களிடையே உருவாக்கும்.
ஆனால், இவர்களது வாயை, உருட்டல், மிரட்டல்களால் அடைக்கும் போதும், வார்த்தைகளை உதாசீனப்படுத்தும் போதும் என்ன நடக்கும் தெரியுமா?
நாம் பாதிப்பு அடையும் வரை பார்த்துக் கொண்டிருந்தபின், 'இந்தாளுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்...' என்று உள்ளுக்குள் மகிழ்கிற கூட்டம் பெருத்துப் போகும்.

நம் முகத்தில் கழுவாமல் விடப்பட்ட சோப்பு நுரையையே, பிறர் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கும் போது, முதுகின் அழுக்கை யார் தான் சுட்டிக் காட்டுவதாம்?
நான் ஒருமுறை சிக்னல் ஒன்றில் பச்சை விளக்கிற்காக காத்திருந்த போது பக்கத்தில் ஸ்கூட்டரில் வந்து நின்ற பெண்மணி ஒருவர்,
தன் ஹெல்மெட்டில் இருந்த முன் பிளாஸ்டிக் தடுப்பை உயர்த்தி, 'நீங்கள் உங்கள் காரின் பின் கதவை சரியாக சாத்தவில்லை...' என்று சொன்னார். 'மிக்க நன்றி...' என, உடனே மகிழ்ச்சி தெரிவித்தேன்.
ஆனால், நான் கல்லூரி மேடையில் பேசி விட்டுக் கீழே இறங்கிய போது, 'இன்னும் கூட உங்களிடத்தில் எதிர்பார்த்தேன்...' என்று ஒரு பேராசிரியை கூறியதும், என் முகம் சுருங்கி விட்டது.
என் கோணத்தில் அது நல்ல பேச்சாக இருக்கலாம். ஆனால், அது சென்று அடைந்தவர்களை திருப்திப்படுத்தவில்லை என்கிற போது, எங்கே கோளாறு நிகழ்ந்திருக்கிறது என்று நான் பரிசீலித்திருக்க வேண்டும்.

இரு பெண்களும் என் தவறுகளை சுட்டிக்காட்டியவர்களே. ஒன்றில், எனக்கு நன்றி தெரிவிக்க தோன்றியது; மற்றதில் ஏனோ தோற்றுப் போனேன். இவருக்குமல்லவா நான் நன்றி தெரிவித்து, என் குறையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்; விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.
அடுத்த கல்லூரிக் கூட்டத்தில் பேச, குறிப்புகளை தயார் செய்த போது, அப்பேராசிரியைக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து, ஒரு தேர்வை சந்திக்கும் மாணவன் போல், என்னை கருதிக் கொண்டேன். இது பலனளித்தது என்பதை, நான் உங்களிடமாவது ஒப்புக் கொண்டாக வேண்டும்.

லேனா தமிழ்வாணன்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 23 ஜூன், 2017

பணம் அதிகம் புரளும்போது பண்ணக்கூடாத தவறுகள்!

பி.பத்மநாபன், நிதி ஆலோசகர், Fortuneplanners.comவினை விதைத்தவன் வினை அறுப்பான்; திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பது பழமொழி. கையில் நிறைய பணம் இருக்கும்போது, அதை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல், பல தவறுகளை செய்கிறோம். எல்சிடி  டிவி ஒன்று 30,000 ரூபாய் என்றாலும் அதிகம் யோசிக்காமல் வாங்குகிறோம். 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காருக்கு ஆசைப்படுகிறோம். ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் என்று எதை எதையோ வாங்குகிறோம்.

ஆனால், கையில் உள்ள பணமெல்லாம் தீர்ந்தபிறகுதான், வாங்கிய பொருட்களினால் நமக்கு என்ன பிரயோஜனம் என்று யோசிக்கத் தொடங்குகிறோம். அப்போது வாங்க நினைக்கும் அத்தியாவசிய பொருளினை வாங்குவதற்கு பணமில்லாமல் தவிக்கிறோம். மீண்டும் கடன் வாங்கும் கட்டாயச் சூழலுக்குத் தள்ளப் படுகிறோம்.
சிலர் வேடிக்கையாக இப்படிச் சொல்வார்கள்... பணக்காரர்கள் ரிஸ்க் எடுக்க வேண்டிய நிலையில் இல்லை; இருந்தாலும் அவர்களிடம் பணம் அதிகம் இருப்பதால், அவர்களால் ரிஸ்க் எடுக்க முடி கிறது. அதனால் அவர்களிடம் மேலும்மேலும் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. ஏழை எளியவர்களிடம் பணம் இல்லை; அதனால் அவர்களால் ரிஸ்க் எடுக்க முடிவதில்லை. எனவே, அவர்கள் மென்மேலும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சற்றே சிந்தித்தால், இது வேடிக்கை அல்ல; முற்றிலும் உண்மை என்று தெரியும்.

நம் வாழ்கைக்குப் பணம் மிக முக்கியம். ஆனால், பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது, எதற்காக செலவழிப்பது, எதற்காக செலவழிக்கக் கூடாது, பணத்தை எப்படி பல மடங்காகப் பெருக்குவது என்பதைப் பற்றி நமக்கு பாடப் புத்தகத்திலோ அல்லது கல்லூரியிலோ யாரும் சொல்லித் தருவதில்லை. எனவேதான், அதிகமான பணம் நம் கையில் புரளும்போது அதை எப்படி செலவழிப்பது என்று தெரியாமல் பல தவறுகளை செய்கிறோம். நம் கையில் அதிகமான பணம் புரளும்போது நாம் என்னென்ன தவறுகளை செய்கிறோம், அந்தத் தவறுகளை செய்யாமல் இருப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சரியாகத் திட்டமிடாமல் இருப்பது!
பணம் என்பது ஒரு மூலதனம். அது நம்முடைய கையில் இருக்கும்போது, நாம் அதை நன்றாகத் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டும் அல்லது சேமிக்கவோ முதலீடு செய்யவோ வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் எத்தனை பேர் அதைச் செய்கிறோம்? பணம் கைக்கு எப்போது வரும் என்று காத்திருந்து, அதை உடனே தேவையில்லாத விஷயங்களுக்குச் செலவு செய்வதில் நாட்டத்தைச் செலுத்துகிறோம். இதனால் நம் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பணத்தினை இழந்து நிற்கிறோம்.
நம் வாழ்வில் இன்றியமையாத எதிர்கால இலக்குகள் எனில்
  நம்முடைய ஓய்வுக்காலத்துக் கான திட்டமிடல், நம்முடைய குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களது திருமணம்தான். இன்று கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில், நாம் விரும்பிய வற்றைப் படிக்க நமக்குப் பணம் தேவைப்படுகிறது.
மேலும், திருமணம் என்பது மிகப்பெரிய அளவில் செலவு
  பிடிக்கும் விஷயமாக மாறிவிட்டது. அது ஒருவருடைய நீண்ட காலச் சேமிப்பை ஓரிரு நாட்களில் கரைத்துவிடும். ஆகையால், பணம் கையில் இருக்கும்போது மேலே குறிப்பிட்ட எதிர்காலத் தேவை களுக்குச் சரியாகத் திட்ட மிடுவதே முதல் கடமையாகும். திட்டமிடாமல் இருக்கும் தவறினை மட்டும் நாம் செய்யவே கூடாது.

தங்கத்தில் அதிக முதலீடு!
தங்கம் என்பது ஒரு உலோகம். அதை அணிந்துகொள்வது சமுதாயத்தில் அந்தஸ்து என்பது மட்டுமே. ஆனால், மக்கள் இதைக் கருத்தில்கொள்ளாமல், அதை முக்கியமான முதலீடாகக் கருதுகிறார்கள். இதனால் பணம் கைக்கு வரும் சமயங்களில் முதல் வேலையாக தங்கத்தை வாங்கி வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
நம்முடைய இந்திய ரூபாயின் தொடர் வீழ்ச்சியினால்தான் தங்கத்தின் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்துவருகிறது. ஆனால், கடந்த நான்கு ஆண்டு களில் எந்தவித லாபமும் தங்கத்தினால் கிடைக்கவில்லை. இருந்தாலும், தங்கத்தின் மேல் உள்ள மோகம் குறையவில்லை.

நகையாக வாங்கும் சமயத்தில் நாம் செய்கூலி மற்றும் சேதாரத்தில் ஏறக்குறைய 20% இழக்கிறோம். எப்படிக் காய், கனிகளுக்கு ஏசி போடப்பட்டு விலை அதிகம் விற்கப்படுகிறதோ, அதேபோலத்தான் நகைக்கடைக் காரர்கள் விளம்பரம், கடைக் கான பராமரிப்பு என மற்ற அனைத்து செலவுகளுக்கும்  நம்மிடம் இருந்தே வெவ்வேறு உருவத்தில் பணத்தைக் கறக்கிறார்கள். நம் வீட்டுக்குத் தேவையான அளவு கொஞ்சம் தங்கத்தை வாங்குவதில் தவறில்லை. ஆனால், கையில் இருக்கும் பணம் அனைத்துக்கும் தங்கம் வாங்கும் தவறை  செய்யக் கூடாது.

ஒன்றுக்கு மேல் வீடு!
ஒருவருக்கு ஒரு வீடு என்பது இன்றியமையாதது. ஆனால், இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்த்துக்கொண்டே போவது தவறான முதலீடாக முடிய வாய்ப்புண்டு. நம் பெற்றோரை விட நாம் இன்று வேலை மற்றும் பணம் சேர்ப்பதில் நன்றாகவே இருக்கிறோம். எதிர்காலத்தில் நம்மைவிட நம் குழந்தைகள் கண்டிப்பாக நன்றாக இருப்பார்கள். இந்த உண்மை நமக்கு தெரிந்திருந்தாலும் பிள்ளைகளின் நலனுக்காக என கையில் பணம் புரளும் போதெல்லாம் சில நூறு சதுர அடி இடத்தை வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

இப்படி செய்வது தவறு என்பதற்குக் காரணம், கடந்த நான்கு வருடங்களில் ரியல் எஸ்டேட் மூலம் சொல்லும்படியான லாபம் எதுவும் கிடைக்கவில்லை.
  சொல்லப்போனால், மும்பை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் ரியல் எஸ்டேட் மதிப்பு 15 முதல் 20 சதவிகிதம் குறைந்திருக்கிறது. சென்னை யிலும் ஏறக்குறைய அதே நிலைதான்.  என்றாலும்  நம்மில் பலர் பணத்தை மண்ணிலோ அல்லது பொன்னிலோ போடத்தான் நினைக்கிறார்கள்.  இருப்பதற்கு ஒரு வீடு கிடைத்து விட்டால், அடுத்தடுத்து வீடுகளைச் சேர்க்க வேண்டிய தவறினை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

தேவையில்லாமல் இன்ஷூரன்ஸ் எடுப்பது!
இன்ஷூரன்சின்
  முக்கியத் துவத்தை இன்றைக்கு  பெரும்பாலான மக்கள் நன்கு உணரவே செய்திருக்கிறார்கள. ஆனால், தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே வேதனை. இதனால் கையில் பணம் கிடைக்கும்போதெல்லாம் தன் பெயரிலும், தன் வீட்டு உறுப்பினர்களின் பெயரிலும் பல வகையான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள்.
குறிப்பாக, குறைந்த கவரேஜ் கொண்ட, ஆனால் பிரீமியம் அதிகமுள்ள பாலிசிகளை எடுத்துவிடுகிறார்கள்.

ஒருவர் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம்தான். அதுவும் கையில் பணம் இருக்கும்போது முதலில் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள் வோம் என்று நினைப்பது சரியான முடிவுதான். ஆனால், ஆயுள் காப்பீட்டு  வகைகளில் உயிர் பாதுகாப்புக்கு மிகச் சரியான  டேர்ம்  இன்ஷூரன்ஸை யும், உடல் பாதுகாப்புக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸையும் எடுத்துக்கொள்வதுதான் நல்லது. குறிப்பாக, குழந்தைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி மற்றும் பென்ஷன் பாலிசி திட்டங்கள் வேண்டவே வேண்டாம். இன்ஷூரன்ஸ் திட்டங்கள் பாதுகாப்புக்கே தவிர, ஒரு போதும் முதலீடாகிவிட முடி யாது. தயவுசெய்து குழப்பி கொள்ளாதீர்கள்.

செலவு எனும் மாய வலை!
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் சேமிப்ப தற்காகச் சம்பாதிப்பதில்லை. செலவு செய்வதற்காகவே சம்பாதிக்கிறார்கள். ஆடம்பர மான இந்த உலகத்தில் அவர்கள் தங்களைப் பொருத்திக் கொண்டு, அதில் கிடைக்கும் மாயச் சுகத்தை அனுபவிப்ப தற்காகச் சம்பாதிக்கும் சம்பளம் அனைத்தையும் செலவுசெய்து சீரழிகிறார்கள்.
பணம் கையில் புரளும் இந்த நேரத்தில் இவர்கள் மட்டுமல்ல, வயதில் மூத்தவர்கள்கூடச் சற்று தடம்மாறி செலவுசெய்யும் ஆசைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். ஆனால்,
  அனாவசியமாக செலவு செய்வதைத் தவிர்த்து, சம்பாதிக்கத் தொடங்கிய காலத்திலேயே சேமிக்கவும் முதலீடு செய்யவும் தொடங்கி னால்,  ஓய்வுக்காலத்தின்போது பெரிய தொகை நம்மிடம்  சேர்ந்திருக்கும். தவிர, இடை யிடையே ஏற்படும் தேவை களுக்கும் இந்த முதலீட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்தத் தவறையும் நாம் செய்யக் கூடாது.

பணவீக்கம் என்னும் எதிரி!
பணவீக்கத்தை நம் கண்ணுக்குத் தெரியாத எதிரி என்று சொல்லலாம். ஏனெனில் பணத்துக்கென்று எந்தவொரு நிலையான மதிப்பும் கிடையாது. அதற்கு பர்ச்சேஸிங் பவர் மட்டுமே உண்டு. அது நாள் ஆக ஆகக் குறையும். இதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. எனக்கு வங்கியில் உத்தரவாதமாக 8% வட்டி கிடைக்கிறது. அது எனக்குப் போதும் என்றே பலரும் சொல்கிறார்கள்.
ஆனால், உண்மையான பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வு 8 சதவிகித மாக இருக்கும்போது, வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கும் வருமானம் விலைவாசி உயர்வுக்கே சரியாகப் போய் விடும் என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை. எனவே, பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் நமக்குக் கிடைக்கும் முதலீட்டினை நாம் தேர்வு செய்தாக வேண்டும். உத்தர வாதம் தரும் முதலீடு என்று நினைத்து, பணவீக்கம் என்னும் எதிரியிடம் நாம் தோற்றுப் போகும் தவறினை செய்யவே கூடாது. அப்படிச் செய்தால், எதிர்காலத்தில் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
  

பேராசை கூடவே கூடாது!
பணம் கையில் இருக்கும் போது முதலீடு செய்ய ஒருவர் நினைத்தாலும், எதில் முதலீடு செய்கிறோம், தற்போது அந்த முதலீட்டுத் திட்டத்தின் வருமானம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால், இதைப் பார்க்காமல் பணம்தான் கையில் இருக்கிறதே, ரிஸ்க் அதிகமுள்ள திட்டத்தில் போட்டால்தான் என்ன என்று நினைக்கும் தவறினை செய்து
  பிரச்னையில் சிக்கிக்கொள்ளக் கூடாது.
இன்றைக்கும் தமிழகம் முழுக்க பல பொன்சி திட்டங்கள் கனஜோராக நடந்து வருகின்றன. இந்தத் திட்டங்களில் பணத்தைப் போட்டால், சில ஆண்டுகளில் இரு மடங்காகும், மூன்று மடங்காகும் என்று கவர்ச்சி காட்டுகிறார்கள். அட, இவ்வளவு லாபம் கிடைக்குமா என்று மயங்கும் மக்களும் சற்றும் யோசிக்காமல் இந்தத் திட்டங்களில் பணத்தை போடு கிறார்கள். சில நகரங்களில் உள்ள அப்பாவி மக்கள் தங்கள் வீட்டை விற்றுக்கூட இது மாதிரியான திட்டங்களில் பணத்தைப் போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், ரிசர்வ்
  வங்கியிடமோ அல்லது அரசிடமோ எந்த வகையிலும் முறையாக அனுமதி வாங்காமல் நடத்தப்படும் இந்த நிறுவனங்களில் பணத்தைப் போடுவது கஷ்டப்பட்டு சம்பாதித்த நம் பணத்தை சாலையில் வீசி எறிவதற்கு சமம்.

எந்தவொரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் அதில் நாம் பணத்தைப் போடும்முன், அந்த நிறுவனம் என்ன தொழில் செய்கிறது, இரு மடங்கு, மூன்று மடங்கு லாபம் தரும்  என்கிறார்களே, எப்படி சாத்தியம், அரசிடம் முறைப்படி எல்லா அனுமதி களையும் வாங்கி இருக்கிறார்களா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்காமல் விட்டுவிட்டு, பிற்பாடு பணத்தை இழந்து விட்டோமே என்று வருத்தப் படக்கூடாது.

குறைந்த அளவு முதலீடு!
பங்குச் சந்தை என்றால் பலரிடமும் தேவையற்ற பயம் இருக்கிறது. அதை சரியாக புரிந்து கொள்ளாமல் அதில் முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு சூதாட்டம் என்று புலம்புகிறவர் கள் அதிகம்.
பங்குச் சந்தை முதலீடு என்பது நாம் ஒரு சொந்த தொழிலுடன் இணைந்தி ருப்பதற்குச் சமமானது. சொந்த தொழிலில் வருமானத்தைத் தொடர்ச்சியாகப் பெற கால அவகாசம் எடுத்துக்கொள்வது போல, பங்குச் சந்தை முதலீட்டுக்கும்
  கால அவகாசம் தரவேண்டும். குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் முதலீடு செய்து காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அதன் மதிப்பு குறைந்தால் நம் கையில் பணமிருக்கும் பட்சத்தில் அதில் முதலீடு செய்வது நல்லது.

எல்லா மக்களும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஏற்ற இறக்கம் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக அதில் முதலீடு செய்வதில்லை. ஏற்ற இறக்கம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சம். ஆனால் நீண்ட காலம் இருப்பதன் மூலம் அந்த ஏற்ற இறக்கத்திலிருந்து  நம்மால் தப்பிக்க முடியும்.
தவிர, ஒரு முதலீட்டில் நீண்ட காலத்துக்கு இருக்கும்போது, கூட்டு வட்டியினால் ஏற்படும் பலன் நமக்குக் கிடைக்கிறது. எனவேதான், உலகின் மிகப் பெரிய விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,
  "கூட்டு வட்டியானது உலகின் எட்டாவது அதிசயம்'' என்றார். இந்த உண்மையைப்  புரிந்துகொண்டவர்கள்  பணத்தைப் பெருக்குகிறார்கள். புரியாதவர்கள் பணத்தை இழக்்கிறார்கள்.
கையில் அதிக பணம் இருக்கும்போது செய்யக்கூடாத தவறுகளை சொல்லிவிட்டோம்.
  இனியாவது இந்தத் தவறுகளை நீங்கள் செய்யாமல் இருப்பீர்கள் அல்லவா?


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 21 ஜூன், 2017

சுன்னத்தான தொழுகைகள் – 01

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
ஐவேளை பர்ழான தொழுகைகள் தவிர ஏராளமான சுன்னத்தான தொழுகைகளை இஸ்லாம் விதித்துள்ளது. இத்தொழுகை களுக்குப் பொதுவாக சுன்னத்தான தொழுகைகள் என்று கூறப்படும். அரபியில் 'ஸலாதுத் ததவ்வுஃ' என்று இதனைக் கூறுவார்கள். 'ததவ்வுஃ' என்றால் கட்டுப்படுதல், வழிப்படுதல் என்று அர்த்தம் கூறலாம். இஸ்லாமிய பரிபாiஷயில் ஸலாதுத் ததவ்வுஃ என்றால் பர்ழாக்கப்பட்ட ஐவேளை தொழுகைகள் தவிர்ந்த ஏனைய தொழுகை களைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தை என்று கூறலாம்.


நஜ்த் தேசத்தைச் சேர்ந்த ஒருவர் நபி(ச) அவர்களிடம் வந்து இஸ்லாம் பற்றிக் கேட்ட போது 'இஸ்லாம் என்றால் இரவும் பகலும் ஐவேளை தொழுகைகள் என்றார்கள். உடனே அவர் அத்தொழுகைகள் தவிர வேறு (தொழுகைகள்) ஏதாவது என்மீது கடமையா? என்றார். அதற்கு நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை' என நபியவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்
ஆதாரம்: புஹாரி: 46, முஸ்லிம்:11-8
நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு தொழுகை கடமை இல்லை என்பதைக் கூற நபி(ச) அவர்கள் 'இல்லா அன்ததவ்வஅ' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார்கள்.
இவ்வகையில் சுன்னத்தான தொழுகை என்றால் பர்ழான ஐவேளைத் தொழுகை, ஜும்ஆ தொழுகை தவிர்ந்த கடமை இல்லாத தொழுகைகளைக் குறிக்கும். தொழுபவர் இவற்றை விரும்பிச் செய்வார் என்றால் அவரவர் விரும்பிய பிரகாரம் விரும்பிய எண்ணிக்கை தொழுவார் என்பது அர்த்தம் அல்ல. அல்லாஹ்வின் தூதர் வழிகாட்டி யிருப்பார்கள். தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் இத்தொழுகைகளை ஒருவர் தொழுவார்.
சுன்னத்தான தொழுகைகளின் முக்கியத்துவம்:
சுன்னத்தான தொழுகைகளை சிறப்பித்துக் கூறும் ஏராளமான நபிமொழிகளைக் காணலாம். அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.
1. செயல்களில் சிறந்தது தொழுகை:
'
உறுதியாக இருங்கள். சடைவடையா தீர்கள். அமல் செய்யுங்கள். உங்களது அமல்களில் சிறந்தது தொழுகையாகும்….' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தவ்பான்(வ)
ஆதாரம்: இப்னு மாஜா: 277, முஅத்தா: 81, தாரமி: 714-715, இப்னு ஹிப்பான்.
சுன்னத்தான தொழுகைகளும் அமல்களில் சிறந்தவை என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன.
2. சுவனத்தில் அந்தஸ்த்தை உயர்த்தும்:
சுன்னத்தான தொழுகைகள் சுவனத்தில் அந்தஸ்தை உயர்த்தக்கூடியவையாகும்.
'ரபீஅதுப்னு கஃபுல் அஸ்லமீ(வ) அவர்கள் நபி(ச) அவர்களுடன் இரவு தங்கி அவருக்குப் பணிவிடை செய்தார்கள். நபி(ச) அவர்கள் அவரிடம், 'என்னிடம் எதையாவது கேள்' என்றார்கள். அவர் 'நான் சுவனத்தில் உங்களுடன் இருக்க வேண்டும்' என்றார். 'வேறு ஒன்றும் இல்லையா?' என்று நபியவர்கள் கேட்டார்கள். 'அதுதான் வேண்டும்' என்றார். அதற்கு நபியவர்கள், 'அதிகமாக சுஜுது செய்வதன் மூலம் உனது வேண்டுதலை நிறைவு செய்ய எனக்கு உதவி செய்' என்றார்கள்.'
அறிவிப்பவர்: அபூ ஸலமா(வ)
ஆதாரம்: முஸ்லிம்: 226-489, நஸாஈ: 1138, அபூதாவூத்: 1320
'சுவனத்தில் என்னை நுழைவிக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என தவ்பான்(வ) அவர்கள் நபி(ச) அவர்களிடம் கேட்ட போது,
'அல்லாஹ்வுக்காக நீ அதிகம் சுஜூது செய்! அல்லாஹ்வுக்காக நீ ஒரு ஸஜதா செய்தாலும் அதன் மூலமாக உன் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தாமல் விடுவதில்லை. உனது ஒரு பாவத்தை அழிக்காமல் விடுவதில்லை' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதல்ஹா அல் யஃமரீ
ஆதாரம்: முஸ்லிம்: 488-225
அதிகமாக சுஜூது செய்வதென்றால் சுன்னத்தான தொழுகைகளை அதிகம் தொழுதாக வேண்டும். இதன் மூலம் சுவனத்தின் அதிகூடிய அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளலாம் என இந்த நபிமொழிகள் கூறுகின்றன.
3. குறைகள் நீங்குகின்றன:
எவ்வளவு பக்குவமான மனிதன் என்றாலும் அவன் தனது கடமையான தொழுகைகளில் அதிகமான குறைகள் விட வாய்ப்புள்ளது. பர்ழான தொழுகைகளில் நாம் விடும் குறைகள் எமது சுன்னத்தான தொழுகைகள் மூலமாக நிவர்த்தி செய்யப் படுகின்றன.
'
நாளை மறுமையில் மனிதர்களின் அமல்களில் தொழுகை பற்றித்தான் முதலில் விசாரிக்கப்படும். அல்லாஹ் மலக்குகளிடம் 'எனது அடியான் தொழுகையைப் பூரணப்படுத்தியுள்ளானா? அல்லது குறை விட்டுள்ளானா? எனப் பாருங்கள்' என்று -அவன் உண்மை நிலை அறிந்த நிலையிலேயே- கூறுவான். தொழுகை குறைவின்றி இருந்தால் பூரணமான கூலி வழங்கப்படும். அதில் குறைபாடுகள் இருந்தால் 'எனது அடியானுக்கு சுன்னத்தான தொழுகை உண்டா? என்று பாருங்கள்' என்று கூறுவான். சுன்னத்தான தொழுகைகள் இருந்தால் பர்ழில் விடுபட்ட குறைகள் சுன்னத்தான தொழுகைகள் மூலமாக அடைக்கப்படும்…'
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
ஆதாரம்: அபூதாவூத்:864, தாரமி: 1494, திர்மிதி: 413, நஸாஈ: 465
பர்ழில் விடுபடும் குறைகள் சுன்னத்தான தொழுகைகள் மூலமாக நிவர்த்தி செய்யப்படுகின்றன என்பதை இதன் மூலம் அறியலாம்.
இஃதல்லாமல் தனித்தனியாக ஒவ்வொரு சுன்னத்தான தொழுகைகள் குறித்தும் சிறப்பித்து நபியவர்கள் பேசியுள்ளார்கள். குறித்த தொழுகைகள் பற்றி நோக்கும் போது அவற்றில் சிலவற்றை நாம் பார்க்கலாம்.
சுன்னத்தான தொழுகைகளின் வகைகள்:
1.
பொதுவான சுன்னத்துத் தொழுகைகள்:
தொழுவது தடை செய்யப்பட்ட நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் விரும்பும் போது விரும்பும் அளவில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைகளை இது குறிக்கும். அவரவர் சக்திக்கும் வசதி வாய்ப்புக்கும் ஏற்ப இதைத் தொழுது கொள்ளலாம்.
2. சுன்னதுர் ராதிப்:
ராதிபான சுன்னத்தான தொழுகைகள் என்பன ஐவேளைத் தொழுகைகளுக்கு முன்பின் தொழப்படும் சுன்னத்தான தொழுகைகளைக் குறிக்கும்.
ராதிபான- முன் பின் சுன்னத்துத் தொழுகைகளிலும் சுன்னா முஅக்கதா- கட்டாய சுன்னத்துக்கள், சுன்னா கைரு முஅக்கதா- அதிகம் வலியுறுத்தப்படாத சுன்னத்துக்கள் என்று இரு வகையாகப் பிரித்து நோக்கப்படும்.
3. சுனன் கைரு ரவாதிப் என்றால் ஐவேளை தொழுகையுடன் சம்பந்தப்படாத ஏனைய சுன்னத்தான தொழுகைகள் குறித்துக் கூறப்படும்.
ராதிபான சுன்னத்தான தொழுகைகள்:


இது குறித்து விரிவாக நோக்குவோம்.
தொழுகையுடன் தொடர்புபட்ட முன்-பின் சுன்னத்தான தொழுகைகளில் சில தொழுகைகளை நபி(ச) அவர்கள் தொடராகக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். அல்லது அதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். அப்படியான தொழுகைகளையே சுன்னா முஅக்கதாகட்டாய சுன்னத்தான தொழுகைகள் என்று கூறப்படும். மற்றும் சிலவற்றை நபி(ச) அவர்கள் வலியுறுத்தாமல் விட்டிருப்பார்கள். அவை கட்டாயம் இல்லாத சுன்னத்துக்கள் என்று கூறப்படும்.
'நபி(ச) அவர்களிடமிருந்து 10 ரக்அத்துக்கள் தொழுகைகளை நான் பேணி வந்தேன். அவையாவன,
1. சுஹுக்கு முன்னர் 2.
2.
ழுஹருக்கு முன்னர் 2, பின்னர் 2.
3.
மஃரிபுக்குப் பின்னர் இரண்டு.
4.
இஷாவுக்குப் பின்னர் 2.
என்பனவே அவையாகும்' என இப்னு உமர்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(
புஹாரி: 1180, அஹ்மத்: 5758)
இந்த அடிப்படையில் ராதிபான கட்டாய சுன்னத்துக்கள் 10 ரக்அத்துக்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். மற்றும் சிலர் ழுஹருக்கு முன்னர் 04 ரக்அத்துக்கள் என்ற அடிப்படையில் 12 ரக்அத்துக்கள் என்று கூறுகின்றனர். இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.
'முஸ்லிமான ஒரு அடியான் அல்லாஹ்வுக்காக தினமும் பர்ழ் அல்லாத சுன்னத்தான தொழுகைகள் 12 ரக்அத்துக்கள் தொழுதுவந்தால் அவனுக்கு சுவனத்தில் ஒரு மாளிகை வழங்கப்படாமல் இருப்பதில்லை. அல்லது அவனுக்கு சுவனத்தில் ஒரு மாளிகை கட்டப்படும்' என நபி(ச) அவர்கள் கூறியதாக அவர்களின் மனைவி உம்மு ஹபீபா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
(
முஸ்லிம்: 728-103, அபூதாவூத்:1250,
இப்னு குஸைமா:1185)
இதே ஹதீஸ் ஆயிஷா(ரழி) அவர்கள் மூலமும் (இப்னு மாஜா: 1140), அபூஹுரைரா(வ) மூலமும் (இப்னு மாஜா: 1142) அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
சுபஹுடைய முன் சுன்னத்து:
கட்டாய சுன்னத்துத் தொழுகைகளில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.
இது குறித்து அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
'நபி(ச) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.'
(
புஹாரி: 1169)
'நபி(ச) அவர்கள் இஷாத் தொழுதுவிட்டுப் பின்னர் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஸுப்{ஹடைய பாங்குக்கும் இகாமத்துக்குமிடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றை நபி(ச) அவர்கள் ஒருபோதும்விட்டது இல்லை.'
(
புஹாரி: 1159)
இது குறித்து இமாம் இப்னுல் கையிம் தனது ஸாதுல் மஆதில் குறிப்பிடும் போது,
'நபியவர்கள் சுபஹுடைய சுன்னத்தையும் வித்ரையும் பயணத்திலும் விட்டதில்லை. ஊரில் இருக்கும் போதும் விட்டதில்லை. பயணத்தில் இருக்கும் போது ஏனைய சுன்னத்தான தொழுகைகளை விட சுபஹுடைய சுன்னத்தையும் வித்ரையும் விடாது பேணி வந்துள்ளார்கள். இவ்விரு சுன்னத்துக்களைத் தவிர வேறு சுன்னத்துத் தொழுகைகளை அவர்கள் பயணத்தில் தொழுது வந்ததாக எந்த செய்தியும் எமக்குக் கிடைக்கவில்லை' என்று குறிப்பிடுகின்றார்கள்.
(
ஸாதுல் மஆத்' 1315)
இந்தவகையில் சுபஹுடைய முன் சுன்னத்து கட்டாய சுன்னத்துக்களில் ஒன்றாகும்.
இலேசாகத் தொழுதல்:
சுபஹுடைய சுன்னத்தை நீட்டி நிதானித்துத் தொழாமல் கடமைக்குக் குறைவு ஏற்படாத வண்ணம் விரைவாகத் தொழ வேண்டும்.
'நபி(ச) அவர்கள் இரவில் 13 ரக்அத்துக்கள் தொழுவார்கள். பஜ்ருடைய பாங்கைக் கேட்டதும் சுருக்கமாக இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள்.'
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: புஹாரி:1170
'நபியவர்கள் சுபஹுக்கு முன் இரண்டு ரக்அத்துக்களில் அல்ஹம்து ஓதினார்களா என நான் நினைக்கும் அளவுக்கு சுருக்கமாகத் தொழுவார்கள்' என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி: 1171)
பாத்திஹா ஓதாமல் தொழுதார்கள் என்பது இதன் அர்த்தமன்று. ஏனைய தொழுகைகளுடன் ஒப்பிடும் போது ஆயிஷா(ரழி) அவர்களுக்கு இப்படித் தோன்றியது என்பதே இதன் அர்த்தமாகும்.
'நபி(ச) அவர்கள் பஜ்ருடைய முன் சுன்னத்துத் தொழுகையில் குல்யா அய்யுஹல் காபிரூன் மற்றும் குல்ஹுவல்லாஹு அஹத் ஆகிய சூறாக்களை ஓதுவார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.' (முஸ்லிம்: 726-98, தாரமி: 1584,
இப்னு குஸைமா: 1114, அபூதாவூத்: 1256)
வேறு சில ஆயத்துக்களை ஓதியதாகவும் அறிவிப்புக்கள் வந்துள்ளன.
இந்த வகையில் பஜ்ர் தொழுகைக்கு முன்னர் இலேசாக இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்துத் தொழுவது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான தொழுகைகளில் ஒன்றாகும் என்பதை அறியலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts