லேபிள்கள்

புதன், 29 ஆகஸ்ட், 2018

கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்!

கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்!
  • இந்தியாவில் ஆண் சிசு இறப்புடன் ஒப்பிடுகையில், பெண் சிசுவின் இறப்பு விகிதம் 75 % அதிகம்.
  •  இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் பெண்சிசுக்கொலைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளன.
  •  உலகின் பல நாடுகளிலும் 100 ஆண் குழந்தை பிறக்கும்போது, 105 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 90-க்கும் குறைவான பெண் குழந்தைகள்தான் பிறக்கின்றனர்.
  •  இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்துக்குப் புறம்பாக கருவிலேயே கொலை செய்யப்படுவதாகக் கூறுகிறது, ஐக்கிய நாடுகளின் அறிக்கை. இதனால் ஆண், பெண் விகிதாச்சாரம் அதிகளவில் வேறுபடுகிறது.
  •  யுனிசெஃப் அறிக்கையின்படி, இந்தியாவில் 50 மில்லியன் சிறுமியரும், பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

மேற்கண்ட ஒவ்வொரு புள்ளி விபரமும் அதிர்ச்சியை உண்டாக்கும் செய்திகள். கடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகளை மகாலட்சுமி எனவும், வீட்டின் அதிர்ஷ்ட தேவதை எனவும் கருதுவோர் அதிகம். மறுபுறமோ பெண் குழந்தைகளை சுமையாகக் கருதுவோரும் இருக்கின்றனர்.
இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழ்மையான மக்களே அதிகம் இருப்பதால், ஒரு பெண் குழந்தையை பெற்றது முதல், வளர்த்து, அப்பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வரையில் ஏற்படும் செலவுகளை வறுமையின் காரணமாக பெற்றோர்களால் சமாளிக்க முடிவதில்லை. இதனால் வேறு வழியின்றி மனதை கல்லாக்கியோ, ரணமாக்கியோ, அல்லது சர்வ சாதாரணமாகவோ பெண் குழந்தைகளை கருணைக் கொலை செய்துவரும் பழக்கம், இந்தியா சுதந்திரம் பெறும் முன்பிலிருந்து இன்றுவரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.
1990-களுக்கு முன்புவரை மருத்துவ வசதிகள் சரிவரக் கிடைக்காத, சென்று சேராத நிலையிலும் கிராமப்புறங்களில் இருக்கும் மருத்துவச்சிகளின் உதவியால் கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்துகொண்டனர் மக்கள். பெண் குழந்தை என்று தெரியவந்தால், கருக்கலைப்பு செய்ய முயற்சித்தனர். அது நிறைவேறாதபட்சத்தில், குழந்தை பிறந்ததும் கள்ளிப்பால், நெல் என அதற்குக் கொடுத்து சிசுக்கொலை செய்தனர். அதற்கு மனம் ஒப்பாதவர்கள், குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றனர்.
தொடர்ந்து மருத்துவ வசதி முன்னேறி, நவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முறை வந்தபிறகு, கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என சௌகரியமாகத் தெரிந்துகொண்டு பெண் குழந்தைகளை சர்வ சாதாரணமாக கருக்கலைப்பு செய்து அழித்துவருகின்றனர்.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிப்போர் குடும்பத்தை நடத்த கடும் சிரமத்தை சந்திக்க நேரிடுவதால், ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். அதுவும் ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பதற்காக, கருவில் இருக்கும் குழந்தையை முன்கூட்டியே தெரிந்துகொள்கின்றனர். அது பெண் குழந்தையாக இருந்தால், எளிதாக கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர்.
 கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது பெண் சிசுக்கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அவை  இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்பது வேதனையான செய்தி. பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை இதேநிலையில் உயர்ந்துகொண்டே சென்றால், பிற்காலங்களில் ஆண்-பெண் விகிதாச்சாரம் மிகவும் அதிகரித்து, பலருக்கும் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் போகலாம்.
பெண் குழந்தைகளை பெற்றோர் ஒதுக்கக் காரணங்கள்:
  • பெண் குழந்தைகளை பெற்றது முதல் திருமணம் செய்து கொடுத்தபிறகும்கூட தொடரும் பல்வேறு கடமைகளுக்கான செலவுகள்.
  • ஆண் குழந்தையாக இருந்தால், பிற்காலத்தில் தங்களை காப்பாற்றுவான், பெண் குழந்தையாக இருந்தால் வேறு ஒருவர் வீட்டுக்குத்தானே செல்வாள் என்ற கணிப்பு.
  •  தனக்குப் பிறகு குடும்பத் தலைமுறை தொடர ஆண் குழந்தை வேண்டும் என்ற எண்ணம்.
  •  தங்கள் இறுதிச்சடங்கினை செய்ய ஆண் பிள்ளை வேண்டும் என்ற காரணம்.
பெற்றோர்களின் இதுபோன்ற மனநிலையை அரசும், சமூக ஆர்வலர்களும் மெதுவாக மாற்றினார்கள். குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் பெண் சிசுக்கொலைக்கு, பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகளும், மக்களின் அந்த எண்ணத்தை மாற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்தன. அவற்றில் சில இங்கே
  • வரதட்சணை ஒழிப்புச் சட்டம்
  • கருவிலேயே பாலினம் தெரிந்துகொள்வதற்கு எதிரான சட்டம்
  • தொட்டில் குழந்தைத் திட்டம்
  • பெண் கல்விக்கு ஆதரவான சட்டம்
  • பெண்ணுரிமைக்கு ஆதரவான சட்டம்
  • பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை தரும் சட்டம்
  • கல்வி, திருமணம், குழந்தைப்பேறு வரை பல்வேறு காலகட்டங்களில் பெண்களுக்கு வழங்கப்படும்
    உதவிகள்
உலக அளவில் நடக்கும் பெண் சிசுக்கொலைகளில் பெண் சிசு எத்தனை என தெரிந்தால் அதிர்ச்சியாவீர்கள். அதற்கு கீழே இருக்கும் வீடியோவை க்ளிக் செய்க!
இதுபோன்ற சட்டங்களும், திட்டங்களும் ஓரளவுக்கு பலனைக் கொடுத்தாலும், இன்னும் இவை பெயரளவிலான செயல்பாடுகளாகவும் இருக்கின்றன. அதனால்தான் பெண் சிசுக்கொலையை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. பெண் சிசுக்கொலை என்றதும் கருவில் அல்லது பிறந்த பிறகு ஒரு குழந்தையைக் கொல்வது என்பது மட்டுமின்றி, 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொல்லப்படுவதும் இப்பிரச்னையில் அடங்கும். பெற்றோர்களே பெண் குழந்தைகளை கருணைக்கொலை செய்வதைத்தாண்டி, பெண்குழந்தைகளை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இப்படிப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து, 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் முதல் ஏராளமான பெண்கள் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருபகுதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  பின்னர், அப்பெண் குழந்தைகளை கொலைசெய்து விடுகின்றனர். இப்படி ஒவ்வொரு காலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதுபோன்ற குற்றச் சம்பவங்களை,  கடுமையான சட்டங்களைக் கொண்டு ஒழிக்கவேண்டியது அரசின் முதன்மையான கடமை.
இப்போது 100:90 என்ற அளவில் இருக்கும் ஆண் பெண் விகிதாச்சாரம், இனிவரும் காலங்களில் இன்னும் குறையாமல் இருக்கவேண்டும். அதற்கு முதல்கட்டமாக நம் ஒவ்வொரு வீட்டிலும் ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற பாகுபாடுகளை அறவே ஒதுக்கி, 'நம் பிள்ளை' என்ற மனநிலைக்கு நாம் மாறவேண்டும்.
நன்றி: விகடன்
பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் கொலை செய்யாதீர்கள் இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (அல்குர்ஆன் : 6:151)


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

குழந்தைகளின் வெட்கம்!

குழந்தைகளின் வெட்கம்!
வெட்கம் மனிதன் கொண்டுள்ள மனஎழுச்சிகளில் முக்கியமானது. மிகக் குறைந்தளவு புரிந்துகொள்ளப்பட்ட மனஎழுச்சியும் அதுவே என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, புதிய மனிதர்களை சந்திக்கும்போது குழந்தைகள் வெட்கமடைகின்றனர். எனினும் சிலவேளை, ஆரோக்கியமான சமூக உறவுக்கு அதீதமான வெட்க உணர்வு தடையாக இருப்பதையும், குழந்தைகள் புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் தனிப்பட்டுப் போவதையும் மறுக்க முடியாது.
சமூகத்தில் புதியதாக, அறிமுகம் இல்லாத, பழக்கப்படாத ஒன்று ஒரு தனி மனிதனுக்கு அறிமுகம் ஆகும் போது அதை கையாள்வதற்கு உதவும் ஒரு மன எழுச்சியே வெட்கம்.
ஒருவகையில் இது உளப் பொறியியல் (Mental Mechanism) எனவும் கொள்ளலாம். இதில் ஆர்வம், அச்சம், பதற்றம் ஆகிய உணர்வுகளும் சிறிதளவு கலந்துள்ளன. அதீத வெட்கம் இதயத் துடிப்பின் அளவை அதிகரிப்பதோடு இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கலாம். குழந்தைகள் வெட்கப்படும்போது விரல்களை சூப்புவர் அல்லது புன்னகையுடன் விலகி ஓடுவர்.

வயது வளர்ச்சி வேறுபடும் போது வெட்க உணர்வும் பல்வேறு வகையில் வெளிப்படுகின்றது. பிறந்ததிலிருந்து 2 வயது உள்ள குழந்தைகளுக்கு புதிய முகங்களைக் காணும்போது அச்சம் கலந்த ஒருவிதமான வெட்கம் ஏற்படுகின்றது. இரண்டாவது வயதுக்குப் பிறகு அறிவு வளர்ச்சியடையும்போது சுய அடையாளத்துடன் கூடிய ஒருவிதமான வெட்கம் உருவாகிறது.
4 முதல் 5 வயதில் சுய உணர்வு சார்ந்த வெட்கம் ஏற்படுகின்றது. முன் இளமைப் பருவத்தில் எதிர்ப்பாலினரை எதிர் கொள்ளும் போது ஒருவகை வெட்க உணர்வு உருவாகின்றது.
பொதுவாக புதிய சமூக சூழல்களே குழந்தைகளிடம் வெட்க உணர்வை உருவாக்குகின்றது. மற்றவர்களின் கவனம் தன் பக்கமே உள்ளது என குழந்தைகள் உணரும் சமயத்தில் வெட்க உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது.
சூழ்நிலைகள் அடிக்கடி மாறும்போதும் வெட்க உணர்வு ஏற்படுகின்றது. தமது பிள்ளைகள் குறித்து பிறர் தெரிவிக்கும் புகார் மற்றும் குறைபாடுகளுகளைக் கேட்டு அதற்கு ஏற்ப குழந்தைகளை அதட்டி மிரட்டி குழந்தைகளை கட்டுப்படுத்துகின்றனர். இதன் மூலம் குழந்தைகளின் சுதந்திரம் சந்தோஷம் (மன எழுச்சி) குறைக்கப்படுகிறது. இந்நிலையில் குழந்தைகளிடம் வெட்க உணர்வு அதிகரிக்கலாம். அல்லது புதிய சூழல்களை எதிகொள்வதில் தயக்கம் ஏற்படும்.
சில குழந்தைகளிடம் அளவுக்கு மிஞ்சிய வெட்க உணர்வு இருப்பதற்கான காரணம் என்ன? இதற்கு உளவியலாளர்கள் பல்வேறு விடைகளைத் தருகின்றனர். சில பிள்ளைகள் இயல்பாகவே அதிக வெட்க உணர்வு கொண்டுள்ளனர். தனிப்பட்ட வேறுபாடு இதற்கொரு காரணமாகும். சிலவகை வெட்கம் அறியப்படுகின்றது. அல்லது கற்கப்படுகின்றது. குழந்தை வெட்கத்தை தாம் வாழும் சூழலிலிருந்து கற்கின்றது. குடும்ப சூழல், கலாசாரப் பின்னணி, ஆன்மீக சூழல் என்பன இனத்திற்கு இனம், நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது.
சுவீடன் நாட்டுக் குழந்தைகள் அமெரிக்கக் குழந்தைகளை விட வெட்கம் கூடியவர்கள் என ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. பெற்றோர்களே சிலநேரம் அளவுக்கு மீறிய வெட்க உணர்வை பிள்ளைகளிடம் வளர்க்கின்றனர்.
பரம்பரை பழக்கம் குழந்தைகளின் வெட்க உணர்வில் தாக்கம் செலுத்தலாம். அதேபோன்று சில குடும்பங்களிடம் வளர்க்கப்படும் குழந்தைகளிடம் ஒப்பீட்டு ரீதியில் வெட்க உணர்வு அதிகமாக இருக்கின்றது. தாயின் அல்லது தந்தையின் சமூகத் தொடர்பு குறைவாக இருந்தால் அதாவது சமூகத்தோடு ஒட்டாமல் இருந்தால், பிள்ளைகளும் அப்படியே சமூகத்தை விட்டும் ஒதுங்கி இருக்கக் கூடும்.
எனினும், அதிகமான ஆய்வாளர்கள் குழந்தைகளின் அதீத வெட்கத்தில் பரம்பரைக் காரணங்களின் தாக்கம் குறைவாக உள்ளதாக கருதுகின்றனர். ஏனெனில், தத்தெடுக்கப்படுகின்ற குழந்தைகள் தத்தெடுத்த பெற்றோரின் நடத்தைகளையே பெரிதும் பிரதிபலிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே குழந்தை வளர்க்கும் முறையே குழந்தைகளின் வெட்க உணர்வில் அதிகம் தாக்கம் செலுத்துவது தெளிவாகின்றது.
அதீத வெட்க உணர்வினால் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் எத்தகையது என்பதும் முக்கியமானது. சமூகத்துடன் பரிச்சயமாகி ஏனைய மனிதர்களுடன் கலந்து உறையாடுவதன் மூலமே அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக் கொள்ள முடியும். சமூகத்தின் நெறிமுறைகளையும் விளங்கிக் கொள்ள முடியும்.
அதீத வெட்க உணர்வுள்ள குழந்தைகள் பிறரோடு கலந்துறவாடுவதில் தயக்கம் காட்டுவதனால் இந்த அறிவையும் அனுபவத்தையும் பெற முடியாமல் போகின்றது. சமூகத் திறன்களை வளர்ப்பதும் தடைப்படுகிறது. பொதுவாக வெட்க உணர்வுள்ள பிள்ளைகளிடம் தன்னைப் பற்றிய ஒரு தாழ்வு மனநிலை (Poor Image) தான் இருக்கும்.
சம வயதுக் குழுந்தைகளுடன் போட்டி போடும் மனப்பாங்கு குறைவாகவே இருக்கும். பள்ளிப் பருவத்தில் வெட்க உணர்வு கொண்ட பிள்ளைகளிடம் நட்புணர்வும் குறைவாக இருக்கும். வெட்க உணர்வு குறைந்த மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவர்கள் பெரும்பாலும் மந்தமான (Passive) நிலையிலே இருப்பார்கள். இதனால் தோழர்களால் ஒதுக்கப்படும் நிலை தோன்றும்.
இளமைப் பருவம் முதல் முதுமை வெட்கம் தொடரும் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் எப்போதும் தனிமையில் இருப்பதாகவே உணர்கின்றனர். இந்த மனநிலை ஆரோக்கியமான ஆளுமை வளர்ச்சிக்குத் தடையாக உள்து.
பெற்றோர் அதீதி வெட்க உணர்வு கொண்ட பிள்ளைகளை எவ்வாறு கையாள்வது?
முதலில் தமது பிள்ளைகள் குறித்து முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் ஆர்வங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும். பிள்ளைகளை கௌரவிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை நீக்குவதற்கு தன்னம்பிக்கையை திட்டமிட்டு வளர்க்க வேண்டும்.
வெட்கம் கொண்ட பிள்ளைகளிடம் எதிர்மறையான உணர்வுகளும் தன்னைப் பற்றிய தாழ்வான மனப்பதிவும் (Poor Image) இருக்கும். எனவே, அவர்களிடம் சுய மதிப்பை கட்டியெழுப்ப வேண்டும். கொடுக்கும் சுதந்திரத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமும் சுதந்திர சிந்தனையை ஊக்குவிப்பதன் மூலமும் பாராட்டுவதன் மூலமும் இந்த சுய மதிப்பை கட்டியெழுப்பலாம்.
சமூகத் திறன்களை மேம்படுத்தல் : சமூக பழக்க வழக்கங்களை மீள வளர்ப்பதன் மூலம் சமூகத் திறன்களை வளர்க்க வேண்டும். ஆம், என்னாலும் முடியும்' என்ற தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு சமூகத்தினுள் குழந்தை கலந்து உறவாடும் நுட்பங்களைக் கையாள வேண்டும். இதற்கு சமவயதுக் குழந்தைகளுடன் விளையாடும் சந்தர்ப்பங்களை உருவாக்கலாம். புதிய புதிய வயதுக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் நிர்ப்பந்தங்களையும் தோற்றுவிக்கலாம்.
ஒரு பிள்ளை தனக்கு பயம் அல்லது அச்சுறுத்தல் எனக் கருதும் சூழ்நிலை ஒன்றுக்குள் பிள்ளையைத் தள்ளி விடுவது சமூக ஆற்றலைக் கட்டியெழுப்ப உதவாது. மாறாக சமூகத் தோடு கலந்துறவாடுவதன் மூலம் தனக்குப் பாதுகாப்பும் அங்கீகாரமும் அதிகம் கிடைக்கும் என குழந்தையை உணரச் செய்வதுதான் பெற்றோரின் பொறுப்பு.
நன்றி -அப்துல்லாஹ் சமூகநீதி


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 25 ஆகஸ்ட், 2018

யார் இந்த முட்டாள்கள்?

யார் இந்த முட்டாள்கள்?

மௌலவி M.S.M.ஹில்மி(ஸலாமி),
BA(Reading) SEUSL,
DIP.IN.LIBRARY & INFORMATION SCIENCE

உலகலாவிய ரீதியில் பல கொண்டாட்டங்களும் தேசிய, சர்வதேச தினங்களும் பல்வேறு பின்னணிகள், வரலாறுகள் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ளதனையும் கொண்டாடப்பட்டு வருவதனையும் அன்றாட நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு கொண்டாடப்பட்டு வரும் தினங்களில் ஒன்றுதான் ஏப்ரல் 01 ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் உலக முட்டாள்கள் தினமாகும். உலக முட்டாள்கள் தினத்தைப்பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது காரணம் யாரோ ஒருவரால் அத்தினத்தில் முட்டாளாக்கப்பட்டிருப்பர். அல்லது அவ்வாறு நடந்த சம்பவங்களை செவிசாய்த்திருப்பர்.


இவ்வாறு எல்லலோராலும் ஜனரஞ்சகமாக அறியப்பட்ட இத்தினம் உலகின் பல்லினத்தவர்கள் மத்தியிலும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கானவர்களல்ல. முஸ்லிம்களும் இதனை கொண்டாடுவதனை எம்மவர்களின் செயற்பாடுகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது. ஆகவேதான் இது பற்றி அறிந்து தெளிவுபெறுவது அவசியமாகும். ஏன் ? எதற்காக ? என்ற வினாக்கள் இன்றி எல்லலோராலும் அரங்கேற்றம் தொடர்கிறது. எனவேதான் முதலில் இங்கு உலக முட்டாள்கள் தினத்தின் வரலாறு பின்னணியை அறிவது அவசியமாகும்.
முட்டாள்கள் தின வரலாறு
ஏப்ரல் 1 ஆம் திகதியிலேயே ஐரோப்பிய நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இது பிரான்ஸ் நாட்டில் தோற்றம் பெற்றதாக கூறப்படுகின்றது. 16 ஆம் நுற்றாண்டில்(1562) போப்பாண்டவராக இருந்த 13 ஆவது கிரகரி பழைய ஜுலியன் ஆண்டு கணிப்பு முறையை நிறுத்தி கிரேகோரியன் ஆண்டு கணிப்பு முறையினை அறிமுகம் செய்தார். இதன்படி ஜனவரி 1 ஆம் திகதியை புத்தாண்டாக அறிமுகப்படுத்தினார். இதனை ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

ஜனவரி 1ஆம் திகதியை புத்தாண்டாக ஏற்றுக்கொண்ட மக்கள் பழைய வழக்கத்தை பின்பற்றிய மக்களை 'முட்டாள்கள'; என்று அழைத்ததுடன் ஏப்ரல் முதலாம் திகதியை முட்டாள்கள் தினமாக அடையாளப்படுத்தியதாக ஆய்வுகள் மூலம் அறியமுடிகின்றது.
1582 ஆம் ஆண்டிற்கு முன்பே 1508 ஆம் ஆண்டில் பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதாகவும் , 1539 ஆம் ஆண்டில் முட்டாள்கள் தினம் பற்றி டச்சு மொழியில் இது பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகின்றது. அதே போன்று 1466 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்பை என்பவரை அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு முட்டாள்கள் தினம் தோன்றுவதற்கு பல பின்னணிகள் கூறப்படுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. இதில் ஆச்சரியத்திற்குறிய விடயம் என்னவென்றால் முஸ்லிம்களும் இஸ்லாம் தடைசெய்துள்ள இஸ்லாம் அங்கீகரிக்காத அம்சங்களை சுமந்துவரும் இத்தினத்தை அரங்கேற்றம் செய்வதாகும்.
முட்டாள்கள் தினம் ஏன் இஸ்லாத்திற்கு முரணானது?
ஒரு முஸ்லிம் ஈடுபடுகின்ற எந்த ஒரு செயலாயினும் அது இஸ்லாமிய வரையரைக்குள் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இஸ்லாம் தடை செய்துள்ள செயல்களில் ஈடுபடுவது ஹராமாகும். அந்த வகையில் இஸ்லாம் தடை செய்துள்ள பல செயற்பாடுகளை சுமந்து வருவதே இந்த உலக முட்டாள்கள் தினம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொய்:-
அந்தவகையில் இத்தினம் ஒருவரை முட்டாளாக்க வேண்டும் என்பதற்காக பொய் எனும் பாவத்திலிருந்தே ஆரம்பமாகின்றது. 'உலக முட்டாள்கள் தினம்' என அடையாளப்படுத்தப்பட்டாலும் இதனை 'உலக பொய்யர்கள் தினம்' எனவும் அழைக்கலாம். காரணம் இத்தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பொய்யான செய்தியை பரப்பி பிறரை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் பேசும் பொய்யினை உண்மைப்படுத்த பொய்ச்சத்தியங்களையும் செய்கின்றனர்.

படித்தவர் , பாமரரர் , சிறியவர் , பெரியவர் என்ற பாகுபாடுகளின்றி அனைவர் மனதிலும் பொய் பேசுவதனை விதைப்பதுடன் குழந்தைகளின் ஆழ் மனதிலும் பொய் பேசுவது சாதாரன விடயம் என்ற பதிவினை ஏற்படுத்தி பொய் கூறுவதற்கு உலகலாவிய ரீதியில் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும் தினமாகவே இத்தினம் காணப்படுகின்றது. ஆனால் இஸ்லாம் பொய் பேசுவதனையும் , பொய்யான செய்திகளை பரப்புவதனையும் வன்மையாக கண்டிக்கும் மார்க்கமாகும்.
அல்-குர் ஆனில் பல இடங்களில் அல்லாஹ் பொய் பற்றி எச்சரிக்கை செய்வதனை அவதானிக்கலாம்.

'பொய்யான வார்த்தைகளைவிட்டும் விலகியிருங்கள்' (ஸுரா அல்ஹஜ்: 30)
'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக' (ஸுரா ஆலுஇம்ரான்: 61)
'பொய்யான பாவிகள் ஒவ்வொருவருக்கும் கேடுதான்' (ஸுரா அல்ஜாதிய்யா: 07)
பொய்சத்தியம் பற்றி அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கை செய்கிறான்
'அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது' (58:14,15)

இஸ்லாமிய மார்க்கம் ஒரு செய்தி பரப்பப்படுகின்றதென்றால் அதனை தெளிவுபுடுத்திக் கொள்ளவும் அதன் உண்மைதன்மையினை அறிந்து செயற்படவும் தூண்டுகின்றது.
'விசுவாசிகளே தீயவன் ஒருவன் ஒரு செய்தியை கொண்டு வந்தால் அதனை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்' (ஸுரா அல்ஹுஜுராத்: 06)
இவ்வாறு பொய்யான பேச்சினை, சத்தியங்களை விட்டு விலகியிருக்குமாறும் , பொய்யர்களுக்கு அல்லாஹ்வின் சாபக்கேடு கிடைக்கும் என்றும் செய்திகளை உறுதிப்படுத்தி கொள்ளுமாறும் அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்றது.
ஆனால் பிறரை பொய் பேசி குறித்த தினத்தில் முட்டாளாக்க வேண்டும் என இஸ்லாம் தடுத்த பொய் 'உலக முட்டாள்கள் தினம்' எனும் போர்வையில் அரங்கேறுகிறது. ஆக பிறரை முட்டாளாக்க வேண்டும் என்பற்காக பொய் பேசுபவர்கள்தான் இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்களாவர்.
ஏமாற்றுதல்:-
உலக முட்டாள்கள் தினத்திற்கு 'ஏமாற்றும் தினம்' என்று அடையாளப்படுத்துவது சாலசிறந்ததாகும். ஏனெனில் பொய்யான செய்திகளை பிறர் மத்தியில் பரப்புவதன் மூலமாக பிறரை ஏமாற்றும் கைங்கரியமே இத்தினத்தில் நடந்தேறுகின்றது. அதாவது போலியான செய்தியொன்றை ஒருவரிடம் கூறி அவர் நம்புபடி பொய் மேல் பொய்களை அடுக்குவது மாத்திரமின்றி அவரை ஏமாற்றுகின்றனர்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ' யார் ஏமாற்றுகிறாரோ அவர் எங்ளை சார்ந்தவர் அல்ல' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
இஸ்லாமிய மார்க்கம் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதை மோசடி செய்வதை தடைசெய்துள்ள மார்க்கமாகும். உலக முட்டாள்கள் தினம் எனும் நாமம் தாங்கி இஸ்லாம் தடைசெய்துள்ள காரியத்தில் எம்மவர்கள் ஈடுபடுவது கைசேதத்திற்குறிய விடயமாகும். ஆக உண்மையில் 'முட்டாள்கள் தினத்தில' ஏமாறுபவர்கள் முட்டாள்கள் அல்ல ஏமாற்றுபவர்களே இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்களாவர்.
கேலி செய்தல்:-
உலக முட்டாள்கள் தினத்தில் ஒருவரிடம் ஒருவர் பொய் கூறி , ஏமாற்றி , கேலி செய்யும் நண்பர்கள், உறவினர் வட்டாரங்கள் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றன. இதனை யாராலும் மறுக்க முடியாது. இஸ்லாம் பிறரை கேலி செய்து பரிகாசிப்பவர்களை கடுமையாக கண்டிக்கின்றது.

'முஃமின்களே! ஒரு சமூகத்தார் மற்றைய சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்' (ஸுரா அல்ஹுஜுராத்:11)
கேலி செய்யபவர்களைவிட கேலி செய்யப்படுபவர்கள் மேலாகவர்களாக இருக்கலாம் எனவும் பரிகாசம் செய்ய வேண்டாம் எனவும் அல்குர்ஆன் கட்டளை பிறப்பிக்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் பொய்யான வார்த்தைகள் மூலம் ஏமாற்ற , முட்டாளாக்க , கேலி முயற்சிப்பவர்கள்தான் உண்மை முட்டாள்களாவர்.
மனம் புன்படச் செய்தல்:-
உலக முட்டாள்கள் தினம் எனும் போர்வையில் நடந்தேறும் காரியங்களின் தொடர் வரிசையில் பிறர் மனம் புன்படச் செய்து இன்புரும் செயலும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தினத்தினை கொண்டாடுவதன் மூலம் பிறர் மனதை புன்புடுத்துவதற்கு உலகலாவிய ரீதியில் அங்கீகாரத்தினை வழங்குகிறார்கள்.

ஆனால் இஸ்லாம் பிறர் மனம் புன்படும்படி நடந்து கொள்வதனை வன்மையாக கண்டிக்கின்றது. கேலிக்கை , விளையாட்டு எனும் பதாதைகளை ஏந்திக் கொண்டு செய்தாலும் அது இஸ்லாத்தின் பார்வையில் தடுக்கப்பட்டதே என்பதில் கடுகளவும் ஐயம் கிடையாது. இத்தினத்தில் பரப்பப்படும் பொய்களை நம்பி மனவேதனை அடைபவர்கள் உண்மையில் முட்டாள்கள் அல்ல இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உண்மையான முட்டாள்கள் மனம்புன்படும்படியான பொய்யான செய்திகளை பரப்புபவர்களே.
உறவுகள் பிரிதல்:-
குறித்த தினத்தில் பொய்யான செய்திகளை பரப்பி ஏமாற்றி கேலி செய்வதன் மூலம் மனம் புன்படுவது மாத்திரமின்றி உறவுகளுக்கிடையிலும் விரிசல்களும் ஏற்படுவதனை அறியலாம். நண்பர்கள் , உறவினர்கள் மத்தியில் இவ்வாறு பரிகாசமாக பொய் பேசுவதன் மூலம் எத்தனையோ உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு உறவுகள் விரிசலடையவும் உலக முட்டாள்கள் தினம் காரணியாக அமைந்துவிடுகிறது.

உண்மை பேசுவது உயர்வு தரும் உறவுகளின் மத்தியில் பினைப்பையும் உறுதியையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தும் ஆனால் பொய் பேசுவது உறவுகள் மத்தியில் பிரிவையும் இழிவையும் தரும் என்பதனை இத்தினத்தில் பொய் பேசியதனால் பிரிந்த எத்தனையோ உள்ளங்கள் சான்றுபகர்கின்றன.
மேற்கத்தேய கலாசாரத் திணிப்பு:-
அது மாத்திரமில்லாது ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற மேற்கத்தேய சலாசாரமான உலக முட்டாள்கள் தினம் அனைத்துலக மக்கள் மீதும் திணிக்கப்படுகின்றது. பொய்யர்கள் தோற்றம் பெற, பொய்க்கான சர்வதேச அங்கீகாரத்தினை வழங்குகின்றது.

இவ்வாறு பொய், ஏமாற்றம், கேலி , பிறர் மனம் புன்படல், உறவுகளில் விரிசல், மேற்கத்தேய கலாசாரத்திணிப்பு என பல இஸ்லாத்திற்கு முரணான அம்சங்களை 'உலக முட்டாள்கள் தினம்' என்ற முத்திரை பதித்து சுமந்துவரும் இந்த சர்வதேச தினம் முஸ்லிம்களால் புறக்கனிக்கப்பட வேண்டிய ஒன்றே. அதே போன்று இஸ்லாத்தின் பார்வையில் உண்மையான முட்டாள்கள் உலக முட்டாள்கள் தினத்தில் முட்டாளாக்கப்படுபவர்கள் அல்ல மாறாக பிறரை முட்டாளாக்குபவர்களே.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

பள்ளிவாசல்களைப் பராமரியுங்கள்

பள்ளிவாசல்களைப் பராமரியுங்கள்

அண்டசராசரங்களைப் படைத்த அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடம் பள்ளிவாசல்கள். அங்குதான் அல்லாஹ்வின் வார்த்தை நிலைநாட்டப்படுகிறது. அவன் நினைவு கூரப்படுகிறான். அவனுக்காகவே மக்கள் அவனுடைய அருளை எதிர்பார்த்து ஒன்று கூடுகிறார்கள். தொழுகிறார்கள். மார்க்க உபதேசங்களை செவிமடுக்கிறார்கள். இப்படி ஒன்றன் பின் ஒன்றாக பள்ளிவாசல்களின் சிறப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இதுவெல்லாம் சராசரி முஸ்லிம்கள் கூட அறிந்திருக்கும் அடிப்படையான விஷயங்கள்தாம். ஆனால், நபி(ஸல்) அவர்களாலும் அவர்களின் தோழர்களாலும் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்ட பள்ளிவாசல்களைப் போன்று, நம் காலத்தின் பள்ளிவாசல்கள் பராமரிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி நம் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் எழ வேண்டும்!


நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு தஞ்சம் அடைந்தவுடன், தனக்காக ஒரு வீட்டைக்கூட கட்டிக் கொள்ளாமல் முதன்முதலில் செய்த பணி பள்ளிவாசலைக் கட்டியதுதான். அந்தப் பள்ளிவாசல் சிமெண்ட், ஜல்லி, பளிங்குக் கற்கள், ஒலிப்பெருக்கி, மின்விசிறி, குளிர்சாதன வசதி போன்ற எந்த நவீன அம்சங்களால் ஆனதும் இல்லை. மாறாக, களிமண்ணால் எழுப்பப்பட்ட சுவர்கள்; பேரீச்சமர கட்டைகளாலான தூண்கள்; ஓலைகளால் மூடப்பட்ட கூடாரம்; மண் தரை; இவைதான் நபியவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலின் எளிய எழில்மிகு தோற்றம்.
அங்கே ஆடம்பரம் இல்லையென்றாலும், ஆனந்தம் இருந்தது. வசதிகள் இல்லையென்றாலும், அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் இருந்தது. பள்ளிவாசலின் இடம் மிகவும் சிறியதாக இருந்தாலும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் உள்ளங்கள் மிகவும் பெரியதாக இருந்தது.
வெறும் வணக்க வழிபாடுகளோடு மட்டும் சுருங்கிக் கிடக்கவில்லை மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசல். கல்விக் கூடமாக, பண்புப் பயிற்சியின் பட்டறையாக, ஏழைகளின் தங்குமிடமாக, அநாதைகளுக்கு அடைக்கலமாக, ஆதரவற்றோர்க்கு ஆதரவாக, கைதிகளை அடைக்க சிறைச் சாலையாக, நீதிமன்றமாக, ஆலோசனை அரங்கமாக, நாடாளுமன்றமாக, மருத்துவமனையாக, வழிப்போக்கர்களின் கூடாரமாக, முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தைச் சொல்லும் அழைப்பு மையமாக, மார்க்க அறிஞர்களை உருவாக்கும் மதரஸாக்களாக, ஜகாத்தை திரட்டி விநியோகிக்கும் இடமாக, போர்க் கனிமத்துப் பொருள்களை பங்கு வைத்துக் கொடுக்கும் மைதானமாக, ராணுவத் தளமாக,விளையாட்டுத் திடலாக, மார்க்கத் தீர்ப்பு வழங்கும் தீர்ப்பிடமாக, பொருளியல் வாழ்வியல் பிரச்னைக்கு தீர்விடமாக எனப் பலப் பரிமாணங்களில் மின்னியது நபிகளாரின் "நபவிப் பள்ளிவாசல்."
நம் காலத்தின் பள்ளிவாசல்கள்
நபி(ஸல்) அவர்கள் காலத்தின் பள்ளிவாசல்களுக்கும், எல்லா தொழில் நுட்பங்களையும் கையாண்டு கட்டப்படுகின்ற நம் காலத்தின் பள்ளிவாசல்களுக்கும் மிகப்பெரும் வித்தியாசங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நம் காலப் பள்ளிவாசல்களின் போக்கையும் செயல்பாடுகளையும் மனதிற்கொண்டு அதை வகைப்படுத்தி மாற்றத்தை காணது காலத்தின் கட்டாயம்.

1. இஸ்லாத்தின் மூல ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களின் மூதாதையர்கள் கற்றுக் கொடுத்ததை மார்க்கமாகக் கொண்டு அதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் தேடி நியாயப்படுத்தும் பரலேவிப் பள்ளிவாசல்கள், பண்புப் பயிற்சி, அழைப்புப்பணி, மக்கள் சேவை போன்ற எந்த நற்செயல்களையும் முன்னிறுத்துவதில்லை. நல்லடியார்களின் துதிபாடுவதும் கப்ர் வழிபாடும் அதைச் சார்ந்த அநாச்சாரங்களும்தான் முக்கிய நோக்கமாகக் கொண்டு, இவர்களால் நடத்தப்படும் பள்ளிவாசல்கள் செயல்பட்டு வருகின்றன.
2. வெறும் தொழுகைக்கு வந்து போகும் சுழற்சி இடமாகவும், அல்குர்ஆனை அரபுமொழியில் ஓதவும் மனனம் செய்யவும் கற்றுக் கொடுக்கும் ஒரு நிறுவன பாடசாலையாக மாறிக்கொண்டுள்ளது சில சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்கள். இவைகள் முற்றிலும் நிறுவனமயமாகி விட்டது என்று உறுதி செய்யும் அளவுக்கு இவைகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஆம், ஐவேளைத் தொழுகை, அல்குர்ஆனை ஓத, மனனம் செய்யக் கற்றுக் தருதல் ஆகிய இந்த செயல்களை எந்த இலக்கை முன்னோக்கி செய்து கொண்டிருக்கிறோம் என்ற அறிவு புகட்டப்படாமலேயே நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நான்கு இமாம்கள் கொண்ட மத்ஹபை முன்னிறுத்தி அவற்றிற்கு குர்ஆன் சுன்னா சாயமிட்டு, மாற்று கருத்து தெரிவிப்பவர்களை ஒதுக்கித் தள்ளி, அவர்களை எதிரிகளாக பாவிக்கும் மனப்போக்கை அந்தப் பள்ளிவாசல்களின் இமாம்கள் மக்கள் மனதில் உருவாக்கி விடுகின்றனர்.
அல்லாஹ்வின் பாதையில் புறப்படுகின்றோம் என்ற பெயரில் குடும்பத்தை, வியாபாரத்தை, வருமானத்தை விட்டுவிட்டு பள்ளிவாசல்களுக்கு பயணம் மேற்கொண்டு, "முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பு" என்று தாங்களாகவ சொல்லிக் கொண்டு, புனையப்பட்ட கதைகளைச் சொல்லி அறிவின் வறட்சியில் வாடிப் போயிருக்கும் தப்லீக் நண்பர்களை மட்டும் அரவணைத்துக் கொள்கின்ற பள்ளிவாசல்களாகத்தான் இன்றைய "அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்"(?) பள்ளிவாசல்கள் விளங்குகின்றன.
3. ஏகத்துவம், தொழுகை, அழைப்புப்பணி, கல்வி ஊட்டல், சமுதாயப்பணிகள், தான தர்மங்கள், கட்டுக்கோப்பு, சகோதரத்துவம், பரஸ்பரம், மக்கள் சேவை போன்ற அத்துணை விழுமங்களும் இவர்களின் பள்ளிவாசல்களில் நிறைந்திருக்கிறது. இருப்பினும், ஓர் உறுதியான கட்டிடத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டால் கட்டிடம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தாலும் மதிப்பிழந்து போவதுபோல், அடித்தளமான குர்ஆன் சுன்னாவின் மூலாதாரங்களில் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றம் பள்ளிவாசல்களின் சிறப்புமிக்க பணிகள் மங்கிப்போகக் காரணமாகின்றன.
எங்களின் வாதங்களையும் ஆய்வுகளையும் அதில் வெளிப்படுகின்ற முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள். எதிர்கருத்து தெரிவித்தால் உங்களின் ஈமானை பதம் பார்க்கும் அளவுக்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம் என்ற மனோபாவப் போக்கும், தாங்கள் மட்டும்தான் தவ்ஹீதை நிலைநாட்டுகிறோம் என்ற வறட்டுப் பிடிவாதமும் அதைச் சார்ந்த செயல்பாடுகளும் இந்த ஏகத்துவப் பள்ளிவாசல்கள், தங்களின் தமிழ்நாடு தவ்ஹீத் கொள்கையால் பராமரிக்கப்படாமல் கறைபடிந்து கிடக்கின்றன.
4. சில மாதங்களுக்கு முன் கல்லூரி பயிலும் சகோதரர்கள், ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த முஸ்லிம் அல்லாதவருக்கு யதார்த்தமாக இஸ்லாம் பற்றிய அறிமுகம் செய்துகொண்டிருந்தனர். அவர்களின் அணுகுமுறையால் கவரப்பட்ட முஸ்லிம் அல்லாதவர், தனக்கு திருக்குர்ஆனும் இஸ்லாமிய அறிமுக புத்தகங்களும் வேண்டுமென கேட்டிருக்கிறார். உடனே, அந்தச் சகோதரர்கள் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் நாள்தோறும் தொழுகைக்குச் செல்லும் (குர்ஆன், சுன்னா) பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று, அங்கே இருக்கும் பள்ளிவாசலின் உறுப்பினர்களிடம் அறிமுகம் செய்து, இவருக்கு குர்ஆனும் புத்தகங்களும் வேண்டுமென கேட்டிருக்கின்றனர். ஆனால், அந்தப் பள்ளிவாசலில் அழைப்பாளரும் இல்லை. கொடுப்பதற்கு திருக்குர்ஆனும் இல்லை. பள்ளியின் உறுப்பினர் அந்தப் பகுதியில் அழைப்புப்பணிக்காக குர்ஆன் பிரதிகள் வைத்திருக்கும் இன்னொருவரை அணுகி அவரிடம் குர்ஆன் பிரதி வாங்கி, முஸ்லிம் அல்லாதவருக்கு கொடுத்திருக்கின்றனர்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் அழைப்புப்பணிக்கே பிரசித்தி பெற்றிருந்தது. ஆனால், இன்று நம்முடைய குர்ஆன் சுன்னா சார்ந்த சில பள்ளிகளிலேயே முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்ய அழைப்பாளர்களும் இல்லை. அவர்களுக்குத் தருவதற்கு திருக்குர்ஆனும் இருப்பதில்லை. வெறும் பள்ளிவாசலின் அலமாரிகள் அரபு குர்ஆன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது யாரும் படிக்க முடியாமல்.(?)
மேற்சென்ற நான்கு வகை பள்ளிவாசல்களின் நிலையையும் நம் கண்முன் நிறுத்தி, தேவையான மாற்றங்களை விரைவில் ஏற்படுத்தவேண்டும்.
அன்புள்ள தொழுகையாளிகளுக்கும்; நிர்வாகிகளுக்கும்
நம் வீட்டைவிட மிகவும் பொறுப்பாக பள்ளிவாசல்களைப் பராமரிக்க தொழுகையாளிகளும் நிர்வாகிகளும் முன்வர வேண்டும். வியாபாரம் செய்வது, தொழுகையிடத்தில் பேசுவது, கூச்சல்போடுவது, சத்தமாக சிரிப்பது, சுய உலக அலுவல்களில் ஈடுபடுவது, பிறருக்கு இடையூறு மற்றும் சலசலப்பை ஏற்படுத்துவது போன்ற செயல்களிலிருந்து முற்றிலும் விலக வேண்டும். குர்ஆன் சுன்னா, அழைப்புப்பணி, கொள்கை(அகீதா), நற்பண்புகள்(அக்லாக்), உளத்தூய்மை ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யவேண்டும். ஏற்பாடு செய்திருந்தால் உடனடியாக கலந்து கொள்ளவும், அதற்கு உதவிகள் செய்யவும் வேண்டும்.

உங்கள் பகுதியில் பல்வேறு களப்பணிகள் செய்ய இறைவன் புறத்திலிருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட அமானித அருள்தான் பள்ளிவாசல்கள். வணக்க வழிபாடுகள், மார்க்கச் சொற்பொழிவுகளோடு சுருக்கிக் கொள்ளாமல், பைத்துல்மாலாக, அழைப்புப்பணிக்கு ஆணிவேராக, மக்கள் சேவை மையங்களாக, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் இடமாக மாற்றுங்கள். பள்ளிவாசல்களை பல்கலைக்கழகங்களாக்குங்கள். வாசிப்பைத் தூண்டுங்கள். அறிவுப் பசியுள்ள ஒரு சமுதாயத்தைத் தட்டி எழுப்புங்கள். ஒவ்வொரு பள்ளிவாசலையும் நபிகளார் காலத்து "மஸ்ஜிதுந் நபவி"யாக உயிர்ப்பெறச் செய்யுங்கள். மஸ்ஜிதுகள் உயிர்ப்பெறுவதற்கு தொழுகையாளிகளும் நிர்வாகிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
மாறட்டும் நம் பள்ளிவாசல்கள்
தற்கால பள்ளிவாசல்களுக்கு செயற்கையான புனிதத்துவம் கொடுக்கப்படுகின்றன. வெளிப்புறத்தோற்றம், அழகிய வடிவமைப்பு, சுத்தம் சுகாதாரம் போன்றவற்றைப் பேணுவதற்கு மட்டும் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிவாசல்களைப் பராமரிப்பது என்பது இதுமட்டுமல்ல. முதலில் சுட்டிக்காட்டிய "மஸ்ஜிதுந்நபவி" பள்ளிவாசல் அமையப்பெற்ற அத்தனை விழுமங்களும் நமது பள்ளிவாசல்களில் அமைவதற்கு நாம் பாடுபட வேண்டும். அதற்கேற்ற அறிவுபூர்வமான தலைமை, ஆக்கபூர்வமான செயல்கள், கல்வியில் முதிர்ச்சியுள்ள இமாம்கள், திறனுள்ள அழைப்பாளர்கள், துடிப்புள்ள அங்கத்தினர்கள் என பள்ளிவாசல்களின் மினாராக்கள் மிளிர்வதைப் போன்று பொறுப்பாளர்களும் மிளிர வேண்டும்.

தமிழகத்தில், அல்லாஹ்வின் அருளால் நிறைய பள்ளிவாசல்கள் உள்ளன. எனினும், அவை அனைத்தும் பகைமைகளாலும் பிரிவினைகளாலும் பிளவுபட்டு கிடக்கின்றன. தொழுகைக்கு இரண்டாவது ஜமாஅத் நடத்த முடியவில்லை என்பதற்காக, பிரிந்த பள்ளிவாசல்கள் இன்று கடமையான தொழுகையே சரிவர நடத்த முடியாமல் தடுமாறுகின்றன. ஏன் இத்தனை பிரிவினைகள்? இத்தனை கொள்கை முரண்கள்? என்ன செய்யவேண்டும் இதற்கு? – நாம் அனைவரும் ஒரே கொள்கையில் மாறவேண்டும். அந்தக் கொள்கை, அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆனும், அவனுடைய தூதரின் சொல், செயல், அங்கீகாரமும்தான். இவற்றை மட்டும் இஸ்லாத்தில் முன்னிறுத்த வேண்டும். இந்த மூலாதாரங்களை யாருடைய புரிதலுக்கும் உட்படுத்தாமல் நபித்தோழர்களின் புரிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை முதன்மைப்படுத்தி, நாமும் மாறி நம் பள்ளிவாசல்களையும் மாற்றிட வேண்டும்.
"பாவத்திலிருந்து விலகிக்கொண்டவர்களும்; (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும்; (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும்; (நோன்பு நோற்பவர்களும், மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பயணம் செய்பவர்களும்; குனிந்து சிரம் பணிந்து (தொழுபவர்களும்;) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும் பாவமான காரியங்களை விலக்குபவர்களும்; அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்." – (அல்குர்ஆன் – 9:112)
மக்தூம் தாஜ், சென்னை.
நன்றி அல்ஜன்னத் மாத இதழ்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

தொழுகையை சுருக்கித் தொழுதல்

தொழுகையை சுருக்கித் தொழுதல்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர்: உண்மை உதயம்)

சென்ற இதழில் பயணி சுருக்கித் தொழுவதுதான் சிறந்தது. நவீன கால வசதி வாய்ப்புக்களைக் காரணம் காட்டி தொழுகையை சுருக்குவதைத் தவிர்ப்பது தவறானது என்பதை அவதானித்தோம்.

பயணி முழுமையாகத் தொழும் சந்தர்ப்பம்:
பயணம் செய்யக் கூடியவர் ஊர்வாசிகளைப் பின்பற்றித் தொழ நேர்ந்தால் அவர் முழுமையாகவே தொழ வேண்டும். தொழுகையின் ஆரம்பத்தில் அல்லது இறுதி அத்தஹிய்யாத்தில் இணைந்தால் கூட அவர் எழுந்து 'கஸ்ர்' – சுருக்கித் தொழாமல் முழுமையாகவே தொழ வேண்டும்.

பயணி கட்டாயம் சுருக்கித் தொழ வேண்டும் என்ற கருத்தில் உள்ள சிலர் பயணி ஊர்வாசியைப் பின்பற்றித் தொழுதால் இரண்டாம் ரக்அத்தில் இமாமைவிட்டும் பிரிந்து தனியாக ஸலாம் கொடுத்துவிடலாம் என்று கூறுகின்றனர். இது தவறானதாகும். மற்றும் சிலர் இமாமை விட்டும் பிரியக் கூடாது. எனவே, இரண்டாம் ரக்அத்தில் இமாம் அத்தஹிய்யாத்து முடிந்து மூன்றாம் ரக்அத்துக்காக எழும்பும் போது பயணி அப்படியே இருக்க வேண்டும். இமாம் மூன்றாம் ரக்அத்தைத் தொழுது நான்காம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்து அவர் ஸலாம் கொடுத்த பின்னர் பயணி ஸலாம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இதுவும் தவறானதாகும்.


அதாவது, முதல் சாரார் இமாமை விட்டும் பிரிந்து இரண்டாம் ரக்அத்தில் ஸலாம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இரண்டாம் சாரார் பிரியக் கூடாது. ஆனால், நான்கு தொழும் இமாமைப் பின்பற்றித் தொழுதாலும் பயணி இரண்டு மட்டுமே தொழ வேண்டும் என்கின்றனர். இந்த இரு கருத்துக்களும் சுன்னாவுக்கு முரண்பட்டதாகும்.

மூஸா இப்னு ஸலமா(ரஹ்) அறிவிக்கிறார்: '(பயணிகளான) நாம் இப்னு அப்பாஸ்(வ) அவர்களுடன் மக்காவில் இருந்தோம். அப்போது அவரிடம் நாம் உங்களுடன் தொழுதால் நான்கு ரக்அத்துக் களாகத் (சுருக்காமல்) தொழுகின்றோம்? எங்களுடைய தங்குமிடங்களுக்குச் சென்று விட்டால் (சுருக்கி) இரண்டு ரக்அத்துக்களாகத் தொழுகின்றோம்' என்று கூறினேன். அதற்கவர்கள் இதுதான் அபுல் காஸிம் (முஹம்மத்(ச)) அவர்களின் சுன்னாவாகும்' எனப் பதிலளித்தார்கள்.
(அஹ்மத்: 1862, முஸ்னத் அஸ்ஸிராஜ்: 1397,
அல் முஃஜம் அல் அவ்ஸத்: 4294, 4555,
தபரானி: 12985)

பயணி ஒருவர் ஊர்வாசியைப் பின்பற்றித் தொழுதால் கஸ்ரு செய்யாமல் நான்கு ரக் அத்துக்களைத் தொழுவதுதான் சுன்னா என்ற இப்னு அப்பாஸ்(வ) அவர்களின் கூற்று ஊன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.
'இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார் கள்: 'பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு முரண் படாதீர்கள்! அவர் ருகூஃ செய்தால் நீங்களும் ருகூஃ செய்யுங்கள்! அவர் 'ஸமிஅல் லாஹு லிமன் ஹமிதா' என்று கூறினால் நீங்கள் 'ரப்பனா லகல் ஹம்து' எனக் கூறுங்கள்! அவர் ஸஜ்தா செய்தால் நீங்களும் ஸஜ்தா செய்யுங்கள்! அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்து தொழுங்கள்! தொழுகையில் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்! ஏனெனில், வரிசையை ஒழுங்குபடுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதாகும்' என அபூ ஹுரைரா(ச) அறிவித்தார்.' (புஹாரி: 722)
இமாமுக்கு முரண்படக் கூடாது என்றும் இமாம் நின்று தொழுதால் நின்று தொழு வேண்டும் என்றும் அமர்ந்து தொழுதால் பின்னால் உள்ளவர்களும் அமர்ந்து தொழ வேண்டும் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.
இப்படியிருக்கும் போது, இமாம் முழுமைப்படுத்தித் தொழும் போது மஃமூம் 'கஸ்ர்' – சுருக்கித் தொழ முடியாது என்றே முடிவெடுக்க வேண்டும்.
'இப்னு உமர்(வ) அவர்கள் இமாமுடன் தொழுதால் நான்கு தொழுவார்கள். தனித்துத் தொழுதால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவராக இருந்தார்கள்.'
ஸஹீஹ் முஸ்லிம்: 694-17

மினாவில் சுருக்கித் தொழுவதுதான் சுன்னாவாகும். உஸ்மான்(வ) அவர்கள் மினாவில் சுருக்கித் தொழாமல் நான்கு ரக்அத்துக்களாகத் தொழுதார்கள். அவர் தன்னை 'முகீம்' – தங்கியிருப்பவராகக் கருதியதால் அல்லது தொழுகை பற்றிய அறிவு அற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளலாம் என்ற காரணத்தினால் அப்படிச் செய்திருக்கலாம்.
இந்த சந்தர்ப்பத்தில் பூரணமாகத் தொழும் இமாமைப் பின்பற்றித் தொழும் போது இப்னு உமர்(வ) அவர்கள் நான்கு ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். தனித்துத் தொழும் போது இரண்டிரண்டு ரக்அத்துக் களாகத் தொழுதுள்ளார்கள்.
பூரணமாகத் தொழும் ஒருவரைப் பின்பற்றித் தொழும் பயணி சுருக்கித் தொழ முடியாது என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது.

பின்வரும் ஹதீஸை ஆதாரமாக வைத்து பயணி ஊர்வாசியைப் பின்பற்றித் தொழும் போது இரண்டாம் ரக்அத்தில் தனியாக ஸலாம் கொடுத்து ஜமாஅத்தை விட்டும் பிரிந்து செல்லலாம் என்று சிலர் தவறாக வாதிட்டு வருகின்றனர்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(வ) அறிவித்தார்: 'முஆத் இப்னு ஜபல்(வ) அவர்கள் நபி(ச) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ ஸலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு (நபி(ச) அவர்களுடன் தொழுத) அதே தொழுகையைத் தொழுகை நடத்துவது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும் போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒருவர் (தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது(விட்டுத் தம் பணியைக் கவனிக்கச் சென்று)விட்டார். இச்செய்தி முஆத்(வ) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், 'அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்)' என்றார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபி(ச) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்களின் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம்.
இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுகை நடத்திய போது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். எனவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம்' என்று கூறினார். அப்போது நபி(ச) அவர்கள் (முஆத்(வ) அவர்களிடம்), 'முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா?' என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், '(நீர் இமாமாக நிற்கும் போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சற்று சிறிய) அத்தியாயங்களை ஓதும்!' என்றும் சொன்னார்கள்' (புகாரி: 6106)
தேவையுள்ள ஒருவர் ஜமாஅத்தை விட்டும் பிரிந்து சென்றுள்ளார். தேவையுள்ளவரே பிரியலாம் எனும் போது பயணிக்கு இரண்டு ரக்அத்துக்கள்தான் கடமை. எனவே, நான்கு தொழுபவரைப் பின்பற்றித் தொழும் பயணி தனது கடமை முடிந்ததும் தனியாக ஸலாம் கொடுத்து பிரிந்துவிட முடியும் என்கின்றனர். இது தவறாகும். நாம் ஏற்கனவே குறிப்பிட்ட ஹதீஸ் மற்றும் இப்னு அப்பாஸ்(வ) அவர்களது கூற்று என்பன முழுமையாகத் தொழும் இமாமைப் பின்பற்றித் தொழும் பயணி இமாமுக்கு முரண்படக் கூடாது. இமாமைப் பின்பற்றி நான்கு ரக்அத்துக்கள்தான் தொழ வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
அடுத்து, குறித்த மனிதர் இமாமை விட்டும் பிரிந்து சென்றதை நபியவர்கள் அங்கீகரிக்கவில்லை. அவர் பிரிந்து செல்லக் காரணமாக இருந்த முஆத்(வ) அவர்களை நபியவர்கள் கண்டிக்கின்றார்கள். அத்துடன் அதற்குக் காரணமாக இருந்த நீண்ட நெடிய சூறாக்களை ஓதாமல் சிறிய சூறாக்களை ஓதுமாறும் பணிக்கின்றார்கள்.
எனவே, தற்செயலாகவும் தனிநபர் முடிவாகவும் சந்தர்ப்பவசம் காரணமாகவும் அமைந்த இந்த நிகழ்வை மையமாகக் கொண்டு பயணி ஜமாஅத்துடன் தொழும் போது தொழுகையைப் பாதியுடன் முடித்துக் கொண்டு தனியாகப் பிரிந்து செல்ல முடியாது என்பதே சரியான முடிவாகும்.
பயணத்தின் தூர அளவு:
பயணி தொழுகையை சுருக்கித் தொழ முடியும் என்பதை அறிந்தோம். எவ்வளவு தூரம் கொண்டதாக பயணம் அமைந்தால் சுருக்கித் தொழ முடியும் என்பதைத் தீர்மானிப்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் நியாயமான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

பெரும்பாலும் பேணுதலின் அடிப்படையில் முடிவு செய்ய அவர்கள் விரும்பியதால்தான் இந்தக் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன என்பதை அவர்களது அபிப்பிராயங்களை ஆராயும் போது அறிந்து கொள்ள முடியும். இது தொடர்பில் அறிஞர்களின் அபிப்பிராயங்களையும் சற்று அவற்றுக்கான ஆதாரங்களையும் விரிவாக நோக்குவோம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

வேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர்களா... இதப் படிங்க முதல்ல!

வேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர்களா... இதப் படிங்க முதல்ல!
எல்லோருக்குமே பெரிய பெரிய கனவுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள சூழல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அல்லது வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதில்லை. மனதுக்குள் பிசினஸ்மேன் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர், மனது ஒட்டாமல் எதோ ஒரு வேலையில் காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பார்கள். கேட்டால், `முதலீடு செய்ய பணமில்லை' என்பார்கள். அவர்கள் எல்லாம் சந்தையில் இறங்கியே இருக்கமாட்டார்கள். ஏனெனில், உண்மையில் பிசினஸ் செய்ய முதலீடு ஒரு பிரச்னையே இல்லை. ஏராளமான பொது மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் அமைப்புகள், முதலீட்டு நிறுவனங்கள் பிசினஸ் செய்ய விரும்புபவர்களுக்கு பணம் தர தயாராக உள்ளன. எனவே துணிந்து இறங்கினால் வெற்றி பெறலாம்.

அப்படி வேலையை விட்டுவிட்டு பிசினஸ் செய்ய நினப்பவர்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்வது அவசியம். ஒருபோதும் நாம் எடுத்த முடிவு, தவறான முடிவாகிவிட்டதே என்று நம்மை கவலைப்பட வைத்துவிடக் கூடாது. எனவே பின்வரும் விஷயங்களை பிசினஸ் செய்பவர்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.



30 வயது!
30 வயது என்பதுதான் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். அந்த வயதில் எடுக்கும் முடிவுகள் தான் இறுதிவரை
 நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும். மேலும் 30 வயதுக்கெல்லாம் நமக்கு வாழ்க்கையைப் பற்றியும் நம்முடைய திறமைகள் பற்றியும் எதிர்காலம் பற்றியும் ஒரு தெளிவு ஏற்பட்டுவிடும். இந்த வயது வரைக்கும் நாம் பல வேலைகளுக்கு மாறி இருக்கலாம். பல தவறுகளைச் செய்திருக்கலாம். வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றி கவலைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் 30 வயதுக்குப் பிறகு நாம் பொறுப்பானவர்களாக மாற வேண்டியிருப்பது, நம்முடைய சமூக கட்டமைப்பில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அப்படியும் பொறுப்பில்லாமல் இருந்தால் காலம் நமக்கு அதற்கான பாடத்தைக் கற்றுத்தந்தே தீரும்.

எனவே நம் வாழ்க்கைக்கான முடிவை 30 வயதில் தீர்மானித்துவிட வேண்டும். நாம் என்ன செய்யப் போகிறோம், வேலையா, பிசினஸா, பிசினஸ் என்றால் என்ன பிசினஸ், எப்படி செய்யப் போகிறோம்? போன்ற கேள்விகளைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் 30 வயதைக் கடந்த பிறகு குடும்பம், குழந்தைகள், செலவுகள் என்று நம் கையை மீறிதான் வாழ்க்கை இருக்கும். மேலும் வயதான பிறகு ரிஸ்க் எடுக்கவும் முடியாது.
ஆர்வம், திறமை, தேவை!

பிசினஸ் செய்வதற்கு முன் நம்முடைய ஆர்வம் எதில் இருக்கிறது, நம்மிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, நாம் செய்யப்போகும்
 பிசினஸின் தேவை என்ன? என்ற இந்த மூன்று கேள்விகளையும் ஒருவர் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்தால்தான் வெற்றி வசமாகும். ஆர்வம் இருந்து திறமை இல்லையென்றாலும் சரி, நம்முடைய பிசினஸுக்கான தேவையே இல்லாமல் இருந்தாலும் சரி தோல்விதான். எனவே என்ன பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கு தேவையான திறமைகளையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளுங்கள். அந்த பிசினஸ் குறித்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். முக்கியமாக அந்த பிசினஸின் தேவை எந்தளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தான் வளர்ச்சி இருக்கும்.

துவண்டுபோகக் கூடாது!
தொழில் தொடங்கிய ஆரம்பத்தில் பெரிதாக வளர்ச்சி இருக்காது. 'சூரியவம்சம்' படத்தில் வருவது போல ஒரே பாட்டில் ஓஹோ என்றெல்லாம் வளர்ந்துவிட முடியாது என்பதை முதலில் உணருங்கள். ஆரம்பத்தில் வருமானம் குறைவாக இருந்தால், வேலையில் இருந்திருந்தாலே மாத வருமானம் ஒழுங்காகக் கிடைத்திருக்குமே என்று நீங்களும் நினைக்கக்கூடாது;
 அப்படி கூறுபவர்களின் பேச்சையும் காதில் போட்டுக்கொள்ள கூடாது. ஆரம்பத்தில் ஏற்படும் இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் மனதைரியம் வேண்டும்.

இருக்கு, ஆனா இல்லை!
வேலையில் இருக்கும்போது நம்முடைய சுதந்திரம் என்பது ஒரு வட்டத்துக்குள்தான் இருக்கும். ஆனால் பிசினஸ் செய்வது என்று கிளம்பிவிட்டால் நம் இஷ்டம்தான், நம் சுதந்திரம்தான் என்று நினைக்கலாம். தவறில்லை உண்மைதான். சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அதே சமயம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் வேலையில் இருந்ததைவிட பிசினஸில் அதிக ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

வேலையில் இருக்கும்போது, எட்டு மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்றால் பிசினஸில் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். 'உழைப்புதான் உன்னை உயர்த்தும்' என்பதை நீங்களே உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். பின்னர் அதுவே பழகிவிடும்.

போட்டியாளர்களைப் படியுங்கள்!
எல்லா பிசினஸிலும் போட்டி இருக்கிறது. போட்டி என்பது மிக ஆரோக்கியமான ஒரு விஷயம். ஒருவரின் வளர்ச்சியைக் குறைக்கவும், கூட்டவும் போட்டிக்கு வலிமை உண்டு. வளர்ச்சியை அதிகரித்துக்கொள்ள போட்டியாளர்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அவர்களை விட எந்தவிதத்தில் நாம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மாற முடியும் என்பதை அதை வைத்துதான் முடிவு செய்ய முடியும்.

உங்கள் பிசினஸ் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நடைமுறைகள், அரசு கட்டுப்பாடுகள், தொழில்நுட்பங்கள் ஆகியவைக் குறித்து அப்டேட்டாக இருங்கள்.
வேலையில் சம்பள உயர்வுக்கும், பிசினஸில் லாப வளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் பிசினஸ் செய்வதிலுள்ள ப்ளஸ். ஆனால் உண்மையில் பிசினஸ் செய்வது, ஒரு இடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் கடினமானது. அந்த ரிஸ்க்கை எடுப்பவர்களும், ஒருபோதும் முன்வைத்த காலை பின்வைக்காதவர்களும் தான் பிசினஸில் ஜெயிக்க முடியும்.
ஆல் தி பெஸ்ட்...!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts