லேபிள்கள்

வெள்ளி, 26 ஜூலை, 2024

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பலரும் இரவு நேரத்தில் அதிகளவு மூக்குபிடிக்க உணவுகளை சாப்பிடுவார்கள். உண்மையில் இரவு வேளை என்பது உணவு அதிகம் சாப்பிட வேண்டிய வேளையல்ல.

மூன்று வேளை சாப்பாட்டில் குறைவாக உணவு உட்கொள்ள வேண்டியது இரவு மட்டுமே. அதிலும் இட்லி, இடியாப்பம், தோசை, ஆப்பம், பழங்கள் போன்றவை இரவில் சாப்பிட ஏற்றது.

ஏனெனில், இந்த உணவுகளே எளிதில் செரிமானம் ஆகும். நன்கு உறங்கி ஓய்வெடுக்க வேண்டிய உறுப்புகளுக்கு, செரிமான வேலை சுமையைக் கொடுத்தால் செரிமானப் பிரச்சனைகள் நிச்சயம் வரும்.

அதனால் பரோட்டா, பூரி, நூடுல்ஸ், சிக்கன், தந்தூரி, கிரில் உணவுகளைப் போன்றவை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

பொறித்த, வறுத்த உணவுகள் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். அசைவ உணவுகளை இரவில் உண்பதைத் தவிர்க்கவே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சித்த மருத்துவத்தில் இரவு உணவை பற்றிக் குறிப்புகள் உள்ளது. அவை, அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, தூதுவளை, துவரம் பருப்பு, அத்திக்காய், பால் போன்றவை இரவில் சாப்பிடலாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், கீரை வகைகளும் தயிரும் இரவில் சாப்பிட கூடாது என்பது முக்கிய விஷயமாகும்.



--

செவ்வாய், 23 ஜூலை, 2024

பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் நிற்கும் வயது எது?

குறிப்பிட்ட வயதை கடந்த பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை அனுபவிப்பார்கள். மெனோபாஸ் என்பது ஒரு வருடத்திற்கு மாதவிடாய் வருவதில் மாறுபாடு ஏற்பட்டு படிப்படியாக குறையும் என வரையறுக்கப் படுகிறது.

இது பொதுவாக பெண்களின் 40களின் பிற்பகுதியில் அல்லது 50களின் முற்பகுதியில் நிகழும்.

மெனோபாஸ் என்பது பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் அறிகுறிகளுள் எடை அதிகரிப்பு அல்லது பெண்ணுறுப்பு வறட்சி ஆகியவை அடங்கும். சரி, இந்த மெனோபாஸ் குறித்து பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

மாதவிடாய் நிற்கும் பொதுவான வயது எது?

மாதவிடாய் நிற்பதற்கான (மெனோபாஸ்) சராசரி வயது 51 என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் ஏற்படுவது படிப்படியாக நிற்கிறது. கருப்பை செயல்பாடு குறைவதற்கான ஆரம்ப நிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சில பெண்களுக்கு தொடங்கலாம். மற்றவர்கள் 50 வயதிற்கு பிறகும் மாதவிடாய் காலத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைவதால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படுகின்றன?

75 சதவீத பெண்கள் மாதவிடாய் நின்ற காலத்தில் உடல்ரீதியாக பல பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். ஹாட் ஃப்ளாஷ் எனப்படும் அதிகப்படியான காய்ச்சல் வெப்பத்தின் திடீர் உணர்வு என்பது மாதவிடாய் நிற்கும் பெண்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளாகும். பகலில் அல்லது இரவில் இதுபோன்ற உணர்வு ஏற்படலாம். சில பெண்கள் தசை மற்றும் மூட்டு வலியை அனுபவிப்பார்கள். இது ஆர்த்ரால்ஜியா அல்லது மனநிலை மாற்றங்கள் (mood swing) என்று அழைக்கப்படுகிறது.

மெனோபாஸ் எலும்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியின் சரிவு எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவை பாதிக்கும். இது எலும்பு அடர்த்தியில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்துவதால் உங்களை இடுப்பு, முதுகெலும்பு மற்றும் பிற எலும்பு முறிவுகளுக்கு ஆளாக்கும். எனவே, உங்கள் எழும்பு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

பால் பொருட்கள், கீரை வகைகள் போன்ற கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்

வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

மது அருந்துவதை, புகைப்பிடிப்பதை தவிக்கவும்.

மெனோபாஸுக்கும் இதய நோய்க்கும் தொடர்பு உள்ளதா?

தலைச்சுற்றல் அல்லது இதயத் துடிப்பில் மாற்றம் போன்றவை மாதவிடாய் நிற்கும் பருவத்தில் நீங்கள் அனுபவிக்கும் ஒன்று. ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் உங்கள் உடல் ஃப்ளெக்ஸிபில் ஆர்ட்ரீஸ்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இது இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

எனவே, உங்கள் உடல் எடையை கவனித்து, ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது ஆகியவை இதய நோய்களை உருவாக்குவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும்போது உடல் எடை அதிகரிக்குமா?

உங்கள் ஹார்மோன் அளவில் ஏற்படும் மாற்றங்கள் உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இருப்பினும், உங்கள் வயதானது எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கும் ஒன்றாகும்.

சீரான உணவை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள், உங்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் பிற ஆரோக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடிக்கவும். அதிக எடையுடன் இருப்பது இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் பிற நிலைமைகளுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.



--

வெள்ளி, 19 ஜூலை, 2024

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கின்றனர்.

இரும்பு, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் இதில் இருக்கின்றன. இது உங்கள் ஆரோக்கியம், தோல் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கின்றது. எனினும், நீரிழிவு நோயாளிகளும் பீட்ரூட்டை சாப்பிடலாமா? பீட்ரூட்டின் நன்மைக்காக அதை சாப்பிட்டால், அதனால் நீரிழிவு நோயாளிகள் அவதிப்பட நேரிடுமா?

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாமா கூடாதா?

பீட்ரூட்டின் சுவை இனிமையாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா கூடாதா என்ற குழப்பத்தில் இருப்பது வழக்கம். இந்தக் கேள்விக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும்  நன்மைகள்

சக்திவாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் பீட்ரூட்டில் ஏராளமாக உள்ளன. ஆகையால், பீட்ரூட் நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் அதை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். பீட்ரூட்டின் சிறப்பம்சங்களைப் பற்றி விரிவாகப் புரிந்து கொள்வோம்.

1. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். பீட்ரூட் சாப்பிடுவதால், அல்லது அதன் சாற்றை குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தலாம்.

2. வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம்

நீரிழிவு நோயாளிகள் உணவுக்கு முன் பீட்ரூட்டை சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதால், உடலுக்கு இயற்கையான சர்க்கரை கிடைப்பது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பும் சிறப்பாக இருக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்காது.

3. பல நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு

நீரிழிவு நோய் இந்தியாவில் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. இது சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது என்பதால் இது பல நோய்களின் மூலமாக கருதப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பீட்ரூட்டை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயால் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.

4. இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

பீட்ரூட்டில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு முன் பீட்ரூட்டை உட்கொள்ள வேண்டும். இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் இதனால் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும்.

--

செவ்வாய், 16 ஜூலை, 2024

தயிர் தகவல்கள்.*

* தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் புஷ்டியைத் தரும்.

* உறை ஊற்றிய பின் சிலசமயம் நன்கு உறையாமல் இருக்கும் (அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும்) அதனை உட்கொண்டால், பசியைக் குறைத்து, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய்ப்புண் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். நன்கு உறைந்த தயிரை சாப்பிடுவது சிறந்தது.

* மண் சட்டியிலிருந்து புரை ஊற்றிய தயிர்தான் நமது தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அது கெட்டியாகவும் இருக்கும்.

* ஒருபோதும் தயிரை சுட வைத்துச் சாப்பிடக்கூடாது. சிலர் சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏற்றதல்ல.

* உடலைப் புஷ்டிப்படுத்த விரும்புபவர்கள் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய்த் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.

* தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் காணப்படும். இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு மூன்றும் கலந்த சிறந்த பானம். அந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் காலை, மாலை கால் கிளாஸ் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு, தலைச்சளி நீங்கும்.

* தயிரை துணியில் வடிகட்டி அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்த்து குளிர வைத்தால் ஸ்ரீகண்ட் இனிப்பு தயார். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

* பசியில்லாதவர்கள் லேசான புளிப்புடன் இருக்கும் தயிரை சாப்பிட்டால் பசி எடுக்கும்.

* நன்றாக புளித்த தயிர் ரத்தக்கொதிப்பு. பித்த வாயு, வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

* இரவில் குளிர்ச்சியான தன்மையில் தயிரைச் சாப்பிட்டால் ஜீரணக்குறைவு, மூச்சிறைப்பு, ரத்த சோகை, காமாலை, தோல் நோய்கள், ரத்தக்கொதிப்பு போன்றவை உண்டாகும்.

* இரவில் தயிர் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். அல்லது சீரகம், இந்துப்பு, பெருங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.



--

சனி, 13 ஜூலை, 2024

மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

வெறும் பாலைக் குடிக்காதே.

அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி' என்பார்கள் நம் வீட்டுப் பாட்டிகள். ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள் பால் அருந்துவோம். சச்சின் டெண்டுல்கர் தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் மஞ்சள் தூள் கலந்த பாலைத் தான் குடிப்பாராம். உண்மையில், நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றதை சரியாகப் புரிந்து கொண்டு பின்பற்றாததுதான் இன்றைக்குப் பல நோய்களுக்குக் காரணம். அவற்றில் மஞ்சள் பால் ரகசியமும் ஒன்று. இது ஓர் ஆரோக்கிய அதிசயம். இதைக் குடிப்பதால் கிடைக்கும் மருத்துவப் பலன்கள் ஏராளம். அவை... .

மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும்.

மஞ்சள் பாலில் சேர்க்கப்படும், ஏலக்காய், மிளகு, ஆகியவை செரி மானத்தை எளிதாக்குகிறது. உடலில் பித்த உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் செரிமான கோளாறுகளை நீக்குகிறது. மஞ்சள் பாலில் சேர்க்கப்படும் இஞ்சி மற்றும் பிற பொருட்கள் உடலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி குடல் இயக்கத்தைத் தூண்டுகிறது. மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் செரிமான அமைப்பை சீராக வைக்கும்.

இரத்தத்தை சுத்திகரிக்கிறது

இரவில் ஒரு கிளாஸ் சூடான பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

மூட்டு வலி குறையும்

மஞ்சளில் உள்ள குர்குமின் வீக்கம் மற்றும் மூட்டு வலியையும் எதிர்த்துப் போராட உதவுகிறது. கீல்வாதம் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஞ்சள் பால் குடிப்பது பயன் தரும். பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது. எனவே மஞ்சள் பால் எலும்பு வலியைக் குறைப்பதில் மட்டுமல்லாமல் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

நரம்பு மண்டலம்

மஞ்சள் பாலில் சேர்க்கப்படும் ஏலக்காய், மஞ்சள் ஆகியவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி தூக்கமின்மை மற்றும் பதட்டத்தை குறைக்கின்றது.

நன்றாக தூங்க உதவுகிறது

படுக்கை நேரத்தில் மஞ்சள் பால் குடிப்பது தூக்கமின்மையால் போராடுபவர்களுக்கு நன்மை கிடைக்கும். தூக்கத்தைத் தூண்டும் அமினோ அமிலமான டிரிப்டோபான் பாலில் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் மன அழுத்தத்தை குறைத்து இரவு தூக்கத்தை எளிதாக்குகிறது. நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் சூடான மஞ்சள் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு ஏலக்காய் தூள் கலந்து குடித்தால் தூக்கம் உங்கள் கண்களை தழுவும்.

மாதவிடாய் பிடிப்பை நீக்குகிறது

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் பிடிப்பை அனுபவிக்கும் பெண்களுக்கு, மஞ்சள் பால் பயனளிக்கும், மஞ்சள் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளை கொண்டுள்ளதால் இது மாதவிடாய் வலியையும் தீவிரத்தையும் குறைக்க உதவுகிறது. மாதவிடாய் தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் பாலை குடிக்கத் தொடங்க பரிந்துரைக்கப்படுகிறது.

மஞ்சள் பால் செய்வது எப்படி

ஒரு கப் பால் எடுத்து ஒரு கொதிக்க வைக்கவும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்க்கவும். நீங்கள் தூங்குவதற்கு சற்று முன்பு அதை சூடாகவோ குடிக்கவும். மஞ்சள் பாலில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் சேர்ப்பது தொண்டை புண் மற்றும் தொற்றுநோய்களை தடுக்க உதவும்.



--

செவ்வாய், 9 ஜூலை, 2024

பன்னீர் சாப்பிடுவதால் எடை கூடுமா? குறையுமா?*


பொதுவாக பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரில் கால்சியமும், புரதச் சத்துக்களும் நிறைந்துள்ளது.

இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பன்னீரில் கால்சியம், பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் எ, வைட்டமின் டி என பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.

இது பல நோய்களுக்கு அருமருந்தாகவும் திகழ்கின்றது. இதனை உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எடுத்து கொண்டால் இன்னும் நன்மையே தரும்.

அந்த வகையில் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் புரதத்தின் தேவைக்காக ஏன் பன்னீரை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.

குறைந்த கார்போ அளவும் அதிக புரதமும் கொண்ட பன்னீர் கலோரி அளவில் மிக மிகக் குறைந்தது. 100 கிராம் பன்னீரில் வெறும் 70 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. அதனால் எடை குறைக்க பன்னீர் சாப்பிடலாம். அதனால் தந்தூரி, தவா ஃபரை போன்று எடுத்துக் கொள்வது நல்லது.

குறைந்த கொழுப்புள்ள பாலில் இருந்து எடுக்கப்படும் பன்னீரை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அதில் குறைந்த கொழுப்பும் அதிக புரதமும் கிடைக்கிறது.

பன்னீரில் இருந்தே குறைந்த அளவு கார்போ கிடைக்கும். 100 கிராம் பன்னீரில் 1.2 கிராம் அளவு கார்போ கிடைக்கிறது. எனவே இவற்றை எடுத்து கொள்ளலாம்.

பன்னீரில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பு வகையைச் சார்ந்தது. இது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை எரிக்கவும் உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்யவும் பயன்படுவதால் இயல்பாகவே எடை குறைய ஆரம்பிக்கும்.

நம்முடைய உடலுக்குத் தேவைப்படுகிற ஒட்டுமொத்த கால்சியம் அளவில் 8 சதவீதம். அதனால் பன்னீரை நிச்சயம் எடை குறைக்க நினைப்பவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.



--

சனி, 6 ஜூலை, 2024

எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால் நல்லது?

நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வார்த்தைகள் இந்த உலகுக்கு பொருந்துதோ இல்லையோ நமது உடலுக்கு நன்றாகவே பொருந்தக் கூடியது.

மனித உடலானது 70 சதவிகிதம் நீரை கொண்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். எப்படி கார்ப்ஸ், புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை முக்கியமோ அதேபோல் நம் உடல் சுறுசுறுப்பாக இயங்க நீரும் முக்கியம் தான். ஒவ்வொரு நாளையும் நாம் தண்ணீர் பருகி தொடங்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், உடல்நலக்குறைவை போக்கவும் தண்ணீர் நல்ல சிகிச்சை நிவாரணியாக உள்ளது. ஒவ்வொரு நாட்டினரும் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மருத்துவ முறைகளை பின்பற்றுவார்கள். அந்த வகையில் நீரைக் கொண்டு ஜப்பானில் மருத்துவ சிகிச்சை முறையானது பின்பற்றப்படுகிறது. உண்மையில் ஜப்பானியர்கள் இவ்வளவு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், பளபளப்பான சருமத்துடனும் காட்சியளிப்பதற்கு காரணம் இத்தகைய நீர் சிகிச்சையே ஆகும்.

உடல் வெப்பநிலையை சமப்படுத்துகிறது

உடல் தண்ணீரினால் ஆனது, உடலில் உள்ள வெப்பநிலையை இது பராமரிக்கிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மிக எளிதாக நீங்கும், இரத்தம் சுத்தமாகும், மலச்சிக்கல் ஏற்படாது, காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குறைந்தது இரண்டு கிளாஸ் முதல் மூன்று கிளாஸ் தண்ணீர் குடிக்க தொடங்குங்கள் சில வாரங்களுக்கு முறையாக அதனை பின்பற்றி பாருங்கள், அதன் பிறகு ஏற்படும் நன்மைகளை நீங்கள் உணர தொடங்குவீர்கள்.

ஆற்றலை அதிகரிக்கும்

உடல் சோர்வு உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் ஏற்படலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சோர்வை குறைக்கவும் உடல் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவும்

சில ஆய்வுகளின்படி, உணவுக்கு முன் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பவர்கள் வேகமாக உடல் எடை இழக்கிறார்கள் என்று கூறப்படுகிறது, இதற்கு உள்ள காரணம் தண்ணீர் உங்கள் வயிற்றை நிரப்புகிறது மற்றும் அதிகமாக சாப்பிடும் போக்கைக் குறைக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்களை வெளியேற்றும் திறன் தண்ணீருக்கு உள்ளது. தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு காரணமான அதிகப்படியான ரசாயனங்கள், தாதுக்கள் மற்றும் உப்புகளை தண்ணீர் நீர்த்துப்போகச் செய்கிறது, இதோடு சேர்த்து உடலில் உள்ள நச்சுக் கழிவுகளையும் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

சரியான செரிமானத்திற்கு

சரியான செரிமானம் ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது. அஜீரணம் ஏற்பட்டால் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம். தினசரி 6-8 கிளாஸ் தண்ணீரை உட்கொள்ளுங்கள். இந்த நடைமுறை பயனுள்ள உணவு செரிமானத்திற்கு உதவும் மற்றும் ஒழுங்கற்ற குடல் இயக்கங்களையும் கட்டுப்படுத்தும்.

கீல்வாதத்திற்கு

போதுமான அளவு தண்ணீரை குடிக்க விட்டால் மூட்டுகளில் உள்ள வழவழப்பு தன்மை குறைந்து மூட்டுகளில் உராய்வு ஏற்படும். இதனால் மூட்டுகளில் வலி ஏற்படலாம். வழக்கமான நீர் உட்கொள்ளல் குறைவது முடக்கு வாதம் போன்ற மூட்டு பிரச்சினைக்கு வழிவகுக்கும். இவை ஏற்படாமல் தடுக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒற்றை தலைவலி

ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க தொடங்குங்கள். இது உடலில் நீர் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைத் தடுக்கும்.

சருமம் பொலிவாக

முகப்பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளை தேவையான அளவு தண்ணீரை குடிப்பது மூலம் சிகிச்சையளிக்க முடியும். உங்கள் உடலில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும் பொழுது   அது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும், இது ஆரம்பகால வயதான அறிகுறிகளான சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் சரும பிரச்சனைகளை தடுக்கும்.



--

புதன், 3 ஜூலை, 2024

தலைவலி,வயிற்று வலி என அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள், ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்களை பிரித்தெடுக்கும் வேலைகளை செய்கின்றன.

நாளொன்றுக்கு சுமார் 400 முறைக்கும் மேல் இந்த வேலையை சிறுநீரகங்கள் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட முக்கிய வேலையை செய்யும் சிறுநீரகங்கள் அதிக ரத்த அழுத்தம், நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளிட்ட காரணங்களால் செயலிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

உலகம் முழுவதும் சுமார் 85 கோடி பேருக்கும் மேல் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் டிஹைட்ரேஷன் எனப்படும் உடல் வறட்சி ஏற்படும். உடலுக்குத் தேவையான நீர் சத்து இல்லாமல் போகும் போது ஏற்படக்கூடியதே இந்த `டிஹைட்ரேஷன்'.

இருப்பினும் டிஹைட்ரேஷன் என்பது குடிநீரைப் பற்றியது மட்டுமல்ல, சிறுநீரகங்களின் சரியான செயல்பாடும், உடலின் ஹோமியோஸ்ட்டிக் சமநிலையை பராமரிப்பது உள்ளிட்டவையும் தான். சிறுநீரகங்களை முறையாக பராமரிப்பது எவ்வாறு என்று பார்க்கலாம்.

நீர் சத்து: சிறுநீரகங்கள் முறையாக செயல்பட உடலில் போதுமான அளவு நீர்சத்து இருப்பது அவசியம். நமது உடலில் நீர் சத்தை தக்க வைத்து கொள்ள நாளொன்றுக்கு குறைந்தது 10 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். தவிர தேவையான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய நீர் நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

டிஹைட்ரேஷன் சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சம்பந்தப்பட்ட மருத்துவரின் ஆலோசனையின் காலத்திற்கு ஏற்றவாறு உணவு முறையை பின்பற்ற வேண்டும். குறிப்பாக உணவில் சேர்க்கும் உப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். உணவில் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும் உப்பு சிறுநீரக செயல்பாட்டை பாதித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. சாசரியாக ஒரு நாளைக்கு 7 முதல் 10 கிராம் உப்பு எடுத்துக்கொள்கிறோம். இந்த அளவு 4 முதல் 5 கிராம் வரை குறைக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கமும் சிறுநீரகத்தை பாதிக்கும். சீரான உடல் எடையை பராமரிக்க வேண்டும் இல்லை என்றால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மூட்டு, முதுகு மற்றும் உடல் வலிக்கு அடிக்கடி எடுத்து கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும் தன்மை உடையவை. எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தல் இன்றி சுயமருத்துவம் என்ற பேரில் வலிநிவாரணிகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.



--

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பலரும் இரவு நேரத்தில் அதிகளவு மூக்குபிடிக்க உணவுகளை சாப்பிடுவார்கள். உண்மையில் இரவு வேளை என்ப...

Popular Posts