லேபிள்கள்

செவ்வாய், 26 அக்டோபர், 2021

அல்-குர்ஆனோடுசங்கமிப்போம்

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி- இலங்கை

அல்குர்ஆன் இறைவேதமாகும். அது இறைவேதம் என்பதை மனிதர்கள் சந்தேகப்படத் தேவையில்லாத அளவு அதனை இறக்கிய அல்லாஹ்வே நிரூபித்துக் காட்டி விட்டான்.

ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், துறைசார் நிபுணர்கள் என உலகில் அனைத்து கல்வியலாளர்களும் ஒன்றிணைந்து அதைப் பொய்ப்பிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைய, இறுதியில் அவர்களோ வியந்து சரண்டராகி அல்குர்ஆனோடு சங்கமித்த வேதமாகும் .

https://islamstory.com/ar/artical/

http://www.kaheel7.com/ar/index.php/2010-02-02-22-33-29/1856-2015-11-24-23-38-59

போன்ற தளங்கள் ஊடாக இது பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அல்குர்ஆன் மனிதர்களின் உலக மற்றும் மறுமை தொடர்பான பல நூறு வழிகாட்டல்கள் நிரம்பிய அற்புத வேதமாகும்.

முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாட நடைமுறையில் காணப்படுத்துகின்ற உழு, தொழுகை, நோன்பு, தலாக், இத்தா, ஹிஜாப், தடுக்கப்பட்ட பார்வை, தடை செய்யப்பட்ட திருமண முறைகள், தடை செய்யப்பட்ட உணவுப் பழக்கம் என பல்வேறு விஷயங்களை விஞ்ஞான அறிவுடன் உட்படுத்தி அவை நவீன அறியலோடு நெருங்கி இருப்பதும் மனித நலனைக் கருத்தில் கொள்ளப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

https://www.alukah.net/sharia/0/124384/

https://islamhouse.com/ar/books/93257/

மனிதர்கள் தமது குறுகிய பகுத்தறிவின் மூலமாக அல்குர்ஆனை விமர்சனம் செய்வதால் அல்குர்ஆனின் நோக்கங்களை எட்ட முடியாத அளவு பலநூறு ஆச்சரியங்கள் அதில் புதைந்து கிடக்கின்றன.

அதனை ஏழு வாங்களுக்கும் மேலால் அர்ஷின் மீதிருக்கின்ற அகில உலக இரட்சகன் அல்லாஹ், ஜிப்ரீல் (அலை) என்றழைக்கப்படும் வானவர் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நாற்பதாவது வயதில் "படிப்பீராக" எனத் தொடங்கும் வசனத்தொடர் மூலம் மக்கா காஃபிர்கள் ஜாஹிலிய்யா என்ற அறிவியல் மற்றும் பண்பாட்டு வீழ்ச்சியில் மூழ்கிப் புரண்டு கிடந்த போது கல்வியின் அவசியத்தை உணர்த்தி இறக்கி வைத்ததன் மூலம் குர்ஆனியக் கல்வியே மனித சமூகத்தை அழிவில் இருந்து பாதுகாக்க வல்லது என்பதை அல்லாஹ் உணர்த்திய அற்புத வேதமாகும்.

எனவே அதன் கல்வியே மனித சமூகத்தின் ஈடேற்றத்தின் பிரதானமாகும்.

🌼அல்குர்ஆன் அனைவருக்குமானது🌼

தற்காலிகமாக உலகில் ஆட்சி அதிகாரத்தில் பயணிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தமது சட்டமே மேன்மையானது, நாம் சொல்வதையே உலகம் கேட்டு நடக்க வேண்டும் என திமிறாகப் பேசி நடந்து கொள்கின்ற போது விஞ்ஞானிகளே வியக்கும் உலகையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ் உண்மையான ஒரு வேதத்தை இறக்கி அதுவே மனித சமூகத்தின் ஈடேற்றத்திற்கான எல்லாக் காலத்திற்கும் சமூகத்திற்கும் பொருத்தமான சரியான சட்டம் என பிரகடனப் படுத்தி, அதனை பின்பற்றி நடக்குமாறு கட்டளை பிறப்பிப்பதில் என்ன தவறு இருக்கின்றது?

அல்குர்ஆனை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரிமை கொண்டாட முடியாதவாறு அவன் அதனை இறக்கிய முதல் இரவே அது
"மனிதர்களுக்கு நேரான வழிகாட்டியாகும்"; (அல்பகரா- 185 ) எனப் பொது மாமறையாக அறிவித்துள்ளான்.

எனவே நாம் மாத்திரம் சொந்தம் கொண்டாடாமல் பிறருக்கும் அதை அறிமுகம் செய்வது நம்மீதுள்ள தார்மீகக் கடமையாகும்.

🌼அல்குர்ஆன் உலகப் பொதுமறையாகும்🌼

அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்குமான பொது வேதம் என விளக்கும் பல வசனங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு எடுத்து நோக்குவோம்.

அதனால் அல்குர்ஆனை முஸ்லிம்களின் வேதம் எனக் கூறுவது தவறாகும். மனித சமூகத்தின் வேத நூல் எனக் கூறுவதே சரியான பிரயோகமாகும்.

وَإِنًهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ (الحاقة – 48)

நிச்சயமாக அது (குர்ஆன்) இறையச்சமுள்ளவர்களுக்கு நினவூட்டலாகும். அல்ஹாக்கா- 48)

وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ (القلم/ ٥٢)

அது (குர்ஆன்) அகிலத்தாருக்கு நினுவூட்டலே தவிர இல்லை. ( அல்-கலம்:48).

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ (التكوير/٢٧)

அது (குர்ஆன்) அகிலத்தாருக்கு நினுவூட்டலே அன்றி இல்லை.(அத்தக்வீர்-27).

.. وأُرْسِلْتُ إلى الخَلْقِ كافَّةً، وخُتِمَ بيَ النَّبِيُّونَ ( أخرجه مسلم من حديث أبي هريرة رضي الله عنه )

நான் படைப்புக்கள் அனைவருக்கும் பொது இறைத் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன். என்னைக் கொண்டே நபித்துவம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. (முஸ்லிம்)

அல்குர்ஆன் உலகப் பொதுமறை என்பதை 350 ற்கும் மேற்பட்ட இடங்களில் பறைசாட்டுவதுடன், அது அகில மக்களுக்குமான அறிவுரையே அன்றி வேறில்லை என்ற மட்டுப்படுத்தப்பட்ட வார்த்தைகள் ஊடாக தெளிவான பொருளில் நான்கு இடங்களில் உணர்த்துவதன் மூலம் அது மனித மற்றும் ஜின்கள் ஆகிய இரு இனத்தவரும் இதில் உள்ளடங்கப்படுவதையும் தெளிவுபடுத்தி விட்டது.

எனவே அதன் போதனைகள் பற்றிய தேடலும் அதன் பிரகாரம் நடப்பதும் அனைத்துலக மக்கள் மீதும் அல்லாஹ் விதித்துள்ள கட்டளையாகும்.
 
அல்குர்ஆனில் இடம் பெறும்
العالمين அல்ஆலமீன் என்ற வார்த்தை மனித, மற்றும் ஜின் ஆகிய இரு வர்க்கத்தினரையும் குறிக்கப்பயன்படும் சொற்பிரயோகமாகும் என தஃப்ஸீர் அறிஞர்கள் பலர் சுட்டிக்காட்டுவதை இங்கு நாம் கவனத்தில் கொண்டால் குர்ஆனை நம்பிக்கை கொள்ளாமல் ஒருவர் மரணிப்பது பெரும் குற்றமாகும் என்பதை விளங்க முடியும்.

🌼இறைத் தூதரும் பொதுவானவரே🌼

அல்குர்ஆன் எப்படி பொதுமறையோ அவ்வாறே அதைக் கொண்டு வந்த இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அனைவருக்கும் பொதுவான வழிகாட்டியாகும்.

அது மாத்திரமின்றி, அவர்கள் மனித கண்களுக்குத் தெரியாது உலகில் வாழ்கின்ற மற்றொரு படைப்புக்களான "ஜின்" சமூத்தாருக்கும் சேர்த்து இறுதி இறைத் தூதராக வந்த காரணத்தினால் குர்ஆன் ஜின்களுக்கும் உரிய வேதமாகும்.

﴿ وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ رَحْمَةً لِلْعَالَمِينَ [الأنبياء: 107].

நபியே அகிலத்தாருக்கு அருளாகவே அன்றி உம்மை நாம் அனுப்பி வைக்கவில்லை.( அல்அன்பியா- 107).
 
என்ற வசனத்தை விளக்குகின்ற அறிஞர் இப்னு ஆஷூர் (ரஹி) அவர்கள்: இந்த வசனம் இறைத் தூதரின் புகழ், அவரை அனுப்பிய அல்லாஹ்வின் புகழ், மனித சமூகத்திற்கு பொதுவான தூதுத்துவ அறிவிப்பு, படைப்புக்களின் மீதுள்ள அல்லாஹ்வின் கருணை ஆகியவற்றுடன் அதி உயர்ந்த சுருக்கமான சொல்லாடல் மூலம் இந்த வசனம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக இதன் சிறப்பைக் குறிப்பிடுகின்றார்கள்.

அவர்கள் மேலும் விளக்குகின்ற போது: இந்த வசனத்தில் இடம் பெறும் இடைச் சொல் போக (24) இருபத்தி நான்கு எழுத்துக்களில் ரத்தனச் சுருக்கமாக இறைத் தூதர், அவரை தூதராக அனுப்பிய அல்லாஹ், அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மக்கள், தூதுத்துவம் ஆகிய நான்கு பண்புகள் உணர்த்தப்படுவதோடு இதில் அனைவருக்குமான தூதர் என விளக்கியதுடன், அதில் "ரஹ்மத்தன்" என்ற பொதுவான பொருள் தரும் வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் அனைத்து வகையான அருளையும் குறிக்கின்றவாறு அல்லாஹ் அந்த அருளை அனைத்து படைப்புகளுக்கும் பொதுவானதாகக் குறிப்பிட்டு அருளி இந்த வசனத்தின் சிறப்பம்சத்தை விளக்கி இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் விளமளித்துள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு ஆஷூர்)

இந்த வசனத்தின் செயல் வடிவமாகவே இறைத் தூதர் அவர்கள் முஸ்லிம்களோடும் முஸ்லிம் அல்லாத மக்களோடும் அன்பாக வாழ்ந்தார்கள் என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் நூற்றுக்கணக்கான சான்றுகளைக் காண முடியும்.

அன்னை ஆயிஷா சித்தீகா (ரழி) அவர்களிடம் இறைத் தூதரின் பண்பு பற்றி வினவப்பட்ட போது

كان خلقه القرآن. (مسلم)

குர்ஆனே அவர்களின் பண்பாடாக விளங்கியது எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

எனவே முஸ்லிம் மக்களாகிய நாமும் குர்ஆனை ஓதுவதன் மூலமாக மாத்திரம் இல்லாது அதன் போதனைகளை நமது வாழ்வில் எடுத்து நடப்பதன் மூலமும் பிறர் மீது தாக்கம் செலுத்த வேண்டும்.

🌼அல்குர்ஆன் சந்தேகமற அல்லாஹ்வின் வேதமாகும்🌼


அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகளாகும். அது முஹம்மது (நபி) அவர்களால் கற்பனையாக வடித்துக் கூறப்பட்டதில்லை.

அவர்கள் (உம்மி) எழுத, வாசிக்கத் தெரியாத ஒருவராக இருந்தும் இத்துணை பெரும் ஆச்சரியம் நிறைந்த தகவல்களை வேத வசனங்களாக மக்கா மக்கள் மத்தியில் ஓதிக் காண்பித்தார்கள் என விறைத்துப் போகும் ஆய்வாளர்கள் :

{ وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰ إِنْ هُوَ إِلاَّ وَحْيٌ يُوحَىٰ * عَلَّمَهُ شَدِيدُ ٱلْقُوَىٰ (النجم/ ٣- ٥)

அவர் தனது மனோ இச்சைப் பிரகாரம் பேசுவதில்லை. அவர் -வஹி- இறைச் செய்தியாக அறிவிக்கப்பட்டதைத் தவிர பேசுவதில்லை. அதனை அவருக்கு சக்திமிக்கவரான (ஜிப்ரீல்) கற்றுக் கொடுத்தார். (அந்நஜ்ம்-3-5) என்ற இறை மறை வசனத்தை இறுதியில் ஏற்றுக் கொள்ளவே செய்கின்றனர்.

🌼குர்ஆனோடு சங்கமித்தல் என்றால் என்ன?🌼

குர்ஆனின் பக்கங்களோடு ஒன்றரக் கலந்து வாழ்வதையே குர்ஆனோடு சங்கமித்தல் எனக் கூறுவது.

உலகில் ஏதோ ஒன்று அற்புதமானதாக நமது அறிவுக்கு உட்பட்டு தெரிகின்ற போது, அது பற்றி சமூக வலைத்தளங்களிலும் பத்திக்கைகளிலும் பரப்புரை செய்வோரை நம்பி நாமும் மொய்யான செய்திகளாக நம்பி பரப்புகின்றோமே.

அப்படியானால் ஆச்சரியங்களும் நமது வெற்றியின் ரகசியங்களும் 100% உண்மைப்படுத்தப்பட்ட அல்லாஹ்வின் வேதத்தை பரப்ப வேண்டுமே. அதை நாம் ஏன் செய்வதில்லை?

அதனை நமக்கு

👉 உச்சரிக்கத் தெரியாது,

👉ஓதத் தெரியாது, 

👉அதைப் படிப்பதில்லை, 

👉அதன் சட்டங்களை எடுத்து நடப்பதில்லை

👉 மொத்தத்தில் நமது வாழ்க்கையில் குர்ஆன் கூறும் வாழ்க்கை இல்லை.  கைசேதமே! 

அப்போது நாம் எப்படி மன நிம்மதியை அடைய முடியும்.

طه مَا أَنْزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقَىٰ ﴿٢ طه﴾

தாஹா- நபியே இந்தக் குர்ஆனை நீர் துர்ப்பாக்கியம் பெற நாம் உம்மீது இறக்கி வைக்க வில்லை. ( தாஹா- 1-2)
அல்லாஹ்வின் மேற்படி அறிவிப்பின் மூலம் நற்பாக்கியமே குர்ஆனில் இருக்கின்றது என்பதை அல்லாஹ்வே நமக்கு உணர்த்தியும் நமக்கு இந்த நிலை என்றால் உண்மையில் கைசேதமே!

وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًا كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى (طه/١٢٤-١٢٦)

யார் எனது இந்த நினைஊட்டும் வேதத்தைப் புறக்கணிக்கின்றானோ நிச்சயமாக அவனுக்கு ( இவ்வுலகில்) நெருக்கிடியான வாழ்க்கை உண்டு. மறுமை நாளில் அவரை நாம் குருடராகவே எழுப்புவோம். அப்போது அவன் எனது இரட்சகனே தெளிவான கண்பார்வை உள்ளவனாக இருந்த என்னை நீ ஏன் குருடனாக எழுப்பினாய் எனக் கேட்பான். அவ்வாறுதான்( நடக்க வேண்டும்) உனக்கு நமது அத்தாட்சிகள் உம்மிடம் வந்தன. நீ அவற்றை மறந்து( குருடனாக) வாழ்ந்தாய் என அல்லாஹ் பதில் கூறுவான். (தாஹா-124-126).

இது குர்ஆனைப் புறக்கணித்தவனுக்கு மறுமை நாளில் கூறப்படும் என்றால் அந்தக் கேவலத்தை நாமும் சுமக்க தயாராக வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.

முதல் மனிதர், ஆதம் நபி (அலை) அவர்கள் தவறு செய்து சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போதும் அல்லாஹ் அவர்களிடம்

فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَىٰ ﴿١٢٣ طه﴾

உங்களுக்கு என்னிடமிருந்து நிச்சயமாக நேர்வழி வரும். எவர் எனது நேரான வழியைப் பின் பற்றி நடக்கின்றாரோ அவர் வழி தவறவும் மாட்டார், துற்பாக்கியம் அடையவும் மாட்டார்

( தாஹா-123 ) எனக் கூறியதை அடிப்படையாகக் கொண்டு நமது வாழ்க்கை ஈருலகிலும் செழிப்பாக இருக்க குர்ஆனோடு உள்ளத்தால் காதல் கொள்வோம். இறை திருப்தி பெறுவோம்.


ரிஸ்வான் மதனி

http://www.islamkalvi.com/?p=124281


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

சனி, 23 அக்டோபர், 2021

கட்டாந்தரைகளாக மாறும்விளைநிலங்கள்

ஹதீஸ் தெளிவுரை

அஷ்ஷைக் எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)

நிறைவுபெற்ற இறைத் தூதையும் இறுதித் தூதரின் தூதுத்துவப் பணியையும் பற்றிய ஒரு தெளிவான கருத்தியலை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதனைப் பிரசாரம் செய்வோர் பற்றியும், இஸ்லாத்தை ஏற்காது, தமது மனோ இச்சைகளைத் தெய்வமாக்கிக் கொண்டவர்களைப் பற்றியும் மிகவும் தத்துவார்த்தமாக, நடைமுறை உதாரண, உவமையோடு பின்வரும் நபி மொழி தெளிவுபடுத்துகிறது.

"அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையானது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு, ஏராளமான புற்களையும் செடி கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில, தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயனடையச் செய்தான். அதில் மக்கள் அருந்தினர் (தமது கால்நடைகளுக்குப்) புகட்டினர், விவசாயமும் செய்தனர்.

அந்தப் பெருமழை இன்னொரு நிலத்திலும் விழுந்தது அது, (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கிவைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவும் இல்லை.

இதுதான், அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து, பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிவிட்டுப் பாராமலும், நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கின்றவனுக்கும் உவமையாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா (ரழி) நூல்: புகாரி (79)

ஒரு விவசாய நிலம் எப்படி தன்னில் விதைக்கப்படும் விதையை, மேல் நோக்கி வளரச் செய்து, விவசாயிக்கு அறுவடைப் பயன் வழங்குமோ, அதுபோன்று ஒரு நல்ல உள்ளம் உள்ளவன் தன் உலக வாழ்விலே தென்படும் கொள்கை, கோட்பாடுகள் அனைத்தையும் உற்றுநோக்கி, இஸ்லாத்தின் யதார்த்த தன்மையை மனதால் உளப்பூர்வாக ஏற்று, தனது வாழ்வில் கடைப்பிடித்து, அந்த வளமான வாழ்வின் பக்கம் மற்றவர்களையும் அழைப்பான் என்ற உண்மையை அற்புதமான உத்தானத்தோடும் இலக்கிய நயமாகவும் நம்பியவர்கள் உதாரணப்படுத்தியுள்ளார்கள் என்பது சிந்தனைக்குரியதாகும்.

பூகோள அமைப்பில் பல நாடுகள் உள்ளன. அவை தமக்கே உரிய பல்வேறு அமைவிட, தட்பவெப்ப சூழல் தன்மைகளைக் கொண்டமைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு நிலமும் பல்வேறு பயிர்களை விளைச்சலாக்கி, அந்த நாட்டிற்குச் சர்வதேசச் சந்தையில் புகழைத் தேடிக்கொடுப்பதோடு, பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொடுக்கின்றன. உலகின் ஒவ்வொரு நாடும் தனது புவி விளைச்சல் மூலமாகப் பொருளாதார வளத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த நிலங்களில் விழும் நீர் தேக்கிவைக்கப்பட்டு, அவற்றின் விளைச்சலுக்குப் பயன்படுகின்றது. இந்த அமைப்பை நாம் நமது நாட்டிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் காண்கின்றோம்.

அதேபோல், நாம் மேலே குறிப்பிட்ட ஹதீஸ், உயிரோட்டமான உவமையை எவ்வளவு அற்புதமாகத் தெளிவுபடுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் அகில உலகிற்கும் முன்மாதிரியாக, இறுதித் தூதராக அனுப்பப்பட்டார்கள். அவர்களின் பிரசாரம் மனித இன வரலாற்றின் ஓட்டத்தில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தியது. அவர்களின் பிரசாரம் 1440 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரை தாக்கம் செலுத்திவருகிறது. பல்லின மக்களையும் ஒரு தாய், ஒரு தந்தை பிள்ளைகள் என்ற பிரகடனம் மூலம் சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் இறுதித்தூதராக அனுப்பப்பட்டதன் மூலம் அல்லாஹ்வின் வேத வழிகாட்டலான தூதுத்துவம் வஹி நிறைவு பெற்று விட்டது. அல்லாஹுத்தஆலா நபியவர்களை நேர்வழி ஞானத்துடன் அனுப்பினான். அவர்களை ஏற்றவர்களையும் ஏற்காதவர்களையும் பிரித்துக் காட்டும் இருவேறு உவமைகளால் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதாவது, நபி (ஸல்) அவர்கள் தூதராக ஏற்றம் பெற்றவுடன், உறவினர்களுக்கும் ஏனைய மக்களுக்கும் இஸ்லாத்தைப் பிரசாரம் செய்தார்கள். ஆரம்பத்தில் சிலர் ஏற்றுக்கொண்டார்கள். பலர் மறுத்தார்கள். ஏற்றுக் கொண்டவர்கள் தமது வாழ்வில் அதைக் கடைப்பிடித்து ஒழுகியதோடு, மற்றவர்களுக்கும் பிரசாரம் செய்தார்கள். எனவே, அவர்கள் தனக்கும் ஏனையோர்களுக்கும் பயனுள்ளவர்களாக வாழ்ந்தார்கள் என்ற உண்மையை இந்த ஹதீஸ் தத்துவார்த்தமாக விளக்குகிறது. நிலத்தில் விழுந்த பெரும் மழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு, ஏராளமான புற்களையும் செடி கொடிகளையும் முளைக்கச் செய்தன, என்ற தொடர் இஸ்லாத்தை ஏற்று, அதனைத் தனது இதயத்தில் மட்டும் வைத்துக் கொள்ளாமல் தனது பிள்ளைகள், பெற்றோர், மனைவி, சமூகம் ஆகிய அனைத்துத் தளத்திலும் அதன் போதனைகளை எடுத்தியம்புவதைக் கடமை என்பதை வலியுறுத்துகிறது.

கல்வியைப் பெறுவதும் அதனை மற்றவர்களுக்கு வழங்குவதும் சிறப்புக்குரிய அம்சமாகச் சிலாகிக்கப்படுகிறது. இரண்டு விசயங்களில் மட்டும் தான் பொறாமை அனுமதிக்கப்பட்டுள்ளது.

"இரண்டு விடயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை, அவர் நல்ல வழியில் செலவு செய்தல், இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விடயங்கள்" என்று அல்லாஹின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி) நூல்: புகாரி (73)

இஸ்லாத்தைக் கற்று, அதனைப் பிறருக்கு கற்றுக் கொடுப்பவருக்கும், இஸ்லாத்தின் தூதுச் செய்தியை ஏற்காது, அதனைப் பற்றிச் சிந்திக்காது, வாழ்ந்து, மரணிக்கும் மனிதனுக்குமிடையே உள்ள வேறுபாட்டைப் பல நபி மொழிகள் பிரஸ்தாபிக்கின்றன.

ஒரு மனிதனின் அறிவைப் பார்த்துப் பிரமித்து, இந்த அறிவுச் செல்வம் எனக்கும் கிட்ட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து இம்மை மறுமை இன்பம் பெற வேண்டுமே என்ற அங்கலாய்ப்பு ஒரு மனிதனின் உள்ளத்தில் ஏற்பட இஸ்லாத்தில் அனுமதி உண்டு. அறிவுக்கும், அதனைப் போதிப்பதற்கும் எவ்வளவு சிறப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. அத்தகைய அறிவாளிகளைப் பற்றி அடுத்த தொடர் பேசுகிறது "வேறு சில, தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை மக்களுக்கு இறைவன் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர், (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர். விவசாயமும் செய்தனர்.

"அல்லாஹ் யாருக்கேனும் நன்மை செய்ய நாடினால், மார்க்கத்தில் விபரமுள்ளவராக அவரை ஆக்குவான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதரின் போதனைகள் ஆழமாகக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களை இது குறிக்கிறது. அவர்கள் இஸ்லாமிய அறிவைப் பெருக்கிக் கொண்டனர். அவர்களை நாடி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அறிவமுதம் பெற்றனர். வற்றாத அறிவுச் சுணையாக அவர்கள் விளங்கினர் என்ற ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.

இன்னும் சிலர் இருக்கின்றனர் அவர்கள் இஸ்லாத்தைக் கற்றிருப்பார்கள். ஆனால், அவர்கள் வாழ்வில் இஸ்லாமியப் போதனைகளைக் கடைப்பிடிக்கமாட்டார்கள். ஆன்மிக வறுமையில் திளைத்திருப்பர். எனினும், அவர்களிடம் மக்கள் வந்து அறிவுச் செல்வத்தைப் பெற்றுச் செல்வார்கள். இஸ்லாம், அறிவு, நம்பிக்கை சார்ந்த வாழ்க்கை நெறியும் கூட. எனவே, கற்றவற்றை தமது வாழ்வில் முதலில் செயற்படுத்தவும் வேண்டும்.

நீரை எடுக்காமல், தேக்கி வைத்த நிலம் இவர்களுக்கு ஒப்பானதாகும். அந்த நீரில் பிறர் பயன் பெறலாம். நிலம் பயன் பெறாது. இன்று சிலரை அறிவாளிகளாக மக்கள் நம்பிச் செல்கின்றனர். அவர்களின் சுய விளக்கங்களை வேதவாக்க நம்புகின்றனர். அதற்காக மற்றவர்களை அவமதிக்கின்றனர். ஆனால், இவர்கள் அறிவாளியாக நம்பும் சிலர் அன்றாட தொழுகை கூட இல்லாத எழுத்திலும் பேச்சிலும் ஏட்டிலும் முஸ்லிமாகவும் தனது தனிப்பட்ட வாழ்வில் நாத்திகத்திலும் உள்ளனர்.

அடுத்ததாக, நபி (ஸல்) அவர்களின் பிரசாரத்தை ஏற்காத, அதன் படி வாழாத, அதன்பால் அழைப்பு விடுக்காத மனிதனுக்கு உவமை கூறப்படுகிறது. "அந்தப் பெருமழை இன்னொரு நிலத்திலும் விழுகிறது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை."

மனிதனுக்கு அல்லாஹ் பகுத்தறிவை வழங்கியுள்ளான். அதனைப் பயன்படுத்தி, எது சரி? எது தவறு? என்று கண்டு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றான். சரியையும் பிழையையும் பிரித்தறிவிக்க காலத்திற்குக் காலம் இறைத் தூதர்களையும் அனுப்பி அருளினான். ஆனால், பகுத்தறிவு வாதம் பேசுவோரும், விதண்டாவாதம் புரிவோரும் உண்மையில் தமது பகுத்தறிவைச் சரியான வழியில் பயன்படுத்தவில்லை. அவர்களிடம் நேர்வழி எனும் இறைத்தூது சென்றது. அதனை அவர்கள் சிந்தித்து ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான், நபி (ஸல்) அவர்கள் அத்தகையவர்களை எதற்கும் உதவாத கட்டாந்தரை என்று இழித்துரைத்துள்ளார்கள். இத்தகையவர்களைப் பற்றி அல்குர்ஆனும் இழித்துரைக்கிறது.

"நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம். அவர்களுக்கு மூளை இருக்கின்றது. ஆனால், அதைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு. ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனைகளைக்) கேட்கமாட்டார்கள். இத்தகையவர்கள் கால் நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றைவிடவும் மோசமானவர்கள். இவர்கள் தாம் (நமது வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (அல்குர்ஆன் 7:179)

மனிதன், பகுத்தறிவு உள்ளதனால் மட்டும் சிறந்தவனாகிவிட முடியாது. அதனைப் பிரயோகித்து நல்லதை இஸ்லாத்தை ஏற்று அதன்படி வாழ்வதனாலும் அதனைப் பிறருக்கு அறிமுகப்படுத்துவதனாலும் சிறந்தவனாகின்றான். இல்லை என்றால், அவன் வனவிலங்குகளை விடக் கீழானவனாக ஆகிவிடுகின்றான். அதேபோல், அவன் இஸ்லாத்தைக் கற்று அதனை மறைக்காது, நபிவழியில் ஏற்றத்தாழ்வு காண்பிக்காமல் உள்ளதை உள்ளபடி கூறவும் வேண்டும்.

"கல்வி சம்பந்தமாகக் கேட்கப்படும்போது, யாரேனும் மறைத்தால், அவன் மறுமை நாளில் நெருப்புக் கடிவாளம் இடப்படுவார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: திர்மிதி

இஸ்லாமியக் கல்வி மிக உயர்வானது. அது ஓர் இறைவணக்கமாகக் கொள்ளப்படுகிறது. அதனைக் கற்று, தஃவாப் பணி புரியும் போது, மக்கள் ஏற்பார்களோ, ஏற்க மாட்டார்களோ என்று விளைவுகளைப் பற்றி அஞ்சாது, உள்ளதை உள்ளவாறு சொல்ல வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் கட்டளை. இதற்கு மாற்றமாக யாராவது இஸ்லாத்தின் போதனை ஒன்றை மறைத்தால், அல்லது திரிபுபடுத்திக் கூறினால் அவருக்கு நரக வேதனை உண்டு என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நம்மில் பலர் விளைவுகளை வைத்துக் கொள்கையை மாற்றிக் கொள்கின்றனர். அது இவ்வுலகை மட்டும் நம்பியவர்களின் நிலை. ஆனால், ஓர் உறுதியான இஸ்லாமியப் பிரசாரகனுக்கு அந்த முடிவு உகந்ததல்ல. அவன் தனது பணியை மனிதன் திருப்திக்காக அல்லாமல், அல்லாஹ்வின் திருப்தி ஒன்றுக்காகவே ஆக்கிக் கொள்கின்றான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை நன்மை என்று அடையாளம் காட்டினார்களோ, அதன் பால் மக்களை அழைத்துக் கொண்டிருப்பதே உண்மையான அழைப்பாளனின் கடமை. அவனது, எண்ணங்களும் செயல்களும் தூய்மை உடையதாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் திருப்தியும் கருணையும் கிருபையுமே பிரசாரகர்களுடைய ஒரே பலமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நாமும் வெறும் கட்டாந்தரையாகி விடுவோம். இந்த இழிநிலையிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

அதேவேளை, நாம் குறைவாக தஃவாப் பணி புரிந்தாலும் தொடராகச் செய்ய வேண்டும். தொடராக ஆற்றும் பணியை அல்லாஹ்வும் அதிகமாக விரும்புகிறான். சிறிது காலம் அதிகமாகச் செய்து விட்டு, களைப்படைந்து, நீண்ட நாட்களுக்கு தஃவாப் பணி செய்யாமல் விடுவதால் எத்தகைய பயனும் கிட்டுவதில்லை.

தஃவாப் பணி என்பது சுகமான பணி. அது கருமை நிற மேகங்கள் சூழ்ந்த, கரடு முரடான, பலத்த சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டிய பாதை. இஸ்லாமிய அகீதாவில் ஆழமான விளக்கமும், கொள்கைத் தெளிவும், உறுதியும், தொலை நோக்கும், திட்டமிடும் மதியூகமும், செயற்திறனும், சரியான அணுகு முறையும் நமக்குத் தேவை. நமது சுயநலனை விட அல்லாஹ்வின் மார்க்கம் உயர்வானது என்ற மனப்பதிவு நம்மில் ஏற்பட வேண்டும். இல்லையென்றால், நபி (ஸல்) அவர்கள் சிலாகிக்கும் நன்நிலங்களாக நாம் இருக்க முடியாது.

"இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப்பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கின்றவனுக்கும் உவமையாகும் என்று ஹதீஸின் இறுதிப் பகுதி முடிவடைகிறது.

இஸ்லாத்தைக் கற்று, அதனைப் பிரசாரம் செய்து வாழ்பவன் சமூகத்திற்குப் பிரயோசனமுள்ளவனாகின்றான். விவசாயத்திற்குத் தரிசு நிலம் பயன்படுவது போன்று, இவன் இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய உம்மத்திற்கும் பயனுள்ளவனாகின்றான். அதேவேளை, இஸ்லாத்தைக் கற்க முயலாது, பிறமத கலாசார மத அனுஷ்டானங்களில் தேங்கி, அதிலிருந்து வெளிவர முடியாது தவிப்பவன், வெறுமையான கட்டாந்தரைக்குச் சமமானவன். அத்தகையவனால் சமூகத்திற்கு எத்தகைய பயனும் இல்லை.

எனவே, நாம் அனைவரும் அல்லாஹ்வின் இறுதித்தூதுச் செய்தியான அகிலத்தின் அருட்கொடையான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் துறைபோகக் கற்று, இஸ்லாத்தின் தூதைத் தவறாகப் புரிந்துள்ள ஆயிரமாயிரம் சகோதர இன நெஞ்சங்களுக்கும் எடுத்துச் சென்று அவர்களையும் இந்த உன்னத வாழ்வின் இன்பத்தை உணரச் செய்ய முனைப்புடன் அயராது, அர்ப்பணத்துடன் உழைக்க வேண்டும்.

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ, அவருடைய இதயத்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகின்றான். யாரை அவன் வழிகெடுக்க நாடுகிறானோ, அவருடைய இதயத்தை வானத்தில் ஏறுபவன் இதயத்தைப் போல் இறுகிச் சுருங்கும்படி செய்கின்றான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125)

எனவே, கட்டாந்தரைகள் எல்லாம் விளை நிலங்களாக மாற வேண்டும். விளை நிலங்கள் கட்டாந்தரைகளாக மாறிவிடக் கூடாது.

இது சமூகத்திற்கும் தேசத்திற்கும் பாரிய இழப்பை ஏற்படுத்திவிடும்.

http://www.islamkalvi.com/?p=124297


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

செவ்வாய், 19 அக்டோபர், 2021

மறதிக்கான சுஜூது எப்படிசெய்யவேண்டும்?

அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே அவனது சாந்தியும், அருளும் தூதுச்செய்தியை தெளிவாக எடுத்துரைத்த நமது தூதர் முஹம்மத் அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள்மீதும் அவர்களை நல்லமுறையில் பின்பற்றியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக.

மறதிக்கான சுஜூது பற்றிய விளக்கத்தை பெரும்பாலான மக்கள் சரியாகப்புரியாதவர்களாக இருக்கின்றார்கள். சிலர் மறதிக்கான சுஜூதை கடமையான  இடத்தில்  நிறைவேற்றாமல் விட்டு விடுகின்றார்கள். வேறு சிலர், செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் இடம் மாற்றி செய்கின்றார்கள். சிலர் ஸலாம் கூறியதற்குப் பிறகு செய்யவேண்டிய சுஜூதை ஸலாம் கூறுவதற்கு முன் நிறைவேற்றுகின்றார்கள். இன்னும் சிலர் ஸலாம் கூறுவதற்கு முன் செய்யவேண்டிய சுஜூதை ஸலாம் கூறியதற்குப் பிறகு நிறைவேற்றுகின்றார்கள்.   எனவே மறதிக்கான சுஜூது பற்றிய சட்டத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். அதிலும் குறிப்பாக இமாம்களுக்கு இது மிகவும் அவசியமாகும். ஏனெனில் அவர்கள் தான் மக்களுக்கு தொழுகை நடத்துவதற்குத் தலைமை ஏற்கின்றார்கள். ஷரியாவின் நடைமுறைப்படி தொழுவிப்பதற்கு இமாம்கள் தான் பொருப்பாளர்கள் ஆவார்கள்.

மறதிக்கான சுஜூது என்பது தொழுகையாளி தனது தொழுகையில் ஏற்பட்ட தவறை நிவர்த்தி செய்வதற்காகச் செய்யும் இரண்டு ஸஜ்தா ஆகும் அதற்குரிய காரணங்கள் மூன்று. அவை;

  • அதிகப்படுத்துதல்
  • குறைத்தல்
  • சந்தேகம் கொள்வது

முதல் காரணம்: அதிகப்படுத்துதல்

தொழுகையில் நிற்பது, அமர்வது, ருகூஉ அல்லது சுஜூது இவற்றில் எதையேனும் தொழுகையாளி வேண்டுமென்றே அதிகப்படுத்தினால், அவரது தொழுகை பாழாகிவிடும்.

ஆனால் மறதியாக அவ்வாறு செய்தால், அவரது தொழுகை நிறைவேறும் பொருட்டு மறதிக்கான சுஜூதைத் தவிற வேறு எதையும் அவர் செய்யவேண்டியது இல்லை .

மேற்கூறியவற்றை அதிகப்படுத்துவதுப்பற்றி ஒருவருக்கு அப்படிச் செய்யும் போதே நினைவு வந்து விட்டால் அதை விட்டு விடுவது அவர் மீது கடமையாகும்.  இன்னும் அவர் மறதிக்கான சுஜூதையும் செய்யவேண்டும். அதன் மூலம் அவரது தொழுகை சரியாக நிறைவேறிவிடும்.

உதாரணமாக  ஒருவர் லுஹர் தொழுகையை ஐந்து ரக்அத்தாக தொழுகின்றார் ஒரு ரக்அத் அதிகமாகிவிட்டது என்பது அத்தஹியாத்தில் இருக்கும்போதுதான் அவருக்கு நினைவு வருகிறது என்றால் அத்தஹியாத்தை முழுமைப்படுத்தி ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தாவை செய்யவேண்டும்.

ஸலாம் கூறிய பிறகு தான் அவருக்கு ஒரு ரக்அத் அதிகமாகத் தொழுதது நினைவுக்கு வருகிறது என்றால் மறதிக்கான இரண்டு ஸஜ்தாவை செய்து ஸலாம் கொடுக்கவேண்டும்.

நபி அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி அவர்கள் 'என்ன விஷயம்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்' என ஒருவர் கூறினார். நபி அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 1226

மேலும் ஒரு அறிவிப்பில்

(நீட்டியிருந்த) தங்களின் கால்களை நபி மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறினார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 401

தொழுகை முழுமை அடைவதற்கு முன் ஸலாம் கொடுத்தல்

தொழுகை முழுமை அடைவதற்கு முன் ஸலாம் கொடுப்பது தொழுகையில் அதிகப்படுத்துதலாகும் வேண்டுமென்றே ஒருவர் அப்படி செய்தால் அவரது தொழுகை வீணாகிவிடும்.

மறந்து அவ்வாறு செய்து, பின் நீண்ட நேரத்திற்கு பிறகு அது பற்றிய நினைவு திரும்பினால், அத்தொழுகையை அவர் மீண்டும் புதிதாக தொழவேண்டும்.  சிறிது நேரத்திலேயே இரண்டு மூன்று நிமிடத்திலேயே நினைவுக்கு வந்துவிட்டால் அவர் தொழுகையை தொடர்ந்து நிறைவு செய்யவேண்டும், மறதிக்கான இரண்டு ஸஜ்தாவை செய்து பிறகு ஸலாம் கொடுக்கவேண்டும்.

நபி அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்தார்கள். தங்களின் வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்தார்கள். தம் வலது கன்னத்தை இடக்கையின் மீது வைத்தார்கள். அவசரக் காரர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டுத் 'தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது' என்று பேசிக் கொண்டார்கள். அபூ பக்ரு رضي الله عنه உமர் رضي الله عنه ஆகியோர் அக்கூட்டத்திலிருந்தனர். (இது பற்றி) நபி அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு கைகளும் நீளமான ஒருவர் இருந்தார். துல்யதைன் (இரண்டு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர் 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதோ? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். 'குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவுமில்லை" என்று நபி கூறிவிட்டு (மக்களை நோக்கி) 'துல்யதைன் கூறுவது சரிதானா?' என்று கேட்க 'ஆம்' என்றனர் மக்கள். (தொழுமிடத்திற்குச்) சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து, பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி(த் தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள். அபூ ஹுரைரா رضي الله عنه லுஹர், அஸர் தொழுகை என்று கூறாமல் குறிப்பாக ஒரு தொழுகையைக் கூறினார்கள் என்றும் தாம் அதை மறந்துவிட்டதாகவும் இப்னுஸீரீன் குறிப்பிடுகிறார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 482

இரண்டாவது காரணம் குறைத்தல்

அடிப்படைக் கடமைகளில் (ருக்ன்) ஒன்றைக் குறைப்பது:

தொழுகையில் அடிப்படைக் கடமையைக் குறைத்தல். அதாவது தக்பீர் கட்டுவதைக் குறைத்தால் அவரது தொழுகை நிறைவேறாது அவர் அதை மறதியாக விட்டாலும் சரி வேண்டுமென்றே விட்டாலும் சரி ஏனெனில் அவர் தொழுகையை தொடங்கவே இல்லை .

குறைவு தக்பீர் தஹ்ரிமா அல்லாத வேறு ஒன்றாக இருந்தால் அதனை வேண்டுமென்றே விட்டிருந்தால் அவரது தொழுகை வீணாகிவிடும். மறதியாக விட்டிருந்தால் இரண்டாவது ரக் அத்தில் மறந்து விட்ட இடத்திற்கு வந்ததும் முந்திய ரக்அத்து வீணாகிவிடும். இரண்டாவதாக தொழுத ரக்அத்து வீணான ரக்அத்தின் இடத்தில் அமைந்து விடும். இரண்டாவது ரக்அத்தின் அந்த இடத்திற்கு இன்னும் வரவில்லையெனில் விடுபட்ட ருகுனின் பக்கம் திரும்புவது அவர் மீது கடமையாகும். பின்னர் விடுபட்ட ருகுனையும் அதனை தொடர்ந்து உள்ள ருகுனையும் வரிசையாக நிறைவேற்ற வேண்டும்  ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்யவேண்டும்.

உதாரணமாக ஒருவர் முதல் ரக்அத்தில் இரண்டாவது ஸஜ்தாவை மறந்து விட்டார். பிறகு இரண்டாவது ரக்அத்தில் ஒரு ஸஜ்தா செய்து அமர்ந்திருக்கும் போது முந்தைய ரக்அத்தில் விடுபட்ட ஒரு சஜ்தா பற்றிய ஞாபகம் அவருக்கு வந்தது என்றால், இரண்டாவது சஜ்தாவை நிறைவேற்றிவிட்டு, ஒரு ரக்அத் முடிவுற்றதாக அவர் கணக்கிட வேண்டும்.  அதாவது முதல் ரக்அத் வீணாகிவிடும். அதன் இடத்தை இரண்டாவது ரக்அத் எடுத்துகொள்ளும் . ஒரு ரக்அத் தொழுததாக நினைத்து அவர் மீதமுள்ள ரக்அத்துகளைத் தொடர்ந்து தொழுகையை நிறைவு செய்ய வேண்டும். ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்ய வேண்டும். பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

மேலும் ஒர் உதாரணம்

ஒருவர் இரண்டாவது ஸஜ்தாவையும் அதற்கு முன் அமர்வதையும் மறந்து விட்டார்.

(அதாவது ஒரு ஸஜ்தா செய்ததோடு எழுந்து விட்டார் )பிறகு இரண்டாவது ரக்அத்தில் ருகுவில் இருந்து நிமிர்ந்த பிறகு தான் அது பற்றிய நினைவு வந்தது என்றால், அவர் திரும்ப உட்கார்ந்து விடுபட்ட ஸஜ்தாவை செய்ய வேண்டும். பிறகு தனது தொழுகையை நிறைவு செய்ய வேண்டும். ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்யவேண்டும். பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

வாஜிபான கடமையைக் குறைப்பது ;

தொழுகையில் வாஜிபான கடமையை ஒருவர் வேண்டுமென்றே விட்டு விட்டால் அவரது தொழுகை வீணாகிவிடும்

மறதியாக விட்டு தொழுகையின் அந்த இடத்தை விட்டு பிரியும் முன் அது நினைவுக்கு வந்தால் அதனை அவர்செய்யவேண்டும். வேறு எதனையும் செய்ய வேண்டியதில்லை .

அடுத்து வரக்கூடிய ருகுனை செய்வதற்கு முன்னதாக அது பற்றி நினைவு வந்தால் விடுபட்டதன் பக்கம் திரும்பி அதனை நிறைவேற்றவேண்டும். பின்னர் தனது தொழுகையை பூர்த்தி செய்து ஸலாம் கொடுத்து பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்யவேண்டும். பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

அடுத்து வரக்கூடிய ருகுனை செய்யதொடங்கிய பிறகு நினைவு வந்தால், விடுபட்டது விடுபட்டதாகவே இருக்கும். அதனை திரும்பி செய்யாமல் தொழுகையில் தொடர வேண்டும். ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான ஸஜ்தாவை செய்யவேண்டும்.

உதாரணமாக : ஒருவர் இரண்டாவது ரக் அத்தில் முதல்  தஷஹுதில் (அத்தஹிய்யாத்தில்) அமராமல் மறதியாக எழ முயற்சிக்கிறார் எழுவதற்கு முன்னரே நினைவு வந்து விட்டால் உடனே அமர்ந்து தஷஹுத் ஓதி தொழுகையை முடித்து கொண்டால் போதுமானது.

எழ முயற்சிக்கிறார். பாதி எழுந்ததும் நினைவு வந்து விடுகிறது என்றால் அவர் திரும்பி கீழே அமர்ந்து தஷஹுத் ஓதி தொழுகையை முழுமைப் படுத்த வேண்டும். பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்து பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

முழுமையாக எழுந்ததற்கு பிறகு தான் ஞாபகம் வந்தது என்றால்  தஷஹுதில் அமராமல் தொடர்ந்து தொழுகையை நிறைவேற்றி, ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான ஸஜ்தாவை செய்யவேண்டும் இதற்கான ஆதாரம் அப்துல்லாஹ் பின் புஹைனவின் அறிவிப்பாகும்.

நபி அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுகை நடத்தினார்கள். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமலே எழுந்துவிட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும் தருணத்தில், நபி அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகின்றார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தபோது, உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 829

மூன்றாவது காரணம் சந்தேகம் கொள்வது:

இரண்டில் எது நடந்தது என்று தடுமாற்றம் அடைவது தான் சந்தேகம் கொள்வது என்பதாகும்.

மூன்று நிலைகளில் இபாதத்தில் ஏற்படும் சந்தேகத்தை கவனத்தில் கொள்ள வேண்டாம்.

1) எதார்த்தமில்லாத ஊசலாட்டங்கள்

2) ஒருவர் வழமையாக அதிகம் சந்தேகம் கொள்பவராக இருந்தால்

3) தொழுகையை முடித்த பிறகு சந்தேகம் வருவது.

இது போன்ற நிலைகளில் உறுதியாக உள்ளதை எடுத்துக் கொள்ளவேண்டும் சந்தேகமானவற்றை பற்றி பொருட்படுத்தத் தேவையில்லை.

உதாரணமாக ஒருவர் லுஹர் தொழுதபின் மூன்று ரக்அத் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என்று சந்தேகம் கொள்கிறார் என்றால் மூன்று ரக்அத் முடிந்துவிட்டது என்று உறுதியான விஷயத்தை பிடித்துக் கொண்டு, சந்தேகமான நான்கு என்ற எண்ணிக்கையைப் பொருட்படுத்தத் தேவையில்லை.  தொழுது முடித்தவுடன் சந்தேகம் ஏற்பட்டு  மூன்று ரக்அத் தான் தொழுதோம் என்பது உறுதியானால்  மீதமுள்ள ரக்அத்தை முழுமைப்படுத்தி ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்யவேண்டும். பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

நீண்ட நேரம் கழித்து தான் தவறவிட்ட ரக்அத்தை குறித்து ஞாபகம் வருகிறது என்றால் அவர் தொழுகையை புதிதாக தொழவேண்டும்.

மேற்கூறப்பட்ட மூன்று இடங்கள் அல்லாமல் வேறு இடங்களில் ஏற்படும் சந்தேகம் கவனிக்கப் படவேண்டியதாகும்.

சந்தேகம் இரண்டு நிலைகளில்  இருக்கும்.

முதல் நிலை: தொழுகையாளியிடம் இதுவா அல்லது அதுவா என்று இரண்டில் எதை செய்தோம் என சந்தேகம் ஏற்பட்டு அதில் ஒன்று மிகைத்து நிற்கும். அப்போது மிகைத்து நிற்பதைகொண்டு அவர் செயல்படுவார் அதன் அடிப்படையில் தொழுகையை நிறைவு செய்து ஸலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு ஸஜ்தா செய்யவேண்டும். பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக : ஒருவர் லுஹர் தொழுகின்றார். தொழுகையில் இரண்டாவது ரக்அத்தா மூன்றாவது ரக்அத்தா என்று சந்தேகம் ஏற்படுகிறது. ஆனாலும் மூன்று என்பதே மிகைத்து நிற்கிறது. அப்போது அவர் மூன்றாகவே கணக்கிட்டு மீதமுள்ள ஒரு ரக்அத்தை தொழுது, ஸலாம் கொடுத்து பிறகு மறதிக்கான ஸஜ்தா செய்யவேண்டும்.

இதற்கான ஆதாரம்:

உங்களில் ஒருவர் தங்களின் தொழுகையில் சந்தேகித்தால் உறுதியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் தொழுகையைப் பூர்த்தி செய்து ஸலாம் சொல்லிய பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்' என்று கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் رضي الله عنه அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 401

இரண்டாவது நிலை:

இரண்டில் எதுவும் அவரிடத்தில் மிகைத்து நிற்கவில்லையெனில் குறைந்த எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு செயல்படுவார். அதன்படி தனது தொழுகையை முழுமைப்படுத்தி ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான ஸஜ்தாசெய்து பிறகு ஸலாம் கொடுக்கவேண்டும்.

உதாரணமாக : ஒருவர் அஸர் தொழுகின்றார். அப்போது இரண்டாவது ரக்அத்தா? மூன்றாவது ரக்அத்தா? என சந்தேகம் கொள்கிறார். இரண்டாவதா? அல்லது மூன்றாவதா? எனபதை உறுதி செய்யமுடியவில்லை எனும்போது அதனை இரண்டாவதாக கருதி முதல் தஷ்ஹுதை ஓதி அதன் பிறகு இரண்டு ரக்அத்து தொழுது மறதிக்கான ஸஜ்தா செய்த பின் ஸலாம் கொடுக்கவேண்டும்.

இதற்குரிய ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்குத் தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும். அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு ஸஜ்தாக்களால்) அவரது தொழுகையை அந்த (ஐந்து) ரக்அத்கள் இரட்டைப்படை ஆக்கிவிடும். அவர் நான்கு ரக்அத்கள் பூர்த்தி செய்துவிட்டிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமையும். ஸஹீஹ் முஸ்லிம் :990

தொழும்போது ஒருவருக்கு சந்தேகம் வந்தால், மேற்சொன்ன விளக்கத்தின் அடிப்படையில் சந்தேகத்தில் உறுதியான எண்ணத்தின் அடிப்படையிலோ அல்லது மிகையான எண்ணத்தின் அடிப்படையிலோ தொழ வேண்டும். தான்  அதிகப்படுத்தவுமில்லை

குறைக்கவுமில்லை என்பது உறுதியானால் அவர் மறதிக்கான சுஜூது செய்யவேண்டியதில்லை. காரணம் சந்தேகமில்லை என்பது தான்.

மூலம்  மஜ்மூஃ ஃபதாவா வ ரசாயில் ஷைகு உஸைமின்     14/94-101 

தமிழாக்கம்: அஷ்ஷேக் பஷீர் ஃபிர்தெளஸி

http://www.islamkalvi.com/?p=124760


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts