லேபிள்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

மென்பொருள் வல்லுனர்களின் கவலைகள்...


கற்றது தமிழ் படம் பாக்கலைனாலும் அதை பற்றி படித்த விமர்சனங்கள் மென்பொருள் துறையினரை சாடுவதாக தெரிகிறது. இன்னைக்கு விலைவாசி ஏறனதுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர்கள் தான் காரணம்னு நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கேன். ஒரு வகைல அது உண்மையும் கூட. போன தடவை நான் இந்தியா போயிருந்தப்ப என் அண்ணன் (பெரியம்மா பையன்) இதை தான் சொன்னான் (அவன் சாப்ட்வேர் இல்லை). 

மெட்ராஸ்ல இருந்து திருச்சி போகறதுக்கு ஏர் பஸ்ல போகலாம்னு போய் விசாரிச்சிருக்கான். ஒரு சீட் தான் இருக்குனு சொல்லியிருக்காங்க. அதே சமயம் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரும் அங்க வந்திருக்கான். உடனே பஸ் கண்டக்டர் (ஏர் பஸ்ல இருக்கறவர் பேரு கண்சக்டரா இல்லை க்ளீனரா?) 100 ரூபாய் அதிகமா சொல்லியிருக்கான். உடனே என் அண்ணன் சாதாரண பஸ்ல போனா அந்த 100 ரூபாய்க்கு திருச்சிக்கே போயிடலாம்னு ஏர் பஸ்ல போகாம சாதாரண பஸ்லயே போயிருக்கான். நம்ம ஆளு (சாப்ட்வேர் தான்) நூறு ரூபா அதிகமா செலவு பண்ணி ஏர் பஸ்ல போயிருக்கான். 

இந்த இடத்துல தப்பு யார் மேலனு எனக்கு தெரியல. ஏமாந்தவன் ஒருத்தன் வரான், நூறு ரூபாய் ஏத்தி சொன்னாலும் சேர்த்து வாங்குவானு சொன்ன அந்த பஸ்காரன் மேல ஏங்க யாருமே தப்பு சொல்ல மாட்றீங்க? ஏமாத்தறவனைவிட ஏமாறவன் மேல ஏன் உங்களுக்கு எல்லாம் இந்த கோபம்? யாரும் விருப்பட்டு ஏமாறதில்லைங்க. 

பெங்களூர்ல வீட்டு வாடகை ஏறிடுச்சினு எல்லாரும் சாப்ட்வேர் இஞ்சினியரை திட்றாங்க. ஆனா தலைக்கு ரெண்டாயிரம். நாலு பேர் தங்கினா எட்டாயிரம், இன்னொருத்தவன் வந்தா பத்தாயிரம்னு சொல்ற வீட்டு ஓனருங்க மேல ஏன் உங்க கோபம் போகலை? இன்ஃபோஸிஸ் இருபத்தைந்தாம் ஆண்டு விழாக்கு போனஸ்னு தராங்கனு சொன்னவுடனே பெங்களூர்ல வீட்டு வாடகையை ஏத்தனவங்க நிறைய பேர். ஆனா அவுங்க பேப்பர்ல கொடுத்த விளம்பரமும் கைல கொடுத்த காசும் கணக்கு பண்ணா மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்யாசம். 

இது மட்டுமில்லை. இந்த ஹோட்டல் எல்லாம் அதுக்கு மேல. ஒரு சிக்கன் பிரியாணி அறுபது ரூபாய். சைட் டிஷ் எல்லாம் நூறு நூத்தியிருபது. இப்படி தான். ஒரு ட்ரீட்னு 5 பேரோட போனா ஆயிரத்துல இருந்து இரெண்டாயிரம் வரைக்கும் தாராளமா செலவு ஆகும்.நம்ம ஆளுங்களுக்கு வாரத்துக்கு ஒரு தடவை இப்படி போயாகனும். ஆனா இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கொடுத்த ஐட்டத்தையே அறுபது ரூபாய்க்கு ஏத்தனவங்க மேல ஏன் யாருக்குமே கோபம் வரல? 

சாப்ட்வேர் இஞ்சினியர் இவ்வளவு சம்பாதிக்கிறானு சொல்றீங்களே. அவன் எவ்வளவு சேமிக்கிறானு யாருக்காவது தெரியுமா? ஒரு கிராமத்துல இருக்குற கவர்மெண்ட் பள்ளிக்கூட ஆசிரியர் சேமிக்கிறதைவிட கொஞ்சம் அதிகமா அவன் சேர்த்து வைக்கலாம். அவ்வளவு தான். அவனோட வாழ்க்கை முறை அவனை அதுக்கு மேல சேமிக்க விடறதில்லை. அதுல அவன் தப்பு எதுவுமில்லைனு நான் சொல்லலை. ஆனா அவன் தப்பு மட்டுமேனு எல்லாரும் சொல்றது தான் கஷ்டமா இருக்கு. 

இருபத்தியொரு வயசுல எப்படியோ படிச்சி முடிச்சிட்டு வரான். கேம்பஸ்ல வேலை கிடைச்சா பரவாயில்லை. ஆனா அப்படி கிடைக்கலைனா அந்த வேலை கிடைக்க அவன் படற கஷ்டம் வேற எந்த துறைக்கும் குறைவானதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு வேலைக்கு போனவுடனே அவன் வாங்கற சம்பளம் அவனுக்கு ஒரு பெருமையையும், தலை கனத்தையும் தருது. நம்ம அப்பா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு வாங்கறதைவிட அதிக சம்பளம் வாங்கறோம்னு ஒரு பெருமிதமும் (தெரியாமலே கொஞ்சம் கர்வமும் தானா வந்துடுது) வருது. ஆனா அவனுக்கு அந்த காசோட அருமை அவ்வளவா தெரியாது என்பது தான் உண்மை. அதுவுமில்லாம அந்த வயசும் அப்படி தான். ஜாலியா இருக்கனும். அவ்வளவு தான். 

ஆனா அந்த வயசுக்கே உரிய இரக்க குணமும் அவன்கிட்ட தாராளமா இருக்கும். சுனாமி வந்தப்ப காசை அள்ளிக்கொடுத்தவங்க நிறைய பேர். அதே மாதிரி நிறைய பசங்களுக்கு படிக்க உதவி செஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. நண்பர்களிடமிருந்து இந்த மாதிரி மெயில் வந்தா, அது உண்மைனு தெரிஞ்சா குறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது யோசிக்காம செய்யறவங்க நிறைய பேர். பத்து பேர் தங்கியிருக்குற இடத்துல ரெண்டு மூணு பேர் வேலைக்கு போனா அடுத்து எல்லாருக்கும் வேலை கிடைக்கிற வரைக்கும் அந்த வேலைக்கு போற மூணு பேர் மொத்த வாடகையையும் சாப்பாட்டு செலவையும் ஏத்துக்குவாங்க. வேலைக்கு சேர்ந்தவுடனே அந்த பசங்க எந்த ஊருக்கு போவாங்கனு யாருக்கும் தெரியாது. இங்கயும் அவன் காசை அதிகமா நேசிக்கறதில்லை. 

சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் மொத்தமா ரியல் எஸ்டேட்காரவங்ககிட்டயும், செல் போன் கம்பெனிகளிடமும், ஹோட்டல் ஓனருங்ககிட்ட தான் போய் சேருது. கொஞ்சம் கொஞ்சம் தியேட்டர் ஓனருங்ககிட்டயும், ஏர் பஸ்காரங்கட்டயும் போய் சேருது. இன்னைக்கு நம்ம பார்க்கிற ஏற்றத்தாழ்வுக்கு இது தான் முக்கிய காரணம். பணக்காரன் ரொம்ப பெரிய பணக்காரன் ஆகறதுக்கு இது தான் காரணம். இப்படி சாப்ட்வேர் இஞ்சினியருங்ககிட்ட வர பணம் மொத்தமாக வேற ஒரு கும்பலால் பெறப்படுகிறது. 

இதை கண்டிப்பா சாப்ட்வேர் மக்களால சரி செய்ய முடியாது. அரசாங்கம் ஏதாவது செஞ்சாதான் உண்டு. நம்ம அரசியல்வாதிகள்ல நிறைய பேருக்கு இதை புரிய வைக்கவே ரொம்ப கஷ்டப்படனும். சரி அதி புத்திசாலிங்களான மன்மோகன் சிங்கும், பா.சிதம்பரமும் இதையெல்லாம் பத்தி ஏதாவது செய்யறாங்களானு தெரியல. 

கார், Furnished 3 BHK (Bed Room, Hall, Kitchenஆம்), சிக்கன் பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம். பெரு நகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறு நகரங்களுக்கு கொண்டு வந்து பாதி சம்பளம் கொடுத்தாக்கூட போதும். நம்ம ஆளுங்க எல்லாம் ஓடி வந்துடுவாங்க. அதை விட்டுட்டு நீ எப்படி நாற்பதாயிரம் சம்பாதிக்கலாம்னு சண்டை போடறதோ, புலம்பறதோ சரியில்லைங்க.

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts