லேபிள்கள்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்!

மஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்!

மஸ்ஜிதினுள் செல்லும் போது ஆடையால் அழகு படுத்திக்கொள்வது அவசியம்! அரை நிர்வானமாக செல்வது கூடாது!
"ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்" (7:31)
துர்வாடையுடன் மஸ்ஜிதுக்கு வரக்கூடாது!
"பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி
(குறிப்பு: பீடி, சிகரெட்டின் துர்வாடையுடன் பள்ளிக்கு வருபவர்கள் மேற்கண்ட ஹதீஸை நினைவு படுத்திக்கொள்ளட்டும்)
பெண்கள் நறுமணம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவது கூடாது!
"அல்லாஹ்வின் அடிமைகளாகிய பெண்களை மஸ்ஜிதுகளுக்குச் செல்வதிலிருந்து தடுத்து வைக்காதீர்கள். அவர்கள் நறுமணம் பூசிக்கொள்ளாமல் செல்லவேண்டும்'. அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத்   'நறுமணம் பூசிய பெண்கள் நம்முடன் இரவுத் தொழுகையில் கலந்துக் கொள்ளக் கூடாது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம், அபூதாவுத், நஸயீ.
மஸ்ஜிதினுள் நுழையும் போது ஓத வேண்டிய துஆ!
'அல்லாஹூம்ம ஃபதஹ் லீ அப்வாப ரஹ்மதிக' அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.
மஸ்ஜிதினுள் நுழைந்தவுடன் காணிக்கை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்!
'நீங்கள் பள்ளியினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் அமர வேண்டாம்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), "நீர் தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை" என்றார். "(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!: என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),  ஆதாரம்: புகாரி
அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துவது உள்ளச்சத்தின் வெளிப்பாடு ஆகும்!
"இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்." (22:32)
மஸ்ஜிதினுள் எச்சில் / சளியை துப்புவது கூடாது!  
கிப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். 'நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ, தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!" என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறுபகுதியுடன் கசக்கிவிட்டு 'அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புகாரி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும். அறிவிப்பவர்:  அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி
குறிப்பு: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுகளின் தரை மண்ணால் இருந்ததால் பாதத்திற்கு கீழே உழிந்தால் மண்ணமால் மூடிவிடலாம். தற்போது அவ்வாறு இல்லையாதலால் மஸ்ஜிதினுள் எச்சிலைத் துப்புவது அதை அசுத்தப்படுத்துவதாகும் என்பதை உணரவேண்டும்.
மஸ்ஜிதில் அசுத்தத்தைக் கண்டால் சுத்தப்படுத்த வேண்டும்!
"நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டுவிட்டு அதைச் சுரண்டி (அப்புறப்படுத்தி)னார்கள்." அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி
பள்ளிவாசலில் குர்ஆன் ஓதும் போது பிறருக்கு இடையூறு தரும் வகையில் ஓதுவது கூடாது!
நபியவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்தார்கள். (அப்போது) மக்கள் சப்தமிட்டு ஓதுவதை செவியுற்றார்கள். உடன் திரையை விலக்கி,  "உங்களில் ஒவ்வொருவரும் (தொழுகையில்) தமது இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் எனவே உங்களில் சிலர் மற்ற சிலருக்கு நோவினை தரவேண்டாம். சிலரை விட மற்ற சிலர் ஓதுவதில் (சப்தத்தை) உயர்த்த வேண்டாம்." எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி), ஆதாரம்: அபுதாவூத்
மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரிடமும் பிரார்த்திக்க கூடாது!
"அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்" (72:18)
வெளியில் காணாமல் போன பொருள்களை பள்ளியில் அறிவித்து தேடுவது கூடாது!
"காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் "அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக்கிடைக்காமல் செய்வானாக!" என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து "(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?" என்று கேட்டார்.  அப்போது  நபி (ஸல்) அவர்கள், "(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்" என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் வியாபாரம் செய்வது கூடாது!
"பள்ளிவாசலில் விற்பவரையோ, வாங்குபவரையோ கண்டால், "அல்லாஹ் உன்க்கு லாபத்தை தராமல் இருப்பானாக!" என்று கூறுங்கள். அறிவிப்பவர் : அபுஹூரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி
பள்ளியிலிருந்து வெளியேறும் போது ஓத வேண்டி துஆ!
'அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபழ்லிக' அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.
http://suvanathendral.com/portal/?p=4121

--
*more articles click*
www.sahabudeen.com


வெள்ளி, 27 செப்டம்பர், 2013

ஷாப்பிங் லிஸ்ட் போடுறீங்களா?

ஷாப்பிங் லிஸ்ட் போடுறீங்களா?

வீட்டில் செய்யும் வேலைகளிலேயே மிகவும் போர் அடிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மளிகைப் பொருட்களுக்கு செய்யும் ஷாப்பிங் தான். இந்த பிரச்சனை அனைத்து மாதமும் தவறாமல் வந்துவிடும். பிரச்சனை என்றதும் பெரிய பிரச்சனை என்று நினைக்க வேண்டாம், அந்த பொருட்கள் வாங்க சென்றால், கையில் இருக்கும் பணம் செல்லும் வழியே தெரியாமல் போய்விடும். ஆனால் சில வீட்டில் இருக்கும் பெண்கள், இந்த மளிகைப் பொருட்களை எளிதில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி அழகாக வாங்கிவிடுவர். இதற்கு காரணம் அவர்கள் போடும் ப்ளான் தான்.
ஏனெனில் அந்த மாதியான ப்ளான் போட்டால், மாத இறுதியில் எந்த ஒரு பணப்பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த ப்ளான் சரியாக இல்லையெனில் ஒரு வேலைக்கு இரண்டு வேலை என்பது போல் ஆகிவிடும். அதாவது ஒரு பொருளை வாங்கி, மற்றொரு முக்கியமான பொருளை வாங்காமல், பின் மறுமுறையும் கடைக்குச் செல்வோம். அவ்வாறு செல்லும் போது, பெண்களின் கை என்ன சும்மாவா இருக்கும். ஒரு பொருளுக்கு இரண்டு பொருளாக வாங்கிவிவோம். பின் பணம் என்ன நீண்ட நாட்களா இருக்கும்.
எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உங்கள் பணத்தை சேகரிக்கலாமே!!!
முன்னரே ப்ளான் போடுதல்
எப்போதும் மளிகைப் பொருட்கள் வாங்க போகும் முதல் நாளே என்ன வாங்க வேண்டும் என்று யோசித்து லிஸ்ட்டை எழுதிக் கொள்ள வேண்டும். இதனால் எந்த ஒரு பொருளையும் மறக்காமல் இருப்பதோடு, நம்மிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறும் வாங்கலாம்.
பட்டியலை தயாரித்தல்
வாங்கும் மளிகைப் பொருட்களின் பட்டியலைப் போடும் போது இரண்டு வகையான பட்டியலை தயாரித்தல் நல்லது. ஏனெனில் முதல் முறை போடும் போது எதையாவது மறந்துவிடும் வாய்ப்பு உள்ளது. மேலும் முதல் பட்டியலில் அனைத்தையும் எழுதிவிட்டு, பின்பு மற்றொன்றில் வேண்டியவற்றை எழுதினால் நமது பட்ஜெட்க்கு ஏற்றவாறு இருக்கும்.
பட்டியல் பேப்பரை கையில் வைத்திருத்தல்
ஷாப்பிங் போகும் போது கையில் அந்த பட்டியலையும் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பொருளையும் வாங்கியப் பின்பு அதில் ஒரு டிக் மார்க் போட்டுக் கொண்டால், எதை வாங்கினோம், எதை வாங்கவில்லை, சரியாகத் தான் வாங்கினோமா என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
வாழ்க்கைத்துணையுடன் சரியான ஒருங்கிணைப்பு
கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க செல்லும் போது சரியான ஒருங்கிணைப்பு இல்லையெனில் பின்பு ஷாப்பிங் செலவு தான் அதிகரிக்கும். பின் தேவையில்லாத சண்டைகள் வரும். ஆகவே இருவரும் ஒருங்கிணைந்து பட்டியலிட்டு வாங்கினால், பொருட்களும் தவறாமல் இருக்கும், பணமும் மிச்சமாகும்.
குடும்பத்தில் ஆலோசிக்க வேண்டும்
ஷாப்பிங் லிஸ்ட்டை தயாரிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை. அவ்வாறு தயாரிக்கும் போது குடும்பத்தில் உள்ளவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டு, பின்னர் தயாரித்தால், மாதத்தின் இறுதியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.
கிச்சனை பார்த்தல்
எந்த ஒரு மளிகைப் பொருளையும் வாங்கும் முன்பு, கிச்சனுக்கு சென்று பார்த்து, பொருட்கள் ஏற்கனவே இருந்தால், அவற்றை தேவையில்லாமல் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா? மேலும் தேவையில்லாமல் பொருட்களை சேகரித்து வைப்பது வேஸ்ட் தான்.
பட்டியலை வகைப்படுத்தவும்
மாதாமாதம் மளிகைப் பொருட்கள் மட்டும் தேவைப்படுவதில்லை. பால், காய்கறிகள் மற்றும் பல பொருட்கள் வாரம் ஒரு முறை அல்லது தினமும் வாங்க வேண்டியிருக்கும். ஆகவே அவற்றையும் மனதில் வைத்து மளிகைப் பொருட்களின் லிஸ்ட்டை எழுத வேண்டும்.
பட்ஜெட் போடுதல்
அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு ப்ளான் போடும் முன், பட்ஜெட்டை பார்க்க வேண்டும். சொல்லப்போனால் பட்ஜெட்டைப் பொறுத்து ப்ளான் போடுவது நல்லது. இதனால் பணத்தை அளவாக செலவழிக்கலாம்.


--
*more articles click*
www.sahabudeen.com


புதன், 25 செப்டம்பர், 2013

ராசி பலன்களில் உண்மை உள்ளதா? அறிவியல் விளக்கம்!

ராசி பலன்களில் உண்மை உள்ளதா? அறிவியல் விளக்கம்!

அந்தச் சட்டை எனக்கு இராசியானது இந்த சைக்கிள் அவனுக்கு இராசியானது அந்த வீடு அவர்களுக்கு இராசியானது இந்தப் பொண்ணு இராசி சரியில்லை என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன், நீங்களேகூடச் சொல்லியிருப்பீர்கள். இப்படிப்பட்ட இராசி நம்பிக்கை உண்மையா? என்றால் இல்லவே இல்லை என்பதே சரியான பதில். ஆனாலும், படித்தவர்கள்முதல் பாமரர்கள்வரை இந்த நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. இது ஒரு தனி மனிதனின் ஒரு பொருள் சார்ந்த நம்பிக்கையாக இருக்கும்வரை அதனால் அவனுக்கோ பிறருக்கோ அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அதுவே ஒரு நபர் மீதான நம்பிக்கையாக இருந்தால் அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் மிக மோசமாக இருப்பதுண்டு.
பொதுவாக, இந்த நம்பிக்கை சில நிகழ்வுகளின் அடிப்படையில் எழுகிறது. ஒருவர் ஒரு சட்டையை அணிந்துகொண்டு சென்றபோது, காரியம் நல்ல முறையில் முடிந்தால் மீண்டும் அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு முக்கியமான காரியத்திற்குச் செல்வார். அந்த முறையும் காரியம் நல்முறையில் முடிந்தால் அந்தச் சட்டை இராசியான சட்டை என்று முடிவிற்கு வந்துவிடுவார். ஒரு வீட்டிற்குக் குடிவந்தவர், வந்த சில நாட்களில் ஏதாவது ஒரு கேடு வந்துவிட்டால் அந்த வீடு இராசி இல்லாத வீடு என்ற முடிவுக்கு வந்துவிடுவார். எந்தப் பாதிப்பு வந்தாலும், அது அந்த வீட்டிற்கு வந்ததால் என்ற முடிவிற்கு வந்துவிடுவார்.
இப்படித்தான் பல பொருள்களின் மீது இராசி நம்பிக்கை ஏற்படுகிறது. சிலர், சில மனிதர்களையே இராசி இல்லாதவர்கள் என்று ஒதுக்கி விடுவர். ஒருவரால் ஒரு காரியம் தொடங்கப்பட்டு அது தோல்வியில் முடிந்தால் அவர் இராசி இல்லாதவர் என்று வெறுக்கப்படுகிறார்.
சில வீடுகளில் சில பெண்கள் இந்த இராசி நம்பிக்கையால் அடையும் துன்பத்திற்கு அளவே இருக்காது. ஒரு வீட்டிற்கு மருமகளாக ஒரு பெண் வந்த பின் அந்த வீட்டில் ஏதாவது கேடு அல்லது இழப்பு வந்தால் அந்தப் பெண் வந்த இராசிதான் இப்படி நடக்கிறது என்று அப்பாவிப் பெண்மீது அபாண்டமாகப் பழியைப் போட்டுவிடுவர். அத்துடன் நில்லாமல், அடுத்தடுத்து வரும் எல்லாப் பாதிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் அவள் வந்த இராசிதான் என்று பழி போட்டு பாடாய்ப்படுத்துவர்.
இப்படி எல்லாம் சொல்லப்படுவதிலும் நம்பப்படுவதிலும் ஏதாவது உண்மை உள்ளதா என்றால், இல்லை என்பதே ஆய்வின் முடிவு. நல்லது கெட்டது நடப்பதற்கு ஒரு பொருளுக்கோ, ஒரு இடத்திற்கோ, ஒரு நபருக்கோ உள்ள இராசி காரணம் அல்ல. இயல்பாய் நடப்பதை இவற்றுடன் பொருத்திப் பார்க்கும் அறியாமையே இவைகளுக்குக் காரணம். ஒரு சட்டையைப் போட்டுச் சென்றபோது நல்லது நடந்தால் அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு செல்லும்போதெல்லாம் நல்லதே நடக்கும் என்பது உண்மையல்ல.
நான்கைந்து முறைக்குப் பதிலாக நாற்பது அய்ம்பது முறை சோதித்துப் பார்த்தால் நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கும். ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டி விட்டால் மூன்று நான்கு முறை தலையாகவேகூட விழும். அப்படியானால், அந்த நாணயத்தைச் சுண்டி விட்டால் தலையாகவேதான் விழும் என்று எண்ணினால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அவ்வளவு பெரிய முட்டாள்தனம் இந்த இராசி நம்பிக்கை.
அதே ஒரு ரூபாய் நாணயத்தை 100 முறைச் சுண்டிவிட்டால் தலைவிழும் எண்ணிக்கையும், பூ விழும் எண்ணிக்கையும் சற்றேறக்குறைய சம எண்ணிக்கையிலேயே இருக்கும். எனவே, ஓரிரு சம்பவங்களை வைத்து ஒன்றை அல்லது ஒருவரை இராசியானவர் (வை), இராசியற்றவர்(வை) என்று நம்புவதும், நம்பிச் செயல்படுவதும் அறியாமையாகும். எனவே, பிஞ்சுக் குழந்தைகள் தங்கள் நெஞ்சில் இதுபோன்ற அறியாமைகளைப் பதியச் செய்யாமல் அறிவோடு சிந்தித்துச் செயல்பட்டால் வாழ்வில் சிறக்கலாம்.
புதிய உலகம்


--
*more articles click*
www.sahabudeen.com


திங்கள், 23 செப்டம்பர், 2013

மனைவியுடன் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே!!!

மனைவியுடன் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே!!!

இன்றைய அவசர காலத்தில் எந்த ஒரு செயலையுமே நிதானத்துடன் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். இதனால் உறவுகளுக்குள் நிறைய பிரச்சனைகள் எழுகின்றன. ஏனெனில் அந்த அவசரத்தினால், தம்பதியர்கள் இருவரும் சரியாக நிம்மதியுடன் பார்த்து, பேச முடியாத நிலையில் உள்ளனர்.
ஆகவே அவ்வாறு இருந்தால், அப்போது அவர்களுடன் ஒன்றாக சில நிமிடங்களாவது இருப்பதற்கு, ஒரு சில டிப்ஸ்களை பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து பின்பற்றி, உங்கள் துணையுடன் அந்த நிமிடங்களிலாவது சந்தோஷமாக இருங்களேன்
* உங்கள் துணை வேலையோ அல்லது படிக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் ஒரு அரை மணிநேரமாவது செலவழிக்க வேண்டும். அதிலும் உங்களுக்கு மதிய இடை வேளை கிடைக்கும் போதோ அல்லது மாலை வேளையிலோ சென்று ஒரு 10 நிமிடம் பார்த்தாலும், அது அந்த நாளில் அவர்களுடன் சில நிமிடங்கள் செலவழித்தாலும், அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.
* நிறைய தம்பதியர்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாத நிலையில் உள்ளனர். ஏனெனில் சிலருக்கு நைட் ஷிப்ட் வேலை இருக்கும். ஆகவே இந்த மாதிரியான நிலை இருந்தால், முன்கூட்டியே அவர்களுடன் நேரம் செலவழிப்பதற்கு வாரத்திற்கு 3 முறை ஹோட்டலில் ஒன்றாக சாப்பிடுமாறு திட்டங்களைத் தீட்டி யோசித்து, அதற்கேற்றாற் போல் செயல்பட்டால், இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும ஏற்படாமல் இருக்கும். ஒரு வேளை அந்த மாதிரி செயல்பட முடியவில்லையெனில், சனி ஞாயிறுகளில் நிச்சயம் அவர்களுடன் செலவழிக்குமாறு இருக்க வேண்டும். இதனால் அன்பு அதிகரிக்கும்.
* இருவரும் வேலைக்கு செல்லும் போது தனித்தனியாக செல்லாமல், ஒன்றாக செல்ல வேண்டும். அலுவலகம் வேறு வேறு இடத்தில் இருந்தால், அவர்களை பைக்கில் அழைத்துச் சென்று விட்டுவிட்டோ அல்லது ஒன்றாக பேருந்திலோ செல்லலாம்.
* இருவரில் ஒருவருக்கு ஏதேனும் முடியவில்லை என்றால், அப்போது முன்கூட்டியே திட்டம் தீட்டி, இருவரும் பேசிக் கொள்ள வேண்டும். மேலும் அவ்வாறு போடும் போது கட்டாயப்படுத்தாமல், அவர்களது வேலைப்பளுவைப் புரிந்து கொண்டு திட்டம் தீட்டினால் நல்லது. மேலும் அவ்வாறு இருவரும் வெளியே செல்லும் போது, மறக்காமல் மொபைல் போனை ஸ்விட் ஆப் செய்துவிடுவது, மேலும் நிம்மதியைத் தரும்.
ஆகவே மேற்கூறியவாறு செயல்பட்டால், வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழித்தது போல் இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கும். முக்கியம் எப்போதும் பொறுமை இருக்க வேண்டும். பொறுமை இருந்தநால், எதனையும் எளிதில் வெல்லலாம்.
நன்றி: மாலைமலர்


--
*more articles click*
www.sahabudeen.com


சனி, 21 செப்டம்பர், 2013

நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்”

நோய்களைக் வெளிக்காட்டும் "நகங்கள்"

 உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் "நகங்கள்" – அறிந்து கொள்வோம்
பொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும். நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றது. அதனால் அது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு ஆகின்றது.
கெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே?  நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.
வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஒக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு,  நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள்..
ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.
நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்..
நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்:
நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.
*  ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..
*  சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.
* மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
*  இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.
*  நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிச்சொண்டு போல வளைந்து இருக்கும்.
*  இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.
*  சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.
*  நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.  நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.
*  நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..
*  இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும்.
*  மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்
*  மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.
நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.
*
  நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.
*  இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.
*  நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.
*  சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.
*  நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
*  சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.
*  சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.
*  பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.
*  ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.


--
*more articles click*
www.sahabudeen.com


நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts