லேபிள்கள்

புதன், 30 ஜூலை, 2014

தொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…!


தொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…!

இன்னைக்கு பெரும்பாலும் ஆண் பெண் வித்தியாசமில்லாம இருக்கிற பிரச்சினை உடல் பருமன். அதிலும் குறிப்பா தொப்பை...
 குண்டாயிருந்தாகூட தொப்பை இல்லாம இருந்தா அசிங்கமா தெரியாது. இந்த தொப்பை ஏற ஏற ஹிப் சைசும் ஏறி, துணிக்கடைக்கு போகும்போதெல்லாம் ஒரு மனக்கஷ்டம் வரும் பாருங்க... MRF டயர் மாதிரி இடுப்போட ரெண்டு பக்கமும் சதைய கட்டிக்கிட்டு படற அவஸ்தை இருக்கே... சொல்லி மாளாது!.
 வாக்கிங் போறதுக்கு டைம் இல்லை. ஜிம்முக்கு போயி எக்ஸர்சைஸ் பண்றதுக்கு டைம் இல்லை. நாக்கையும் அடக்க முடியறதில்லை. ஆனா தொப்பை குறையணும்ன்ற ஆசை மட்டும் குறையறதேயில்லை. நோகாம நோன்பு கும்பிடனும்... என்ன பண்ணலாம்?...
 சிக்ஸ் பேக் வேணும்னாதான் பல டஃபான எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணனும். மத்தபடி வெறுமனே தொப்பையை மட்டும் குறைக்கிறதுக்கும், கட்டுபாடா வச்சிக்கிறதுக்கும்னா இருக்கவே இருக்கு நம்ம எளிதான எட்டு வழிகள்... (இதைவிடவும் எளிதான வழின்னா அது எந்த முயற்சியுமே எடுக்காம கர்ப்பமான காண்டாமிருகம் மாதிரி தொப்பைய வளர்த்துக்கிட்டு திரியறது மட்டும்தான்!!!)
1) டெய்லி காலையில எழுந்து பல்ல வெளக்குனதும் மொத வேலையா ஒரு டம்ளர் மிதமான வெந்நீருல அரை எழுமிச்சம்பழத்தை பிழிஞ்சி உப்பு, சர்க்கரை எதுவும் சேர்க்காம குடிச்சிருங்க.
2) அடுத்து மிதமான சூட்டுல அரைலிட்டர் அளவு வரைக்கும் வெறும் தண்ணீரையும் குடிங்க. இதுல இருந்து குறைஞ்சது அரைமணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாதீங்க. (அப்புறம் பால் சேர்க்காத பிளாக் டீ, கிரீன் டீ இப்படி ஏதாவது சாப்பிட்டு பழகிக்கிட்டீங்கன்னா ரொம்ப நல்லது. முடிஞ்சவரைக்கும் பாலை அவாய்டு பண்ணுங்க)
3) அடுத்து கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், குளிக்க போறதுக்கு முன்னாடி ஒரேயொரு சின்ன ஈஸியான எக்ஸர்சைஸ்... (இது நோகாம நோன்பு கும்புடுற டைப்தான்றதுனால பயப்படவேண்டாம்) ரெண்டு காலையும் சேத்துவச்சு அட்டேன்ஷன்ல நிக்கிற மாதிரி நின்னுக்கோங்க. அப்புறம் ரெண்டு கையையும் மடக்காம நேரா தலைக்குமேலே ஸ்ட்ரைட்டா தூக்குங்க. இப்போ காலோட முட்டி மடங்காம அப்படியே உடம்பையும், தலைக்கு மேலே தூக்குன கையையும் முன்பக்கமாக மடக்கி குனிஞ்சி உங்க காலோட பெருவிரலை தொடுங்க. ஒருசில விநாடிகளுக்கு அப்புறமா அப்படியே கையை தலைக்கு மேல நீட்டுனமாதிரியே நேரா நிமிருங்க. (ஒரு நாளைக்கு நூறு தடவை இப்படி செய்யனும். காலையில ஐம்பது, சாயந்திரம் ஐம்பது... இப்பிடி பிரிச்சிகூட செய்யலாம். காலோட முட்டி மடங்காம செய்யறதுதான் இதுல ரொம்ப ரொம்ப முக்கியமான சமாச்சாரம்...)

4) அடுத்து குளிச்சிட்டு (குளிக்கிறதும், குளிக்காததும் அவங்கவங்க சொந்த விருப்பம். அதுக்கும் தொப்பையக்குறைக்கிற ஆலோசனைக்கும் சம்மந்தம் இல்லீங்கோ!!!) காலை உணவா நீங்க சாப்பிட வேண்டியது ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி... இல்லாட்டி ஒரு கப் கெல்லாக்ஸ் இல்லாட்டி முளை கட்டுன பச்சைப்பயிர். இத்தோட உங்களுக்கு விருப்பமான ஏதாவது பழங்களை சேத்துக்கலாம். முடிஞ்சவரைக்கும் இதுலேயும் பாலையும், சர்க்கரையையும் அவாய்டு பண்ணிருங்க.

5) ஆபிஸ் போறவரா இருந்தாலும் சரி... இல்லை வீட்லேயே இருக்கிறவரா இருந்தாலும் சரி... ஒரு நாளைக்கு உங்களோட ஸ்நாக்ஸ் டைம் இரண்டு வேளையாத்தான் இருக்கனும். காலையில பதினொன்னு டூ பதினொன்றரைக்குள்ள ஒரு தடவையும், சாயந்திரம் நாலு டூ ஆறு மணிக்குள்ள ஒரு தடவையும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம், முடிஞ்சவரைக்கும் எண்ணெய் பலகாரங்களையும், பேக்கரி ஐயிட்டங்களையும் தவிர்த்துடுங்க. பழங்கள், பிஸ்கட்ஸ், வெஜிடபுள் சாலட், முளைகட்டுன பச்சைப்பயிர் போன்ற ஐயிட்டங்களை ஸ்நாக்ஸ் டைமுக்கு சாப்பிடறது ரொம்ப நல்லது. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... இந்த ரெண்டு தடவையைத்தவிர உங்க உடம்புக்குள்ள வேறெப்பவும் எந்த ரூபத்துலேயும் ஸ்நாக்ஸ் உள்ள போகக்கூடாது. (அப்படியும் ஏதாவது திங்கனும்னு உங்க வாயும் மனசும் அலைபாய்ஞ்சுச்சின்னா... உங்க தொப்பையை ஒரு வாட்டி குனிஞ்சு பாத்துட்டு, ஒவ்வொரு தடவையும் நீங்க உங்க தொப்பைய நெனச்சி ஃபீல் பண்ணதெல்லாம் நெனச்சி பாத்துக்கோங்க!!!)

6) ஒரு நாளைக்கு குறைஞ்சது எட்டு லிட்டருக்கு குறையாம தண்ணி குடிங்க. ஒவ்வொரு முறை தாகம் எடுக்கும்போதும் சும்மா ஒரு டம்ளர் தண்ணியில நாக்கை நனைக்காம, மினிமம் அரைலிட்டர் குடிங்க. இதனால அடிக்கடி ஒன் பாத்ரூம் போகவேண்டியது வரும். ஆனா தொப்பையை குறைக்கிற உங்க முயற்சியில அது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லீயே?... குடிக்கிற தண்ணியில சோம்பு போட்டு நல்லா ஊறவச்சோ, இல்லை கொதிக்க வைச்சு ஆற வெச்சோ குடிக்கிறது உங்க தொப்பை குறையிற வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி தொப்பையை கட்டுக்குள்ள வைக்கிறதுக்கு ரொம்ப உதவுமுங்க...!.

7) மத்தியான சாப்பாடு நீங்க என்னவேணா ஃபுல் கட்டு கட்டிக்கோங்க... தப்பேயில்லை. ஆனா ராத்திரி சாப்பாடு எக்காரணத்தைக்கொண்டும் மூக்குமுட்ட தின்னாதீங்க. குறிப்பா ராத்திரிக்கு நான் வெஜ் கூடவே கூடாது(சாப்பாட்டுல மட்டும்தாங்க!!!). ராத்திரிக்கு ஒரு ஃபுரூட் ஜூஸோ, இல்லை ஏதாவது பழமோ, இல்லை ரெண்டு சப்பாத்தியோ, இல்லை வெஜிடபிள் சாலட்டோ சாப்பிடறது ரொம்ப நல்லது. முடியாதவங்க அட்லீஸ்ட் என்ன சாப்பிட்டாலும் அரைவயிறு சாப்பிட்டுட்டு, சாப்பிட்ட உடனே படுக்காம ஒரு அரை மணி நேரம் கழிச்சி தூங்கப்போங்க. (அதேமாதிரி ராத்திரி தண்ணியடிக்கிற பழக்கமிருக்கிறவங்க எக்காரணத்தைக்கொண்டும் சைடு டிஷ்க்கு எண்ணையில பொறிச்ச அயிட்டங்களையும், நான் வெஜ்ஜையும் சேக்காதீங்க. அவிச்ச பயிர்களையும், ஃபுரூட் மற்றும் வெஜிடபிள் சாலட்டையும் வைச்சே தண்ணியடிச்சி பழகுங்க.) சாப்பாட்டுல வாரத்துக்கு ரெண்டு தடவையாவது சுரைக்காய், பப்பாளிக்காய், முட்டைகோஸ் போன்றவற்றை சேர்த்துக்கிறதும், டெய்லி ராத்திரி ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடறதும் தொப்பையை குறைக்க உதவும்னு சில சமையல் குறிப்புங்க சொல்லுதுங்க. இது எல்லாத்தவிட முக்கியம் எப்பவுமே டயட்ன்ற பேர்ல பட்டினி கிடக்கக்கூடாது. அதேமாதிரி டைம் மாறி மாறி சாப்பிடாம தினமும் ஒரே நேரத்தில சாப்பிடனும்.

8) எட்டாவது ஐடியா என்னான்னா... மேலே சொன்ன ஏழு ஐடியாவையும் தவறாம ரெகுலரா ஃபாலோ பண்ணனும். சும்மா ரெண்டு நாளோ, ரெண்டு வாரமோ பண்ணிட்டு ரிசல்ட்டு இல்லைன்னு விட்டுட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பாளியில்லைங்க. குறைஞ்சது ஒரு ரெண்டு மாசமாவது இதை ஃபாலோ பண்ணினீங்கன்னா அப்புறமாத்தான் உங்க தொப்பையில ஏற்படுற மாற்றங்கள் உங்களுக்கு சந்தோஷத்த குடுக்கிற அளவுக்குத்தெரியும். மத்தபடி விட்லாச்சார்யா படம் மாதிரி ஒரே நாள்ல தொப்பைய குறைச்சிரலாம்னு நெனச்சி இதப்படிச்சிருந்தீகன்னா "ஐயாம் வெரி சாரி"... எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக்கும்... வரட்டுமா?...!!!
மேலே சொன்ன ஐடியாவெல்லாம் இளந்தொப்பைக்கும், மீடியம் தொப்பைக்கும்தான் பொருந்தும். மத்தபடி நாள்பட்ட தொப்பைக்கெல்லாம் நம்மகிட்ட வைத்தியமில்லீங்க...
நாம சொன்னமாதிரி நடந்துக்கிட்டீகன்னா... உங்களுக்கு சிக்ஸ் பேக் வருதோ... இல்லையோ... அட்லீஸ்ட் டீசண்ட்டா டிரஸ் பண்ணிட்டு போற அளவுக்கு தொப்பை குறைஞ்சு கட்டுக்குள்ள இருக்கும்ன்றது கேரண்ட்டிங்க...!!!
மாங்கு மாங்குன்னு எக்ஸர்சைஸ் பண்ண முடியாதவக... ஸ்ட்ரிக்ட் டயட்ல இருக்க முடியாதவக... இவுகளுக்காகத்தான் இந்த ஐடியாவெல்லாம்... நோகாம நோன்பு கும்பிட்டுதான் பாருங்களேன்... ஆல் தி பெஸ்ட் சாமியோவ்...!!!
நன்றி: கதம்ப மாலை
www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 25 ஜூலை, 2014

எளிய மருத்துவக் குறிப்புகள்

எளிய மருத்துவக் குறிப்புகள்
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்
கீழாநெல்லி இலையுடன் கரிசாலை இலையை சேர்த்து பாலில் கலந்து கொடுத்து வந்தால் இரண்டு மூன்று நாட்களிலேயே காமாலை நோய் நீங்கும்.

கற்றாழைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துவந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

ஆடாதோடா இலைக்கஷாயம் சாப்பிட்டால் உடல் குடைச்சல், வாத பித்த கோளாறுகள் நீங்கும். இலைச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு, காமாலை, காய்ச்சல் போன்றவையும் நீங்கும்.

உடல் சூட்டாலோ, கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து விடுவது உண்டு. இதை குணப்படுத்த புளியம் பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டுவந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.

வெள்ளைப் பூண்டை நைத்து அதன் சாறு உடலில் ஊறும்வரை படையின் மீது போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும். தினமும் காலை மாலை படை உள்ள இடத்தை சோப்பு போட்டு கழுவிய பின் இந்த விதமாக தேய்த்து வர ஆறே நாளில் படை நீங்கும்.

அசோக மரத்தின் உட்பட்டையையும், அத்தி மரத்தின் உட்பட்டையையும் கொண்டுவந்து ஒரு சட்டியில் போட்டு ஒரு குவளை தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி அரை குவளை வீதம் எடுத்து சர்க்கரைச் சேர்த்து காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும்.

சுத்தம் செய்த ஓமத்தை இளவறுவலாக வறுத்து உமி மற்றும் கசடு நீக்கி வெல்லம், தேன் கலந்து அம்மியில் அரைத்து காலை மாலை இருவேளை சாப்பிட வயிற்றுப்போக்கு நீங்கும். ஆசனக்கடுப்பு, குளிர்க்காய்ச்சல், வயிறு இரைச்சல், இருமல், செரியாமை ஆகியவற்றுக்கு ஓமம் அருமருந்தாகும்.

திடீரென காயம் ஏற்பட்டால் அரை தேக்கரண்டி சர்க்கரையில் சிறிது சுண்ணாம்பு கலந்து தண்ணீர் தெளித்து குழப்பி ரத்தம் கொட்டும் இடத்தில் தடவ ரத்தப் போக்கு நிற்கும். காயமும் சீக்கிரம் ஆறும்.

வாய்வுக் கோளாறு காரணமாக இடுப்பு வலி இருந்தால், சுடுசோறு ஒரு கை அளவு எடுத்து மெல்லிய வெள்ளை துணியில் வைத்து வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி நிற்கும்.

மாமரத்துப் பிசினை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். இதை இரவு படுக்கப்போகும் முன் காலிலுள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் சில நாட்களில் பித்த வெடிப்பு சரியாகும்.

கசகசாவை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அடிக்கடி தடவி வந்தால் சில தினங்களில் உடல் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி தோல் இயற்கை நிறம் பெறும்.

வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.

மருதோன்றி இலையை அரைத்து தலையில் ஒரு மணி நேரம் கட்டி வைத்து பின் தலை முழுகினால் கண் சிவப்பு நீங்கும்.

பல் கூச்சம் விலக வேண்டுமா? கொய்யா இலையை மென்று வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்.

காதில் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிட்டால் தண்ணீரில் உப்பைக் கரைத்து காதில் ஊற்ற அவை வெளியேறும்.

கண் வலிக்கு நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.

தூதுவேளை வேரையும் அருகம் புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும், வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுக்கள் மட்டும் பிழிய வலி உடனே நிற்கும்.

பல் வலியா? புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து கால் பங்கு உப்பு சேர்த்துப்பல் துலக்கவும்.

பச்சை வாழைப் பழத்தை உண்ண விக்கல் விலகும்
http://pettagum.blogspot.in/2013/07/blog-post_25.html

--
*more articles click*
www.sahabudeen.com


புதன், 23 ஜூலை, 2014

மயக்கும் அழகுக்கு மல்லிச் சாறு! இயற்கை தரும் இளமை வரம்!

மயக்கும் அழகுக்கு மல்லிச் சாறு! இயற்கை தரும் இளமை வரம்!
மலர்களிலேயே அழகான மலர் மல்லிகைதான். தன் கொள்ளை அழகை நமக்கும் அள்ளித்தரும் குணம் கொண்ட மல்லிகையை கொடை வள்ளல் என்றே அழைக்கலாம்! வாசம் தரும் மல்லிகைப் பூ, வற்றாத வனப்பை வாரி வழங்குவது எப்படியென்று பார்ப்போமா..

சிலருக்கு கன்னங்களில் கருமையும், மூக்கின் மேல் கரும்புள்ளிகளும் தோன்றி, முக அழகைக் குலைக்கும்.
ஒரு கப் உலர்ந்த மல்லிகைப் பூவுடன், 4 லவங்கத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து இவை கலக்கும் அளவுக்கு சுடு தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். முகம், மூக்கு, கன்னப் பகுதிகளில் இந்த பேஸ்ட்டால் 'பேக்' போடுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். கருமையும், கரும்புள்ளியும் காணாமல் போவதுடன்.. பருக்களும் நீங்கிவிடும்.

சற்று முன் மலர்ந்த மலர் போல உங்கள் முகம் பிரகாசிக்க வேண்டுமா?
ஓட்ஸ் பவுடர் - அரை கப், பச்சைக் கற்பூரம் - 2 சிட்டிகை, மல்லிகைப் பூ சாறு - அரை கப் (ஃப்ரெஷ் மல்லிகைப் பூவை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்).. இவை கலக்கும் அளவுக்கு வெந்நீரைக் கலந்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் ஒளி வீசி மினுமினுக்கும்.

ஒரு டீஸ்பூன் அரைத்த சந்தனத்துடன் மல்லிகைச் சாறு கலந்து பூசி வந்தால்.. வெயிலால் ஏற்படும் கருமை நீங்கும். பெண்கள் சிறிது கஸ்தூரி மஞ்சளையும் கலந்து கொள்ளலாம்.

தோலின் மேற்புறம் உள்ள இறந்த செல்களை அகற்றி, புத்துணர்ச்சி தருவதிலும் மல்லிகைக்கு நிகர் மல்லிகைதான்.
உலர்ந்த மல்லிகை - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், தோல் சீவிய ஆப்பிள் - 4 துண்டுகள்.. இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேயுங்கள். பின்னர், ஒரு கைப்பிடி மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரால் முகத்தைக் கழுவினால்.. இறந்த செல்கள் பறந்து, இரட்டிப்பு பளபளப்பு முகத்தை ஆட்சி செய்யும்.

அடிப்படையில் குளிர்ச்சியைத் தரும் தாவரமான மல்லிகையில் கண் மையும் செய்யலாம்.

ஒரு விளக்கில் விளக்கெண்ணெயை ஊற்றி, விளக்கின் பின்னால் இருக்கும் (கரி படியக்கூடிய பகுதி) ஸ்டாண்ட் பகுதியில் அரைத்த சந்தனத்தை தடவுங்கள். பிறகு விளக்கை ஏற்றி, ஸ்டாண்ட் பகுதியில் கரி படிந்ததும் அந்தக் கரியை வழித்து, அதில் மல்லிகைப் பூ சாறு 5 (அ) 6 சொட்டுக்கள் கலந்து கொள்ளுங்கள். இந்த மையால் கிடைக்கும் குளிர்ச்சி, பார்வையைப் பிரகாசமாக்கும்!

பிசுக்கு, பொடுகு, நுனி பிளவு போன்ற 'தலை'யாய பிரச்னைக்கும் தீர்வு தருகிறது மல்லிகை.
உதிரி மல்லிகையை வாங்கி வெயிலில் உலர்த்தி, அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் 2 டீஸ்பூனுடன், 2 டீஸ்பூன் வெந்தயத்தூள் கலந்து வாரம் இரு முறை தேய்த்துக் குளியுங்கள். மேற்கண்ட பிரச்னைகளைக் களைவதுடன், கூந்தலை மிருதுவாக்கி.. செழிப்பாக வளரவும் செய்கிறது இந்த மல்லிகை பவுடர்.

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பவர்கள்.. கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி, அதில் 2 கப் ஃப்ரெஷ் மல்லிகைப் பூவை போட்டு வையுங்கள். இந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால்.. தலை குளிர்ச்சியாக இருப்பதோடு, கூந்தலும் மணமணக்கும்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்சாகமூட்டும் மல்லிகைத் தைலமும், குளியல் பவுடரும் தயாரிப்பது எப்படி தெரியுமா?

தைலம் தயாரிக்க..

20 கிராம் உலர்ந்த மல்லிகைப் பூவுடன், மனோரஞ்சிதம், ரோஜா, மகிழம்பூ, ஆவாரம் பூ.. இவற்றை தலா 10 கிராம் கலந்து அரை கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சுங்கள். வடிகட்ட வேண்டாம். அடி தங்கும் பூவிதழ்களை விட்டு விட்டு, மேலோட்டமாக எண்ணெயை மட்டும் ஊற்றி, உடலில் தடவி கால் மணி நேரம் ஊற விடுங்கள். மல்லிகை, தோலில் உள்ள சுருக்கங்களைப் போக்கும். ரோஜா, மகிழம்பூ, மனோரஞ்சிதம், ஆவாரம் பூ.. இவையெல்லாம் உடலுக்கு பொன்னிறத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

குளியல் பவுடர் தயாரிக்க..
உலர்ந்த மல்லிகைப் பூ 100 கிராம், புங்கங்காய் தோல் - 50 கிராம், ஓமம் - 10 கிராம், தவனம், ரோஜா இதழ், மரிக்கொழுந்து ஆகியவை தலா 50 கிராம் சேர்த்து பவுடராக்குங்கள்.
வாரம் இரு முறை இப்படி குளிப்பதால் குளிர்ச்சியும் வாசனையும் சேர்ந்து குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்கும்.

"மணமே மருந்து!"
டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:
மல்லிகைப் பூவின் மணமே மருந்துதான் என்பது சித்த ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட நிஜம். மனக் கலக்கம் நீங்கி நிம்மதி பிறக்கச் செய்யும் சக்தி மல்லிகையின் மணத்துக்கு உண்டு.

குழந்தைகள் சரியாக தாய்ப்பால் குடிக்கவில்லையெனில் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிவிடும். மல்லிகைப் பூவை மார்பில் வைத்து கச்சைக் கட்டிக் கொண்டால்.. பால் கட்டியது கரையும். (இப்படிச் செய்யும்போது குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது.)

அடிபட்டு வீங்கிய இடத்தில் மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மல்லிகைப் பூ இலையை வாயில் போட்டு மெல்வதால் வாய்ப்புண் நீங்கும்.

காதில் ஏற்படும் வலி, குத்தல், சீழ் போன்றவற்றுக்கு மல்லிகை இலை எண்ணெயை 2 சொட்டு விட்டால் சரியாகிவிடும்.

கால் ஆணியால் அவதிப்படுபவர்கள் மல்லிகை இலையின் சாறெடுத்து காலில் தடவி வந்தால் வலி குறைந்து குணமாகும்.

மல்லிகை இலையை நெய்யில் வறுத்து, ஒரு துணியில் கட்டி தொண்டைக்கு ஒத்தடம் கொடுத்தால் தொண்டை புண், எரிச்சல் உடனடியாக நீங்கும்.



--
*more articles click*
www.sahabudeen.com


திங்கள், 21 ஜூலை, 2014

தெனமும் தேனைக் குடிச்சாப் போதும்

தெனமும் தேனைக் குடிச்சாப் போதும்


''என்ன வாசம்பா, முகமெல்லாம் வாடிப்போயிருக்கு'' - அம்மணி அக்கறையாய் கேட்க,
 ''அன்னம்மா வீட்டுக் கல்யாணத்துல வேலை செஞ்சதோட அலுப்பு அம்மணி. மூணு நாள் தொடர்ந்து கல்யாண சாப்பாடு சாப்பிட்டது வயித்தை என்னமோ பண்ணுது.''  
''அதானே பார்த்தேன்... பந்தி பரிமாறினதுலேர்ந்து வெத்தலைப் பாக்கு கொடுத்து வழி அனுப்பற வரைக்கும் அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சேல்ல... அதான் இப்பிடி.''
''உடம்புக்குத்தானே வயசு, தவிர மனசுக்கு இல்லையே. மலையே விழுந்தாலும் தலையால தாங்கணும் அம்மணி. அன்னம்மாவுக்கும் நம்மளைவிட்டா யார் இருக்கா?''

''சரி... சரி... கவலைப்படாதே. அய்யனாரு குடுத்த தேன் இருக்கிறப்ப, அலுப்பு, கொழுப்பு எல்லாமே ஓடிரும்டி. அத்தனையும் உடம்புக்கு சத்து. மனசோட உடம்பும் இளமையா இருக்க, தெனமும் தேனைக் குடிச்சாப் போதும். அதுலயும் நாப்பது வயசுக்கு மேல, தினமும் தேன் சாப்பிடறது ரொம்பவே நல்லது. படுத்த படுக்கையாக் கிடக்கறவங்க, பால்ல கொஞ்சம் தேன் கலந்து குடிச்சிட்டு வந்தா, சீக்கிரமே தெம்பாகி, சுறுசுறுப்பா எழுந்து நடக்க ஆரம்பிச்சிடுவாங்க. கொம்புத் தேன், மலைத் தேன், குறிஞ்சித் தேன்னு தேன்ல அறுபது வகை இருக்கு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்புக் குணம் இருக்கு வாசம்பா. தேன்ல இருக்குற சர்க்கரை ரத்த ஓட்டத்தை சீராக்குறதால உடம்புல களைப்பே தெரியாது.''

''குமட்டல், வாந்திகூட இருக்கே... அதுக்கு என்ன செய்றது?'' என்ற வாசம்பாவிடம், ஒரு ஸ்பூன் தேனில், எலுமிச்சம் பழச்சாறு பிழிந்துவிட்டு தண்ணீர் சேர்த்துக் கொடுத்த அம்மணி, ''வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலைவலினு எல்லாமே சரியாப்போயிரும்'' என்றதும் வாங்கிக் குடித்தாள் வாசம்பா.

''தேன் உடம்பு எடையைக்கூட குறைக்கும்னு சொல்றாங்களே, அது உண்மையா அம்மணி?''

''தேன், கொழுப்பைக் கரைச்சிடும். தேன்ல வெந்நீர் கலந்து குடிச்சா, பருத்த உடம்பு மெலிஞ்சு, ஊளைச்சதை குறைஞ்சு உடல் உறுதியாகிரும். இஞ்சியை சாறு பிழிஞ்சு தேன் விட்டுக் கலந்து சூடுபடுத்திட்டு, ஆறவைக்கணும். இதுகூட வெந்நீர் கலந்து, காலைச் சாப்பாட்டுக்கு முன்னால ஒரு கரண்டியும், சாயாங்காலம் ஒரு கரண்டியும் குடிச்சிட்டு வந்தா, 40 நாள்ல தொப்பை கரைஞ்சிடும். வெங்காயச் சாறுல, தேன் கலந்து சாப்பிட்டா கண்பார்வை பிரகாசமாத் தெரியும். பார்லி கஞ்சியை வடிகட்டி, அதுல தேன் கலந்து குடிச்சா, இருமல், சளித் தொல்லை, நுரையீரல் சம்பந்தமான நோய் எல்லாம் ஓடிருடும். வயித்துப் புண் இருந்தா, சாப்பாட்டுக்கு முன்னால ரெண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, சீக்கிரமே குணமாகும்'' என்றபடியே தேன் பாட்டிலை அலமாரியில் வைக்கப் போனவள், அது தவறிக் கீழே விழுந்து கையெல்லாம் வழிய, அதை அப்படியே நக்கத் தொடங்கினாள்.

''தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்னு சொல்றது உன் விஷயத்துல சரியாத்தான் இருக்கு அம்மணி. நீ பேசுறதைக் கேட்கிறப்பவே காதுல தேன் வந்து பாயுது'' என்றாள் வாசம்பா.

''தேனை வீட்டுக்குக் கொண்டுவர்றதுக்குள்ளயும், வழியிலேயே நிறையப் பேர் கேட்டாங்க. அதோட மகத்துவத்தை சொல்லிச் சொல்லியே, மொத்தத்தையும் குடுத்திட்டேன். உனக்குக் குடுத்தது போக, இருந்த கொஞ்சமும் கொட்டிருடுச்சு. இருக்கிறதையாவது சாப்பிடுறேன்.''

''ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க. தனக்கு மிஞ்சித்தான் தானம் அம்மணி.'

''ஆசையுள்ளவன் அரை வைத்தியன் வாசம்பா. நலம் விசாரிக்கிறதே நல்ல வைத்தியனுக்கு அழகு.''
''நீ சொல்றதும் சரிதான் அம்மணி. தானமா வந்ததை நாம மட்டும் சாப்பிட்டா, வயித்துவலிதான் வரும்'' என்றாள் வாசம்பா.

''வயித்துவலி வந்தாக்கூட, தொப்புளைச் சுத்தி தேன் தடவினா வலி சட்டுன்னு சரியாயிரும். கருஞ்சீரகத்தை தண்ணீ விட்டுக் காய்ச்சி, அதுல தேன் கலந்து சாப்பிட்டுவந்தா, கீழ் வாதம் போயிரும்.''
''தேன்ல இவ்வளவு விஷயம் இருக்கா? என் எள்ளுப்பாட்டி, சின்ன வயசுல என் தம்பிக்குக் கட்டி வந்தப்ப, தேனோட சுண்ணாம்பைக் கலந்து குழைச்சு கட்டி மேல பூசினாங்க. கட்டி நல்லாப் பழுத்து ரெண்டே நாள்ல சரியாயிடுச்சு. இந்தக் காலத்துல மூட்டுவலி, கால்வலி, வீக்கம், கட்டினு டாக்டர்கிட்ட போனாலே, மருந்து மாத்திரைகளை அள்ளித் தர்றாங்க.'' 

''சரியாச் சொன்ன வாசம்பா. மூட்டு வலிக்கும் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நல்லாத் தேனைத் தடவி, தேய்ச்சுவிடணும். கூடவே சாப்பாடு சாப்பிடும்போது, ஒரு ஸ்பூன் தேனையும் சாப்பிட்டு வந்தா, மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது. ரொம்ப மாத்திரைகளைச் சாப்பிட்டா, குடல் வெந்துபோயிடும். அதுக்குக்கூட தேன் உதவியாயிருக்கு. மருந்தோட வீரியம் அதிகமா இருந்தா, தேனைப் பால்ல கலந்து குடிக்கலாம். குடல்ல ஏற்படுற பாதிப்புகளை நிறுத்திடும்.'' மூச்சுவிடாமல் சொல்லி முடித்த அம்மணியிடம், கல்யாணத் தோரணத்தில் கட்டியிருந்த வாழைப் பூவை நீட்டினாள் வாசம்பா. 



--
*more articles click*
www.sahabudeen.com


சனி, 19 ஜூலை, 2014

உங்க வீட்டுல ஏ.சி.இருக்கா..?

உங்க வீட்டுல ஏ.சி.இருக்கா..?





நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி, குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. விடிந்துவிட்டாலும் கூட, ஏ.சி. மெஷினை அணைக்க மனமில்லாமல், குதூகல தூக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலரும். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வந்த பத்திரிகை செய்தி, ஏ.சி-க்கார பார்ட்டிகளை எல்லாம் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது.

சென்னை, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி, முதல் நாள் இரவு தன் இரண்டு குழந்தைகளுடன், ஏ.சி. அறையில் தூங்கச் சென்றதுதான் தெரியும். மறுநாள் காலையில் அந்த வீட்டிலிருந்து புகை மட்டும் வந்து கொண்டிருக்க... ஆள் அரவம் எதையும் காணோம். அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து, கதவை உடைத்துக் கொண்டு போய் பார்த்தால்... ஸ்ரீவள்ளியும் அவர் மகனும் மயங்கிக் கிடக்க.. ஒன்றரை வயது பெண் குழந்தை மோனிஷா கட்டிலிலேயே பரிதாபமாக இறந்து கிடக்க... இந்தக் காட்சியைக் கண்ட அத்தனை பேருமே அதிர்ந்துதான் போனார்கள்.


'ஏ.சி-யில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம்' என்று சொல்லியிருக்கிறது போலீஸ். இந்தச் செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்த பலரும், அந்தக் குடும்பத்துக்கு இரண்டு நிமிட அனுதாபத்தை வஞ்சகம் இல்லாமல் செலுத்திய அதேநிமிடம், 'ஆகா... ஏ.சி. மேல ஒரு கண் வெச்சிக்கிட்டேதான் தூங்கணும் போல...' என்று பதைபதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எலெக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் என்றாலே எச்சரிக்கை தேவைதான். அதற்காக நிம்மதியான உறக்கத்தை தரும் ஏ.சி., உயிருக்கே உலை வைக்கும் சாதனமாக மாறுமா?
இந்தக் கேள்விக்கு... ஏ.சி. மெஷின்களைப் பொருத்துவது, பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்துவரும் சென்னையைச் சேர்ந்த 'ஃபெர்ஃபெக்ட் ஏ.சி. சர்வீஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் மைக்கேல் பதில் சொல்கிறார்...

''அந்தச் செய்தியை படிச்சதும் எனக்கும் திக்னு ஆயிடுச்சு. எரிஞ்சு போனது ஸ்பிலிட் ஏ.சி. எனக்கு தெரிஞ்சு, ஸ்பிலிட் ஏ.சி. கோளாறு காரணமா இப்படி ஒரு சோக சம்பவம் நடந்ததுங்கிறதே இதுதான் முதல் தடவை. ஸ்பிலிட் ஏ.சி-யில் மூணு விதமான ஒயர் கனெக்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அது சரியா பொருத்தப்படாம இருந்தா, ஒண்ணோட ஒண்ணு உரசி விபத்து நடந்திருக்கலாம். பொதுவா...

ஸ்பிலிட்டைவிட, விண்டோ ஏ.சி-யி லதான் பாதிப்பு அதிகம்'' என்று சொன்னவர், ஏ.சி. மெஷின்களை பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு டிப்ஸ்களை வாரி வழங்கினார்...

புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.

உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்காதீர்கள். நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். உதாரணத்துக்கு ஸ்பிலிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.

ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்குங்கள்.

எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு
போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.

ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும்.

நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள். ஃபேன் காற்று, ஏ.சி காற்றை திசை திருப்பி விடும். ஏ.சி காற்று வருவதற்கு சரியான ஃப்ளோ கிடைக்காது.

27 டிகிரியிலும், நல்ல குளுமையை தரக்கூடிய ஏ.சி.தான் தரமானது. 27 டிகிரியில் வைக்கும்போது மூச்சு திணறுவதுபோல் உணர்ந்தால், அந்த ஏ.சி. சரியாக சர்வீஸ் செய்யப்படாததாக இருக்கலாம்.

ஸ்பிலிட் ஏ.சி. எனில் அறையை முழுவதையும் மூடிவிடக்கூடாது. கதவுக்கு அடியில் இருக்கும் வழியிலாவது காற்று போகும் அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும். சிறிய துவாரமாவது போட்டு வையுங்கள். இதனால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட் கரன்ட் மட்டுமே கூடுதலாகச் செலவாகும்.

உங்கள் ஏ.சி. கூலாக இல்லையெனில் உடனடியாக சர்வீஸ் ஆட்களை அழைத்து, மெஷினில் கேஸ் போதுமான அளவோடு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நிரப்பச் சொல்லுங்கள்.

ஏ.சி. மெஷின்களைப் பொறுத்தவரை எவாபிரேட்டர் காயில், கண்டன்ஸர் காயில், ஏ.சி. மெஷினுடைய ஃபேன் இந்த மூன்றும் மிகவும் முக்கியம். இந்த பாகங்கள் சுத்தமாக வேலை செய்கின்றனவா என்பதை கண்காணித்துக் கொண்டே இருங்கள். இவை மூன்றும் சரியாக வேலை செய்தாலே மின்சாரம் வீணாகாமல் இருக்கும்.

ஏ.சி-யை வாங்கும்போது அதுபற்றிய டெக்னிக்கலான விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும். இதனால், ஏ.சி. சர்வீசுக்கு வருபவர்கள் மேலோட்டமாக சரி செய்வதையும் நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். சர்வீஸ் ஆட்கள் வந்தால் கூடவே இருந்து கவனிப்பது உங்கள் ஏ.சி. மெஷினுக்குப் பாதுகாப்பானது.
பின்குறிப்பு: 'ம்.. வேப்ப மரத்துக் காத்து... கயித்துக் கட்டிலு இதுக்கெல்லாம் ஈடாகுமா இந்த ஏ.சி.' என்று கிராமங்களில் இன்றைக்கும் காற்றாடத்தான் தூங்குகிறார்கள். வீடு கட்டும்போதே காற்று எளிதாக வந்து போகும் வகையில் அமைத்துவிட்டால்... ஏ.சி-யாவது... கீசியாவது!

''ஏ.சி. கோளாறுக்கு நிவாரணம் உண்டு!''
''புதிதாக ஏ.சி. வாங்குகிறோம். அது ஆரம்பத்தில் நன்றாக வேலை செய்கிறது. ஆனால், காலப்போக்கில் ஏதேனும் விபத்து கள் நேர்ந்தால், நுகர்வோர் நீதி மன்றத்தை நாடலாமா?'' என்று வழக்கறிஞர் பிரபாகரனிடம் கேட்டோம். அவர், ''ரைட் டு சேஃப்டி என்பது சட்டத்தில் நமக்காக உருவாக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்று. நீங்கள் ஏ.சி-யை பயன்படுத்தும்போது விபத்து ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்... அதற்கு, மின்துறையோ அல்லது ஏ.சி-யை தயாரித்த கம்பெனியோ காரணம் என்று உங்கள் தரப்பில் நிரூபிக்கப்பட்டால்... கண்டிப்பாக நிவாரணம் உண்டு. ஒரு பொருளை வாங்கும்போதே அதற்கான சேஃப்டியையும் அந்த நிறுவனம் தந்தாக வேண்டும்.
இதுபோன்ற விஷயங்களில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞர்கள் தேவையெனில், அதை இலவசமாக ஏற்பாடு செய்து தருகிறது அரசு. சென்னையைப் பொறுத்தவரை உயர் நீதிமன்றத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணையம் என்ற ஒரு பிரிவு உள்ளது. அங்கே விண்ணப்பித்தால் வழக்கறிஞரை நியமிப்பார்கள். அவர்கள் மூலமாக அரசாங்கத்தைக்கூட எதிர்த்து வழக்குத் தொடரலாம்'' என்று சொன்னார்.


--
*more articles click*
www.sahabudeen.com


Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts