லேபிள்கள்

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

அரசாண்ட ஆறு பேகம்கள்

 

1) ரஸியா பேகம் !!!

கி.பி. 1236–1240 வரை டெல்லியை ஆண்ட ஒரு பெண் சுல்தான்.!! (சுல்தான் என்பது ஆண்பால், சுல்தானா என்பதுதான் பெண்பால். நான் ஒரு ஆணுக்கு வீரத்திலும் விவேக்கதிலும் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை என்னை சுல்தான் என்றே அழையுங்கள் என்று எல்லோருக்கும் ஆணையிட்டு இருந்தாள் ரஸியா பேகம்.) !

இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பெயர் இல்துமிஷ!் இவர் டெல்லியை ஆண்ட மூன்றாவது சுல்தான் ஆவார். இவர் டெல்லியை கி.பி. 1211 முதல் 1236 வரை ஆட்சி செய்தார். இவருக்கு பல மகள்களும் மகன்களும் இருந்தனர். ஆனால் இவர் ரஸியா பேகத்தையே மிக அதிகமாக நேசித்தார். ஒரு பெண் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு இளவரசியாகவே வளர்க்கப்பட்டார். கூடவே அரசியல் விவகாரங்களையும் நன்கு பழகிக் கொண்டார்.

குதிரை சவாரியிலும், வாள் வித்தையிலும் தனது சகோதரர்களையும் விட மிகச் சிறந்து விளங்கினார். அச்சமயத்தில் இவரது தந்தை ராஜபுத்திரர்களுக்கெதிராக படையெடுத்துச் சென்றார். தான் திரும்பி வர கால தாமதம் ஆகலாம் என கருதிய அவர் தனக்கு பதிலாக தனது மகள் ரஸியா பேகத்தை ஆட்சி அதிகாரத்தில் நியமித்தார். திரும்பி வர சுமார் ஆறு ஆண்டுகள் ஆனது. அக்காலக் கட்டத்தில் ரஸியா பேகம் நன்முறையில் விவேகத்துடனும் ஆட்சிப் புரிந்தார்.

தனது தந்தை திரும்பி வந்ததும் ரஸியா ஆட்சியை தந்தையிடமே ஒப்படைத்தார். கி.பி.1236 – ஆம் ஆண்டு இல்துமிஷ் மரணமடைந்தார். ஏற்கனவே அவர் தனது வாரிசாக ரஸியா பேகத்தையே முடிவு செய்திருந்தார். ஆனால், பிற்போக்கு சிந்தனை கொண்ட அமைச்சர் குழு பெண்ணாகப் பிறந்தவள் மண்ணாளுவதா?” “அணங்கிற்கு நாங்கள் இணங்கி போவதா?” என்று பஞ்ச் வசனம் பேசி, ரஸியாவின் ஒன்றுவிட்ட சகோதரன்ருக்னுதீன் பிரோஸ்என்பவனை ராஜாவாக ஆக்கினார்கள்.

அவனோ அந்தப்புரமே கதியாகக் கிடந்தான் பிரோஸ். இதை பயன் படுத்தி அவன் தாய் அராஜக ஆட்சிக்கு காரணமானார்.

இவர்களின் அராஜக ஆட்சியை எதிர்த்து மக்கள் போர் கொடி பிடித்து பொங்கி எழ, இது தான் சரியான சமயம் என்று குறுநில மன்னர்களும், அமைச்சர்களும் தாய்-மகன் இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவர்களை பிடித்து வந்து சிறையில் அடைத்தார்கள்.

ஆசைதீர சில நாள் சித்ரவதை செய்துவிட்டு, நவம்பர் 9, 1236 ல் இருவரையும் பரலோகம் அனுப்பி வைத்தார்கள் வீரர்கள்.

மக்களின் நன் மதிப்பை பெற்று ரஸியா சில காலம் ஆண்டு வந்தாலும், “ஒரு பெண்ணின் கீழ் இருப்பதா? வெட்கம்!!..என்று ஒரு கூட்டம் சதி ஆலோசனை செய்து கொண்டே தான் இருந்தது.

டில்லியிலிருந்து 150 மைல் தொலைவில் சர்ஹிந்த் என்ற பகுதியை ஆண்டு வந்த இக்தியாருதின் அல்துனியா என்ற அரசனோடு சதியாலோசனை செய்து ரஸியாவின் ஆட்சியை கவிழ்க்க திட்டம் போட்டது அந்தக் குள்ளநரி கூட்டம்.

இதை அறிந்ததும், அவன் இங்கு வருவதற்குள் நாமே அங்கு போய் அவனை ஒரு கை பார்ப்போம் (attack is the best form of defence) என்று படையுடன் புறப்பட்டாள் ரஸியா சுல்தான்

வீரம் விவேகம் இருந்தாலும் விதி ரஸியாவிற்கு எதிராகவே வேலை செய்தது. உடன் வந்த படை தளபதிகள் பலர் பாதி வழியில் காலை வாரிவிட, சொச்ச வீரகளோடும் மிச்சத்திற்கு வீரத்தோடும் போருக்கு போனாள். ஆனால், அந்தப் போரில் அவளுக்கு வெற்றி வேறு விதமாக வந்தது. அவளின் அழகும், அறிவும் சாதுர்யமான பேச்சும் அல்துனியாவை கிறங்க அடித்தது. செய்ய இருந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு ரஸியாவையே மணம் முடித்தார் அல்துனியா.

இரண்டு படைகளோடும் மறுபடி டில்லி புறப்பட தயாரானார்கள்..

கூட இருந்த வீர்களில் (முக்கியமாக மெய்கப்பாளர்கள்) இந்தப் பெண் மறுபடி டில்லி வந்தால் பெண்ணாட்சி நிலைத்து விடும் என்று அவர்கள் இரவு உறங்கும் நேரம் பார்த்து கூடாரத்திற்குள் புகுந்து கணவன்-மனைவி இருவரையும் தீர்த்து கட்டினார்கள்.

2) 1857 – இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும்

858 மார்ச் 6 ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் பகதூர்ஷா அவர்களின் மகன்களின் தலைகளைக் கொய்து அவற்றை தட்டில் வைத்து பக்தூர்ஷாவுக்கு சிறையில் வைத்துக் கொடுத்த கொடியவனான மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான்.

ஆயினும், ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் போராடினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் சென்று தலைமறைவானார். ஏப்ரல் 7, 1879 காத்மண்டு வில் இறந்தார்.

தாய்நாட்டுக்கான சுதந்திரத்துக்காகப் போராடி அந்நிய மண்ணில் உயிர் துறந்த பேகம் ஹஜரத் மஹலுக்கு லக்னோவின் விக்டோரியா பூங்காவில் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் சலவைக் கற்களால் ஆன நினைவுச்சின்னம் ஒன்று நிறுவப்பட்டது. இந்தப் பூங்கா இன்று பேகம்

ஹஜரத் மஹல் பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது

3) முஸ்லீம் ராணிகளின் தலைநகரம் போபால்!!!!!!
நாட்டின் முதல் கட்டாயத் இலவசதொடக்கக் கல்வி!!
இந்திய நாட்டின் முதல் Ladies shoping mall
(Ladies sooq)

பெண்களுக்கென்று பிரத்யேகமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் !!!

கைகுஸ்ரா jahan!!!!

1819 முதல் 1926 வரை, போபால் நகரம் நான்கு ராணிகளால் ஆளப்படுகிறது. !!!

பெண்கள் ஆட்சி புரிய வாய்ப்பு அளிக்கப்டுவது அபூர்வமான அந்தக் காலகட்டத்தில் நான்கு பெண்கள் போபாலை தொடர்ந்து ஆண்டது, சிறப்பான ஒரு விஷயமாகும்.

குத்சியா பேகம் என்பவர்தான் முதல் மகாராணி.!!!
அவரைத் தொடர்ந்து அவர் மகள் சிக்கந்தர் பேகம் ஆட்சி செய்தார்.

3a) அவரது மகளான ஷாஜகான் பேகம் !!

1871 ஆம் ஆண்டு தாஜுல் மஸ்ஜிதை கட்டினார்.தாஜ்மஹால் போல் உலகின் மிகச் சிறந்த கட்டிடங்களில் ஒன்று தாஜுல் மஸ்ஜித். தாஜுல் மஸ்ஜித் நவீன இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் அதில் நூலகம், ஆராய்ச்சி மையம் மற்றும் ஒரு அரபு பாடசாலை மதரஸா ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது. தொடர்ந்து பாடசாலைகள், சிராய் (ஓய்வு இல்லங்கள்), நூலகம் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றவைகளை ஏற்படுத்தினார்.

இறைநம்பிக்கை உள்ளவராகவும் படிப்பார்வம் உள்ளவராகவும் இருந்தார்.

போபாலில் இந்துக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு சட்டங்களை இயற்றினார். இந்து சொத்துகளை பாதுகாப்பதற்கான ஒரு இந்து சொத்து அறக்கட்டளை நிறுவினார். போபாலின் வரலாற்றை தாஜுல் இக்பால்என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தமாக எழுதி ஆவணப்படுத்தினார்.

3b)இவர் ஆட்சிக்குப் பின் அவரது மகள் சுல்தான் ஜஹான்பேகம் ஆட்சி செய்தார்.

இசுலாமியப் பெண்கள் பர்கா அணியும் கட்டாயம் இருந்ததால், அப்பெண்கள் பர்கா அணியாமல் சுதந்திரமாக கடைவீதிக்குச் சென்று வர வேண்டும் என்பதற்காக, பெண்களுக்கென்று பிரத்யேகமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றைக் கட்டினார் சுல்தான் ஜஹான் பேகம்.

அவர் பெண்களுக்கென்று நிறுவிய ஒரு அமைப்புதான் போபால் பெண்கள் அமைப்பு (Bhopa; Ladies Club). பெண்களுக்கான பிரத்யேகமான வணிக வளாகத்திற்கு, சுல்தான் ஜஹான் பேகமும், அவ்வப்போது வந்து செல்வதுண்டு.

பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இங்கிலாந்தில் நடைபெற்ற விழாவுக்கு சுல்தான் ஜஹான் பேகத்தை சிறப்பு விருந்தினராக அழைத்ததும், போபால் நகர அரசு விழாவுக்கு , வேல்ஸ் இளவரசர் வருகை தந்ததும், இதற்கு முக்கிய சான்று.

இந்த நான்கு மகாராணிகளின் ஆட்சிக் காலத்தில் போபால் நகரத்துக்கு குடிநீர் வசதி, தபால் மற்றும் ரயில் வசதித்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.

போபால் உள்ளாட்சி அமைப்பும் இவர்கள் காலத்தில்தான் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

ஐதராபாத் நிஜாமின் சாம்ராஜ்யத்தை அடுத்து, இந்தியாவில் பெரிய முஸ்லீம் சாம்ராஜ்யமாக விளங்கியது போபால் நகரம்தான்.

Jahan இவர் பேகம்ஸ் ஆஃப் போபால்என்று புகழப்படும் போபால் அரசிகளின் வம்சத்தைச் சேர்ந்தவர்.

பெண் கல்வி, நிர்வாகச் சீர்திருத்தம் போன்றவற்றுக்காக இன்றளவும் புகழ்பெற்றுள்ள அவர், மக்களால் சர்க்கார் அம்மாஎன்று அழைக்கப்பட்டார்.

போபால் அரச வம்சத்தின் ஷாஜஹான் பேகம் முகம்மது கான் பகதூரின் மூத்த மகளாகப் பிறந்து உயிர் பிழைத்த ஒரே வாரிசு கைகுஸ்ரா ஜஹான்.

1867-ல் அவருடைய தந்தை முகம்மது கான் பகதூர் இறக்க, பட்டத்து இளவரசியாக அறிவிக்கப்பட்டார்.

கல்விக்கு முன்னுரிமை

போபாலில் பல முக்கியக் கல்வி நிறுவனங் களைத் தோற்றுவித்தார். 1918-ல் நாட்டிலேயே முதன்முறையாகக் கட்டாயத் தொடக்கக் கல்வி போபால் ஆட்சியின் கீழ் அறிவிக்கப்பட்டது. அவரது அரசால் அது இலவசமாகவும் வழங்கப்பட்டது.

அரசுக் கல்வி, அதிலும் குறிப்பாகப் பெண் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தியவர் கைகுஸ்ரா ஜஹான். அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழில்நுட்பப் பயிலகங்கள், பள்ளிகள் உருவாக்கப்பட்டன. தகுதி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக் கையையும் அவர் அதிகரித்தார்.

அகில இந்தியக் கல்வி மாநாட்டின் முதல் தலைவராகவும் கைகுஸ்ரா ஜஹான் செயல்பட்டுள்ளார்.

மேம்பட்ட சுகாதாரம்:-

இதற்கெல்லாம் மேலாக 1920-ல் இருந்து அவர் இறக்கும்வரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராக அவர் திகழ்ந்தார். இன்றைய நாள்வரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு வேந்தராகச் செயல்பட்ட ஒரே பெண் என்ற பெருமையைக் கொண்டவர் கைகுஸ்ரா ஜஹான்.

கைகுஸ்ரா ஜஹானின் மற்றொரு முக்கியப் பங்களிப்பு பொது சுகாதாரம். பரவலான தடுப்பூசி மருந்துத் திட்டம், அரசு நீர் விநியோகம், சுகாதாரம்-தூய்மைக்கான தரத்தை மேம்படுத்துதல் என மக்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டினார். சமூக நலனை மேம்படுத்தும் அடிப்படைத் துறைகளான கல்வி, சுகாதாரப் பணிகளுக்கு இப்படிப் பல்வேறு வழிகளில் அவரது ஆட்சியில் மிகப் பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

நிகரற்ற நிர்வாகம்

கல்வி, சுகாதாரத் துறைகளைப் போலவே வரி சீர்திருத்தம், ராணுவம், காவல்துறை, நீதித் துறை, சிறைத் துறை, வேளாண்மை விரிவாக்கம், பாசன வசதிகள், பொதுப்பணித் துறை போன்றவற்றிலும் கைகுஸ்ரா ஜஹான் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். 1922-ல் சட்டப்பேரவை கவுன்சில், மேலவை ஆகியவற்றை உருவாக்கியதுடன், நகராட்சிகளுக்குத் தேர்தலையும் நடத்தியுள்ளார்.

1914-ல் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் தலைவராக இவர் இருந்துள்ளார். கல்வி, சுகாதாரம், மற்ற துறைகள் சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கைகுஸ்ரா ஜஹான் தனது ஆட்சிக் காலத்தில் உலக நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். 1911-ல் லண்டனில் நடைபெற்ற பிரிட்டன் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் பதவியேற்பு நிகழ்வில் அவர் பங்கேற்றிருக்கிறார்.

1901 முதல் 1926 வரை 25 ஆண்டு காலத்துக்கு பல்வேறு சீர்திருத்த நடவடிக் கைகளுடன் கைகுஸ்ரா ஜஹான் ஆட்சியை நடத்தினார். 1926-ல் பதவியைத் துறந்து தனது கடைசி மகன் ஹமிதுல்லா கானிடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் 71 வயதில் இறந்தார்.

( தொகுப்பு: பூதலூர் அப்துல்மாலிக். )

https://www.nidur.info/2022/01/14/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

வியாழன், 26 அக்டோபர், 2023

*முந்திரியை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்.*

 

முந்திரி இனிப்பு , காரம் என எதிலும் சுவைக்ககாக சேர்க்கப்ப்டும் பொருள்.

இதை ஊட்டச்சத்துக்காக வெறுமனே சாப்பிடுவார்கள். டயட் இருப்பவர்கள் ஆற்றலை அதிகரிக்கவும் முந்திரி சாப்பிடுவார்கள். ஆனால் சிலர் முந்திரியை தொட்டுக் கூட பார்க்கக் கூடாது என்கின்றனர். ஏன்..? அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

முந்திரியில் இருக்கும் ஊட்டச்சத்துகள் : முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. முந்திரியை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று மும்பை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் டயட்டீஷியன் டாக்டர் ஜினல் படேல் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில் "முந்திரியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்திருப்பதால், வீக்கத்தை எதிர்த்துப் போராட விரும்புவோர் முந்திரி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமை அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக முந்திரியை தவிர்க்கவேண்டும். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், முந்திரி சாப்பிட்ட பிறகு நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள்" என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், "முந்திரியை அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது ஒவ்வாமை ஏற்படும் போது மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக அளவு முந்திரிகளை சாப்பிடுவது சிறுநீரக பாதிப்பு போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில் அவை அதிக அளவு ஆக்சலேட் பண்பை கொண்டிருக்கின்றன. முந்திரி, டைரமைன் மற்றும் ஃபைனிலெதிலமைன் போன்ற நச்சு நிறைந்த அமினோ அமிலங்கள் ஆகும். இது ஒருவரின் நல்வாழ்வை மேம்படுத்தும். ஆனால் அதேசமயம் அமினோ அமிலங்கள் என்று வரும்போது உணர்திறன் கொண்டவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

முந்திரியின் ஆரோக்கிய நன்மைகள் : இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியம், உடல் எடையைக் குறைத்தல் மற்றும் பலவற்றிற்கு முந்திரி நன்மை பயக்கும்.

எடை இழப்புக்கு நல்லது : புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. பசியின்மையை ஏற்படுத்துவதால் உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவுகின்றன.

கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகிறது : முந்திரி எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. முந்திரியை உணவில் சேர்ப்பது HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது.

இதயத்திற்கு நல்லது : 2007 ஆண்டில் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டஆய்வின்படி, வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் முந்திரி பருப்பை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் 37% குறைவு என்கிறது.

செல் சேதத்தைத் தடுக்கிறது : பொதுவாகவே முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்திற்கு நல்லது. அவை செல்களின் சேதத்தை தடுக்க உதவுகின்றன. மேலும் உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்கின்றன. முந்திரியை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் வறுத்த முந்திரியில் அதிக ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகள் உள்ளன.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது : முந்திரி பருப்புகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்துகிறது.

திங்கள், 23 அக்டோபர், 2023

வெற்றியும் மமதையும் (உஹதுப்போரில் நாம் பெறவேண்டிய படிப்பினை)

 

வெற்றி பெறுகின்ற போது நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செல்வம் சேருகின்ற போது நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் வெற்றி கொஞ்சம் பிசகினால் நமக்கு ஆணவத்தையும், மமதையும் ஏற்படுத்திவிடும்.

மிகப் பெரிய யானைதான் ஆனாலும் எந்த நேரத்திலும் பூச்சி தன் காதில் நுழைந்து விடலாம் என்ற எச்சரிக்கையுடன் காதை சதா ஆட்டிக்கொண்டே இருக்கிறது!

இந்த உலகம் நான் இனி தோல்வியே பெற மாட்டோம் என்று சொல்லி நம்மை மனோவசியப்படுத்த பார்க்கும்.

அடுத்தடுத்து பெற்ற வெற்றிகள்தான் உலகத்தை ஜெயிக்க வேண்டும் என்று அலெக்சாண்டருடைய தலையில் பேராசையை ஏற்படுத்தியது.

தான் பெற்ற வெற்றி நிரந்தரம் என்று நினைத்ததால்தான் நெப்போலியன் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார்.

இனி நாம் தோல்வியே அடைய மாட்டோம் என்கின்ற எண்ணம்தான் ஹிட்லரையும், முசோலினியையும் வீழ்த்தியது.

உலகப் போரில் வென்ற சர்ச்சில் உள்ளூர் தேர்தலில் தோற்றுப்போனார்.

வெளி உலகில் மட்டுமல்ல, நம் அகவய உலகத்திலும் நம்முடைய முன்னேற்றங்களைக் காரணமாக்கி, நாம் அதீத மகிழ்ச்சி அடையக் கூடாது.

நம்மை கண்டு நாமே வியந்தால் நம்மால் அடுத்த நிலையை அடைய முடியாது.

என்னை யாரும் வெற்றி கொள்ள முடியாது என நினைப்பவர்களெல்லாம் பரிதாபமான தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

அது சூழ்ச்சியால் நிகழ்ந்திருக்கலாம்.

கவனமின்மையால் இருந்திருக்கலாம்.

பலவீனங்களால் நிழந்திருக்கலாம்.

எச்சரிக்கையின்மையால் நிகழ்ந்திருக்கலாம்.

அதீத நம்பிக்கையால் ஏற்பட்டிருக்கலாம்.

அடுத்தடுத்த வெற்றிகள் நம்மை தவிர யாருமில்லை என்று எண்ண வைத்து விடுகின்றன.

இப்படித்தான் இஸ்லாமிய உஹத் யுத்தத்தில் நடந்தது.

ஒரு குதிரைவீரன் நபியவர்களிடம் முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி 3000 படைவீரர்களை அழைத்துக் கொண்டு வருவதற்கு இறைமறுப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதில் 700 குதிரைப்படை, அதேயளவு ஒட்டகங்கள் மற்றும் கவசமணிந்த காலாட்படை அத்துடன் படைவீரர்களை மகிழ்விக்க பெண்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிரிகள் கரையோரத்து மேற்குப்பாதை வழியாக வந்து கொண்டிருக்கின்றனர் என்றொரு செய்தியும், பின்னர் உஹத் மலையின் அடிவாரத்தில் பாசறை அமைத்துக் கொண்டனர் என்ற மற்றொரு செய்தியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வந்தடைந்தது.

உடனே தமது தோழர்களை அழைத்து ஆலோசனை செய்துவிட்டு, யுத்தத்திற்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். மறுநாள் பிற்பகல் தொழுகையை முடித்தபின் 1000 வீரர்களைக் கொண்ட படை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களின் தலைமையில் உஹதை நோக்கி நகரத் தொடங்கியது.

ஷைகன் என்ற இடத்தை அடைந்தபோது மாலை நேரமாகியது. மாலைநேரத் தொழுகையை முடித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது படையினரைப் பார்வையிடச் சென்றார்கள். அச்சமயம் எதிரிகள் மிக அதிகமாக உள்ளனர் என்ற பொய்க் காரணத்தை முன்வைத்து 300 நயவஞ்சகர்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்று விட்டனர்.

மீதி இருந்த 700 வீரர்களில் எட்டுச் சிறுவர்களும் இருந்தனர். அவர்களில் மல்யுத்தம் மற்றும் வாள்வீச்சு தெரிந்த இருவரைத் தவிர ஏனைய ஆறு பேரையும் மதீனாவுக்குத் திருப்பி அனுப்பி வைத்தார்கள் நபிகளார்   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

இருந்த வீரர்களில் வில்வித்தை தெரிந்த சிலரை காலையில் ஒரு சிறிய குன்றின் மீது நின்று கண்காணிக்க வேண்டுமெனப் பணித்து,’ என் அறிவிப்பு இன்றி குன்றை விட்டு நகரக் கூடாதுஎன்று கட்டளையிட்டு விட்டு ஏனையோரை ஐம்பது, ஐம்பது பேராக அணிவகுத்து எதிரிகளைத் தாக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

மிக அருமையான ராஜதந்திர யுத்த வியூகம். மறுநாள் காலை யுத்தம் ஆரம்பித்தது. ஏற்கனவே அணிவகுத்து நின்ற எதிரிப் படைகளைக் குன்றின் மீது நின்ற இஸ்லாமிய படை எளிதாக துவம்சம் செய்ய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் எதிரிப்படைகள் நாலா பக்கமும் சிதறியபோது, அவர்கள் விட்டுச் சென்ற பொருள்களை நபியவர்களின் படைவீரர்கள் எடுப்பதைக் கண்டு, குன்றின் மீது பாதுகாப்பிற்காக நின்ற வில்வீரர்கள் தாம் வெற்றியடைந்ததாக எண்ணி , நபிகளாரின் கட்டளையை மீறி ,குன்றை விட்டு இறங்கி வந்து எதிரிகளின் பொருள்களை எடுக்கத் தொடங்கினார்கள்.

குன்றின் மீது இஸ்லாமிய வீரர்கள் எவருமில்லை என்று தெரிந்த எதிரிகள், பின்புறமாக வந்து நபி யவர்களின் படைகளைத் தாக்கத் தொடங்கினார்கள். இதனால் நபியவர்களின் படையினருக்கு பெரும் சேதமேற்பட்டது. ஹம்ஸா   ரளியல்லாஹு அன்ஹு  போன்ற முக்கிய நபித்தோழர்கள் 70க்கும் மேற்பட்டோர் இந்த பின் விளைவால் ஷஹீதாக்கப்பட்டனர் .

உத்பா இப்னு அபீ வக்காஸ் என்பவன் நபியவர்களை நோக்கிக் கல்லெறிந்தான். இதனால் நபி   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கீழே விழுந்து, நபிகளாரின் வலது கீழவரிசையின் முன் பல் சேதமடைந்து கீழ் உதடும் காயமடைந்தது.

இந்த உஹுத் போரில் அம்பெறி வீரர்கள் செய்த தவறினால் எதிரிகள் நபிகளாரைச் சூழ்ந்து கொண்டனர். நபிகளாரைத் தாக்கவிடாமல் நபித்தோழர்கள் கடுமையாக எதிரிகளை எதிர்த்துப் போராடினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது வைத்திருந்த அன்பினால் தங்களையே அர்ப்பணித்து வீர மரணத்தைச் சுவைத்தனர். ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இரு தோழர்களுமே மிகுந்த வீரத்துடனும் துணிவுடனும் போரிட்டனர்.

இதற்கிடையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரவியது. முஸ்லிம்கள் நிலை தடுமாறி, எது முஸ்லிம் படையினர், எது எதிரிப்படையினர் என்று குழம்பிவிட்டவர்களாகத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும் நிலை வந்தது.

நிலைமையை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலிருந்து அம்பெறி வீரர்களைப் போர்க்களத்திற்குத் திரும்பி வரும்படி அழைத்தார்கள்.

ஆனால் அவர்கள் அதைக் கவனிக்கவில்லை. அணிகளுக்கிடையில் பெரும் குழப்பம் நிலவியது.எந்த அளவிற்கென்றால் முஸ்லிம்களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று முஸ்லிம் பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள்.

அப்போது அங்கு ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அருகிலிருந்த தன் தந்தை யமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முன்னணிப் படையினரிடம் சிக்கியதைப் பார்த்துவிட்டு, ‘அல்லாஹ்வின் அடியார்களே! இது என் தந்தை, இது என் தந்தை!என்று உரக்கக் கூறி தடுக்க முயன்றார்கள். ஆனால் முஸ்லிம் வீரர்களுக்கு அந்தக் கூச்சல் குழப்பத்தில் எதுவும் கேட்கவில்லை, அவரைத் தாக்கிக் கொன்றே விட்டனர். ஆனாலும் முஸ்லிம்களை ஹுதைஃபா மன்னித்ததோடு அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!என்று பெருந்தன்மையாகக் கூறினார்.

தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு எதிரிகளுடன் சண்டையிட்டு நபிகளாரைக் காத்தார்கள். அப்போது தல்ஹாக்கும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தாக்க விரைந்த எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறே இருந்தது. அதைப் போலவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காக்க வேண்டுமென்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

நபிகளாரைக் காக்க வேண்டுமென்று அவர்களின் தோழர்களான அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, அலீ ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் அங்கு விரைந்து நபிகளாரைச் சுற்றிப் பாதுகாப்பு அரணாக மாறினர்.

(ஸஹீஹ் புகாரி 3:59:3290, இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்.)

மரங்களில் ஏறுவதற்கு கைதேர்ந்த நிபுணர் ஒருவர் பலரை மரம் ஏறப் பழக்கிக் கொண்டிருந்தார். அப்படி ஒருவனுக்கு கற்றுக் கொடுக்கும் போது, சற்று ஆபத்தான உயரத்தில் எறவும் முடியாமல், இறங்கவும் முடியாமல் கஷ்டப்படும் போது அந்த நிபுணர் ஒன்றுமே சொல்லாமல் வாளாவிருந்தார்.

ஆனால் இறங்குகின்ற போது பாதுகாப்பான இடத்திற்கு வந்ததும் பார்த்து இறங்கு ,பார்த்து இறங்குஎன்று சத்தமிட்டார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் இப்போது எச்சரிக்கை செய்கிறீர்களே என்ன ஆபத்து இருக்கிறது ?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் அவன் மரத்தின் ஆபத்தான உயரத்தில் இருக்கும் போது மிகவும் குழம்பி இருந்தான். அவன் பயத்தில் இருக்கும் போது நான் ஏதாவது சொல்லி இருந்தால், அவன் இன்னும் பதற்றப்பட்டு இருப்பான். எளிதான இடத்தில்தான் அஜாக்கிரதையாக இருந்து தவறுகள் அதிகம் செய்வார்கள் அதனால் தான் அந்த இடத்தில் நான் எச்சரிக்கை செய்தேன்என்றார்.

வாழ்க்கை விசித்திரமானது.இலகுவான விஷயங்களில்தான் நாம் அதிகம் கோட்டை விடுகிறோம். எளிதான தேர்வுகளில்தான் குறைந்த மதிப்பெண்கள் பெறுகிறோம்.

வெற்றியும் மமதையும் இயற்கைத்தான் ஒன்றாக பிணைத்து மறைத்து வைத்திருக்கிறது.

ரஹ்மத் ராஜகுமாரன்

source: https://www.facebook.com/photo/?fbid=2866804153578921&set=a.1412423615683656

வியாழன், 19 அக்டோபர், 2023

*உங்கள் வயிறு அடிக்கடி சத்தம் போடுகிறதா? காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.*

 

வயிற்றில் இருந்து சத்தம் கேட்பது சாதாரணமானது மற்றும் சாப்பிட்ட பிறகு அடிக்கடி இது ஏற்படும். செரிமான அமைப்பில் உணவைக் கடத்தும் குடல் சுவர்கள் சுருங்குவதால் இந்த கூச்சல் சத்தம் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி, வயிற்றில் சத்தம் என்பது பசியின் அறிகுறியாக இருக்கலாம். பசியின் உணர்விற்கு காரணமான ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால் குடல் மற்றும் வயிறு சுருங்கும். இதன் விளைவாக வயிற்றில் சத்தம் ஏற்படுகிறது.

இருப்பினும், வலி   அல்லது குறிப்பிடத்தக்க வீக்கம் போன்ற பிற அறிகுறிகளுடன்,   அது தொற்று, வீக்கம் அல்லது மலச்சிக்கல் போன்ற உடல்நலப் பிரச்சனையையும் குறிக்கலாம். இந்த சந்தர்ப்பங்களில், காரணத்தை அடையாளம் கண்டு சரியான சிகிச்சையைத் தொடங்க ஒரு மருத்துவரை அணுகுவது முக்கியம்.

வயிற்றில் சத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:-

1. பசி:

வயிற்றில் சத்தம் வருவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று பசி. நாம் பசியாக உணரும்போது,   மூளையில் குறிப்பிட்ட பொருட்களின் அதிகரிப்பு உள்ளது. இது பசியின் அறிகுறிகளைக் குறிக்கிறது மற்றும் குடல் மற்றும் வயிற்றின் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கர்ஜனை ஒலிகளை ஏற்படுத்துகிறது.

என்ன செய்ய வேண்டும்: வயிற்றில் சத்தம் வருவதற்கு பசி காரணமாக இருக்கும் போது,   எதையாவது சாப்பிடுவதே சிறந்தது. குடல் இயக்கம் மற்றும் எளிதாக செரிமானத்தை ஊக்குவிக்க நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

2. வாயு:

செரிமான அமைப்பு வழியாக செல்லும் திரவத்திற்கு வாயுவின் பெரிய விகிதம் இருந்தால், இது வயிற்று சத்தத்திற்கும் வழிவகுக்கும்.

என்ன செய்ய வேண்டும்: பீன்ஸ் அல்லது முட்டைக்கோஸ் போன்ற வாயுவை உண்டாக்கும் அதிகப்படியான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது முக்கியம். இந்த உணவுகள் செரிமான செயல்பாட்டின் போது நிறைய புளிக்கவைத்து, உற்பத்தி செய்யப்படும் வாயுவின் அளவை அதிகரிக்கின்றன. இது சத்தம் எழுப்புவதற்கு வழிவகுக்கிறது.

3. தொற்று மற்றும் இரைப்பை குடல் அழற்சி:

குடல் நோய்த்தொற்றுகள் அல்லது வீக்கத்தின் காரணமாகவும், குறிப்பாக கிரோன் நோயின் வரலாற்றைக் கொண்டவர்களில், கூச்சலிடும் ஒலிகள் ஏற்படலாம். இந்த சந்தர்ப்பங்களில், வலி   மற்றும் அசௌகரியம், உடல்நலக்குறைவு, குமட்டல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிற அறிகுறிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

என்ன செய்ய வேண்டும்: குடல் தொற்று அல்லது வீக்கத்துடன் சத்தம் வெளிப்பட்டால், அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும். இதனால் நீரிழப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பிற சிக்கல்களைத் தடுக்கலாம். கூடுதலாக, ஓய்வெடுப்பது, ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது மற்றும் மருத்துவரால் சுட்டிக்காட்டப்பட்டால் மட்டுமே மருந்துகளைப் பயன்படுத்துவது முக்கியம்.

4. குடல் அடைப்பு:

குடல் அடைப்பும் குடலில் பெரிஸ்டால்டிக் இயக்கம் அதிகரிப்பதால் வயிற்று சத்தத்திற்கு வழிவகுக்கும். இந்த அதிகரித்த இயக்கம், தடுக்கப்பட்ட குடல் வழியாக செல்ல முடியாத திரவம் மற்றும் வாயுவுக்கு உதவுவதற்காக ஏற்படுகிறது.

குடல் அடைப்பு என்பது புழுக்கள், குடல் எண்டோமெட்ரியோசிஸ், அழற்சி நோய்கள் அல்லது குடலிறக்கங்களால் ஏற்படக்கூடிய மிகவும் தீவிரமான நிலை. இந்த சந்தர்ப்பங்களில், வயிற்று வலி, வலுவான பிடிப்புகள், பசியின்மை மற்றும் குமட்டல் போன்ற பிற அறிகுறிகள் குமட்டலுடன் இருக்கும்.

என்ன செய்வது:

குடல் அடைப்புக்கான சிகிச்சையானது அடைப்புக்கான ஆரம்ப காரணத்தைப் பொறுத்தது. பொருட்படுத்தாமல், சிக்கல்களைத் தடுக்க மருத்துவமனை அமைப்பில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. குடலிறக்கம்:

குடலின் ஒரு பகுதி வயிற்று சுவரில் இருந்து வெளியேறும்போது குடலிறக்கம் ஏற்படுகிறது. குடலிறக்கங்கள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே வயிறு சத்தத்தை எழுப்புகிறது. கூடுதலாக, வலி, வீக்கம், சிவத்தல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிற அறிகுறிகள் ஏற்படலாம்.

என்ன செய்ய வேண்டும்: நீங்கள் குடலிறக்கத்தைக் கண்டறிந்தால், மதிப்பீட்டிற்காக உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை நிபுணரைப் பார்க்க வேண்டும். தீவிரத்தை பொறுத்து, அறுவை சிகிச்சை பரிசீலிக்கப்படும்

திங்கள், 16 அக்டோபர், 2023

ஜெர்மனி பக்கம் பார்வையை திருப்புங்கள்

 

குடும்ப அமைப்பு முறையிலும்,குழந்தைகள் பெற்றுக் கொள்வதிலும் உண்டாக்கிய குளறுபடிகள் காரணமாக ஜெர்மானிய சமூகத்தில் உழைக்கும் வயதுடைய இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

இதனால் ஐரோப்பாவிலேயே பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக முன்னிலை வகிக்கும் ஜெர்மனி அந்த நிலையிலிருந்து பின்தங்கும் சூழல் உண்டாகிவிட்டது.
இதை சரி செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து ஆண்டிற்கு 4 இலட்சம் திறமைசாலிகளை குடியமர்த்திக் கொள்ளும் வகையில் அரசின் குடியேற்ற விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
2030 க்குள் திறமையான பணியாளர்கள் 30 இலட்சம் பேர் தேவை என்பதை ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

உம்மத்தின் பிள்ளைகள் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் பக்கம் பார்வையை திருப்ப வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களின் முதன்மை இலக்காக இருந்த அரபு நாடுகளுக்கான பணியாளர்கள் தேவையில் இளநிலை முதுநிலை பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பொறியியல் மருத்துவம் துணை மருத்துவ படிப்புகள் கல்வித்துறை உள்ளிட்ட அநேக பிரிவுகளில் தகுதிமிக்கவர்களை வரவேற்க ஜெர்மனி தயாராக இருக்கிறது.
ஆர்வமும் தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் ஜெர்மனி மொழியை கொஞ்சம் கற்றுக் கொண்டு அங்கே குடும்பத்துடன் குடியேறுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

ஜெர்மனியில் வசிக்கும் தமிழக முஸ்லிம்கள் யாரவது முன்வந்து ஒரு அமைப்பை நிறுவி பெருகிவரும் இந்த வாய்ப்புகளை கண்டறிந்து இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.இது வசதி வாய்ப்புகளை பெற்றுள்ளவர்கள் மீதுள்ள சமூகக் கடமை.

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர விருப்பமுள்ளவர்களின் எண்ணமும் இலக்கும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே இங்கே பதிவிட விரும்புகிறேன்.

உலகின் வளர்ந்த நாடுகளின் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு நுண்ணறிவையும் தொலைநோக்கு இலக்கையும் நமது இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும்.

அதேநேரம் கல்வி மற்றும் சட்டத் துறை என்று வருகிற போது மட்டும் கூட்டு முயற்சியுடன் ஏகபோகமாக ஆக்கிரமிக்கும் (Monopoly) மனநிலையை தமிழக முஸ்லிம் இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும்.

ஒருவன் அதிகாரம் பெற்றால் ஒட்டுமொத்த உம்மத்திற்கும் பலனளிக்க வேண்டும் அதற்குப் பெயர் தான் கல்வி.
—————————-
Source : https://www.dw.com/…/germanys-workforce-in…/a-58974377
https://www.wsj.com/…/aging-germany-is-running-out-of…
https://economictimes.indiatimes.com/…/art…/88319621.cms

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts