லேபிள்கள்

வியாழன், 28 பிப்ரவரி, 2019

கண்ணாடி வாழ்கை –


 பேரா. ஹஸனீ

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நிச்சயமாக உங்களில் ஒருவர் மற்ற சகோதரனின் கண்ணாடி ஆவார். தன் சகோதரரிடம் ஒரு துன்பத்தை ( குறையை) கண்டால் அவர் அதை நீக்கிவிடட்டும்.
இக்காலத்தில் இந்த சமுதாயத்திற்கு வேண்டிய ஒரு அற்புதமான குணநலனை இந்த ஹதீஸ் விவரிக்கிறது, பொதுவாக இன்று யாருடைய பேச்சையும் யாரும் ஏற்றுக்கொள்கிற பக்குவத்தில் இல்லை.
என் கருத்தே மிகச்சரியானது என்று கொடிபிடிக்கும் காலமிது, அது சமூகமாக இருந்தாலும், ஊராக இருந்தாலும், இயக்கமாக இருந்தாலும் ஒரு படி மேலே போய் தனி மனிதனாக இருப்பினும் இதுவே நிலை.
நிலை இப்படி இருக்க பெருமானாரின் கருத்தை கேளுங்கள், உங்களில் ஒருவர் தன் சகோதருக்கு கண்ணாடி, கண்ணாடி என்றால்? தலைவாற வா? என்றால் இல்லை தலைக்குள் (மூளை) வருட.
கண்ணாடி எப்படி தனக்குள் எத்தனை கீறல்கள் இருந்தாலும் எதிரில் நிற்பவரின் முகத்தில் இருக்கும் ஒரு சிறிய தூசியை கூட தெளிவாக சுட்டிகாட்டுமோ அப்படித்தான் ஒரு முஃமின் இருப்பார் என்கிறது இந்த ஹதீஸ்.
ஒகோ! நம்மிடம் எந்த பிரச்சனை இருந்தாலும் பிறரிடம் உள்ள குறைகளை மட்டும் தான் நாம் திருத்தவேண்டுமா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
இந்த நிலையை ( இன்றைய சமூக நிலையை ஒழிக்க வந்தது தான் இந்த ஹதீஸ்) அல்லாஹ்வும் அவன் தன் தூதரும் மனிதனின் இயற்கை இயல்புகளைப்புரிந்தால் மிகத்தெளிவாக நம்மை பண்படுத்துகினர்.
பொதுவாக மனித இயல்பு அவனின் நிலைப்பற்றி அவனுக்கு தெரியாது அடுத்தவர்களைப்பற்றியே அதிகமாக பார்த்தும் யோசித்தும் கொண்டிருப்பான்.
அடுத்தவர்களைப் பற்றி ஒரு செய்தி செல்லப்பட்டால் அவன் ஃபிராட், அவன் ரெம்ப ஒழுக்கமானவனா? அவனைப்பற்றி தெரியாத என்பது போன்றவைத் தான் பதிலாக வரும்.
இந்நிலையை நுட்பமாக விளங்கியதால் இஸ்லாம் மனிதனின் குணங்களையும், ஆற்றல்களையும் வேறோரு நிலையாக மாற்ற முடியுமே அல்லாது அதை மெத்தமாக அழித்துவிட்டு அதில் மனிதத்தை எழுப்ப முடியாது என்ற கொள்கையை தன் தாரக மந்திரமாக வைத்துள்ளது.
ஒரு முஃமின் தன் சகோதர் பார்வை மூலமாக தம்மை எப்படி மேம்படித்திக்கொள்ள முடியும் என்ற நேர்மறை சிந்தனையை இந்த இடத்தில் எடுத்தாளுகிறது.
எந்த மனிதனும் தம்மிடம் உள்ள குறைகளை அவ்வளவாக அறியமாட்டான் (அறிந்து வைத்திருந்தாலும் ஒப்புக்கொள்ளமாட்டான்) , உங்களைப்பற்றியே உங்களிடம் கேட்கப்பட்டால் உங்களைப்பற்றி நீங்கள் வரைந்து வைத்திருப்பது நீங்கள் ரெம்ப நல்லவர் என்பதாகத்தான் இருக்கும்.
இந்த ஒரு பார்வைதான் தம் சுயமுன்னேற்றத்தை தடுக்கும் மிகப்பெரும் தடைக்கல். ஆகையால் ஒரு மனிதன் தன்னை திருத்திக்கொள்ள முற்படுகிற போது அவனுக்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது அடுத்த ஒரு முஃமினான மனிதன் தான்.
அவனிடமிருந்து தன்னை பற்றி வரும் செய்திகளை வைத்து அதை நீக்கி தன்னிலை உயர்த்திககொள்வான், இவன் மற்ற சகோதர்களுக்கு கண்ணாடியாக ஆகும்போது ஒரு முழு சமுதாய முன்னேற்றமும், சமுக மாற்றமும் ஏற்பட இது மிகப்பொரும் காரணமாக இருக்கும்.
அடுத்து, இது ஒரு மனிதனிடம் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவத்தை ஏற்படுத்தும், இந்த ஏற்றுக்கொள்ளு பக்குவம் இல்லாததால் தானே இன்று சமூக சீரழிந்து நேர்கதியாக நிற்கிறது.
அடுத்து கண்ணாடியிடம் இருக்கிற கீறல்களால் நாம் என்றும் அதை பார்த்து சீவாமல் இருந்து விடுவதில்லையே.
இன்று சமூகத்தில் அந்தஸ்தில் உள்ள சிலர் மக்களுக்கு மத்தியில் வரும்போது முகமூடி அணிந்த மிக நல்லவர்களைபோல் வலம்வருபவர்கள் கூட தன் குளியலரையில் கண்ணாடியை பார்த்து சிரித்துக்கொள்கிறார்கள் என்பது தற்கால ஆய்வேட்டின் வேடிக்கையான ஆனால் உணமையான தகவல்.
தன் சகோதரனைக்கொண்டு தான் முன்னேற்றம் அடையவேண்டும் தன்னை கொண்டு இந்த சமூக மக்களுக்கு பிரையோஜம் ஏற்பட் வேண்டும் என்று நினைத்தால் வெற்றி நிச்சயமே.
சரி, நாளை காலையிருந்து இந்த வேலை ஆரம்பிக்கலாம் ஒவ்வொரு ஆளாப்பர்த்து என்னப்பா இப்படி பான்ற? நீ பண்றது சரியில்லை என்று ஆரம்பித்து விடாதீர்கள்
அதை எப்படி செய்யனும் என்பது பற்றி மிர்காத் என்ற ஹதீஸ் விரிவுரை நூலில் மிக அழகாகவே எழுதியிருக்காங்க. இது ஒரு அழகான செய்தியாக இருக்கிறதே இதை எப்படி ஆரம்பிப்பதுஎன்று தானே சந்தேகம், வருங்கள்அதையும் பார்போம்
1. தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள் : மனிதனாக பிறந்த எவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, ஆனால் தவறு என்று தெரிந்த பின்பும் அதை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது தான் நம்மை பிறரிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும்.
ஆகையால் தவறு என்று தெரிந்துவிட்டால் மனதார ஒத்துக்கொள்ளுங்கள், இது உங்களை குற்ற உணர்சியிருந்து காக்கும், இன்னும் மற்றவர்கள் உங்களை மதிப்பதற்கு காரணமாக இருக்கும்.
அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லையானால் அது கண்ணாடியில் கல்லெரிவதற்கு ஒப்பாகும். கண்ணாடியில் கல்லெறிந்தால் கண்ணாடி உடைந்து போகும் நீங்கள் உங்களை அலங்கரிக்கிற ஒரு வாய்ப்பை இழந்து உங்கள் அகங்காரத்திற்கு தீனிபோட்டிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
இன்னும் கண்ணாடி சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தால் தானே அடுத்த பொருளை சரியாக காட்டும். கண்ணாடியே உடைந்து, ரசம் போயிருந்தால் எதிர் பொருளை ஈரண்டிரண்டாகவல்லவா காட்டும்.
ஒருவர் சொன்ன செய்தி மிக அழகாக நினைவில் நிழலாடுகிறது. நான் என் மகனிடம் பரிட்சைக்கு படி டிவி பார்க்ககூடாது அது தப்பு என்று சொன்னேன்.அவன் பதிலுக்கு சொன்னான். அப்ப நீ மட்டும் டிவி பார்கிற அது தப்பில்லையா என்று கேட்டான்.
அவர் சொன்னார் எனக்கு பரிட்சை இல்லை என்று சொல்லுவதா? அல்லது நான் நியூஸ் மட்டும் பார்க்கிறேன் என்று சொல்லுவதா?அப்படி சொன்னாலும் அவன் கேட்பான் அப்ப நியூஸ் மட்டும் பாகுறது தப்பில்லையா?
அப்படியே எது சொன்னாலும் நீங்கள் சமாளிக்கப்பார்கிறீர்கள். அது வெளியே வெற்றியை வாங்கித்தரலாம், ஆனால் உங்கள் உள்ளே அது ஆராத ரணத்தையல்லவா எற்படுத்திவிடும்.
உங்கள் தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அதை மறுத்து சண்டையிருவதற்கு நீங்கள் செலவழிக்கும் சக்தியைவிட அதை ஒப்புக்கொண்டு அடுத்த முறை திருத்திக்கொள்ள செலவழிக்கும் சக்தி குறைவானதே அடுத்து ஒரு உண்மையான மனநிம்மதியையும் அல்லவா கொடுக்கும்.
அடுத்து, அடுத்தவர் உங்களின் தவறு சுட்டிக்காட்டும் போதுதான், எப்படி நாம் அடுத்த மனிதர்களிடம் பேசக்கூடாது என்ற பாடத்தை நாம் பெற முடியும், நமக்கு வலியை ஏற்படுத்தும் செய்தி அடுத்தவருக்கு எப்படி வலியை ஏற்படுத்தாமல் இருக்கும்.
ஒரு ஆழிய கருத்தை இந்த ஹதீஸ் சுட்டுகிறது, கண்ணாடி எப்பொழுதும் அழுக்கை மட்டுமே காட்டுவதில்லை, அழுக்கு சிறிய பகுதி என்றால் அழகிய முகம் எவ்வளவு பெரிய பகுதி அதை அல்லவா முழுமையாக காட்டுகிறது.
அடுத்தவரின் தவறை மட்டும் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடுவதில்லை,அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை பாராட்ட மறந்துவிடாதீர்கள். இது உங்களுக்குரிய நன்மதிப்பை அடுத்தவரிடம் ஏற்படுத்துவதோடு ஒரு அன்பையும் ஏற்படுத்தும்.
2. நாகரிகம் பேணுவது: தவறுகளை சுட்டிக்காட்டும் போது கூட வயது, சூழ்நிலையை அனுசரித்து கண்ணியமாக நடந்துகொள்வது. நேரடியாக சுட்டிக்காட்டாமல் நாகரிகமாக செல்லுவது. நண்பர்களிடம் ஒரு தவறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறி அதன் பின் அதை சுட்டிக்காட்டுவது.
சில பேர் ' யார் பொய் கூறினாலும் எனக்கு பிடிக்காது என்று வீராப்பு பேசிக்கொண்டு ஆனால் அவர் தனக்கொன்று வரும் போது பொய்யை அள்ளிவடுவார்'. தன் நிலை மாற்றிக்கொண்டு அடுத்தவருக்கு கூறும்போது அதில் தன்னையரியாமல் ஒரு கண்ணியத்தை கண்டிப்பாக பின்பற்றுவோம்.
3. கடைசியாக அற்புதமான செய்தியை ஆசிரியர் கூறிப்படுகின்றார், ஒருவரிடம் உள்ள தவறை சுட்டிக்காட்டினால் ஒப்புகொள்ளமாட்டர் சொன்னாலும் அதை புரியமாட்டார். இது ஒரு பிரச்சனையாக உருவேடுத்துவிடும் எனற சூழ்நிலையில்,ஆகா நாங்கள் ஹதீஸை பின்பற்றுகின்றேன் அதை எப்படி விடலாம் என்று விடாபிடியாக ( இன்று தமிழகத்தில் நடப்பது போன்று சுன்னத்துகளுக்காக பர்ளான ஒற்றுமையை அறுத்து எறிதல் போன்று) ஒரு போர் களத்தை அமைத்தாவது மாற்றிவிடுவது என்று களம் அமைத்துவிடாதீர்.
இதற்கு அழகிய வழிமுறை இறைவனிடம் முறையாக து ஆவின் வழியில் முறையிடுங்கள் உங்களுக்கு இவ்வெண்ணத்தை ஏற்படுத்தியவனே அவன் தானே, குறையுள்ள சகோதரனை முழுவதுமாக ஆள்வதும் அவன் தானே,ஆகவே முழுமையாக மாற்றுக்கிற பொறுப்பை அவனிடமே விடுங்கள்.
நீங்கள் நினைப்பதைவிட, எதிர்பார்ப்பதை விட அதிகமான மாற்றத்தை பெற்றுக்கொள்வீர்கள்.
இதன் சரியான செய்தியை அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள். சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் அடிப்படையில் செல்லுகிற, அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதைவிட்டு தூரமாகும் நஸிபை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 27 பிப்ரவரி, 2019

குக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டதாக குக்கர் பத்தி வர்ற வாட்ஸ் அப் நியூஸ் உண்மையா?

குக்கர் பத்தி வர்ற வாட்ஸ் அப் நியூஸ் உண்மையா?

குக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டதாகப் படம் ஒன்று கடந்த சில நாள்களாக வாட்ஸ் அப்பில் பரவிக்கொண்டிருக்கிறது. அது பழைய மெசேஜா என்கிற ஆராய்ச்சியைவிட, இதுபோன்ற ஆபத்து எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது என்ற பதற்றமே நம்மைப் பற்றிக்கொண்டது. காலை நேர பரபரப்பில் பருப்பு வேகவைப்பதிலிருந்து வெஜிடபிள் பிரியாணி வரை சமைக்க குக்கர் இன்றைக்கு கட்டாயம் வேண்டும். குக்கரின் நல்ல பக்கம் வேகமான சமையல் என்றால், மறுபக்கம் நீராவி அடிப்பது, மேலே போட்ட வெயிட் வீசியெறியப்பட்டு கிச்சன் முழுக்க சாதமும் பருப்பும் சிதறுவது எனச் சில இருக்கின்றன. நம் சமையல்கட்டில் ஒன்றாகிவிட்ட குக்கரை பாதுகாப்பாக கையாள்வது எப்படி? மூத்த குடும்பத் தலைவி லஷ்மி சீனிவாசனிடமும், குக்கரால் கண்களில் காயம்பட்டுவிட்டால் உடனடியாக செய்யவேண்டிய முதலுதவி பற்றி கண் மருத்துவர் நிஷாந்திடமும் பேசினோம்.
லஷ்மி சீனிவாசன் (குடும்பத் தலைவி):
''அரிசியோ, பருப்போ எதுவாக இருந்தாலும் அதற்குத் தேவையான அளவான தண்ணீர் மட்டும் வையுங்கள். தண்ணீர் அதிகமாகும்போதுதான் பொங்கி வழிவது, கேஸ் ஸ்டவ்வை அணைத்து லீக்காவது எனப் பிரச்னைகளை ஏற்படுத்தும். தேவைக்கு அதிகமாக ஊற்றப்பட்ட தண்ணீர், விசில் வழியாகச் சீறிக்கொண்டு வெளியேறும்போது, உடனே கரண்டியால் விசிலின் தலைமேல் ஒரு தட்டு தட்டுவார்கள். விசில் அடங்கிவிட்டால் ஓகே. சில நேரம், சீறியடிக்கிற அந்தச் சூடான நீர் முகத்திலோ, கைகளிலோ பட்டுவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், அதிகமாகத் தண்ணீரைவைத்து வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.

குக்கரில் சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, வெயிட் போடவேண்டிய இடத்தில் இருக்கும் துளை மூடிக்கொண்டிருக்கிறதா என்று செக் பண்ணுங்கள். துளை மூடிக்கொண்டிருந்தால் வாயால் ஊதியோ, மெல்லியக் குச்சியால் குத்தியோ அடைப்பை நீக்கிவிட்டு பயன்படுத்துங்கள். துளை அடைப்பைக் கவனிக்காமல் வெயிட் போட்டு ஸ்டவ்வில் ஏற்றுவது ஆபத்து. விசில் மூலமாக வெளியேற வழியில்லாமல் பிரஷர், ஒரு கட்டத்தில் விசிலை தூக்கியடித்து வெடித்துச் சிதறும். சமையல்கட்டின் சீலிங் வரை சாதமும் பருப்பும் பறக்கும். பக்கத்தில் நின்றிருப்பவரின் முகம், உடலிலும் கொதிக்கும் சாதமும் பருப்பும் அபிஷேகம் செய்துவிடும் ஜாக்கிரதை.

குக்கரில் சமையல் வேலை முடித்ததும், கேஸ்கட்டை தண்ணீரில் முக்கி வைத்துவிடுங்கள், அல்லது இரவில் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். அப்போதுதான் கேஸ்கட்டில் சீக்கிரம் விரிசல் விழாது. விரிசல் விழுந்த கேஸ்கட்டை, 'லேசாகத்தான் விரிசல் விட்டிருக்கு' என்று சிலர் பயன்படுத்துவார்கள். கேஸ்கட்டில் விரிசல் இருந்தால், அதன் வழியாகச் சூடான நீராவி வெளியேறி, பக்கத்தில் வேலை செய்துகொண்டிருக்கிற நம் கைகளில் படும்.

சில பெண்கள் குக்கரில் ரொம்ப நேரம் விசில் வரவில்லையென, கத்தி அல்லது கரண்டியால் வெயிட்டை லேசாக தூக்கிவிடுவார்கள். வெயிட் டைட்டாக இருந்தாலும் சரி, பல காலமாகப் பயன்படுத்தி லூசாக இருந்தாலும் சரி, சடாரென்று கழன்று வந்துவிட்டால் விபரீதம்தான். கொதிக்கிற தண்ணீர் படு ஃபோர்ஸாக பீய்ச்சி அடிக்கும். இதுவும் சமைக்கும் பெண்களுக்கு ஆபத்தான விஷயம்தான்.

குக்கர் விஷயத்தில் பல பெண்களும் ஒரு தவற்றை செய்கிறார்கள். அதாவது, ஒரு பிராண்டு குக்கரின் வெயிட்டை அவசரத்துக்கு இன்னொரு குக்கரில் பயன்படுத்துகிறார்கள். இது செய்யவே கூடாத தவறு. சரியாக ஃபிட்டாகாமல் வெயிட் வீசியெறியப்படலாம். அப்படி நடக்கும்போது, கண்களிலோ முகத்திலோ பட்டால் நிலைமை என்னவாகும் நினைத்துப் பாருங்கள்.
குக்கரின் பிடி லூசாக இருந்தால், அதை டைட்டாக்கிவிட்டு பயன்படுத்துங்கள். சூடாக இறக்கிவைக்கும்போது, கைப்பிடி உடைந்து விழுவதைத் தவிர்க்கலாம்.

குக்கரின் ஸ்பேர் பார்ட்ஸை தனியாக வாங்குகிறீர்கள் என்றால், அந்த பிராண்டு தயாரிப்புகளையே வாங்குங்கள். கடையில் கொடுத்து ரிப்பேர் செய்யும்போதும் இதில் கவனமாக இருங்கள்.

சில குக்கர்கள் சமைக்கும்போது வித்தியாசமாகச் சத்தம் கொடுக்க ஆரம்பிக்கும். இதற்கு, 'நான் பழசாகிவிட்டேன். என்னை மாற்றிவிடு' என்று அர்த்தம். எனவே, தாமதிக்காமல் புதிய குக்கர் வாங்குங்கள்.

நிஷாந்த்
 
(கண் மருத்துவர்):
குக்கரின் நீராவி, பிரஷர் போன்றவை உங்கள் கண்களில் பட்டுவிட்டால், உடனடியாக ரன்னிங் வாட்டரில் கண்களைக் கழுவிவிட்டு, தாமதிக்காமல் கண் மருத்துவரிடம் சென்றுவிடுங்கள். நீராவி பட்டால் ஒரு சொட்டு மருந்து, பிரஷர் பட்டால் ஒரு சொட்டு மருந்து என தனித்தனியாக மருந்துகள் இருக்கிறது. கண் பாதிப்பை வைத்து சொட்டு மருந்து பரிந்துரைக்கப்படும். அதை உடனடியாக பயன்படுத்த ஆரம்பித்தால், ஒரு வாரத்தில் கண்
 
சரியாகிவிடும். அதைவிடுத்து, வீட்டிலேயே தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் என்று சுயவைத்தியம் செய்யாதீர்கள். இது, கண்களுக்குப் பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும். மற்றபடி கண்ணில் பிரஷர் குக்கரின் விசில் வந்து உட்கார்ந்து கொள்வது என்பதை நான் கேள்விபடவேயில்லைலப்படி சாத்தியமும் இல்லை என்பதுதான் என் கருத்து.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 25 பிப்ரவரி, 2019

அல்லாஹ்வின் மீதே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்!

மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ  

'அல்லாஹ்வின் மீதே உண்மை முஸ்லிம் முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்' என்று அல்-குர்ஆனில் பல இடங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.
ஆனால் "குத்பு நாயகம் (???) இடம் நமது காரியங்களை பொருப்புச் சாட்டுவோம்" என்று கூறி, நிரந்தர நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக ஆக்குவதற்காக மக்களை இணைவைப்பின் பால் அழைத்துக் கொண்டு இருக்கும் வழிகெட்ட சூஃபிகளுக்கு இந்த இறை வசனங்கள் 'என்ன கூறுகின்றது' என்று விளங்கவில்லையா? அல்லது 'விளங்காதது போன்று நடிக்கின்றார்களா?' அல்லாஹ் நேர்வழி காட்ட போதுமானவன்!
அல்லாஹ் கூறுகின்றான்:
"ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்" (3:122)
"பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்" (3:159)
"ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்" (4:81)
"(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்" (3:160)
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ ۗ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
நபியவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வை சார்ந்து அவனிடம் உங்கள் கருமங்களை பொருப்புச் சாட்டுவீர்களேயானால், பறவைகளுக்கு உணவளிக்கப்படுவது போல் நீங்களும் உணவளிக்கப்படுவீர்கள், அப்பறவைகள் கலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிற்றை நிறைத்துக் கொண்டு திரும்புகின்றது" ஆதாரம் திர்மிதி 2344, இப்னு மாஜா 4164.
இமாம் அல்பானி 'ஸஹீஹ்' என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.
மரணிக்காத எல்லாம் வல்ல 'அல்லாஹ்விடமே நீங்கள் பொறுப்புச் சாட்டுங்கள்' என்று கட்டளை இடப்பட்டிருக்க,
"இல்லை! இல்லை! நாங்கள் அப்துல் காதிர் முஹையித்தீன் என்ற மரணித்தவரிடமே நாம் பொறுப்புக்களை சாட்டுவோம்!"என்பது எவ்வளவு அறிவீனம்? என்று சிந்தித்துப் பாருங்கள்!
"எனவே மரிக்கமாட்டானே! அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக! இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக! இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்." (25:58)
"இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக!அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்." (26:217,218)
எனவே நமது எல்லாக் காரியங்களையும் எல்லாம வல்ல அல்லாஹ்விடம் மாத்திரம் பொறுப்புச் சாட்டி நமது ஈமானை பாதுகாத்துக் கொள்வோம்



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 23 பிப்ரவரி, 2019

ஆதரவற்ற அநாதைகளை அரவணைப்போம்!

மவ்லவி M.I. அன்வர் (ஸலபி)  

-எம்.ஐ அன்வர் (ஸலபி)-
சமூக கட்டமைப்பில் குடும்பம் என்ற அலகு நற்பிரஜைகளை உருவாக்கும் முக்கிய நிறுவனமாக காணப்படுகிறது. கணவன் மனைவி எனும் இரு அச்சாணிகளே குடும்பம் என்ற சக்கரம் தொழிற்பட காரணமாக உள்ளனர். தந்தை , தாய் , பிள்ளைகள் எனும் தனிநபர்கள் பலரின் கூட்டு வாழ்க்கை குடும்பம் என்ற அலகு தோற்றம் பெற வழிகோலுகிறது.
அந்தவகையில் ஒரு குடும்பத்தின் சீரான இயக்கத்திற்கு தந்தையின் வகிபாகம் முக்கியமானதாகும். குடும்பத்தின் பொருளாதார கல்வி மற்றும் மருத்துவ தேவைகளை ஈடுசெய்யும் பொறுப்பு தாயை விட தந்தையையே அதிகளவில் சேரும். எனவேதான் அந்தக் குடும்பம் தந்தையை இழக்கும் போது தாய் விதவை என்றும் பிள்ளைகள் அநாதைகள் என்றும் சமூகத்தால் நோக்கப்படும் நிலை தவிர்க்கமுடியாமல் போய்விடுகிறது.
உலகில் இன்று 14.4 கோடி அநாதைகள் உள்ளனர். இவர்களுல் ஆசியாக் கண்டத்தில் மாத்திரம் 8.76 கோடி அநாதைகள் வாழ்கின்றனர். அதே நேரம் ஒவ்வொரு 14 ஆவது நொடியிலும் புதிதாக ஒரு அநாதைக் குழைந்தை உருவாகுவதாகவும் 2 நிமிடத்திற்கு ஒரு அநாதை வீதம் பராமரிப்பின்றியும் போதிய ஊட்டச் சத்தின்றியும் இறப்பதாகவும் ஐ.நா சபையின் கீழ் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு பிரிவான யுனிசெப் அறிவித்துள்ளது. ஐந்து வயதுக்கும் குறைவான 50 லட்சம் அநாதைக் குழந்தைகள் இவ்வகையில் இறப்பதாகவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூகத்தில் அன்பும், பாசமும், பொருளாதார உதவிகளும் இல்லாமல் தவிக்கும் நபர்களில் அநாதைக் குழந்தைகள் முக்கிய இடம் பிடிக்கிறார்கள். தமது தந்தையை அல்லது தாயையும் தந்தையையும் இழந்து தவிக்கும் குழந்தைகள் கவனிப்பாரற்று பெரும் துயரத்தில் வாழ்கிறார்கள். இவ்வாறு ஆதரவற்ற நிலையில் வாழும் அநாதைக் குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பும் கடமையும் முஸ்லிம் சமுகத்துக்குண்டு என்பதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாத்தின் பார்வையில் பருவ வயதை அடைய முன் தந்தையை இழந்தவர் அநாதை எனப்படுவார். இவர்கள் வாழ்க்கையில் முகவரியை இழந்தவர்களை போன்றவர்கள் எனவேதான் இவர்களை கண்காணித்து அரவனைக்கும் படி இஸ்லாம் அழைக்கின்றது. இவர்களை பராமரிப்பதை இஸ்லாம் ஓர் சமூக பொறுப்பாக கருதுகிறது.
அநாதைகள் கவனிப்பாரற்று விடப்பட்டால் எதிர்காலத்தில் கொலை , கொள்ளை கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாக வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இதனால் சமூகமே ஏன் ஒட்டுமொத்த தேசமே பல அழிவுகளைச் சந்திக்க நேரிடும்.
முறையான கண்காணிப்பு , ஆரோக்கியமான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தான்தோன்றித்தனமாக அவர்கள் விடப்படும் போது இது போன்ற நிலைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது போய்விடும். எனவே இவ்வாறான குழந்தைகள் தவறான வழிக்குச் சென்று விடாமல் அவர்களை நற் பிரஜைகளாக வளர்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது
நீங்கள் அநாதைகளை சீர்படுத்துவது மிகவும் நன்றே. நீங்கள் அநாதைகளோடு கலந்து வசிக்க நேரிட்டால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களே'. (2:220)
அகிலத்திற்கே அருட்கொடையாய் உதித்த நபி (ஸல்) அவர்கள் உலகில் பிறக்கும்போதே தந்தையை இழந்த அநாதையாய் தான் வந்து உதித்தார்கள். ஆறு வயதில் அன்னையையும் இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்தார்கள். அவர்களின் துன்பங்கள் மேலோங்கிய கால கட்டத்தில் அமைதி இழந்து நின்ற அண்ணலாரை அல்லாஹூத்தஆலா ஆதரவான வார்த்தைகளால் அமைதிப்படுத்தும்போது அவர்களின் அநாதை நிலையை எடுத்துச் சொல்லி அவர்களின் மனதை தேற்றுகிறான்.
'நபியே! உங்களை இறைவன் கை விடவும் இல்லை, உங்களை வெறுக்கவும் இல்லை. உங்களை அநாதையாகக் கண்டு அவன் உங்களுக்கு தங்கும் இடம் அளித்து ஆதரிக்கவில்லையா?. எனவே நீங்கள் அநாதைகளைக் கண்டால் கடுகடுக்காதீர்கள், (93:3,6)
இஸ்லாத்துக்கு முன்னர் அநாதைகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கென உரிமைகள் கிடையாது அவர்களது சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இவ்வாறு இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு அநாதையாக பிறக்கின்றார்கள். அல்லாஹ் அவர்கள் மூலமாகவே அநாதைகளுக்குரிய உரிமைகள் கடமைகள் என்ன என்பதை முழு மனித குலத்துக்கும் தெளிவுபடுத்துகிறான்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நபித் தோழர்கள், குறிப்பாக பெண்கள் கூட அநாதைகளை வளர்த்து வந்துள்ளனர். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு அநாதைப் பெண்ணை வளர்த்து வந்துள்ளார்கள்.
எனவே ஒருவர் அநாதை எனும் நிலையை அடைவது ஒரு சமூகத்தின் பார்வையில் குறையல்ல அது அல்லாஹ்வின் ஏறபாடு. மாற்றமாக அவர்கள் சமூகத்தால் பராமரிக்கப்படமாமையே ஒரு குறையாகும். அவ்வாறே அநாதைகள் என்போர் தாழ்த்தப்பட்டவர்களும் அல்ல அந்தஸ்தால் அறிவால் குறைந்தவர்களும் அல்ல. மாறாக அவர்களை பராமரிப்பதன் ஊடாக எதிர்காலத்தில் சமூகம் பல நன்மைகளை அவர்கள் மூலமாக அடையலாம்.
அதனால் தான் அநாதைகள் ஆதரிக்கப் படவேண்டும். சமூகத்தில் அவர்களுக்கும் சம அந்தஷ்து கிடைக்கவேண்டும் என்ற உற்சாகமூட்டுகையில் அவர்களை ஆதரிப்பவர்களுக்கு என்ன பயன் கிட்டும் என்று சொல்ல முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள்
'அநாதைகளை ஆதரிப்பவர்கள் நாளை சொர்க்கத்தில் என்னோடு இருவிரல்கள் இணைந்தது போல மிக நெருக்கமாக இருப்பார்கள், என்று கூறிவிட்டு தனது இரு விரல்களையும் இணைத்து தூக்கி காண்பித்தார்கள்' (புஹாரி)
திருமறைக் குர்ஆன், அநாதைகளுக்கு செலவழிப்பதை மிகத் தெளிவாக ஊக்கப்படுத்துகிறது.
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்" எனக் கூறுவீராக! (2:215)
அநாதை பிள்ளைகளை வளர்த்து வரும் போது அவர்களுக்கு சொத்துக்கள் இருந்தால், அவர்கள் விபரமான பருவத்தை அடைந்த பின் அந்த சொத்துக்களை சரியாக கொடுத்து விட வேண்டும். தட்டிக் கேட்க யாருமில்லை என்பதற்காக அவர்களுடைய சொத்துக்களை அநியாயமாக எடுத்து விடக் கூடாது என்பதில் இஸ்லாம் கண்டிப்பாக உள்ளது.
மேலும் "அநாதைகளின் சொத்துக்களை அழகிய முறையிலே தவிர நீங்கள் நெருங்காதீர்கள். ( 17 – 34 )
மேலும் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும் என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி)
" எவர் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுகிறாரோ அவர் வயிறுகளில் நெருப்பைத்தான் சாப்பிடுகிறார். மேலும் அவர் நரகத்தில் நுழைவிக்கப் படுவார். (04- 10)
மேலும்
நீங்கள் அநாதைகளின் சொத்துக்களை ( பருவ வயதை அடைந்த பின் குறைவின்றி ) கொடுத்து விடுங்கள், ( அதிலுள்ள ) நல்லவற்றிக்கு பகரமாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். ( 04 -02 )
மேலும் அநாதைகளை பராமரிப்போர் ஏழைகளாக இருந்தால் நியாயமான முறையில் தேவையான அளவு அநாதைகளின் பொருளாதாரத்திலிருந்து எடுத்துக் கொள்ள அல்லாஹ் அனுமதிக்கிறான். அதை பின்வரும் வசனம் தெளிவுப் படுத்துகிறது
… "அநாதையை பராமறிப்பவர் செல்வந்தராக இருந்தால் ( அநாதையின் சொத்துகளை சாப்பிடும் விடயத்தில் ) தவிர்த்துக் கொள்ளுங்கள், ஏழைகளாக இருந்தால் நியாயமான அளவு புசிக்கலாம். அநாதைகளின் பொருட்கள் அவர்களிடம் ஒப்படைக்கும் போது அதற்கான சாட்சிகளை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்.கணக்கெடுப்பதில் அல்லாஹ் போதுமானவன். ( 04 –06 )
அநாதைகளை பராமரிப்பதற்காக பராமரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வாறான ஏற்பாடுகள் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழல் கிடைக்கப்பெறுகிறது. இந்த அநாதை பிள்ளைகளுக்காக தாராள மனம் படைத்த செல்வந்தர்கள் தனது செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். இது வரவேற்கக் கூடிய விடயம் தான். இந்த ஏற்பாடு முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்லாமல் பிற மத சமூகங்களிலும் காணப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தில் அநாதை பராமரிப்பு நிலையங்கள் அதிகளவில் இயங்கி வருவது எமது அவதானிப்புக்குறியதாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் நாட்டின் பல பாகங்களிலும் அநாதைகளுக்கான பராமரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு அவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள் இந்தப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் மாக்கொலையில் 1962 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முஸ்லிம் அநாதை நிலையம் எமது நாட்டில் அமையப்பெற்றிருக்கும் அநாதைகளை பரிமாரிப்பதற்கான பழமையான ஒரு நிறுவனமாகும். இங்கு மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலைக் கல்வி , சன்மார்க்க கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை செய்து கொடுக்கப்படுகின்றன. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் க.பொ. சாதாரண மற்றும் க.பொ. உயர்தரம் உள்ளிட்ட பரீட்சைகளுக்கு தயார்படுத்தப்படுவதோடு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கலைகளும் அவர்களுக்கு போதிக்கப்படுகின்றன. தவிர பேருவளை தர்கா நகரத்தில் இஷாஅதுல் இஸ்லாம் என்ற பெயரில் ஓர் அநாதை காப்பகமும் காத்தான்குடியில் முஸ்லிம் அநாதைக் காப்பகம் என்ற பெயரில் ஒரு அநாதை பராமரிப்பு நிலையமும் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அது தவிர தலை நகர் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் அநாதை சிறுவர்களை பரிமாரிப்பதற்கான நிலையங்கள் இயங்கி வருவதும் நோக்கத்தக்கது. அந்தவகையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சமய , சமூக பணிகளின் முன்னோடி நிறுவனமான கு/பறகஹதெனியா கிராமத்தை வாசஸ்தலமாக கொண்டு இயங்கும் அகில இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் ஸூன்னத்துல் முஹம்மதிய்யாவின் அணுசரணையில் நாட்டின் கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடி மற்றும் சம்மாந்துறை ஆகிய நகரங்களில் இரு வெவ்வேறு அநாதை பராமரிப்பு நிலையங்கள் இயங்கிவருகின்றன. இங்கு மாணவர்களுக்கு ஷரீஆ மற்றும் உலகியல் கல்வி , மருத்துவம் , உணவு , தங்குமிடம் போன்ற அனைத்து வசதிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதே போன்று கல்எளியவில் அமையப்பெற்றிருக்கும் முஸ்லிம் மகளிர் அரபுக்கல்லூரியானது இலங்கை இஸ்லாமிய கலைக்கூட வரலாற்றில் மகளிருக்காக பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட மூத்த கல்வி நிலையமாகும். குறித்த கல்வி வளாகத்தில் அநாதை சிறுமிகளை பராமரிப்பதற்கான ஒரு பிரத்தியேக பகுதி இயங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. இங்கு தாய், தந்தையரை இழந்த நாட்டின் நாலா பகுதிதியையும் சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கு ஆன்மீக சூழலில் இலவசமாக கல்வி வழங்கப்பட்டுவருகிறது.
தவிர அநாதை சிறுவர்களின் குடும்பங்களின் பொருளாதார தேவைகளை ஈடுசெய்வதற்காக நிறுவனங்களினால் மாதாந்தம் நிதிக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. குறித்த நிதி உதவிகளினால் அவர்களின் அன்றாட உணவு, உடை கல்வி மற்றும் மருத்துவ தேவைகள் ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றப்படுகின்றன.
தவிர இலங்கையில் இயங்கும் மேற்போந்த அநாதை பராமரிப்பு நிலையங்களை பொருத்தமட்டில் தமது நிதி, நிர்வாக செலவீனங்களை பூர்த்தி செய்வதற்கு பாரியளவிலான பணத் தேவைகள் அவசியமானதாக காணப்படுகிறது. பெரும்பாலும் இவ்வாறான நிறுவனங்களின் சேவைகள் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் உதவிகளிலேயே தங்கியிருக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக எமது முஸ்லிம் சமூகத்தில் இப்படியான பணிகளுக்கு செலவு செய்யும் அளவுக்கு செல்லவநிலையில உள்ள பலர் இருந்த போதும் இது குறித்து சிந்திக்கும் நிலை இல்லாமலிருப்பது கவலைக்குறியதாகும். இஸ்லாம் அதிகளவில் ஊக்கப்படுத்தும் அநாதைப் பராமரிப்பு விடயத்தில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள செல்வந்தர்கள் , பரோபகாரிகள் அக்கறை செலுத்தவேண்டிய தேவை உள்ளது. இது குறித்து சிந்திப்போமாக!



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 21 பிப்ரவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 – 50)

மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ  

41) சூரது புஸ்ஸிலத் தெளிவு
அத்தியாயம் 41
வசனங்கள் 54
அரபு மொழியில் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடம் இருந்து அனுப்பபட்ட இந்த அல்குர்ஆனில் அறிவுடையோருக்கு பல்வேறு படிப்பினைகள் இருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான்.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது.
அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.(41:2,3)
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன்(யாவற்றையும்) செவியேற்பவன் நன்கறிபவன்.(41:36)
42) சூரதுஸ் ஷுரா கலந்தாலோசனை
அத்தியாயம் 42
வசனங்கள் 53
அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தவர்கள் அவனிலே முழுமையாக சார்ந்திருப்பதுடன் பெரும் பாவங்களை, மானக்கேடானவற்றையும் விட்டும் தம்மை காத்துக்கொள்வர், மேலும் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று, அவனை தொழுது, தமக்குள்ளே கலந்தாலோசித்துக் கொள்வர் என்கின்றான்.
அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.
இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக்கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். (42:37,38)
43) சூரதுஸ் ஸுக்ருஃப் அலங்காரம்
அத்தியாயம் 43
வசனங்கள் 89
உலக மாயைகளை பற்றி இந்த அத்தியாயத்தின் 32ம் வசனம் தொடக்கம் சொல்லிக் காட்டுகின்றான். நிராகரிப்போருக்கு இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்களையும்சுட்டிக்காட்டுகின்றான்.
தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால்இ இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம். (43:35)
பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள். (43:67)
44) சூரதுத் துஹான் புகை
அத்தியாயம் 44
வசனங்கள் 59
நாளை மறுமையின் அமளிதுமளிகளைப் பற்றி விபரக்கும் இந்த அத்தியாயத்தின் 9 வது வசனம் தொடக்கம் மறுமை நம்பிக்கையில் சந்தேகப்பட்டவர்களாக அவர்கள்விளையாடிக் கொண்டிருப்பர் என எல்லாம் வல்ல அல்லாஹ் எடுத்தியம்புகின்றான்.
ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; 'இது நோவினை செய்யும் வேதனையாகும்.'
'எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்' (எனக் கூறுவர்). (44:10-12)
45) சூரதுல் ஜாஸியா முழந்தாள் இடல்
அத்தியாயம் 45
வசனஙகள் 37
நாளை மறுமையில் நிகழும் ஒரு மோசமான நிலையை அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் 28ம் வசனத்தில் விபரிக்கின்றான்.
(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள்(உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள். (45:28)
46) சூரதுல் அஹ்காப் மணல் குன்றுகள்
அத்தியாயம் 46
வசனங்கள் 35
ஆத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பட்ட ஹுத் (அலை) அவர்கள் மணல் குன்றுகளில் இருந்து அந்த சமுதாயத்தை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து நேர்வழியின் பால் அழைத்ததைஅல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 21ம் வசனத்தில் சொல்லிக் காட்டுகின்றான்.
மேலும் 'ஆது' (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் – (அவர்)தம் சமூகத்தாரை, 'அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான்பயப்படுகிறேன்' என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக. (46:21)
47) சூரது முஹம்மத்
அத்தியாயம் 47
வசனங்கள் 38
நபியவர்களை பற்றி 2வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது இது அவர்களுடைய இறைவினிடமிருந்து (வந்து)ள்ளஉண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடை நிலையையும் சீராக்குகின்றான். (47:2)
மேலும் இந்த நபியை பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்பதை இந்த அத்தியாயத்தின் இருதியில் குறிப்பிடுகின்றான்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (47:33)
48) சூரதுல் பத்ஹ் வெற்றி
அத்தியாயம் 48
வசனங்கள் 29
நபியவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் நீண்ட நாள் ஆசையாக இருந்த அல்லாஹ்வின் முதலாவது ஆலயம் அமைந்திருக்கும் மக்கா வெற்றி தொடர்பான நன்மாறாயத்தைஅல்லாஹ் இந்த அத்தியாயத்தின் முதலாம் வசனத்தில் எடுத்தியம்புகின்றான்.
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்.
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில்நடத்துவதற்காகவும். (48:1,2)
49) சூரதுல் ஹுஜ்ராத் அறைகள்
அத்தியாயம் 49
வசனங்கள் 18
ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய பல்வேறு பண்புகள் தொடர்பான செய்திகளை அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நபியவர்களின்அறைகளுக்கு பின்னால் இருந்து சப்தமிட்டு அழைக்கின்ற நடைமுறையை அல்லாஹ் கண்டிக்கின்றான். மேலும் நபியவர்களின் சாப்தத்தை விட உயர்ந்த சப்தத்தில் பேசுவதற்கும்தடை விதிக்கின்றான்.மற்றவர்களை பரிகாசம் செய்தல், குறை கூறுதல், பட்டப் பெயர் கொண்டு அழைத்தல், தவறான எண்ணம் கொள்ளுதல், குறைகளை துருவித் துருவிவிசாரித்தல், புறம் பேசுதல் என பல்வேறு பாவங்களை இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டு அவற்றை விட்டும் ஒரு முஸ்லிம் தவிர்திருக்க வேண்டும் என அல்லாஹ்வழிகாட்டுகின்றான்.
(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே! (49:4)
50) சூரது காப்ஃ
அத்தியாயம் 50
வசனங்கள் 45
காப்ஃ என்ற அரபு எழுத்துடன் அல்குர்ஆன் மீது சத்தியம் செய்து இந்த அத்தியாயத்தை ஆரம்பித்து இதில் உலக வாழ்க்கை, மரணம், மறுமை என மனித வாழ்கையின் எல்லாபாகங்களையும் சுட்டிக்காட்டுகின்றான். மனிதனது செயல்கள் பதியப்படுவது தொடர்பாகவும் குறிப்பிடுகின்றான்.
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (50: 17,18)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts