லேபிள்கள்

ஞாயிறு, 30 மார்ச், 2014

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களினது சிறப்புக்கள்..

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களினது சிறப்புக்கள்..

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி 2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 
சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1-
ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் புகாரி முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் புகாரிமுஸ்லிம்
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்-முஸ்லிம்
குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.
அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
ஆதாரம் புகாரி முஸ்லிம்
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்
இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் புகாரி
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்
6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் புகாரி
உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்
~
ஆடு. மாடு ஒட்டகம் (புகாரி)
~ ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் – (திர்மிதி)
~ மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம் – (திர்மிதி)
~ உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
நேரம்
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் புகாரி, முஸ்லிம்
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை
~
ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)
~
ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)
~
அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்:- புகாரி, முஸ்லிம் உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
ஆதாரம்:- முஸ்லிம் 
குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 29 மார்ச், 2014

குழந்தைகளின் வயிற்று வலிகள்

குழந்தைகளின் வயிற்று வலிகள்

மாதத்தில் ஒரு முறையாவது என்னைப் பார்க்காமல் அவன் இருந்திருக்கமாட்டான். வயிற்றைப் பொத்திக் கொண்டு அவனும், பதறியடித்துக் கொண்டு தாயும் கூட வருவார்கள். பார்க்க எனக்குச் சங்கடமாக இருக்கும்.
ஆனால் அவளோ?

"
டொக்டரட்டை மருந்தெடுத்துக் கொண்டுபோய் ஒருக்கால் குடுத்தால்போதும் பிள்ளைக்கு சுகமாகிவிடும்" என எனக்குப் பாராட்டுத் தருவாள்.

பிரச்சனை பாரதூரமில்லை. இதனைத் தாய்க்கு விளக்கியிருந்தபோதும் அவளால் அவனின் வலியைப் பார்த்துக் கொண்டிருக்க முடிவதில்லை.

சின்னப் பையன் 7-8 வயதுதான் இருக்கும். அடிக்கடி வருவது வயிற்று வலிக்காகத்தான். வாயைக் கட்டி இருக்கமாட்டான். வாயைக்கட்டும் வயதில்லைத்தான். இருந்தபோதும் கண்டகண்ட நொறுக்குத் தீனிகளை கண்ட நிண்ட இடங்களில் வாங்கிச் சாப்பிடுவான். வலி தேடி வந்துவிடும்.
அவள் மாத்திரமல்ல வேறு பல பெற்றோரும் வயிற்றுவலிக் குழந்தைகளுடன் வருவதுண்டு. ஏனெனில் குழந்தைகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சனைதான். பெரும்பாலும் உணவு ஒத்துக் கொள்ளாமையாக இருக்கலாம். அல்லது கிருமி தொற்றியிருக்கலாம்.

அடிக்கடி தோன்றும் பிரச்சனை என்றாலும் எல்லாமே ஆபத்தற்றவை என்றும் சொல்ல முடியாது. அப்பன்டிசைடிஸ், உணவுக் கால்வாய் கொழுவுதல் போன்ற சிக்கலான பிரச்சனைகளும் குழந்தைகளில் வருவதுண்டு.
காரணங்கள் என்ன?
மிக முக்கிய காரணம் கிருமித் தொற்றுத்தான். உணவு அல்லது நீராகாரம் மூலம் கிருமி தொற்றியிருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். பெரும்பாலும் வாந்தி, வயிற்றோட்டம் வலியுடன் கூடவே ஏற்படும். 'உணவு நஞ்சாதல்' என்ற கலங்கடிக்கும் தலைப்புடன் பத்திரிகைகளில் வெளிவருபவை இவைதான். பெரும்பாலான வைரஸ் தொற்றுகள் தானாகவே குணமாகிவிடும். ஆனால் சில் பக்றீரியா தொற்றுகளுக்கு அன்ரிபயோடிக் கொடுக்க நேரிடும்.

சில வகை உணவுகள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாலும் வயிற்றுவலி வரலாம். ஒவ்வாமையானது என்றால் தோலில் அரிப்பு, தடிப்பு என்பதாகத்தான் இருக்க வேண்டுமின்றில்லை. உணவுக்கால்வாயின் உட்பகுதியானது ஒவ்வாமையால் தடிக்கும்போது வலி ஏற்படும். சிலவேளை வாந்தியும் கூடவரும்.

எளிதில் செமிபாடடையாத உணவுகளும், அதிகளவு வாயுக்களை வெளியேற்றும் உணவுகளும் சில குழந்தைகளுக்கு வயிறு பொருமுதல், வயிற்று ஊதல், வயிறு அழுவது போன்ற கடாமுடாச் சத்தம்,  ஆகிய அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். சரியாக இதை விளக்க முடியாத குழந்தைகள் இதையும் வலி அல்லது நோ என்றே சொல்லுவார்கள்.

சில பிள்ளைகள் தேவையற்ற பொருட்களை வாயில் போட்டு விழுங்கிவிடுவதுண்டு. சோப், கல்லு, பட்டன், விளையாட்டுப் பொருட்களின் பாகங்கள் என எதையாவது விழுங்கிவிடுவார்கள். இவை பெரும்பாலும் வலியை ஏற்படுத்தாது. சற்றுப் பொறுமையோடு இருந்தால் மறுநாள் மலத்துடன் வெளியேறிவிடும். ஊசி, ஆணி போன்ற கூரான பொருட்கள் மற்றும் பட்டரி போன்றவை பிரச்சனையைக் கொடுக்கலாம்.

ஏற்கனவே குறிப்பிட்ட அப்பன்டிசைடிஸ், உணவுக் கால்வாய் கொழுவுதல் போன்றவை தீவிரசிகிச்சை தேவைப்படுபவை. சத்திரசிகிச்சை தாமதமின்றிச் செய்ய நேரிடும்.
குடும்பத்தில் மைக்கிரேன் தலைவலி உள்ளதாயின் குழந்தையின் வயிற்றுவலி (Abdominal Migraine) அதோடு சம்பந்தமானதா என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். பொதுவாக இது சற்று வளர்ந்த குழந்தைகளில் காணப்படுகிறது. வயிற்றுவலியுடன் ஓங்காளம், சத்தி, பசியின்மை, இவற்றுடன் கொட்டாவி விடுதல், தூக்கத்தன்மை போன்ற அறிகுறிகளும் தென்படும்
மருத்துவரிடம் செல்லு முன்னர் பெற்றோர் அவதானிக்க வேண்டியவை

எல்லாக் குழந்தைகளும் ஒரே விதமாகத் தமது பிர்ச்சனையை வெளிப்படுத்துவதில்லை. மிகச் சிறிய குழந்தைகளுக்கு வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது. அழுகை மட்டுமே அறிகுறியாக இருக்கும்.

சற்று வளர்ந்த குழந்தைகள் தமக்கு வலிக்கிறதெனச் சொல்லக் கூடும். கடுமையான வலியென்றால் மாத்திரம் சொல்லும் குழந்தைகளும் இருப்பார்கள். சற்று வலி என்றாலே ஆரவாரப்படுத்தும் குழந்தைகளும் இருப்பார்கள். உம்மொன்று முகத்தை வைத்துக் கொண்டு அடங்கிக் கிடப்பதை வைத்துத்தான் சிலரில் உணர முடியும். சுருண்டு படுத்துக்கிடப்பதை வைத்து வலியைக் கண்டுபிடிக்கவும் நேரலாம்.

எவ்வளவு நேரம்?

சாதாரண வலிகள் ஒரு சில மணிநேரத்தில் குணமாகிவிடும். அல்லது படிப்படியாக 24 மணிநேரத்திற்குள் மறைந்துவிடும். அவ்வாறின்றி வலி நீடித்தாலும் வர வரத் தீவிரமானாலும் மருத்துவரைக் காண்பது அவசியம்.
குழந்தையின் உடல்நிலைத் தோற்றம்

வலி என்று சொல்லிவிட்டு சற்று நேரம் விளையாடி ஓரளவு உற்சாகமாக இருந்தால் அது தீவிர நோயாக இருக்காது. மாறாக மிகவும் வருத்தமாகவும் களைப்பாகவும் சோர்ந்தும் இருந்தால் அது அக்கறை எடுக்க வேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை.

வலி எங்கே?

வயிற்றில் எங்கு வலிக்கிறது என்பதை அவதானியுங்கள். பொதுவாக வயிறு முழுக்க வலிக்கிறதா? அடி வயிற்றில் வலிக்கிறதா? அல்லது ஒரு பக்கம் மட்டும் வலிக்கிறதா என்பதை அவதானியுங்கள். வலது பக்க அடிவயிற்றில் குத்துவது அப்பன்டிசைடிஸ் ஆக இருப்பதற்கான சாத்தியம் அதிகம்.

வயிற்றோட்டம்

வயிற்று வலியுடன் வயிற்றோட்டமும் இருந்தால் அது பெரும்பாலும் வைரஸ் கிருமியால் ஏற்பட்டதாக இருக்கும். தானாகவே குணமாகிவிடும். ஆயினும் மலமானது சளி போல அல்லது இரத்தம் கலந்துபோனால் அது பக்றீரியாத் தொற்றாக இருக்கலாம்.

வாந்தி

இதுவும் ஒரு முக்கிய அறிகுறிகுறி. பொதுவாக ஒரு இரு முறை வாந்தி எடுத்த பின்னர் வலி குறைந்தால் அது உணவு செமிபாட்டின்மையாக இருக்கலாம். தானே குணமாகிவிடும். ஆயினும் வாந்தி தொடர்ந்து கொண்டிருந்தால் மருத்துவரைக் காண வேண்டும். நீரிழப்பு நிலை ஏற்பட்டுவிடலாம் என்பதுடன் வயிற்று வலிக்கு வேறு ஏதாவது தீவிர காரணம் இருக்கலாம். அத்துடன் வாந்தியின் நிறத்தையும் அவதானிக்க வேண்டும். மஞ்சளா, பச்சையா கோப்பி கலரா அல்லது இரத்தம் கலந்திருக்கிறதா என்பதையும் அவதானிக்க வேண்டும்.

காய்ச்சல் இருக்கிறதா
காய்ச்சல் இருக்கிறதா என்பதை அவதானிக் வேண்டும், காய்ச்சல் இல்லாமலும் பல ஆபத்தான வயிற்றுக் குத்துகள் வருவதுண்டு.

சிறுநீர்

சிறுநீர் போகும்போது எரிகிறதா, அத்துடன் அதில் ஏதாவது நிற மாற்றம் இருக்கிறதா என்பதும் அவதானிக்க வேண்டியதாகும். சுலபமாக வெளியேறுகிறதா அல்லது முக்கி வெளியேறுகிறதா என்பதும் கவனிக்க வேண்டியதாகும்.

ஆண் பிள்ளைகளில்

அடி வயிற்றிற்கு சற்றுக் கீழே விதைப்பையிற்கு மேலே வலியிருந்தால் உடனே கவனிக்க வேண்டும். விதை முறுகுதல் (Testicular torsion) என்பது விதையானது தனக்குள் தானே முறுகுவதாகும்.

உடனடியாகக் கவினிக்காது விட்டால் அதற்கான இரத்த ஓட்டம் தடைப்பட்டு அந்த விதை செயலிழந்து போகும் அபாயம் உண்டு. பையன்கள் வெட்கப்பட்டு வலிப்பது எங்கே என்பதை வெளிப்படுத்தாமல் இருக்கக் கூடும். பெற்றோர்கள் அக்கறையோடு விசாரிக்க வேண்டியதாகும்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

தேற்றுதலும் ஆறுதலும்

பெற்றோர்களின் தேறுதல் வார்த்தைகளிலும் சற்று ஆறுதலும் எடுக்கவும் பெரும்பாலான வலிகள் தானாகவே மறைந்து விடும். ஆறுதலாகப் படுத்திருப்பதாலும் அல்லது குப்புறப்படுத்திருப்பதாலும் வலி குறையலாம். ஆயினும் கட்டாயப்படுத்த வேண்டாம். எந்த நிலையில் படுத்திருக்க வலி தணிகிறதோ அதையே குழந்தைகள் தாமாகவே தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

உணவு

வலியுடன் வாந்தியும் இருந்தால் குழந்தையால் உணவோ நீராகாரமோ எடுப்பது சிரமமாக இருக்கும். உணவு இல்லாமல் ஓரளவு நேரம் தாக்குப் பிடிக்கலாம். ஆனால் நீராகாரம் இல்லையேல் உடலில் நீரிழப்பு நிலை ஏற்பட்டுவிடும். எனவே சிறிது சிறதாகவேனும் ஏதாவது நீராகாரம் கொடுக்க வேண்டும். பசியிருந்து உண்ண விருப்பமும் இருந்தால் உண்பதில் தவறில்லை.

பால், மென்பானங்களை வலியிருக்கும்போது தவிர்ப்பது நல்லது. பால் சமிபாடடைய நேரமெடுப்பதாலும், மென்பானங்களில் காஸ் அதிகம் இருப்பதும் காரணம்.
மருந்துகள்

வலியைத் தணிக்க பரசிற்றமோல் உதவும் அதைத் தவிர வேறு மருந்துகள் கொடுப்பதைத் தவிருங்கள். முக்கியமாக அன்ரிபயோரிக் மருந்துகள், வலிநிவாரணிகள் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனை இன்றிக் கொடுக்க வேண்டாம்.

என்ன நோய் என்பதை நிர்ணயித்த பின்னரே மருத்துவர் சரியான மருந்தைத் தருவார்.

பரிசோதனைகள்

வயிற்று வலியும் ஒரு முறை வாந்தியும் எடுத்த மாணவனை பாடசாலையிலிருந்து நேரடியாக அழைத்து வந்திருந்தார் அவனது தந்தையார். கன்ரீனில் ஏதோ சாப்பிட்டிருந்தான்.

"
எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பமா எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பமா" என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருந்தார். உணவுப் பிரச்சனை எனச் சொல்லியும் கேட்வில்லை.

"
இப்ப மருந்து தாறன். பிள்ளையின் வேதனை தணிய நாளைக்கு எடுங்கோ. இரத்தம் சிறுநீரும் சோதியுங்கோ" என பரிசோதிப்பதற்கான சிட்டைகளையும் கொடுத்துவிட்டேன்.

மறுநாள் அவரோ பிள்ளையோ வரவில்லை. பின்னொரு நாளில் சந்தித்தபோது வலி சுகம் என்பதால் அந்தப் பரிசோதனைகளைச் செய்யவில்லை என்றார். மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். ஆம் அதைத்தானே நான் எதிர்பார்த்தேன்.

சிறுநீர்ப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, அல்ரா சவுண்ட் ஸ்கான்,CT Scan எனப் பல பரிசோதனைகள் குழந்தைகளின் வயிற்று வலிக்கான காரணத்தை நிர்ணயிக்கத் தேவைப்படலாம். ஆனால் அவை அவசியமானால் மட்டுமே செய்ய வேண்டியவை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்


--
*more articles click*
www.sahabudeen.com


வெள்ளி, 28 மார்ச், 2014

கம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்

கம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்


உங்கள் கம்ப்யூட்டரைத் திறக்கும் திறவு கோலாக அல்லது மந்திரக் கோலாக, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம். பிரிடேட்டர் (Predator) என அழைக்கப்படும் புரோகிராம் இதற்கு உதவுகிறது. இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதுவரை நீங்கள் பாஸ்வேர்ட் கொடுப்பதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக, பூட்டியும் திறந்தும் வைத்திடும் பணியை மேற்கொள்பவராக இருந்தால், இந்த வசதியையும் பயன்படுத்திப் பார்க்கலாம். சினிமாவில் வரும் ரகசிய போலீஸ் மாதிரி, யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம்.
இதனை, யு.எஸ்.பி. போர்ட்டில் நுழைத்தால் மட்டுமே, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம். எடுத்துவிட்டால் பயன்படுத்த இயலாது.


இந்த யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் இல்லாமல், யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முயற்சித்தால், அனுமதி இல்லை (Access Denied) என்ற செய்தியைப் பெறுவார்கள். உங்கள் ப்ளாஷ் ட்ரைவினை, கம்ப்யூட்டரின் திறவு கோலாக மாற்ற, கீழ்க் குறித்துள்ள செயல்முறைகளின்படி செயல்படவும்.


1. முதலில்http://download.cnet.com/PredatorFree/30002144_410915340.htmlஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து, Predator என்ற புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் அதனை இன்ஸ்டால் செய்திடவும்.
2.
பிரிடேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கியவுடன், ப்ளாஷ் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கவும். இதனால், உங்கள் கம்ப்யூட்டரின் ட்ரைவில் உள்ள எதுவும் மாற்றி அமைக்கப்படமாட்டாது. எனவே பயப்படாமல், இதனைப் பயன்படுத்தவும். இதனை இணைத்தவுடன், டயலாக் பாக்ஸ் ஒன்று கிடைக்கும். பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்குபடி உங்களைக் கேட்கும். ஓகே கொடுத்து தொடரவும்.
3.
இப்போது Preferences என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் உள்ள சில முக்கிய செட்டிங்ஸ் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். "New password" என்ற பீல்டில் பாதுகாப்பான, யாரும் எளிதில் கண்டு கொள்ள முடியாத பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுக்கவும். இங்கு கிடைக்கும் Always Required என்ற பாக்ஸில், டிக் அடையாளம் ஏற்படுத்தினால், பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரைத் திறக்க, உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.
இறுதியாக, Flash Drives என்ற பிரிவில், சரியான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். இதனை முடித்த பின்னர், "Create key" என்பதில் கிளிக் செய்து, ஓகே அழுத்தி வெளியேறவும்.


4. இப்போது பிரிடேட்டர் புரோகிராம் முடிக்கப்படும். இது முடிந்தவுடன், டாஸ்க் பாரில் உள்ள பிரிடேட்டர் புரோகிராமின் ஐகானை அழுத்தவும். சில விநாடிகள் கழிந்த பின்னர், அந்த ஐகான் பச்சை நிறத்தில் மாறும். இதன் மூலம், பிரிடேட்டர் இயங்கத் தொடங்கியது குறித்து உங்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு 30 விநாடிகளுக்கொருமுறை, பிரிடேட்டர் உங்களுடைய ப்ளாஷ் ட்ரைவ் ப்ளக் செய்யப்பட்டுள்ளதா எனச் சோதனையிடும். இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சம் குறைந்து, இயக்கம் நின்றுவிடும்.


பிரிடேட்டர் இயக்கத்தினைத் தற்காலிகமாக நிறுத்த, டாஸ்க் பார் மெனுவில், "Pause monitoring" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் லாக் செய்யப்பட்டிருக்கையில், யாரேனும் பயன்படுத்த முயற்சி செய்தால், அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்கு கையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள "View log" மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இது மட்டுமின்றி, நீங்கள் பிரிடேட்டர் தரும் இணைய தளம் சென்றால், அதில் ஒவ்வொரு முறை யாரேனும் ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க முயன்று தோல்வி அடைந்தால், அதனை எத்தனை நிமிடங்களுக்கொருமுறை ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம் என்பதனை செட் செய்வதற்கான புரோகிராம் வழி தரப்பட்டிருக்கும்.


இதில் என்ன பிரச்னை என்றால், பிரிடேட்டர் யு.எஸ்.பி. ட்ரைவ் இயங்கவென, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினை நீங்கள் பயன்படுத்திய நிலையிலேயே வைக்க வேண்டும். மற்ற யு.எஸ்.பி ட்ரைவ்கள் பயன்படுத்துவதில் ஒன்றைக் குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும். அல்லது, ஒன்றில் இணைப்பு கொடுத்து, பல யு.எஸ்.பி. ட்ரைவ்களைப் பெறும் இணைப்பு ஒன்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 27 மார்ச், 2014

உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள்

உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள்

1.) முட்டையின் மஞ்சள் கரு (egg yolk)
மஞ்சளில் அதிகப்படியான கொழுப்புச்சத்து உள்ளது.ஒரு நாள் முழுக்க தேவையான அளவைவிட அதிக அளவில் ஒரே முட்டையில் உள்ளது. வெள்ளைக்கருவில் புரதம்(protein) அதிகமிருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு வெள்ளைக்கரு மட்டுமே போதுமானது

2.)
மைதா மாவில் செய்த உணவுகள் -
மைதா என்பது ஒரு சீரழிந்த கோதுமை. நார்சத்து அறவே அற்றது.எனவே குழந்தைகளின் உடல் பருமனைக்குறைக்க அறவே தவிர்க்கவேண்டும். உதாரணம்- பரோட்டா,பஃப்ஸ், பன் ,பிரட்

3.)
ஆட்டிறைச்சி தவிர்க்கப்படவேண்டும்..(எண்ணையில் பொரிக்காத கோழி மற்றும் மீன் தரலாம்-க்ரேவி அல்லது குழம்பு)

4.)
எண்ணையில் பொரித்த உணவுகள்

5.)
குளிர்பானங்கள் - கோலா பானங்கள் ; இவைகளில் empty calories தான் உள்ளன்.இவை கட்டாயம் உடல் பருமனை உண்டாக்கும்

6.)
நொறுக்குத்தீனிகள் -உருளை சிப்ஸ்

7.)
மாவுச்சத்து அதிகமுள்ள-உருளைக்கிழங்கு,வாழைக்காய்,வாழைப்பழம்

8.)
இரவில் அரிசி சோறு தவிர்க்கவும்

9.)
கேக், ஐஸ்கிரீம் -அடிக்கடி தருவதை தவிர்க்கவும்

10.)
காலை உணவினை தவிர்க்ககூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து பள்ளியில் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஏற்படும். மேலும் பட்டினி இருப்பதால் அடுத்தவேளை உணவின் சத்துக்களை கொழுப்பாக மாற்றி சேமிக்கத்தொடங்கும்.இதுவே உடல் பருமனின் ஆரம்பப்புள்ளியாக மாறலாம்.சரியான வேளையில் மிதமான அளவில் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் வருவதில்லை


--
*more articles click*
www.sahabudeen.com


புதன், 26 மார்ச், 2014

தியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..

தியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும், அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்கள் மூலமாக தன் அடியார்களுக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினான். நபி(ஸல்) அவர்கள் தன் உம்மத்தினருக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினாலும் இதன் பின்னணியில் நபி இபராஹீம்(அலை) அவர்களும், அவர்களின் குடும்பமும் செய்த மாபெரும் தியாகங்கள் மறைந்திருக்கின்றன. அவர்கள் செய்த பல தியாகங்க ள் இன்று நமக்கு ஹஜ்ஜின் கடமையான வணக்கமாக்கப்பட்டிருக்கின்றன.

கஃபா, ஜம்ஜம் கிணறு, ஸஃபா மர்வா மலை, ஜம்ராக்களில் கல்லெறிதல், குர்பானி கொடுத்தல் இவைகள் அனைத்தும் இக்குடும்பம் செய்த தியாகத்தை ஞாபகப்படுத்துகின்றன. கஃபாவை தவாஃப் செய்யாமல், ஸஃபா, மர்வா மலைகளுக்கு இடையில் தொங்கோட்டம் ஓடாமல் யாராவது ஹஜ், உம்ரா செய்ய முடியுமா? வருடத்தில் ஒரு முறை மாத்திரம் அல்ல. ஒவ்வொரு நாளும் இத்தியாகத்தை மக்கள் ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் செய்த தியாகங்களும் ஹஜ் கடமைகளும் ஜம்ஜம் கிணறும், ஸஃபா மர்வா மலையும் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்: 'எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே- தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன். எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!' (14:37)
மனிதர்களின் வாடையையே உணர முடியாத நேரத்தில் மனித வர்க்கங்களின் ஒரு கூட்டத்தாரை அங்கு கொண்டு வரும்படியும், புற்பூண்டுகளே முளைக்க முடியாத பாலைவனப்பூமியிலே பழவகைகளைக் கொண்டு அம்மக்களுக்கு உணவளிக்கும் படியும் நபி இப்ராஹீம்அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தது அவர்கள் அல்லாஹுவின் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை பறைசாற்றுகின்றது. அப்பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்ட காரணத்தினால்தான் இன்று எங்கும் கூடாத அளவுக்கு மக்காவில் கூடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதே போல் உலகத்தில் உள்ள எல்லாப் பழவகைகளையும் மக்காவில் வருடமெல்லாம் பெறமுடிகின்றது.
அல்லாஹுவின் கட்டளைக்கு இணங்க, நீண்ட இடைவெளிக்குப் பின் கிடைத்த தன் மழலைக் குழந்தையையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு மனித சஞ்சாரமற்ற புற்பூண்டுகள்கூட முளைக்க முடியாத பாலைவனத்தில் (இன்று கஃபாவாக இருக்கும் இடத்துக்கு அருகாமையில்) விட்டுவிட்டு கொஞ்சம் பேரீத்தம் பழங்களையும், தண்ணீரையும் அங்கு வைத்து விட்டு நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்று விடுகின்றார்கள். எங்களை தன்னந்தனியே விட்டுவிட்டு எங்கே செல்கின்றீர்கள் என ஹாஜரா அம்மையார் அவர்கள் பல முறை கேட்டும் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் எந்த விடையும் கொடுக்காத போது அல்லாஹ்வா உங்களை இவ்வாறு செய்யும்படி ஏவினான்? என ஹாஜரா அம்மையார் அவர்கள் மீண்டும் தன் கணவர் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். ஆம்! என்று அவர்கள் விடை கூறவே, அப்படியானால் அல்லாஹ் எங்களை கைவிடமாட்டான் என்று கூறியவாறு தன் குழந்தையோடு அங்கேயே தன்னந்தனியாக அமர்ந்து விடுகின்றார்கள். நபி இப்ராஹீம்(அலை) தன் குடும்பத்தைப் பார்க்க முடியாத அளவுக்குத் தூரமாகச் சென்று ஒரு மேட்டுப் பகுதியில் கிப்லாவை முன்னோக்கி நின்று மேற்கூறிய பிரார்த்தனையை செய்து விட்டு சென்று விட்டார்கள்.
இருந்த தண்ணீர் முடிந்ததும் தனக்கும் தன் பிள்ளைக்கும் தாகம் ஏற்படவே தண்ணீர் தேடி அலைகின்றார்கள் அன்னை ஹாஜரா அவர்கள், அப்போது அவர்களுக்கு பக்கமாக இருந்த மலை, ஸஃபா மலைதான், யாரையாவது அந்தப்பகுதியில் பார்க்கலாமா என்று நினைத்து ஸஃபா மலைமீது ஏறுகின்றார்கள், அங்கு யாரையும் காணவில்லை. அங்கிருந்து கீழே இறங்கி மர்வா மலைக்குச் செல்கின்றார்கள்.
அங்கு செல்லும் வழியில்தான் ஒரு ஓடையைக் கண்டார்கள். அந்த ஓடையைக் கடப்பதற்காக தன் ஆடையைச் சிறிது உயர்த்திய வண்ணம் வேகமாக அந்த ஓடயைக் கடந்தார்கள். இன்று அந்த இடத்தை சுட்டிக்காட்டுவதற்காக பச்சை நிற மின்விளக்கு பொருத்தப்பட்டிருக்கின்றது. அவ்விடத்தில் ஸஃயீ செய்யும் ஆண்கள் மாத்திரம் சிறிது வேகமாக ஓடுவது சுன்னத்தாக்கப்பட்டிருக்கின்றது. மர்வா மலையை அடைந்த போது அதன்மீது ஏறி மனிதர்களில் யாராவது இருப்பார்களா எனப்பார்த்தார்கள்.
அங்கேயும் யாரையும் காணவில்லை, இப்படி ஏழு முறை செய்தார்கள். கடைசியாக மர்வா மலையில் நிற்கும் போதுதான் தண்ணீர் சத்தத்தைக் கேட்டார்கள். தண்ணீர் சத்தம் எங்கிருந்து வருகின்றது என்பதை உற்றுநோக்கினார்கள். இப்போது ஜம்ஜம் தண்ணீர் கிணறு இருக்கும் இடத்தில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் தன் இறக்கையால் தோண்டி அங்கே தண்ணீர் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அங்கே ஓடோடி வந்து தண்ணீர் வெளியில் செல்லாமல் தன் கையால் கட்டினார்கள். அதிலிருந்து தன் பாத்திரத்திலும் தண்ணீரை எடுத்து ஊற்றினார்கள். தண்ணீரை எடுத்து ஊற்றும் போதெல்லாம் தண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இஸ்மாயீலின் தாய்க்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஜம்ஜம் தண்ணீரை கட்டாமல் விட்டிருந்தால் அல்லது தன் பாத்திரத்தில் அள்ளி ஊற்றாமல் இருந்திருந்தால் ஜம்ஜம் தண்ணீர் ஊற்றெடுத்து ஓடும் ஒன்றாக ஆகியிருக்கும் எனக்கூறினார்கள்.
தண்ணீர் தேடி வந்த 'ஜுர்ஹும்' கோத்திரத்தார் ஹாஜரா அம்மையார் அவர்களிடம் உத்தரவு பெற்று அங்கே குடிபெயர்ந்தார்கள். அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர்களின் துஆவை ஏற்று ஜம்ஜம் கிணறை அன்றிலிருந்து இன்றுவரை வற்றாத கிணறாக ஆக்கியிருக்கின்றான். கஃபா அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, 'எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்' (என்று கூறினார்) (2:127)
இந்த வசனத்தில் அல்லாஹ் இப்ராஹீம்(அலை) மற்றும் இஸ்மாயீல்(அலை) அவர்கள் கஃபாவை கட்டிய செய்தியைக் கூறுகின்றான். மேலே கூறப்பட்ட இரு வசனங்;களின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பமாகிய இம்மூவரும் செய்த இத்தியாகத்தின் வெளிப்பாடாகவே கஃபா, ஜம்ஜம் கிணறு மற்றும் ஸஃபா மர்வா என்னும் மாபெரும் நினைவுச் சின்னங்கள் உருவாகியிருக்கின்றன. இவைகளை நினைவு கூறாமல் ஹஜ், உம்ரா கடமையை எந்த ஒரு ஹாஜியாவது நிறைவு செய்ய முடியுமா? இது அவர்கள் செய்த தியாகங்களின் பிரதிபலனாகும். மகாமு இப்ராஹீம் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் (இதையும் எண்ணிப் பாருங்கள்; 'கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை மகாமு இப்ராஹீமை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்' (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம். (அல்குர்ஆன்2:125)
இப்ராஹீம்(அலை) அவர்கள் கஃபாவை எந்தக் கல் மீது நின்று கட்டினார்களோ அதனையே அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். அதைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள் என அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கின்றான். எந்த ஒரு ஹாஜியோ அல்லது உம்ராச் செய்பவரோ அல்லது தவாஃப் செய்பவரோ அவர்களின் தவாஃபை முடித்த பின் மகாமு இப்ராஹீமுக்குப் பின் (தவாஃபுக்காக) இரண்டு ரக்அத்துத் தொழுவது சுன்னத்தாக்கப் பட்டிருக்கின்றது. இவ்வாறு ஹஜ்ஜில் செய்யும் பெரும்பகுதியான வணக்கங்கள் அவர்களின் தியாகங்களை ஒவ்வொரு வருடமும் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்னும் அல்லாஹ் அவ்விருவரையும் கஃபாவை தவாஃப் செய்ய வருபவர்களுக்கும், இஃதிகாப் இருப்பவர்களுக்கும் தொழுபவர்களுக்கும் சகல அசுத்தங்களிலிலுருந்தும் சுத்தப் படுத்தும்படியும் உறுதிமொழி வாங்கினான். குர்பானியும் ஜம்ராக்களும் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார் 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினார் 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவராகவே காண்பீர்கள்.' ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை 'யா இப்றாஹீம்!' என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.' 'நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.' ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். (அல்குர்ஆன் 37:101 -107) அல்லாஹுத்தஆலா தன் அடியாரான நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும், அவர்களின் மனைவியையும் மகனையும் மனித நடமாட்டமற்ற இடத்தில் விட்டுவிடும்படி சோதனை செய்து முடித்ததும் அதை விடப்பெரும் சோதனையைக் கொண்டு சோதிக்க ஆரம்பித்தான்.
அதாவது தன் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்கள் ஓடி விளையாடும் வயதிலே அவர்களை அறுக்கும்படி இப்ராஹீம்(அலை) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். (நபிமார்கள் காணும் கனவும் வஹியின் ஒரு வகைதான்) அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக ஒரு கையில் கத்தியையும் மறு கையில் தன் மகனையும் பிடித்துக் கொண்டு இப்ராஹீம்(அலை) அவர்கள் சென்றார்கள். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் மகனின் பாசம் தன்னைத் தடுத்து விடுமோ என்ற அச்சத்தில் இஸ்மாயீல்(அலை) அவர்களை முகம் குப்புறக் கிடத்தி அறுப்பதற்கு முயலுகின்றார்கள்.
தன் அடியார் இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது இந்தக் கட்டளையையும் நிறைவேற்றுவதற்கு முன் வந்தபோது அறுப்பதை அல்லாஹ் தடுத்து விடுகின்றான். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் 'இப்ராஹீமே!' என்றழைத்தோம்.'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். 'நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். அல்லாஹ் இதை ஒரு பெரும் சோதனை என்றும் கூறுகின்றான். இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக சுவர்க்கத்திலிருந்து ஒரு ஆட்டையும் இறக்கிக் கொடுக்கின்றான்.
அதை இப்ராஹீம்(அலை) அவர்கள் அறுத்தார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றாகக் கட்டுப்பட்டார்கள். இதுதான் தியாகம், அல்லாஹ் ஒன்றை ஏவி விட்டால் ஏன் எதற்கு என்று கேட்காமல் உடன் அந்தக் கட்டளைக்கு கீழ் படிய வேண்டும். இதை இப்ராஹீம்(அலை) அவர்கள் முழுமையாக செயல்படுத்திக் காட்டினார்கள். இந்தத் தியாகத்தை ஞாபகம் செய்யும் விதமாக ஹாஜிகளும், ஹஜ்ஜு செய்யாதவர்களும் ஹஜ்ஜுப் பெருநாளன்று ஆடு, மாடு, ஒட்டகங்களை குர்பானி கொடுக்கின்றார்கள்.
இதனால்தான் ஹஜ்ஜுப் பெருநாளை 'தியாகப் பெருநாள்' என்று அழைப்பார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளில் இவ்வாறுதான் அல்லாஹ்வின் கட்டளைக்கு மதிப்பளிக் வேண்டும். அல்லாஹ்வின் சில கட்டளைகளை நிறைவேற்றும் போது நமக்கோ அல்லது நமது குடும்பத்துக்கோ அல்லது நமது பொருளுக்கோ அழிவு வந்துவிடும் என ஷைத்தான் நமது உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடலாம். அந்த எண்ணங்களை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
ஒரு போதும் தன் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களை அல்லாஹ் இழிவாக்க மாட்டான் என்பது நபி இப்ராஹீம்(அலை) அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகங்களினால் நமக்குக் கிடைக்கும் பெரும் பாடமாகும். ஆகவே அல்லாஹ்வின் அனைத்துக் கட்டளைகளுக்கும் மதிப்பளிப்போமாக.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts