லேபிள்கள்

செவ்வாய், 29 ஜூன், 2021

பற்களில்ஏற்படும் கறைகளை நீக்க இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

கொய்யா பழம், ஸ்ட்ராபெரி பழம் உண்பதால் பற்களில் உள்ள கறை நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து ,அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

* இரவு தூங்குவதற்கு முன்பு, ஆரஞ்சு பழ மேல் தோலைபற்களில் தேய்த்து விட்டு படுத்து, மறுநாள் காலை எழுந்தவுடன் நீர் விட்டுக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது பற்களின் மேலும், பற்களின் உட்புறத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

* வெள்ளை எள்ளு விதையை, நன்றாக தூளாக்கி பற்க்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கும். பேக்கிங் சோடா , கல் உப்பு  இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

* மிக முக்கியமாக உணவை நன்றாக ,மென்று, அரைத்து, விழுங்க வேண்டும். கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து வைத்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

* அன்றாட உணவில் கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு உறங்கும்

முன்  பல் துலக்குவது அவசியமான ஒன்றாகும் .இவை பற்களில் உள்ள கறைகளை நீக்க துணைபுரியும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/to-remove-stains-on-teeth-natural-medical-tips-120051900058_1.html    

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

சனி, 26 ஜூன், 2021

குழந்தைகளுக்குதேவையான சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள உணவுகள் எவை தெரியுமா...?

குழந்தைகளின் உணவு அதன் வளர்ச்சியில் முக்கியமாக பங்காற்றுகிறது. அந்த உணவின் ஒரு முக்கிய பகுதி சுண்ணாம்புச் சத்தாகும்.

சுண்ணாம்புச் சத்து எலும்புகள் உருவாகுதல் மற்றும் அதைப் பராமரிப்பதில் முக்கியமாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அவை முக்கியமாக பங்காற்றுகிறது.

சுண்ணாம்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வது உங்களது குழந்தைகளுக்கு தேவையான எலும்பு அடர்த்தி பெறுவதை பாதித்து, அவர்களது எலும்புகளை  பலகீனமாக்கி அவர்களது வாழ்வில் பிற்காலத்தில் எலும்புப் புரை நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகையால், உங்களது குழந்தையின் உணவில் சுண்ணாம்புச்  சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

பால் பொருட்கள், முக்கியமாக பால், புரதங்கள், வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றையும் கொண்டிருப்பதோடு சுண்ணாம்புச் சத்தும் அதிகம் நிறைந்த உணவுப்  பொருளாக திகழ்கிறது. 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு உணவில் அதிக சுண்ணாம்புச் சத்துள்ளவற்றில் பால் முதல் நிலையில் உள்ளது.

 

சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் காரணமாக தானியங்களைக் காட்டிலும் சிறுதானியங்கள் மேம்பட்டவையாக கருதப்படுகின்றன. கம்பு, வரகு, தினை, பனி வரகு, குதிரைவாளி போன்ற பல்வேறு வகையான சிறு தானியங்கள் உள்ளன. சிறுதானியங்களில் அதிகமான சுண்ணாம்புச் சத்து உள்ளது.

 

குழந்தைகளின் உணவில் சேர்க்கப்பட வேண்டிய கொட்டைகளில் பாதாம், முந்திரி மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவை அடங்கும்.

கொண்டைக்கடலையில் சுண்ணாம்புச்சத்து, புரதங்கள், மாவுச்சத்து, மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்ததுள்ளது. கொண்டைக் கடலையில் காணப்படும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பேட், மற்றும் துத்தநாகம் போன்றவை எலும்பு கட்டமைப்பையும் பலத்தையும் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

பல்வேறு வகையான இறைச்சியில் பல்வேறு அளவுகளில் சுண்ணாம்புச் சத்து உள்ளது.

மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, வாட்டப்பட்ட சாலமோன் மீன், இறாள், குளத்துமீன், கடல்மீன் வகைகள் மற்றும் பல்வேறு வகையான இறைச்சியில் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது

https://tamil.webdunia.com/article/child-rearing-feature/do-you-know-what-lime-nutrients-are-needed-for-children-120052800057_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

புதன், 23 ஜூன், 2021

தீங்கிழைத்தவனுக்கு உபகாரம்செய்வது..!

மனிதனுக்கு மிகவும் பாரமான காரியம் அவனது கடின உழைப்பு! பழுவான காரியங்களை மிகவும் சிரமப்பட்டுக்கூட செய்து முடித்துவிடுவான், சுமை தூக்கிப் பிழைக்கின்றவனுக்கு எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் தினமும் அதைச் சுமந்து சுமந்து அவன் வாழ்க்கையைக் கழித்துவிடுவான். கடுமையான  பொருளாதார சிக்கல் வந்தாலும் பல வழிகளைக் கையாண்டு அதையும் கடந்துவிடுவான். ஆனால் அந்தக் கடின உழைப்பையும் விட, அவன் சுமக்கும் சுமையையும் விட, பொருளாதாரக் கஷ்டத்தையும் விட, மனிதனுக்கு  மிகவும் கடினமானது உள்ளத்தில் நல்ல எண்ணம் கொள்வது! அதிலும் பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வது.

ஒருவன் பரம ஏழையாக இருக்கின்றான், அவனது வருமானம் அவன் குடும்பத்திற்கே போதாத நிலை, அவனது பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப் பிறரை எதிர்பார்த்து வாழ்க்கையை நகர்த்துகின்றான். அதே நேரத்தில் அவன் யாரைப்பற்றியும் தவறான எண்ணம் கொள்வதில்லை! எந்த செலவும் இல்லாமல், எந்த நஷ்டமும் இல்லாமல் நல்லெண்ணத்தை உள்ளம் நிறையக் கொண்டுள்ளான். என்னிடம் செல்வம் இருந்திருந்தால் இன்னாருக்கு வழங்கி இருக்கலாம், இன்னின்ன காரியங்களைச் செய்திருக்கலாம், இன்னின்ன உதவிகளைச் செய்திருக்கலாம் என்று தம்மால் செய்யமுடியாத அவன், நன்மைகள் செய்வதற்காக உள்ளத்தில் நல்லெண்ணம் கொண்டதனால் அல்லாஹுவிடம் அவன் ஒரு நன்மையை அடைந்துகொள்கின்றான்.

அதே நேரத்தில் அந்தக் காரியத்தை அவன் செய்து முடித்துவிட்டால் பத்து நன்மைகளை  அல்லாஹுவிடம் அடைந்துகொள்கின்றான். ஒருவன் தன் உள்ளத்தில் எண்ணும் நல்ல எண்ணத்திற்கும் கூலி வழங்கப்படும் என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான்.

பொதுவாக மனிதன் தனக்கு எந்த அநீதமும் இழைக்காதவனைப் பற்றியோ, எந்தத் தீங்கும் செய்யாதவனைப் பற்றியோ உள்ளத்தில் நல்லெண்ணம் கொள்வதே இக்காலத்தில் மிகவும் கடினமான காரியம். ஒரு நல்ல மனிதனை பற்றி இன்னொருவன் நல்லெண்ணம் கொள்வதே சமூகத்தில் மிகவும் அரிதான விஷயம்! ஆனால் இங்கு ஒரு தீயவனுக்கு அதுவும் தனக்குத் துன்பம் இழைத்தவனுக்கு, அநீதி இழைத்தவனுக்கு நாம் உபகாரம் செய்யவேண்டும் என்று இஸ்லாம் பணிக்கின்றது.

وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ  اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ

நன்மையையும் தீமையும் சமமாக மாட்டாது, (எனவே, நபியே) நன்மையைக் கொண்டே (தீமையைத்) தடுத்துக்கொள்வீராக! அப்போது யாருக்கும் உமக்கும் பகைமை உள்ளதோ அப்படியானவர்கூட உற்ற நண்பரைப் போன்று ஆகிவிடுவார். (அல்குர்ஆன்:- 41:34)

இரவும்  பகலும் எப்படி ஒன்றோடு மற்றொன்று வேறுபட்டதோ, கருப்பும்  வெண்மையும் எப்படி ஒன்றோடு மற்றொன்று வேறுபட்டதோ அதேபோன்று நன்மையையும்  தீமையும் ஒன்றோடு மற்றொன்று வேறுபட்டது. அது இரண்டும் சமமானது அல்ல!

குறைந்தபட்சம் தீங்கிழைத்தவனை விட்டும் ஒதுங்கிவிடத்தான் எல்லோரும் விரும்புவர், அவனது நிழல்கூட நம்மீது பட்டுவிடக்கூடாது என்று அவனை விட்டும் தூரமாகிவிடுவர். ஆனால் அவனுக்கும் உபகாரம் செய்யவேண்டும் என்ற நிலைக்கு எல்லோருக்கும் வருவதில்லை! எவ்வளவு பெரிய புத்திசாலியும் இந்த நிலைக்கு அவ்வளவு எளிதில் வருவதில்லை.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹுவின் கட்டளையை மீறி உனக்குத் தீங்கிழைத்தவனை  அவன் விஷயத்தில் அல்லாஹுவுக்கு நீ கீழ்ப்படிவதன் மூலமே தவிர அதாவது அவனுக்கு உபகாரம் செய்வதன் மூலமே தவிர வேறு எதன் மூலமாகவும் நீ அவனைத் தண்டித்துவிட முடியாது. (இப்னுகஸீர்)

உபகாரம் செய்வதும், நன்மையை நாடுவதும் ஈவு இரக்கமற்ற எதிரியின் உள்ளத்தையும் நேசிப்பதற்கும், பரிவு காட்டுவதற்கும் தூண்டிவிடும்! அப்போது பகைவனும்  நேசனாக உபகாரம் செய்பவனாக மாறிவிடுவான், ஆனால் இங்கு ஒரு நிபந்தனை!

وَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْاوَمَا يُلَقّٰٮهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ

பொறுமையாக இருப்பவர்களுக்கே தவிர வேறு யாருக்கும் இந்த (உயர்ந்த குணம்) வாய்க்கப்படுவதில்லை! மகத்தான பேறு பெற்றவருக்கே தவிர இது அருளப்படுவதில்லை! (அல்குர்ஆன்:- 41:35)

இந்த மகத்தான அருள் வழங்கப்பட்டவர் யார்? அதிக வணக்க வழிபாட்டில் ஈடுபட்டவரா? அல்லது அதிகமான தர்மங்கள் செய்தவரா? அல்லது அதிகமான போதனைகள் செய்தவரா? இல்லை! யார் பொறுமையாக இருந்தார்களோ, அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த பேரருள் கிடைப்பதில்லை.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதியையார் அல்லாஹுவுக்காக சகித்துக்கொண்டார்களோ அவர்களைத் தவிர வேறு யாரும் இந்த அறிவுரையை ஏற்றுச் செயல்படமாட்டார்கள். ஏனெனில் தீங்கைப் பொறுத்துக்கொள்வது என்பது மனதுக்கு மிகவும் பாரதூரமான விஷயமாகும். பாக்கியம் பெற்றவர்களைத் தவிர வேறுயாரும் இதை அடையமாட்டார்கள்.

இந்த வசனத்திற்கு விளக்கமாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: கோபத்தின் போது பொறுமை காக்கும்படி இறை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். பிறர் அறிவீனமாக நடந்துகொள்ளும் போது சாந்தத்தையும், பிறர் தீங்கிழைக்கும் போது மன்னிப்பையும் மேற்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். (இப்னுகஸீர்)

இந்த விஷயத்தில் யார் பொறுமையை உருவாக்குகின்றார்களோ அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது கிடைப்பதில்லை!

ஆனால் ஷைத்தான் பொறுமையாளர்களுக்கு மிகப்பெரும் விரோதியும், துரோகியும் ஆவான்! ஒரு இறை நம்பிக்கையாளனுக்குப் பொறுமை ஏற்படுவதை ஷைத்தான் விரும்புவதில்லை! காரணம் பொறுமையை மேற்கொண்ட இறை நம்பிக்கையாளன் இவ்வுலகிலும் வெற்றியடைவான், மறுமையிலும் வெற்றியடைவான். ஆகவே தீங்கிழைத்த மனிதனுக்கு உபகாரம் செய்யும் வேளையில் ஷைத்தானின் ஆதிக்கத்தைத் தோற்கடிப்பதற்காக அல்லாஹ் அதன் அடுத்த வசனத்தில் கூறுகின்றான்:

وَاِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

(நபியே) ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதேனும் ஊசலாட்டம் ஏற்பட்டால் உடனே அல்லாஹுவிடம் பாதுகாப்புக் கோருவீராக! அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவான்.  (அல்குர்ஆன்:- 41:36)

அளவு கடந்த பொறுமையும், ஷைத்தானின் ஆதிக்கத்திற்கு

அடிபணியாத தன்மையும் யாரிடம் இருக்கின்றதோ அவர்தான் 'தீங்கிழைத்தவனுக்கு உபகாரம் செய்யும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வார்.

S.A. Sulthan

http://www.islamkalvi.com/?p=124201


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

சனி, 19 ஜூன், 2021

நவீனக்கொள்கைக் குழப்பங்களிலிருந்து எமது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..

அன்பார்ந்த சகோதரர்களே..!
அல்லாஹ்வால் இறுதித் தூதராக இந்த பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவத்தை சரிவர நிறைவேற்றி எம்மை நேரான வெண்மையான பாதையில் விட்டுச் சென்றார்கள். அதன் இரவு கூட பகலைப் போன்றதாகும் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வபாத்திற்க்குப் பின்னர் நபித்தோழர்களின் காலத்திலேயே இஸ்லாத்தின் பெயரால் பல வழிகேடுகள் தோற்றம் பெற ஆரம்பித்து விட்டன. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவுப்புச் செய்த செய்திகள் ஏறாளமானது.

அவ்வாறு தோற்றம் பெற்ற வழிகேடர்கள் அனைவரும் தாங்கள் தான் சத்தியவான்கள் என்பதை நிருவுவதற்குத் தங்களின் கொள்கைக்குச் சான்றாக அல் குர்ஆன் வசங்களையும் ஹதீஸ்களையும் மனோ இச்சைப்படி வளைத்து அதை சிறந்த விளக்கமாக முன்வைத்தார்கள். அது அன்றுடன் முற்றுப்பெற வில்லை. இன்றும் இஸ்லாத்தின் பெயரால் நவீனக் கொள்கைகளைத் தோற்றுவிக்கக் கூடியவர்கள் அல் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தவறாக சித்தரித்து தங்களின் நவீன சிந்தனைகளை ஆய்வாகச் சமூகத்துக்கு முன்வைக்கின்றார்காள். இது கியாம நாள்வரை தொடரக்கூடிய ஒன்றாகும்.

எனவே நேரான பாதையை நாம் எப்படி அடையாளம் காண்பது? என்ற அறிவு எம்மிடமிருப்பது அவசியமாகும். இல்லையெனில் வழிகேடுகளை ஆதரிக்கும் நிலை எம்மிலும் ஏற்பட்டு விடலாம். அல்லாஹ் எம் அனைவருக்கும் நேரான பாதையை காட்டுவானாக.

நேரான பாதை என்பது நேற்று இன்று உருவான புதுப்பாதை கிடையாது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபிகளாரும் நபித்தோழர்களும் எந்தக் கொள்கையில் இருந்தார்களோ அதுவே நேரான பாதையாகும். (அல் குர்ஆன் , அல் ஹதீஸ் ). அந்த நேரான பாதையைத்தான் சிறந்த மூன்று நூற்றாண்டில் வாழ்ந்து மரணித்த நல்லறிஞர்களும் வாழ்க்கை நெறியாகக் கொண்டார்கள். எனவே அதே வழியில் மறுமைவரை அவர்களைப் பின்தொடர்வோர் அஹ்லுஸ் ஸுன்னவைச் சார்ந்தோர்களாவார்கள்.

அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கைசார்ந்த அறிஞர்கள் (ஸலபுகள்) எப்படி அல்குர்ஆன் ஹதீஸை விளங்கினார்களோ அவ்வாறு புரிவது தான் எம்மை நேரான பாதையில் நிலைக்கச் செய்யும் காரியமாகும். இதற்கு மாற்றமாக அல்குர்ஆன், ஹதீஸை யாரெல்லாம் மனோ இச்சைப்படி விளங்க முற்படுகின்றார்களோ அத்தகையோர் பல வழிகேடுகளைத் தோற்றுவிப்பார்கள்.

இன்று தமிழுலகில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு இணையத்தினூடாக மெல்ல வளர்ந்து வரும் வழிகெட்ட கொள்கையாக சுப்பர் முஸ்லிம் (Super muslim) என்ற பெயரில் இயங்குவோரால் முன்வைக்கப்படும் கொள்கையை அடையாளப்படுத்தலாம். இவர்களை ஆதரிக்கும் சிறு ரசிகர்கூட்டம் இன்று உருவாகியுள்ளது.

இவர்கள் கிஃலாபத்தை நபித்துவத்தின் பிரதான நோக்கமாக சித்தரிக்கக்கூடிய, அகீதாவில் வழிதவறிச் சென்று கொண்டுள்ள அமைப்புக்களின் கருத்துக்களைத் திருடி நவீன கால ஆய்வாக தாம் இணையத்தின் வாயிலாகத் திருடிய அந்த சிந்தனைகளைத் தமது ஆய்வைப்போல் இளைஞர்களைக் கவரும் விதத்தில் முன்வைத்து வருகின்றார்கள்.

குழப்பங்கள் நிறைந்து காணப்படும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் எதிர்பாக்கும் தலைப்புக்களை தெரிவு செய்து அந்த தலைப்புக்களில் அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கையின் நிலைப்பாட்டுக்கு மாற்றாமான கருத்துக்களைக் குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறப்பட்ட துள்ளியமான ஆய்வாக முன்வைப்பதே இவர்களின் தந்திரமாகும்.

ஈமானுக்கு வேட்டு வைக்க இவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைப்புக்கள்:

1)அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஹ் என்போர் பற்றி தவறான விளக்கம் (?)

2)2050ற்குள் தஜ்ஜாலின் வருகை( ?)

3)யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் வெளிப்பட்டுவிட்டார்கள்.(?)

4)அடிமை தன் எஜமானியை பெற்றெடுப்பாள் என்பது டெஸ்ட் டியூப் பேபி முறை.(?)

5)நபிமார்களின் தஃவா கிலாபத்தை இலக்காக கொண்டது (?)

6)ஷைத்தானின் கொம்பு என்பது ஸஊதியின் எழுச்சி.(.?)

7)கியாமநாள் பற்றிய முன்னறிவிப்புகளை நிதர்சனத்தை வைத்தே அனுக வேண்டும்(..?)

8)மார்கத்தை ஆய்வு செய்ய மௌலவியாக தேவையில்லை (?)

9)சூரியன் மேற்கில் உதித்துவிட்டது தௌபாக்கள் இனி ஏற்கப்படாது(?)

10)அதிசயப்பிராணி என்பது இஸ்ரேலின் ஆட்சி(.?)

11)நபி (ஸல்) அவர்கள் வந்தது கிலாபத்தை நிலைநாட்ட..(?)

12) முற்படுத்த வேண்டியது அகீதா இல்லை ஆட்சியே..(?)

13)ஸஊதியை ஸலபுகள் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்..(?)
(மற்றும் பல வழிகேடுகள்… )

மேற் கூறப்பட்ட தலைப்புக்களில் குர்ஆன், ஹதீஸை தவறாகச் சித்தரித்து முற்று முழுதாக அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கைக்கு மாற்றமான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வைத்துக் கொண்டிருக்கிறது இந்த சுப்பர் முஸ்லிம் எனும் வழிகெடுக்கும் குளுமார்கத்தை சரிவரப் படிக்காத இளைஞர்கள் பலர் இவர்களின் ஷைத்தானிய வழியில் சிக்கும் பேராபத்தான நிலை இன்று உருவாகியுள்ளது என்பதை இவர்களின் யூடீயூப் செனலின் Subscribersஸைப் பார்போர் அறிந்து கொள்ள முடியும்.

எனவே இந்த நவீன வழிகேட்டைக் கண்டு கொள்ளாவிட்டால் இரத்தம் கொதிக்கும் நம் இளைஞர்களுக்கும் ,சமூகத்துக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய தீங்காகவே மாறிவிடும். சில வழிகேடுகள் வளர எமது புறக்கணிப்புக்களும் காரணமாக இருந்துள்ளமை நாம் மறுக்க முடியாத கடந்தகால வரலாற்றுண்மையாகும்.

அல்லாஹ்வின் உதவியால் இந்த நவீன வழிகேட்டை முளையிலேயே கிள்ளி எறிந்து இது போன்று இன்னுமுள்ள வழிகேடுகளை நோக்கி மக்களை அழைக்கும் அழைப்பாளர்களிடமிருந்து முஸ்லிம் சாமூகத்தைக் காக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் இஹ்லாஸுடன் இப்பணிக்காகச் செயற்பட திறமைமிக்க உலமாக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள்இன்ஷா அல்லாஹ் ஸபீலுல் முஃமினீன் என்ற பெயரிலுள்ள எமது முகநூல் பேஜ் மற்றும் யூடியூப் செனல் , வாட்ஸப் குளுமம் போன்ற இன்னுமுள்ள இணையதளங்களினூடாகவும் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கு மாற்றமான கொள்கைச் செயற்பாடுகளைக் கொண்ட பிரிவினருக்குறிய மறுப்புக்களைத் தொடர்ந்தும் எதிர்பாருங்கள்.

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةًاِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
"எங்கள் எஜமானே.! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.
(அல்குர்ஆன் : 3:8)

எமது Face book மற்றும் YouTube தளத்தின்

லின்க்:

https://www.youtube.com/channel/UCgxokWl1qJWEGV0_YXRpOuA

https://www.facebook.com/Sabeelulmumineenofficial/

SABEELUL MU'MINEEN

👆follow this In Sha Allah

http://www.islamkalvi.com/?p=124142


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

புதன், 16 ஜூன், 2021

கேட்போருக்கும்கேட்காதோருக்கும் உதவுங்கள்

ஆக்கம். மவ்லவி. தாஹா ஃபைஜி அழைப்பாளர், சென்னை

சமுதாயத்தில் சில நபர்களுக்கு பொருளாதாரத்தை அதிகமாகவும் இன்னும் சில நபர்களுக்கு பொருளாதாரத்தை குறைவாகவும் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான்.

அல்லாஹ் நாடியிருந்தால் ஒட்டுமொத்த மனிதர்களையும் பெரும் பணக்காரர்களாக ஆக்கியிருக்கலாம் அல்லது அனைவரையும் ஏழையாக ஆகியிருக்கலாம் ஆனால் சில மனிதர்களை பணக்காரனாகவும், சில மனிதர்களை ஏழைகளாகவும் ஆக்கியிருக்கின்றான். இது ஏன் என்பதை அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்துகிறான்.

நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை ஆகார வசதிகளை விசாலமாக்குகிறான்; (தான் நாடியோருக்குச்) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
(ஆல்குர்ஆன் 30: 37)

மனித சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக ஒரு வித்தியாசம் எதற்காக அமைக்கப்படவேண்டும் என்று அடுத்த வசனத்தில் குறிப்பிடுகின்ற பொழுது, பொருளாதாரம் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும் என்பதை அல்லாஹ் அறிவுறுத்துகின்றான்.

ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவருக்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள் தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (அல்குர்ஆன் 30: 38)

தற்போது உலக அளவில் ஏராளமான மக்கள் வாழ்வியல் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். பிறரிடமிருந்து எதிர் பார்க்காதவர்கள் கூட பிறரிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். காரணம் கொரோனா என்று சொல்லக்கூடிய வைரஸ் உலகத்தையே ஆட்கொண்டு மனித சமுதாயத்தை அச்சுறுத்தி வைத்திருக்கின்றது. யாரும் வெளியில் சென்று வேலை செய்யக்கூடாது என அந்தந்த நாட்டு அரசாங்கம் மக்களின் நலன் கருதி கட்டளையிடுகிறது. இதில் செல்வந்தர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பித்து விட்டார்கள். ஆனால் ஏழைகளோ வசமாக சிக்கிக் கொண்டார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கக்கூடிய மக்கள் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் பட்டினிச் சாவுகளை சந்திப்பதை பார்க்கின்றோம்.

பல மக்களுக்கு தேவை ஏற்படக்கூடிய இந்த சூழ்நிலையில்தான் நாம் அதிகமதிகம் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் கொடுக்க கடமைப் பட்டிருக்கின்றோம். முஸ்லிம் சமூகத்திற்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. அதுதான் ரமலான் மாதத்தில் அதிகமதிகம் தான தர்மங்களை மேற்கொள்வது. ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் மழை, காற்றை விட வேகமாக தர்மங்களை செய்வார்கள் (நூல் புகாரி).

நபித்தோழர்கள் வசதியில் குறைவானவர்களாக இருந்தாலுங்கூட கொடுப்பதிலே, இல்லாதோருக்கு உதவுவதிலே அவர்கள் உயர்வானவர்கள். அதனால் தான் யாருக்கு செலவழிக்க வேண்டும் எதனை செலவழிக்க வேண்டும் என்று நபியவர்களிடத்திலே கேட்டார்கள். அப்பொழுது அல்லாஹ் இந்த வசனத்தை இறக்குகிறான்

நபியே! (பொருள்களில்) "எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)" என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) "நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்.
(அல்குர்ஆன் : 2:215)

இந்தச் சூழ்நிலையில் நாம் நினைக்க மறந்த ஒரு கூட்டத்தினர் தான் அல்லாஹ்வினுடைய பணியில் இருப்பவர்கள். அவர்கள் கண்ணியமானவர்கள் யாரிடத்திலும் அவர்கள் வெளிப்படையாக கேட்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு கொடுப்பது மிகவும் சிறந்தது என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப் படாதவர்களாக இருக்கின்றனர். (அன்றி, அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள். அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச்செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான்.
(அல்குர்ஆன் : 2:273)

பல மக்கள் தங்களுடைய தேவைகளை வெளியே சொல்லாமல் தங்களிடமிருப்பதை வைத்துக்கொண்டு கஷ்ட நஷ்டங்களை சமாளித்துக் கொள்கின்றார்கள். அவர்களுக்கு தேவை இருக்கின்றது என்றாலும் அவர்கள் வெளியே யாரிடமும் கேட்பதில்லை. அல்லாஹுத்தஆலா உங்களிடத்தில் வலிந்து கேட்காதோருக்கும் கொடுங்கள் என்பதாக குர்பானியினுடைய இறைச்சி விஷயத்தில் நமக்கு ஏவுகிறான்.

….அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதைக் கேட்டவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம். (அல்குர்ஆன் : 22:36)

இப்படிப்பட்ட இந்த மக்களுக்குத்தான் நாம் வாரி வழங்க வேண்டும். நாம் குறைத்து குறைத்து, எண்ணி எண்ணி கொடுத்தால் என்ன ஆகும் என்பதை ஒரு நபிமொழி நமக்கு எச்சரிக்கிறது.

அஸ்மா(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் என்னிடம் 'நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்!' எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்' எனக் கூறினார்கள் என உள்ளது. (ஸஹீஹ் புகாரி.)

அல்லாஹ்வின் பாதையில் உதவி செய்பவர்கள் எந்த நிலையிலும் செய்யலாம். இரகசியமாகவோ பகிரங்கமாகவோ குறைவாகவோ அதிகமாகவோ எவ்வாறு வேண்டுமென்றாலும் அவர்கள் தர்மங்களை கொடுக்கலாம். அது அனைத்துமே அவர்களுக்கு மகத்தான கூலியைப் பெற்றுத்தரும்.

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:274)

சஹாபாக்களினுடைய தானதர்மங்கள் மகத்தானது. தங்களுக்கு தீங்கிழைத்த மனிதர்களுக்குகூட உதவிகளை செய்து வந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களுடைய சம்பவம் நமக்கு மிகப்பெரிய படிப்பினையை தருகிறது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது நயவஞ்சகர்கள் அவதூறு கூறி இட்டுக்கட்டினார்கள் உண்மை நிலை அறியாமல் சில சஹாபாக்கள் அதில் சம்பந்தப்பட்டார்கள்.
அதில் ஒருவர்தான் அபூபக்கர் (ரலி) மூலமாக உதவி பெற்று வந்த மிஸ்தஹ் (ரலி) அவர்கள்.

இது தெரிந்த அபூபக்கர் ரலி அவர்கள் இனிமேல் நான் உதவியே செய்யமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார்கள்.

அல்லாஹ் வசனத்தை இறக்குகிறான்..
இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். (அல்குர்ஆன் 24: 22)

இந்த வசனம் இறங்கிய உடன் அபூபக்கர் ரலி அவர்கள் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள்.
"ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்" என்று கூறிவிட்டு மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், "அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு (செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன்" என்று கூறினார்கள். (நூல் : புகாரி- 6679)

நாம் சம்பாதித்த அல்லது நம்மிடத்தில் இருக்கக்கூடிய சொத்து மற்றும் செல்வங்களின் நற்பலனை அடைய வேண்டுமென்றால் அது நமது கையில் இருக்கும்போதே தான தர்மங்களை செய்ய வேண்டும் இல்லையென்றால் அது வேறொரு நபருக்குறியதாகி விடும்.

நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா?" என்று கேட்டார்கள். தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும்" என்று பதிலளித்தார்கள். "அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும் போது) எதைவிட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி 6442)

இப்போது தான் தர்மங்களை பெற்றுக்கொள்ள ஏழைகளும் தேவை உடையோரும் இருக்கின்றார்கள். சதகாவின் உடைய நன்மைகளையும் அறிந்து வைத்திருக்கின்றோம். இப்போதே தர்மம் செய்தால்தான் நமக்கு நன்மை, இல்லையென்றால்..

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான். அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேனே. இன்றோ அது எனக்குத் தேவையில்லை என்று கூறிவிடுவார். (நூல் புகாரி -1411.)

மலக்குமார்களுடைய துஆவை பெற்றுக் கொள்ள நாம் விரும்புகின்றோமா.? அல்லது சாபத்தை எதிர்பார்க்கின்றோமா?

ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே!

தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக! என்று கூறுவார். இன்னொருவர், "அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1442)

அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து அதிகமதிகம் உதவிகளை செய்வோம் இயலாத முடியாத பொருளாதாரத்தில் பலகீனமான மக்களை தேடிச்சென்று உதவுவோம்.

http://www.islamkalvi.com/?p=124189


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts