லேபிள்கள்

திங்கள், 26 ஏப்ரல், 2021

சொர்கத்தில்துணைகள்

இவ்வுலக வாழ்கையில் நேர்வழியில் நடக்கும் தம்பதிகள் மறுவுலகிலும் சொர்கத்தில் தம்பதிகளாக வாழ்வார்கள் என்பது குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள கருத்தாகும்.

இதில் கிளப்பப்படும் ஐயங்களையும் தெளிவான விளக்கங்களையும் காண்போம்.

ஐயம் 1:ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்கூலி உண்டு என்று திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு திருக்குர்ஆனின் 33:35 வசனத்தில் பல வித நன்மைகள் செய்யும் ஆண்கள், பெண்கள் என்று கூறிவிட்டு அவர்களனைவருக்கும் மன்னிப்பையும் மாபெரும் கூலியையும் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான் என்று கூறப்படுகிறது. இதன்படி சொர்கத்தில் கொடுக்கப்படும் பரிசுகள் ஒவ்வொன்றும் ஆண்களுக்கு கொடுக்கப்படுவது போல் பெண்களுக்கும் கொடுக்கப்படும். அந்த வகையில் ஆண்களுக்கு ஹுருன் ஈன் எனும் சொர்கத்துப் பெண்கள் மனைவியராக்கப்படுவது போல் பெண்களுக்கும் அதுபோன்ற சொர்க்க ஆண்கள் கணவர்களாக்கப்படும் என்று புரிய முடிகிறது இது ஒர் ஐயம்.


இந்த ஐயத்தை வலுப்;படுத்தும் விதத்தில் 4:124 நல்லறம் செய்யும் ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3:195, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.

தெளிவு 1: இந்த ஐயத்திற்கான காரணம் மேற்கண்ட வசனங்களைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறு. அல்லாஹ் மறுமையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்கூலி வழங்குவான் என்பதை இருவகையினருக்கும் சமமாக ஒன்று போல் வழங்குவான் என்று புரியக் கூடது.

இரு வகையினருக்கும் அவரவர் தன்மைக்கு தக்கவாறு நற்கூலி வழங்குவான். அது அவரவர் திருப்தி கொள்ளும் விதத்தில் அமையும், ஆகவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் பொதுவாக ஹுருன் ஈன்களைப் போன்ற சொர்கத்து ஆண்கள் சொர்க்கம் செல்லும் உலகப் பெண்களுக்கு மணமுடித்து வைக்கப்படுவார்கள் என்பது தவறாகும்.

இந்த விளக்கத்தக்கு ஆதாரமாக கீழ்காணும் நபிமொழி அமைந்துள்ளது.

" (
சொர்க்கவாசிகளான) அவர்களின் ஒவ்வொருவருக்கும் இரு மனைவிமார்கள் இருப்பார்கள்"

நூல்கள்: புகாரி 3246, 3254, முஸ்லிம் 5062, திர்மிதி 2522, 2535, 2537, அஹ்மத் 7152, 7369 மற்றும் இப்னு ஹிப்பான், அல் பஸ்ஸார்

மேற்கண்ட தவறான ஐயத்துடன் இந்த ஹதீஸை எடுத்துக் கொண்டால் சொர்கத்தில் நுழையும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு கணவர்கள் என்று சொல்ல வேண்டியது வரும். அப்படி யாரும் சொல்வதில்லை சொல்லவும் முடியாது!

ஏனென்றால் சொர்கத்தில் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ள இன்பங்களை நாடியபடி அனுபவிக்கலாம். ஆனால் அங்கே அருவருப்பான கேவலமான இன்பங்களெல்லாம் இல்லை. உதரணத்திற்கு தனக்கு திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட (மஹ்ரமான) உறவுப் பெண்ணுடன் சொர்க்கம் சென்று பாலுறவில் ஈடுபட வேண்டுமென்று நினைத்தால் அது கேவலம். அப்படியெல்லாம் அங்கு நடக்காது. அங்கு வைத்து அப்படி சிந்திக்கவும் வராது. அது போல் போதையுள்ள மது அங்கு இல்லை. இது போல் பல விஷயங்களைச் சொல்லலாம்.

ஆகவே நன்மை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்கூலி உண்டு என்பதை ஒன்று போல் சமமாக என்று புரிவது தவறு. அவரவருக்கு தகுந்தவாறு அல்லாஹ் நற்கூலி வழங்குவான் 5:119 வசனத்திலும் வேறு பல வசனங்களிலும் சொல்லப்படுவது போல் அவரவருக்கு கொடுக்கப்படுவதை வைத்து நற்கூலி பெற்றவர்கள் திருப்தி அடைவார்கள்.

ஐயம் 2: கணவன் கெட்டவனாகவும், மனைவி நல்லவளாகவும் இருக்கும்போது என்ன நிலை? இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு  இரு கணவர்களும் சொர்க்கவாசிகளாக இருந்தால் அவள் யாருடன் சேர்க்கப்படுவாள்?

தெளிவு 2: பொதுவாக சொர்க்கம் செல்லும் தம்பதிகள் சொர்க்கத்தில் தம்பதிகளாக இருப்பர். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. (இறுதியில் அவற்றை குறிப்பிடுவோம்) இதற்கு அப்பாற்பட்ட நிலைகளுக்கும் முடிவுகள் உண்டு. அல்லாஹ் தான் நாடிய விதத்தில் நடத்துவான். உதாரணத்திற்கு இந்த ஐயத்தின் முதல் பகுதியில், மனைவி சொர்க்க வாசியாகவும் கணவன் நரகவாசியாகவும் இருந்தால் என்று கேட்கப்படுகிறது. இது ஒரு பெரிய விஷயமல்ல. சொர்க்கம் செல்லும் சில ஆண்களின் மனைவியர் நரகவாசிகளாக இருப்பார்கள். அத்தகைய ஆண்களில் ஒருவருக்கோ அல்லது சொர்க்கவாசியான ஏதோ ஒரு ஆணுக்கோ அந்தப் பெண் மனைவியாக்கப்படுவது சாத்தியமற்ற ஒன்றல்ல அல்லது அல்லாஹ் தான் நாடிய விதத்தில் எதையும் செய்வான்

இந்த ஐயத்தின் இரண்டாவது பகுதி ஒரு பெண் இரு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்து இருவரும் சொர்க்கவாசிகளாக இருந்தால் என்று கேட்கிறது. இது தொடர்பாக ஹதீஸ்களில் பேசப்பட்டுள்ளது.

அபுத்தர்(ரலி) அவர்கள் மரணித்தபின் அவரது (மனைவி) உம்முத் தர்தா(ரலி) அவர்களை முஆவியா(ரலி) அவர்கள் பெண் பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா அறிவித்ததை நான் கேட்டுள்ளேன் எனச் சொன்ன உம்முதர்தா(ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "ஒரு பெண் தனது கணவனின் மரணத்துக்குப் பின் (இன்னொருவரை) திருமணம் செய்து கொண்டால் அப்பெண் (மறுமையில்) அவளது கணவர்களில் இறுதியானவருக் குரியவளாவாள்." இவ்வாறு சொன்ன உம்முத்தர்தா, அபுத்தர்தாவை விட உம்மை நான் தேர்வு செய்யமாட்டேன் என்று கூறினார்கள். அதன்பின்பு முஆவியா(ரலி) அவர்கள் உம்முத்தர்தா அவர்களுக்கு, அப்படியானால் நோன்பு வைத்துக்கொள் அது (ஆசையை)த் துண்டிக்கக்கூடியது என்று (கடிதம்) எழுதி அனுப்பினார்கள்.

நூல்: அல்முஅஜமுல் அவ்ஸத் (3130)

மேலும் அபூபக்ர்(ரலி) அவர்களிடம் அவர்களின் மகள் அஸ்மா(ரலி) அவர்கள் தனது கணவர் ஸூபைர் பற்றி முறையிட்டார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள், மகளே திரும்பிச்செல்! நீ பொறுமையை மேற்கொண்டு அவருடன் நல்ல முறையில் இணைந்திருந்தால் பின்பு அவர் மரணித்து அவருக்கு பின் நீ திருமணம் செய்யமால் இருந்தால் பின்பு நீங்கள் இருவரும் சொர்கத்தில் நுழைந்தால் அதில் நீ அவரது மனைவியாக ஆவாய் என்று கூறினார்கள்.

நூல்: முஸன்னஃப் அப்திர்

ரஸ்ஸாக் 20599

இது போன்ற செய்திகள் நபித்தோழர்களுக்கு மத்தியில் பிரபலமாக இருந்துள்ளது என்பது தெளிவு.

ஐயம் -3: இங்கிருக்கும் துணையைவிடச் சிறந்த துணையைக் கொடு என்று ஜனாஸா தொழுகையில் பிரார்த்தனை செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்கள். இறந்தவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இவ்வாறு பிரார்த்தனை செய்வது நபிவழியாகும். இங்கிருப்பதை விட சிறந்த துணை மறுமையில் ஆண்களுக்கு இருப்பது கேபால் பெண்களுக்கும் உண்டு என்று அறிய முடிகிறது."

தெளிவு -3: இந்தப் பிரார்த்தனையின் வாசகங்களை சரியாகப் புரியாததால் ஏற்படும் ஐயம் இது. முதலில் அந்தப் பிரார்த்தனையைப் பார்ப்போம்.

(
நீண்ட பிரார்த்தனையின் இடையில்) "மேலும் இங்குள்ள வீட்டை விடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக, இங்குள்ள குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தை அவருக்கு வழங்குவாயாக"

இந்த பிரார்த்தனையில் இடம்பெறும் சிறந்த வீடு என்பது இந்த உலக வீட்டோடு தொடர்பில்லாத வேறொரு வீடு என்பது சரி. ஆனால் அதற்கடுத்து கேட்கப்படும் மனிதர்கள் குறித்த பிரார்த்தனையில் அதே மாதிரி கருத்து கொள்ளவே முடியாது. ஏனென்றால் துணையைப்பற்றி கேட்பதற்கு முன்பு இந்தப் பிரார்த்தனையில், இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை அவருக்கு வழங்குவாயாக" என்று உள்ளது.

துணையைத் தவிர்த்த குடும்பம் என்பது பெற்றவர்களையும் பிள்ளைகளையும் குறிக்கும். இந்த (3வது) ஐயத்தைக் கிளப்பியவர்களின் வியாக்கியானத்தின் படி இங்கிருக்கும் அம்மா அப்பாவை விட சிறந்த வேறு அம்மா அப்பாவைக் அவருக்குக் கொடு. இங்கிருக்கும் பிள்ளைகளைவிட சிறந்த வேறு பிள்ளைகளைக் கொடு என்று கூறுவதாக அர்த்தம் வரும்.

ஆனால் அப்படிச் சொன்னால் அர்த்தமற்ற பிரார்த்தனையாகப் போகும் அதனால் அப்படி புரிவதில்லை.

அப்படியானால் இதற்கு என்ன கருத்து? மனிதர்கள் சொர்கத்திற்கு சென்று விட்டாலே அவர்கள் உடல் அமைப்பிலும் அழகிலும் வசதி வாய்ப்பிலும் இந்த உலகத்தில் இருந்ததை விட மிகவும் மாறுபட்ட உயர்ந்த நிலையை அடைந்து விடுவார்கள். இந்த (இறந்து போன) நபர் தனது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் அப்படிப்பட்ட சிறந்த நிலையை அடைந்தவர்களாகக் கண்டு இணைய வேண்டும் என்பது இந்த பிரார்த்தனையின் கருத்து.

இதே விதத்தில் தான் துணையைப் பற்றிய பிரார்த்தனையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஒழுங்காக புரிந்ததால் தான் ஹதீஸ் அறிஞர்கள் உள்ளிட்ட மிகப் பெரும்பாலான மக்களுக்கு இப்படிப்பட்ட ஐயம் எழவில்லை.

இந்த (3வது) ஐயத்திற்கு இன்னொரு விதத்திலும் தெளிவு அளிக்க முடியும். அதாவது இந்த (இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை அவருக்கு வழங்குவாயாக என்ற) பிரார்த்தனையை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மனைவியருக்கான ஜனாஸா தொழுகையிலும் முஸ்லிம்கள் செய்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்களைவிடச் சிறந்த துணையை அவர்களுக்காக கேட்டதாக கருத்துக் கொண்டால் மிகப் பெரிய தவறாகும். அதே நேரத்தல் நாம் தெளிவு படுத்தியுள்ள கருத்துப்படி புரிந்தால் எந்த தவறும் சிக்கலும் இருக்காது.

ஐயம் – 4: ஆண்களுக்கு சொர்க்கத்தில் ஹுருன் ஈன் மனைவியர் இருப்பது போல் பெண்களுக்கும் உண்டு என்று முடிவு செய்வதே குர்ஆனில் பெண்களுக்கும் நற்கூலி உண்டு என்று கூறும் குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் ஏற்புடையதாகும். இது தான் இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.

தெளிவு – 4: நற்கூலி உண்டு என்பதினால் அப்படியே சரிக்குச் சமமாக கிடைக்க வேண்டும் எனபதில்லை. அவரவர் தன்மைக்கும் தகுதிக்கும் தக்கவாறு அல்லாஹ் நற்கூலி வழங்குவான். அதுதான் நீதி. இன்னும் சொல்லப் போனால் கூடுதலாக வழிபட்டட சிலருக்கு அவர்களுக்கான கூலியை குறைவில்லாமல் அநீதமில்லாமல் கொடுத்து விட்டு அவர்களை விட குறைந்த அளவு வழிபட்ட சில மக்களுக்கு அவர்களை விட கூடுதலான சிறப்பான கூலியை அல்லாஹ் வழங்குவான். அப்போது கூடுதலாக வழிபட்ட முந்தையவர்கள் அதிகமாக வழிபட்ட எங்களுக்கு ஏன் குறைந்த கூலி? என கேள்வி எழுப்பும் போது அல்லாஹ் அவர்களிடம் நான் உங்களுக்கான கூலியில் எதையும் குறைக்கவில்லை. நான் சிலருக்கு கொடுக்கும் கூலியை அதிகரித்து சிறப்பிக்கிறேன். அது எனது தனிப்பட்ட கிருபை அதை நான் நாடியவர்களுக்கு கொடுப்பேன் என்று பதிலளித்து விடுவான்.

(
இந்த கருத்து ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பார்க்க புகாரி: 557,2268,2269,3459,5021, திர்மிதி 2871 மற்றும் அஹ்மத் உள்ளிட்ட நூல்கள்)

அதனால் அல்லாஹ்வுக்கு நாம் நீதியை சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.

இதுவரை மறுமையில் சொர்க்கம் செல்லும் தம்பதிகள் சொர்கத்தில் தம்பதிகளாக இருக்கமாட்டார்கள் என் கூறி எழுப்பப்பட்ட ஐயங்களுக்கான தெளிவுகளைப் பார்த்தோம்.

இனி சொர்க்கம் செல்லும் நல்ல தம்பதிகள் அங்கும் கணவன் மனைவியாக இணைவார்கள் என்பதற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ் கூறுகிறான்: "அவர்களும் அவர்களின் பெற்றோர் மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் நுழைவார்கள்." அல்குர்ஆன் 13:23

  இந்த வசனம் சொர்க்கத்தில் நுழையும்போது பெற்றோர் சந்ததிகள் உறவு இருப்பது போல் மனைவியர் உறவும் இருப்பதை உணர்த்துகிறது. இதைத் தெளிவாக கீழ்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

அம்மார்(ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைக் குறித்து "அல்லாஹ் மீது சத்தியமாக அவர்கள் இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் உங்கள் நபி(ஸல்) அவர்களின் மனைவியாவார்" என்று கூறினார்கள். – நூல்: புகாரி 7100, 7101

மேற்கண்ட இரு அறிவிப்புகளையும் படிக்கும் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அலி(ரலி) அவர்களுக்கு எதிராக படை திரட்டிச் சென்றதற்கு எதிராக அம்மார்(ரலி) அவர்கள் மக்களிடம் பேசிய போது கூறியது என்பதை அறியலாம். அதாவது ஆயிஷா (ரலி) அவர்களின் அப்போதைய நிலைப்பாட்டை எதிர்த்தாலும் அவர்களின் சிறப்பை ஒப்புக் கொள்ளும் விதத்தில் இச்செய்தியைச் சொல்லிக் காட்டுகிறார்கள்.

எனவே அம்மார்(ரலி) அவர்கள் தனாக இதை சொல்லியிருக்க முடியாது! நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்றிருந்தால் தான் இவ்வாறு கூற முடியும். அத்துடன் அல்லாஹ் மீது சத்தியம் செய்து இச்செய்தியைக் கூறுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்களே கூறுவது: ஜிப்ரீல்(அலை) அவர்கள நபி(ஸல்) அவர்களிடத்தில் பச்சைப் பட்டுத் துணியில் என்னுடைய வடிவத்தைக் கொண்டு வந்து இது இவ்வுலகிலும் மறு உலகிலும் உமது மனைவி என்று கூறியுள்ளார்கள்.

நூல்: திர்மிதி 3880, இப்னு ஹிப்பான் 7094, பஸ்ஸார் 225)

மேலும் அன்னை ஹஃப்ஸா(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் தலாக் செய்த போது ஜிப்ரீல்(அலை) நபியிடம் வந்து ஹஃப்ஸாவை மீட்டுக் கொள்ளுங்கள். அவர் அதிகம் நோன்பு நோற்பவர், அதிகம் நின்று வணங்குபவர், அவர் சொர்க்கத்தலும் உமது மனைவி என்று கூறியதாக ஒரு நபி மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல்: அல்முஃஜமுல் அவ்ஸத் 151, ஹாகிம் 6754

இதன் அறிவிப்பாளர் தொடரில் குறை இருந்தாலும் வெவ்வேறு வழிகளில் அறிவிக்கப்படுவதன் மூலம் ஹசன் தரத்தில் அமைந்த நபிமொழி என்று ஷேக் அல்பானீ கூறுகிறார்கள். பார்க்க: ஸில்ஸித்துல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா 2007

மேலும் இந்தக் கட்டுரையில் இரண்டாவது ஐயத்துக்கான தெளிவில் நாம் குறிப்பிட்டுள்ள அபுத்தர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மற்றும் அபூபக்ர்(ரலி) அவர்கள்; தனது மகள் அஸ்மா(ரலி) அவர்களுக்கு கூறியது ஆகியவைவும் சொர்க்கம் செல்லும் நல்ல தம்பதியர் சொர்க்கத்திலும் தம்பதியராக இருப்பார்கள் என்பதற்கு கூடுதல் ஆதாரங்களாக உள்ளன.

 அல்லாஹுதஆலா கூறுகிறான்: "யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின் தொடர்ந்தார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளை (சொர்க்கத்தில் ஒன்று) சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்கு பிணையாக்கப்பட்டவனாவான்." – அல்குர்ஆன்: 52:21

இந்த வசனத்தில் பெற்றவர்களுடன் சந்ததிகளை சேர்த்து வைப்பது பற்றி சொல்லப்படுகிறது. இதன்படி அந்த சந்ததிகளின் பெற்றவர்கள் சொர்க்கவாசிகள் எனும் போது அவர்கள் (அந்த பெற்றோர்) இணைந்திருப்பார்கள் என்றுதான் அர்த்தமாகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் சரியானதை அறிந்து கொள்ள அனைவருக்கும் நல்லுதவி செய்வானாக!
நன்றி அஹ்லுல் இஸ்லாம்
http ://ahlulislam .net

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

இணைவைப்பவர்கள்அன்றும், இன்றும்.


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

தற்காலத்தில் வாழும் கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களிடம், "ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் போல நீங்களும் கப்ருகளை வணங்குகிறீர்களே" என்று கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் என்னவென்றால்,

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்களோ எந்த சிலைகளையும் வணங்கவில்லை; இறைநேச செல்வர்களின் கப்ருகளுக்கு சென்று அவர்களிடம் தானே பிரார்த்திக்கின்றோம் (துஆச் செய்கின்றோம்)! அந்த இறை நேச செல்வர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்து கண்ணியப்படுத்துகிறோம்! எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத் தருமாறு அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம்! ஆனால் நாங்கள் அவர்களை வணங்கவில்லை" என்று கூறுகின்றனர்.


இங்கு நாம் மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி நன்கு தெரிந்துக் கொள்ள வேண்டும். வணக்கம் என்றால் என்ன? என்று அவர்களிடம் கேட்டால், உடனே அவர்கள் "தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகியவை வணக்கமாகும்" என்று பதில் கூறுவார்கள். வணக்கம் என்பது மேற் கூறியவைகள் மட்டுமன்று. பிரார்த்தனை, வேண்டுதல், நேர்ச்சை செய்தல் , அறுத்துப் பலியிடுதல், உதவி கோருதல், பாதுகாவல் தேடுதல் இவைகள் அனைத்துமே வணக்கமாகும். இவைகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும். (மேலதிக விபரங்களுக்கு…)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

"
பிராத்தனையும் (துஆவும்) வணக்கமாகும்" (அபூதாவூத்)

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளின் கடவுள் நம்பிக்கை எவ்வாறிருந்தது எனில், இவ்வுலகத்தையும் அதில் உள்ளவர்கள் அனைவரையும் படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ் என்றே அறிந்து வைத்திருந்தனர். இதை இறைவனுடைய திருமறையும் பின்வருமாறு கூறுகிறது.

'
உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் 'அல்லாஹ்' என பதிலளிப்பார்கள் 'அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?' என்று நீர் கேட்பீராக. (அல்-குர்ஆன் 10:31)

மேலும் பார்க்கவும் அல்-குர்ஆனின் வசனங்கள் 43:87 மற்றும் 29:63.

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொணடிருந்தார்களே! பிறகு எதற்காக இறைவன் அவர்களை "முஷ்ரிக்குகள்"  என்று அழைக்க வேண்டும்? காரணம் என்னவெனில் அவர்கள் முன் சென்ற நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் உருவங்களை சிலைகளாக வடித்து அந்த சிலைகளிடம் தங்களின் தேவைகளை முறையிட்டு வந்தனர். அந்த சிலைகளிடமே உதவி தேடினர். ஆபத்து காலங்களில் பாதுகாவலும் தேடி வந்தனர்.

"
படைத்தவனிருக்க அவனை விட்டு விட்டு, ஏன் இந்த சிலைகளிடம் பிரார்த்திக்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் அளித்த பதில், "எங்களுடைய தேவைகள் நிறைவேறுவதற்காக மற்றும் அவைகள் எங்களை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கிவைக்கும் என்பதற்காகத்தான் நாங்கள் அந்த சிலைகளை வணங்குகிறோம்" என்று கூறினர். இதை அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகிறான்.

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், 'அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை' (என்கின்றனர்). (அல்-குர்ஆன் 39:3)

 ஜாஹிலிய்யாக் கால முஷ்ரிக்குகளின் செயல்களோடு தற்போது கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களின் செயல்களை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், இவைகளிலிருந்து நாம் பெறும் தெளிவு என்னவெனில்,

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் இந்த 'அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து ஆட்சி செலுத்தி வருபவன் அல்லாஹ் ஒருவனே' என்று நம்பியிருந்தார்கள்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் நபிமார்கள், இறந்த நல்லடியார்கள் ஆகியோர்களிடம் தங்களின் தேவைகளை கேட்டும், ஆபத்து காலங்களில் பாதுகாவல் தேடியும்  வந்தனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் இறந்த நல்லடியார்களிடமும், இறைநேசர்களிடமும் ஷெய்கு மார்களிடமும் தங்களின் கோரிக்கைகளையும் பிரார்தனைகளையும் செய்கின்றனர். ஆபத்து காலங்களில் அவர்களிடம் பாதுகாவலும் தேடுகின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் இறந்து போன அந்த நல்லடியார்களின் உருவங்களைச் சிலைகளாக வடித்து, அவற்றை பூஜித்து வந்தனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் இறந்த நல்லடியார்கள், இறைநேசர்கள் என சொல்லப்படுவோர் இறந்தவுடன் அவர்களுடைய கல்லறைகளில் கட்டடங்கள் (தர்ஹா) எழுப்பி அவர்களுடைய கப்றுகளை உயரமாக எழுப்பி, அவற்றிற்கு சந்தனம் பூசி, போர்வைகள் போர்த்தி, பூமாலைகள் அணிவித்து பூஜை புணஸ்காரங்கள் செய்கின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள் அந்த சிலைவடிவத்தில் உள்ள நல்லடியார்களுக்காக நேர்ச்சை செய்து அவர்களுக்காக காணிக்கை செய்து அறுத்துப் பலியிட்டனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் கப்ருகளில் அடக்கமாகியிருக்கும் இறந்த நல்லடியார்கள், இறைநேசர்கள் என சொல்லப்படுவோர்களுக்காக நேர்ச்சைகள் செய்தும் அறுத்துப் பலியிட்டும் வருகின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகள், நல்லடியார்களின் உருவத்தில் உள்ள சிலைகளை தவாபு செய்து அவர்களிடம் மன்றாட்டம் செய்து வந்தனர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளும் நல்லடியார்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மன்றாடுகின்றனர்.

அன்று : ஜாஹிலிய்யாக்காலத்து முஷ்ரிக்குகளிடம் படைத்த இறைவனை விட்டு விட்டு நீங்கள் ஏன் இந்த சிலைகளை இப்படி வழிபடுகறீர்கள் என்று கேட்டால், "நாங்கள் இந்த சிலைவடிவத்தில் இருக்கின்ற நல்லடியார்களிடம் பிரார்த்தித்தால், அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்து எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுத்தருவார்கள்" என்று கூறினர்.

இன்று : இன்றைய கால கப்று வணங்கிகளிடம், அதே போல் கேட்டால் "நாங்கள் இந்த கப்றுகளில் அடக்கமாகியிருக்கும் இறை நேசர்களிடம் பிரார்த்தித்தால், அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்து எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுத்தருவார்கள்" என்று கூறுகிறார்கள்.

என தருமை சகோதர, சகோதரிகளே! சற்று சிந்தனை செய்து பாருங்கள்! ஜாஹிலிய்யாக் கால முஷ்ரிக்குகளுக்கும் இன்றைய காலக் கட்டத்தில் வாழும் கப்று வணக்க முறைகளை ஆதரிப்போருக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் செய்தவற்றையே தான் இவர்களும் செய்கின்றார்கள். அவர்கள் கூறிய காரணத்தையே இவர்களும் கூறுகின்றார்கள்.

சிலருக்கு கோபம் வரலாம். நாங்கள் கப்ருகளை வணங்கவில்லையே! எங்களை ஏன் கப்று வணங்கி என்று திட்டுகிறீர்கள் என்று?

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நல்லடியார்களின் வடிவத்தில் இருந்த உருவச்சிலைகளை வலம் வந்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்தி அதன் மூலம் அந்த நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்தனர். அதனால் அவர்களை சிலை வணங்கிகள் என்கிறோம்.

மாற்று மதத்தவர்கள் தங்களின் கடவுள் உருவத்தில் இருப்பதாக அவர்கள் கருதுகின்ற அந்த சிலைகளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து, அந்த சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அந்த தெய்வங்களை வணங்குவதால் அவர்களையும் சிலை வணங்கிகள் என்கிறோம்.

ஆனால் இறைநேசர்கள் அடக்கமாகியிருக்கும் கப்ருகளை வலம் வந்து, அதற்கு பூசி, மெலுகி, போர்வை போர்த்தி, நெய் விளக்கு ஏற்றி, சந்தனம் பூசி, பத்தி கொழுத்தி, பூமாலை அணிவித்து அந்த சிலைகளை வணங்குவோர் என்னென்ன காரியங்களை அந்த சிலைகளுக்கு செய்கிறார்களோ அவையனைத்தையும் அந்த நல்லடியாரின் கப்றுகளுக்கு செய்பவரை கப்று வணங்கி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

அல்லாஹ்விடம் நேரடியாக கேட்பதை விட்டு விட்டு அந்த நல்லடியார்களின் சிலைகளிடம் இவர்கள் கேட்ட காரணத்தால் அவர்களை அல்லாஹ் "முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்)" என்றான். அதே செயல்களையே செய்யும் தற்காலத்தவர்களை என்ன சொல்வது? சிந்தியுங்கள் சகோதர, சகோதரிகளே!

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருந்தாலும் தான் நாடினால் மன்னித்து விடுவேன் என்று கூறுகிறான். ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்று கூறுகிறான். இறைவனால் மன்னிப்பே கிடைக்காத அத்தகைய படுபயங்கரமான பாவம் என்னவெனில் "இறைவனுக்கு இணை வைத்தலாகும்". அதாவது எந்த தேவைகளையும் இறைவனிடம் நேரடியாக கேட்டுப் பெறாமல் இடைத்தரகர் (அவுலியா, இறை நேசர் போன்றவர்கள்) மூலம் கேட்டு பெறுவது இத்தகைய இணைவைப்பாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

'
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (அல்குர்ஆன் 4:116)

அல்லாஹ் நம் முஸ்லிமான நம் அனைவரையும் காப்பாற்றி நமக்கு அவனுடைய நேர்வழியை காட்டுவானாகவும்.
நன்றி :சுவனத்தென்றல்
இணைவைப்பவர்கள் அன்றும், இன்றும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 19 ஏப்ரல், 2021

துஆவின்சிறப்பும், மதிப்பும் 🌙👍


அல்லாஹ்வின் திருப்பெயரால்....
துஆ முஃமின்களுக்கு ஒரு பெரிய ஆயுதம்! துஆ கேட்கும் அடியார்களை அல்லாஹ் விரும்புகிறான். துஆ கேட்காத அடியார்களை அல்லாஹ் கோபப்படுகிறான் என்று ஒரு ஹதீஸின் கருத்து:
''உங்கள் இறைவன் கூறுகிறான்: நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்)என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்து கொள்வேன் . எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றாரோ அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.'' (அல்குரான் 40-60)
(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ''நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன் (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன், ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும் என்னையே நம்பிக்கை கொள்ளவும்.(அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள். (அல்குரான் ;2-186)
நபி (ஸல்) கூறினார்கள்: ''துஆ தான் வணக்கமாகும்.'' உங்களது இறைவன் கூறுகின்றான்: ''என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதில் தருகிறேன்.''
(ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதி)
இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களது இறைவன் மிக வெட்கமுள்ளவன், சங்கை மிக்கவன் தனது அடியான் இரு கரங்களையும் தன் பக்கம் உயர்த்தி பிராத்தனை செய்யும்போது அவனது கைகளை காலியாக திருப்புவதைக் கண்டு அவன் வெட்கமடைகிறான்.
(ஸஹீஹுல் ஜாமிஃ வுஸ் ஸகீர் )
மேலும் கூறினார்கள்: பாவம் அல்லது உறவை முறிப்பது இவை இன்றி ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்தால் அல்லாஹ் மூன்றில் ஒன்றை நிச்சயமாக அவருக்கு வழங்குவான். ஒன்று அவனது அழைப்பு உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும்.அல்லது மறுமையில் அவருக்கு நன்மை வழங்கப்படும்.அல்லது அவர் கேட்ட நன்மைக்கு சமமாகவுள்ள தீங்கை அல்லாஹ் அகற்றி விடுவான்.
இதைக் கேட்ட தோழர்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால் நாங்கள் அதிகமதிகம் துஆ கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அதைவிட அதிகமதிகம் வழங்கக்கூடியவன்.
சஹீஹுத் திர்மிதி) 
துஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்கப்படுவதற்கான காரணங்கள் 

*
அல் இக்லாஸ் (மனைத்தூய்மை) அல்லாஹ்வின் திருப்தியையும் பொருத்தத்தையும் மட்டும் நாடவேண்டும்  .

*
துஆவின் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வைப் புகழவேண்டும் .நபியின் மீது  ஸலவாத்தும் கூறவேண்டும்.

*
உறுதியான வாசங்களைக் கொண்டு துஆ கேட்க வேண்டும். அது அங்கீகரிக்கப்படும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும்.

*
தொடர்ந்து கெஞ்சிக் கேட்கவேண்டும். அவசரம் கூடாது.

*
துஆவில் மன ஓர்மை இருக்கவேண்டும்.

*
சுகம், துக்கம், வசதி, நெருக்கடி  என எல்லா நிலைமைகளிலும் துஆ கேட்கவேண்டும்.

*
அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கவேண்டும்.

*
உறவினர், செல்வம் பிள்ளைகளுக்கு எதிராகவும் தனக்கு எதிராகவும் துஆ கேட்கக் கூடாது.

*
துஆ கேட்கும்போது மிகவும் தாழ்ந்த குரலுமின்றி , உரத்த சப்தமுமின்றி நடுத்தரத்தில் கேட்கவேண்டும்.

*
தன் பாவங்களையும் குற்றங்களையும் ஒப்புக் கொண்டு அதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அல்லாஹ்வின் அருட்கொடைகளை ஏற்றுக் கொண்டு அவற்றிற்கு நன்றி செலுத்தவேண்டும்.

*
துஆ கேட்கும்போது வாசகக் கோர்வைக்காக சிரமம் எடுத்துக் கொள்ள கூடாது.

*
துஆவில் பணிவு, பயம் , நடுக்கம் , ஆர்வம் ஆகியவை இருக்கவேண்டும்.

*
உரிமைகளை உரியவர்களிடம் ஒப்புடைத்து விடவேண்டும் .

*
ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை கேட்கவேண்டும் .

*
கிப்லாவை முன்னோக்க வேண்டும். கைகளை உயர்த்தி கேட்கவேண்டும்.

*
முடிந்தால் துஆ கேட்பதற்கு முன் உளு செய்து கொள்ளவேண்டும்.

*
துஆ கேட்பதில் எல்லை மீறக்கூடாது .

*
பிறருக்கு துஆ செய்யும்போது முதலில் தனக்கு செய்து கொள்ளவேண்டும். (ஆனால் இது  கட்டாயம் அல்ல )

*
அல்லாஹ்விடம் வஸீலா தேடவேண்டும். அதாவது, அவனது அழகிய பெயர்கள் மற்றும் பண்புகளைக்  கொண்டு அவனைப் புகழ்ந்து கேட்பது அல்லது தான்  செய்த ஒரு நற்செயலைக் கூறிக் கேட்பது. அல்லது தனக்கருகில் உயிர் வாழும் நல்லவர் ஒருவர் தமக்காக கேட்ட துஆவைக் கூறிக் கேட்பது. உதாரணமாக ''அல்லாஹ்வே! இன்னவர் எனக்காக உன்னிடம் துஆ கேட்ட துஆவை என் விஷயத்தில் ஏற்றுக்கொள் என்று கேட்பது.

*
உணவு , குடிப்பு , ஆடை ஹலாலாக இருக்கவேண்டும்.

*
துஆவில் பாவமான காரியத்தையோ உறவை முறிக்கும் விஷயத்தையோ கேட்கக் கூடாது.  துஆ கேட்பவர் நன்மையை ஏவுபவராகவும் தீமையை தடுப்பவராகவும் இருக்கவேண்டும். எல்லாப் பாவங்களையும் விட்டும் விலகி இருக்கவேண்டும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

கை கழுவுவதை வலியுறுத்தும்இஸ்லாம்

"குரோனோ வைரஸ்"ஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கைகளை கழும்படி இன்று உலக மக்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள். இஸ்லாமோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே அதை வலியுருத்திக் கொண்டிருக்கிறது.  கை கழுவுவதை வலியுறுத்துவதன் நோக்கம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் பெரும்பாலான நோய்கள் கைகளின் தூய்மையின்மையால் ஏற்படுகிறது.
கைகளில் நம்மையும் அறியாமல் பரவியிருக்கும் அசுத்தத்தின் காரணமாக, நாம் கையை சுத்தம் செய்யாமல் நமது உடலின் ஏனைய பகுதிகளை தொடுவதாலும், கைகளை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதாலும் உடல்ரீதியாக பல்வேறு நோய்களை நாம் சந்திக்கவேண்டியுள்ளது.
மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு அவனது முழு உடல் தூய்மை மிகஅவசியம். அதிலும் குறிப்பாக கைகளின் தூய்மை மிக மிக அவசியம். எனவே இஸ்லாம் இந்த தூய்மையை என்றோ அனுஷ்டிக்கும் ஒரு சடங்காக சொல்லாமல், அன்றாடம் மனித வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் தூய்மையை கடமையாகவே ஆக்கியிருப்பதை காணலாம்.
தொழுகையில்....
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆண்-பெண் அனைவர் மீதும் தொழுகை கடமை என்பதை அனைவரும் அறிவோம். அந்த தொழுகை நிறைவேற வேண்டுமானால் 'உளூ' எனும் சுத்தம் மிகமிக அவசியம். அல்லாஹ் கூறுகின்றான்;
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ
بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ وَإِن كُنتُم مَّرْضَى
أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاء أَحَدٌ مَّنكُم مِّنَ الْغَائِطِ
أَوْ لاَمَسْتُمُ النِّسَاء فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا فَامْسَحُواْ
بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ مَا يُرِيدُ اللّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـكِن يُرِيدُ لِيُطَهَّرَكُمْ
وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள் ;. உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) -
நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;.
அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். (அல்குர்ஆன் 5:6)
இந்த வசனத்தில் 'உளூ' எனும் அங்கசுத்தி செய்தல், உடலுறவு செய்வதன் மூலம் குளிப்புகடமையானால் குளித்தல் அல்லது தயம்மும் செய்தல் ஆகிய கடமைகளை வலியுறுத்திய இறைவன், இதன் மூலம் அல்லாஹ் உங்களை தூய்மைப்படுத்த நாடுகிறான் என்று கூறுவதன் மூலம் இஸ்லாம் தூய்மையை எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
குளிப்பு கடமையான நிலையில் தூங்க நாடினால்....
'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் தூங்கியிருக்கிறார்களா?' என ஆயிஷாரளியல்லாஹு அன்ஹாஅவர்களிடம் நான் கேட்டதற்கு 'நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க நினைத்தால், தங்கள் மர்மஸ்தலத்தைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குரிய உளூச் செய்வார்கள்" என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்.  (புகாரி)
இல்லற வாழ்க்கையில் ஈடுபடும்போது அதன் மூலம் ஏற்படும் அசுத்தங்களை களையும் பொருட்டு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம்அவர்கள் உளூ செய்து தூங்கியிருக்கிறார்கள். அவ்வாறே முஸ்லிம்களும் பணிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இங்கும் தூய்மை வலியுறுத்தப்பட்டுள்ளதை காணலாம். மேலும் உடலுறவு கொள்ளாமல் சாதரணாமாக தூங்க நாடினாலும் அப்போதும் உளூ செய்யுமாறு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம்அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்;
'நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூ செய்து கொள்.
பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்.
பின்னர் 'யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன்.
என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன்.
என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன்.
உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன்.
உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை.
யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன்.
நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்' என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள்.
(இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆம்விடுகிறாய்.
இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்''
என்று என்னிடம் இறைத்தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  கூறினார்கள். (புகாரி)
குளிப்பு கடமையான நிலையில் உண்ண நாடினால்....
ஆயிஷாரளியல்லாஹு அன்ஹாஅவர்கள் அறிவிக்கிறார்கள். ''நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம்அவர்கள் உண்ண அல்லது உறங்க விரும்பும் போது உலூச் செய்து கொள்வார்கள்.'' குளிப்புக் கடமையாக இருக்கும் போது (அவ்வாறு செய்தார்கள்) என்பதையே அவர்கள் குறிப்பிட்டார்கள்.[அபூதாவூத்]
மீண்டும் உறவுகொள்ள நாடினால்...
உங்களில் ஒருவர் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அவ்விரண்டிற்கும் இடையில் அவர் உலூச் செய்வாராக! என்று அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம்அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீரளியல்லாஹு அன்ஹு [அபூதாவூத்)
சிறு நீர் கழித்தால்.....
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, தனது வலது கையால் தனது மர்மஉறுப்பைத் தொட வேண்டாம். மேலும் அவர் கழிப்பிடத்திற்கு சென்றால், தனது வலது கையால் சுத்தம் செய்ய வேண்டாம், மேலும் அவர் நீர் அருந்தினால் ஒரே மூச்சில் நீர் அருந்த வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம்அவர்கள் கூறினார்கள் என்று அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள்.[புஹாரி]
இவ்வாறாக அன்றாடம் தூய்மையை வலியுறுத்தும் ஏராளமான விஷயங்களை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளது. அதில் சிலவற்றை மட்டுமே இங்கு மேற்கோள் காட்டியுள்ளோம். ஒருவன் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்தாலே அவன் தூய்மையானவனாகவும், ஆரோக்கியமானவனாகவும் திகழ்வான் [இறைவன் நாடியவை நீங்கலாக] என்பதில் ஆச்சரியமில்லை.
''Jazaakallaahu khairan'' முகவை எக்ஸ்பிரஸ்.
http://nidur.info   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts