லேபிள்கள்

ஞாயிறு, 23 மார்ச், 2025

ஏர்-கூலர் மற்றும் ஃபேனில் வரும் காற்று போதவில்லையா?

வீட்டில் உள்ள ஏசி, ஏர்-கூலர், ஃபேன் போன்றவை பல மாதங்களாக பயன் படுத்தப்படாமல் இருந்திருக்கக் கூடும்.

இப்போது வெயில் காலம் தொடங்கிய உடன், முதல் வேளையாக ஏசியை நீங்கள் சீர் செய்திருக்கக் கூடும்.

ஆனால், கூலர் மற்றும் ஃபேன் ஆகியவை சரியாக தான் இயங்கும் என்று நம்பிக்கையில் நீங்கள் அப்படியே விட்டிருப்பீர்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு கூலர் மற்றும் ஃபேன்கள் அதிக நேரம் செயல்பட தொடங்கும். வோல்டேஜ் அளவு சரியாக உள்ள போதிலும், சில சமயம் போதுமான காற்று கிடைக்காமல் இருக்கும். உங்கள் வீட்டில் பவர் யூனிட்கள் சீராக செயல்படுகின்ற போதிலும், ஃபேன்களில் காற்று நன்றாக வரவில்லை என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உடனடியாக அதன் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கூலர் மற்றும் ஃபேன்களின் செயல்திறனையும், வேகத்தையும் அதிகரிப்பது எப்படி என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். மேலும், மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பாகவும் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் எலெக்ட்ரீசியனை வரவழைத்து சீர் செய்ய வேண்டும் என்றோ அல்லது புதிய ஃபேன் வாங்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை. ஒரு சின்ன விஷயத்தை நீங்கள் செய்தால் போதும், உங்கள் ஃபேனின் வேகம் அதிகரித்து விடும்.

எந்தவொரு ஃபேனும் பிரஸரை கீழ்நோக்கி தள்ளுவதன் காரணமாகத்தான் காற்று கிடைக்கிறது. இதனால், ஃபேன் பிளேடுகள் மிக கூர்மையாகவும், முன் பகுதியில் வளைந்தும் காணப்படுகிறது.

முதலில் தூசியை சுத்தம் செய்யுங்கள்

கண்களுக்கு புலப்படாத தூசி மற்றும் காற்றில் கலந்து வரும் மண் துகள்கள் ஆகியவை ஃபேன்களுடைய பிளேடுகளில் படிந்து காணப்படும். உங்கள் ஃபேன் வேகம் அதிகரிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தூசி இருப்பதால், ஃபேன்களின் லோடு அதிகரித்து விடுவதே அதற்கு காரணமாகும்.

வேகம் குறையும் அதே சமயத்தில், மோட்டார் சுத்துவதற்கு மிகுந்த எனர்ஜியை எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக மின் கட்டணம் அதிகரிக்கும். நீங்கள் ஏர் கூலர் அல்லது டேபிள் ஃபேன் அல்லது ஏசி பயன்படுத்துகிறீர்கள் என்றாலும், இந்த விதிமுறை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

சரி, ஃபேன் அல்லது ஏர் கூலரில் தூசி படிந்திருப்பது உங்கள் பார்வைக்கு எட்டி விட்டது. இப்போது பலரும் செய்யும் தவறு என்ன என்றால், அதை நேரடியாக பிரெஷ் கொண்டு சுத்தம் செய்வது தான். இப்படி செய்தால், அதில் உள்ள தூசி முழுமையாக வெளியேறாது. மேலும், தூசி உங்கள் மூக்கில் ஏறி, ஜலதோஷம் பிடிக்கக் கூடும். ஆகவே, நல்ல காட்டன் துணியை எடுத்து, ஈரத்தில் நனைத்து அதைக் கொண்டு சுத்தம் செய்யவும். அதே சமயம், பிளேடுகளை மிக அழுத்திப் பிடித்துக் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது. அதன் அமைப்பு நெளிந்து விட வாய்ப்பு உண்டு. இதையெல்லாம் செய்து முடித்த பிறகு ஃபேன் புதிது போல வேகமாக சுற்றத் தொடங்கும்.



--

புதன், 19 மார்ச், 2025

வீட்டை குளிர்ச்சியாக்குவது எப்படி?

வீட்டை அழகாக கட்டினாலும் காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்ப தாக்கம் குறையும்.

கோடை நெருங்குவதால் வெப்பத்தை விரட்டி வீட்டை குளிர்ச்சியாக்க எளிய முறைகளை பின்பற்றலாம். போதுமான ஜன்னல்கள் ஒரு பக்கம் வீட்டிற்குள் காற்று வந்தாலும் மறு பக்கம் வெளியேறும் அமைப்பு இருக்க வேண்டும். அறையில் போதிய ஜன்னல் அமைக்கும் வகையில் ஜன்னல்கள் சரியான நீளம், அகலம் உள்ளதாக அமைப்பது நல்லது. காலை நேரம் கதவு, ஜன்னல்களை நன்றாக திறந்து வையுங்கள்.

வெயில் அதிகம் இருக்கும் போது அதை மூடிவிடுங்கள். வெப்பமானது வீட்டுக்குள் அதிகம் உட்புகாமல் இருக்கும்.சமையல் அறையில் சமைக்கும் போது வெளியேறும் புகை, காற்றில் கலந்து அறையில் பரவும். சமையல் அறையில் காற்றோட்ட வசதி மட்டும் போதாது. சமைக்கும் போது வெளிப்படும் நெடி வெளியேற வேண்டும்.

அதற்கு எக்சாஸ்ட் பேன் அவசியம். மஞ்சள் விளக்கு வேண்டாம் வெயிலின் தாக்கம் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க மெல்லிய ஜன்னல் திரைகளை உபயோகிக்க வேண்டும். இதனால் காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும். பால்கனி, ஜன்னல்களில் மூங்கில் திரைகளை பயன்படுத்துங்கள்.

அதை அவ்வப்போது ஈரப்படுத்தினால் வீட்டை குளிர்ச்சியாக்க வைத்திருக்க உதவும். ஈரப்பதம் காற்றில் கலந்து இதமான சூழலை ஏற்படுத்தும்.வீடுகளில் உள்ள சீலிங், எக்சாஸ்ட் மின்விசிறிகளை அடிக்கடி துாசி படியாமல் சுத்தம் செய்ய வேண்டும். வெப்பம் அதிகம் உண்டாக்கும் மஞ்சள் நிற மின் விளக்குகளை தவிர்க்கலாம். அதற்கு மாறாக சி.எப்.எல்., எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தலாம்.

மாடி தரை தளத்தில் கூல் பெயின்ட் பூசினால் வீட்டிற்குள் வெப்ப தாக்கம் குறையும். மொட்டை மாடியில் செடிகள் மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ சிறு செடிகளை தொட்டியில் வளர்ப்பது வெப்பத்தை குறைக்க உதவும். அறைக்குள்ளும் அலங்கார செடிகளை வளர்க்கலாம். அவை அறைக்குள் பரவி இருக்கும் காற்றில் உள்ள துாசிகளை ஈர்க்கும். வீட்டின் காற்றோட்டமான ஒரு ஓரத்திலோ, பால்கனியிலோ, சிறிய தொட்டி அல்லது வாளியில் நீரை நிரப்பி வையுங்கள். அவையும் வெப்ப தாக்கத்தை குறைக்கும். ஆனால், அவற்றை சுத்தமாக வைத்து கொள்ளாவிட்டால் கொசுக்கள், பூச்சிகளின் கூடாரமாக மாறி விடும்.



--

ஞாயிறு, 16 மார்ச், 2025

விபத்தில்அடிபட்டவர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது ஏன்?

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனே தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று எந்த மருத்துவ விதியும் இல்லை.

தண்ணீர் கொடுப்பதால் யாரும் மரணம் அடையவும் மாட்டார்கள்.

ஆனால் விதிவிலக்குகள் உண்டு. விபத்து என்று சொல்வதை சாலை விபத்து என்று எடுத்துக் கொள்ளலாம்.

சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணங்கள் பெரும்பாலும் அதிக இரத்த சேதத்தினாலேயே ஏற்படுகின்றன. இரத்தம் வெளியேறுவது வெளிக் காயங்களாலும் நிகழலாம், வெளியே தெரியாத உள் காயங்களாலும் நிகழலாம்.

ஒருவர் விபத்தில் காயமுற்றுக் கிடக்கும் நிலையில் அருகில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்? விபத்தில் காயம் அடைந்தவர்களை (அவர் இறந்திருந்தாலும்) அருகில் இருப்பவர்கள் தாராளமாகத் தொட்டுத் தூக்கலாம்.

காவல்துறையினரோ, மருத்துவர்களோ நிச்சயம் ஆட்சேபிக்க மாட்டார்கள். முதலில், அடிபட்ட நபர் சுயநினைவோடு இருக்கிறாரா என்று பாருங்கள்.

நினைவு இல்லாமல் மயக்கத்தில் இருந்தால் அவருக்கு வாய் வழியாக தண்ணீரோ, உணவோ தரக்கூடாது. கொடுத்தால் அது அவருடைய மூச்சுப் பாதைக்குள் சென்று மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு.

அவரை சற்று நேராகப் படுக்க வைத்து மூச்சு சீராக இருக்கிறதா என்று பாருங்கள். உங்களுக்கு நாடித்துடிப்பு பார்க்க தெரிந்தால் கை மணிக்கட்டில் தொட்டு நாடித்துடிப்பு இருக்கிறதா என்று பாருங்கள்.

நாடித்துடிப்பு இருந்தால் மனிதர் உயிருடன் இருக்கிறார் என்று அர்த்தம். இல்லையென்றாலும் உயிருடன் இருக்க வாய்ப்பு உண்டு.

அதனால் இரத்தக்கொதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறதென்று அர்த்தம். கை, கால் போன்றவற்றில் வீக்கமோ அல்லது காயமோ இருக்கிறதா என்று கவனியுங்கள்.

அப்படி இருந்தால் அந்த பாகத்தை அசைக்காமல் அவரை மருத்துவமனைக்கு அனுப்ப முயலுங்கள். வயிறு, நெஞ்சு போன்ற இடங்களில் கை வைத்து ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று கவனியுங்கள்.

வயிறு கனமாகவும், மார்புப்பகுதி குழைவாகவும் இருந்தால் ஆபத்து. (பொதுவாக எல்லோருக்கும் வயிறு குழைவாகவும், மார்புப்பகுதி விலா எலும்புகள் இருப்பதால் விரைப்பாகவும் இருக்கும்).

எப்பொழுதெல்லாம் விபத்தில் அடிபட்டவர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது?

சுய நினைவு இல்லாமல் இருந்தால்

மூச்சு சீராக இல்லாமல் இருந்தால்

வயிற்றில் பலத்த அடிபட்டு இருந்தால்

தலையில் பலத்த காயங்கள் இருந்தால்

வலிப்பு, வாந்தி வந்திருந்தால்

இது போன்ற அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு தாராளமாக தண்ணீர் கொடுக்கலாம்.



--

வியாழன், 13 மார்ச், 2025

ரொட்டி மாவுக்கும் மைதா மாவுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன? தெரிந்து கொள்ளலாம்.

பேக் செய்யப்படும் அனைத்து வகை உணவுப் பொருட்களுக்கும், அதன் அவுட்டர் லேயரில் ஒரு மாவுப் பொருள் இடம் பெற்றிருக்கும்.

பெரும்பாலும் இதற்கு மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் ரீதியாக சரியான அளவுகோல் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே பேக்கிங் என்பது சிறப்பாக வரும்.

நம் நாவுக்கு சுவையூட்டக் கூடிய ரொட்டி அல்லது மைதா மாவு வகைகள் ஏராளமான உணவு வகைகளில் இடம்பிடிக்கின்றன. குறிப்பாக, நாம் பெரிதும் விரும்பி உண்ணும் புரோட்டாவானது மைதா மாவில் செய்யப்படுகிறது. இதை ரொட்டி மாவிலும் கூட செய்யலாம். பப்ஸ், சமோசா மற்றும் இனிப்புகள் உள்பட எண்ணற்ற உணவு வகைகளை தயாரிக்க மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. ரொட்டி மாவு மற்றும் மைதா மாவு இரண்டும் எப்படி தயார் செய்யப்படுகிறது, அதில் உள்ள சத்துக்கள் என்ன? எந்தெந்த உணவுகளில் இதை பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தச் செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

ரொட்டி மாவு என்றால் என்ன

இதை பெரும்பாலும் பிரெட் மாவு என்றே குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் பெயருக்கு ஏற்றாற்போல பிரெட் தயாரிக்க பயன்படுகிறது. இது கடினமான கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் 13 முதல் 14 சதவீதம் வரையில் குளூட்டன் அடங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் 12 முதல் 14 சதவீதம் வரையில் புரதம் இதில் இருப்பதாக கோதுமை உணவுக் கவுன்சில் தெரிவிக்கிறது. இந்த புரதம் மற்றும் குளூட்டன் ஆகியவற்றுடன் யீஸ்ட் சேரும்போது பிரெட் கிடைக்கிறது. அதாவது இந்த பிரெட் என்பது அடர்த்தி குறைவாகவும், மிக சாஃப்ட்டாகவும் இருக்கும்.

மைதா மாவு

மைதா மாவு என்பது கடினமான மற்றும் மிருதுவான கோதுமையை கொண்டு தயார் செய்யப்படுகிறது. பொதுவாக பிஸ்கட், கேக் மற்றும் பப்ஸ் போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது. ஹோட்டல்களில் சாப்பிடும்போது நமது விருப்பத்திற்கு உரிய தேர்வாக இருக்கும் புரோட்டா தயாரிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

மைதா மாவில் 8 முதல் 11 சதவீதம் வரையில் புரதம், 12 சதவீதம் குளூடென் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் என்பது பிரெட் போல அடர்த்தி குறைவாக இருக்காது. அதேபோன்ற டெக்சர் இதில் கிடைக்காது.

இரண்டையும் மாற்றி பயன்படுத்தலாமா

ரொட்டி மாவை கொண்டு, மைதா உணவுப் பொருட்களையும், மைதாவை கொண்டு ரொட்டி உணவுப் பொருட்களையும் தயாரிக்க முடியுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்பும். ஆனால், சமையல் கலை வல்லுநர்கள் அப்படி செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகின்றனர். வேறு வழியே இல்லாத பட்சத்தில், நீங்கள் விரும்பிய மாவு கிடைக்காத பட்சத்தில் மாற்று உபயோகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, பிஸ்கட் தயாரிக்க நீங்கள் மைதாவை பயன்படுத்தாமல் ரொட்டி மாவை பயன்படுத்தினால், நீங்கள் எதிர்ப்பார்த்த சுவை கிடைக்காது.



--

ஞாயிறு, 9 மார்ச், 2025

இறப்புக்கு பின்னர்மனிதர்கள் கண் தானம் அளிப்பது போன்று ரத்த தானம் அளிக்க இயலாலதது ஏன்?

மனித உடலிலுள்ள திசுக்களின் இறப்பு, நீக்கவியலாத மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகிறது. இறப்புக்கு பிந்தைய இம்மாற்றங்களுக்கு காரணம் உடல் அணுக்களில் பொதிந்துள்ள அழிவு நொதிகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆற்றும் வினை.

அடுத்த காரணம் உயிர்வாழ்வதற்கு முக்கியத் தேவைகளான உயிர்வளி மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியன நின்றுபோவது.

ஆனால் இம்மாற்றங்கள் உடலின் எல்லா உறுப்புகளிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை. உறுப்புக்கு உறுப்பு இம்மாற்றங்கள் நிகழ்வதற்கான காலம் வேறுபடும். இறப்புக்கு பிந்தைய மாற்றங்கள் குருதியில் உடனடியாக உண்டாகின்றன.

இறப்புக்கு பின் இதயத்தில் குருதி ஓட்டம் நின்றுபோவதால், இறந்த உடலில் இருந்து குருதியை வெளிக்கொணர்ந்தால் நுண்ணுயிரிகளின் தொடர்பால் குருதி மாசடைந்து போகும்.

மாசடைந்த குருதியைப் பயன்படுத்த இயலாதல்லவா? இவையனைத்தையும் விட முக்கியமான காரணம் ஒருவர் உடலில் குருதிக் கொடையளித்த சில நாட்களுக்குள் மீண்டும் புதுக்குருதி ஊறிவிடும். குருதிக் கொடையளிக்கும் நல்ல உள்ளம் கொண்ட பலர் உலகில் உள்ளனர். எனவே பிணத்தில் இருந்து அதனைப் பெறவேண்டிய கட்டாயம் இல்லை.

அடுத்து சிறுநீரகம், விழிகள் ஆகிய உறுப்புகளில் இறப்புக்கு பிந்தைய மாற்றங்கள் சற்று தாமதமாக நிகழும். எனவே இறந்த உடனே அவற்றை எடுத்து தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாண்டு பதப்படுத்தி வைத்தால் வேறொருவர் உடலில் பொருத்திட இயலும். மேலும் உயிரோடு இருக்கும் ஒருவர் கண்களைக் கொடுத்தால், அது அவருக்கு நிரந்தர இழப்பாக அமைந்துவிடும். எனவே தான் இறந்தவர் உடலில் இருந்து அதனைப் பெறுகிறோம்.



--

திங்கள், 3 மார்ச், 2025

நீங்கள் குறைந்தஅளவு தண்ணீர் குடிப்பீர்களா? அது எவ்வளவு தீங்கான விளைவுகள்ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மலச்சிக்கல்: உடலில் தண்ணீர் இல்லாததால், மலச்சிக்கல் போன்ற கடுமையான பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கின்றனர். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது பைல்ஸ் போன்ற நோயாக மாறும்.

சிறுநீரில் எரிச்சல்: குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், சிறுநீரில் தொற்றும் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், சிறுநீர் வழியில் எரியும் உணர்வு ஏற்படும். நீங்கள் தினமும் சுமார் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சருமத்திற்கு சேதம்: சருமத்தில் ஈரப்பதம் இல்லாவிட்டால், இந்த நிலையில் மந்தமான தன்மை தோன்றத் தொடங்குகிறது. இதனுடன் பருக்கள் மற்றும் பிற பிரச்சனைகளும் ஏற்பட ஆரம்பிக்கின்றன. தண்ணீர் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும். அதைக் குறைவாகக் குடித்த பிறகு, சருமத்தில் வறட்சி தோன்றத் தொடங்குகிறது.

சிறுநீரக பிரச்சனைகள்: பல நேரங்களில் குறைவான தண்ணீர் குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். சிறுநீரகங்கள் நம் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றுகின்றன. ஆனால் தண்ணீர் இல்லாததால் அதன் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

ஆற்றல் நிலை: தொடர்ந்து தண்ணீர் குடித்து வந்தால், உடலில் ஆற்றல் ஆரோக்கியமாக இருக்கும். தண்ணீர் பற்றாக்குறையால், ஆற்றல் அதிகமாக செலவழிக்கப்பட்டு, நீங்கள் விரைவாக சோர்வடைவீர்கள்.



--

சனி, 1 மார்ச், 2025

சாப்பிட்ட பிறகுஉங்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கிறதா?

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் பெரும்பாலான மக்களை பல நோய்கள் ஆட்கொள்கின்றன.

சர்க்கரை நோய் முதல் இதயம் தொடர்பான நோய்கள் வரை இதில் அடங்கும். உணவு உண்டவுடன் இதயம் வேகமாக துடித்தால், அது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

இதயத்துடிப்பு

விரைவான இதயத் துடிப்பு உங்கள் இதயம் மிக வேகமாக இயங்குவதை உணர வைக்கிறது. அப்போது,   உங்கள் மார்பு, தொண்டை மற்றும் கழுத்து ஆகியவற்றிலும் மாற்றங்களை உணர முடியும். அதாவது, உணவு உண்டவுடன் இதயத்துடிப்பு அதிகரித்தால், சற்று உஷாராக இருக்க வேண்டும்.

காரணம் என்ன?

பல சமயங்களில் நீங்கள் உணவில் அதிக காரமான உணவுகளைச் சாப்பிடும்போது,   உங்கள் இதயத் துடிப்பு வேகமாக இருக்கும். இது தவிர, உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது காஃபின், நிகோடின் அல்லது ஆல்கஹாலை அதிகமாக உட்கொண்டாலோ, இதன் காரணமாகவும் உணவு உண்ட பிறகு இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

மாற்றங்களை கவனிக்க

இந்த நேரத்தில் நீங்கள் சுவாச பிரச்சனைகள், தலைச்சுற்றல், மார்பு வலி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு நேரத்தை வீணடிக்காமல் மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

பாதிப்பு என்னவாக இருக்கலாம்?

இதயம் வேகமாக துடித்தால், மாரடைப்புடன் பல பிரச்சனைகளும் வரலாம். இதில் இதய தமனிகள், இதய செயலிழப்பு, இதய வால்வு பிரச்சனைகள் மற்றும் இதய தசை பிரச்சனைகள் தொடர்பான நோய்கள் அடங்கும்.

உணவு மாற்றம்

உணவு உண்ட பிறகு இதயம் வேகமாக துடித்தால், உணவை மாற்றிக் கொள்ள வேண்டும். முழு தானியங்கள், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தவிர, உணவில் உள்ள எண்ணெயின் அளவை மிகவும் குறைக்க வேண்டும், முடிந்தால், ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு-நான்கு நாட்களுக்கு வெவ்வேறு எண்ணெயைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். உணவில் உள்ள உப்பு, இனிப்பு மற்றும் கொழுப்பின் அளவு மிகக் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.



--

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

எலும்புகளை குறைந்த வயதிலேயே பலவீனமாக்கும் பழக்கங்கள்.

தற்போதைய வாழ்க்கை முறையில் பலருக்கும் எலும்புகள் இளம் வயதிலேயே வலுவிழக்கத் தொடங்கி விடுகிறது. இதனால், பின்னாளில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

எலும்புகள் இளம் வயதிலேயே பலவீனமாக இருப்பதற்கான காரணங்கள் என்ன?

சோம்பேறித்தனம்

சோம்பல் அதிகம் இருந்தால், உடலின் இயக்கம் குறைகிறது. உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவதில், உடல் இயக்கம் முக்கிய பங்களிக்கிறது. எனவே, முடிந்த அளவு முதலில் சோம்பலை அகற்றி, சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும்.

உப்பு

அதிக உப்பை சாப்பிடக்கூடாது, ஏனென்றால் அதிக உப்பை சாப்பிட்டாலும், உங்கள் உடலில் உள்ள எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் எலும்புகளின் அடர்த்தியைக் குறையலாம் என்று நம்பப்படுகிறது.

புகைப்பிடிப்பது

எலும்பு ஆரோக்கியத்தை பொறுத்தவரை புகைபிடிப்பவர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதனால் உங்கள் எலும்புகள் பாதிக்கப்படும். புகைபிடித்தல் உங்கள் நுரையீரலை மட்டுமல்ல, உங்கள் எலும்புகளையும் பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது.

சூரிய ஒளி முக்கியம்

இன்றைய வாழ்க்கை முறையில், நம் உடலின் மீது சூரிய ஒளி படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. பலரின் உடலில் வைட்டமின்-டி குறைபாடு உள்ளது. என்ன தான் செயற்கை மருந்து வகைகளை சாப்பிட்டாலும், வலுவான எலும்புகளுக்கு சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் முக்கியமானது.

தூக்கமின்மை

நிம்மதியான தூக்கம் என்பது மனிதனுக்கு மிக முக்கியம். போதுமான தூக்கம் இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.



--

புதன், 26 பிப்ரவரி, 2025

பல் துலக்கும் போது ஈறுகளில் இரத்த கசிவா?

பொதுவாக சிலருக்கு பல் துலக்கும்போது இரத்த கசிவு ஏற்படுவதுண்டு.

ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதற்கு நிறைய காரணங்கள் சொல்லப் படுகின்றது.

ஈறுகளில் இரத்தம் கசிவதற்கு மோசமான வாய் ஆரோக்கியம் முதன்மையான காரணமாக இருக்கும்.

பற்களில் கறைகள் அதிகமா சேரும் போது, ஈறுகளில் எரிச்சல் ஏற்பட்டு, அதனால் வீக்கமடைந்து, பின் இரத்தக் கசிவை உண்டாக்கும். இதனால் மிகுந்த வலியும் ஏற்படும்.

இதிலிருந்து விடுபட இயற்கை முறையில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உட்கொண்டலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

உடலில் வைட்டமின் சி குறைபாட்டினாலும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். எனவே வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வைட்டமின் ஏ குறைபாடும் வாய்ப்புண், ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவற்றை ஏற்படுத்தும். ஆப்ரிக்காட் பழத்தில் பீட்டா-கரோட்டீன் அளவுக்கு அதிகமாக உள்ளது. இது உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்படும். எனவே ஆப்ரிக்காட் பழம் கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

பற்களின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது. இத்தகைய கால்சியம் பாலில் அதிகம் உள்ளது. எனவே தினமும் தவறாமல் 2 டம்ளர் பால் குடியுங்கள். இதனால் ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கலாம்.

கேரட்டிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அத்தகைய கேரட்டை வேக வைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக கடித்து நன்கு மென்று சாப்பிட்டால், ஈறுகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, இரத்தம் கசிவதைத் தடுக்கலாம்.

முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் ஈறுகளில் இரத்தம் கசிவது தடுக்கப்படும். ஏனெனில் இவற்றில் வைட்டமின் சி, ஏ போன்றவை அதிகம் உள்ளது.

வெள்ளரிக்காய் வாயில் உள்ள அமிலத்தன்மையை சீராக பராமரிக்க உதவும். வாயில் அமிலத்தன்மை அதிகமானால், அதனால் பற்கள் மற்றும் ஈறுகள் தான் முதலில் பாதிக்கப்படும். எனவே வெள்ளரிக்காயை சாப்பிட்டு வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், எலுமிச்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடலில் வைட்டமின் சி குறைபாட்டினைத் தடுத்து, இரத்தக்கசிவு ஏற்படாமல் செய்ய முடியும்.

ஈறுகளில் இரத்தக்கசிவு உள்ளவர்கள், தினமும் ஒரு பௌல் பச்சை காய்கறி சாலட் சாப்பிடுவதன் மூலம், ஈறுகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது குறையும்.

கிரான்பெர்ரி பழங்களும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதை நிறுத்த உதவும். ஏனெனில் கிரான்பெர்ரி பழங்களில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. இது வாயில் உள்ள அதிகப்படியான பாக்டீரியாக்களை அழிக்கும். எனவே இப்பழம் கிடைத்தாலோ அல்லது ஜூஸ் கிடைத்தாலோ, வாங்கிப் பருகுங்கள்.

அருகம்புல் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் பருகுவதன் மூலம், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வாய் ஆரோக்கியமும் அதிகரிக்கும். குறிப்பாக ஈறுகளில் இரத்தம் கசிபவர்கள், இந்த ஜூஸைக் குடித்தால், இரத்தக்கசிவு உடனே நிற்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கி, உடலும் நன்கு சுத்தமாகும்.



--

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

குழந்தைகளுக்கு வரலாம் கேட்டராக்ட்' பாதிப்பு; பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? - கண்கள் பத்திரம்.

``கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பு என்பது பெரியவர்களைத் தாக்கும் எனக் கேள்விப் பட்டிருப்போம்.

ஆனால், அது குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கூட பாதிக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படுகிற இந்தக் கண்புரை பாதிப்பானது, ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலுமோ இருக்கக்கூடும். சில வேளைகளில் அது பரம்பரையாகத் தொடரும் பாதிப்பாக இருக்கலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். அது குறித்து அவர் தரும் விளக்கமான தகவல்கள் இங்கே...

 சிறப்பு மருத்துவர் வசுமதி

``சில குடும்பங்களில் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ மிகச் சிறிய வயதிலேயே கண்புரை பாதிப்பு ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்திருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் கண்புரை பாதிப்பு இருக்கக்கூடும். சொந்தத்தில் திருமணம் செய்த தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு வரக்கூடும். கண்ணின் பாப்பா எனப்படும் பகுதியில் வெண்மையாக ஒரு படலம் போன்று தெரியும். அதை வைத்து கண்புரை பாதிப்பைச் சந்தேகிக்கலாம்.

பிறந்த குழந்தைக்கு கண் பரிசோதனை... அரசுத்திட்டம் அறிவீர்களா?

`ராஷ்டிரியபால ஸ்வாஸ்த்ய கார்யக்ரம்' (Rashtriya Bal Swasthya Karyakram - RBSK) எனப்படும் ஒன்றிய அரசுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே அதற்கு முழுமையான கண் பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படுகிறது. கண்ணில் புரையோ, வேறு ஏதேனும் பிரச்னைகளோ, புற்றுநோயோ இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறிய உதவுகிறது இந்தப் பரிசோதனை.

பிறக்கும்போதே ஒரு குழந்தைக்கு கண்ணில் புரை பாதிப்பு இருந்தால், அது கடந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த சோம்பேறிக் கண் பாதிப்பில் கொண்டுபோய்விடும். அதுவும் தீவிர நிலை சோம்பேறிக் கண் பாதிப்பை ஏற்படுத்த காரணமாகிவிடும்.

கண்புரை பாதிப்பு உள்ள அந்தக் கண்ணில் பார்வை வளர்ச்சியே இருக்காது. இதனால் இது கண்டுபிடிக்கப்பட்டால் குழந்தை பிறந்த அடுத்தடுத்த நாள்களிலேயேகூட அறுவைசிகிச்சை செய்து கண்புரையை நீக்குவதுண்டு. பெரியவர்களுக்கு கண்புரை பாதிப்பு ஏற்பட்டால் கண்களில் லென்ஸ் வைப்பதைப்போல குழந்தைகளுக்கு முதல் ஒரு வருடத்தில் வைக்க முடியாது.

குழந்தையின் கண்களின் வளர்ச்சி முழுமை அடைந்திருக்காது. தவிர, குழந்தையின் கண்பார்வையின் பவரானது மாறிக்கொண்டே இருக்கும். எனவே, ஒரு வருடம் ஆன பிறகு, குழந்தையின் கண்களைப் பரிசோதித்துவிட்டு, பிறகு அதன் கண்களில் லென்ஸ் வைப்போம். அதன் பிறகு, நன்றாக உள்ள இன்னொரு கண், சோம்பேறிக் கண்ணாக மாறாமலிருக்க சிகிச்சை அளித்துக் காப்பாற்றப்படும். ஒருவேளை இரண்டு கண்களிலும் கண்புரை இருந்து அகற்றப்பட்டிருந்தால் குழந்தைக்கு கண்ணாடி கொடுத்து அணியப் பழக்கப்படுத்தப்படும்

அம்மாக்கள் கவனத்துக்கு...

பரம்பரைத் தன்மையை மீறி இந்தப் பிரச்னை வர குழந்தையின் அம்மாவுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ருபெல்லா எனப்படும் மணல்வாரி அம்மை பாதிப்பும் ஒரு காரணம். தாய்க்கு ருபெல்லா பாதித்திருந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண்புரையும், விழித்திரை பாதிப்பும் ஏற்படலாம். குழந்தையின் கண் சிறியதாக இருக்கலாம். இந்தப் பிரச்னைக்கு Congenital Rubella Syndrome (CRS) என்று பெயர். இந்த பாதிப்பு உள்ள குழந்தைக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளும், காது கேட்பதில் பாதிப்பும் கூட இருக்கக்கூடும். அதனால்தான் திருமணத்துக்கு முன்பே இளம் பெண்களுக்கு எம்.எம்.ஆர் தடுப்பூசி போட வலியுறுத்தப் படுகிறது. இது போடப்படும் பட்சத்தில் கர்ப்ப காலத்தில் அந்தப் பெண்ணுக்கு இந்த அம்மை பாதிப்பது தவிர்க்கப்படும்.

 Eye Issues (Representational Image)

இதுதவிர, சம்பந்தப்பட்ட அந்த கர்ப்பிணி ஏதேனும் ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்திருந்தாலும், கர்ப்பகாலத்தில் எக்ஸ்ரே எடுத்திருந்தாலும், வைட்டமின் குறைபாடு இருந்தாலும்கூட அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு இந்த பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. கண்புரை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைக்கு அதை அறுவைசிகிச்சை மூலம் நீக்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவரிடம் செக்கப்புக்கு அழைத்து வர வேண்டியது மிகவும் அவசியம்."



--

ஏர்-கூலர் மற்றும் ஃபேனில் வரும் காற்று போதவில்லையா?

வீட்டில் உள்ள ஏசி , ஏர்-கூலர் , ஃபேன் போன்றவை பல மாதங்களாக பயன் படுத்தப்படாமல் இருந்திருக்கக்...

Popular Posts