லேபிள்கள்

வியாழன், 29 ஜனவரி, 2015

மருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்

 இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள்.

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.

மருதாணியின் பயன்கள்

மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல்வெப்பம் தணியும்.

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும்.இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும்வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும்.இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.

மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்துஅரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

தோல் நோய்

தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 – 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்

ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர

இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மை

தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி

உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும்.

படைகள்

கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இளநரையை போக்கும் மருதாணி

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.
http://pettagum.blogspot.in/2014/01/blog-post_9672.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 27 ஜனவரி, 2015

கணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்

கணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்

கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.
1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது:இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.
2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.
3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டியதிருக்கும்.
4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.
5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக் காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.
6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி.டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.
8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
9. CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.
10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது: பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.
11. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.
12. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.
13. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.
14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.
15. Non System Disk Error: ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம்.ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக் கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.
16. Missing Operating System: சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம்.
17. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.
18. IO Error: சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.
19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.
20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லதுSCANDISKபயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோத னை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.
22. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.
23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.
24. MMX/DLL FILE MISSING: இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.
பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

உப்பு, ரொம்ப தப்பு... அயோடின் உப்பு, ரொம்ப ரொம்ப தப்பு!


ஆரோக்கியம் பேசும் அலர்ட் தொடர் 
டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

மனித உடலின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இன்னொரு உணவுப் பொருள், சோடியம் எனப்படும் உப்பு.
ஆதிமனிதன் வேட்டையாடி விலங்குகளின் மாமிசத்தையும் ரத்தத்தையும் உணவாக உண்டான். உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான சோடியம், விலங்குகளின் ரத்தத்தின் மூலமாகவே அவனுக்குக் கிடைத்தது. பிறகு, விவசாயம் செய்து உணவு உண்ண ஆரம்பித்தபோதுதான் உப்பைத் தேடி, சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தான்! இன்றைக்கு, இந்த உப்பே, அவனுக்கு எமனாகும் அளவுக்கு வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது... சோகம்தான்!

உப்பின் உற்பத்தி ஸ்தானம் கடல் நீர்தான். கடலில் மூழ்கி, பின்னர் உயிர்பெற்று எழுந்த மலைகளிலும், மலையடிவாரங்களிலும் உப்பு கிடைக்கும். பல யுத்தங்கள் உப்புக்காகவே நடந்திருக்கின்றன இந்த உலகில்! சாம்ராஜ்யங்கள் பல, உப்புக்காகவே சரிந்திருக்கின்றன! உலகப் புகழ்வாய்ந்த ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு, அந்த நாட்டு அரசன் விதித்த உப்புவரி, முக்கியக் காரணம்.

1930-ல் இந்தியாவில் நடந்தது என்ன? உப்பு, விலைமதிக்க முடியாத செல்வம் என்று உணர்ந்த ஆங்கிலேயர்கள், உப்பு வணிகத்தை தாங்களே மேற்கொண்டதோடு, உப்புக்கு வரியும் விதித்தனர். 'மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட நம் மக்களின் வாழ்வாதாரம் உப்புதான். அதில் கைவைக்க யாருக்கும் உரிமையில்லை' என்று கொதித்தெழுந்த மகாத்மா காந்தி, சரித்திர முக்கியத்துவம் பெற்ற தண்டி யாத்திரையை மேற்கொண்டார். இந்த உப்பு சத்தியாகிரகம்தான், அன்றைய ஆங்கிலப் பேரரசின் ஆணிவேரை ஆட்டி வைத்தது என்பது சரித்திரம்.

இவ்வளவு அருமை பெருமையுடைய உப்பு, மனித ஆரோக்கியத்துக்குப் பெரிய வில்லனாக மாறியது மிக சமீபத்தில்தான். வேட்டையாடிய ஆதிமனிதன், விவசாயத்துக்கு மாறியபோது உணவில் சேர்த்தது... வெறும் 2 கிராம் உப்புதான். இப்போது சராசரி அமெரிக்கன் 10 கிராம், சராசரி இந்தியன் 12 கிராம் என உப்பை உட்கொள்கிறான். மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு, சிறுநீரக நோய்கள் தற்போது அதிகரித்ததன் காரணங்களில் இது மிகவும் முக்கியமானது. நாம் உட்கொள்ளும் உப்பை, சிறுநீரகங்கள்தான் வெளியேற்ற வேண்டும். சிறுநீரகங்கள் 5 கிராம் உப்பை மட்டுமே வெளியேற்ற முடியும். அப்படியானால் மீதம் உள்ள 7 கிராம்?

ஒரு பங்கு உப்பை வெளியேற்ற, 23 பங்கு தண்ணீர் தேவை. செல்களின் உள்ளே உள்ள நீர் வெளியேறி, உப்பைக் கரைக்கிறது. ஆகவே, உடலில் நீரின் அளவு மிகுதியாகி வீக்கம், ரத்தக் கொதிப்பு, இதயம் செயல் இழப்பு போன்றவை விளைகின்றன. சோடியம், தன்னோடு கால்சியத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் - ஆகவே ரத்தக் குழாய் அடைப்புகள், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை உருவாகும். சில புற்றுநோய்களும் வரலாம்.

உடலுக்குத் தேவையான உப்பு, உணவில் இயற்கையாகவே இருக்கிறது. கனிமங்கள், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் போன்ற சுமார் 84 வகை ஊட்டச்சத்துக்கள் தினமும் நமக்குத் தேவை. இவற்றை 84 ஜாடிகளில் அடைத்து, சமையலறையில் வைத்திருக்கிறோமா..? நம் அன்றாட உணவில் இந்த 84 ஊட்டச்சத்துக்களையும் கலந்து வைத்த கடவுள், சோடியத்தை மட்டும் மறந்துவிட்டார் என்று நினைத்து, எப்போது சமையலறையிலும், இன்னும் போதாது என்று சாப்பாட்டு மேஜையிலும் வைத்து உப்பை நாம் உண்ண ஆரம்பித்தோமோ, அன்றுதான் மனிதனின் கெட்ட காலம் ஆரம்பித்தது! 'ரீஃபைனிங்' என்கிற பெயரில் அரிசி, சர்க்கரை, பால் இதையெல்லாம் எப்படிக் கெடுத்தோமோ... அதேபோலதான் உப்பையும் கெடுக்க ஆரம்பித்தோம்.

கடல் நீரைத் தேங்க வைத்து, காயவைத்துக் கிடைக்கும் உப்பையே பெரும்பாலும் உபயோகித்தோம். இதைச் சுத்தம் பண்ணுகிறேன் பேர்வழி என்று, மனிதன் செய்த வேலைகள் பற்பல. நமக்கு இப்போது கிடைக்கும் உப்பு (Table salt), கெடுதல் விளைவிப்பதில் சர்க்கரைக்குக் கொஞ்சமும் சளைத்த தல்ல. முதலில் உப்புக் கரைசலை 1200oF-க்குக் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உப்பில் கலந்துள்ள 84 வகை தாதுப்பொருட்கள் அறவே வெளியேறி, வெறும் சோடியம் குளோரைடு மட்டுமே மிஞ்சுகிறது. அது வெள்ளையாக ஜொலிக்க வேண்டும் என்றும், கரடுமுரடாக இல்லாமல் சர்க்கரையைப்போல் இருக்க வேண்டும் என்றும், வெகுகாலம் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்றும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் - டால்க், சிலிகான், அலுமினியம், ஃபுளோரைடு, கொஞ்சம் சர்க்கரைகூட - இவை அனைத்தும் உடலுக்குக் கேடுதான். 84 கனிம தாதுக்களுடன் உள்ள சோடியம் குளோரைடு கெடுதல் அல்ல - உடலுக்கு நல்லதுதான். ஆனால், அந்த 84 சத்துக்களும் நீக்கப்பட்ட சோடியம் குளோரைடு... மிகமிகக் கெடுதலானது (எல்லா சுத்திகரிப்புகளும் இப்படித்தானே..?!)

எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது வந்துள்ள புதிய ஆபத்து... அயோடின் கலந்த உப்பு. உப்பில் இயற்கையாகவே அயோடின் உண்டு. அதைக் காய்ச்சி உறிஞ்சி எடுத்துவிட்டு, இப்போது அயோடின் சேர்க்கிறோம் என்று செயற்கையாகச் சேர்த்து, விலையைப் பத்து மடங்கு உயர்த்தி, கோடீஸ்வரர்களை... மேலும் கோடீஸ்வரர்களாக ஆக்கியதுதான் மிச்சம்.

தைராய்டு சுரப்பியிலிருந்து... தைராக்ஸின் ஹார்மோன் உற்பத்தியாவதற்கு அயோடின் தேவை. அது குறைவாக இருந்தால், உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குறைவதுடன், கழுத்தில் தைராய்டு சுரப்பியில் வீக்கம் (Goitre) முதலிய குறைபாடுகள் தோன்றும். ஆகவே, அயோடின் மிக மிக அவசியம் - ஆனால், வெறும் 0.15 மி.கி. மட்டுமே. இந்த அளவு அயோடின் எல்லா காய்கறிகளிலும், பால், முட்டை அசைவ உணவிலும் இயற்கையாகக் கிடைக்கிறது. போதாக்குறைக்கு இயற்கையாகக் கிடைக்கும் உப்பிலும் கிடைக்கிறது. இதை மெனக்கெட்டு நீக்கிவிட்டு, நீக்குவதற்கும் காசு, மறுபடியும் சேர்ப்பதற்கும் காசு என்று உயர்த்தியது தேவையா?

இதுதவிர, அயோடின் கலக்கும்போது, கூடவே பொட்டாசியம் குளோரைடு, சல்ஃபர், மெக்னிஷியம், ஃபுளோரைடு, பேரியம், ஸ்ட்ரோன்ஷியம் போன்ற வேதிப்பொருட்களும் கலந்துவிடுகின்றன. இவை தேவையே இல்லை. இயற்கையான அயோடின் நல்லது. செயற்கையான அயோடின்... உடலில் பல அழற்சிகளை உண்டாக்கும்.

நம் நாட்டில் 125 கோடி ஜனத்தொகையில் சுமார் 6 கோடி பேருக்கு மட்டுமே அயோடின் குறைபாடு உள்ளது. இதற்காக மீதமுள்ள 119 கோடி மக்களையும் அயோடின் உப்பு உண்ண வைத்து, பலருக்கு 'தைராய்டு மிகுதி' (Hyper thyroid) எனும் நோயை உண்டாக்கி வருவது உண்மை. இதன் விளைவாக, ரத்தக் கொதிப்பு மற்றும் இதயப் பிரச்னைகள் வருவதும் உண்மை.
மகாத்மா காந்தி இப்போது இருந்திருந்தால், உப்பில் அயோடின் கலந்து, அதை விஷமாக்கி, அதன் மூலமாக கோடீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் அரசாங்கத்தை எதிர்த்து இன்னொரு உப்பு சத்தியாகிரகம் செய்து கொண்டிருப்பார்!

ஒரு உறுதியேற்போம்...!
அமெரிக்க இதய நோய்க் கழகம் தற்போது பரிந்துரைப்பது... 'யாரும் 6 கிராமுக்கு மேல் உப்புச் சேர்க்க வேண்டாம்' என்பது. அப்படியானால் நாம் எல்லோரும் அரை உப்புதான் சாப்பிட வேண்டும். இனி, சமையலில் அரை உப்பு மட்டுமே சேர்ப்போம் - அதுவும் அயோடின் கலப்பில்லாத இயற்கையான உப்பு (கல் உப்பு). சாப்பாட்டு மேஜையில் உப்புக் குப்பி வைக்காதீர்கள். உப்பில் மூழ்க வைத்துத் தயாரிக்கும் துரித உணவுகளை அறவே தவிருங்கள் - ஊறுகாய், சிப்ஸ் உட்பட!
http://pettagum.blogspot.in/2013/12/blog-post_4235.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 23 ஜனவரி, 2015

அதிகாலையில் எழுதல்: அல் ஃபஜருடைய அருளை எப்படி அடைவது


பெலா கான்
விரைவில் வரும் பறவைக்கு புழு கிட்டும் என்பது நாம் கேட்டு பழகிப்போன சொற்றொடர், ஆனால் உண்மை அதனால் நாம் நம்முடைய வாழ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தின் தலைவிதியை மாற்றக்கூடிய ஒரு பழக்கத்தைப்பற்றி பேசுவோம். அது ஃபஜரில் எழுவதும் அதன் பின்னுள்ள நேரத்தை பயன்படுத்துவதும்.

வேடிக்கை என்னவென்றால் முஸ்லிம்களாகிய நாம், முஹம்மது நபி (ஸல்) அவர்கள்  ஃபஜருக்குப் பிறகு துவா கேட்பது அருளப்படும் என்று சொல்லியிருந்தும், ஃபஜருக்குப் பிறகு உறங்குவதை மிகவும் நேசிக்கிறோம். அது மட்டுமல்ல, முஸ்லிமல்லாத சுய முன்னேற்ற குருக்களும், பெரும் தொழிலதிபர்களும், பெரும் பணக்காரர்களும் இந்த வைகறையில் எழும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
முதலில் நாம் அதிகாலையில் எழுவது ஒன்றும் மிக சிரமமான செயல் அல்ல என்பதை ஒப்புக்கொள்வோம்; இக்கட்டுரையைப் படித்தபின், அது ஆயிரம் முறை எளிதானதாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்.
ஒரு பழக்கத்தை எப்படி வளர்த்துக்கொள்வது?
இதில் நாம் மிகத்தெளிவாக இருப்போம் நாம் ஃபஜருக்கு எழுந்து, தொழுது, குர்ஆன் ஓதியபின், ஃபஜருக்குப்பின்னுள்ள நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்க்க முயல்கிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை தொழுகையை நிலைநிறுத்துவீராக.  இன்னும் ஃபஜ்ருடைய குர்ஆனையும். நிச்சயமாக ஃபஜர் தொழுகை சான்று பகர்வதாக இருக்கிறது. [குர்ஆன்17:78]
உரக்கச் சொல்லுங்கள்.  உங்களைச் சுற்றியுள்ள சூழல் உங்கள் உறுதிமொழியை பதிவு செய்யட்டும்! நினைவு கொள்ளுங்கள், எண்ணத்திற்கும் கூலி உண்டு.
இப்போது, உங்களுக்கு நீங்களே ஒரு 21 நாள் சவாலைக்கொடுத்து ஆரம்பம் செய்யுங்கள். அது தொடர்ந்து 21 நாட்களாக இருக்க வேண்டும். தவறினால், மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்குங்கள். கவலை வேண்டாம் கைவிடுவதை விட உயிரை விட்டாவது முயல வேண்டும்.
உங்களுடைய நங்கூரம் எது?
நீங்கள் இரு வழிகளில் பழக்கத்தை வளர்க்கலாம்:
1.        மனோபலத்தின் சக்தியைப்பயன்படுத்தி, ஒரு திட்டத்தைப் பின்பற்ற உங்களை நீங்களே கட்டாயப்படுத்துங்கள்.
2.        உங்கள் நங்கூரம் எது என கண்டுபிடியுங்கள்.  உங்களுடைய பழக்கத்தை உண்மையில் தூண்டுவது எது? உதாரணமாக, நீங்கள் கண்விழித்து, குளியலறைக்குச் செல்லும்போது பல்விளக்கும் குச்சியை எடுக்கிறீர்கள், உங்களை அறியாமலே பேஸ்டையும் எடுத்து குச்சியில் வைத்து உங்கள் வாயில் வைக்கிறீர்கள். இந்த முடிவை எடுப்பதற்கு நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை அப்படியே வாயில் வைக்கிறீர்கள்.
அதனால் நீங்கள் எழ எது தூண்டுதலாக இருக்கிறது? அலாரமா? முஅத்தினுடைய குரலா? அல்லது உங்கள் முகத்தில் யாராவது குளிர்ந்த நீரை ஊற்றினார்களா?
நீங்கள் காலை 7 மணி விமானத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், மிகத் தாமதமாக காலை 3 மணிக்குப்படுத்தாலும், நேரத்திற்கு எழ மாட்டீர்கள்? நிச்சயமாக எழுவீர்கள்.  ஏன்?  உங்கள் அடிமனதில் உள்ள விமானத்தை விட்டு விடுவோமோ என்ற பயம் தான். அதனால், அதிகாலையில் எழுவதற்க்காக உங்களுடைய எல்லா உத்திகளும் தோல்வியடைந்தால், உங்கள் தூண்டுதலை சரி செய்ய வேண்டும்.
வழக்கமாக, கவனிக்க வேண்டிய ஏதாவது ஒரு அடிப்படை காரணம் இருக்கும்.  அதை நீங்கள் கண்டுபிடித்தால், ஃபஜருக்கு எழுவது உங்களுக்கு எளிதாக இருக்கும்.  நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இறையச்சம் இந்தப்பழக்கத்தை வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கும்.
'…எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் தக்க வழியை ஏற்படுத்துவான்.'[அல் குர்ஆன்65:2]
நீங்கள் மிக வேகமாகச் செல்கிறீர்களா?
நீங்கள் காலையில் எழுந்து, ஃபஜர் தொழுது, ஒரு ஜுஸ்வு ஓதி, திக்ருகளையும் ஓதி, காலை நடைபயிற்சி, பின் உடற்பயிற்சி, காலை உணவு, ஒரு புத்தகம் படித்தல் எல்லாம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அது எப்படி இருக்கிறது?  நன்றாக இருக்கிறதா? இல்லை.  நினைவிருக்கட்டும்: பெரிதாக கனவு காணுங்கள், ஆனால், சிறிதாகத் தொடங்குங்கள்.  ஒரு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள நீங்கள் உங்கள் கவனத்தைக் கவரக்கூடிய ஏதாவது ஒன்றை தொடங்க வேண்டும்.
ஃபஜர் தொழுத பின் 5 அல்லது 6 ஆயத்துக்கள் (ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கு)ஓதுவதில் தொடங்கி, அங்கிருந்து உருவாக்குங்கள். ஞாபகத்தில் இருக்கட்டும், அல்லாஹ் (சுபஹ்) சிறியவைகளாக இருந்தாலும், தொடர்ந்து செய்யக்கூடியவற்றை விரும்புகிறான்.
பெரும் அடிகளை எடுத்து வைத்து பாதியில் பெரும் தோல்வியைத் தழுவுவதை விட சிறிய அடிகள் நல்லது.
எந்த செயல்முறையோடு தொடங்குவீர்கள்?
நீங்கள் காலையில் எழ, மிஸ்வாக் கொண்டு பல் துலக்க, ஃபஜர் தொழ, குர்ஆனிலிருந்து 5 அல்லது 6 வசனங்கள் ஓத வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.  நீங்கள் செய்ய வேண்டியது வரிசைக்கிரமத்தை பின்பற்றுவதுஏனென்றால், இந்த தொடர் பழக்கம் உங்களுடைய நரம்பு பாதைகளில் நன்றாகப்பதிந்து விடுகிறது.
அதே வரிசையில் பழகிய பிறகு, நீங்கள் மீண்டும் மீண்டும், அடுத்து என்ன? என்று  நினைக்க அவசியமில்லை. மேலும், உங்களுடைய மூளையின் தீர்மானிக்கும் பகுதிகளை காலையில் அமைதியாக இருக்க விட வேண்டும். இப்படி வரிசைக்கிரமத்தை கடைபிடித்தால், உங்களை தன்னியக்கத்தில் வைப்பது மிகவும் எளிதாகி விடும்.
உங்களுக்கு எப்படி பரிசளிப்பீர்கள்?
கொண்டாட்டம், பாராட்டு, நன்றி, பரிசு இவையெல்லாம் முஸ்லிமின் அகராதியிலிருந்து மறைந்து விட்டன.  நினைவில் கொள்ளுங்கள், நோன்பாளி இரு கூலி பெறுகிறார்; ஒன்று அவருடைய அதிபதியைச் சந்திக்கும்போது, மற்றது, நோன்பு திறக்கும் சமயத்தில்.
பரிசு பெறும் ஆவல் ஒரு பழக்கத்தை வளர்ப்பதை எளிதாக்குகிறது.  அதனால், ஃபஜர் தொழுது, அதன் பின் குர்ஆன் ஓதுவதற்கு உங்களுக்கு நீங்களே என்ன பரிசு கொடுக்கப்போகிறீர்கள்?  சத்தான காலை உணவு, உங்களிடமுள்ள சிறந்த ஆடை, அல்லது நீங்கள் மிகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் ஹலாலான எதுவாக இருந்தாலும் சரி.
நீங்கள் விரும்பினால், யாருடனாவது இதில் கூட்டு சேர்ந்து கொள்ளலாம்.  உங்கள் வெற்றி அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத்தவறாதீர்கள்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 21 ஜனவரி, 2015

ஜில்லுனு ஒரு பனிக்காலம் பராமரிப்பும் பாதுகாப்பும்



நம் ஊரைப் பொருத்தவரை, எப்போதுமே வெயில், வெயில், வெயில்தான். மழைக் காலம், குளிர் காலம் என்று இருந்தாலும் காலநிலை மாறி, வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் வெப்பத்திலும், புழுக்கத்திலும் கழிகின்றன. அதனால், குளிரும் பனியும் நமக்கு ஒரு சுகமான காலம். பனிக் காலம் தொடங்கிவிட்டது. காலையில் சில்லிடும் பனிக் காற்றால், இரவு வரை வீடே ஒருவித ஈரப்பதத்துடன் இருக்கும். குளிர்காலம் என்பது நமக்கு மட்டுமல்ல, கிருமிகளுக்கும் கொண்டாட்டமான காலம்தான். இந்த இதமான தட்ப வெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். விளைவு, சாதாரண ஜலதோஷம் தும்மலில் தொடங்கி, காய்ச்சல், சுவாசப் பிரச்னை என ஆரோக்கியம் கெடுவதுடன், நம்மை ஒரேயடியாக முடக்கிப்போட்டுவிடும். அதிலும், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, 'பனிக் காலம்' என்பதே பரிதாபத்துக்குரிய காலம்தான்! உடலின் நீர்ச் சத்தும் சருமத்தின் எண்ணெய்ப்பசையும் குறைவதால், சருமமும் வறண்டு, தோல் சுருங்கி, பொலிவிழந்துபோகும்.

தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக் காலத்தையும், பிணியின்றிக் கடந்துவிடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை எடுத்துக்கொள்வதும், சருமத்தை வறண்டுபோகாமல் பார்த்துக்கொள்வதும்தான் குளிர் காலத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள். உடலைப் பாதுகாக்கும் குறிப்புகளை, மூத்த பொதுமருத்துவர் எஸ். சேதுராமனும், குளிர்காலத்துக்கு ஏற்ற உணவுக் குறிப்புகளை, சித்த மருத்துவர் டாக்டர் பத்மபிரியாவும், சருமத்துக்கான இயற்கை அழகுக் குறிப்புகளை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளியும் வழங்கியிருக்கிறார்கள்.

இனி, பனிக் காலம் புத்துணர்ச்சி, பொலிவுடன் அமைய வாழ்த்துக்கள்!
''குளிர் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது, பச்சிளம் குழந்தைகளும் முதியோர்களும்தான். அவர்களைத்தான், முதலில் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்'' என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூத்த பொதுநல மருத்துவர் எஸ்.சேதுராமன்.

பனிக் காலப் பிரச்னைகளும் தீர்வும்...
சளி, இருமல், தொண்டைக்கட்டு, தும்மல், தலைவலி, ஆஸ்துமா, உடல்வலி, காது அடைப்பு, சோர்வு, சரும வறட்சி, நுரையீரல் பாதிப்பு, மூட்டுவலி, சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல், அலர்ஜி போன்ற சகல பிரச்னைகளும் வரிசைகட்டி வரத்தொடங்கிவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, இந்தப் பாதிப்புகள் உடனடியாகத் தொற்றிக் கொள்ளும்.

டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் தொற்றலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு, ஃப்ளூ காய்ச்சல் மிக எளிதாகத் தாக்கலாம். இதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'ஃப்ளூ' தடுப்பூசி போட வேண்டும். டைஃபாய்டு காய்ச்சல் வர வாய்ப்பு இருப்பதால், முன்னரே அதற்கான தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் வரும் முன் காக்கலாம்.
ஏதாவது ஒரு பொருளால் ஏற்கெனவே அலர்ஜி ஏற்படுகிறது என்பது தெரிந்தால், அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. 'சிந்தடிக்', ஃபர் பொம்மைகள் விளையாடக் கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளின் அலர்ஜியை அதிகமாக்கும்.

முடிந்தவரை, வீசிங் வரும் குழந்தைகள் இருக்கும் இடத்தை, தூசி இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கார்ப்பெட், பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரிப்பது நல்லது. மிக பலமான வாசனைகொண்ட 'பெர்ஃப்யூம்'களைத் தவிர்ப்பதும் அலர்ஜியிலிருந்து காக்கும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, உடைக்கு வெளியே தெரியும் கை, கால் போன்ற பகுதிகளில் கொசு விரட்டும் க்ரீம் தடவி அனுப்பலாம். இதனால் சருமத்துக்கு எந்தத் தீங்கும் இல்லை.

முதியோர்
வயது முதிர்ந்தவர்களுக்கு பனிக் காலம் வந்தாலே, 'எப்போது இந்த சீஸன் முடியும்?' என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்தளவுக்கு பாதிப்பின் வீரியம் மிக அதிகம். அதிலும், ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் மேலும், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். தோல் மிக மெல்லியதாக இருப்பதால், அவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போகலாம். எனவே, மெலிந்த தேகத்தினர், குளிர் காலத்தில் அதிகமான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடும் குளிரில் வெளியே போகும்போது, குளிர்ச்சியால் உடல் தாக்குப்பிடிக்க முடியாமல், மயக்கநிலைக்குப் போகக்கூடும். இதற்கு, 'ஹைப்போதெர்மியா' என்று பெயர். இது, உடனடி மருத்துவக் கவனிப்பு அளிக்க வேண்டிய அவசரநிலை ஆகும். சிலருக்கு தலைசுற்றல் ஏற்படும்.
சிலருக்கு காலில் வெடிப்பு (Frost bite) ஏற்படும். தோல் மருத்துவரின் அறிவுரையுடன் வெடிப்புக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், இந்தப் பருவத்தில் கூடுமானவரை வெளியே அதிகம் போகக் கூடாது. தூசி இருக்கும் இடங்களில் ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்யும் வேலைகளைத் தவிர்க்கலாம்.
இதய நோய் உள்ளவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமான குளிரால், இதயத்திலிருந்து 'பம்ப்' செய்யப்படும் ரத்தத்தின் அளவு (cardiac output) குறையலாம். இதயத்துடிப்பும் சீராக இருக்காது.  
இதயப் பிரச்னை உள்ளவர்கள், குளிர் காலத்தில் மலை வாசஸ்தலங்களுக்குப் போகக் கூடாது. அதிகாலையில் வெளியே வருவதால், மாரடைப்பு ஏற்படலாம். பனிக் காலத்தில் அதிகாலை நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.
'ஹைப்போதைராய்டு' பிரச்னை உள்ளவர்களால் அதிகமான குளிரையோ, வாடைக்காற்றையோ தாங்கிக்கொள்ள முடியாது. முடிந்தவரை, அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வெளியே பனியில் வராமலிருப்பது நல்லது. உடலை எப்போதும் கம்பளி ஆடையால் மூடி கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

 காதுகளுக்குள் புகும் குளிர்ந்த காற்றால், காதிலிருந்து முகத்துக்குச் செல்லும் ஏழாவது நரம்பு (Seventh nerve) பாதிக்கப்படலாம். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், 'பெல்ஸ் பால்ஸி' (Bell's palsy) எனப்படும் 'முக வாதம்' வரும் அபாயம் உள்ளது. எனவே, கண்டிப்பாக, குளிர் காலத்தில் காதுகளை மறைத்துக்கொள்ள வேண்டும்.
பனிக் காலத்தில் எல்லோருக்குமான பிரச்னை வறண்டுபோகும் சருமம்தான். கை, கால்களில் சருமம் வறண்டுபோய், வெள்ளை வெள்ளையாக இருக்கும். உதடுகள், பாதங்கள்கூட வெடிக்கும். கைக்குழந்தைக்கும் கூட பாதிப்பு இருக்கும். எனவே, குழந்தை முதல் பெரியோர் வரை, பனிக் காலத்தில் சருமத்தை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று விவரிக்கிறார் இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.
சருமப் பாதுகாப்பு

குழந்தைகள்:
   ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, தலையில் (ஸ்கால்ப்) உள்பகுதியில் அடை அடையாக இருக்கும். பனிக் காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம். இதனால் அரிப்பு, நமைச்சல் தாங்காமல் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். சில குழந்தைகளுக்கு, புருவம், முதுகு மற்றும் முடியிலும் வெள்ளைநிறப் பொடி போல் ஒட்டியிருக்கும். இதைப் போக்க...
வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து வைத்துக்கொண்டு, குழந்தையைக் குளிப்பாட்ட பயன்படுத்தலாம்.

பயத்தம்பருப்பு, வெந்தயம், கடலைப்பருப்பு மூன்றையும் சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு வெயிலில் நன்கு காயவைத்து, மிஷினில் பட்டுப்போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை சலித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு, ஒருநாள் விட்டு ஒருநாள், உச்சி முதல் பாதம் வரை இந்தப் பொடியைக் குழைத்து, நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டி, மிருதுவான துவாலையால் துடைக்க வேண்டும். இதனால், குழந்தை, எந்தச் சருமப் பாதிப்பும் இன்றி புத்துணர்ச்சியாக இருக்கும்.

விளையாடும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு, முழங்காலில் இருந்து பாதம் வரை வறண்டு போய், அரிப்பெடுக்கும். சொறியும்போது, திட்டுத்திட்டாகக் கறுத்துவிடும். இதைப் போக்க...
ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைக் கால்களில், முட்டி முதல் பாதம் வரை நன்றாகத் தடவி 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, சோப் போட்டுக் குளிப்பாட்டி, மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். அரிப்பு, சொறி போவதுடன், கறுமையும் மறைந்து சருமத்தின் இயற்கை நிறத்தைத் தரும்.
பாதத்தின் அடிப்பகுதியும் சில குழந்தைகளுக்கு வறண்டு இருக்கும். சூடான பாலில் கடலை மாவைக் குழைத்து, வெதுவெதுப்பான சூட்டில் முழங்கால் முதல் பாதம் வரை தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதை வாரம் ஒரு முறை செய்யலாம். கால்களில் வறட்சி மறைந்து, மென்மையாகும்.

டீன் ஏஜ்
சாதாரண காலத்திலேயே பொடுகு பெரும் பிரச்னைதான். அதிலும், குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். இதற்கு, மிக முக்கியமான காரணமே, இன்றைய பெண்கள் தலையில் எண்ணெயே வைக்காமல் விடுவதுதான். இதனால் தலைக்குள் இருக்கும் சருமம் வறண்டுவிடும்.  
இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் அரை டீஸ்பூன் மிளகு போட்டுக் காய்ச்சி இறக்கவும். எண்ணெய் இளஞ்சூடாக இருக்கும்போதே, தலையில் தடவி, நன்றாக வாரிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தூள் போட்டுக் கரைத்து, தலையில் லேசாகத் தேய்த்து நன்றாக அலசிக் குளிக்க வேண்டும்.

கை, கால்களில் தோல் வறண்டு, லேசாக நகம் பட்டுக் கீறினால்கூட, வெள்ளை வெள்ளைக் கோடுகளாகத் தெரியும்.
இதைப்போக்க... ஏடுடன் இருக்கும் பாலில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயை விட்டு, கரண்டி அல்லது 'விப்பர்' கொண்டு நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையைக் கை, கால்கள், கழுத்து என எல்லா இடங்களிலும் தடவி வைத்திருந்து, சாதாரண சோப் போட்டுக் குளிக்க வேண்டும்.

நடுத்தர வயதினர் (30 முதல் 60)
தோலில் சுருக்கம் அதிகமாகத் தெரியும். பால் சம்பந்தப்பட்ட பொருட்களைக்கொண்டு, இந்தச் சுருக்கத்தைப் போக்கலாம். பால், தயிர், வெண்ணெய் என ஏதாவது ஒன்றைச் சிறிதளவு எடுத்து, நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதை அப்படியே சுருக்கம் உள்ள கை, கழுத்து, முகம் போன்ற இடங்களில் தேய்த்து, 10 நிமிடம் கழித்துக் குளிக்கலாம். அல்லது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, இரண்டு உள்ளங்கைகளையும் பரபரவெனத் தேய்த்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி வைத்திருந்து, வெறும் தண்ணீர் ஊற்றிக் கழுவலாம். இதனால், பனியால் சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.
இந்த வயதினருக்கு, தேஙகாய்ப்பால் மிகச் சிறந்தது. தலையில் தேய்த்துக் குளித்தால், கேசம் மிருதுவாக இருக்கும். தலையில் அரிப்பு, பொடுகு மறையும். உடம்பில் தேய்த்துக் குளிக்கும்போது, சருமத்தில் சுருக்கம் மறைந்து, பொன்போல மினுமினுக்கும். 

60 வயதுக்கு மேல்
சோப் உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, தேநீர் தயாரித்த பின் எஞ்சும் தேயிலைத்தூளை, சிறிது தண்ணீர்விட்டு ஊறவைத்து, அதை மிக்ஸியில் போட்டு அரைத்து, உடலிலும் தலையிலும் தேய்த்துக் குளிக்கலாம். ரசாயனம் கலக்காத, பேபி ஷாம்பூ அல்லது மைல்டு ஷாம்பூ உபயோகிக்கலாம்.
ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து வைத்துக்கொள்ளவும். குளிக்கும்போது, முதலில் உடலில் தண்ணீரை விட்டுக்கொண்டு, பிறகு இந்த எண்ணெய்க் கலவையைத் தேய்க்க வேண்டும். முதியவர்களின் சருமம் மிகவும் வறண்டு இருப்பதால், எண்ணெயை முதலில் தடவக் கூடாது. தண்ணீரை உடலில் ஊற்றிய பின் தடவினால், எண்ணெய் சமமாகப் பரவும். பிறகு, டீத்தூள் தேய்த்துக் குளிக்கலாம்.

கசகசாவை அரைத்துப் பால் எடுத்து, அதை உடலில் தடவிக் குளித்தால் வறட்சியைப் போக்கி மினுமினுக்கும்.
குளிர் காலத்தில் நம் உணவு எப்படி இருக்க வேண்டும், நம் ஆரோக்கியம் தொடர்பாக நாம் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் சென்னை 'பாரம்பரிய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்'  சித்த மருத்துவர் பத்மபிரியா.

பனிக் கால உணவும்... ஆரோக்கியமும்
''குளிர் காலம், நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும் காலம். ஆடி மாதத்துக்குப் பிறகு வருவது தட்சிணாயன காலம். அதாவது, வளர்ச்சிக்கான காலம். அதுபோல நம் உடலிலும் நோய்த்தடுப்பு சக்தி கூடியிருக்கும். சித்த மருத்துவத்தில், 'ஜீரண நெருப்பு' என்று அழைக்கப்படும் செரிமான சக்தியும் குளிர் காலத்தில் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் செரிமான சக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நல்ல செரிமான சக்தி இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.
நமது தமிழ் மரபுப்படி, நல்ல விருந்து அல்லது பலமான உணவுகளுடன் தொடர்புடைய பண்டிகைகள் எல்லாமே, குளிர் காலத்தில்தான் வரும். நவராத்திரியில் தொடங்கி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் என, குளிர் காலத்தில் வரும் எல்லாப் பண்டிகைகளிலுமே வயிற்றுக்கு பலமான விருந்து இருக்கும். மார்கழியில் பார்த்தால், அதிகாலையிலேயே கோயில்களில் பொங்கல், சுண்டல் என பிரசாதங்கள் விநியோகம் இருக்கும். இப்படி எல்லாமே நம் உடலில் அந்த நேரத்தில் ஜீரண சக்தி அதிகம் இருப்பதால் அதற்கேற்ப நம் மரபில் வழிவழியாக வந்த வழக்கங்கள்தான்.  இந்தப் பருவ காலத்தில், சுற்றுப்புறம் மிகவும் குளிராக இருப்பதால், நம் உடல் தானாகவே ஒரு கதகதப்பை உருவாக்கிக்கொள்ளும். முதியவர்களுக்கு மட்டும் இது கொஞ்சம் சிரமம் தரும் பருவமாக இருக்கும்.

உடலில் உள்ள வறட்சி போக, நல்லெண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம். மிதமான வெயில் அடிக்கும்போது, நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யலாம். உடல் நன்கு புத்துணர்ச்சி அடைந்து, சுறுசுறுப்பாகும். சிலருக்குப் பாதங்களில் வெடிப்பு ஏற்படும். இவர்கள், விளக்கெண்ணெயில் மஞ்சள்தூள் கலந்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், குணம் தெரியும். நாட்டு மருந்துக் கடையில் குங்கிலிய வெண்ணெய் என்ற மருந்து கிடைக்கும். அதை வாங்கித் தடவினாலும் நல்ல பலன் தெரியும்.

குளிர் கால உணவுக் குறிப்புகள்:
கிச்சடி, பொங்கல் போன்றவை, குளிர் காலத்துக்கான முழுமையான காலை உணவுகள். இவற்றில் சேர்க்கப்படும் பருப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகு என எல்லாப் பொருள்களுமே இந்தத் தருணத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் மருத்துவப் பொருட்கள். சீக்கிரத்திலேயே செரிக்கும்.
சாதாரணமாக நாம் குடிக்கும் சுக்கு, மல்லிக் காப்பி இந்தக் காலத்துக்கு மிகச் சிறந்த பானம். சுக்கு, மல்லியுடன் இரண்டு மிளகையும் பொடித்துச் சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்லது. சளி முதல் சகலத்தையும் விரட்டிவிடும்.

கால்வலி, வாதத்தால் ஏற்படுகிறது. வலியால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிது பெருஞ்சீரகம், மிளகு, ஓமம், சீரகம் ஆகியவற்றை எடுத்துப் பொடித்து, அதில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்கலாம். கால்வலி குறையும்.
இஞ்சிக்கு வீக்கத்தைக் குறைக்கும் மருத்துவக் குணம் உண்டு. ரத்த ஓட்டத்தில் பிரச்னை இருந்தாலும், இஞ்சி சரிசெய்யும். மூட்டுவலி, உடல்வலி இருப்பவர்கள் டீயில் இஞ்சியைத் தட்டிப்போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். சமையலில் நிறைய இஞ்சி சேர்க்கலாம். இதனால் கால் வீக்கம் குறைவதுடன், வலியும் நீங்கும்.

உணவில் இஞ்சி, கொத்துமல்லி இலை, புதினா இலை, கறிவேப்பிலை போன்றவற்றை அதிகம் சேர்க்கவேண்டும். இவையெல்லாமே சிறந்த வலிநிவாரணிகள்தான்.
பனிக் காலத்தில் பால் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது. அப்படிக் குடித்தாலும், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்துக் குடிக்கவேண்டும். இதனால் கபத்தின் குணம் குறையும்.
அரிசி, கோதுமைக்குப் பதிலாக, கம்பு, ராகி, பார்லி போன்ற தானியங்களில் கஞ்சி தயாரித்துச் சாப்பிடலாம். ஓட்ஸை விட பார்லி மிகவும் நல்லது.
சில குழந்தைகளுக்கு 'வீசிங்' எனப்படும் இளைப்பு ஏற்படும். சளித் தொந்தரவும் இருக்கும். துளசியைத் தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டிக் கொடுத்தால் சளி பிடிக்காது.
பேக்கரி உணவுகளான கேக், பஃப்ஸ், பன் போன்றவை மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்த ஸ்நாக்ஸ் கொடுப்பதைத் தவிர்த்து, கொட்டைப் பருப்பு வகைகள் (நட்ஸ்), உலர் திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

முளைகட்டிய பயறு சுண்டல், பாசிப்பருப்பில் செய்த லட்டு, வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவை சிறந்த ஸ்நாக்ஸ்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், மற்ற செயல்பாடுகளுக்கும் கொழுப்பு மிக அவசியம். எனவே எண்ணெய், நெய் சேர்த்துக்கொள்ளலாம். நெய் போட்டுச் செய்த முறுக்கு, சீடை சாப்பிடத் தரலாம். சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடப் பழகிய குழந்தை, 'ஜங்க் ஃபுட்'-ஐ நாடிப் போகாது.  

இந்தப் பருவத்தில் கிடைக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற காய்களை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஆனால், பூசணி, வெள்ளரி போன்ற நீர்க்காய்களைத் தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழத்தைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக குளிர் காலத்தில் கிடைக்கும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆரஞ்சுப் பழத்துக்கு இதுதான் சீஸன். ஆனால், சளி, ஜலதோஷம் இருப்பவர்கள், ஆரஞ்சைத் தவிர்த்துவிட்டு, நெல்லிக்காய் சாப்பிடலாம். 

பொதுவான பராமரிப்புக் குறிப்புகள்:
பச்சிளம் குழந்தைகளை, காலையிலோ மாலையிலோ குளிப்பாட்டாமல், வெயில் வந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும்.
பச்சிளங் குழந்தைகளின் சருமம் மிக மிருதுவாக இருப்பதால், வறண்டுபோவதுடன், வியர்க்குரு போன்ற சிவந்த தடிப்புகள் (ராஷஸ்) உடலில் தோன்றும். குழந்தைக்கு அரிப்பும் எடுக்கும். இதில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க, தரமான மாய்ஸ்சரைஸிங் லோஷன் உபயோகிக்கலாம்.
வீரியமிக்க வேதிப்பொருட்கள் கலக்காத, குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் மென்மையான சோப் உபயோகிக்க வேண்டும்.
கனத்த கம்பளியும், காதுகளை மூடிக்கொள்ளும் மஃப்ளரும் எப்போதும் உடலை மூடியிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், காதுகளை மூடிக்கொள்ளவேண்டியது மிக முக்கியம். ஏனெனில், உடலைக் கதகதப்பாக வைத்திருக்க, கிளவுஸ், ஷூஸ், காதுகளை மறைக்கும் தொப்பி அல்லது மஃப்ளர் போன்ற தற்காப்பு உடைகள் அணிவது அவசியம்.
இந்தக் காலத்தில் நாம் தண்ணீர் அதிகம் குடிப்பது இல்லை. இதனால், உடலில் நீர்ச் சத்து குறைந்து, வறட்சி ஏற்படுகிறது. எனவே, வழக்கம்போல தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீருக்குப் பதிலாக வெந்நீர் குடிக்கலாம்.
தலைக்குக் கண்டிப்பாக தேங்காய் எண்ணெய் வைக்க வேண்டும். குளிப்பதற்கு முன்னர், தேங்காய் எண்ணெய் வைத்துக்கொண்டு, குளிக்கலாம். இதனால் தலையில் உள்ள சருமம் வறண்டு முடி உதிர்வது தடுக்கப்படும். எண்ணெய் வைத்து நன்கு வார வேண்டும்.

உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது சகஜம். இதைப்போக்க, காய்ந்த திராட்சை உதவும். நான்கு, ஐந்து காய்ந்த திராட்சைகளை எடுத்துக்கொண்டு கைகளால் நசுக்கி, அதில் வரும் சாறை உதடுகளில் அழுத்தித் தேய்த்துக்கொண்டால் போதும். பீட்ரூட் சாறு தேய்க்கலாம்.
காலையில் வெளியே கிளம்பும் முன், சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய்யை எடுத்து விரல்களால் உதடுகளில் அழுத்தித் தடவிக்கொள்ளலாம். உதடுகள் வெடிக்காமல் இருப்பதுடன், கருக்காமலும் இருக்கும். நாக்கால் அடிக்கடி உதடுகளை ஈரப்படுத்திக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அப்படிச் செய்வதால் உதடுகள் இன்னும் அதிகமாகக் காய்ந்துவிடும். வெளியே செல்லும்போது, பனிக் காற்றால் உதடுகள் பாதிக்கப்படாமலிருக்க, தரமான 'லிப் கிளாஸ்' உபயோகிக்கலாம்.
வீட்டுக்குள்ளேயும் வெளியிலும் காலணி அணிந்து நடப்பது நல்லது. இதனால் அலர்ஜி தடுக்கப்படும்.

மூட்டு பிரச்னைக்கு இஞ்சி கஷாயம்
ஒரு துண்டு இஞ்சியைக் கழுவி, தோல் சீவி, தண்ணீர் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, தெளியவிடவும். பிறகு, வடிகட்டி, லேசாகச் சுடவைத்து, தேன் சேர்த்து அருந்தினால், குளிரில் வரும் மூட்டுப் பிடிப்புகள், மூட்டு வலி ஆகியவை குணமாகும்.

செரிமானக் கோளாறு நீங்க:
அதிமதுரம் 10 கிராம், சித்திரத்தை 10 கிராம், சுக்கு 5 கிராம், கிராம்பு 2, ஏலக்காய் 2 இவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ளவும்.  இதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து,  3 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி, சிறிது பனங்கல்கண்டு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்து அருந்தலாம். குளிர் காலத்தில் இருமல், ஜலதோஷம் எதுவும் வராது. செரிமானத்துக்கும் நல்லது.

டான்சில்ஸ் தொல்லைக்கு:
சிறு குழந்தைகளுக்கு டான்சில்ஸ் இருந்தால், தொண்டை வலி இருக்கும். 'பூண்டுத் தேன்' சிறந்த கைமருந்து. பூண்டில் 'கந்தகம்' உள்ளது. மேலும் இது சிறந்த 'ஆன்டிபாக்டீரியல்' மற்றும் 'ஆன்டி மைக்ரோபியல்' பொருளும் கூட.
நாலைந்து பூண்டுப் பல்லை அரைத்து, துணியில் போட்டு, தீயில் காட்டினால் 2, 3 சொட்டு சாறு இறங்கும். இதனுடன் 2, 3 சொட்டுகள் தேன் கலந்து குழைத்து, குழந்தையின் தொண்டையில் தொடர்ந்து தடவி வரவேண்டும். தொண்டைக்கட்டு, தொண்டைவலி எல்லாமே சரியாகும். பெரிய குழந்தைகளுக்கு, பூண்டுப்பற்களை வதக்கி, தேன் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கலாம்.

ஆஸ்துமா பிரச்னையைக் குறைக்க:
சுலபமாகச் செரிக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இரவு உணவை சீக்கிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
திப்பிலிப்பொடியை வாங்கிவைத்துக்கொண்டு, அதில் அரை டீஸ்பூன் எடுத்து, தேனில் குழைத்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால், ஆஸ்துமா தொந்தரவிலிருந்து தப்பிக்கலாம்.
பனிக் காலத்தில் நம் உணவையும் கொஞ்சம் மாற்றி, உடலை உஷ்ணப்படுத்தும் உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts