லேபிள்கள்

வியாழன், 29 செப்டம்பர், 2016

எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு?

கிச்சனை இடநெருக்கடி இல்லாமலும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள டிப்ஸ்கள் வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

வாங்கும் டப்பாக்கள் எல்லாம் ஒரே அளவிலோ அல்லது ஒரே டிசைனாகவோ இருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

காய்கறி நறுக்கும்போது அடியில் ஒரு பேப்பரை போட்டுக்கொண்டால், சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.

25 கிலோ அரிசியை வாங்கிவந்தால், அதை இரண்டு, மூன்று டப்பாக் களில் பிரித்துச் சேமிக் கலாம்.

எண்ணெய் வைக்கும் இடத்துக்கு அருகில் கத்தி, தேங்காய் துருவி, குட்டி ஸ்பூன் போன்றவற்றை வைத்தால், அவசரத் துக்கு தேடும்படி இருக்காது.

அன்றாட தேவைக்கான மளிகை, மசாலா பொருட்களை அடுப்புக்கு இடதுபுறத்தில் வைத்துக்கொள்ளலாம்.

எண்ணெய் கீழே கொட்டி விட்டால், உடனே அதன் மீது கோதுமை அல்லது அரிசி மாவைப் போட்டு, வழித்தெடுத்தால், எண்ணெய் பசை இருக்காது.

அடுப்புக்கு கீழே உள்ள 'சிலாப்'பில், தினமும் பயன்படுத்தும் குக்கர் மற்றும் கடாய்களை முதல் வரிசையில் வைத்துக்கொள்ளலாம். தேவைக்கு மட்டுமே பயன் படுத்தும் மாவு டப்பாக்களை அடுத்த வரிசையில் வைத்துக் கொள்ளலாம்.

முட்டை கீழே விழுந்து உடைந்துவிட்டால் உடனே அதன் மீது உப்பைக் கொட்டினால், வாடை குறைந்துவிடும், சுலபமாக சுத்தம் செய்யலாம். 

சமையலறையில் நாம் நிற்பதற்கு வலதுபுறத்தில் மிக்ஸி, கிரைண்டர், 'மைக்ரோவேவ் அவன்' போன்றவற்றை வைத்தால், கையாள சுலபமாக இருக்கும்.

கண்ணாடிப் பொருட்கள், கப் அண்ட் சாஸர் போன்றவற்றை எப்போதும் அடுப்புக்கு எதிர்புறத்தில், மேலேதான் வைக்க வேண்டும். அடுப்பு அருகில் வைத்தால் பிசுபிசுப்பு ஒட்டும். வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.

வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.

'சிலாப்'களாக இல்லாமல், மாடுலர் கிச்சன்களில் வரிசையாக பல 'டிரா'க்கள் வைத்திருப்பவர்கள், முதல் வரிசையில்... டீ, காபித்தூள், சர்க்கரை போன்ற... காலை எழுந்ததும் தேவைப்படும் பொருட்களை வைத்துக்கொள்ளலாம். இரண்டாவது அடுக்கில்... சாம்பார் பொடி, இட்லி மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மசாலா பொருட்கள்; மூன்றாவது அடுக்கில்... பருப்பு வகைகள்; நான்காவது அடுக்கில்... அஞ்சறைப் பெட்டி, அருகிலேயே காய்ந்த மிளகாய் என வைத்துக்கொள்ளலாம். மொச்சை, பட்டாணி போன்ற பயறு வகைகளை ஐந்தாவது அடுக்கில் வைக்கலாம். கடைசி அடுக்கில் அரிசி வகைகளை வைக்கலாம்.

அடுப்புக்கு வலப்புறம் எண்ணெய் கன்டெய் னர்களை வைக்கலாம். சந்தையில் இப்போது பலவிதமான 'ஹூக்'கள் கிடைக்கின்றன. அவற்றை சுவரில் மாட்டி, ஆயில் கன்டெய்னரை  மாட்டிவிட்டால், கீழே சிலாப்பில் எண்ணெய் பசைபடும் என்கிற கவலை இல்லை. சுவரில் மாட்ட வசதியில்லை என்றால், சின்ன ஸ்டாண்டு வைத்து, அதில் தடிமனான அட்டை வைத்து, அதன் மீது எண்ணெய் கன்டெய்னரை வைத்துப் பயன்படுத்தலாம். அதை அடிக்கடி மாற்றிக்கொள்ளலாம்.

உப்பு ஜாடிகளில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைக்கலாம். வெறும் கையில் உப்பை எடுத்தால், உப்பில் நீர் கசியும். பச்சை மிளகாய் போட்டு வைத்தால் நீர் கசியாது. வாரம் ஒருமுறை அதனை மாற்றினால் போதுமானது.

துருவிய தேங்காயை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் பால் வைக்கும் டிரேயில் வைத்துவிட்டால், 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

'என் வீட்டு கிச்சனில் நான்தான் ராணி' என்ற நினைப்பு வரவேண்டும். அப்போதுதான் அதன் மீது உரிமையும், அக்கறையும், நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்ற ஆசையும் வரும்
பயனுள்ள குறிப்புகள் :

1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.

3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.

4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.

5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

6. அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.

7. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி உப்பைச் சேர்த்தால் நெடி வராது.

8. துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.

9. குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.

10. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.

11. தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்.

12. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.

13. மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.

14. வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

15. எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்
http://pettagum.blogspot.in/2014/10/blog-post_59.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

மாஸ்டர் ஹெல்த் செக்கப் ஏன்? எதற்கு? எப்படி? டோட்டல் கைடு…

கூட்டுக் குடும்பங்கள் பெருகி இருந்த அந்த காலக் கட்டத்தில், ஒருவருக்கு ஏதேனும் உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டால், வீட்டில் உள்ள மூத்தவர்களின் கைவைத்தியமும், முதலுதவியும், அக்கம்பக்கத்தினரின் அணுகுமுறையும்ஒடுங்கி இருந்தவரை உற்சாகமாகத் துள்ளி எழவைத்துவிடும். மேலும், வீட்டுக்கு ஒரு குடும்ப டாக்டர் என்ற ஒரு நல்ல அமைப்பால், தனிப்பட்ட மனிதர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்னைகள் முழுவதையும் அவ்வப்போதே தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இன்றோ குடும்ப அமைப்பே மாறி, கூட்டுக் குடும்பங்களே இல்லாத நிலைமை. இதனால், 'குடும்ப மருத்துவர்' என்பதே மறைந்துவருகிறது.

தலைவலி வந்தால்கூட மூளை சிறப்பு மருத்துவரையும், நெஞ்சுவலி என்றால் இதய சிகிச்சை நிபுணரையும் தேடி ஓடி, ஆயிரக்கணக்கில் செலவு செய்வது வழக்கமாகிவிட்டது. ஒவ்வோர் மருத்துவரும் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட நோய்களை மட்டும் சிறப்பாகக் கவனித்துவிட்டு, மற்றவற்றை விட்டுவிடுகிறார்கள். ஒவ்வோர் உடல் உறுப்பின் பாதிப்புக்கும் அந்தந்தத் துறை மருத்துவரை அணுகவேண்டிய கட்டாய நிலை.

இரண்டு மணி நேரம் காத்திருக்கும் நோயாளியை மேலும் ஒரு மணி நேரம் பரிசோதித்து முழுவதையும் பார்ப்பதற்கு மருத்துவருக்கும் நேரம் இல்லை; அவ்வாறு முழுப் பரிசோதனைக்காகக் காத்திருக்க நோயாளிகளுக்கும் அவகாசம் இல்லை.

'முழு உடல் பரிசோதனைக்குப் பணம் அதிகம் தேவைப்படுமே. வியாதியே இல்லாதப்ப, எதற்கு செக்கப்?' என்கிற பொருமல்களுக்கும் குறைவே இல்லை.

ஆரோக்கியமான வாழ்வுக்கு முழு உடற் பரிசோதனை மிகவும் முக்கியம். பல்லாயிரக்கணக்கான

வர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து அவர்களுக்கு எளிய வாழ்க்கை முறை மாற்றம் மூலம் உயிர் காப்பது முழு உடல் பரிசோதனைத் திட்டம்தான்.

யாரெல்லாம் செய்து கொள்ளவேண்டும்?
அனைவரும் செய்துகொள்ளலாம். உயிர் மேல் அக்கறையும் குடும்பத்தின் மேல் பாசமும், உடலின் [img]நலனைப் பாதுகாக்கவும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

அதிகம் செலவாகுமா?
முழு உடல் பரிசோதனையை உடல் நலன் காக்க செய்யப்படும் நல்ல முதலீடாகக்கூடக் கருதலாம். முன்பே கவனிக்காமல்விட்டுவிட்டதால், நோய் வந்த பிறகு ஏற்படும் பணக் கஷ்டம், மனக் கஷ்டம், வலி, வேதனை இவற்றுடன் ஒப்பிடும்போது, முதலிலேயே செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்கு செய்வது மிகக் குறைந்த செலவுதான்.

அரசுப் பொது மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் 3,500 முதல் 50,000 ரூபாய் வரை மினி பரிசோதனை, மாஸ்டர் பரிசோதனை, இதயப் பரிசோதனை, வயிறு, மூளை, நரம்பு, எலும்புப் பரிசோதனை சிறப்புப் பரிசோதனை மற்றும் அதிசிறப்புப் பரிசோதனை, எனப் பல்வேறு பேக்கேஜ்களில் கிடைக்கின்றன. உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு உடல் பரிசோதனைக்கானக் கட்டணத்தையும் தந்துவிடுகின்றன.

யார் யாருக்கு என்னென்ன பரிசோதனை?
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வரும் கோளாறுகள், மரபணு மூலமாக வரும் வியாதிகள் போன்றவற்றைக் கண்டறிய என ஹெல்த் செக்கப் பேக்கேஜ்கள் உள்ளன.

பள்ளியில் சேருவதற்கு முன்பு, குழந்தைகளுக்கு நோய்த் தொற்று உள்ளதா? தடுப்பு ஊசியால் தடுக்கப்பட வேண்டிய நோய்கள் ஏதேனும் வந்துள்ளனவா? பல்லில் சொத்தை, சொறி சிரங்கு, அலர்ஜி, தேமல், தோல் நோய்கள், காது, மூக்கு, தொண்டை, டான்சில், அடினாய்டு நோய்கள், மூளை வளர்ச்சி, கண் பார்வைத் திறன், படிப்புத் திறன் குறைபாடுகள், இதயம், நுரையீரல், வயிறு, குடல் நோய்கள், சிறு நீரக நோய் தொற்றுகள் போன்றவை பற்றித் தெரிந்துகொள்ளலாம். மேலும் உடல் வளர்ச்சி சீராக உள்ளதா என்பதையும் அறியலாம்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு என்றே சிறப்பு முழு உடல் பரிசோதனைகளும் கிடைக்கின்றன.

பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பரிசோதனைக்கான செலவுத் தொகையை முதல் மாத சம்பளத்திலேயே கொடுத்துவிடுகின்றன. ஆனாலும் பலர் எந்த சோதனைகளும் செய்யாமலேயே மருத்துவர்களிடம் (பொய்) சான்று பெற்று வருவதும் வேதனை. இது நம் உடலுக்கு நாமே வேட்டு வைப்பதுபோலத்தான்.

போலீஸ், ராணுவம், ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்பவர்கள், மருத்துவப் பணியாளர்கள் வருடாவருடம் உடல் நலத் தகுதிச் சான்று பெறவேண்டியது கட்டாயம்.

முழு உடற்பரிசோதனை செய்துகொள்ளக்கால இடைவெளி என்ன?
30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மூன்று வருடத்துக்கு ஒரு முறையும்,

40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும்,

50 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருடத்துக்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.

பரிசோதனைக்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
முழு உடல் பரிசோதனைக்கு நீங்கள் முன்பதிவு செய்வது அவசியம்.

உங்களிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்து சில கேள்விக்கான பதில்களை எழுதச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் ஆம் அல்லது இல்லை என்பது போன்ற பதில்களாக இருக்கும்.

கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பசி, தூக்கம், பல், நாக்கு, மார்பு, இதயம், வயிறு, பிறப்பு உறுப்பு நோய்கள், உடலில் மதமதப்பு, மரத்துப்போதல், வலி, கூச்சம், பெரியதாகும் மச்சம், ஆறாத புண்கள் பற்றிய கேள்விகளாகவும் இருக்கும். எளிதில் விடையளிக்கக்கூடியவையே.

சந்தேகம் இருந்தால் கேட்டுவிட்டுப் பதில் எழுதுங்கள். அந்தக் கேள்விகளை வைத்துத்தான் உங்கள் உடலில் எந்த இடத்தில் என்ன நோய் வர வாய்ப்பிருப்பதாக நினைக்கிறார்களோஅதற்கான கூடுதல் பரிசோதனைகள் செய்வார்கள்.

வீட்டில் உங்கள் பெற்றோரிடம், நீங்கள் சிறு வயதில் போட்டுக்கொண்ட தடுப்பு ஊசி, செய்துகொண்ட அறுவை சிகிச்சைகள், ஒத்துக்கொள்ளாத மருந்துகள், இதற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் வீட்டில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு, வலிப்பு, சில பரம்பரை வியாதிகளான ஹீமோஃபீலியா போன்றவை இருந்தால், அதுபற்றிய விவரங்களையும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதளவில் எப்படித் தயாராவது?
இரவு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கி எழவேண்டும்.

காலையில் பல் துலக்கியதும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

பரிசோதனை முடியும் வரை டீ, காபி, பால், உணவு எதுவும் சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றோடுதான் பரிசோதனைக்கு வர வேண்டும்.

ப‌ரிசோதனையின்போது உணவு வயிற்றில் இருக்கலாமா?
சர்க்கரை, கொலஸ்ட்ரால், நல்ல கொழுப்பு ஹெச்.டீஎல், கெட்ட கொழுப்பு எல்.டீ.எல் மற்றும் வீ.எல்.டீ.எல், ட்ரைகிளிசரைடு போன்றவற்றை அளவிடவேண்டும். உணவு வயிற்றில் இருந்தால், அளவு மாறி அது வியாதியால் ஏற்பட்ட பாதிப்பா அல்லது சாப்பிட்ட உணவா எனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், பித்தப் பையில் இருக்கும் பித்த நீர், உணவைச் செரிமானம் செய்ய வயிற்றுக்குள் சென்றுவிடும். பித்தப்பை காலியாக இருந்தால், அதில் கல் ஏதாவது இருக்கிறதா என்பதும் தெளிவாகத் தெரியாது.

இரைப்பைக்குக் கீழே கணையம் இருப்பதால், உணவு இரைப்பையில் இருந்தால் கணையம் தெரியாது. சர்க்கரை நோய்க்குக் கணையத்தில் ஏற்படும் கல், கட்டி, அழற்சி ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.

பரிசோதனைகளுக்கு முன்பு ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருந்தால் மட்டுமே வயிற்றின் உள் உறுப்புகளை ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.

தண்ணீர் குடித்ததும், சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பி இருந்தால் மட்டுமே ஆண்களுக்குப் ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் வியாதிகளையும்; பெண்களுக்கு, கர்ப்பப்பை குறைபாடுகளையும், நீர்க்கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள் ஆகியவற்றையும் தெளிவாக ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.

சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்குச் சிறுநீர் கழித்த பிறகும் உள்ளே சிறுநீர் தேங்கி இருக்கிறதா, எந்த அளவில் அது இருக்கிறது என்பன பற்றி தெரிந்துகொள்ள மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்ப்பார்கள்

பரிசோதனைக்கு வரும் தினத்தன்று கடைப்பிடிக்க வேண்டியவை?
கோட், சூட், டை, ஷூ, சாக்ஸ், ஜீன்ஸ், இறுக்கமான பனியன் போன்ற ஆடைகளைத் தவிர்த்து எளிதில் கழற்றக்கூடிய தளர்வான ஆடைகள் அணிவது நல்லது. கையில் இரண்டு கைக்குட்டைகள் வைத்துக் கொள்ளவேண்டும்.

பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிவது வசதியானது.
மாதவிலக்கு சமயங்களில் பரிசோதனையைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்ய முடியாமல் வேறு ஒரு நாள் திரும்பச் செல்ல நேரிடும்.

பரிசோதனைக்கு முந்தைய இரவு விருந்தும் வேண்டாம்; பட்டினியும் வேண்டாம்.

மது, புகை, வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்றவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். புகைபிடித்த அடுத்த 30 நிமிடங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்.

அளவான சாப்பாடும் நல்ல தூக்கமும் தேவை.

நாக்கைப் பரிசோதித்து ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், சாதாரணப் புண், புற்று நோய், எய்ட்ஸ், டைஃபாய்டு, தைராய்டு குறைபாடுகள், மூளை பாதிப்புகள், ஈறு, பல்லில் ஏற்பட்டுள்ள நோய்கள், எச்சில் சுரப்பி சம்பந்தமான நோய்கள் என 40க்கும் மேற்பட்ட நோய்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால், வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்ற பொருட்களை உபயோகித்தால், வியாதிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் போகும்.

உதட்டைப் பரிசோதித்து இதயம், நுரையீரல், வெண் புள்ளிகள், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியும். எனவே பரிசோதனைக்குப் போகும்போது லிப்ஸ்டிக் போட வேண்டாம்.

குறைந்தது 8 முதல் 12 மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்டுருக்க வேண்டியது அவசியம்.

அதிக வாசனை உள்ள பவுடர், சென்ட், பூக்கள் பயன்படுத்த வேண்டாம்.

நகத்தில் வெடிப்பு, அதன் வளைவுகள், புள்ளிகள், கோடுகள், நிறம், குழிகள் போன்றவற்றைப் பரிசோதித்து, என்ன வியாதி எனக் கண்டுபிடிக்க முடியும். அதனால், நகச் சாயமும், மருதாணியும் பரிசோதனையின்போது வேண்டாம்.

செல்போனை சைலன்ட் மோடில் வைத்துவிடுங்கள் அல்லது அணைத்தும் விடலாம்.

உங்கள் உடலில் எங்கேனும் பெரியதாகி வரும் மச்சம், தழும்பு, மரு, படை, சிவப்புத் திட்டு, தடிப்பு, கட்டி, அரிப்பு, கண்கட்டி, முகத்தில் தேமல், நகச்சுத்தி, நீண்ட நாட்களாக ஆறாத புண், அவ்வப்போது வந்து போகும் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, நாவறட்சி, கண் இருண்டு போதல் எனத் தொந்தரவுகள் ஏதேனும் இருந்தால், குறித்து வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சொல்லுங்கள். நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகள் ஏதாவது இருந்தால், அது பற்றிய குறிப்புகளையும் சொல்லுங்கள்.

மாஸ்டர் ஹெல்த் செக்கப் பற்றி டாக்டர் விரிவாக பேசுகின்றனர்.

என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?
ரத்தப் பரிசோதனை
ரத்தத்தில் அணுக்கள் எண்ணிக்கை
ரத்தத்தில் சர்க்கரை அளவு
ரத்தத்தில் கொழுப்பு அளவு
ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், பிளுருபின், யூரிக் அமிலம் அளவுகள்
ரத்த அழுத்தம்
வயிறு மற்றும் செரிமான மண்டலம் ஸ்கேன்
சிறுநீர் பரிசோதனை
நெஞ்சக எக்ஸ்ரே
இ.சி.ஜி, எக்கோ
ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பரிசோதனை
பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை
மருத்துவர்கள் மற்றும் உணவு ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனை

ரத்த பரிசோதனை
ரத்த செல் பரிசோதனை

ரத்த வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் மற்றும் ரத்த வகை, ஆர்.எச் டைப் எது எனப் பரிசோதிக்கப்படும்.

இந்த பரிசோதனையின் மூலம் ரத்தச் சோகை, ரத்தத்தில் நோய்த் தொற்று, ரத்தம் உறைதலில் பிரச்னை, ரத்தப் புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு போன்றவற்றைக் கண்டறியலாம்.

ரத்தச் சிவப்பு அணுக்கள்தான் ஆக்சிஜனை உடலில் உள்ள செல்களுக்கு சுமந்து செல்கிறது. ரத்த செல்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களுக்கு அனீமியா போன்ற பிரச்னை இருப்பதைக் கண்டறிந்துவிட முடியும். அதேபோல ஹீமோகுளோபின் அளவும் பரிசோதிக்கப்படும். ரத்தச் சிவப்பு அணுக்களின் அளவு, ரத்தத்தில் அதன் பரப்பு போன்றவையும் பரிசோதிக்கப்படும்.

ரத்த வெள்ளை அணுக்கள்தான் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியின் போர் வீரர்கள். நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுபவை இவைதான். இதில் மீயூட்டோபில், லிம்போசைட், மோனோசைட், இயோசினோபில் என்று பல வகைகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை எப்படி உள்ளது என்று பரிசோதிக்கப்படும்.

விரலில் சின்னக்காயம் பட்டாலும் ஒரு சில நிமிடங்களில் அது காயத் தொடங்கிவிடுகிறது. இதற்கு ரத்தத் தட்டு அணுக்கள்தான் காரணம். ரத்தத் தட்டு அணுக்கள் போதுமான அளவில் இல்லை என்றால், ரத்தம் உறையாமை பிரச்னை ஏற்படும். டெங்கு காய்ச்சலின் போது தட்டு அணுக்கள் எண்ணிக்கை குறையும்.

ரத்த கெமிஸ்ட்ரி டெஸ்ட்
ரத்தத்தில் சர்க்கரை அளவு, கால்சியம், எலக்ட்ரோலைட், கொலஸ்டிரால், சிறுநீரக செயல்திறன் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ரத்தத்தில் சர்க்கரை
முதலில் எடுக்கப்படும் ரத்த மாதிரியைக்கொண்டு சாப்பிடுவதற்கு முன்பு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கண்டறியப்படும்.

சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்யப்படும். சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பது கண்டறியப்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு எச்பிஏ1சி பரிசோதனை செய்யப்படும். இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினைப் பரிசோதித்து கடந்த மூன்று மாதங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைத் துல்லியமாகக்காட்டும்.

கால்சியம் பரிசோதனை
நம் உடலின் மிக முக்கியமான தாது உப்பு, கால்சியம். ரத்தத்தில் கால்சியம் அளவு இயல்பு நிலைக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால், சிறுநீரகம், எலும்பு, தைராய்டு, புற்றுநோய், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்னைகள் இருக்கலாம்.

எலக்ட்ரோலைட் பரிசோதனை
உடலின் நீர் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவது சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட், குளோரைட் ஆகிய தாது உப்புக்கள். இதை, 'எலக்ட்ரோலைட்' என்பர். இதன் அளவில் மாறுபாடு இருந்தால், நீரிழப்பு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கலாம். இதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை உதவுகிறது.

சிறுநீரக செயல்திறன் பரிசோதனை
ரத்தத்தில் உள்ள யூரியா நைட்ரஜன் மற்றும் கிரியாட்டினின் அளவைக்கொண்டு சிறுநீரகத்தின் செயல்திறன் எப்படி உள்ளது என்று பரிசோதிக்கப்படும்.

ரத்த என்சைம் பரிசோதனை
நம் உடலில் ரசாயனங்களின் ஆற்றல் அல்லது வினை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய, இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக மாரடைப்புக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை இந்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

இதய நோய்களைக் கண்டறிய உதவும் ரத்தப் பரிசோதனை
இதில் 'லிப்போபுரோட்டீன்' பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு கண்டறியும் பரிசோதனை. இதன் மூலம் இதய ரத்தக் குழாய் நோய்க்கான வாய்ப்பைக் கண்டறியலாம்.

பொதுவாக மொத்தக் கொழுப்பு 200க்கு கீழும், நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல் ஆண்களுக்கு 45க்கு மேலும், பெண்களுக்கு 50க்கு மேலும், கெட்டக் கொழுப்பான எல்.டி.எல் 100க்கு கீழாகவும், ட்ரைகிளிசரைடு 150க்கு கீழாகவும் இருக்க வேண்டும்.

இந்தப் பரிசோதனையைத் தனியாகவும் செய்யலாம். அதற்கு பரிசோதனை செய்வதற்கு 8 முதல் 12 மணி நேரத்துக்கு முன் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

ரத்தம் உறைதல் பரிசோதனை
ரத்தம் உறைதலில் பிரச்சனை இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு, இந்தப் பரிசோதனை பிரத்யேகமாகச் செய்யப்படும்.

ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் 140/90 மிமி மெர்க்குரி இருந்தால் சரியான அளவு. இதற்கு மேல் இருந்தால், உணவில் உப்பைக் குறையுங்கள். புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்த்து மீண்டும் பரிசோதித்துப் பாருங்கள். குறையவில்லை என உறுதிப்படுத்திய பிறகு, வாழ்க்கைமுறை மாற்றம், உடல் உழைப்பு, உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் மாத்திரைகள் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

சிறுநீர் பரிசோதனை
பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்கும்போதே சிறுநீரையும் பரிசோதனைக்குத் தரும்படி அறிவுறுத்துவார்கள்.

சிறுநீரைக் கொண்டு 100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்ய முடியும்.

உடல் பரிசோதனையின்போது அதன் நிறம் எப்படி உள்ளது, நோய்த் தொற்று ஏதேனும் உள்ளதா, இகோலை தொற்று இருந்தால் சிறுநீரின் நாற்றம் அதிகமாக இருக்கும்.

ஏதேனும் தொற்று உள்ளதா, அதன் பி.எச் அளவு, சர்க்கரை, புரதம் போன்றவை வெளிப்படுகிறதா, கால்சியம், பாஸ்பேட், ரத்த சிவப்பணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள் ஏதேனும் வெளியேறுகிறதா? என்றெல்லாம் பரிசோதிக்கப்படும்.

மலம் பரிசோதனை
சில மருத்துவமனைகளில் முந்தைய நாளே ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பா கொடுத்து வீட்டிலேயே காலையில் சிறிதளவு மலத்தை அதில் எடுத்து வரும்படி சொல்லுவார்கள். சில மருத்துவமனைகளில் மருத்துவமனையிலேயே மலத்தைப் பரிசோதனைக்குத் தரும்படி கூறுவார்கள்.

இதன் மூலம் வயிற்றில் புழுக்கள், அமீபா, டைபாய்டு தொற்றுகள், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், ஆசனவாய் நோய்த் தொற்றுகள், புற்றுநோய் பாதிப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய முடியும்.

உணவுக் குழாயில் ரத்தக் கசிவு இருந்தால், மலம் கருப்பு நிறத்தில் வெளிவரும். அகல்ட் பிளட் (Occult Blood) பரிசோதனை மூலம் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிந்துவிட முடியும்.

எக்ஸ்ரே
நுரையீரல் நோய்களான நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, ரத்தம், நீர், சீழ், காற்று உள்ளே கோர்த்து மூச்சடைப்பை ஏற்படுத்துதல், இதய வீக்கம், இதய வால்வு நோய்கள், இதயச் சவ்வு, கட்டி, புற்று நோய்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் பற்றி தெரிந்து கொள்ள லாம்.

இ.சி.ஜி
இ.சி.ஜி என்னும் இதயச் சுருள் வரைபடம் மூலம், இதயத் துடிப்பின் எண்ணிக்கை, கால அளவு, மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, இதயத் தசை வீக்கம், மின்னோட்ட அமைப்பில் ஏற்படும் கோளாறுகள் என சுமார் 120 வகையான வியாதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

உயரம்
உடலின் உயரத்தைப் பரிசோதித்து, சரியான வளர்ச்சி, உயரக் குறைபாடு, மிக அதிக உயரம் அல்லது குறைந்த உயரம் உள்ளவர்களுக்கு, வேறு ஏதேனும் ஹார்மோன் குறைபாடுகள் காரணமா என்று அறியலாம்.

எடை
உயரத்தை சென்டிமீட்டரில் குறித்துகொள்வார்கள். அதிலிருந்து 100ஐக் கழித்தால் வருவது உங்கள் ஆரோக்கியத்திற்கான எடை. அத்துடன் அதிகபட்சமாக 5 கிலோ கூடக் குறைய இருக்கலாம். உங்கள் எடையைக் கூட்டவோ குறைக்கவோ, மருத்துவ நிபுணரும், உணவியல் நிபுணரும் ஆலோசனை தருவார்கள்.

இடை அளவு
இடுப்பு மற்றும் அதற்கு மேல் தொப்புள் மேலே வைத்து இடை, இடுப்பு அளவுகளைக் கணக்கிடுவார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் வர இருக்கும், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம். உடல் பருமன் போன்ற வியாதிகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். அவை வராமல் தடுக்க ஆலோசனை பெறலாம். இடையளவு கூடக்கூட ஆயுள் அளவு குறையக்கூடும்.

ஆண்களுக்கு 90 செ.மீ.க்கு கீழும் பெண்களுக்கு 80 செ.மீ.க்கு கீழும் இருப்பது நலம்.

மார்பு விரியும் தன்மையைப் பரிசோதித்து, நுரையீரல் நோய்கள், மார்பு எலும்பு வடிவம் (கூன், கோணல், குழிவு, பீப்பாய், குறுகிய அகன்ற மார்பு) ஆகியவற்றில் ஏற்படும் வியாதிகளை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

வயிற்று ஸ்கேன்
இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள், குடல், ரத்தக் குழாய்கள், சவ்வுகள், சிறுநீர்ப்பை, ப்ராஸ்டேட் சுரப்பி, கர்ப்பப்பை, என வயிற்றின் அனைத்து உள்உறுப்புகள் பற்றியும், அவற்றின், எடை, அளவு, அமைப்பு, ரத்த ஓட்டம், செயல்பாடு, 1 மி.மீட்டருக்கு மேல் உள்ள நீர்க் கட்டிகள், புற்று நோய், நோய்த் தொற்றுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கல்லீரல் பரிசோதனை
கல்லீரலானது, குளுக்கோஸ், ஆல்புமின் புரதங்கள், ரத்தத்தை உறையவைக்கும் முக்கியப் பொருட்கள், மருந்துகளைச் செரிமானம் செய்து வெளியேற்றுதல், உணவில் கொழுப்புப் பொருள்களைச் செரிமானம் செய்தல், புரத, மாவு, கொழுப்புச் சத்துக்களைச் சேர்த்துவைத்தல் போன்ற உயிர் காக்கும் மிக அத்தியாவசியமான பணிகளைச் செய்துவருவதால், கல்லீரல் செயல்பாட்டைப் பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது. அதில் ஏதாவது நோய்த் தொற்று, சேதம், காமாலை, அறிகுறி இருக்கிறதா எனப் பரிசோதித்து அறிவார்கள்.

சிறுநீரகப் பரிசோதனை
இரண்டு சிறுநீரகங்களின் அளவு, ரத்த ஓட்டம், செயல்திறன், உடலின் கழிவுகளை வெளியேற்றும் திறன் போன்றவற்றை, யூரியா, கிரியேட்டினின் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வார்கள்.

கண்
பார்வைத்திறன் குறைபாடுகளான கிட்டப் பார்வை, தூரப் பார்வை, நிறக் குருடு, மாலைக்கண் நோய், கண்புரை, விழித்திரைக் குறைபாடுகள், நாள்பட்ட சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

காது
கேட்கும் திறன், சவ்வின் தன்மை, தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, தள்ளாட்டம், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், தொண்டை, மூக்கில் சதை வளர்ச்சி, நோய்த் தொற்றுகள் பற்றி ஆராய்ந்து சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்கள்.

தோல்
சொரி, சிரங்கு, தேமல், படை, அரிப்பு, தடிப்பு, நிறம் மாறிய இடங்கள், வெண்மை, கருமை, சிவப்புப் புள்ளிகள், மருக்கள், சொரசொரப்பான முதலை அல்லது மீன் செதில் போன்ற தோல், நிறம் மாறுதல், முகப்பரு, கால் ஆணி, போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் அனைத்திற்கும், தோல் நோய் நிபுணர் ஆலோசனை தருவார்.

ஸ்கேன் சிடி ஸ்கேன்
சிடி ஸ்கேன் என்பது கம்ப்யூடட் டோமோகிராபி என்பதன் சுருக்கம். முப்பரிமாணம் உள்ள உறுப்பைப் பல கோணங்களிலும் படம் எடுத்து, அதை ஒருங்கிணைத்து, இரு பரிமாணப் படங்களாகத் தருவதுதான் சிடி ஸ்கேன் செய்யும் பணி.

மென்மையான திசுக்கள், இடுப்புப் பகுதி, ரத்தக் குழாய்கள், நுரையீரல், வயிறு, எலும்புகள் மற்றும் மூளை போன்ற பகுதிகளில், அதிக அளவு விவரங்கள் தேவைப்படும் சமயத்தில், சிடி ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது.

பலவகை புற்றுநோய்களையும், கட்டிகளையும் கண்டறிவதற்கு ஸ்கேன் பேருதவியாக இருக்கும். ஒரு கட்டியின் துல்லியமான அளவு மற்றும் இருப்பிடம், அது எந்த அளவுக்கு அருகில் இருக்கும் திசுக்களைப் பாதித்திருக்கிறது என்பன போன்ற விவரங்கள் சிடி ஸ்கேன் மூலம் தெரியும்.

உள்உறுப்புகள் மற்றும் ரத்தக் குழாய்களில் வீக்கமோ அல்லது கட்டிகளோ இருப்பதையும் சிடி ஸ்கேன் காண்பிக்கும்.

கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் காயங்களோ, கட்டிகளோ இருந்தால் தெரிந்துவிடும். கதிரியக்கம் அளிக்க வேண்டிய இடத்தையும், பையாப்சி எனப்படும் திசு அகழ்வு செய்ய வேண்டிய இடத்தையும் துல்லியமாகக் காட்டிவிடும்.

புற்றுநோய், நிமோனியா மற்றும் மூளையில் அடிபட்டு ரத்தக் கசிவு, உடைந்துபோன எலும்புகள் போன்றவற்றை ஆய்வு செய்ய சிடி ஸ்கேன் சிறந்தது.

எலும்பு நோய்கள், எலும்பு அடர்த்தி, மற்றும் முதுகெலும்பின் தன்மை ஆகியன தெரியவரும். பக்கவாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, போன்றவற்றுக்குக் காரணமான குறைபாடுள்ள ரத்தக் குழாய்களின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

எம்.ஆர்.ஐ ஸ்கேன்
எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்பது மேக்னடிக் ரிசோனன்ஸ் இமேஜிங் என்பதன் சுருக்கம். இதுவும் சிடி ஸ்கேன் போன்றதுதான் என்றாலும், சில வேறுபாடுகள் உள்ளன.

எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் காந்தமும் ரேடியோ அலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

எலும்புகளையும் தசைகளையும் இணைக்கும் நாண்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேனில்தான் தெரியும்.

முதுகுத் தண்டுவட ஆய்வு, மற்றும் மூளைக்கட்டி போன்றவற்றிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சிறந்தது.

பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி
˜ பெட் ஸ்கேன் என்று அழைக்கப்படும் இந்தப் பரிசோதனை முறையில் பாதிப்பு இல்லாத சிறிய அளவில் கதிர்வீச்சை வெளியிடும் பொருள் உடலின் உள்ளே செலுத்தப்படும். இந்த கதிர்வீச்சானது எஃப்.டி.ஜி என்ற ஒரு வகையான சர்க்கரை.

உடலில் செல்கள் இயங்க சர்க்கரைத் தேவை. புற்றுநோய் உள்ளிட்ட உடலின் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு சர்க்கரையின் தேவை இயல்பைவிட மிக அதிகமாக இருக்கும்.

இப்படி பாதிப்பு உள்ள இடங்களில் இந்த சர்க்கரையானது ஒன்றுசேர்ந்து கதிர்வீச்சை வெளியிடும். அதை கம்ப்யூட்டர் உதவியுடன் வரைபடம் ஒன்றைத் தயாரித்து எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறியலாம்.

இந்தக் கருவியின் மூலம் புற்றுநோய் பாதிப்பை மட்டுமின்றி, உறுப்புக்களின் தோற்றம், அவற்றின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ஆக்சிஜன் பயன்பாடு, சர்க்கரை பயன்பாடு உள்ளிட்டவற்றையும் கண்டறியலாம்.

உடலினுள் செலுத்தப்பட்ட கதிர்வீச்சு வெளியிடும் சர்க்கரையானது ஒன்றரை மணி நேரத்தில் செயல் இழந்துவிடும். 12 மணி நேரத்தில் இது உடலில் இருந்து வெளியேறிவிடும்.

கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், குழந்தைகள் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் இந்த ஸ்கேன் செய்யலாம்.

புற்றுநோய் கண்டறியும் ரத்தப் பரிசோதனை
ஒரே ஒரு துளி (3மி.லி.) ரத்தம் போதும். அதைக்கொண்டு கர்ப்பபை புற்றுநோய், கருமுட்டை, பெருங்குடல், கணையம், பித்தப்பை, கல்லீரல், தைராய்டு, ரத்தம், ப்ராஸ்டேட், மார்பகம், எலும்பு, வயிறு, சிறுநீரகம், ரத்தக் குழாய் உள்ளிட்ட 25 வகையான புற்றுநோய்கள் ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்.

புற்றுநோய் மார்க்கர் என்று ஒன்று உள்ளது. பிராஸ்டேட் புற்றுநோய் உள்ளதா என கண்டறிய பி.எஸ்.ஏ என்ற மார்க்கர் உள்ளது. பொதுவாக ரத்தப் பரிசோதனையில் இதன் அளவு 5க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால் ஆறுக்கு மேல் சென்றால், ஏதோ ஒரு பிரச்னை உள்ளது என்று அர்த்தம்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, நோய்த் தொற்று காரணமாகவும் இந்த அளவு அதிகரிக்கலாம். எனவே, ஆன்டிபயாட்டிக் கொடுத்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும். இப்படி ஆரம்ப நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிவதன் மூலம் மிகப்பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.

கருமுட்டைக்கு சிஏ125, பெருங்குடலுக்கு சி.ஈ.ஏ, வயிறுக்கு சி.ஏ72.4 என்று மார்க்கர்கள் உள்ளன. இவற்றைக்கொண்டு புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை எளிதில் கண்டறிந்துவிடலாம். அப்படியே புற்றுநோய் இருப்பது தெரியவந்தால் அதை உறுதிப்படுத்த, மேற்கொண்டு பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

மகளிருக்கான சிறப்புப் பரிசோதனை பேப் பரிசோதனைகள்
ஓரிரு நிமிடங்களில் பெண் உறுப்பு மற்றும் கர்ப்பப்பையின் திசுக்களைச் சேகரித்து ஆய்வு நடைபெறும்.

பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பப்பைப் புற்றுநோய் மற்றும் இதர நோய்த் தொற்றுகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியலாம்.

21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.

மேம்மோகிராம்
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறியும் பரிசோதனை இது. மார்பகத்தை எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதிப்பார்கள். வலி இருக்காது.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. இப்படிப் பரிசோதித்துக்கொள்ளும் பெண்களில் சுமார் 10% பேருக்குத்தான் மேல்சிகிச்சை தேவைப்படும். அதிலும் மிகச் சிலருக்குத்தான் மார்பகப் புற்றுநோய் இருக்கும். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது எளிது.

கவனிக்க
அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு ஒரு பொது மருத்துவ நிபுணர் உங்களைப் பரிசோதித்து தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவார்.

உணவு ஆலோசகரின் பங்கு முழு உடல் பரிசோதனையில் மிகவும் முக்கியமானது. அநேகமாக எல்லோரும் அவரின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டியிருக்கும்.

முழு உடல் பரிசோதனை மூளைக்கு இல்லையா?
முழு உடல் பரிசோதனையில், எல்லாப் பரிசோதனைகளும் செய்கிறார்கள். ஆனால், மூளைப் பரிசோதனை மட்டும் ஏன் செய்வதில்லை? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழதான் செய்யும்.

"மூளை நன்கு செயல்படுபவர்கள் மட்டும்தான் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள்." என்றார் டாக்டர்.

மருத்துவர் சொல்வதுபோல், எல்லோருமே சிந்தித்து செயல்படவேண்டிய முக்கியமான விஷயம் இது. நிச்சயம் ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும். நோய் வருமுன் காப்போம். செலவைக் குறைப்போம்.

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=158&t=42504


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

உங்கள் செல்லக் குழந்தைகள் கோபம் கொள்கின்றனரா? இதோ கையாள வழிகள்

குழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விடயமல்ல.

கோபத்தில் அவர்களைச் சமாளிப்பது வெறுப்படைய வைப்பதுடன் சற்றும் சுவாரஸ்யமாக இருக்காது. அதே நேரம் அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம்.

இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.

கோபத்தில் அமைதியாக கவனித்தல்

குழந்தைகள் கோபம் கொண்டு அழும்போதோ அல்லது ஏதாவது பொருட்களை தூக்கி உடைக்கும்போதோ, பதிலுக்கு நாம் அவர்கள் மேல் கோபம் கொள்ள கூடாது.

அந்த நேரங்களில் அமைதி காப்பது வேண்டாத விளைவுகளைத் தடுப்பதுடன், குழப்பங்களையும் குறைக்கும். உங்கள் அமைதியான நிலை, கோபத்தில் இருக்கும் உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தும்.

குழந்தைகள் அமைதியடைந்தவுடன் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

உடல் ரீதியான அடக்குமுறைகள் கூடாது

குழந்தைகள் கோபத்தின் உச்சிக்கு செல்லும்போது பதிலுக்கு நீங்களும் கோபத்தின் உச்சிக்கு சென்று அவர்களை அடிக்க கூடாது.

அவ்வாறு உடல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டால், பின்னர் குழந்தைகளை அமைதிப்படுத்தும் உங்கள் முயற்சியில் நீங்கள் நம்பிக்கையிழக்க வேண்டியிருக்கும். கலவரம் புகுந்து கொண்டு அமைதி என்பது பெற முடியாத ஒன்றாக ஆகிவிடும்.

உடல் ரீதியான உணர்வு வெளிப்பாடுகள் உங்கள் குழந்தையின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அமைந்து, உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கு நேர்மாறாக அவர்கள் செயல்பட வழிவகுக்கும்.

அவ்வாறு கோபம் கொள்வது எந்த விதத்திலும் நிலைமையை சரிசெய்யவோ அல்லது அமைதியை ஏற்படுத்தவோ உதவாது என்பதால், இந்த வழிமுறை பயனற்றுவிடுகிறது.

எடுத்துக் கூறுங்கள்

கோபத்திற்குப் பிறகு அமைதி திரும்பியவுடன், நடந்தவற்றைக் குறித்துப் பேசுவது மிகவும் முக்கியம்.

குழந்தையை அரவணைத்துப் பேசுவதன் மூலம் அந்தக் குழந்தை தான் கவனிக்கப்படுவதை உணர்கிறது. கோபத்தின் போது உணர்வுகளை வெளிக்காட்ட உள்ள பல்வேறு வழிமுறைகள் குறித்து குழந்தைக்கு அறிவுறுத்துவது ஒரு சிறப்பான தொடக்கமாக அமையும்.

நீங்கள் கோபத்தை எப்படி சமாளிப்பீர்கள் என்று காண்பியுங்கள்

மற்றவர்களை பார்த்து தெரிந்து கொள்வதில் குழந்தைகள் கில்லாடிகள்.

இதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோபத்தை சமாளிப்பது எப்படி என்பதைக் காண்பிப்பது அவசியமாகிறது. உங்களை வெறுப்படையச் செய்யும் விஷயங்களைக் குறித்துப் பேசுங்கள்.

நீங்கள் அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்பதை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவர்களுக்குக் காட்டுங்கள். குழந்தை தேவையான போது உங்களை அரவணைக்க ஊக்கப்படுத்துங்கள்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

வேலையிலிருந்து விலகுபவர்கள் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

திறமையும் அனுபவமும் இருந்தால் ஒரு நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவது என்கிற போக்கு இன்றைக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 'நிறுவனத்துக்கு விசுவாசமாக இருப்பது என்கிற போக்கு' இப்போது கிடையாது. எல்லாமே கார்ப்பரேட் மயம். எனது பணிக்கு இவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கிறேன் என்று தெளிவாக சொன்னால்தான் நிறுவனங்கள் வேலை கொடுக்கின்றன. முன்பு போல ஒருவரே எல்லா வேலையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வதில்லை. குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்தால் போதும் என்கிற 'ஸ்பெசாலிட்டி' கான்செப்ட் வந்துவிட்டது.
ஒரு நிறுவனத்தில் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் இருப்பதே அபூர்வமாக பார்க்கப்படுகிறது. அதேபோல அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்கிறது இந்த ஐடி யுகம். ஆண்டு சம்பள உயர்வை எதிர்பார்த்து வேலை செய்வதை விட, அனுபவத்தைக் கொண்டு அடுத்தடுத்த நிறுவனங்கள் மாறும்போது ஊதிய அளவும் இரண்டு மடங்கு உயர்ந்து விடுகிறது. வேலை மாறுவதில் இப்போதைய டிரண்ட் இதுதான் என்கின்றன மனிதவள நிறுவனங்கள்.        
 
புதிய நிறுவனத்தில் பணிக்கு சேரும்போது நம் மீதும், நமது வேலையின் மீதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த எதிர்பார்ப்புகளை அறிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்வோம். ஆனால் வேலையை விட்டு விலகுகிறோம் என்று முடிவெடுக்கும் பணியாளர்கள் பக்குவமாக நடந்து கொள்வதில்லை என்கிறது ஒரு ஆய்வு. அதாவது வேலையை விட்டு விலக முடிவெடுக்கும் பணியாளர் தன்னிடம் உள்ள நிறுவன வேலைகளை முடித்து கொடுக்காமல் இருப்பது அல்லது வேலைகள் குறித்த விவரங்களை எடுத்துக் கொள்வது, கடைசி நாட்களில் ஆர்வமில்லாமல் வேலை பார்ப்பது என்பதாக இருக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

'வேலையை விட்டு விலகும் முடிவு எடுத்துவிட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற குழப்பம் இருக்கவே செய்யும். இந்த நேரங்களில் பொறுப்பாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்கின்றனர் மனிதவள துறையினர். இது குறித்து ஸ்ரீஹெச்.ஆர் கன்சல்டிங் இயக்குநர்
 
விக்னேஷ்வரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
  

''ஒரு நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு விலகும் முடிவு எடுத்துவிட்டால் அதை வெளிப்படையாக அறிவிப்பதும், வேலையிலிருந்து விலகும் நாள் வரை கொடுக்கபட்ட வேலையை முடித்து கொடுப்பதும் அவசியம். குறிப்பாக நிறுவனத்திலிருந்து விலகும் எண்ணம் கொண்ட பணியாளர் தற்போது பார்த்துவரும் வேலைகளை புதியவர்களிடம் ஒப்படைப்பது கூட அவர்களது கடமை என்று உணர வேண்டும். நிறுவனத்திலிருந்து சுமூகமாக வெளியேறுவதன் மூலம் துறை சார்ந்தவர்களிடம் உங்கள் நற்பெயர் நிலைக்கும். எனவே வேலையை விடும் சூழலில் நற்பெயரோடு வெளியேறுங்கள் என்றவர். இது போன்ற சூழலில் செய்யக்கூடாத 10 தவறுகள் என்ன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
 

திருடுவது அல்லது சேதப்படுத்துவது
வேலையை விடப்போகிறோம் என்று முடிவெடுத்தவுடன், நிறுவனத்தின் மீது அல்லது சக பணியாளர்கள் மீது பழிவாங்கும் உணர்ச்சிகளுக்கு ஆட்படுவார்கள். வரவேண்டிய சம்பளம் அல்லது பிற பலன்கள் நிறுத்தப்படுகிறது என்பதற்காக சொத்துக்களை சேதப்படுத்துவது அல்லது திருடுவது போன்ற செயல்களையும் செய்வார்கள். இதுபோன்ற செயல்கள் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

உணர்ச்சிவசப்படுதல்
நிறுவனத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலையில், உங்களிடமிருந்து நிறுவனம் தொடர்ச்சியான உதவியை எதிர்பார்க்கலாம். இதுபோன்ற நிலைமைகளில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமை காக்க வேண்டும். வெளியேறப்போகிறோம் என்பதற்காக கோபப்படுவதோ அல்லது வேலைகளை புறக்கணிப்பதோ கூடாது. நீங்கள் அந்த வேலையில் ஏற்கனவே காட்டிய முனைப்பு, சாதனைகள் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டாம்.
 

மனம் தளரக்கூடாது
வேலையிலிருந்து விலகி கொள்ள அறிவித்து விட்டீர்கள். கடைசி நாட்கள் நெருங்கி வருகிறது. ஏற்கனவே நீங்கள் பார்த்து வரும் வேலைகளை உங்கள் சக பணியாளர்கள், உங்கள் பங்களிப்பு இல்லாமல் பணியாற்ற தொடங்கலாம். இதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வாய்ப்பு இருக்கும்போது கடைசி நாளாக இருந்தாலும் உங்கள் பங்களிப்பைப் கொடுக்க வேண்டும்.
 

மாற்றத்தைத் திட்டமிடல்
வேலையிலிருந்து வெளியேறியப் பிறகும் உங்கள் உதவி நிறுவனத்துக்கு தேவைப்படும். உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு புராஜெக்டிலிருந்து நீங்கள் திடீரென விலகியிருக்கலாம். அதுபோன்ற நிலைமையில் உங்களுக்கு பின்னால் வருபவர்களுக்கு நிலைமையை சமாளிக்க உங்களது அனுபவம் தேவைப்படும். இதற்கு ஏற்ப உதவி மற்றும் ஆலோசனைகள் கொடுக்கல் வேண்டும். அவசரத்துக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண், இமெயில் முகவரிகள் கொடுப்பது நல்லது. இது உங்கள் மீது நன்மதிப்பை உயர்த்தும்.
பணி விலகல் கடிதம்
பணியைவிட்டு வெளியேற முடிவெடுத்த பிறகு, அந்த நிறுவனத்தில் நீங்கள் மேற்கொண்ட வேலை தொடர்புடையை அனைத்து ஆவணங்களையும் முறையாக ஒப்படைக்க வேண்டும். மேலும், நிறுவனத்தில் நீங்கள் சம்பந்தபட்ட அனைத்து துறைகளுக்கும் தெரியப்படுத்தி எந்த நிலுவையும் இல்லை என சான்றிதழ் வாஙகிக்கொள்ள வேண்டும். அதாவது ஹெச்.ஆர்., அக்கவுண்ட்ஸ், ஐடி, மற்றும் உங்களது அணி தலைவர் என அனைவரிடமிருந்தும் உங்கள் தனிப்பட்ட மெயில் ஐ.டி.க்கு இந்த சான்றிதழ் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
 

நிலுவைத் தொகைகள்
நிறுவனத்திலிருந்து உங்களுக்கு வரவேண்டிய நிலுவைகளளை பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக பயணப்படி, மெடிக்கல் பில், நிலுவை ஊதியம் அனைத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட புராஜெக்டிற்காக வெளியிலிருந்து பெற்றுத்தர வேண்டுமெனில் அதற்கு முன்பணம் அல்லது பின் தேதியிட்ட காசோலை வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது குறிப்பிட்ட தேதிக்குள் செட்டில்மெண்ட் செய்து கொள்வது போல எழுதி வாங்கி கொள்ள வேண்டும்.
 

எஃக்ஸிட் இண்டர்வியூ
எஃக்ஸிட் இன்டர்வியூ என்கிற நடைமுறை சில நிறுவனங்களில் இருக்கும். இதில் கலந்து கொண்டு உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். இந்த நேர்காணலில் அளவறிந்து, தேவையறிந்து மட்டும் பேசினால் போதும். வேலையின் மீதும், தனிநபர்கள் மீதும் குற்றம் சாட்டும் விதமாக இல்லாமல், நீங்கள் பார்த்த வேலையில் அடைந்த திருப்தி, அதை மேம்படுத்த செய்ய வேண்டியது என்ன என்பதாக இருக்க வேண்டும் அல்லது அந்த அணி, வேலை சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
 

பி,எஃப் கணக்கு
நிறுவனத்திலிருந்து வெளியேறும் முன் உங்களது சேமநல நிதி கணக்கு விவரங்களை தெளிவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த வேலையில் சேர காலதாமதம் ஆகும்பட்சத்தில், சேமநல நிதி தொகையை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இது உங்கள் ஓய்வுகால சேமிப்பு என்பதால் அவசரப்பட்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். இது உங்களது சேமிப்பு அல்லது சொத்து என்று கருதிக் கொள்ளுங்கள். அடுத்த நிறுவனத்தில் சேர்ந்தாலும் சேமநல நிதி கணக்கை அப்படியே மாற்றிக் கொள்ளலாம் .
எதிர்காலம் குறித்து விவாதம் வேண்டாம்
தற்போது இணைந்து வேலைபார்க்கும் சக பணியாளர்களுடம் உங்களது எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அடுத்த வேலையில் சேரும் நாள் வரையிலும் உங்களது அடுத்த திட்டம் குறித்து பேசக் கூடாது. வேலை உறுதியான பிறகு, அதாவது அடுத்த வேலைக்கான உத்திரவாதமான கடிதம் வந்த பிறகு சொல்லுங்கள். அதுவும்கூட பிரமாதமான வேலை என்கிற ரீதியில் இருக்க கூடாது. இது அதிருப்தி அல்லது எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும். அல்லது எதிர்பாராதவிதமாக அந்த வேலை கைவிட்டுப் போகிறது எனில் நீங்கள் கேலி பேச்சுக்கு ஆளாகலாம்.

தன்விவர குறிப்பு
உங்களுடைய தன்விவரக் குறிப்பு உண்மை கொண்டதாக இருக்க வேண்டும். புதிய வேலையை எடுத்துக் கொள்வதற்காக உத்வேகம் கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை மற்றும் அதில் காட்டிய ஈடுபாடு, சாதனைகள் குறிப்பிடுவதாக இருந்தால் போதும். தெரியாத வேலைகள் குறித்து தகவல்கள் இருக்கக்கூடாது. பெரும்பாலான நிறுவனங்கள் தன்விவர குறிப்பை, அதற்கென்று உள்ள ஆய்வு நிறுவனங்கள் மூலம் சோதிக்கின்றன. அவர்களின் அறிக்கை அடிப்படையிலேயே வேலைவாய்ப்பை வழங்குகின்றன. தவிர 'குயிக் ரெஃபரன்ஸ்' என்கிற அடிப்படையில் நீங்கள் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனத்திலும் விசாரிப்பார்கள். இந்த குயிக் ரெஃபரன்ஸ் அறிக்கையின் அடிப்படையிலும் புதிய வேலைவாய்ப்பு தீர்மானமாகலாம்" என்றார்.

பணியாற்றிய காலத்தில் எத்தனை நல்ல பெயர் எடுத்திருந்தாலும், வேலையை விடுவது என முடிவெடுத்த பிறகு எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களது நல்ல பெயர் நிற்கும். எனவே இந்த தவறுகளை தவிர்த்தால், நிறுவனத்தின் கடைசி நாளிலும் கைக்குலுக்கி விடை பெறலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 21 செப்டம்பர், 2016

எழுபது பெரிய பாவங்கள்!

1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)
எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)

எவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)
2. கொலை
எவர் ஒரு விசுவாசியை (அவர் விசுவாசி என்று நன்கறிந்திருக்கும் நிலையில்) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் (என்றென்றும்) தங்கியும் விடுவான். அவன் மீது அல்லாஹ் கோபங்கொண்டு அவனைச் சபித்தும் விடுவான் (இதனை) அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்குச் தயாராக்கி வைத்திருக்கின்றான். (4:93)

ஒரு விசுவாசியைக் கொலை செய்வது இவ்வுலகம் அழிவதை விட அல்லாஹ்விடம் பயங்கரமானதாகும் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், திர்மிதி, நஸயீ, பைஹகீ, இஹ்பானீ, இப்னுமாஜா)
3. சூனியம்
அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவது இடத்தைப் பெறுவது சூனியமாகும். (புகாரி, முஸ்லம், அபுதாவூத், நஸயீ)

மூவர் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்: மதுவில் மூழ்கியிருப்பவன், உறவினரை வெறுப்பவன்,சூனியத்தை உண்மைப்படுத்துபவன் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், ஹாகீம், இப்னுஹிப்பான், அபூயஹ்லா)
மந்திரித்தலும், தாயத்துக் கட்டுவதும், நூல் கட்டுவதும் ஷிர்க்காகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், இப்னுஹிப்பான், ஹாகிம்)
4. தொழுகையை வீணாக்கி விடுதல்
ஷதங்கள் தொழுகையில் பாராமுகமாயிருக்கும் (நயவஞ்சகமான) தொழுகையாளிகளுக்கு கேடுதான்.(107:4,5)

மறுமையில் முதலாவதாக மனிதனிடம் தொழுகையைப் பற்றித்தான் கேள்வி கேட்கப்படும் தொழுகை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டிருந்தால் வெற்றியடைந்த நற்பாக்கியவானாவான். தொழுகையில் குறைபாடுள்ளவன் நஷ்டமடைந்த துர்ப்பாக்கியவானாவான் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திhமிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
அல்லாஹ் தன் அருளைக் கொண்டு அவர்களுக்கு அளித்த பொருட்களில் எவர்கள் உலோபித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிவிடவேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே முடியும். எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள். (3:180)

கொடுமை புரியும் தலைவன், ஸக்காத்து கொடுக்காதவன், பெருமையடிக்கும் ஏழை ஆகிய மூவரும் தான் நரகில் முதலாவதாக நுழைவார்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு குஸைமா, இப்னுஹிப்பான்)
6. நோன்பை விடுதல்
விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டிருந்த பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கின்றது (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம். இவ்விதம் விதிக்கப்பட்ட நோன்பு சில குறிப்பிட்ட நாட்களில் (நோற்பது கடமையாகும்).. (2:183,184)

எவன் ஒருவன் எவ்வித காரணமுமின்றி ரமழான் மாதத்தில் நோன்பை விடுகிறானோ அவன், ஏனைய நாட்கள் எல்லாம் நோன்பு வைத்தாலும் அதற்கு சமமாகாது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுகுஸைமா)
7. ஹஜ்ஜு செய்யாமை
…..எவர்கள் அங்கு யாத்திரை செல்ல, சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும்… (3:97)

8. பெற்றோரைத் துன்புறுத்துதல்
…… (மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்துவாயாக! (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதாயிருக்கிறது. (31:14)

பொற்றோரின் திருப்தி அல்லாஹ்வின் திருப்தியாகும். பெற்றோரின் வெறுப்பு அல்லாஹ்வின் வெறுப்பாகும் (திர்மிதீ, இப்னுஹிப்பான், ஹாகிம்)
தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கிறது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (நஸயீ, இப்னுமாஜா)
9. உறவினர்களை வெறுத்தல்
உறவினர்களை வெறுப்பவன் சுவனம் புக மாட்டான் (புகாரி, முஸ்லிம்)

எவன் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டானோ அவன், தன் உறவினர்களை இணைத்து நடப்பானாக! (புகாரி, அபூதாவூத், திர்மிதீ)
10. விபச்சாரம்
(விசுவாசிகளே!) நீங்கள் விபச்சாரத்தின் அருகேகூட நெருங்க வேண்டாம். ஏனென்றால் அது மானக் கேடானதாகவும் தீய வழியாகவுமிருக்கிறது (17:32)

கண்ணின் விபச்சாரம் அந்நியப் பெண்ணைப் பார்த்தல், நாவின் விபச்சாரம் (அவளுடன்) பேசுதல், கையின் விபச்சாரம் (பெண்ணைப்) பிடித்தல், காலின் விபச்சாரம் (அவளைத் தேடி) நடத்தல். மர்மஸ்தானங்கள் இவைகளை உண்மைப்படுத்துகின்றன அல்லது பொய்யாக்குகின்றன என நபி அவர்கள் கூறியுள்ளார்கள.; (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)
11. ஆண் புணர்ச்சி
லூத் நபியின் கூட்டத்தினர் செய்த கொடிய (ஆண் புணர்ச்சி) எனும் பாவத்தைச் செய்பவர்களைக் கண்டால் இருவரையும் கொலை செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)

ஆணுடைய அல்லது பெண்ணுடைய பின் துவாரத்தில் புணர்ந்தவனை அல்லாஹ் மறுமையில் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் எனவும் நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, நஸயீ, இப்னுஹிப்பான்)
12. வட்டி
விசுவாசிகளே! (அசலுக்கு அதிகமாவும், வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை (வாங்கி) உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:130)

வட்டியின் பாவங்கள் எழுபது பிரிவுகளையுடையன. அதில் மிகவும் இலேசானது ஒருவன் தன் தாயைப் புணர்வது போன்ற பாவமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, பைஹகீ)
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
எவர்கள் அனாதைகளின் பொருட்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) அவர்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பிளும் நுழைவார்கள். (4:10)

அனாதைகளின் பொருளை அவர்கள் பிராயமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி, தொடாதீர்கள்… (6:152)
அனாதையைப் பொறுப்பேற்பவனும் நானும் சுவர்க்கத்தில் இணைந்து இருப்போம் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
(நபியே!) அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் மறுமை நாளன்று கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்… (39:60)

பொய்யெனத் தெரிந்தும் என் மீது பொய்யுரைப்பவன் பொய்யனாவான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
….உங்களில் (பொறுமையும்) சகிப்புத்தன்மை(யும்) உடைய இருபது பேர்களிருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள். (8:65)

16. தலைவன் அநீதி செய்தல்
எந்தத் தலைவனாவது தன் கீழுள்ளவர்களுக்கு எதிராக, சதி செய்தால் அவன் நரகவாதியாவான் (தப்ரானி)

எவனுக்கு அதிகாரமளிக்கப்பட்டு அதை அவன் முறையாக நிறைவேற்றவில்லையோ அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கிவிடுவான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
17. பெருமை
நிச்சயமாக அவன் கர்வங்கொண்டவர்களை விரும்பமாட்டான். (16:23)
பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, மனிதர்களுக்கு அது எவ்வகையிலும் பொருந்தாது. கண்ணியம் எனது ஆடை, பெருமை எனது போர்வை என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
18. பொய்ச்சாட்சி கூறல்
பொய்ச் சாட்சியம் கூறுபவனின் பாதமிரண்டும் மறுமையில் அவன் நரகம் போகும் வரை அசையாமலிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, ஹாகிம்)

19. மது அருந்துதல்
எவன் இவ்வுலகில் மது அருந்துகிறானோ அவன் மறுமையில் நரகவாதிகளின் ஊணைக் (சீழை) குடிப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ)

அல்லாஹ் என்னுடைய உம்மத்திற்கு மதுவை மருந்தாக ஆக்கவில்லை. (மது சேர்ந்த மருந்தும்கூட ஹராம்) என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, அஹ்மத், ஹாகிம்)
20. சூது
விசுவாசிகளே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதனை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தயைக)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள் (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்பு மீறிய) தீயவர்கள். (24:4)

22. மோசடி செய்தல்
"மோசம்" செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசடிசெய்தால் அவர் அந்த மோசடி செய்த பொருளையும் மறுமை நாளில் (தம்முடன்) கொண்டு வரவேண்டியிருக்கும்… (3:161)
23. களவு
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இ(த்தீ)ச் செயலுக்கு அல்லாஹ்விடமிருந்து உள்ள தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தோனும் ஞானமுடையோனுமாகியிருக்கிறான். (5:38)

24. வழிப்பறி
ஒருவன் திருடினால் கையை வெட்டுங்கள், மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் காலை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் கையை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் காலை வெட்டுங்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (அபூதாவூத், நஸயீ)

25. பொய்ச் சத்தியம்
மறுயைமில் அல்லாஹ் மூவரின் பாவத்தை மன்னிக்கமாட்டான், அவர்களோடு பேசவும் மாட்டான் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு அவர்கள் யாவரெனில்

1. தரையில் படும்படி உடை உடுப்பவன்,
2. கொடுத்ததைச் சொல்லிக்காட்டுபவன்,
3. பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை விற்பவன் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)
26. அநீதி இழைத்தல்
அடியார்களே! எனக்கு நானே அநீதத்தை ஹராமாக்கியுள்ளேன். அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கியுள்ளேன். ஒருவருக்கொருவர் அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்! என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)

27. கப்பம் பெறல்
(குற்றம் சுமத்த) வழி ஏற்படுவதெல்லாம் மனிதர்களுக்கு அநியாயம் செய்து நியாயமின்றி, பூமியில் கொடுமை செய்கிறார்களே, அவர்கள் மீதுதான், அத்தகையோர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)

28. தகாத உணவு
நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணவேண்டாம் (2:188)

அனஸ்! உன் உழைப்பைச் சுத்தமானதாக்கிக் கொள்! தகாத உழைப்பிலிருந்து ஒரே ஒரு கவளம் உடலினுள் சென்றால் நாற்பது நாட்களுக்கு பிரார்த்தனைகள் ஒப்புக் கொள்ளப்படமாட்டாது (தப்ரானீ)
29. தற்கொலை
எவன் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்வானோ அவன் அதே ஆயுதத்தால் நரகில் துன்பமனுபவிப்பான். விஷமருந்தி உயிரைப் போக்கியவன் தன் கையில் விஷத்தை வைத்துக் கொண்டே நரகில் துன்பப்படுவான். மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்தவன் நரகக் குழியில் குதித்துக் கொண்டேயிருப்பான். எப்பொழுதும் மீட்சியைக் காணவே மாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ)

30. பொய்
யார் வரம்பு மீறுவதுடன் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். (40:28)

மாபெரும் சதியாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
31. கெட்ட நீதிபதி
எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே (5:44)

32. அதிகாரியின் இலஞ்சம்
இலஞ்சம் வாங்குபவனையும், கொடுப்பவனையும் அல்லாஹ் சபிப்பானாக என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, ஹாகிம்)

33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
ஆணுக்கொப்பாகும் பெண்ணையும், பெண்ணுக்கொப்பாகும் ஆணையும் அல்லாஹ் சபிப்பானாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா)

34. கூட்டிக் கொடுத்தல்
(கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணை வைத்து வணங்குபவளை அன்றி (வேறு ஒருத்தியையும்) மணந்து கொள்ள மாட்டான். ஒரு விபச்சாரி ஒரு விபச்சாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி வேறு எவரையும் மணந்து கொள்ள மாட்டாள். இத்தகைய திருமணம் விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. (24:3)

35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
(நபியே!) உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்: அசுத்தங்களை வெறுத்து விடும் (74:4,5)

37. முகஸ்துதி
சிறிதளவாவது முகஸ்துதி சேர்ந்தால் அச்செயல் ஷிர்க்கை ஒத்ததாகும். அது பாவமுமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், தப்ரானி)

38. கற்ற கல்வியை மறைத்தல்
'அறிஞர்களிடம் வாதிட்டு வெல்வதற்கும்', பாமரமக்களிடம் 'அறிவாளி' எனப் பெயர் எடுப்பதற்கும், 'மக்களைத் தன்பக்கம் திருப்புவதற்கும் கல்வி கற்பவனை' அல்லாஹ் நரகில் நுழையவைப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

39. சதி செய்தல்
நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிட மாட்டான் (12:52)

சதியும், பொய்யும் இல்லாத எல்லா விஷயங்களையும் அல்லாஹ் பதிந்து கொள்கிறான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
"சதி செய்பவனும், உலோபியும், செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும்" சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (நஸாயி, திர்மிதி)
41. விதியைப் பொய்ப்படுத்துதல்
எல்லாச் சமூகத்தவர்களிலும் மஜுஸிகள் (நெருப்பை வணங்கும் மிகக் கெட்டவர்கள்) உள்ளனர். என் உம்மத்தின் மஜுஸிகள் விதியைப் பொய்யாக்குபவர்களாவர் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

42. மற்றவர்களின் இரகசியம்
ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நாங்கள் அப்போது சிறுவர்களாக இருந்தோம். எங்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு தேவையின் நிமித்தம் (ஒரு இடத்துக்கு) அனுப்பினார்கள். நான் திரும்பி வரும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாதையில் ஓரிடத்தில் அமர்ந்து என்னை எதிர்ப்பார்த்தார்கள். நான் என் தாயார் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சற்று தாமதித்து விட்டேன். அப்போது அன்னையவர்கள் எங்கு சென்றாய்? என விசாரித்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பியுள்ளார்கள் எனக் கூறினேன்.

அது என்ன? என என் தாயார் வினவினார்கள்.
உடனே நான் அது இரகசியம். (சொல்ல மாட்டேன்) என்றேன். அப்போது உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்; ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரகசியத்தைப் பேணிக் கொள் (சொல்ல வேண்டாம்) எனக் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திரிமிதீ)

43. கோளுரைத்தல்
இழிந்தவனான, அதிகம் சத்தியம் செய்யக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் கீழ்படியாதீர். (அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (68:10,11)

44. திட்டுதல் (சபித்தல்)
ஒரு முஸ்லிமைத் திட்டுவது கெட்டதாகும். அவனைக் கொலை செய்வது குஃப்ராகும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி)

45. வாக்கு மாறுதல்
விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள் (5:1)

நயவஞ்சகனின் அடையாளம் மூன்று: அவன் தொழுதாலும், நோன்பு பிடித்தாலும் தான், ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே (நயவஞ்சகனேயாவான்)
1. பேசினால் பொய்யுரைப்பான்
2. வாக்களித்தால் மாறு செய்வான்
3. நம்பினால் மோசடி செய்வான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
எவரொருவர் ஜோதிடனை அணுகி, எதைப்பற்றியாவது கேட்டு அவன் கூறியதை உண்மை என நம்பிக்கை கொள்வாராயின் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

47. கணவனுக்கு மாறு செய்தல்
எவளும் (கணவனுக்கு) மாறுசெய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையிலிருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள், (அதிலும் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு வழிப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும், மிகப்பெரியவனுமாக இருக்கிறான். (4:34)

48. உருவப் படம் வரைதல்
நாயும், உருவப்படங்களுமுள்ள வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

49. ஒப்பாரி வைத்து அழுதல்
ஓலமிட்டு அழுபவள் மரணத்திற்கு முன் தௌபாச் செய்யவில்லையானால் தாரினால் ஆன சட்டை போடப்பட்டு நரகில் வேதனை செய்யப்படுவாள் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)

50. கொடுமை செய்தல்
(அளவு மீறி) மனிதர்கள் மீது அக்கிரமங்கள் செய்து நியாயமின்றி பூமியில் கொடுமை செய்வோருக்கு எதிராகத்தான் (குற்றஞ் சாட்ட) வழி இருக்கிறது. இத்தகையோருக்கு மிகத்துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)

51. வரம்பு மீறுதல்
எவன் பெருமைக்காக ஆடையை பூமியில் படும்படி (உடுத்தி) இழுத்து (நடக்கின்றானோ) அவனை மறுமையில் அல்லாஹ் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாயி)

52. அயல் வீட்டாரைத் துன்புறுத்துதல்
அபூதர்ரே! நீர் கறி சமைத்தால் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுப்பதற்காக அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அண்டை வீட்டார் பசித்திருக்கும்போது வயிறாற உண்பவன் மூஃமினல்லன் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், பைஹகீ)
53. முஸ்லிம்களைத் துன்புறுத்துதல்
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரராவார் சகோரத முஸ்லிமுக்கு அநீதமிழைப்பதோ அவரை அவமானப்படுத்துவதோ பழிப்பதோ கூடாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)

54. துறவிகளைத் துன்புறுத்துதல்
எவன் என் நேசர்களைத் துன்புறுத்துகிறானோ அவனோடு நான் சண்டையிடுவேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

55. மமதையும், தற்பெருமையும்
பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! கர்வங்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதேயில்லை. (31:18)

56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பதையும், குடிப்பதையும் பட்டாடைகளை அணிவதையும், அதில் உட்காருவதையும் நபி அவர்கள் தடுத்துள்ளார்கள் என அபூஹுதைபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

ஒரு மனிதரின் கையில் தங்கத்தினாலான மோதிரம் இருப்பதை நபியவர்கள் கண்டு அதனைக் கழற்றிவிட்டு, யாரும் நரகத்து நெருப்புத் துண்டிலிருந்து ஒரு துண்டை அணிந்து கொள்வார்களா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம்)
ஒரு கையில் தங்கத்தையும், மற்றொரு கையில் பட்டாடையையும் எடுத்துக் காண்பித்து, இவையிரண்டும் என் உம்மத்திலுள்ள ஆண்களுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸாயி)
57. அடிமை ஒளிந்தோடல்
நபி அவர்கள் காலத்தில் இந்த அடிமைப் பிரச்சினை இருந்தது. அவர்களுக்கென்று சில சட்டங்களும் இருந்தன. இப்போது உலகில் எங்குமே அடிமைகள் இல்லையாகையால் இதுபற்றிய விளக்கமும் தேவையில்லை என்றே எண்ணுகிறோம்.

58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல் (பலியிடுதல்)
அல்லாஹ் அல்லாதவருக்கு யார் அறுத்துப் பலியிடுகின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்யவும் கூடாது. அறுத்துப்பலியிடுவதும் கூடாது. இப்படிப்பட்ட இறைச்சியை உண்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
தன் சொந்த, தகப்பனைப் புறக்கணித்து விட்டு வேறொருவனைத் தகப்பனாக ஏற்றுக் கொள்பவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

60. மேலதிக நீரைத்தடுத்தல்
'மற்றவனுடைய பயிர் செழிப்பாக வளரக்கூடாது' என்பதற்காக மேலதிக நீரைத் தடுத்து விடாதீர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) எனவும்,

61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள் நிறுத்தால் சரியான எடையைக்கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) நன்மையையும் மிக்க அழகான பலனையும் தரும். (17:35)

62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
அல்லாஹ்விடத்தில் மிகக் கோபமான மனிதர்கள் வீண் விதண்டாவாதம் பண்ணுபவர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
(சொல்லுங்கள் நபியே!) அல்லாஹ் எங்களுக்கு விதித்துள்ளதைத் தவிர (வேறொன்றும்) நிச்சயமாக எங்களை அணுகவே அணுகாது (9:51)

64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
யார் என் நேசரை பகைக்கின்றாரோ அவரோடு நான் "யுத்தப் பிரகடனம்" செய்வேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

65. தனித்துத் தொழுதல்
ஜமாஅத்தோடு தொழும் தொழுகை, தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

66. ஜும்ஆவைத் தவற விடல்
எவன் அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களைத் தவற விடுகிறானோ (நேர்வழியைத் தவறவிட்டவன் என்பதாக) "அவனது உள்ளத்தில் முத்திரையிடப்பட்டுவிடும்" என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
(மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டத்தை உண்டு பண்ணாதவனாக இருக்க வேண்டும். (இது) அல்லாஹ்வுடைய கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தோனும், மிகப்பொறுமை உடையோனுமாக இருக்கிறான். (4:12-14)

68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்து விடுவான். (4:142)

69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
யுத்த காலங்களில் எதிரியின் நிலைகளை அறிவதற்காக மட்டும் உளவு பார்க்க அனுமதியுண்டு. ஒரு தளபதி இதற்காகச் சிலரை உளவாளிகளாக ஊதியங்கொடுத்து வைத்துக் கொள்ளவும் முடியும். நபிÉ அவர்கள் உளவு பார்க்க சில தோழர்களை யுத்த காலங்களில் அனுப்பியுள்ளார்கள்.

70. நபித் தோழர்களைத் தூஷித்தல்
முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாத்தில்) முதலாவதாக முந்திக்(கொண்டு விசுவாசங்) கொண்டார்களோ அவர்களையும், நற்கருமங்களில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். (9:100)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts