லேபிள்கள்

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?


பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.
நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.
ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் -http://passportindia.gov.in
இடதுபுறம் உள்ள "Locate Passport Seva Kendra" கிளிக் செய்து உங்களது பின்கோடை டைப் செய்து பாஸ்போர்ட் சேவா கேந்திராவை (டாடாவின் பாஸ்போர்ட் சேவை மையம்) தெரிந்து கொள்ளவும். அதே போல் உங்களது காவல் நிலையத்தையும் அறிந்து கொள்ளவும்.
கண்டிப்பாக அப்ளை செய்யும் ஒவ்வொருவரும் இந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டும். வலது புறம் மேல் பக்கம் Register / Login பயன்படுத்தி இந்த தளத்தில் உங்களது பயணர் (username) பெயர் மூலம் உள் நுழையவும்.
உடனே புதிய பக்கம் வரும். அதில் நாம் முன்பு சமர்பித்துள்ள படிவத்தின் நிலமையைக் காண (Application Status) ஒரு லிங்க்ம் மற்றொன்று புதிதாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கும் இருக்கும். இரண்டாவதை "Apply for Fresh Passport / Reissue of Passport" கிளிக் செய்யவும்
அதன்பின் இரண்டு ஆப்ஷன்கள் வரும். ஃபார்மை டெளன்லோடு செய்து பிரண்டு செய்து பூர்த்தி செய்து ஆன்லைனில் அப்லோடு செய்யலாம்.
அல்லது அப்படியே ஆன்லைனில் அப்ளை செய்யலாம்.
அடுத்து வரும் புதிய பகுதியில்
முதன்முதலாக எடுப்பதா அல்லது புதிப்பதா என்றும் சாதாரணமான முறையில் வேண்டுமா தத்கால் (அவசரமாக சில நாட்களில் கூடுதல் கட்டணம்) வேண்டுமா என்றும் சாதாரணமாக 36 பக்கங்கள் அல்லது கூடுதல் கண்டத்துடன் 60 பக்கங்கள் உள்ள பாஸ்போர்ட் வேண்டுமா என்று கேள்விகளுக்கு சரியான தேவையைக் கிளிக் செய்யவும்.
அதன்பின் மற்ற பகுதி வரும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் நிதானமாகப் படித்து கண்டிப்பாக நிரப்பி விடவும்.
  • Given Name : உங்களது பெயர்
  • Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
  • உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
    Previous Name :
    உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
  • Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
  • Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
  • Place of Birth: பிறந்த ஊர்
  • District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
  • Qualification: உங்களது படிப்பு (SSLC pass  என்றால் NOC அப்ளை செய்யலாம்)
  • Profession: தொழில்
  • Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
  • Height (cms): உயரம்
  • Present Address: தற்போதைய முகவரி
  • Permanent Address: நிரந்தர முகவரி
  • Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள்
  • Phone No: தொலைபேசி எண்
  • Mobile No : மொபையில் எண்
  • Email Address: இமெயில் முகவரி
  • Marital Status: திருமணமான தகவல்
  • Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
  • Father's Name: தந்தை பெயர்
  • Mother's Name: தாயார் பெயர்
  • தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
  • Voter ID, Athaar Card No, PAN Card Number இருந்தால் அதனையும் நிரப்பி விடவும்.
  • Is applicant eligible for Non-ECR category? SSLC Pass செய்திருந்தால், வெளிநாட்டில் 3 வருடத்திற்கு மேல் இருந்திருந்தால், 50 வயதைத் தாண்டியிருந்தால் மற்றும்…. NOC கிடைக்கும். அப்போது கிளிக் செய்யவும்.
அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு Next Button ஐ கிளிக் செய்து செல்லவும்.
குடும்ப விவரங்கள், தற்போதைய முகவரி,முந்தைய முகவரி, அவரத்திற்கு தொடர்பு கொள்ள, உங்களை அடையாளம் காட்ட அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள், பழைய பாஸ்போர்ட் இருந்தால் அதன் வி்வரம் போன்றனவற்றையும் நிரப்ப வேண்டும்.
அதனையும் சேவ் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும். அங்கே பாஸ்போர்ட் ஆபிசுக்கு எந்த தேதியில் செல்ல உங்களால் முடியுமோ அந்த தேதி அல்லது கிடைக்கும் தேதியையும் நேரத்தையம் தேர்ந்தெடுக்கவும்.
அதனையும் சேவ் செய்து பிரண்டு எடுத்துக் கொள்ளவும்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)
  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்
  • 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும்  மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
  • மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
  • பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பிரிண்டையும் + பணத்தையம் + சான்றிதழ் ஒரிஜினலையும் காப்பியையும் எடுத்துச் செல்லவும்.
அந்த அலுவலகத்தில் உங்களது சான்றிதழ்கள் (ரேஷன்கார்டு, ஓட்டர் ஐடி, பிறந்த நான் சான்றிதழ் போன்றன) சரிகாணப்பட்டு காப்பியைப் பெற்றுக் கொண்டு பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் உங்களை படம் பிடித்து போட்டு எடுத்துக் கொள்வார்கள். (எனவே போட்டோ கொண்டு செல்ல தேவையில்லை). எல்லாவற்றையும் சரியாக சரிபார்த்த பின் உங்களுக்கு ரிசப்ட் தருவர்கள். அவ்வளவு தான் உங்களது வேலை!
சில தினங்களில் போலிஸ் வெரிபிகேஷன் என்ற உங்களது இருப்பிடத்திற்கு சாட்சிக்காக உங்கள் பகுதியைச் சேர்ந்த காவல் துறை சரிபார்க்கும். அந்த பணி முடிந்து சில நாட்களில் பாஸ்போர்ட் பதிவுத் தபாலில் உங்களது வீட்டிற்கு வரும்.
அக்டோபர் 2012 முதல் மாற்றப்பட்ட கட்டணம் விவரங்கள்: (36 பக்கங்களுக்கு)
  • புதிய மற்றும் புதுபிக்க :   1500 ரூ (சாதரணமான முறை)
  • காணாமல் போனால் சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
  • காணாமல் போனால் சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expire ஆகவில்லை எனில்)
  • 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
  • தத்கால் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்
அவ்வளவுதான் முடிந்தது மேலும்  தகவல்களுக்கு http://passportindia.gov.in
சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். முயீனுத்தீன்
Article is published on May 11, 2011 and Edited & Modified on 27th March 2013

வெள்ளி, 27 டிசம்பர், 2013

மகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..

மகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..

மகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை
01. வெற்றி வேண்டுமா எப்போதும் மகிழ்ச்சியான முகத்துடன் இருங்கள், மன இறுக்கம் நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்து வாழ்க்கையை வீணாக்கி விடுகிறது.
02. ஒருவர் வீடு செல்லும்போது அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டுமானால் நீங்கள் அங்கு மகிழ்வோடு போக வேண்டும்.
03. முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப் போல வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும், ஒழுக்கமும் ஒழுக்கமின்மையும் கலந்துதான் இருக்கும், ஆகவே வாழ்வை குறையாக நினைத்து மகிழ்ச்சியான முகத்தை இழந்துவிடாதீர்கள்.
04. வாழ்க்கை முழுவதும் வெற்றியே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் குழந்தைப் பருவத்தைத் தாண்டாதவன், தோல்விகளை மட்டுமே எதிர்பார்ப்பவன் வளர்ச்சியடையாதவன்.
05. வாழ்க்கை என்கின்ற கட்டடத்தில் ஏற்படுகின்ற விரிசல்களை இணைக்கின்ற சீமென்டு போன்றதுதான் நகைச்சுவை உணர்வாகும்.
06. எவன் ஒருவன் வாழ்வின் கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு நகைச்சுவை உணர்வுடன் வாழ்கிறானோ அவனே மகிழ்ச்சியான மனிதன்.
07. பிறவியால் உங்களுக்கு அமைந்த தோற்றத்தில் நீங்கள் மாற்றம் செய்ய முடியாது, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே புகைப்படத்திலும் காட்சி தருவீர்கள். ஆனால் உள்ளத்தை மலர்ச்சியாக்கி நீங்கள் தரும் முக மலர்ச்சி உங்கள் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அழகாக இருந்தாலும் மலராத தாமரைக்கு ஏது மதிப்பு..
08. நகைச்சுவை உணர்வு வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் வல்லமையை உங்களுக்கு தந்துவிடுகிறது.
09. அழிவிலும் பெரிய இலாபம் இருக்கிறது. நன்மைகளோடு நம்முடைய தவறுகளும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இனி எல்லாவற்றையுமே புதிதாகத் தொடங்கப் போகிறோம் என்பதற்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். தாமஸ் அல்வா எடிசன்
10. நீங்கள் நினைத்தால் வாழ்வின் பிரகாசமான பகுதியை பார்க்க முடியும். எப்போதும் கவலையும், தோல்வி மனப்பான்மையுமாக சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்விப்பது உங்கள் கடமை.
11. மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவதில்லை மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிக் கொண்டாலே மகிழ்ச்சி உங்களிடம் தோன்றிவிடும். கடவுளிடம் நம்பிக்கை வைப்பது மகிழ்ச்சியை பெற காரணமாகிறது.
12. நம்முடைய வாழ்க்கைக்கு காரணமாக இருக்கின்ற கடவுள்தான் நமது பிரச்சனைகளின் தீர்வுக்கும் காரணமாக இருக்கிறார். ஆகவே அவரிடம் நம்பிக்கை வைக்கின்றபோது கவலைகள் தாமாகவே நீங்கி மகிழ்ச்சி தோன்றுகிறது.
13. உலகம் எனக்கு எத்தனை சிரமங்களை தந்தாலும், அதற்குப் பதிலாக எனது படுக்கையை இழக்கமாட்டேன் என்றான் நெப்போலியன்.
14. மகிழ்ச்சியைப் பற்றியே பேசுங்கள் ஏற்கெனவே உலகத்தில் நிரம்பியுள்ள கவலைகள் போதும், உங்களுடைய கவலைகளையும் அதில் கொட்டாதீர்கள்.
15. நல்லதையே செய்யுங்கள் இதன் மூலம் நீங்களும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாம்.
16. குடும்பத்தில் உற்சாகத்தைப் பரப்புங்கள் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உங்கள் குடும்பத்தில் உற்சாகம் இருக்க வேண்டியது அவசியம்.
17. பூக்காத மரங்கள் காய்ப்பதில்லை கடவுள் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொண்டால் நீங்களும் பூக்கும் மரமாவீர்கள்.
18. நீங்கள் சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், அழுதால் நீங்கள் மட்டும்தான் தனியாக அழவேண்டி வரும். உங்கள் மகிழ்ச்சியில் அக்கறை காட்டும் உலகம் ஒருபோதும் துன்பத்தில் அக்கறை காட்டாது.
19. நாள் பூராவும் பணியாற்றிய உடம்புக்கு ஓய்வு கொடுப்பது அவசியம், ஓய்வைப்போல மறுபடியும் சக்தி அளிக்கக் கூடியது எதுவும் இல்லை. ஓய்வு நரம்புகளை முறுக்கேற்றி மன அமைதியை ஏற்படுத்த மிகச் சிறந்த டானிக்காகும்.
20. ஓய்வு என்பது நமக்குக் கிடைத்துள்ள தனியான சலுகையாகும், நன்றி பாராட்டி அதை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
21. ஓய்வெடுக்கத் தெரிந்தவன் நரகங்களை வென்றவனைவிட பெரியவனாகும் என்றார் பென்ஜமின் பிராங்கிளின்.
22. உலகம் முழுவதும் ஐம்பது வீதமான மக்கள் தூக்கம் இல்லாமல் அலைகிறார்கள் தொன் கணக்கில் தூக்க மாத்திரைகளை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது. இவை எதுவுமே வேண்டியதில்லை உங்கள் இதயத்தை தூய்மையாக வைத்திருங்கள் தூக்கம் தானே வந்துவிடும்.
23. நேரம் கழித்து எழுந்திருப்பது கூட தூக்கமின்மைக்கு காரணமாகிவிடும். காலை ஆறு மணிக்கு மேல் தூங்குகின்ற பழக்கத்தை விடுங்கள், தூக்கமின்மையை தவிர்க்க அது நல்ல வழி.
24. இயற்கையாக ஒரு மனிதனுக்கு ஐந்து மணி நேரம் தூக்கம் போதும், பழக்கம் அதை ஏழு மணி நேரமாக்கியுள்ளது, சோம்பல் ஒன்பது மணியாக்கி, தீய பழக்கங்கள் அதை பதினொரு மணியாக உயர்த்திவிட்டது. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதல்ல எவ்வளவு ஆழமாக தூங்குகிறோம் என்பதே முக்கியம். பகலில் அரை மணி நேரம் தூங்குவது இரவில் மூன்று மணி நேரம் தூங்குவதற்கு சமம்.
நன்றி: அலைகள் பழமொழிகள்


--
*more articles click*
www.sahabudeen.com


புதன், 25 டிசம்பர், 2013

வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன?

வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன?

EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?
தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும்,1987 ஜன. 1க்கு  பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.
சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப்பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும். பொதுவாக பலரும், 30ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கின்றனர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் பதிவு 26 ஆண்டுகளுக்கு மட்டுமே உள்ளது.
அதற்கு மேல் வேண்டும் என்றால், தேடி கைப்பட எழுதித் தான் சான்றிதழ் தர வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். இதனால், வில்லங்க சான்றிதழ் பெறுவதில், பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை என்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே என்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.
நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப் பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
EC (Encumbrance Certificate) வில்லங்கச்சான்றிதழ்:
ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் கீழ் கண்ட விவரங்கள் இருக்கும்.
  1.  சர்வே எண்
  2.  விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி
  3. பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம்
  4.  சொத்தின் மதிப்பு
  5.  சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்
  6.  தொகுதி மற்றும் பக்க எண்
  7.  பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்
மேற்கண்ட விவரங்களின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது என்ற முழு விவரங்கள்ம் தெரியும். EC-யை வைத்தே தாய்பத்திரத்தில் இருந்து நாம் யாரிடம் நிலம் வாங்குகிறோமோ அது வரை உள்ள எல்லா பத்திரங்களையும் நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் நாம் வாங்க இருக்கும் சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் Registered Mortgage (பதிவுசெய்யப்பட்ட அடமானம்) செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரமும் இதில் தெரிந்துவிடும். சொத்து சம்பந்தமாக EC-ல் சில தகவல்கள் வர வாய்ப்பில்லை.
  1.  01.11.2009-க்கு முன்பு சொத்தின் உரிமையாளர் அந்த சொத்தை விற்பதற்குயாரையாவது Power of Attorney-யாக நியமித்து இருந்தால் அது EC-ல் வராது.
    Power of attorney-
    ஐ பதிவு செய்ய புதிய முறையை அரசாங்கம் 01.11.2009-ல் இருந்து அமல்படுத்தியது. அதன்படி Power of attorney பதிவு விவரம் EC-ல்வரும்.
  2.  சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் (Unregistered Agreement) போட்டு இருந்தால் அதுவும் EC-ல்வராது.
  3.  சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவுசெய்யப்படாத அடமானம் (unregistered mortgage) வைத்திருந்தால் அதுவும் EC-ல் வராது.
மேற்கண்ட மூன்று விஷயங்களிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். பல மோசடிகள் நடப்பதற்கு இவை மூன்றும் காரணமாகி விடுகிறனது.
கைப்பட எழுதித்தரப்படும் சான்றிதழ்
EC பெறுவது எப்படி?
சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெறலாம். 01.01.1987-ல் இருந்து தான் Computer மூலம் EC பெற முடியும். அதற்கு முன்பு Manual ECதான்.01.01.1987-ல் இருந்து EC தேவைப்படும் பட்சத்தில் இணைய தளத்தின் மூலமும் விண்ணப்பம் செய்து பெறலாம் இணைய தளத்தின் முகவரி www.tnreginet.net
இந்த வசதி தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. எந்தெந்த இடங்களில் இந்த சேவை இருக்கிறது என்ற விவரம் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது சென்னை இராஜாஜி சாலையில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் EC பெறலாம்.
விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெயர், முகவரி, சொத்து விவரம்மற்றும் கிரையப்பத்திர விவரம் முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும்.விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம்செய்ய வேண்டும். இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்பவருக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
அதற்கு என்ன செலவாகும்?
பத்து ஆண்டுகளுக்கு என்றால் முதல் ஆண்டிற்கு ரூ.15 ம், பிறகு ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் விண்ணப்ப கட்டணமாக ரூ.11 வசூலிக்கப்படும்.
கம்ப்யூட்டர் முறையில் எடுத்துதரப்படும் நகல்
பதிவு செய்யப்படாத அதாவது EC-ல் entry வராத, சொத்து சம்பந்தமான நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகள் என்ன?
ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்பதற்கு மற்றொருவரை Power of Attorney-ஆக 2005-ல் நியமனம் செய்திருந்தார். Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பதற்கு காலம் தாழ்த்தவே சொத்தின் உரிமையாளர் அவருக்கு தெரியாமல் Power of Attorney-யை ரத்து செய்துவிட்டார். இதை மறைத்தோ அல்லது தெரியாமலோ Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பனை செய்வதற்காக மற்றொருவரிடம் முன் பணம் வாங்கி கிரைய ஒப்பந்தம் (Sale Agreement)செய்து விட்டார். சட்ட ரீதியாக இது செல்லுபடியாகாது. சொத்தின் உரிமையாளர் வேறு ஒருவருக்கு சொத்தை விற்றுவிட்டார்.
நன்றி:- P.இராஜா உழவன்


--
*more articles click*
www.sahabudeen.com


திங்கள், 23 டிசம்பர், 2013

நன்னாரி ( மூலிகை ) வேர்

நன்னாரி ( மூலிகை ) வேர்

நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.
இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.
இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).
நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.
மருத்துவ குணங்கள்:
  • 1. மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக
  • 2. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
  • 3. பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.
  • 4. சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.
  • 5. நன்னாரி நீர் "தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்" என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.
  • 6. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .
  • 7. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.
  • 8. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.
  • 9. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்.
  • 10. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
  • 11. குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
  • 12. சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.
  • 13. வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
  • 14. விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.
  • 15. கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.
  • 16. குணங்களில் -நீர் பெருக்கும்,உடலுக்கு குளிர்ச்சி தரும் ,பசி தூண்டும் ,காய்ச்சலை குறைக்கும் ,வெள்ளை படுதலை சரியாக்கும்.
  • 17. உடல் குளிர்ச்சி அடைய வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ மண்பானையில் போட்டு சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து அந்த நீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.
  • 18. குறிப்பு: ரோட்டோரத்தில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது- இது நல்லதில்லை.
நன்றி: விக்கிபீடியா.
நன்னாரி கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து
உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.
கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.
நன்னாரி பால்:
1.
நன்னாரி – 200 கிராம்
2. சுக்கு – 50 கிராம்
3. ஏலக்காய் – 25 கிராம்.
செய்முறை:- நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம். காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம். நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும். உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.
நன்னாரி சர்பத்:
நன்னாரி – 200 கிராம்.
தண்ணீர் ஒரு லிட்டர்.
சர்க்கரை – 1 கிலோ.
எலுமிச்சம்பழம் – 6 (சாறு எடுத்து கொள்ளவும்).
செய்முறை:
1. நன்னாரி வேரை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்து இடித்து வைத்துள்ள நன்னாரியை அதில் இட்டு, அடுப்பை அணைத்து இறுக்கமாக மூடி எட்டு மணி நேரம் வைத்து விடவும்.
3. எட்டு மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து நன்கு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து கொள்ளவும்.
4. ஆறிய பின் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.
5. எலுமிச்சம் சாறு தேவைப்பட்டால் சேர்க்கலாம். நன்னாரி மட்டுமே கூட நல்ல சுவை மற்றும் மனம் நிறைந்து இருக்கும்.
தேவைப்படும் பொழுது குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி சர்பத் கலந்து பருகி வந்தால், வியர்வையால் உண்டாகும் நம் உடலின் நீர் இழப்பை ஈடுகட்டுவதுடன், நம் உடல் கழிவுகளும் சிறந்த முறையில் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். நன்னாரி வேர் மருந்து கடைகளில் கிடைக்கும்


--
*more articles click*
www.sahabudeen.com


நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts