லேபிள்கள்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

"சுகர் பீரி' சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் "ஸ்டீபியா ரொபோடியானா' என்ற சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. மலைப்பிரதேசத்தில் மட்டும் காணப்படும் அவற்றை, சமதள பகுதியில் பயிடுவதற்காக காந்திகிராம பல்கலை உயிரியியல் உதவி பேராசிரியர் ஆர்.ராமசுப்பு ஆய்வு மேற்கொண்டார். முடிவில் சீனித்துளசி சமதள பகுதியிலும் நன்றாக வளர்வது தெரியவந்தது.ராமசுப்பு கூறியதாவது: சீனித்துளசியில் உள்ள சர்க்கரை உடலுக்கு எந்த தீங்கும் தராது. அவற்றை பொடி செய்து இனிப்பு தேவையுள்ள உணவு பொருட்களில் பயன்படுத்தலாம். இதன் மூலம் "சாக்கரின்' பயன்பாட்டை குறைக்க முடியும். மலைப்பிரதேசத்தை போல், மற்ற பகுதிகளிலும் சீனித்துளசி நன்றாக வளர்கிறது. இதனால் அவற்றை மூலிகை பயிராக விவசாயிகள் சாகுபடி செய்யலாம், என்றார். தொடர்புக்கு 90948 15828.
 தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த சீனித்துளசி, இனிப்புச்சுவை கொண்டது. இதன் இலைகளை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். இலையை உலர வைத்து பொடியாக்கி, டப்பாக்களில் அடைத்து வைத்து இயற்கை சர்க்கரையாக பயன்படுத்தலாம். இந்த இலைகளில் கலோரிகளே (Zero  Calorie) இல்லை. அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளரும்.
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். பழமொழி அளவுக்கு இலுப்பைப்பூ பிரசித்தி பெறுவதற்குக் காரணம் அந்த அளவு இனிப்புச்சுவை உள்ளது இலுப்பைப்பூ. முற்காலங்களில் பழங்குடி மக்கள் சர்க்கரைக்குப் பதிலாக இலுப்பைப்பூவின் இதழ்களை நேரடியாகவோ உலர்த்தியோ அரிசியுடன் சேர்த்து சமைத்தோ சாப்பிட்டிருக்கிறார்கள். அந்தவரிசையில் வந்திருப்பதே சீனித் துளசி.
சர்க்கரை
சர்க்கரைக்கு மாற்றாக அதுவும் இன்றைக்கு பெருவாரியான மக்களை பாடாய்ப்படுத்தி வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வாராது வந்த மாமணிபோல் வந்திருப்பதே இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி. `ஸ்டீவியா ரியோடியானா' எனப்படும் இந்த சீனித்துளசியின் தென்அமெரிக்காவை தாயகமாகக்கொண்டது. லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில் அதிகமாகக் காணப்படும் இந்தச்செடி சூரியகாந்தி குடும்பத்தைச்சேர்ந்தது. சீனித்துளசியில் இருந்து எடுக்கப்படும் ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside)  போன்ற வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கியக் காரணமாகும். கரும்புச்சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகமாக இனிப்புத்தன்மை கொண்டிருந்தாலும் மிகக்குறைந்த சர்க்கரை மற்றும் மாவுச்சத்து கொண்ட பொருட்களே இதில் உள்ளன. சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுத்தப்படும் இந்த சீனித் துளசி உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
சீனித் துளசியில் சர்க்கரை இயற்கையாகக் காணப்படுவதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாகப் பயன்படுத்தலாம். இதன் இலைகளை காய வைத்துப் பொடியாக்கி டீயாக விற்கப்படுகிறது. உடனே சீனித்துளசியில் டீயா? என்று சிலர் கேட்கலாம். மேலும் இதை மூலிகை டீ என்று நினைத்துப் பயப்படவும் வேண்டாம். வழக்கமாக நாம் பயன்படுத்தும் டீயைப்போலவே பாலில் கொதிக்க வைத்து பயன்படுத்தலாம். சுக்கு, ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சீனித்துளசியில் வெல்லமோ, சர்க்கரையோ சேர்க்கத் தேவையில்லை. கரும்புச் சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்ரின், அஸ்பார்டேம் மட்டுமல்ல இயற்கைச் சர்க்கரைப் பதிலாகவும் இதைப் பயன்படுத்தலாம். டீ, காபி என்றில்லை… குளிர்பானங்கள், பழச்சாறுகள், ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், பிஸ்கெட் போன்றவற்றிலும் சர்க்கரைக்குப் பதிலாக இதை பயன்படுத்தி உண்டு மகிழலாம். சீனித் துளசியில் ஊறுகாய், ஜாம் போன்றவையும் தயார் செய்யப்படுகின்றன.
மிகக் குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட சர்க்கரை உணவான இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தக்கூடியது. இதய நோயைக் குணப்படுத்தும் மருந்துகளிலும் சீனித் துளசி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் செரிமானக்கோளாறுகளை சீராக்கும் இது அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தோல் நோய்களைத் தீர்க்கும் மருந்துகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் பயன் தெரிய வந்ததையடுத்து இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெருமளவில் பயிரிடப்படுகிறது; தமிழகத்திலும் சில இடங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் இதை வளர்க்கலாம். இது மிதவெப்ப மண்டலச்செடி என்பதால் அதிகமான சூரிய ஒளியை விரும்பக்கூடியது. எனவே தமிழகத்தில் செழித்து வளரும். ஆனாலும் குறைவான வெப்பநிலைதான் இதற்கு ஏற்புடையது. நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் நிறைந்த நிலத்தில் நன்றாக வளரும். இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது நல்லது. மேலும் சீனித்துளசியை நோய் மற்றும் பூச்சிகள் எளிதில் தாக்காது. பயிர் செய்த 4 முதல் 5 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் சீனித்துளசியை 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்து பயன்பெறலாம். சீனித்துளசியில் இலைகளே தேவை; பூக்கள் பூத்தால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் பூ பூத்ததும் நுனியைக் கிள்ளி பூக்களை அகற்றிவிட்டால் செடி செழித்து வளரும். நல்லமுறையில் பராமரிக்கப்படும் சீனித் துளசி 3 முதல் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து நல்ல மகசூல் தரும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts