லேபிள்கள்

சனி, 1 செப்டம்பர், 2018

பள்ளிவாசல்களைப் பராமரியுங்கள்

பள்ளிவாசல்களைப் பராமரியுங்கள்

அண்டசராசரங்களைப் படைத்த அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடம் பள்ளிவாசல்கள். அங்குதான் அல்லாஹ்வின் வார்த்தை நிலைநாட்டப்படுகிறது. அவன் நினைவு கூரப்படுகிறான். அவனுக்காகவே மக்கள் அவனுடைய அருளை எதிர்பார்த்து ஒன்று கூடுகிறார்கள். தொழுகிறார்கள். மார்க்க உபதேசங்களை செவிமடுக்கிறார்கள். இப்படி ஒன்றன் பின் ஒன்றாக பள்ளிவாசல்களின் சிறப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதுவெல்லாம் சராசரி முஸ்லிம்கள் கூட அறிந்திருக்கும் அடிப்படையான விஷயங்கள்தாம். ஆனால், நபி(ஸல்) அவர்களாலும் அவர்களின் தோழர்களாலும் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்ட பள்ளிவாசல்களைப் போன்று, நம் காலத்தின் பள்ளிவாசல்கள் பராமரிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி நம் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் எழ வேண்டும்!
நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு தஞ்சம் அடைந்தவுடன், தனக்காக ஒரு வீட்டைக்கூட கட்டிக் கொள்ளாமல் முதன்முதலில் செய்த பணி பள்ளிவாசலைக் கட்டியதுதான். அந்தப் பள்ளிவாசல் சிமெண்ட், ஜல்லி, பளிங்குக் கற்கள், ஒலிப்பெருக்கி, மின்விசிறி, குளிர்சாதன வசதி போன்ற எந்த நவீன அம்சங்களால் ஆனதும் இல்லை. மாறாக, களிமண்ணால் எழுப்பப்பட்ட சுவர்கள்; பேரீச்சமர கட்டைகளாலான தூண்கள்; ஓலைகளால் மூடப்பட்ட கூடாரம்; மண் தரை; இவைதான் நபியவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலின் எளிய எழில்மிகு தோற்றம். அங்கே ஆடம்பரம் இல்லையென்றாலும், ஆனந்தம் இருந்தது. வசதிகள் இல்லையென்றாலும், அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் இருந்தது. பள்ளிவாசலின் இடம் மிகவும் சிறியதாக இருந்தாலும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் உள்ளங்கள் மிகவும் பெரியதாக இருந்தது.
வெறும் வணக்க வழிபாடுகளோடு மட்டும் சுருங்கிக் கிடக்கவில்லை மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசல். கல்விக் கூடமாக, பண்புப் பயிற்சியின் பட்டறையாக, ஏழைகளின் தங்குமிடமாக, அநாதைகளுக்கு அடைக்கலமாக, ஆதரவற்றோர்க்கு ஆதரவாக, கைதிகளை அடைக்க சிறைச் சாலையாக, நீதிமன்றமாக, ஆலோசனை அரங்கமாக, நாடாளுமன்றமாக, மருத்துவமனையாக, வழிப்போக்கர்களின் கூடாரமாக, முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தைச் சொல்லும் அழைப்பு மையமாக, மார்க்க அறிஞர்களை உருவாக்கும் மதரஸாக்களாக, ஜகாத்தை திரட்டி விநியோகிக்கும் இடமாக, போர்க் கனிமத்துப் பொருள்களை பங்கு வைத்துக் கொடுக்கும் மைதானமாக, ராணுவத் தளமாக,விளையாட்டுத் திடலாக, மார்க்கத் தீர்ப்பு வழங்கும் தீர்ப்பிடமாக, பொருளியல் வாழ்வியல் பிரச்னைக்கு தீர்விடமாக எனப் பலப் பரிமாணங்களில் மின்னியது நபிகளாரின் "நபவிப் பள்ளிவாசல்."
நம் காலத்தின் பள்ளிவாசல்கள்
நபி(ஸல்) அவர்கள் காலத்தின் பள்ளிவாசல்களுக்கும், எல்லா தொழில் நுட்பங்களையும் கையாண்டு கட்டப்படுகின்ற நம் காலத்தின் பள்ளிவாசல்களுக்கும் மிகப்பெரும் வித்தியாசங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நம் காலப் பள்ளிவாசல்களின் போக்கையும் செயல்பாடுகளையும் மனதிற்கொண்டு அதை வகைப்படுத்தி மாற்றத்தை காணது காலத்தின் கட்டாயம்.
1. இஸ்லாத்தின் மூல ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களின் மூதாதையர்கள் கற்றுக் கொடுத்ததை மார்க்கமாகக் கொண்டு அதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் தேடி நியாயப்படுத்தும் பரலேவிப் பள்ளிவாசல்கள், பண்புப் பயிற்சி, அழைப்புப்பணி, மக்கள் சேவை போன்ற எந்த நற்செயல்களையும் முன்னிறுத்துவதில்லை. நல்லடியார்களின் துதிபாடுவதும் கப்ர் வழிபாடும் அதைச் சார்ந்த அநாச்சாரங்களும்தான் முக்கிய நோக்கமாகக் கொண்டு, இவர்களால் நடத்தப்படும் பள்ளிவாசல்கள் செயல்பட்டு வருகின்றன.
2. வெறும் தொழுகைக்கு வந்து போகும் சுழற்சி இடமாகவும், அல்குர்ஆனை அரபுமொழியில் ஓதவும் மனனம் செய்யவும் கற்றுக் கொடுக்கும் ஒரு நிறுவன பாடசாலையாக மாறிக்கொண்டுள்ளது சில சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்கள். இவைகள் முற்றிலும் நிறுவனமயமாகி விட்டது என்று உறுதி செய்யும் அளவுக்கு இவைகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஆம், ஐவேளைத் தொழுகை, அல்குர்ஆனை ஓத, மனனம் செய்யக் கற்றுக் தருதல் ஆகிய இந்த செயல்களை எந்த இலக்கை முன்னோக்கி செய்து கொண்டிருக்கிறோம் என்ற அறிவு புகட்டப்படாமலேயே நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நான்கு இமாம்கள் கொண்ட மத்ஹபை முன்னிறுத்தி அவற்றிற்கு குர்ஆன் சுன்னா சாயமிட்டு, மாற்று கருத்து தெரிவிப்பவர்களை ஒதுக்கித் தள்ளி, அவர்களை எதிரிகளாக பாவிக்கும் மனப்போக்கை அந்தப் பள்ளிவாசல்களின் இமாம்கள் மக்கள் மனதில் உருவாக்கி விடுகின்றனர்.
அல்லாஹ்வின் பாதையில் புறப்படுகின்றோம் என்ற பெயரில் குடும்பத்தை, வியாபாரத்தை, வருமானத்தை விட்டுவிட்டு பள்ளிவாசல்களுக்கு பயணம் மேற்கொண்டு, "முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பு" என்று தாங்களாகவ சொல்லிக் கொண்டு, புனையப்பட்ட கதைகளைச் சொல்லி அறிவின் வறட்சியில் வாடிப் போயிருக்கும் தப்லீக் நண்பர்களை மட்டும் அரவணைத்துக் கொள்கின்ற பள்ளிவாசல்களாகத்தான் இன்றைய "அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்"(?) பள்ளிவாசல்கள் விளங்குகின்றன.
3. ஏகத்துவம், தொழுகை, அழைப்புப்பணி, கல்வி ஊட்டல், சமுதாயப்பணிகள், தான தர்மங்கள், கட்டுக்கோப்பு, சகோதரத்துவம், பரஸ்பரம், மக்கள் சேவை போன்ற அத்துணை விழுமங்களும் இவர்களின் பள்ளிவாசல்களில் நிறைந்திருக்கிறது. இருப்பினும், ஓர் உறுதியான கட்டிடத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டால் கட்டிடம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தாலும் மதிப்பிழந்து போவதுபோல், அடித்தளமான குர்ஆன் சுன்னாவின் மூலாதாரங்களில் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றம் பள்ளிவாசல்களின் சிறப்புமிக்க பணிகள் மங்கிப்போகக் காரணமாகின்றன. எங்களின் வாதங்களையும் ஆய்வுகளையும் அதில் வெளிப்படுகின்ற முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள். எதிர்கருத்து தெரிவித்தால் உங்களின் ஈமானை பதம் பார்க்கும் அளவுக்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம் என்ற மனோபாவப் போக்கும், தாங்கள் மட்டும்தான் தவ்ஹீதை நிலைநாட்டுகிறோம் என்ற வறட்டுப் பிடிவாதமும் அதைச் சார்ந்த செயல்பாடுகளும் இந்த ஏகத்துவப் பள்ளிவாசல்கள், தங்களின் தமிழ்நாடு தவ்ஹீத் கொள்கையால் பராமரிக்கப்படாமல் கறைபடிந்து கிடக்கின்றன.
4. சில மாதங்களுக்கு முன் கல்லூரி பயிலும் சகோதரர்கள், ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த முஸ்லிம் அல்லாதவருக்கு யதார்த்தமாக இஸ்லாம் பற்றிய அறிமுகம் செய்துகொண்டிருந்தனர். அவர்களின் அணுகுமுறையால் கவரப்பட்ட முஸ்லிம் அல்லாதவர், தனக்கு திருக்குர்ஆனும் இஸ்லாமிய அறிமுக புத்தகங்களும் வேண்டுமென கேட்டிருக்கிறார். உடனே, அந்தச் சகோதரர்கள் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் நாள்தோறும் தொழுகைக்குச் செல்லும் (குர்ஆன், சுன்னா) பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று, அங்கே இருக்கும் பள்ளிவாசலின் உறுப்பினர்களிடம் அறிமுகம் செய்து, இவருக்கு குர்ஆனும் புத்தகங்களும் வேண்டுமென கேட்டிருக்கின்றனர். ஆனால், அந்தப் பள்ளிவாசலில் அழைப்பாளரும் இல்லை. கொடுப்பதற்கு திருக்குர்ஆனும் இல்லை. பள்ளியின் உறுப்பினர் அந்தப் பகுதியில் அழைப்புப்பணிக்காக குர்ஆன் பிரதிகள் வைத்திருக்கும் இன்னொருவரை அணுகி அவரிடம் குர்ஆன் பிரதி வாங்கி, முஸ்லிம் அல்லாதவருக்கு கொடுத்திருக்கின்றனர்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் அழைப்புப்பணிக்கே பிரசித்தி பெற்றிருந்தது. ஆனால், இன்று நம்முடைய குர்ஆன் சுன்னா சார்ந்த சில பள்ளிகளிலேயே முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்ய அழைப்பாளர்களும் இல்லை. அவர்களுக்குத் தருவதற்கு திருக்குர்ஆனும் இருப்பதில்லை. வெறும் பள்ளிவாசலின் அலமாரிகள் அரபு குர்ஆன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது யாரும் படிக்க முடியாமல்.(?)
மேற்சென்ற நான்கு வகை பள்ளிவாசல்களின் நிலையையும் நம் கண்முன் நிறுத்தி, தேவையான மாற்றங்களை விரைவில் ஏற்படுத்தவேண்டும்.
அன்புள்ள தொழுகையாளிகளுக்கும்; நிர்வாகிகளுக்கும்
நம் வீட்டைவிட மிகவும் பொறுப்பாக பள்ளிவாசல்களைப் பராமரிக்க தொழுகையாளிகளும் நிர்வாகிகளும் முன்வர வேண்டும். வியாபாரம் செய்வது, தொழுகையிடத்தில் பேசுவது, கூச்சல்போடுவது, சத்தமாக சிரிப்பது, சுய உலக அலுவல்களில் ஈடுபடுவது, பிறருக்கு இடையூறு மற்றும் சலசலப்பை ஏற்படுத்துவது போன்ற செயல்களிலிருந்து முற்றிலும் விலக வேண்டும். குர்ஆன் சுன்னா, அழைப்புப்பணி, கொள்கை(அகீதா), நற்பண்புகள்(அக்லாக்), உளத்தூய்மை ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யவேண்டும். ஏற்பாடு செய்திருந்தால் உடனடியாக கலந்து கொள்ளவும், அதற்கு உதவிகள் செய்யவும் வேண்டும்.
உங்கள் பகுதியில் பல்வேறு களப்பணிகள் செய்ய இறைவன் புறத்திலிருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட அமானித அருள்தான் பள்ளிவாசல்கள். வணக்க வழிபாடுகள், மார்க்கச் சொற்பொழிவுகளோடு சுருக்கிக் கொள்ளாமல், பைத்துல்மாலாக, அழைப்புப்பணிக்கு ஆணிவேராக, மக்கள் சேவை மையங்களாக, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் இடமாக மாற்றுங்கள். பள்ளிவாசல்களை பல்கலைக்கழகங்களாக்குங்கள். வாசிப்பைத் தூண்டுங்கள். அறிவுப் பசியுள்ள ஒரு சமுதாயத்தைத் தட்டி எழுப்புங்கள். ஒவ்வொரு பள்ளிவாசலையும் நபிகளார் காலத்து "மஸ்ஜிதுந் நபவி"யாக உயிர்ப்பெறச் செய்யுங்கள். மஸ்ஜிதுகள் உயிர்ப்பெறுவதற்கு தொழுகையாளிகளும் நிர்வாகிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
மாறட்டும் நம் பள்ளிவாசல்கள்
தற்கால பள்ளிவாசல்களுக்கு செயற்கையான புனிதத்துவம் கொடுக்கப்படுகின்றன. வெளிப்புறத்தோற்றம், அழகிய வடிவமைப்பு, சுத்தம் சுகாதாரம் போன்றவற்றைப் பேணுவதற்கு மட்டும் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிவாசல்களைப் பராமரிப்பது என்பது இதுமட்டுமல்ல. முதலில் சுட்டிக்காட்டிய "மஸ்ஜிதுந்நபவி" பள்ளிவாசல் அமையப்பெற்ற அத்தனை விழுமங்களும் நமது பள்ளிவாசல்களில் அமைவதற்கு நாம் பாடுபட வேண்டும். அதற்கேற்ற அறிவுபூர்வமான தலைமை, ஆக்கபூர்வமான செயல்கள், கல்வியில் முதிர்ச்சியுள்ள இமாம்கள், திறனுள்ள அழைப்பாளர்கள், துடிப்புள்ள அங்கத்தினர்கள் என பள்ளிவாசல்களின் மினாராக்கள் மிளிர்வதைப் போன்று பொறுப்பாளர்களும் மிளிர வேண்டும்.
தமிழகத்தில், அல்லாஹ்வின் அருளால் நிறைய பள்ளிவாசல்கள் உள்ளன. எனினும், அவை அனைத்தும் பகைமைகளாலும் பிரிவினைகளாலும் பிளவுபட்டு கிடக்கின்றன. தொழுகைக்கு இரண்டாவது ஜமாஅத் நடத்த முடியவில்லை என்பதற்காக, பிரிந்த பள்ளிவாசல்கள் இன்று கடமையான தொழுகையே சரிவர நடத்த முடியாமல் தடுமாறுகின்றன. ஏன் இத்தனை பிரிவினைகள்? இத்தனை கொள்கை முரண்கள்? என்ன செய்யவேண்டும் இதற்கு? – நாம் அனைவரும் ஒரே கொள்கையில் மாறவேண்டும். அந்தக் கொள்கை, அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆனும், அவனுடைய தூதரின் சொல், செயல், அங்கீகாரமும்தான். இவற்றை மட்டும் இஸ்லாத்தில் முன்னிறுத்த வேண்டும். இந்த மூலாதாரங்களை யாருடைய புரிதலுக்கும் உட்படுத்தாமல் நபித்தோழர்களின் புரிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை முதன்மைப்படுத்தி, நாமும் மாறி நம் பள்ளிவாசல்களையும் மாற்றிட வேண்டும்.
"பாவத்திலிருந்து விலகிக்கொண்டவர்களும்; (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும்; (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும்; (நோன்பு நோற்பவர்களும், மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பயணம் செய்பவர்களும்; குனிந்து சிரம் பணிந்து (தொழுபவர்களும்;) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும் பாவமான காரியங்களை விலக்குபவர்களும்; அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்." – (அல்குர்ஆன் – 9:112)
மக்தூம் தாஜ், சென்னை.
நன்றி – அல்ஜன்னத் மாத இதழ்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சமையலறைக் குறிப்புகள்.

சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க நமது சமையலறையில் ' சர்க்கரை ' முக்க...

Popular Posts