லேபிள்கள்

திங்கள், 7 மே, 2018

மூட் டிஸ்ஆர்டர்கள் அறிவோம்!

மூட் டிஸ்ஆர்டர்கள் அறிவோம்!
மனம் என்பது உணர்வுகள், எண்ணங்களால் ஆன அற்புதப் பெட்டகம். அன்றாடம் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகள் நம் மனதைப் பாதித்தபடியே உள்ளன. நிகழ்வுகளுக்கு ஏற்ப நம் மனம் சலனம் அடைந்துகொண்டே இருக்கிறது. ஆனந்தத்தில் கொண்டாடித் திளைப்பதும், துன்பத்தில் உழன்று, மருகுவதும் நம் சுபாவம். இப்படி, சம்பவங்களுக்கு ஏற்ப சரியான எதிர்வினை செய்யும் வரை நம் மனநிலையில் எந்தச் சிக்கலும் இல்லை. இதில் தடுமாற்றம் ஏற்படும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.

பொதுவாக, மனநிலை மாற்றங்கள் பெரும்பாலானோருக்கு ஏற்படுபவைதான். இவை இயல்பானவை, தற்காலிகமானவை. ஆனால், சிலருக்கு இந்தப் பாதிப்பு மாதக்கணக்கில் தொடரும்போது அது ஒரு குறைபாடாகிறது. இதை நாம் மனநிலை பாதிப்பு (மூட் டிஸ்ஆர்டர்) என்கிறோம். மூட் டிஸ்ஆர்டரில் என்னென்ன வகைகள் உள்ளன, இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, இதற்கான தீர்வு என்ன என்று பார்ப்போம்.

மூட் டிஸ்ஆர்டர்
மூட் டிஸ்ஆர்டரை ஒருதுருவ பாதிப்பு (யூனிப்போலார் டிஸ்ஆர்டர்), இருதுருவ பாதிப்பு (பைபோலார் டிஸ்ஆர்டர்)
  என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். யூனிப்போலார் டிஸ்ஆர்டரில் பெரும்பாலானவற்றின் அறிகுறிகள் ஏறக்குறைய ஒன்று போலவேதான் இருக்கும். கடுமையான மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, சோம்பல் போன்ற குணங்கள் எல்லா மூட் டிஸ்ஆர்டர்களுக்கும் பொதுவானவை. இதை `டிப்ரஷன்' என்போம். பைபோலார் என்பது டிப்ரஷனும், `மேனியா' எனப்படும் அதீத உற்சாகமும் மாறி மாறி ஏற்படுவது. 


யூனிபோலார் டிஸ்ஆர்டர்
மேஜர் டிப்ரஸிவ் டிஸ்ஆர்டர்

இதை, கிளினிக்கல் டிப்ரஷன் என்றும் சொல்வார்கள். மூட் டிஸ்ஆர்டர்களில் இதுதான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னை. அதீத மனச்சோர்வு இது. இந்தக் குறைபாடு உள்ளவர்கள் எதிலும் விருப்பமின்மை, வெறுப்பு, தன்னம்பிக்கை குறைவாக இருத்தல், தாழ்வு மனப்பான்மை, தன்னால் ஏதும் ஆகாது என்ற எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பர். தற்கொலை குறித்த எண்ணங்கள் அடிக்கடி ஏற்படும். சிலர் ஓரிரண்டு நாட்களிலேயே மேனியா எனப்படும் அதீத உணர்வுநிலையால் பாதிக்கப்பட்டு மிகவும் கடுமையானவர்களாக, மற்றவர்களை அடிப்பது, தாக்குவது என முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். இதுவும் டிப்ரஷனின் ஒரு நிலைதான் இவர்களை மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

ஏடிபிக்கல் டிப்ரஷன் (Atypical depression)
டிப்ரஷனின்போது சரியாகத் தூக்கம் வராமல், சாப்பிடாமல் சோர்வாக இருப்பார்கள். ஆனால், ஏடிபிக்கல் டிப்ரஷன் பிரச்னை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். நீண்ட நேரம் தூங்குவார்கள். இதனால், உடல்பருமனாக இருப்பர். சமூகத்தோடான உறவு மிகவும் அரிதாக இருக்கும். மிகுந்த தனிமை உணர்வோடு இருப்பார்கள். இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்கு கவுன்சலிங் அவசியம். தனிமையில் இருக்கவிடக் கூடாது.

பருவ மனநிலை பாதிப்பு (Seasonal affective disorder)
குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டும் மிகுந்த மனச்சோர்வோடு இருப்பார்கள். இது பொதுவாக, பனிக் காலத்தில் குளிர்ப் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு ஏற்படும். பருவ நிலை மாறும்போது இயல்புநிலைக்குத் திரும்புவார்கள். இவர்கள், குளிர்காலங்களில் டிப்ரஷனுக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல் நலம்.

துயர மனநிலை (Melancholic depression)
 இந்தப் பாதிப்பு உடையவர்கள் எப்போதும் துயரமான மனநிலையுடனேயே இருப்பார்கள். மிகவும் சூன்யமான மனநிலையில் தீவிரமாக இருப்பதால் இவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருக்கும். சந்தோஷப்படவேண்டிய விஷயங்களைக்கூட மிகவும் துயரமான ஒன்றாகவே பார்ப்பார்கள். வாழ்வையே வெறுத்துவிடுவார்கள். இதனால், சாப்பிடுவதில் ஆர்வம் இருக்காது. எடை இழப்பு இருக்கும். பொதுவாக, காலை வேளையில் இவர்களுக்கு மனச்சோர்வு அதிகமாக இருக்கும். இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.

கேட்டடோனிக் டிப்ரஷன் (Catatonic depression)
 
அரிதான மோசமான டிப்ரஷன் வகைகளில் ஒன்று. இந்த நிலையில் இருப்பவர்கள் பேச்சோ உணர்வோ இன்றி, அசைவற்று இருப்பர். வலி போன்ற உணர்வுகள் மட்டுமே இருக்கும். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் வைத்துத்தான் சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவர்கள் மூட் ஸ்டெபிலைசர்கள் தருவதோடு, எலெக்ட்ரோகன்வல்சிவ் தெரப்பியும் தரவேண்டி இருக்கும்.

பிரசவ கால மனச்சோர்வு (Pospartum depression)
பிரசவத்துக்குப் பின்னர் சில பெண்கள் அதீத மனச்சோர்வோடு இருப்பார்கள். எதையோ இழந்ததைப்போன்ற மனநிலை, விரக்தி போன்றவற்றோடு காணப்படுவார்கள். பொதுவாக, பிரசவத்துக்குப் பிறகு மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை இந்த மனச்சோர்வு இருக்கும். இதனால், குழந்தைப் பராமரிப்பு, பாலூட்டுதல் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். கவுன்சலிங் மற்றும் குடும்பத்தாரின் ஆதரவு போன்றவற்றாலேயே குணமாக்க முடியும்.

டிஸ்தீமியா (Dysthymia)
இதை, `நாட்பட்ட மனச்சோர்வு' எனலாம். இதற்கு மேஜர் டிப்ரசிவ் டிஸ்ஆர்டர் போன்றே அறிகுறிகள் இருந்தாலும் இது சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து காணப்படும். இவர்களுக்கு கவுன்சலிங் மற்றும் மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

மனச்சோர்வு ஆளுமை (Depressive personality disorder)
சிலர் இயல்பாகவே எப்போதும் மனச்சோர்வுடன், எதிர்மறையான அணுகு முறையுடன்,
  தாழ்வுமனப்பான்மையுடன் இருப்பார்கள். இப்படி டிப்ரஷன் என்பது இயல்பான குணமாக இருப்பதை `டிப்ரசிவ் பெர்சனால்டி டிஸ்ஆர்டர்' என்பார்கள். இவர்களுக்கு, தொடர்ந்து மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் தர வேண்டியது இருக்கும்.

ரெக்கரன்ட் டிப்ரெஸிவ் டிஸ்ஆர்டர் (Recurrent depressive disorder)
மிகக் குறுகிய காலத்திலேயே திரும்பத் திரும்ப மனச்சோர்வுக்கு ஆட்படுதல், பிறகு அதில் இருந்து விடுபடுதல் என்று இருப்பர். பெண்களுக்கு இந்த வகை டிஸ்ஆர்டர் அதிகமாக வர வாய்ப்பு உண்டு. குறிப்பாக மாதவிலக்கு சமயங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக ஏற்படும். பெரும்பாலும் ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்தப் பாதிப்புகள் இருக்கலாம். உடலில் என்ன பிரச்னை எனக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்த மூட் டிஸ்ஆர்டர் பிரச்னையில் இருந்து வெளியேறலாம்.
 

பைபோலார் டிஸ்ஆர்டர்
பைபோலார் டிஸ்ஆர்டர் என்பது மேனியா எனப்படும் அதீத உற்சாக மனநிலை மற்றும் டிப்ரஷன் எனப்படும் அதீத சோர்வு மனநிலை என்ற இரண்டு நிலைகளும் மாறி மாறி ஏற்படும். மேனியா நிலையில் இருக்கும்போது, `தன்னால் எதுவும் முடியும்; தானே இந்த உலகில் மிகப்பெரியவன் மிக வலிமையானவன்' என்கிற உற்சாக மனவலிமையோடு செயல்படுவார்கள். டிப்ரஷன் நிலையில், `தன்னால் எதுவுமே முடியாது' என்ற ஆழமான அவநம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையில் பிரச்னைகளை எதிர்கொள்ளவே தயங்குவார்கள். டிப்ரஷனின் போது சரிவர உண்ணாமலும் உறங்காமலும் மேனியாவின்போது அளவுக்கு அதிகமாக உண்டு, உறங்குவதாலும் இவர்களின் உடல்நலம் பாதிப்படுகிறது. இவர்களுக்கு கவுன்சலிங் தருவதோடு மருந்து மாத்திரைகள் கொடுப்பதன் மூலம் இதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

ரேபிட் மூட் சைக்கிளிங்
ரேபிட் மூட் சைக்கிளிங் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேனியா, டிப்ரஷன் காலங்கள் வாரக்கணக்கில்கூட மாறிமாறி ஏற்படும். இவர்கள் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவேண்டியது அவசியம். கவுன்சலிங், மூட் ஸ்டெபிலைசர்கள் போன்வறவை அவசியம்.

மதுவால் தூண்டப்படும் மனச்சோர்வு
மதுவுக்கும் மனச்சோர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆல்கஹால் மூளையில் ஏற்படும் இயல்பான வேதி வினைகளை முடக்கி, மூளையைச் சோர்வுறச் செய்யும் வலிமை உடையது. தொடர்ந்து மதுவைப் பயன்படுத்தும்போது அது டோபமைன் உள்ளிட்ட சுரப்புகளை பாதித்து, அதீத மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. இவர்களுக்கு டிஅடிக்‌ஷனுக்கான கவுன்சலிங் மற்றும் மாத்திரைகள் கொடுத்து மதுப் பழக்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். மதுவற்ற இயல்பான வாழ்க்கை வாழும் வரை இவர்களை நன்கு கவனிக்க வேண்டும்.

சிகிச்சைகள்
பொதுவாக, மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கு கவுன்சலிங் மிகவும் முக்கியம். காக்னடிவ் பிஹேவியரல் தெரப்பி என்று இதைச் சொல்வார்கள். இதில், பாதிக்கப்பட்டவருக்கு தன்னை, தான் சார்ந்து இருக்கும் சூழலை, சமூகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்று சொல்லித் தரப்படும். அவருக்கு மன நெருக்கடி ஏற்படுத்தும் நினைவுகளை, விஷயங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுத்தரப்படும். இதனோடு `ஃபேமிலி தெரப்பி' எனப்படும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கும் கவுன்சலிங் தரப்படும்.
  இதனுடன் மூட் ஸ்டெபிலைஸர்கள் எனப்படும் நியூரோடிரான்ஸ்மிட்டரை தூண்டும் மருந்து, மாத்திரைகளும் தரப்படும். பாதிக்கப்பட்டவர் கவுன்சலிங் உடன் மருந்து மாத்திரைகளையும் பரிந்துரைக்கப்பட்ட காலம் வரை எடுத்துக்கொண்டால்தான் நல்ல தீர்வு கிடைக்கும். சிலர், கொஞ்ச நாட்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியதும் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. பரிந்துரைக்கப்பட்ட காலம் வரை தொடர்ந்து மருந்து மாத்திரைகள் உண்பது நல்லது.

மனநிலை பாதிப்பின் அறிகுறிகள்...
உணர்வுகள் (Feelings)
1. சோகம் மற்றும் பதற்றம்
2. நம்பிக்கையின்மை
3. ஊசலாட்ட எண்ணங்கள்
4. எரிச்சல் உணர்வு

எண்ணங்கள் (Thinking)
1. தன்னைத் தானே மட்டமாக நினைப்பது
2. எதிர்மறை எண்ணங்கள்
3. மோசமான நினைவாற்றல் மற்றும் கவனம்
4. முடிவுகள் எடுக்க இயலாமை
5. தற்கொலை எண்ணங்கள்

நடத்தை (Behaviour)
1. அழுகை
2. எதிலும் பின்வாங்கும் மனோபாவம்
3. உற்சாகமின்மை
4. தோற்றம் பற்றிய கவனம் இன்மை
5. மிகக் குறைந்த அல்லது மிக அதிகமான உறக்கம்
6. அதிகமான அல்லது மிகக்குறைந்த அளவில் உண்பதால் ஏற்படும் எடை குறைவு அல்லது அதிகரிப்பு
7. வலிமை இழந்தது போன்ற நாட்பட்ட சோர்வு
8. காதல், உடலுறவில் ஆர்வம் இன்மை

யார் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்?
பொதுவாக, நம் நவீன வாழ்கைமுறை மாற்றங்களால் மூட் டிஸ்ஆர்டர்கள் மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேருக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, வயதானவர்கள், தனிமையில் இருப்பவர்கள், இதய நோய்கள், புற்றுநோய், பக்கவாதம் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட் டிஸ்ஆர்டர் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
  பெண்களுக்கு வருவதற்கு 2:1 என்ற விகிதத்தில் வாய்ப்புகள் அதிகம்.

உடலியல் காரணங்கள்
செரடோனின் மற்றும் நோரபினாப்ரைன் (Serotonin
 and norepinephrine), டோபமைன் போன்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றத்தால் இந்த மூட் டிஸ்ஆர்ட்கள் ஏற்படுகின்றன. இந்தப் பாதிப்புகள் ஏற்பட தொடர் தோல்விகள், தனிமையுணர்வு, பாதுகாப்பின்மை, மோசமான அவமானம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுதல் போன்ற வாழ்வியல் காரணிகள் முக்கிய இடம் வகிக்கின்றன. சிலருக்கு மரபியல் காரணங்களாலும் மூட் டிஸ்ஆர்டர் பாதிப்புகள் ஏற்படக்கூடும். பொதுவாக, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்ற பிரச்னைகள் ஏற்பட 25 சதவிகிதம் மரபியல் காரணங்கள் பின்னணியாக உள்ளன


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts