கண்களில் ஏற்படும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கோணல் பார்வை மற்றும் வெள்ளெழுத்து ஆகிய பிரச்னைகளை பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறோம்.
பார்வை தொடர்பான இந்த பாதிப்புகளை ரீஃப்ராக்டிவ் எரர்ஸ் (refractive errors) என்கிறோம். நம் கண்களுக்கு கண்ணாடி பவர் என ஒன்று உண்டு. இந்த கண்ணாடி பவரில் மூன்று வகை உண்டு.
முதலில் மயோபியா (Nearsightedness அல்லது Myopia). அதாவது கிட்டப்பார்வை. மைனஸ் பவர் பாதிப்பான இதில், தூரத்தில் உள்ள காட்சிகள் சரியாகத் தெரியாது. அருகில் உள்ள காட்சிகள் நன்றாகத் தெரியும். இந்தப் பிரச்னை குழந்தைகளை அதிகம் பாதிப்பதைப் பார்க்கிறோம். இதைச் சரியாக கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால் அந்தக் குழந்தையால் பள்ளிக்கூடத்தில் கரும்பலகையை சரியாகப் பார்க்க முடியாமல், பாடங்களை கவனிக்க முடியாமல் ஆசிரியர்களிடம் மக்கு என பெயர் வாங்கும். பார்வை தொடர்பான முகாம்கள் நடத்தும்போது ப்ளஸ் டூ படிக்கிற பிள்ளைகளுக்குக்கூட இந்தப் பிரச்னை இருப்பதை நிறையவே பார்க்கிறோம்.
அடுத்தது ஹைபர் மெட்ரோபியா எனப்படும் தூரப்பார்வை.(Hyperopia or Long-sightedness)
ப்ளஸ் பவர் பாதிப்பான இந்தப் பிரச்னையில் தூரத்துப் பார்வை, கிட்டப்பார்வை என இரண்டுமே கொஞ்சம் மங்கலாகவே இருக்கும். நம் கண்களில் அகாமடேஷன் (accomodation) என ஒரு சக்தி இருக்கும். அதைப் பயன்படுத்தி கண்ணானது சம்பந்தப்பட்ட நபருக்கு சக்தியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் அந்த அகாமடேஷன் விட்டுப்போய் குழந்தையால் சரியாகப் பார்க்க முடியாமல் அதற்கு தலைவலி, கண்களைச் சுருக்கிப் பார்ப்பதால் ஏற்படும் அசௌகர்யம் என எல்லாம் வரும். இந்தப் பிரச்னையை குழந்தையின் எட்டு வயதுக்குள் சரி செய்யாவிட்டால் அது சோம்பேறிக் கண் பிரச்னையில் கொண்டுபோய் விடும். இதுபற்றி முந்தைய அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்திருக்கிறோம்.
இதுதவிர ஆஸ்டிக்மேட்டிசம் (Astigmatism) எனப்படும் சிதறல் பார்வை பாதிப்பும் சிலருக்கு வரலாம். சிலிண்டர் பவர் பிரச்னையான இதில் நேர்க்கோடுகள் எல்லாம் வளைந்ததுபோல தெரியும். இதையும் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை தராவிட்டால் தலைவலி, கண்களைக் குறுக்கிப் பார்ப்பதால் ஏற்படும் அசௌகர்யம் போன்றவை ஏற்படும்.
நாற்பது வயதுக்கு மேலான பலருக்கும் வெள்ளெழுத்து பாதிப்பு ஏற்படுவது ரொம்பவே சகஜம். பிரெஸ்பயோபியா (Presbyopia) எனும் இந்த பாதிப்பு வந்த பிறகும் நிறைய பேர் `நான் கண்ணாடியே போட மாட்டேன்' என பெருமையாகச் சொல்லிக் கொள்வதைப் பார்க்கிறோம். இது மிகவும் தவறானது. 40 வயதுக்கு மேல் அடிக்கடி கண் மருத்துவரை சந்தித்து கண்களில் பிரஷரோ, வேறு பிரச்னைகளோ இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டும். தவிர மருத்துவர் பரிந்துரைத்தால் கண்ணாடியை அவசியம் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கண்களுக்கு ஸ்ட்ரெயின் அதிகமாகும்.
ஓட்டப்பந்தயத்தில் ஒருவர் ஓடுகிறார் என வைத்துக்கொள்வோம் அவருக்கு மூட்டுவலி இருக்கிறது... ஆனாலும் அதைப் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் பிற்காலத்தில் அந்த நபருக்கு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீவிரமாகக்கூடும். அதே போன்றதுதான் கண்களும். பார்வை தொடர்பான பிரச்னைகளை அலட்சியம் செய்யாமல் சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் சரியான பவரில் கண்ணாடி பயன்படுத்திக் கொள்வது நல்லது.
கண்ணாடியில் நிறைய வகைகள் உள்ளன. ஆன்ட்டி ரெஃப்ளெக்டிவ் கோட்டிங் உள்ள கண்ணாடிகளை அணியும்போது வெளியில் போனால் கண்ணாடி கறுப்பாக மாறிவிடும். அதேபோல மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் உபயோகிக்கும் போது வரும் ப்ளூ கதிர்களை தடுக்கும் ப்ளூ பிளாக்கிங் லென்ஸ், குழந்தைகள் கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது உபயோகிக்க ஏதுவான பவர் இல்லாத கம்ப்யூட்டர் கண்ணாடிகள் என நிறைய வகைகள் உள்ளன.
அதேபோல கண்ணாடிக்கான ஃபிரேம்களிலும் நிறைய மாடல்கள் உள்ளன. சில நேரங்களில் பிறந்த குழந்தைக்குக் கூட கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்து கண்ணாடி அணிவிக்க வேண்டி வரலாம். பிறந்த குழந்தையால் கண்ணாடியை அணிந்திருக்க முடியாது என்பதால் அவர்களுக்கான கண்ணாடியில் பின்னால் பின்பக்கம் கயிறு வரும்படி பரிந்துரைப்போம். சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கு அணிவிக்கும்போது பாலிகார்பனேட் ஃபிரேம் பொருத்தமாக இருக்கும். விளையாடும்போது தவறுதலாக விழுந்தாலும் கண்ணாடி உடைந்து காயப்படுத்தாமல் இது தடுக்கும்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக