லேபிள்கள்

திங்கள், 11 மார்ச், 2013

நிக்காஹ் புறக்கணிப்பு சரியா..

இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவன் ரசூலும் வலியுறுத்திய நிக்காஹ் என்ற ஒரு கட்டாயக்கடமையை ஒருவர் செய்கிறார் என்றால்... அவருக்கு உறுதுணையாக இருந்தால் நன்மை கிடைக்குமா அல்லது அவரின் இந்த நற்செயலை புறக்கணித்தால் நன்மை கிடைக்குமா...? இதை புறக்கணிக்க இஸ்லாமிய அனுமதி உண்டா..? உண்டு என்றால் அதை எப்போது செய்யலாம்..? கண்ட காரணத்தை சொல்லி நிக்காஹ்வை புறக்கணிக்க ஆதாரம் உண்டா..? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில்களை அலசுவோமா...?
சிலர்,  ஒரு திருமணத்தில்  பித்அத் இருந்தால் நிக்காஹ்வை புறக்கணிக்க வேண்டும் என்ற தவறான நிலைப்பாட்டில் உள்ளனர்..!
மணமக்களின் உறவே இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் செய்யக்கூடாத அளவில் உள்ள ஹராம் என்றாலோ....
அல்லது 
மேலே கூறப்பட்ட இஸ்லாமிய கட்டளைகள் (மணமகள் சம்மதம், மஹர், வலீ, இரு சாட்சிகள், ஒப்பந்தம்) ஆகியன தேவை இல்லை என மீறப்பட்டாலோ...
இதனால், 
'அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் ரசூலால் சொல்லப்பட்டதற்கு மாற்றமாக இந்த நிக்காஹ் உள்ளது... இது அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை... எனவே.... நான் இந்த நிக்காஹ்வை புறக்கணிப்பேன்" என்றால்... அதில் நியாயம் உள்ளது..! 
இப்போது இவர்களிடம் எனது கேள்வி என்னவென்றால்.....
"இந்த மாப்பிள்ளை ஊர்வலம் பைத்சபா  பாடலுடன் ஊர்வலம் வந்தார்... 
"மாப்பிள்ளை கோட்-சூட்-டை-மாலை-ஷூ- போட்டு ஆடம்பரமாகிவிட்டார்... "
"திருமணத்துக்கு வந்த ஒருவர் நிக்காஹ் முடிந்தவுடன் மைக்கில் ஒரு தொப்பி போட்டு தாடி வைத்த ஒரு ஹஜ்ரத்  பித்அத் துவா ஓதப்போகிறார்... "
"இந்த கல்யாணத்துக்கு ஆயிரம் பேரை மட்டன் பிரியாணி & சிக்கன் ஃபிரை என்ற வலிமா விருந்துக்கு அழைத்து ஆடம்பரம் செய்கிறார்கள்.....  "
இதனால்... நிக்காஹ்வை புறக்கணிக்க வேண்டும்... என்போர்.... இப்படியான ஆடம்பரங்கள் மற்றும் பித்அத் ஒரு திருமணத்தில் இருந்தால் அதில் உள்ள நிக்காஹ்வை புறக்கணிக்க வேண்டும் என்ற குர்ஆன் ஆயத்து... சஹீஹ் ஹதீஸ்.... ஆகியவற்றை...
நிக்காஹ் விஷயத்தில் அப்படி ஓர் ஆதாரம் இருந்தால் அதை வையுங்கள்...! அப்படியான நிக்காஹ்வை புறக்கணிப்பதில் நானும் இன்ஷாஅல்லாஹ் உங்களுடன் இணைகிறேன்..!
எனது கேள்வியை இன்னும் சுருக்கி.... இன்னும் துல்லியமாக கேட்கிறேன்...!
சூழ்நிலை ஒன்று...!
இதோ இப்படி ஒரு நிலை வருகிறது என்று வைப்போம்...!
ஒரு மணமகன்... நம்முடைய தவ்ஹீத் சகோதரர்.... இரண்டில் ஒரு சாட்சியாக இருக்க என்னையும் உங்களையும் அழைக்கிறார்.
நாம் அங்கே சென்றால்.... மற்ற எல்லாமே நபிவழியில் சரியாக உள்ளது. பக்கா இஸ்லாமிய வழிமுறையில்..!
ஆனால், 
அங்கே பெண்ணுக்கு வலீயாக வந்த ஒருவர் நிற்கிறார்.... அவர்,  நிக்காஹ் ஒப்பந்தம் முடிந்தவுடன் "அல்லாஹும்ம அள்ளிஃப் பைனஹுமா..." என்ற துவாவை ஓதுவேன் என்கிறார்..! 

நாம் மணமகனை நோக்க... "நான் என்ன பண்ணுவேன் சகோ.... எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்... அவர் கேட்கலை... வேறு வலியும் மணப்பெண்ணுக்கு இல்லையாம்... என்ன செய்ய நான்..?" என்கிறார்...!
சொல்லுங்கள்.... இப்போது இந்த நிக்காஹ்வை நாம் சாட்சி கையெழுத்து போடாமல் புறக்கணிப்பதா.... அல்லது புறக்கணிக்ககூடாதா...?
ஒரு பித்அத் இருக்கிறது என்பதற்காக அல்லாஹ் இட்ட கட்டளையை மணமக்களுக்கு நடக்காமல் செய்ய காரணம் ஆக போகிறோமா..? 

அல்லது
 

நிக்காஹ் நடக்க காரணமாக சாட்சியாக இருந்து முடிந்தவுடன்.... நாம் நம்முடைய நபிவழிப்படி... "பாரக்கலாஹு லக... வ பாரக்க அலைக்க... வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்...!" என்று சொல்லிவிட்டு... "யோவ் வலீ.... நீ வேணும்னா உம்ம துவாவை ஓதிக்கிட்டு நீயே ஆமீன் போட்டுக்க... இது பித்அத்... நாங்க இதை புறக்கணிக்கிறோம்...." என்று கூறி என்று நாம் கழண்டு விட்டால்... பித்அத் ஐ ஆதரித்து விட்டோம் என்று அர்த்தமாகிவிடுமா...? அந்த துவாவுக்கு முன்னர் நடந்த நிக்காஹ் "புறக்கணிக்க வேண்டிய பித்அத் சபை" என்றாகி விடுமா...
பதில் சொல்லுமுன்னர் முந்திய பதிவான........ 
திருமணம் 'கட்டாயக்கடமை' இல்லையா...?
----இதில் நான் சொன்ன ஆதாரங்கள் அனைத்தையும் படித்து விட்டு பதில் சொல்லுங்கள்...!
சூழ்நிலை இரண்டு...!
இதோ... இப்படி ஒரு நிலை வருகிறது, என்று வைப்போம்...!
ஒரு மணமகள். அவளுக்கு யாருமே கிடைக்கவில்லை, வலீயாக இருக்க...! நீங்கள் ஆட்சியாளர். எனில், நீங்களே வலீ.
நானும் இன்னொருத்தரும் சாட்சிகளாக நிக்காஹ் நடக்கும் இடத்துக்கு நீங்கள் அழைத்ததன் பேரில் வந்தால்.... மற்ற எல்லாமே நபிவழியில் சரியாக உள்ளது. பக்கா இஸ்லாமிய வழிமுறையில்..!
ஆனால், 
நம்ம மாப்பிள்ளை மாலையும் கழுத்துமாக வந்து நிற்கிறார்..!
இந்த ஒன்றுதான் இடிக்கிறது...!
 
நான் என்ன சகோ... இது...? என்று உங்களை நோக்க... 
நீங்கள்... "அவருகிட்டே கேட்டுட்டேன் சகோ... அவரு... கல்யாண ஃபோட்டோ எடுத்தால்... அதில் மாலையும் கழுத்துமா இருக்கணும் என்று விரும்புகிறாராம்... அவசியமாம்... இது அவருக்கு ஆடம்பரம் இல்லையாம்... மாலை மார்க்கத்தில் இல்லைன்னும் தெரியுமாம்... கழட்ட மாட்டேன்... போட்டே தீருவேன் என்கிறார்...என்ன செய்ய..." என்று சொல்கிறீர்கள்..!
ம்ம்ம்.... சொல்லுங்கள்.... இப்போது இந்த நிக்காஹ்வை நான் சாட்சி கையெழுத்து போடாமல் புறக்கணிப்பதா.... அல்லது புறக்கணிக்ககூடாதா...? நீங்கள் வலியாக இருப்பீர்களா... அல்லது புறக்கணிப்பீர்களா...?
ஓர் ஆடம்பரம் என்று நாம் கருதும் ஒன்று மாப்பிள்ளை கழுத்தில் இருக்கிறது என்பதற்காக அல்லாஹ் இட்ட கட்டளையை மணமக்களுக்கு நடக்காமல் செய்ய காரணம் ஆக போகிறோமா..?  
அல்லது... நிக்காஹ் நடக்க வலீயாக, சாட்சியாக இருந்து அது முடிந்தவுடன்.... நாம் 'பாரக்கலாஹு லக...' சொல்லிவிட்டு... மாப்பிள்ளைக்கு மாலையை பற்றி... அது ஒழிக்கப்பட வேண்டியதைப்பற்றி ஒரு சிறு கிளாஸ் எடுத்துவிட்டு... கிளம்புவோமா...?ஆனால்...  

நானும் ஒரு நிக்காஹ்வை புறக்கனிப்பேன்.
எப்போது தெரியுமா...?
அதில்... ஹராம் இருந்தால்..! அதில் ஷிர்க் இருந்தால்..!
அல்லாஹ் திருமணம் செய்ய தடை கூறி ஹராமாக்கிய சொந்தத்துக்கு இடையில் (அண்ணன்-தங்கை, அப்பா-மகள், அம்மா-மகன்... இதுபோல...) நிக்காஹ் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிந்தே தெரிந்தே புரிந்தே நடந்தால்..!
அல்லாஹ் கூறிய "நிக்காஹ்வுக்கு அவசியமான வலி, சாட்சிகள், பெண்ணின் சம்மதம் போன்றவை, மஹர் (சிலர் மஹரும் தந்து அந்த சபையில் வரதட்சணையும் வாங்கி தருகிறார்கள். இது அப்பட்டமான அல்லாஹ்வின் மஹர் சட்ட அவமதிப்பு)  ஏதும் அவசியமில்லை" என்று பகிரங்கமாக கூறி... அல்லாஹ்வின் கட்டளை அறிந்தே தெரிந்தே புரிந்தே மீறப்பட்டால்...! 
நிக்காஹ் நடக்கும் இடத்தில்... சிலை வழிபாடு... சமாதி வழிபாடு... அக்னி வழிபாடு... போன்ற அல்லாஹ் தடை கூறிய.... ஷிர்க் இருந்தால்...!
இவை நிச்சயம் அல்லாஹ்வை கேலி செய்வது..! 
அவன் வசனங்களை மறுப்பது..! 
எனவே.... இதுபோன்ற நிக்காஹ்வை நான் நிச்சயமாக முடிந்தால் கையால் தடுப்பேன்..! முடியவில்லையேல் வாயால் தடுப்பேன்...! அதுவும் முடியவில்லையேல் அந்த நிக்காஹ்வை புறக்கணிப்பேன்..!
இப்படி செய்ய.... எனக்கு என்ன இஸ்லாமிய ஆதாரம்...???
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில்ஒன்று சேர்ப்பான்.- (அல்குர்ஆன் 4:140)
அப்புறம் எப்படி வீண் வெட்டி ஆடம்பர பித்அத் அனாச்சாரங்களை ஒழிப்பது என்றா கேட்கிறீர்கள்..? 
இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் சில, நன்மையை வேறு எங்கோ ஓரிடத்தில் (மேடை/டிவி) ஏவிவிட்டு... அந்த தீமை நடக்கும் இடத்தில் தீமையை தடுக்க வழி இருந்தும்... தடுக்காமல்... வெறும் 'ஈமானின் கடைநிலை புறக்கணிப்பால்' என்ன பெரிய பயன் ஏற்படுகிறது..? எதிர்ப்பில்லா தீமை இன்னும் பலம்தான் பெறுகிறது..!

தீயதை கண்டால்... நாம் கையால் தடுக்க வேண்டும் அல்லவா..? தனி மனிதனாக தடுத்தால் மண்டை உடையும்..! எனவே... ஊரில் அப்படி புறக்கணிக்கும் எண்ணம் கொண்டவர்கள் எல்லாம் ஒன்று கூடிச்சென்று... அவை நடக்கும் இடத்தில் ஜமாஅத்தாக சென்று அவற்றை நடக்க விடாமல் கையால் தடுக்க வேண்டும்..!
 
ஏன்...? முடியாதா..? இன்று ஒரு SMS இல் இலட்சம் பேரை திரட்டும் வல்லமை இயக்கங்களிடம் உள்ளதா... இல்லையா..? எனவே, கையால் தடுக்கும் கடமையும் இவர்களுக்கு சேர்ந்து விடுகிறது..! 
அப்படியான சாத்தியம்... இல்லையா...? சரி,  எங்கோ வேறொரு திருமணமே நடக்காத இடத்தில் மேடை போட்டு இதனை கடுமையாக எதிர்ப்பதை விடுத்து... அவை எல்லாம் நடக்கும் இடத்தில், களத்தில் இறங்கி நமது பிரச்சாரத்தை அழகிய முறையில் செய்யலாமே..? இப்படி தீமையை அது நடக்கும் இடத்திலேயே வாயால் தடுத்தால் என்ன..? அங்கே வந்த மக்களிடம் அவை குறித்து 'விழிப்புணர்வு பிட்நோட்டிஸ்' தந்தால் என்ன..?
இதுவும் முடியாதா...? சரி, மனத்தால் வெறுத்து... அவற்றை மட்டும் புறக்கணிக்கலாம்..! 'அது எப்படி முடியும்' என்கிறீர்களா..? 
முடியும்..! அதுவரை கூட்டமாக வீட்டுக்கு/மண்டபத்துக்கு/பள்ளிக்கு வெளியே நின்று விட்டு... நிக்காஹ் ஆரம்பிக்கும் போது மட்டும் அங்கே திடீர் என்டர் கொடுப்பது..! அது முடிந்து "அல்லாஹும்ம அள்ளிஃப்..." பித்அத் துவா ஸ்டார்ட் ஆகுதா... சத்தமாக எல்லாரும் சேர்ந்து.. "பாரக்கலாஹு லக.." ஓதிவிட்டு... 'திமு திமு' என்று எழுந்து இடத்தை காலி பண்ணி வெளியேறி வெளிநடப்பு செய்து விடுவது..!

பின்னர் மீண்டும் அந்த துவா முடிந்தவுடன்... உள்ளே சென்று வலிமாவில் கலந்து கொள்ள வேண்டும்..! எப்படி...? இதில்... அல்லாஹ் மறைமுகமாக
 சொல்வது... நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்!  அதாவது... அவர்கள் வேறு நல்ல ஆகுமான பேச்சுக்களில் ஈடுபட்டால்... அதே சபையில் சென்று கலந்து கொள்ளலாம் எனபதே..!
இப்படி செய்வது... இதொன்றும்  நமக்கு புதிது இல்லையே..? நாம் நமது மஸ்ஜித்களில் இதனைத்தானே தினம் செய்கிறோம்..! தொழுகை முடிந்து கூட்டுதுவா ஓதினால் எழுந்து வெளியே செல்கிறோம்..! தராவீஹ் எட்டாவது ரக்கத் முடிந்தால் அனைவரையும் விளக்கி வெளியே செல்கிறோம்..! பின்னர்... வித்ர் ஆரம்பிக்கும் பொது உள்ளே நுழைகிறோம்..! இதெல்லாம்தான் அங்கே உள்ள மற்ற மக்களுக்கு செயல் மூலம் தாவா..!

பராஅத்-மிஃராஜ்-தஸ்பீஹ் நஃபீல்-யாசீன்- துவா... மவ்ளூது-ஹத்தம்-பாத்திஹா-ராத்திபு... இவற்றில் எல்லாம் கலந்து கொள்வதில்லையே..! ஃபர்ளும் சுன்னத்தும் தொழுதுட்டு வெளிநடப்பு செய்கிறோமே..! இவற்றுக்காக பள்ளிவாசலையே புறக்கணித்தது இல்லையே நாம்..? இதேபோல... திருமணத்திலும் செய்ய முடியாதா, என்ன..?

இன்ஷாஅல்லாஹ்.... கடமையை நிறைவேற்றி... பித்அத் ஐ அனாச்சாரத்தை மட்டும் புறக்கணிக்க முடியும்..! நிச்சயம் முடியும்..
http://www.onlyoneummah.blogspot.in/2012/08/blog-post.html

--
*more articles click*
www.sahabudeen.com



கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts