லேபிள்கள்

வியாழன், 7 நவம்பர், 2013

சின்னக்குட்டிகள் சின்னக்குறைகள்! -குழந்தைகளின் பிரச்சனைகளைக் கையாள்வது எப்படி?

சின்னக்குட்டிகள் சின்னக்குறைகள்! -குழந்தைகளின் பிரச்சனைகளைக் கையாள்வது எப்படி?

குழந்தை-நான் கையை சுட்டுக் கொண்டேன்' என பரிதவிக்கவிட்டு, சட்டென கன்னம் குழி விழச் சிரித்து, உங்கள் முகத்தில் அசடு வழிவதைப் பார்த்து ரசிக்கும். சாப்பிட வைப்பதற்காக இதுவரை நீங்கள் சொன்ன பொய்களை சரம் கோர்த்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உங்கள் மீதே எறியும். செல்ல அடியை, சின்ன மிரட்டலை மற்றவரிடம் சொல்லி நியாயம் கேட்கும்.
அவர்கள் மீதே கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான வேலைகளை எல்லாம் வெகு முனைப்புடன் செய்து கொண்டிருக்கும். நீங்கள் அடிக்கக் கை ஓங்கும் போது கழுத்தைக் கட்டிக் கொள்வதிலிருந்து கன்னம் கடிப்பது வரை அவ்வளவு தொல்லைகள்எல்லாமே அன்பின் பதிவுகள்!
''
சில வாண்டுகள் 5 வயது வரை கை சப்பிக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு 7 வயதிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் தொடரும். இது போன்ற பிரச்னைகளை காலம் தாழ்த்திக் கவலைப்படுவதற்கு பதிலாக முன்பே கவனித்தால் சரி செய்து விடலாம்'' என்கிறார் குழந்தைகள் மருத்துவ நிபுணர் வினோதினி.
 ''தாயின் கருப்பைக்குள் இருக்கும்போதே குழந்தை கை சப்புகிறது. தனிமையை உணரும்போது, தாயின் கருப்பையில் பழகிய பழக்கத்தை வெளியுலகுக்கு வந்த பிறகும் தொடர்கிறது. பிறந்த சில மணி நேரங்களில் குழந்தை விரல்களை வாய்க்குள் வைத்து சப்புவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறார்கள். குழந்தைக்கு தூக்கம் வருகிற போது தாயின் அரவணைப்பும் தாலாட்டும் இல்லாவிட்டால் விரல் சப்பும் பழக்கம் ஏற்படுகிறது. சரியாக தூக்கம் பிடிக்காத போதும் விரல் சப்புவதை விரும்புகிறது.
வளரும் பருவத்தில் தாய், தந்தையின் பாசம், மற்ற குழந்தைகளுடன் விளையாடும் வாய்ப்பு, பேச்சுத் துணை தேவைப்படுகிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் கவனிக்க வேண்டும் என குழந்தை விரும்புகிறது. இது போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போதுதான் விரல் சப்பும் பழக்கம்
உண்டாகிறது. குழந்தையைப் புரிந்துகொண்டு அதன் ஏக்கத்தைப் போக்குவதற்கு மகிழ்ச்சியான சூழலை அவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும். விரல் சப்பும் போது விரல்களை வலுக்கட்டாயமாக இழுப்பது, உங்கள் மீது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். இப்பழக்கத்தை மெல்ல மெல்ல அன்பான அணுகுமுறையால்தான் மாற்ற வேண்டும்.
ஒரு வயது வரை விரல் சப்பும் பழக்கத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. உளவியல் ரீதியாக, இதன் மூலம் பிடித்தமான சூழலை குழந்தை உணருகிறது. ஒரு வயதுக்கு மேல் விரல் சப்பும் பழக்கத்தை மறக்க வைக்க பிடித்த விளையாட்டுகளை விளையாட குழந்தையை அனுமதிக்க வேண்டும். கண்களுக்கும் கைகளுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தும்படியான செயல்பாடுகளைத் தரலாம். கை எப்போதும் பிசியாக இருக்கும் போது, குழந்தைக்கு விரல் சப்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.
தூங்கப் போகும் நேரத்தில் குழந்தைக்கு விரல் சப்பத் தோன்றும். அப்போது அதன் கையில் புத்தகத்தைக் கொடுத்து கதை சொல்வது, அணைத்தபடி தூங்க வைப்பது, கைகளை, கழுத்தை கட்டிக் கொண்டு தூங்க வைப்பதுஇப்படி அரவணைப்பை வெளிப்படுத்தினால் குழந்தை மெல்ல மெல்ல அந்தப் பழக்கத்தை மறந்து விடும். சில நாட்கள் விரல் சப்பாமல் இருந்ததைப் பாராட்டி, பரிசளித்து ஊக்கப்படுத்தலாம். 4 வயது வரை விரல் சப்பும் பழக்கம் இருந்தால் குழந்தையின் தாடை பாதிக்கப்படும். பற்களிலும் ஈறுகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
முகத்தின் தோற்றமே மாறிவிடும். பள்ளிக்குச் செல்லும் போது ஆசிரியரோ, மாணவர்களோ கிண்டல் செய்தால் குழந்தை மனதளவில் பாதிக்கப்படும். தாழ்வு மனப்பான்மை உண்டாகும். கடுமையாக நடந்துகொள்வதற்கு பதிலாக எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இதைச் சரி செய்யலாம். படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதும் சாதாரண விஷயம்தான். அதுவே 3 வயதுக்கு மேல் நடக்கும் போது பிரச்னையாகிறது. குழந்தைக்கும் பெற்றோருக்குமான முரண்பாடு அதிகரிக்கும்போது இப் பழக்கம் இருக்கலாம்.
பெற்றோருக்கு சிறுவயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால், அது குழந்தைக்கும் தொடரும். வேசோபிரசன் என்ற ஹார்மோன் குறைபாட்டின் காரணமாகவும் இது ஏற்படலாம். சிறுநீர் குழாய் மற்றும் சிறுநீர் பையில் ஏற்படும் நோய் தொற்றின் காரணமாகவும் இருக்கலாம். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்குக் காரணம் உடற்கூறு பிரச்னைகளா என்பதை மருத்துவரின் ஆலோசனையுடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.
சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இரவு 7 மணிக்கு மேல் நீர் ஆகாரம் அதிகம் தரக்கூடாது. இரவில் பால் குடிப்பதைத் தவிர்த்து திட உணவாகத் தர வேண்டும். அலாரம் வைத்து குழந்தையை எழுப்பி, தூக்கத்தின் இடையில் சிறுநீர் கழிக்கப் பழக்கப்படுத்தலாம். அறையின் வெப்ப நிலை மிகக்குறைவாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை சரி செய்யலாம். குழந்தை, தாய்ப்பால் மறக்கும் போதும் பல்வேறு மன பாதிப்புகளை சந்திக்கிறது. இதனால் தாய்ப்பால் மறக்கடிக்கச் செய்வதிலும் சில வழி முறைகளைக் கடை பிடிக்க வேண்டும்.
6 மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம். அதன் பின் திட உணவுகளை பழக்கப்படுத்தும் போது தாய்ப்பால் கொடுக்கும் அளவைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். திடீரென தாய்ப்பாலை நிறுத்தினால் குழந்தை தனித்து விடப்பட்டது போல உணரும். பால் குடிப்பதன் மீதான ஆர்வம் அதிகரித்து அடம் பிடிக்கும். வலுக்கட்டாயமாக தாய்ப்பாலை நிறுத்தும் போது குழந்தைக்கு செப்பரேஷன் ஆங்சைட்டி என்ற மனக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் தாய்ப்பாலை நிறுத்தும் போது குழந்தைகள் மீது தாயின் அன்பும் அரவணைப்பும் அதிகமாக வேண்டும்.
இரவு நேரங்களில் தாய்ப்பாலுக்குப் பதிலாக புட்டிப்பால் தரலாம். தாய்ப்பால் குடிக்காத போதும், 'உன்மீது என் அன்பு குறைவதில்லை' என்ற உணர்வை தாய் குழந்தைக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது அவசியம். குழந்தையிடம் காணப்படும் இது போன்ற சிறுசிறு குறைபாடுகளைக் களைய முதல் தேவை தாய் மற்றும் வீட்டில் உள்ள மற்றவர்களின் அன்பும் கவனிப்பும். அந்தக் குறைபாட்டில் இருந்து வெளியே வர குழந்தைக்கு எளிய வழிகளை அறிமுகப்படுத்த வேண்டும். அதிலிருந்து வெளியே வரும்போது பாராட்டிப் பரிசளிக்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதன் மூலம் விரைவில் இந்தக் குறைபாடுகளை சரி செய்துவிட முடியும். கண்டுகொள்ளாமல் விட்டால் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ள இந்தக் குழந்தைகள் சமூகரீதியான சிக்கல்களுக்கு ஆளாகும் இக்கட்டான சூழல் ஏற்படும். குழந்தை, எல்லோராலும் பாராட்டப்பட, தனது முழுத் திறன்களையும் அறிந்து கொள்ள, அதன் சிறு குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பல்லவா!'' என்று விரிவாகப் பேசுகிறார் டாக்டர் வினோதினி.
http://www.myoor.com/handling-childrens-problems/

--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts