லேபிள்கள்

திங்கள், 15 அக்டோபர், 2018

நாமினி Vs வாரிசு: சொத்து யாருக்குப் போய்ச் சேரும்?

 நண்பர் ஒருவர் பெருந்தொகை ஒன்றை வங்கியில் 'டெபாசிட்' செய்திருந்தார். அந்த டெபாசிட்டிற்கு தனது இரண்டாவது மனைவியை நாமினியாக நியமித்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்துபோய்விட, அந்த பணம் யாருக்கு போய்ச்சேர வேண்டும் என்பதில் பிரச்னை வந்துவிட்டது. நாமினியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது மனைவிக்கு சேரவேண்டுமா, அல்லது முதல்மனைவிக்கும் அவர் மூலம் பிறந்த வாரிசுக்கும் போய்ச்சேர வேண்டுமா என்பதில் பயங்கர பிரச்னை! ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாத குறை!

இந்த பிரச்னை இப்படி என்றால் இன்னொரு நண்பரின் குடும்பத்துக்கு நிகழ்ந்தது வேறுமாதிரியானது. தனது குழந்தைகள் வயதில் மிகச் சிறியவர்களாக இருக்கிறார்களே என நினைத்து, தனது தூரத்து உறவினர் ஒருவரை நாமினியாக எல்லாவற்றுக்கும் நியமித்திருந்தார் அவர். தனக்கு ஏதாவது நேர்ந்தால் உறவினர் மூலமாக தனது முதலீடுகள் குழந்தைகளுக்கு கரெக்ட்டாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு.
ஆனால் நடந்தது வேறு!

நண்பரின் மறைவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்காமல் தானே சொந்தம் கொண்டாடப் பார்த்தார் அந்த உறவினர்.

இப்படி பிரச்னைகள் எழுவதற்கு காரணம் நாமினி குறித்த தெளிவான பார்வைகள் இல்லாததுதான். ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரை நாமினியாக நியமித்தாலோ, அல்லது யாரையுமே நாமினியாக நியமிக்காவிட்டாலோ, சம்பந்தப் பட்டவரின் வாரிசுகள் அந்த சொத்துக்களைப் பெறுவதில் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. நாமினிக்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகள் என்ன, கடமைகள் என்ன, வாரிசுகளுக்கு உள்ள உரிமைகள் என்ன என்பது பற்றி வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டோம்...
''ஒருவர் ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரை நாமினியாக நியமித்துவிட்டு இயற்கை எய்திவிட்டார் என்றால், அவரது முதலீடுகள், சேமிப்புகள், பணிநலன்கள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? வாரிசுகளிடமா அல்லது நாமினியிடமா என்பது முக்கியமான கேள்வி.

வாரிசுகளிடமிருந்து எவ்வித ஆட்சேபனையும் இல்லாதபோது பலன்/முதலீடு நாமினியிடம் ஒப்படைக்கப் படும். ஒருவேளை வாரிசுகள் ஆட்சேபனை செய்யும் பட்சத்தில், நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவு பெற்று வருபவரிடமே ஒப்படைக்கப்படும்.

ஒருவர் நாமினியை நியமிக்காமலே மறைந்து விட்டால் பிரச்னைகள் எதுவும் இன்றி வாரிசுகளுக்கு அதாவது மனைவி, குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இவர்களில் யார் பொருத்த மானவர்களோ அவர்களுக்குப் போய்விடும். பொதுவாக, நாமினி என யாரையும் நியமிக்காதபோது வாரிசுச் சான்றிதழ் (legal heir certificate) அடிப்படையில் சொத்துக்களை/முதலீட்டைத் திருப்பி கொடுப்பார்கள். ஆனால், சில சூழ்நிலைகளில் நீதிமன்றத்தின் மூலம் வாரிசுச் சான்றிதழ் (succession certification) பெற்று அதன் மூலம்தான் பலனைப் பெற முடியும்.

வாரிசு இருக்கும்போது மூன்றாவது நபரை நாமினியாக நியமிக்கலாமா? என்கிற கேள்வியும் பலருக்கு எழக்கூடும். வாரிசுகள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் இந்த கேள்வி எழுவது நியாயமே. யாரை நாமினியாக நியமிக்க வேண்டும், யாரை நாமினியாக நியமிக்கக் கூடாது என எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், ரத்த உறவு முறை, பெற்றோர் அல்லது தாரத்தை (spous) நாமினியாக நியமிப்பதுதான் நடைமுறை.

மூன்றாம் நபரை நாமினியாக நியமிக்கும்போது, சட்டரீதியான கேள்வியையும் சந்தேகங் களையும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே எழுப்பும். உதாரணமாக, ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து உறவினரல்லாத மூன்றாம் நபர் ஒருவரை நாமினியாக நியமிக்கும்போது, இந்த சந்தேகம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால் நாமினி மீது நிச்சயமாக சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சட்டரீதியாக இப்படி ஒரு சந்தேகம் எழும்பட்சத்தில் நாமினியிடம் பணத்தைக் கொடுக்காமல், வாரிசுகளிடமே ஒப்படைக்கப்படும்.

சரி, ஏதோ ஒரு காரணத்திற்காக ரத்த சம்பந்தமில்லாத ஒருவரை நாமினியாக நியமித்து விட்டு மறைந்துவிடுகிறார் ஒருவர். அவர் விட்டுச் சென்ற சொத்துக்களை நாமினியாக இருப்பவர் அபகரிக்க நினைத்தால், அதை வாரிசுதாரர்கள் எப்படி தடுப்பது? இந்த பிரச்னையில் வாரிசுதாரர்களின் உரிமை என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.

சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட நாமினி, அதை வாரிசுகளிடம் கொடுக்க மறுத்தாலோ அல்லது அபகரித்தாலோ, நீதிமன்றத்தை நாடலாம். இறந்தவரின் வாரிசு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதன் மூலம் இறந்தவரின் சொத்துக்களை, பலனை அல்லது பணத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்க நாமினிக்கு நீதிமன்றம் உத்தரவிடும்.

ரத்த சம்பந்தமில்லாத ஒருவர் என்னதான் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தாலும், இறந்தவரின் சொத்தில் அவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொத்துக்களையோ, பணத்தையோ அல்லது பலனையோ வாரிசுகளிடம் ஒப்படைக்கும் உரிமையும் கடமையும் மட்டுமே அவருக்கு உண்டு!

ஒருவருக்கு ஒரே ஒரு மகன் என்றால் வாரிசு யார் என்கிற பிரச்னை வராது. ஆனால், நான்கைந்து மகன்கள் இருந்தால், இதில் யாரை நாமினியாக நியமிப்பது என்கிற கேள்வியையும் பலர் கேட்கிறார்கள். ஒரே நபர் வாரிசாகவும், நாமினியாகவும், இருக்கும்போது பிரச்னை ஏதும் இல்லை.

ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வாரிசுகளாக இருந்து, அதில் ஒருவர் மட்டும் நாமினியாக நியமிக்கப்படும்போது, குடும்பத்தின் மற்ற வாரிசுகள் ஆட்சேபனை செய்யவில்லை என்றால், நாமினியாக உள்ள வாரிசே சொத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும். மற்ற வாரிசுகள் ஆட்சேபனை செய்தால் (அதாவது, தங்களுக்கு பங்கு கிடைக்காது என்கிற நிலைமையில்) நீதிமன்றத்தை நாடலாம்.

ஒருவேளை நாமினியாக நியமிக்கப்பட்டவர் இறந்து விட்டாலோ அல்லது பித்துப் பிடித்திருந்தாலோ அது நாமினியாக யாரையும் நியமிக்கப்படாததற்கு சமம். நாமினி நியமிக்கப்படாத போது நேரடியாக வாரிசுகளிடம் சொத்துக்கள், பணம் அல்லது பலன்கள் கொடுக்கப்படும். அதேபோல திருமணத்துக்கு முன் செய்திருந்த டெபாசிட்டுகள் மற்றும் பாலிசிகளில் திருமணத்துக்கு பின் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரை நாமினியாகச் சேர்ப்பதும் குழப்பங்கள் வராமலிருக்க உதவும்.''

கஷ்டப்பட்டு சம்பாதிப்பது வாரிசுகள் அனுபவிக்கத்தான். அதற்கு சிக்கலில்லாத வகையில், நடந்து கொள்ளும் நேர்மையானவர்களையே நாமினியாக நியமனம் செய்யுங்கள்.

குறிப்பு: இங்கே சொத்து என குறிப்பிடப்படுவது அசையும் சொத்து மட்டுமே; அசையா சொத்து அல்ல.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts