லேபிள்கள்

செவ்வாய், 13 மே, 2014

சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம்

சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம்

இந்த வெக்கையுக்கையும் கூல் தண்ணி குடிக்கேலாத பாவி நான்".
சூரியன் தன் உக்கரத்தை முழுவீச்சில் காட்டிய கோடையின் மதியத்தில் வேர்வை முத்துக்கள் கழுத்திலும் வெற்றியிலும் பளபளக்க வந்திருந்தாள் அந்த நடுத்தர வயது மாது.

"கூல் தண்ணிக்கு மாத்திரமோ..'"என நான் கேட்க முதலே அவள், "கூலாகவும் குடிக்க முடியவில்லை, ஹொட்டாகவும் முடியவில்லை. தேசிக்காய்தண்ணி குடிக்கிறதை அடியோடைவிட்டு பல நாளாச்சு" என்றாள்.
காரணம் 'பல்லுக் கூசுறது தாங்க முடியவில்லை'; என்றாள்

தனக்கு எவை எவற்றால் பற் கூச்சம் ஏற்படுகிறது என்பதை அவளது அனுபவம் அவளுக்குத் தெளிவாகக் கற்றுத் தந்திருக்கிறது. அவள் கூறியது போலவே குளிரான, சூடான, புளிப்;பான மற்றும் இனிப்பான பானங்களும் உணவு வகைகளும் பற் கூச்சத்தைத் தூண்டி விடக் கூடியவைதான்.

யாருக்கு வருகிறது

பற் கூச்சம் நாங்கள் அடிக்கடி பார்க்கிற பிரச்சனைகளில் ஒன்று. எட்டுப் பேரில் ஒருவருக்கு பற்கூச்சம் இருப்பதாக அண்மையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வு கூறுகிறது. எட்டில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் பல்லுக் கூசிக்கொண்டே இருக்கிறது என்று அர்த்தமில்லை. அடிக்கடியோ இடைக்கிடையோ ஏற்பட்டு மறைந்து மீண்டும் தோன்றுகிறது
.
குழந்தைகளிலும் பதின்ம வயதினரிடையேயும் காண்பது குறைவு. வளர்ந்தோரில் இளவயதினரிடையேதான் அதிகம் இருக்கிறது. அதிலும் 18 முதல் 44 வயதானவர்களுக்கு வயதானவர்களை 3.5 மடங்கு அதிகமாகத் தோன்றுகிறதாம்.

ஆண்களைவிட பெண்களிடையே ஏற்படுவது அதிகம். ஆண்களைவிட 1.8 மடங்கு பெண்களில் அதிகம் என ஓரு ஆய்வு கூறியது. ஆய்வு பற்றிக் கருத்துக் கூறிய ஆய்வாளர்களில் ஒருவரான
Cunha-Cruz    சற்றுக் குசும்பு மனிதர் போலிருக்கிறது. 'உண்மையில் பெண்களுக்கு பற்கூச்சம் அதிகமிருந்ததா அல்லது பெண்கள் வலிகள் பற்றிச் சொல்வதில் அதிக அக்கறை உடையவர்களாக இருந்தார்களா என்பது தெளிவில்லை என்றார்.

இவற்றை விட தமது பற்களை வெண்மையாக்குகிறேன் எனச் சுய வைத்தியம் செய்பவர்களிடையே பற் கூச்சம் தோன்றுவது அதிகம்.

Tooth whitening அவதானம் தேவை
பற் கூச்சம் ஒரு கடுமையான நோயல்ல என்ற போதும் அதன் காரணமாக சிலவகை உணவுகளை அவர்களால் உண்ண முடியாமல் தவிர்க்க நேர்வதனால் அது பற்றி அக்கறை எடுக்க வேண்டி நேர்கிறது.

எவ்வாறு ஏற்படுகிறது

பல்லைச் சுற்றி அதன் பாதுகாப்பிற்காக அதை மூடி இருக்கும் எனாமலுக்கு
(Enamel) ஏதாவது சேதம் ஏற்படும்போதே பெரும்பாலும் எற்படுகிறது.

அல்லது பல்லிற்கும் முரசிற்கும் இடையே, இடைவெளி ஏற்படாது தடுக்கும் மென்சவ்வாகிய சிமென்டம்
(Cementum) என்பதில் பாதிப்பு ஏற்படும் போதும் பற்கூச்சம் ஏற்படுகிறது. முரசு கரையும் போது அல்லது முரசில் வேறுநோய்கள் ஏற்படும்போது இவ்வாறான இடைவெளி ஏற்படுகிறது. முரசிற்குள் இருக்கும் பல்லின் மீதிபகுதியான பல்வேரானது மேற்கூறிய எனாமலால் பாதுகாக்கப்பட இல்லை.

முரசு கரைந்து வேர் வெளிப்படாலும் பல் கூசும்.

மேற் கூறிய இரண்டும் பல்லின் உட்பகுதியில் இருக்கும் நுண்ணிய குழாய்களைத் தாக்குகின்றன. அதனால் பல்லின் நடுப்பகுதியிலுள்ள நரம்புகள் தூண்டப்பட்டு பற்கூச்சம் ஏற்படுகிறது.
 

பற்சொத்தை பற்களில் உடைவு போன்றவற்றால் எனாமலுக்கு ஏற்படும் சேதத்தால் வலி ஏற்படுகிறது. இது பற் கூசச்ம் அல்ல. பலர் இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வதில்லை.

பற் கூச்சம் உலகளாவியது. சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி எவரையம் தாக்கக் கூடியது. அதிக அமிலத்தன்மையுள்ள உணவு மற்றும் பானங்;களை உட்கொள்பவர்களிடம் அதிகமாயிருக்கலாம். எனவே, வைன், மதுபானம் அதிகம் எடுப்பவர்களிடையே கூடுதலாகக் காணப்படுகிறது.

காரணங்கள் என்ன?

முரசிற்கு அருகே பற்சொத்தை ஏற்பட்டால் கூச்சம் உண்டாவதற்கான சாத்தியம் அதிகம். அதற்குக் காரணம் நரம்புகள் அருகே இருப்பதுதான்.

முரசு கரைதல் பற்றி ஏற்கனவே சொன்னோம். முரசு கரைதலுக்கு நீரிழிவு ஒரு முக்கிய காரணமாகும் ஆயினும் உணவு உண்டபின் வாயைக் கழுவாதிதிருத்தல், ஒழுக்கான தினமும் பிரஸ் பண்ணாமை போன்றவற்றால் பல் முரசு ஆகியவற்றின் சுகாதாரத்தைப் பேணாதிருப்பது மற்றொரு முக்கிய காரணமாகும்

ஏற்கனவே கூறியதுபோல வாய் சுகாதாரத்தைப் பேணாவிடில் பற்களுக்கிடையே காரை
(Tartar) படியும். இது உள்நோக்கிப் பரந்து முரசைக் கரைய வைக்கும்.

சில பிள்ளைகள் இரவில் பல்லை நொறுமுவார்கள். சிலர் கோபத்தில் பல்லை நொறுமுவார்கள். அவ்வாறு பல்லைக் கடித்தல், நொறுமுதல் போன்றவற்றால் பல்லின் எனமாலில் தேய்மானத்தை ஏற்படுத்தி பற்கூச்சத்திற்கு காரணமாகும்.

பல்லை வெண்மையாக்குவுதற்கு உபயோகிக்கும் இரசாயனங்கள் மற்றும் பற்பசைகளும் பற்கூச்சத்திற்கு காரணமாகும்.

சில வாய் கொப்பளிக்கும் மருந்துகள்
 (Mouth washes) அசிட்தன்மை மிக்கவை. அவற்றைத் தொடர்ந்து உபயோகித்து வரும்போது டென்னிடன் பகுதி சேதற்று பற்கூச்சம் ஏற்படுவதுண்டு.
நாம் உண்ணும் பல உணவு மற்றும் பான வகைகளும் அமிலத்தன்மை வாய்ந்தவை. உதாரணமாக எலுமிச்சை அன்னாசி போனற் புளிப்புத்தன்மையுள்ள பழங்கள், தக்காளி, ஊறுகாய், தேநீர் போன்றவையும் எனாமலை சேதமாக்கலாம்.

சில பற்சிகிச்சைகளாலும் பற்கூச்சம் ஏற்படுகிறது. இவை தவிர்க்க முடியாதவை. பல்லுக் கிளீன் பண்ணுதல், பல் முடியை
Crown replacement மீளமைத்தல், போன்றவற்றால் ஏற்படும் பற் கூச்சம் தற்காலிகமானது. சில நாட்களில் நீங்கிவிடும்.

பல் துலக்க ஏன் இந்த ஆவேசம்
சிலர் தமது பற்களை பிரஜ் கொண்டு கடுமையாகத் துலக்குவதுண்டு. இவ்வாறான கடுமையான பிரஷிங் பற் கூச்சத்தை ஏற்படுத்தும் என்பதில் உண்மையில்லை.

பற்கூச்சத்தைத் தடுக்க நீங்கள் என்ன செய்யலாம்.

முக்கியமான விடயம் உங்கள் வாய்ச் சுகாதராத்தைப் பேணுவதுதான். தினமும் இரண்டு வேளைகளாவது பிரஸ் பண்ணுங்கள். எதைச் சாப்பிட்டாலும் வாயை நன்கு அலசிக் கொப்பளியுங்கள். இனிப்பான பானங்கள் குடித்த பின்னரும் தண்ணீர் குடிப்பதின் மூலம் வாயைச் சுத்தப்படுத்தலாம்.

வாயை அலசிக் கழுவுவது அவசியம்
மாறாக புளிப்புள்ள பானங்களான தேசிச்சாறு, தோடம்பழச்சாறு, வைன் போன்றவற்றைக் குடித்த பின்னர் உடனடியாக தண்ணீர் அருந்துவது நல்லது. இதன் மூலம் அவற்றிலுள்ள அமிலத்தன்மை பற்களைத் தாக்காது தடுக்கலாம்.

அத்துடன் மேற் கூறிய பானங்களை அருந்திய 10-15 நிமிடங்களுக்கு பிரஸினால் பல் துலக்குவதைத்த தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஆயினும் புளிப்பான உணவுகளையும் பானங்களையும் தவிர்ப்பது பற்கூச்சம் உள்ளவர்களுக்கு நல்லதாகும்.

கடுமையாக பிரஸ் பண்ணினாலும் பல் தேய்வதற்கான ஆதாரங்கள் இல்லை என்றபோதும் சரியான பல் துவக்கும் முறையைக் கடைப்பிடிப்பது அவசியம். பிரஸ்சை மேல் கீழாக அசைத்துப் பல் துலக்குவதே நல்லது. பக்கவாட்டிற்கு தேய்ப்பது நல்லதல்ல.
பிரஸ் மென்மையாக இருப்பது அவசியம். கடுமையான பிரஸ்கள் எனாமலுக்கு சேதத்தை ஏற்படுத்தி பற் கூச்சத்தை மோசமாக்கலாம்.
தூக்கத்தில் பல் நொறுமுபவர்கள் தமது பற்களைப் பாதுகாப்பதற்கான சாதனங்கள்
(Mouth guard) கிடைக்கின்றன.

மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல்
பற் கூச்சமுள்ளவர்களுக்கென sensodyne,  Colgate's Sensitive Pro-Relief போன்ற விசேட பற்பசைகள் கிடைக்கின்றன. அவற்றைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாம். ஓன்று சரிவராவிட்டால் மற்றொரு பிராண்டை உபயோகிப்பதில் தவறில்லை. பொதுவாக புளொரின் கலந்த பற்பசைகள் பற்கூச்சம் உள்ளவர்களுக்கு நல்லது.

ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது பற் கூச்சமுள்ளவர்கள் தமது பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts