லேபிள்கள்

செவ்வாய், 3 நவம்பர், 2020

செல்வங்களில்சிறந்த செல்வம்

செல்வங்களில் சிறந்த செல்வம் !!!
அல்லாஹ்வின் திருப்பெயரால் .........
நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்" என்று திருக்குர்ஆன் (17:36) குறிப்பிடுகிறது.

செல்வங்களில் சிறந்த செல்வம்
'
இறைவன் உனக்கு தந்தவற்றில் இருந்து உனது மறுமை வாழ்வை தேடிக்கொள்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.



"(
உன்னிடம் இருக்கும் பொருட்களை எல்லாம் அல்லாஹ்வே உனக்குக் கொடுத்தான். ஆகவே) அல்லாஹ் உனக்கு அளித்திருப்பதில் (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக் கொள். இம்மையில் (தானம் செய்து நீ தேடிக் கொண்டது தான்) உன்னுடைய பாகம் (என்பதை) நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு(க் கொடுத்து) உதவி செய்தவாறு அதனை(க் கொண்டு பிறருக்கு) நீயும் (தானம் செய்து) உதவி செய். பூமியில் நீ விஷமம் செய்ய விரும்பாதே! ஏனென்றால், விஷமிகளை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை". (திருக்குர்ஆன் 28:77)

இறைவன் நமக்கு கொடுத்த செல்வத்தில் இருந்து, கஷ்டப்படும் ஏழைகளுக்கு தர்மம் செய்து, இறைவனின் திருப்தியையும், மறுமை வாழ்வின் பலனையும் அடைந்து கொள்ள வேண்டும். அதே வேளையில், இந்த உலகத்தின் நமது பங்கையும் மறந்துவிடக்கூடாது. அதாவது, நமக்குரிய வாழ்வாதாரம், உழைப்பு, சேமிப்பு, செலவு இவற்றிலும் குறிப்பாக நமது உடல் ஆரோக்கியம் ஆகியவைகளையும் முழுமையாகப் பெற்றிட வேண்டும்.



உடல் ஆரோக்கியம் பெற்றவர் உழைப்பின் உயர்வால் பொருட் செல்வங்களை சம்பாதிக்கலாம்; திருமணத்தின் வாயிலாக அழகிய குழந்தைச் செல்வங்களை பெற்றுக்கொள்ளலாம்; ஆன்மிக வணக்க வழிபாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம்; அறவழியில் தர்மம் செய்து கொள்ளலாம்; அனைத்துவிதமான நல்லறங்களிலும் முழுவீச்சில் பங்கு கொள்ளலாம்.

இவற்றை எல்லாம் நிறைவேற்றுவதற்கு அடிப்படையான ஒற்றை அம்சம் உடல் ஆரோக்கியமே. எனவேதான், நபி (ஸல்) அவர்கள், 'இறைவனிடம் உடல் ஆரோக்கியத்தை வேண்டிக்கொள்ளுங்கள்' என்று தமது தோழர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து அபூபக்கர் (ரலி) அறிவிப்பதாவது:

"
ஒருதடவை நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்த மேடை மீது ஏறினார்கள்; பிறகு அழுதார்கள்; பின்பு, 'இறைவனிடம் மன்னிப்பையும், உடல் ஆரோக்கியத்தையும் வேண்டிக்கொள்ளுங்கள்; ஏனென்றால், இறை நம்பிக்கைக்குப் பிறகு, உடல் ஆரோக்கியத்தை விட சிறந்த செல்வம் எவருக்கும் கொடுக்கப்படவில்லை' என நபி (ஸல்) கூறினார்கள்" (நூல்: திர்மிதி, இப்னுமாஜா)

மனிதனுக்கு இறை நம்பிக்கையும், உடல் ஆரோக்கியமும் இருப்பது அவசியம். நோய் இல்லாமல் இருப்பதே நிறைவான செல்வம். இறைவனிடம் செல்வத்தை அதிகம் வேண்டுவதைவிட உடல் ஆரோக்கியத்தை அதிகம் அதிகம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

"
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு விஷயத்தை கற்றுத் தாருங்கள்; அதைக் கொண்டு நான் இறைவனிடம் பிரார்த்திப்பேன்' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீங்கள் இறைவனிடம் உடல் ஆரோக்கியத்தை வேண்டுங்கள்' என்றார்கள். சில நாட்கள் கடந்தன. மீண்டும் நான் நபியவர்களிடம் வந்து 'எனக்கு ஏதேனும் ஒரு விஷயத்தை அறிவித்துத் தாருங்கள்; அதை வைத்து நான் எனது இறைவனிடம் கேட்கிறேன்' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'எனது பெரிய தந்தையே, இறைவனிடம் இரு உலகத்திலும் உடல் ஆரோக்கியத்தை கேட்டுக் கொள்ளுங்கள்' என்றார்கள். (நூல் : தப்ரானீ)

'
உடல் சுகத்தை விட இறைவனுக்கு மிகவும் பிடித்த வேறெதையும் இறைவனிடம் கேட்டுவிட முடியாது' என்பது நபிமொழியாகும். (நூல்: திர்மிதி)

இறைவன் கொடுத்த அருட்கொடை

"
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகளின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1) ஆரோக்கியம், 2) ஓய்வு" என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி)

இத்தகைய இறைவனின் அருட்கொடை களைப் பற்றி நாளை மறுமையில் மனிதர்கள் விசாரிக்கப்படுவார்கள். ஆகையினால் உடல் ஆரோக்கியத்தை முடிந்தளவுக்கு பேணிக்கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

'(
உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்'. (102:8)

இந்த வசனத்திற்கு திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் இப்னு அப்பாஸ் (ரலி) அளித்துள்ள விளக்கத்தில், 'இறைவனின் அருட்கொடைகள் என்றால் உடல் ஆரோக்கியம், கேட்கும் திறன் ஆரோக்கியம், பார்வைத்திறன் ஆரோக்கியம் ஆகும். இறையடியார்கள் இவற்றை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்று நாளை மறுமையில் இறைவன் அவர்களிடம் விசாரிப்பான்', என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

"
நாளை மறுமையில் அடியானிடம் முதன்முதலாக கேட்கப்படும் அருட்கொடை யாதெனில் 'நாம் உமக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்கவில்லையா? மேலும் நாம் உமக்கு குளிர்ந்த நீரை புகட்டவில்லையா?' என்பதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்" என்பது இன்னொரு நபி மொழியாகும். (நூல் : திர்மிதி)

"
நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்" என்று திருக்குர்ஆன் (17:36) குறிப்பிடுகிறது.

உணவே வாழ்க்கையாக மாறிவிடக் கூடாது. வாழ்க்கையில் ஒரு அம்சமாக உணவு அமைந்திட வேண்டும். உடல் உழைப்பும், உட்கொள்ளும் உணவும் சரிசமமாய் அமைய வேண்டும்.

வயிற்றுப் பகுதியை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, மூன்றில் ஒரு பகுதி மட்டுமே உணவும், மீதி ஒரு பகுதி நீரும், மீதி ஒரு பகுதி மூச்சு விடுவதற்கு காலியாகவும் வைத்து உணவு உட்கொள்ளும் முறையை கடைப் பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உடலில் நோய் ஏற்படாது. உடல் சுகமாகவும், சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் அமையும். இது இஸ்லாமிய உணவு முறையாகும். இது குறித்த நபிமொழியைக் காண்போம்:

"
ஆதமுடைய மகன் நிரப்பும் பைகளில் வயிற்றைவிட ஒரு கெட்ட பை வேறெதுவும் இல்லை. ஆதமுடைய மகனின் முதுகுத்தண்டை நிலைபெறச் செய்வதற்கு கொஞ்சம் உணவே போதுமானது. கண்டிப்பாக மூன்றில் ஒரு பகுதி உணவும், மீதி ஒரு பகுதி நீரும், மீதி ஒரு பகுதி மூச்சு விடவும் அமைந்திட வேண்டும் என நபி (ஸல்) கூறினார்கள்" (அறிவிப்பாளர்: மிக்தாத் பின் மதீகர்ப் (ரலி), நூல்:அஹ்மது, திர்மிதி)

மாமேதை லுக்மான் (அலை), தமது மகனுக்கு வழங்கிய உபதேசங்களில் மிக முக்கியமானது: "எனதருமை மகனே, குடல் பகுதி நிரம்பிவிட்டால், சிந்தனை தூங்கிவிடும்; மதிநுட்பம் குறைந்துவிடும்; வணக்கம் புரிவதை விட்டும் உறுப்புக்கள் அமர்ந்துவிடும்" என்பதாகும்.

இன்றைய மனிதர்கள் நடமாடும் வியாதிக் கூடங்களாக மாறிவிட்டார்கள். ஒருகாலத்தில் உணவை 'சுவை' அறிந்து சாப்பிட்டோம். இன்று 'சுகர்' அறிந்து சாப்பிடுகிறோம். உணவே மருந்து என்பது மாறி, மருந்தே உணவாக ஆகிவிட்டது. இந்த அவல நிலை மாற, இஸ்லாமிய உணவு முறைகளை கடைப் பிடிக்க வேண்டும். ஆரோக்கியம் தரும் உணவுகளை உட்கொள்ளவேண்டும்.

உடலுக்கு கேடு விளைவிக்கும் விதவிதமான சமையலையும், துரிதவகை உணவு களையும் தவிர்த்துக் கொண்டால் முழு உடல்நலத்துடனும், உள்ள சுகத்துடனும் வாழலாம். உடல் நலமுடன் நாமும் வாழ்வோம்! பிறரையும் வாழவைப்போம்!

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுன். 

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts