லேபிள்கள்

புதன், 3 அக்டோபர், 2018

வருமான வரி நோட்டீஸ் வந்தால் ?

எல்லோரும் தங்கள் வருவாய் கணக்கை வருமான வரித் துறைக்கு சமர்ப்பிக்க தயாராக வேண்டும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் நமக்கெல்லாம் வருமானமாவது வரியாவது என்று சும்மா இருந்துகொண்டிருப்போம். அப்போதுதான் வருமான வரித் துறையிடமிருந்து திடீர் நோட்டீஸ் வரும்.
நோட்டீஸை பார்த்ததும் நமக்கே தெரியாமல் இவ்வளவு வருமானம் நம் கணக்கில் எப்படி வந்தது, எங்கே நாம் தவறு செய்தோம், அச்சச்சோ அபராதம், சிறை தண்டனை இதெல்லாம் இருக்குமோ? என்று பயந்து பதற ஆரம்பித்துவிடுவோம். ஆனால், நாம் செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் சரியாகச் செய்தாலே இது போன்ற நோட்டீஸ் பிரச்னைகளில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும். 

வருமான வரித் துறையிலிருந்து இதுபோன்ற நோட்டீஸ்கள் வரும் சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும், எதற்காகவெல்லாம் நோட்டீஸ் அனுப்பப்படும், இது போன்ற நோட்டீஸ்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகளை சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் எஸ்.சதீஷ்குமாரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

"நோட்டீஸ் வந்ததும் முதலில் அலட்சியப் படுத்தாமல் அதை முழுமையாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள பெயர், பான் எண் போன்ற விவரங்கள் உங்களுடையது தானா என்பதைத் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். 

பொதுவாக, இதுபோன்ற விவகாரங்களை வருமான வரித்துறையைச் சார்ந்த உளவு மற்றும் குற்றப் புலனாய்வு இயக்குநரகம்தான் கையாண்டு வருகிறது. வரி செலுத்துவோர், வரி செலுத்தாதவர் என்ற பாரபட்சமில்லாமல் அதிக மதிப்பில் பணம் மற்றும் சொத்துப் பரிவர்த்தனை செய்யும் அனைவரின் வருமானம் குறித்த விவரங்களும் இந்தத் துறையிடம் இருக்கும். நமக்கே தெரியாத நம்முடைய முதலீடு, சேமிப்பு போன்றவை மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த விவரங்களும் அந்தத் துறையிடம் இருக்கும். அதனால் வரியிலிருந்து தப்பிக்க முடியாது. 

எதற்கெல்லாம் நோட்டீஸ் வரும்?
வருமான வரி செலுத்தும் நிலையில் உள்ள ஒருவர் தன்னுடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டாலும், வரி செலுத்த வேண்டிய மதிப்பில் உள்ள வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருந்தாலும் நோட்டீஸ் அனுப்பப்படும். கட்ட வேண்டிய வருமான வரிக்கான வட்டியும் செலுத்துவதுடன் கட்டாயம் அபராதத்தையும் கட்ட வேண்டியிருக்கும். நீங்கள் பெறும் வருமானத்துக்கு வரி பிடிக்கப்பட்டு இருந்தாலும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் நோட்டீஸ் அனுப்பப்படும். 

அதேபோல் கீழே தரப்பட்டுள்ள அதிக மதிப்பிலான பணம் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளை நாம் கணக்கில் காட்டா விட்டாலும் நோட்டீஸ் அனுப்பப்படும். 

* ரூ.30 லட்சத்துக்கும் மேல் நிலமோ, வீடோ வாங்கினாலும் விற்றாலும்
* சேமிப்புக் கணக்கில் வருடத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பரிவர்த்தனை இருந்தால்

* ஒரே நாளில் ரூ.50,000-க்கும் அதிகமாக அடிக்கடி டெபாசிட் செய்தால்

* வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக கிரெடிட் கார்டுக்குக் கட்டணம் கட்டியிருந்தால்

* நிரந்தர இருப்பு வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமானால் 

* மியூச்சுவல் ஃபண்ட், ஈக்விட்டி பங்குகள் போன்றவை வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமானால் 

அதேபோல், வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றாலும், ஆடம்பரமாக திருமணம் செய்தாலும், ஏன் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றாலும், இன்னும் சில காரணங்களுக்காகவும் நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது. 
நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஊழியராக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் வருமானத்துக்கான வரிப் பிடித்தம் செய்யப்படும். ஆனால், உங்களுடைய நிறுவனத் தரப்பில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய தவறியிருந்தால் உங்களுக்கு நோட்டீஸ் வரும். 

மேலும், ரூ.50 லட்சத்துக்கும் மேலாக இடமோ, வீடோ வாங்கும்போது, இந்திய குடிமக்களுக்கு 1 சதவிகிதமும், என்ஆர்ஐ-களுக்கு 20 சதவிகிதமும் வரிப் பிடித்தம் செய்யப்படும். விற்றவர் தனது வருவாய்க் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், இருவருக்குமே வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும். 

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், நிறுவனங்களின் கடன் பத்திரங்கள், கூட்டுறவு கடன் சங்கம் போன்றவற்றில் வைத்துள்ள முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டி முதற்கொண்டு அனைத்து விவரங்களும் வருமான வரித் துறையிடம் இருக்கும்.

மேலும், ரூ.50,000-க்கும் மேலாக உணவகம் மற்றும் விடுதிகளிலோ, விமானத்திலோ செலவழித்தால், அதற்கு பான் எண் குறிப்பிட வேண்டும். ரூ.2 லட்சம் ரொக்கமாகக் கொடுத்து ஆபரணங்கள் வாங்கினாலும் பான் எண் அவசியம். 

பொதுவாக, மக்கள் தங்களின் வருமான வரியைக் குறைப்பதற்காக தங்களின் வருவாயைத் தெரிந்தோ, தெரியாமலோ குறைத்துக் காட்டிவிடுகிறார்கள். ஆனால், அவர்களின் சேமிப்புக் கணக்கு, நிரந்தர வைப்புக் கணக்கு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், பங்குகளில் செய்துள்ள முதலீடு மற்றும் அசையாத சொத்துக்கள் என அனைத்து விவரங்களும் வருமான வரித் துறைக்குச் சென்றுவிடும். நாம் வங்கியில் வைத்துள்ள இருப்புக்குக் கிடைக்கும் வட்டியும் வருமானக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வருமான வரித் துறை, தானாகவே வரி செலுத்துவோரின் விவரங்கள் அப்டேட் ஆகும் வகையில் நன்கு மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் மூலம் விவரங்களையெல்லாம் பராமரித்து வருகிறது. அதனால் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமான வருமானம் வரும் ஒவ்வொருவரின் தகவல்களும் அதில் புதுப்பிக்கப்படும். 

வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கும், தவறாக தாக்கல் செய்தவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். ஒவ்வொரு நிதி ஆண்டு க்கான நோட்டீஸ்களும் இரண்டு நிதி ஆண்டு களுக்குப்பின் அனுப்பப்படும். 

குறிப்பிட்ட நேரத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால், 90% வரை அபராதம் உண்டு. வரி ஏய்ப்பு தொகை மிக அதிகமாக இருந்தால், சிறை தண்டனையும் உண்டு.

நோட்டீஸ் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா?
நம்முடைய வருமான வரிக் கணக்கை சரியாக தாக்கல் செய்திருந்தால், நோட்டீஸ் வர வாய்ப்பில்லை. அப்படி நோட்டீஸ் வந்தால், நீங்கள் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கையும், நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமான வரிக் கணக்கையும் ஒப்பிட்டு பாருங்கள். நோட்டீஸில் கூடுதலாக குறிப்பிட்டுள்ள வருமானத்துக்கு நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தால் கவலைப்பட தேவையில்லை. 
ஆனால், நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்துக்கும் நம்மிடம் பதில் இருக்க வேண்டும். அதாவது, நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள தாக்கல் செய்யப்படாத வருமானத்தை, நாம் ஏற்கெனவே வருமான வரித் தாக்கலில் குறிப்பிட்டிருந்தால், அதற்கான ஆவணத்தின் நகல், தாக்கல் செய்த தேதி, தாக்கல் செய்ததற்கான ஆதாரச் சான்று எண் ஆகியவற்றை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட நபர் நேராக போக வேண்டும் என்று அவசியமில்லை. தபாலிலும் அனுப்பலாம். அதனால் நாம் தாக்கல் செய்த ஆவணங்களைச் சில ஆண்டுகளுக்கு பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

வரிக் கணக்குக்கான மதிப்பீட்டு நிதி ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரையில் வருமான வரி அதிகாரிகள் கேள்விகள் எழுப்பக் கூடும். அந்த வகையில் ஒருவர் 7 ஆண்டுகள் வரைக்கும் வருமானம் மற்றும் வரிச் சலுகை முதலீட்டுக்கான ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. 

அதேசமயம், சில நேரங்களில் உங்களுக்கே தெரியாமல் சில வருமானத்தை நீங்கள் குறிப்பிட தவறியிருக்கக் கூடும். நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமானத்தை நீங்கள் குறிப்பிடாமல் இருந்திருந்தால், அதனை உடனடியாக தாக்கல் செய்து, பின்னர் அந்த ஆவணங்களை வருமான வரித்துறைக்கு அனுப்ப வேண்டும். 

இதுவரை வருமான வரிக் கணக்கு தாக்கல் என்றால் என்னவென்றே தெரியாத, புதிய நபருக்கு நோட்டீஸ் வருகிறது என்றால், நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமானத்துக்கு வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 

அந்தச் சமயத்தில் அனைத்து வருமான விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், அவர் வாங்கிய அல்லது விற்ற சொத்துக்களின் விவரங்கள், தன்னுடைய பான் எண் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவு செய்து, பின்னர் பதிவு செய்ததும் வரும் 26ஏஎஸ் என்ற ஆவணத்தை நகல் எடுத்து நம்முடைய அனைத்து வருமான விவரங்களையும் ஒளிவுமறைவு இல்லாமல் குறிப்பிட்டு வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். பிறகு நாம் செலுத்த வேண்டிய வருமான வரியை, அதற்கான அபராதத்தையும் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும்" என்று கூறி முடித்தார்.

இவர் சொல்வதிலிருந்து, நாம் நம்முடைய வருமானத்தில் எவற்றுக்கெல்லாம் வரி செலுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 

மேலும், அவற்றை மறைக்காமல் குறிப்பிட்டு, சரியான நேரத்தில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால் இதுபோன்ற நோட்டீஸ்கள் வருவதைத் தவிர்க்க முடியும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts