லேபிள்கள்

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

இரு பலிகளில் தப்பிய திருநபி

இரு பலிகளில் தப்பிய திருநபி

 மு.அ. அபுல் அமீன் நாகூர்


சிறப்பிற்குரிய நபி (ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முன் அவர்களின் பாரம்பரியத்தில் முன்னோர் இருவர் பலி இடப்படுவதிலிருந்து தப்பினர். இதனையே, ""நான் இரு பலிகளின் புதல்வன்" என்று புகன்றார்கள் பூமான் நபி (ஸல்) அவர்கள்.
இப்ராஹிம் நபி இறைவன் கட்டளைப்படி மகன் இஸ்மாயிலைப் பலியிட முயன்ற பொழுது அல்லாஹ் ஆட்டை அனுப்பி பலியிட செய்தார். இஸ்மாயில் நபி காப்பாற்றப்பட்டார். அந்த நபி வழி வாரிசான அப்துல் முத்தலிப் மக்காவில் வாழ்ந்த செல்வர். இவரே மக்காவில்  "ஜம்ஜம்' கிணற்றைத் தோண்ட கனவு கண்டு கிணறு இருந்த இடத்தைத் திடமாய் அறிந்து கிணறு தோண்டியபொழுது வேண்டியபடி அவருக்குப் பத்துக்கு மேல் ஆண் குழந்தைகள் பிறந்தனர்.


அக்காலத்தில் பெண் குழந்தைகளை வெறுத்து ஆண் குழந்தைகளை அதிகம் பெற்ற அரபியர், ஆண் குழந்தைகள் வளர்ந்து வாலிபர்களாகியபின் அவர்களில் ஒருவரை அல்லது குறிப்பிட்ட ஒரு மகனை அவர்கள் வணங்கும் விக்கிரங்களுக்குப் பலியிடுவர். இவ்வழக்கப்படி அப்துல் முத்தலிபின் ஆண் மக்கள் வாலிபர்களான உடன் மக்களின் ஒப்புதலோடு பிள்ளைகளின் பெயர்களை எழுதி சீட்டு குலுக்கி எடுத்ததில் அப்துல்லாஹ் என்ற பெயர் வந்தது. அழகிய அப்துல்லாஹ்வைப் பலியிட குடும்பத்தினரும் விரும்பவில்லை. எதிர்ப்பு ஏற்பட்டது. பின்னர் அப்துல்லாஹ்விற்குப் பதில் ஒட்டகங்களைப் பலியிடுவது என்றும் ஏகோபித்து முடிவு செய்தனர். ஒட்டகங்களின் எண்ணிக்கையை ஒரு சீட்டிலும் அப்துல்லாஹ்வின் பெயரை மற்றோரு சீட்டிலும் எழுதி குலுக்கினர். ஒருநூறு ஒட்டகங்கள் என்ற சீட்டு எடுக்கப்பட்டது. ஒருநூறு ஒட்டகங்கள் பலியிடப்பட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பிழைத்தார். இப்படி இரு பலிகளிலிருந்து தப்பியவர்கள் திருநபி (ஸல்) அவர்கள்.
இறைமறை அருளப்பெற்று இறைதூதை எடுத்துரைத்தபொழுது ஏக இறை கொள்கையை ஏற்காத எதிரிகள் ஏந்தல் நபி (ஸல்) அவர்களைக் கொன்று பலியிட செய்த முயற்சிகள் முன்னோன் அல்லாஹ்வால் முறியடிக்கப்பட்டன.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற ஆறாம் ஆண்டில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தலையை கொய்து கொண்டு வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசளிப்பதாக அபூஜஹல் அறிவித்தான். முப்பத்தி மூன்று வயது முரட்டு மல்லன் உமர் வாளேந்தி வள்ளல் நபி (ஸல்) அவர்களின் தலையை வெட்டி கொண்டு வர புறப்பட்டான். அவனின் தங்கை குர் ஆன் ஓதுவதைக் கேட்டு கேண்மை நபி (ஸல்) அவர்களின் தலையை வெட்டும் வேகம் நீங்கி விவேகத்துடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். ஏக இறைவன் அல்லாஹ் ஏந்தல் நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றினான்.
நபித்துவம் பெற்ற பதிமூன்றாம் ஆண்டு குறைஷி வாலிபர்கள் உருவிய வாளுடன் உறங்காது உத்தம நபி (ஸல்) அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு வெளியில் வரும் வள்ளல் நபி (ஸல்) அவர்களைக் கொல்ல ஆயத்தமாய் நின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் யாஸீன் அத்தியாயத்தின் முதல் ஒன்பது வசனங்களை ஓதி ஒரு பிடி மண்ணை எடுத்து வீசிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களை அழைத்து கொண்டு மதீனா சென்று மாபெரும் இஸ்லாமிய அரசை நிறுவி உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.
ஸப்வான் காட்டிய பொருளாசையில் மயங்கி மக்காவிலிருந்து நஞ்சு தோய்ந்த வாளுடன் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கொல்ல சென்ற உமைருப்னு வஹப் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முன் நின்றான். ஸப்வான், உமைர் ஆகிய இருவரின் ரகசிய ஒப்பந்தத்தை ஒப்பற்ற நபி (ஸல்) அவர்கள் ஒப்பிப்பதைக் கேட்டதும் தப்பான எண்ணத்தைக் கைவிட்டு ஒப்பில்லா ஓரிறை கொள்கையை ஏற்றார் உமைருப்னு வஹப்.
சோதனைகளிலும் சாதனை படைத்த சாந்த நபி (ஸல்) அவர்கள் சாற்றி ஆற்று படுத்திய அறவழியில் முறையோடு நெறிபிறழாது நேர்மை தவறாது நிறை வாழ்வு வாழ்ந்து இறையருளைப் பெற இம்மீலாது நபி நந்நாளில் உறுதி பூணுவோம்.
https://azeezahmed.wordpress.com/

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 27 செப்டம்பர், 2017

குர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா?

குர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-
நாம் சொல்லக் கூடிய செய்திகளை உண்மைப் படுத்த வேண்டும் என்றால் அந்த செய்தி நம்பிக்கையானவர் சொல்லியிருக்க வேண்டும். சந்தேகமான செய்தி, அல்லது சந்தேகத்திற்கு இடமான செய்தி என்றால், அதை யாராவது உறுதிப் படுத்த வேண்டும். அப்படி யாரும் இல்லாவிட்டால் சத்தியம் செய்து அதை உறுதிப் படுத்த வேண்டும். ஒரு முஸ்லிம் எப்படி சத்தியம் செய்ய வேண்டும்.? எதைக் கொண்டு சத்திம் செய்ய வேண்டும் என்பதை தெளிவுப் படுத்துவற்காகவே இக் கட்டுரை எழுதப்படுகிறது.
கணவன் மனைவி சத்தியம்


ஒரு பெண் மானக் கேடான விபசாரத்தில் ஈடுபடுவதை கண்டால் அவளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக அந்த காட்சியை கண்ட நேரடியான நான்கு சாட்சிகள் இருக்க வேண்டும் . இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை வழங்கப் படமாட்டாது. அதே நேரம் தன் மனைவி வேறொரு ஆடவரோடு தவறாக மானக் கேடான விடயத்தில் ஈடுபடுவதை நேரடியாக கண்டால், அதற்கு நான்கு சாட்சிகள் இல்லாவிட்டால், இப்போது இருவரும் சத்தியம் செய்ய வேண்டும். அந்த சத்தியம் எப்படி செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் குர்ஆன் மூலம் சொல்லித் தருகிறான். அதாவது முதலில் கணவன் நான்கு தடவைகள் நான் உண்மையாளன் என்றும், ஐந்தாவது தடவையாக நான் பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாகட்டும் என்றும், அதே போல கணவன் பொய்யன் என்று நான்கு தடவையும், அவன் உண்மையாளனாக இருப்பானேயானால் அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாகட்டும் என்று ஐந்தாவது தடவையாக மனைவி கூற வேண்டும். என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் தெளிவுப் படுத்துகிறது

"எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி, ஐந்தாவது முறை, "(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்" என்றும் (அவன் கூற வேண்டும்).
இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, "நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி, ஐந்தாவது முறை, "அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்)". (24:6.)

அல்லாஹ்வின் மீது மட்டும் சத்தியம் செய்தல்
ஒருவர் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது மட்டும் சத்தியம் செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எந்த படைப்பினங்கள் மீதும் சத்திம் செய்யக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பின்வரக் கூடிய ஹதீஸ்களை கவனியுங்கள்.

"சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 2679)
மேலும் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்" என்று கூறினார்கள். (புகாரி 3836)

மேலும் "ஒரு யூதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முஸ்லிமாகிய நீங்களும் இணை கற்ப்பிக்கிறீர்கள் ,கஃபாவின் மீது ஆணையாக என்று கூறுகிறீர்கள் எனக் கேட்டார்,இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால்(கஃபாவின் மீது என்று கூறாமல்) கஃபாவின் இறைவன் மீது என்று கூற வேண்டும் என்று கூறினார்கள்.( அஹ்மத், நஸாஈ)
மேலும் "ஒரு மனிதர் கஃபாவின் இறைவன் மீது என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்,உடனே அல்லாஹ்
அல்லாததின் மீது சத்தியம் செய்யக கூடாது என்று கூறினார்கள். யார் அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்கிறாரோ அவா் இணைகற்பித்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

எனவே அல்லாஹ் அல்லாத எந்த படைப்பினங்கள் மீதும் எவரும் சத்தியம் செய்யக் கூடாது. குறிப்பாக குர்ஆன் மீது என்று சத்தியம் செய்யக் கூடாது. அப்படி குர்ஆனை முன் நிறுத்தி சத்தியம் செய்ய வேண்டும் என்றால் இந்த குர்ஆனை அருளிய இறைவன் மீது என்று தாராளமாக கூறலாம். அதுவும் குர்ஆன் மீது கை வைத்து தான் கூற வேண்டும் என்று சட்டம் கிடையாது.
அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்திருந்தால் அதன் பரிகாரம்
ஒருவர் தெரியாமல் நேரடியாக படைப்பினங்கள் மீதோ, அல்லது குர்ஆன் மீதோ சத்தியம் செய்து விட்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துகிறது.

" இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், 'வா சூது விளையாடுவோம்' என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 4860)
அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்தால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறார்.அதனால் தான் மீண்டும் கலிமா சொல்ல வேண்டும் என்று ஹதீஸ் சொல்லித் தருகிறது் எனவே சத்தியம் செய்யும் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொய் சத்தியம்
பொய் சத்தியம் செய்வர் முஸ்லிமாக இருக்கமாட்டார். அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்தால் அவர் மறுமையில் தண்டிக்கப் படுவார் என்பதை பின்வரும் குர்ஆன் வசனம் எச்சரிப்பதை கவனியுங்கள்.

" எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.( 58:14)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவதும், கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி 6675)

மேலும் " அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
"ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' (திருக்குர்ஆன் 03:77) என்னும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது) அஷ்அஸ்(ரலி) வந்து (மக்களை நோக்கி, 'அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. என் தந்தையின் சகோதரர் மகனுடைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், '(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?' என்று கேட்டார்கள். நான், 'என்னிடம் சாட்சிகள் இல்லை' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், பிரதிவாதி ('அந்த நிலம் என்னுடையது தான்' என்று) சத்தியம் செய்யவேண்டும்' என்றார்கள். நான், 'அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே' என்று கூறினேன். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே, அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி (மேற்சொன்ன 3:77 ஆம்) குர்ஆன் வசனத்தை அருளினான்" என்று கூறினார்கள். (புகாரி 2357)

எனவே வேண்டும் என்று பொய் சத்தியம் செய்தவர் உலகில் தப்பித்து விடலாம் ஆனால் மறுமையில் அல்லாஹ்வால் தண்டிக்கப் படுவார்என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
சத்தியத்தை முறிப்பதற்கான பரிகாரம்
ஒருவர் சத்தியம் செய்து விட்டு, அதை முறிக்க வேண்டும் என்றால் பின்வரக் கூடிய பரிகாரத்தை செய்ய வேண்டும்.

"அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.( அல் குர்ஆன் 66- 2)
மேலும் " உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை ஆயத்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.(அல்குர்ஆன் 5- 89)
எனவே இஸ்லாம் கூறும் ஒழுங்கு முறைகளைப் பேணி சத்தியம் செய்யும் விடயங்களில் நிதானமாக இருப்போமாக


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 25 செப்டம்பர், 2017

சாப்பாட்டின் ஒழுங்கு முறைகள்

சாப்பாட்டின் ஒழுங்கு முறைகள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-
நாம் சாப்பிடும் போது எந்த ஒழுங்குகளை கடைப்பிடித்து சாப்பிட வேண்டும் என்பதை நபியவா்கள் நமக்கு அழகான முறையில் கற்று தந்துள்ளார்கள். அவைகளை ஒன்றன் பின் ஒன்றாக கவனிப்போம்.
"நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்" (2:172)
இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான விடயங்களை நாம் காணலாம். முதலாவது உங்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளில் நல்லதை சாப்பிடுங்கள். அதாவது ஹலாலான உணவு வகைகளை சாப்பிடுங்கள். என்பதாகவும், இரண்டாவது அந்த உணவை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் "ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களை (ஆடைகளால்) அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை". ( 7- 31)
இந்த வசனத்தின் மூலம் எந்த உணவாக இருந்தாலும் வீண் விரயம் செய்யக் கூடாது, அப்படி வீண் விரயம் செய்பவா்கள் இறைவனின் சாபத்திற்கு உரியவா்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு குா்ஆன் வசனங்களின் அடிப்படையில் நாம் சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை அவதானிப்போம்.


உணவும் பிஸ்மியும்
பொதுவாக எல்லா சந்தா்ப்பங்களிலும் நாம் பிஸ்மி சொல்லி நமது செயல்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு தெளிவுப் படுத்துவதை காணலாம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) உன் கதவை மூடி விடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உன்னுடைய விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன்னுடைய பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்.
என ஜாபிர்(ரலி) அறிவித்தார். (புகாரி 3280)

அது மட்டுமல்ல செருப்பணியும் போதும், சட்டையை அணியும் போதும், இப்படி அடிக்கடி பிஸ்மியோடு அன்றாட தினத்தைக் கழிக்க வேண்டும். அந்த வரிசையில் நாம் சாப்பிடும் போது பிஸ்மி சொல்லித்தான் சாப்பிட வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
(நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. (புகாரி 5376, முஸ்லிம் 4111, 4112)

முதலாவதாக பிஸ்மி சொல்ல வேண்டும், இரண்டாவது வலது கையால் சாப்பிட வேணடும், மூன்றாவது நமக்கு முன் உள்ள பகுதியிலிருந்து எடுத்து சாப்பிட வேண்டும், என்பதை சாப்பாட்டின் ஒழுங்கு முறை கற்றுத் தருகிறது.
பிஸ்மி சொல்ல மறந்தால்
பசியின் வேகத்தில் அல்லது மறதியின் காரணமாக பிஸ்மி சொல்ல மறந்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பிஸ்மி சொல்லவில்லை என்பது நினைவுக்கு வந்தவுடன் உடனே "பிஸ்மில்லாஹி பி(f) அவ்வலிஹி வ ஆகிரிஹி" ( இப்னு ஹிப்பான் )

மேலும் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம். ஒருமுறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று (விரைந்து வந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து) விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே,இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது" என்று கூறினார்கள். (முஸ்லிம் 4105)

மேலும் " நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை" என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது" என்று சொல்கிறான்.

அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்" என்று சொல்கிறான். (முஸ்லிம் 4106)
வலது கையால் சாப்பிடுவது
சாப்பிடும் போதும், குடிக்கும் போதும், எடுக்கும் போதும், கொடுக்கும் போதும், வலதை தான் பயன் படுத்த வேண்டும் என்பதை பின் வரும் நபி மொழி நமக்கு வழிகாட்டுகிறது.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4108)

மேலும் " அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால்தான் உண்கிறான்; இடக்கையால் தான் பருகுகிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் "இடக் கையால் வாங்காதீர்கள். இடக் கையால் கொடுக்காதீர்கள்" என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள். (முஸ்லிம்4109)

மேலும் " சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வலக் கையால் உண்பீராக!" என்று சொன்னார்கள். அவர், "என்னால் முடியாது" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மால் முடியாமலே போகட்டும்!" என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது. ( முஸ்லிம் 4110)

மேலும் இப்னு மாஜாவில் பதிவு செய்யப் பட்ட ஹதீஸில் மேலதிகமாக "வலது கையால் பிடியுங்கள், வலது கையால் கொடுங்கள், ஏன் என்றால் ஷைத்தான் இடது கையால் கொடுக்கிறான், எடுக்கிறான். என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்.
எனவே நமது சகல விடயங்களிலும் வலதை முற்படுத்த வேண்டும் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.
கீழே விழுந்த உணவு
நாம் சாப்பிடும் போது நம்மை அறியாமல் நாம் உண்ணும் உணவிலிருந்து கீழே தவறி விழுந்து விட்டால் அதில் துாசி ஏதாவது பட்டிருந்தால் துாசியை தட்டிவிட்டு சாப்பிடும் படி பின் வரும் ஹதீஸ் நமக்கு சொல்லித் தருகிறது.

" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது உணவுக்கவளம் (உண்ணும்போது தவறி) விழுந்துவிட்டால் அவர் அதை எடுத்து, அதில் ஒட்டியிருப்பதை அகற்றி(ச் சுத்தம் செய்து)விட்டு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும், (உண்ட பின்) தம் விரல்களை உறிஞ்சுவதற்கு முன் கைக்குட்டையால் கையைத் துடைத்துவிட வேண்டாம். ஏனெனில், தமது உணவில் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4137)

மேலும் நாம் சாப்பிட்ட தட்டையும் வழித்து சாப்பிட வேண்டும் என்பதையும் நபியவா்கள் சொல்லித் தருகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உட்கொண்டால், அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத்தராமல் அதை அவர் துடைத்துக்கொள்ள வேண்டாம்.- இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 4132)

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் உணவு உட்கொள்வார்கள். உண்டு முடித்ததும் அவ்விரல்களை உறிஞ்சுவார்கள். (முஸ்லிம் 4135)

எனவே நாம் சாப்பிட்ட பின் கைவிரல்களையும், தட்டையும் வழித்து சூப்ப வேண்டும், என்பதை நமது நடைமுறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
பருகும் பாத்திரத்தில் மூச்சு விட தடை
சாப்பிடும் போதும் சரி, வேறு எந்த எந்த சந்தர்ப்பத்திலும் சரி ஊதி குடிக்க கூடாது மேலும் தண்ணீரில் மூச்சும் விடக் கூடாது என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துவதை காணலாம்.

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் (பருகும்) பாத்திரத்தினுள் மூச்சு விட வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
(முஸ்லிம் 4124)

மேலும் " அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி)வந்தார்கள். மேலும், "இதுவே நன்கு தாகத்தைத் தணிக்கக்கூடியதும் (உடல்நலப்) பாதுகாப்பிற்கு ஏற்றதும் அழகிய முறையில் செரிக்கச் செய்யக்கூடியதும் ஆகும்" என்று கூறினார்கள்.
ஆகவேதான், நானும் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வருகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(முஸ்லிம் 4126)

உணவை குறை கூற கூடாது
எந்த உணவாக இருந்தாலும் தனக்கு பிடித்தால் சாப்பிட்டுக் கொள்வது, தனக்கு பிடிக்கா விட்டால் அந்த உணவை சாப்பிடாமல் விட்டு விடுவது. அது அல்லாமல் முன் வைக்கப் பட்ட உணவை குறை கூற கூடாது. என்பதை பின் வரும் நபி மொழி சாட்சி சொல்கிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. ஒரு பொருள் பிடித்தால் அதை உண்பார்கள்; பிடிக்காவிட்டால் (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.( முஸ்லிம் 4190)

வலதை முற்படுத்தல்
நாம் உணவையோ, பானத்தையோ பறிமாறும் போது இருப்பவர்களின் வலதை கவனித்து பறிமாற வேண்டும் என்பதை பின் வரும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீர் கலந்த பால் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்களுக்கு வலப்பக்கம் கிராமவாசி ஒருவரும் இடப்பக்கம் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாலைப்) பருகிய பின் (மீதியை வலப்பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, "(பரிமாறும்போது முதலில்) வலப்பக்கம் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்பக்கமிருப்பவருக்கும் (கொடுக்கவேண்டும்)" என்று சொன்னார்கள். (முஸ்லிம் 4127)

மேலும் "அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, அருந்துவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். ஆகவே,அவர்களுக்காக நாங்கள் ஓர் ஆட்டின் பாலைக் கறந்தோம். பிறகு எனது இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, அதில் கலந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்தினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபியவர்களின் இடப் பக்கத்திலும், உமர் (ரலி) அவர்கள் நபியவர்களின் முன் பக்கத்திலும், ஒரு கிராமவாசி நபியவர்களுக்கு வலப் பக்கத்திலும் இருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இதோ அபூபக்ர் (அவருக்கு மீதியுள்ள பாலைக் கொடுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!" என்று (இடப்பக்கத்திலிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்களைக் காட்டிக் கூறினார்கள். எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலப்பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் கொடுக்கவில்லை.
மேலும், "(பரிமாறும்போது முதலில்) வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்). வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்). வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்)" என்று கூறினார்கள்.
(இறுதியில்) அனஸ் (ரலி) அவர்கள், "இதுவே நபிவழியாகும்; இதுவே நபிவழியாகும்; இதுவே நபிவழியாகும்" என்று கூறினார்கள். (முஸ்லிம் 4129)
ஒரு குடலுக்கு உண்ணல்
ஆற்றிலே போட்டாலும் அளந்து போட வேணடும் என்பார்கள். வயிற்றிலே போட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். சாப்பாடு நல்ல ருசியாக இருக்கிறது என்பதற்காக வாய்முட்ட சாப்பிடக் கூடாது. என்பதை பின்வரும் ஹதீஸ் நமது சிந்தனைக்கு வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதருடைய உணவு இரு மனிதருக்குப் போதுமானதாகும். இரு மனிதரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4184)

மேலும்
4185. "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான். இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்.- இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 4185)

சாய்ந்து கொண்டு சாப்பிடக் கூடாது
அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், 'நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்' என்று கூறினார்கள். (புகாரி 5399)

உணவும் தொழுகையும்
கடுமையான பசியாக இருக்கிறது சாப்பாடு் தயாராக உள்ளது, தொழுகை நேரமும் வந்து விட்டது என்றால் முதலில் சாப்பிட்டு விட்டு தொழும் படி ஹதீஸ் நமக்கு வழி காட்டுகிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு 'இகாமத்' சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்.) (புகாரி 5463)

நன்றி கூறல்
சாப்பிட்டு விட்டு, அல்லது தண்ணீரை குடித்து விட்டு அந்த உணவை தந்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முறை உணவு உண்ட பின்னர் அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற, அல்லது ஒரு முறை பானம் அருந்திய பிறகு அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற அடியான் குறித்து அல்லாஹ் உவகை கொள்கிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 5282)

எனவே நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் சாப்பாட்டை சாப்பிடக் கூடிய பழக்கத்தை அமைத்துக் கொள்வதோடு, சாப்பிட்டப் பின் அந்த உணவை தந்த அல்லாஹ்விற்கு அதிகமாக நன்றி செலுத்தக் கூடிய து ஆக்களை ஓதிக் கொள்ள வேண்டும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 23 செப்டம்பர், 2017

வுளுவுடன் பள்ளிக்கு செல்லல்

வுளுவுடன் பள்ளிக்கு செல்லல்

இறையத்தை வளர்த்துக் கொள்வது எப்படி 2,
மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்

நாம் அன்றாடம் செய்யும் அமல்கள் மூலம் எவ்வாறு நமது உள்ளத்தில் எப்படி இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது? என்பதை விளக்கப் படுத்தும் முகமாக ஒவ்வொரு மாதமும் ஓரிரு ஹதீஸ்களை முன் வைத்து அதற்கான வழி காட்டலை வழங்கி வருகிறோம்.அந்த வரிசையில் நாம் தொழுகைக்கு பள்ளிக்கு செல்லும் போது வுளுவுடன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது பற்றிய ஹதீஸை விளக்க உள்ளேன்.
பாங்கு சத்தம் கேட்டவுடன், வுளு செய்து கொண்டு பள்ளிக்கு போக வேண்டும். அப்படி போகும் போது, பள்ளியை நோக்கி அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை பதியப் படும், ஒரு பாவம் அழிக்கப் படும்.
பின்வரும் ஹதீஸை கவனியுங்கள்.


" உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான். (முஸ்லிம் 393)

இந்த ஹதீஸின் படி தொழுகைக்காக பள்ளிக்கு செல்லு்ம் போது வுளுவுடன் செல்ல வேண்டும். அப்படி செல்லும் போது எனது பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. நன்மைகள் எழுதப் படுகின்றன. என்ற சிந்தனையோடு செல்ல வேண்டும். இப்படி நினைத்துக் கொண்டு செல்லும் போது உள்ளத்தில் இறையச்சத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
பொதுவாக வீட்டில் இருந்தாலும் சரி, அல்லது தொழில் புரியக் கூடிய இடத்தில் இருந்தாலும் சரி, எல்லா சந்தர்ப்பங்களிலும் வுளுவுடன் இருக்க கூடிய நிலையை அமைத்துக் கொள்ள வேணடும். அதன் மூலமும் உள்ளத்தில் இறையச்சம் வளருவதை உணர முடியும்.
மேலும் வுளு செய்யும் போது அவரவர் செய்த பாவங்கள் தண்ணீரோடு, தண்ணீராக வெளியேறுகின்றன் என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துவதை கவனிக்கலாம்.
"ஒரு அடியான் வுளு செய்யும் போது முகத்தை கழுவினால் கண்களால் பார்க்கப் பட்ட பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. கையை கழுவினால் கையினால் செய்த பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. காலை கழுவினால் பாவத்திற்காக நடந்த பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
நாம் வுளு செய்யும் போது அதாவது முகத்தை கழுவும் போது கண்ணால் செய்த பாவங்கள் இப்போது வெளியேறுகின்றன என்றும், கைகளை கழுவும் போது கைகளால் செய்த பாவங்கள் வெளியேறுகின்றன என்றும், காலை கழுவும் போது பாவத்திற்காக நடந்த பாவங்கள் வெளியேறுகின்றன என்றும்
நினைத்துக் கொண்டு வுளு செய்தால் அந்த நேரத்தில் இறையச்சத்தின் அதிகரிப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
வுளுவின் துஆ

வுளு செய்த பின் வுளுவுடைய து ஆவை ஓதினால் அவருக்காக சுவர்கத்துடைய வாசல்கள் திறக்கப் படுகின்றன. என்பதை பின்வரும் ஹதீஸ் உறுதிப் படுத்துவதை காணலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம். (முஸ்லிம் 397)
நீங்கள் வுளு செய்து முடித்து இந்த து ஆவை ஓதியவுடன் எனக்காக சுவர்கத்துடை எட்டு வாசல்கள் திறக்கப் படுகின்றன,
இப்போது நான் சுவர்கத்திற்குள் நுழைகின்றேன் என்ற உணர்வை அமைத்துக் கொள்ள வேணடு்ம்.
உதாரணத்திற்கு சுப்ஹூ தொழுகைக்கு வுளு செய்து, இந்த துஆவை ஓதிய பின் நான் இப்போது பாபு ஸதக்கா வழியாக சுவர்கத்திற்கு செல்கிறேன் என்றும், ளுஹர் தொழுகைக்கு வுளு செய்து, இந்த து ஆவை ஓதிய பின் நான் பாபுஸ் ஸலாத் வழியாக சுவர்கத்திற்குள் செல்கிறேன் என்றும், அஸரு தொழுகைக்கு வுளு செய்து, இந்த துஆவை ஓதிய பின் பாபுல் ஜிஹாத் வழியாக சுவர்கத்திற்கு செல்கிறேன் என்றும், மஃரிப் தொழுகைக்கு வுளு செய்து, இந்த து ஆவை ஓதிய பின் பாபுர் ரய்யான் வழியாக
சுவர்கத்திற்குள் செல்கிறேன் என்ற உணர்வை அந்த இடத்தில் கொண்டு வர வேண்டும் அப்போது உள்ளத்தில் இறையச்சத்தின் அதிகரிப்பை கண்டு கொள்ள முடியும்.

மேலும் சுவர்கத்தின் வாசலுடைய பெயகளும் மறக்காது.
இப்படி ஒவ்வொரு நாளும் நடைமுறைப் படுத்தி வந்தால் அமல்களில் ஆர்வமும், இறையச்சத்தின் அதிகரிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 21 செப்டம்பர், 2017

நோய் விசாரணை

நோய் விசாரணை

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
இஸ்லாத்தைப் பொருத்தவரை அதிகமான நல்ல விடயங்களை மக்களுக்கு வழிக்காட்டி உள்ளன. அவைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உற்ச்சாகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஒரு மனிதன் நோயாளியாக மாறிவிட்டால் அவனை நோய் விசாரணை செய்ய வேண்டும். அதன் மூலம் நோயாளிக்கு மன ஆறுதலாகவும், நோய் விசாரித்தவருக்கு நன்மையாகவும் அமைந்து விடுகிறது.
நோயும் மனிதனும்
இறைவன் ஒரு மனிதனுக்கு நோயை கொடுக்கிறான் என்றால் ஒன்று அவனது பாவங்கள் மன்னிக்கப் படுவற்காக இருக்கும். இல்லாவிட்டால், அவனை தண்டிப்பதற்காக இருக்கும். நோய் என்பது ஒரு சோதனையாகும். இந்த உலகில் படைக்கப்பட்ட எந்த மனிதரும் சோதிக்கப்படாமல் மரணிப்பது கிடையாது. அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளை கொடுக்கிறான்.

சிலருக்கு செல்வத்தை கொடுத்து சோதிக்கிறான். சிலருக்கு செல்வத்தைக் கொடுக்காமல் சோதிக்கிறான். சிலருக்கு பிள்ளைகளை கொடுத்து சோதிக்கிறான். சிலருக்கு பிள்ளைகளை கொடுக்காமல் சோதிக்கிறான். சிலருக்கு விவசாயத்தை கொடுத்து சோதிக்கிறான். சிலருக்கு விவசாயத்தை கொடுக்காமல் சோதிக்கிறான். சிலருக்கு நோயை கொடுத்து சோதிக்கிறான், சிலருக்கு நோயை கொடுக்காமல் சோதிக்கிறான். எனவே நோய் என்பது ஒரு சோதனையாகும். இந்த நோய் என்ற சோதனையின் போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்கம் நமக்கு அழகாக சொல்லித் தருகிறது.


நோயும் பொறுமையும்
ஒரு மனிதனுக்கு நோய் வந்து விட்டால் வலியின் காரணமாக தாங்க முடியாமல் துடிக்கிறான். சில நேரங்களில் அந்த நோயை ஏச ஆரம்பித்து விடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸாயிம் என்ற பெண்மணியை நோய் விசாரிக்க சென்ற சமயம் அந்த பெண் தனக்கு வந்த காய்ச்சலை தாங்க முடியாமல் காய்ச்சலை ஏச ஆரம்பிக்கிறாள். அப்போது காய்ச்சலை ஏசாதீர்கள், அதன் மூலம் உங்கள் பாவங்களை அல்லாஹ் அழிக்கிறான் என்று கூறினார்கள்.
அதே போல மைய்யத்திற்காக ஒப்பாரி வைத்து அழுபவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும் வழிப்பு நோயுள்ள பெண்ணிடம் அதில் நீ பொறுமையாக இருந்தால் அல்லாஹ் அந்த நோயிக்கு பகரமாக சுவனத்தை தருவதாக நபி (ஸல்) அவரகள் கூறினார்கள். காலில் ஒரு முள் குத்தினாலும், உடம்பில் ஒரு நரம்பு துடித்தாலும், மனிதனின் உள்ளத்தில் கவலை ஏற்ப்பட்டாலும் அதற்கு பகரமாக அல்லாஹ் அடியானின் பாவங்களை மன்னிக்கிறான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதே நேரம் தனக்கு கொடுக்கப் பட்ட நோயை ஏசினால் அதன் மூலமாக பாவங்களை அதிகமாக்கி கொள்கிறான்.
நோயாளியும், மனிதனும்
ஒரு மனிதன் நோயாளியாக இருந்தால் அவனை அடிக்கடி நலம் விசாரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக இஸ்லாம் பல வெகுமதிகளை பரிசாக வழங்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் (உடல் நலிவுற்ற) தம் சகோதர முஸ்லிமை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், அவர் திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டேயிருக்கிறார்.- இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் – 5019)

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?" என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை" என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் – 5021)

எனவே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி நோயாளியை அல்லாஹ்விற்காக நலம் விசாரித்து, து ஆ செய்ய வேண்டும்.
அதே போல நோயாளி காபிராக இருந்தாலும் அவரையும் தாராளமாக நலம் விசாரிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் தனக்கு சேவை செய்த யூத சிறுவன் நோயுற்றிருந்த போது அவரை நலம் விசாரித்ததோடு, இஸ்லாம் மார்க்கத்தின் பக்கம் அழைப்பும் விடுத்தார்கள்.
http://www.islamkalvi.com/?p=106618

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?

வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?

-உண்மை உதயம் மாத இதழ்-
(அல்குர்ஆனின் அறிவியல் அற்புதம்)

அல்குர்ஆனில் 'அல் அன்கபூத்' (சிலந்தி) என்ற பெயரில் தனி அத்தியாயம் உள்ளது. அரபு மொழியில் எல்லாவற்றிலும் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இது வேறு மொழிகளில் இருக்காது. உதாரணமாக சூரியன், சந்திரன், வீடுபோன்ற அனைத்திலும் இலக்கண அடிப்படையில் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இந்த அடிப்படையில் சிலந்தி என்பது அரபு மொழியின் பிரகாரம் ஆண்பாலாகும். அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் சிலந்தி பற்றி பேசும் போது பெண்பால் வினைச் சொல்லை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.
'அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிகப் பலவீனமானது சிலந்தியின் வீடாகும். அவர்கள் அறிபவர்களாக இருந்தால் (இவர்களை எடுத்திருக்க மாட்டார்கள்.)' (29:41)
இங்கு வலை பின்னும் சிலந்தியை அல்லாஹ் பெண்பால் வினைச் சொல்லில் பயன்படுத்தியுள்ளான். பொதுவாக சிலந்தி அரபு இலக்கணப் பிரகாரம் ஆண்பால் என்பதால் ஆண்பாலுக்குப் பெண்பால் வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அல்குர்ஆனில் இலக்கணப் பிழை உள்ளது என சிலர் கடந்த காலத்தில் விமர்சித்தனர்.


இந்த அடிப்பிடையில் 'இத்தஹதத்' என்ற அரபு வார்த்தை 'இத்தஹத' என்று வந்திருக்க வேண்டும் என்பது அவர்களுடைய வாதமாகும்.
ஆனால், அண்மைக்கால ஆய்வுகள் ஒரு அற்புதமான உண்மையைக் கண்டறிந்துள்ளன. சிலந்திவலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா? என்று ஆய்வு செய்ததில் பெண் சிலந்திதான் வலை பின்னும் ஆற்றலுடையது. இதில் ஆண் சிலந்திக்குப் பங்கில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில் அரபு இலக்கணப் பிரகாரம் சிலந்தி என்பது ஆண்பாலாக இருந்தாலும் சிலந்திகளில் பெண் சிலந்தி மட்டுமே வலை பின்னுகின்றது என்பதால் பெண்பால் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது நியாயமானது என்பது விஞ்ஞானபூர்வமாகவே உறுதி செய்யப் படுகின்றது. இந்த உதாரணத்தைக் கூறிவிட்டு அல்லாஹ் சொல்லும் செய்தியை சற்று அவதானியுங்கள்.
'இவை உதாரணங்களாகும். இவற்றை மனிதர்களுக்காகவே நாம் கூறுகின்றோம். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் இதனை விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.' (29:43)
இந்த உதாரணத்தை அறிவுடையோரே சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்று கூறி இதில் அறிவியல் உண்மை இருப்பதையும் அல்லாஹுதஆலா உணர்த்திவிடுகின்றான். அல்குர்ஆனில் ஒரு எழுத்து கூட வீணாக இடம்பெறவில்லை என்பதை நாம் இன்று சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் நாளைய உலகு அதை சரியாகப் புரிந்து கொள்ளும் இந்த உண்மை மூலம் அல்குர்ஆன் ஓர் இறைவேதம் என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகின்றது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

தொழும் போது முன்னால் தடுப்பு

தொழும் போது முன்னால் தடுப்பு

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்-
ஒவ்வொரு வணக்கங்களும் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள்.அந்த வரிசையில் நாம் தொழும் போது முன்னால் சுத்ரா ( தடுப்பு ) வைப்பதன் முக்கியத்துவத்தை ஹதீஸ்களில் காணலாம். சுத்ரா இல்லாமல் கவனயீனமாக தொழுதால் அதற்கான தண்டனை கடுமையானது என்பதையும் இஸ்லாம் நமக்கு கடுமையாக எச்சரிக்கின்றது.

தொழுகையும், தடுப்பும்


" இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காகத் தொழுகைத் திடலுக்குப்) புறப்படும் போது (முனை அகலமான) ஈட்டியை எடுத்து வருமாறு உத்தரவிடுவார்கள். (தொழுகைத் திடலில்) அவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவிப்பார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள். பொதுவாகப் பயணத்திலும் இவ்வாறே செய்வார்கள். இதனால் தான் (நம்) தலைவர்களும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (
முஸ்லிம் 862 )

மேலும்
" இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (கைப்பிடி உள்ள) கைத்தடியை நட்டு வைத்து அதை நோக்கித் தொழுவார்கள். (முஸ்லிம் 863 )

மேலும் "அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின்போது) தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். பிலால் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்து) மிச்சம் வைத்த தண்ணீரை வெளியே எடுத்துவருவதையும் பார்த்தேன். அந்த மிச்சத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர் அதைத் (தம் மேனியில்) தடவிக்கொண்டார். அதில் சிறிதும் கிடைக்காதவர் (தண்ணீர் கிடைத்த) தம் தோழரின் கையிலுள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க்கொண்டார். பிறகு பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து வந்து நட்டுவைப்பதை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிவப்பு நிற அங்கியொன்றை அணிந்தவர்களாக (தம் கணைக்கால்கள் தெரியுமளவுக்கு அங்கியை) உயர்த்திப் பிடித்தபடி வெளியில் வந்தார்கள். பிறகு அந்தக் கைத்தடியை நோக்கி (நின்று) மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால்நடைகளும் கடந்துசெல்வதை நான் பார்த்தேன். ( முஸ்லிம் 867 )

எனவே மேற்ச் சென்ற ஹதீஸ்கள் மூலம் நாம் தொழும்போது முன்னால் ஏதாவது பொருள் ஒன்றை தடுப்பாக வைப்பது வலியுறுத்தப்பட்ட நபிவழி யாகும்.
குறுக்கே செல்பவர் ஷைத்தான்
தொழுது கொண்டிருக்கும் போது எவராவது குறுக்கே செல்ல முற்ப்பட்டால், நாம் தொழுத நிலையிலே கையை நீட்டிஅவரை தடுக்க வேண்டும்.அதையும் மீறி குறுக்கே செல்ல முற்ப்பட்டால் அவரை தள்ளி விட வேண்டும் . ஏன் என்றால் அவன் ஷைத்தானின் துாண்டுதலால் தொழுகையின் குறுக்கே செல்ல முற்ப்படுகிறான் என்பதை பின் வரும் ஹதீஸ் உறுதிப் படுத்துகிறது.

" ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தோழர் ஒருவரும் ஒரு ஹதீஸ் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது (அங்கு வந்த) சாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்ற ஒரு ஹதீஸையும் அவர்களிடம் நான் கண்ட ஒரு நிகழ்ச்சியையும் உமக்குக் கூறுகிறேன்:

நான் ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தன்று அபூசயீத் (ரலி) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மக்களில் யாரும் தமக்கு குறுக்கே சென்று விடாமலிருக்கத் தடுப்பொன்றை வைத்து அதை நோக்கித் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது பனூ அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் குறுக்கே கடந்துசெல்ல முற்பட்டார். உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் தமது கையால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்துசெல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் கண்ட அவர், மீண்டும் அவர்களைக் கடந்து செல்லப்பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்கள் முன்னைவிடக் கடுமையாக அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் அப்படியே நின்றுகொண்டு அபூசயீத் (ரலி) அவர்களைச் சாடினார்.
பிறகு மக்களை விலக்கிக்கொண்டு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று நடந்ததை அந்த இளைஞர் முறையிட்டார். அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள். அப்போது மர்வான், அபூசயீத் (ரலி) அவர்களிடம், உங்களுக்கும் உங்கள் சகோதரர் புதல்வருக்கும் (இடையே) என்ன நேர்ந்தது? அவர் உங்களைப் பற்றி முறையிடுகிறாரே! என்று கேட்டார். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், மக்களில் எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தமக்கு முன்னே ஒரு தடுப்பை வைத்துக்கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது, அவருக்கு முன்னால் குறுக்கே செல்ல யாரும் முற்பட்டால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளட்டும். அவர் (விலகிச் செல்ல) மறுக்கும்போது அவருடன் சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில், அவன்தான் ஷைத்தான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் (எனவே தான், அந்த இளைஞரை அவ்வாறு நான் தடுத்தேன்) என்று கூறினார்கள். ( முஸ்லிம் 876 )

மேலும்
" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது எவரையும் தமக்கு முன்னே கடந்து செல்ல அவர் அனுமதிக்க வேண்டாம். (அவரைத் தடுக்கட்டும்.) அவர் (விலகிக்கொள்ள) மறுக்கும் போது சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும் ! ஏனெனில்,அவருடன் கூட்டாளி (ஷைத்தான்) உள்ளான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 877 ) எனவே தொழும் போது கட்டாயம் தடுப்பு வைத்து தொழ பழகிக் கொள்ள வேண்டும். யாராவது அவசரத்தில் தொழுகைக்கு குறுக்கே செல்ல முற்ப்படும் போது அவரை தடுக்க முயற்ச்சி செய்ய வேண்டும். மீறி குறுக்கே செல்ல முற்ப்பட்டால் கையால் தடுக்க வேண்டும், அதையும் மீறி செல்ல முற்ப்பட்டால் அவரை தள்ளி விட வேண்டும் என்பதாக ஹதீஸ் நமக்கு பாடம் சொல்லித் தருகிறது்.

தொழுகைக்கு குறுக்கே செல்வது பாவம்
தொழுகைக்கு குறுக்கே ஒருவர் செல்வாரேயானால் அது மிகப் பெரிய பாவம் என்பதை பின் வரும் ஹதீஸ் எச்சரிகின்றது.

"புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அபூஜுஹைம் பின் அல்ஹாரிஸ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் அனுப்பி, தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன செவியேற்றார்கள் என்று கேட்டுவருமாறு சொன்னார்கள். (நான் சென்று கேட்டேன்.) அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்கு முன்னால் கடந்துசெல்வதைவிட நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது மாதங்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது வருடங்களில் நாற்பது என்று சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை. என்று கூறினார்கள். ( முஸ்லிம் 878
மேலும் " அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள். ( முஸ்லிம் 882 )

தொழுகையாளியும், சுத்ராவின் நெருக்கமும்.
தொழும் போது வைக்கப்படும் சுத்ராவின் நெருக்கம் எந்த அளவு துாரம் இருக்க வேண்டும் என்பதை பின் வுரும் ஹதீஸிகளில் காணலாம்.

" சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழ நிற்கும் இடத்திற்கும் (பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது. முஸ்லிம் 879 )

880. மேலும் "யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்கு அருகில் (உள்ள தூண் அருகே) கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழுவார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து (இந்தத் தூணை முன்னோக்கி நின்று) தொழுவார்கள். சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பர்) கிப்லாவுக்கும் இடையே ஓர் ஆடு கடந்துசெல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது என்றும் குறிப்பிட்டார்கள்.
( முஸ்லிம் 880 ) மேலும் "சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்குப் பக்கத்திலிருந்த தூணருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர்களிடம் நான், அபூ முஸ்லிம்! தாங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கிறேனே (என்ன காரணம்)? என்று கேட்டேன். அதற்கு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன் (ஆகவேதான், நானும் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்) என்று பதிலளித்தார்கள்.
(முஸ்லிம் 881)
எனவே நமது தொழுகைக்கும் சுத்ரா வைக்கப்படும் இடமும் மிக நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதை தான் இந்த ஹதீஸ்களில் காணலாம்.அதாவது ஸஜ்தாவிற்கு நெற்றி வைக்கும் இடத்தில் சுத்ரா வைக்க வேண்டும்.என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்,

பெண்கள் சுத்ரா
" உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் (எங்களிடம்), தொழுகையை முறிக்கக் கூடியவை எவை? என்று கேட்டார்கள். நாங்கள், பெண்களும் கழுதைகளும் (குறுக்கே செல்வது) என்று பதிலளித்தோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்கள் என்ன தீய பிராணிகளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு முன்னால் நான் ஜனாஸாவைப் போன்று குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன் என்று கூறினார்கள். ( முஸ்லிம் 886)

மேலும் " நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது அவர்களுக்கு எதிரில் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் நான் இருந்துகொண்டிருப்பேன். சில நேரங்களில் அவர்கள் சஜ்தாச் செய்யும்போது அவர்களது ஆடை என்மீது படும். (முஸ்லிம் 890)

எனவே தொழக் கூடியவர்கள் சுத்ரா விடயத்தில் அதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அதிகமான பள்ளிகளில் இந்த சுத்ரா அமைப்பு பேணுவது கிடையாது. நபியவர்களின் சுன்னத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள் ஆனால் நடைமுறையில் இல்லை ? சுத்ராவைப் பற்றி சரியான தெளிவு இல்லாததினால் தான் இதன் முக்கியத்துவமும்,பாரதுாரமும் தெரியவில்லை ? பெண்கள் தனியாக வீட்டில் தொழுதாலும், வீட்டில் யாரும் இல்லாவிட்டாலும் கூட தனக்கு முன்னால் சுத்ரா என்ற ஏதாவது ஓரு பொருளை முன்னால் தடையாக வைத்து தொழ வேண்டும். ஹதீஸ்களை விளங்கி அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோமாக !


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts