லேபிள்கள்

சனி, 13 மே, 2017

வலீமா என்றால் என்ன?

வலீமா என்றால் விருந்து என்பது பொருள். வலீமதுல் உர்ஸ் என்றால் திருமண விருந்து என்று பொருள். திருமண விருந்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே திரமணத்திற்கென விருந்தளிப்பது வரவேற்கத்தக்கதாகும்.
யார் விருந்தளிக்க வேண்டும்?
பெண்ணிற்குரிய உணவு ஆடை செலவு போன்றவை கணவனது கடமை என்பதால் இதற்கு பொறுப்பானவர் ஆண் தரப்பாரே. நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர் அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்களிடம் 'ஒர் ஆட்டைக்கொண்டேனும் வலீமாக்கொடுங்கள்' (புகாரி 1943) என்று கூறியுள்ளார்கள்.

கணவனுக்கு பகரமாக பெண் வீட்டார் விருந்தளிக்கலாமா?
கணவனுக்கு பகரமாக யாரும் விருந்தளிக்கலாம் அதற்கு எவ்விதத் தடையும் மார்க்கத்தில் இல்லை
عَنْ سَهْلٍ، قَالَ لَمَّا عَرَّسَ أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ دَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ، فَمَا صَنَعَ لَهُمْ طَعَامًا وَلاَ قَرَّبَهُ إِلَيْهِمْ إِلاَّ امْرَأَتُهُ أُمُّ أُسَيْدٍ، بَلَّتْ تَمَرَاتٍ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ مِنَ اللَّيْلِ، فَلَمَّا فَرَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الطَّعَامِ أَمَاثَتْهُ لَهُ فَسَقَتْهُ، تُتْحِفُهُ بِذَلِكَ
صحيح البخاري5182
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்-ஸாஇதீ (ரழி) கூறினார், அபூ உசைத் அஸ்-ஸாஇதீ (ரழி) (தம்) மணவிருந்தின்போது நபி(ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக உணவு படைத்ததும் பரிமாறியதும் அபூ உசைத்(ரலி) அவர்களின் துணைவியார் உம்மு உசைத் (ரழி) அவர்களே. உம்மு உசைத் (ரலி) (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரழி) அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தம் கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக வழங்கினார்கள்
கணவன் ஒரு விருந்தும் பெண் வீட்டார் ஒரு விருந்தும் கொடுக்கலாமா?
நபித்தோழர்கள் வாழ்வில் இவ்வாறு எந்த நிகழ்வும் இல்லாதால் இதனை நாம் தவிர்க்க வேண்டும். வீண் விரயாமாக்கப்படும் இப்பணத்தை எழை எளியவர்களுக்கு உணவழித்து அல்லாஹ்-வின் கூலியை எதிர்பர்ப்பது இதை விடச்சிறந்நது.
கணவன் வீட்டிற்க்கு மனைவியை அழைத்துச் செல்வது தான் இஸ்லாமியத் திருமணமா?
இது இஸ்லாமியத் திருமணம் பற்றிய அறிவில்லாதவர்களின் கண்டுபிடிப்பு. அல்-குர்ஆனிலோ ஸுன்னாவிலோ இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மாற்றமாக நபியவர்களுக்கும் ஸைனப் (ரழி) அவர்களுக்கும் திருமணம் நடந்தபோது நபியவர்களே ஸைனப் (ரழி) வீட்டிற்குச் சென்றுள்ளார்கள் (முஸ்லிம் 1425)
இது விருந்து யார் வீட்டில் வைப்பது என்பதைப்பற்றிய விளக்கமே தவிர சீதன வீடு பற்றியதல்ல. சீதன வீடு ஒரு பகற்கொள்ளை என்பதில் எந்த ஐயமும் இல்லை
திருமண விருந்து எப்போது கொடுக்கப்படவேண்டும்?
கணவன், மனைவி உறவிற்குப் பிறகுதான் வலீமா என ஸுன்னாவில் எந்த நிபந்தனையும் கிடையாது. திருமண உடன்படிக்கை நடந்தது முதல் திருமண விருந்தளிக்கலாம்.
திருமண உடன்படிக்கையின் போது பயான் செய்வது நபிவழியா?
எந்த ஒரு நல்ல காரியமாயினும் (خطبة الحاجة) குத்பதுல் ஹாஜா-வைக் கொண்டு ஆரம்பிப்பதே நபி வழி. ஆகையால் இதை கொண்டு العقد – – அக்-தை நடத்துவதே சிறந்ததாகும். ஆனால் அதன் பின்னால் உரை நிகழ்த்துவது நபி வழியல்ல. நபியவர்கள் நடத்தி வைத்த எந்தத் திருமணத்திலும் எந்த உரையும் நிகழ்த்தியதில்லை.
العقد – – அக்தை பள்ளியில் நடத்துவது சிறந்ததா?
العقد அக்-தை விரும்பிய இடத்தில் நடத்தலாம். பள்ளியில் தான் நடத்த வேண்டும் என்பதாக வரும் திர்மிதீ (1088) ஹதீஸ் பலஹீனமானதாகும்.
திருமணம் முடிந்த பிறகு தம்பதியர்களுக்காக எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்?
1. بارك الله لك وبارك عليك وجمع بينكما في الخير) أبوداود 1819)
2.
بارك الله لك) البخاري 4758)
3.
بارك الله فيكم وبارك عليكم) النسائي 3318)
நன்றி
>http://www.islamkalvi.com/?p=104241


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 11 மே, 2017

தாய்ப்பால் அதிகமாக சுரக்க...

எழுத்தாளர்: மாற்று மருத்துவம்
தாய்ப் பிரிவு: மருத்துவம்
பிரிவு: குழந்தை நலம் 
  • கல்யாண முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும். பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும். ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.
  • அமுக்கிராங்கிழங்கு இலையினை கஷாயம் காய்ச்சி பருகினால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
  • 1 கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும். வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.
  • முருங்கை கீரையை சாப்பிட்டுவர தாய்ப்பால் அதிகரிக்கும். தக்காளி இலைகளை காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும். அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர        தாய்ப்பால் பெருகும். இளம் இலைகளைச் சமைத்து உண்ண தாய்ப்பால் சுரக்கும். அகத்தி இலையைச் சமைத்து உண்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
  • அம்மான் பச்சரிசி இலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்துவர தாய்ப்பால் அதிகரிக்கும். குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
  • சிறிதளவு கேழ்வரகு மாவு, எள்ளு ஒன்றாக சேர்த்து இடித்து அடை செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் பின்பு தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வேண்டிய தாய்ப்பால் சுரக்கும்.
  • சிறிதளவு அம்மான் பச்சரிசி கீரையின் பூக்களை 1 கப் எடுத்து சுத்தம் செய்து நன்றாக மைய அரைத்து பாலுடன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
  • முருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். இளம் பிஞ்சான நூல்கோலை சமைத்து உணவுடன் உண்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். ஒரிதழ் தாமரை இலையை அரைத்து சிறிதளவு மோரில் கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.
  • அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதேஅளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.
http://pettagum.blogspot.in/2015/10/blog-post_13.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 9 மே, 2017

சின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்!

பெற்றோர்களுக்கு பெஸ்ட் டிப்ஸ்! படங்கள்: தே.தீட்ஷித்.

மேட்டருக்குள் நுழையும் முன்பு, தயவு செய்து பேனாவை எடுங்கள். கீழே உள்ள நான்கு கேள்விகளுக்கு உங்கள் மனதில் தோன்றிய பதிலை 'டிக்' செய்யுங்கள்.


கேள்வி 1. உங்கள் 10 வயது மகள், பிறந்தநாளுக்கு அத்தை கொடுத்த 100 ரூபாயைத் தொலைத்துவிட்டாள்.  நீங்கள் என்ன செய்வீர்கள்?
A. காசு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவேன்.
   
B. என் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் கொடுத்து குழந்தையை சமாதானப் படுத்துவேன்.
   
C. என் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் தந்துவிட்டு, அதற்குப் பதிலாக இன்னின்ன வேலை (ஹோம் வொர்க், வீட்டு வேலை) செய்யவேண்டும் என்று கண்டிஷன் போடுவேன்.
   

கேள்வி 2. உங்கள் 15 வயது மகன், ரொம்ப நாளாக பணம் சேமித்து வருகிறான். இப்போது 2,000 ரூபாய் போட்டு ஒரு மொபைல் போன் வாங்க ஆசைப்படுகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்?
A. அவனுடைய காசுதானே என்று நினைத்து, அவன் வாங்க விரும்புவதை வாங்க அனுமதிப்பேன்.
     
B என்னுடைய பழைய மொபைல் போனை அவனுக்குத் தருவேன்.
 
C. சேமிப்பை எப்போதும் தொடவே கூடாது என்று சொல்வேன்.
     

கேள்வி 3.  உங்கள் 16 வயது மகனுக்கு டிரெஸ் வாங்கவேண்டும். 'இந்தா பணம், உனக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு வா' என்று சொல்லி அனுப்புகிறீர்கள். அவன் அவனுக்குப் பிடித்த, ஆனால்
கொஞ்சமும் நன்றாக இல்லாத துணிமணியை வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்?
A. அந்த உடைகளைப் போட்டுக்கொள்ள அனுமதிப்பேன். ஆனால், பணத்தை எப்படி கவனமாகப் பயன்படுத்தவேண்டும், எப்படி தரமான பொருளில்தான் போடவேண்டும் என்ற அறிவுரையுடன்.
 
B. 'உன்னை நம்பி பணத்தைத் தரவேகூடாது' என்று சொல்லி புலம்புவேன்.
C. அவனுடன் கடைக்குச் சென்று துணிகளை மாற்றிக் கொண்டு வருவேன்.

கேள்வி 4. உங்கள் 7 வயது மகளுடன் கடைக்குச் செல்கிறீர்கள். அவள் பார்க்கும் பொருளை எல்லாம் வாங்கச் சொல்லி அழுது அடம் பிடித்து 'சீன்' போடுகிறாள்.
A. அவசர அவசரமாக அவள் கேட்டவற்றை வாங்கித் தந்து இடத்தைக் காலி செய்வேன்.
 
B. 'ஒண்ணே ஒண்ணுதான் வாங்கித் தருவேன். இந்தக் காசுக்குள்தான் வாங்கித் தருவேன்' என்று சொல்லி வாங்கித் தருவேன்.
 

C. எவ்வளவு வேண்டுமானாலும் அழட்டும் என்று சட்டை செய்யாமல் ஷாப்பிங்கை முடிப்பேன்.
நீங்கள் டிக் செய்த விடைகளுக்கு எத்தனை மார்க் (0, 1 அல்லது 2) என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி போடவும்.

கேள்வி 1: a.1 b.0 c.2 கேள்வி 2:a.2 b.0 c.1 கேள்வி 3:a.2 b.0 c.1 கேள்வி 4: a. 0 b. 1 c. 2
நீங்கள் எத்தனை மார்க் எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்தாச்சா? இனி உங்கள் மார்க் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
0-3 மார்க்: இப்படியே போய்க்கொண்டிருந்தீர்களானால் உங்கள் குழந்தைகள் கல்யாணம் ஆனபின்னால்கூட ஆத்திர அவசரத் துக்கு அப்பாதான் காசு தரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
4-5 மார்க்: ஓகேதான், இன்னும் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.
6-க்கும் மேலே: சரியான பாதையில் போகிறீர்கள். உங்கள் குழந்தைகளை காசு விஷயத்தில் சூப்பர் ஸ்மார்ட் ஆக்கிவிடுவீர்கள்.

கேள்வி 2-க்கான ஒரு சிறு விளக்கம். சேமித்து வைத்து விரும்பிய பொருள் வாங்கினால் தங்கள் சேமிப்பில் வாங்கியது இது என்று பெருமிதம் அடைவார்கள். மேலும், சேமிக்க உற்சாகம் வரும். பணத்தின்,

உழைப்பின் அருமையும் புரியும்.
நம் கஷ்டம் எல்லாம் நம்மோடு போகட்டும்; நம் குழந்தைகள் வாழ்க்கையாவது நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்காத பெற்றோர்களே இப்போது இல்லை. நமக்குக் கிடைக்காத வாய்ப்புகள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு முக்கியமாகச் செய்யவேண்டியது ஒன்று உண்டு. அது, குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுத் தருவது.
'எல்லாரும் காலங்காலமாகச் சொல்றது தானே? இதுல என்ன புதுசா இருக்கு? சொல்றது எல்லாருக்கும் ஈஸி, புள்ளைங்க கிட்ட சொல்லிப் பாருங்க அப்பத்தான் தெரியும் எவ்ளோ கஷ்டம்னு' என்று அலுத்துக்கொள்கிறீர்களா? அப்ப, இந்தக் கட்டுரை கண்டிப்பாக உங்களுக்காகத்தான்.
பிள்ளைகளுக்கு சேமிப்புப் பழக்கம் வருவதற்கு பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, அவர்களே விரும்பிச் செய்கிற மாதிரி சேமிக்கும் பழக்கத்தை அவர்களிடம் எப்படி கொண்டுவருவது? எனக்குத் தெரிந்த வழிகளைச் சொல்கிறேன். பின்பற்றிப் பாருங்கள், நிச்சயம் மாற்றம் தெரியும்.

உண்டியலை வாங்கித் தாங்க!
குழந்தைக்கு ஆறு வயதானவுடன் ஓர் உண்டியலை வாங்கிக் கொடுங்கள். சேமிக்கவேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி, உண்டியலில் காசு போட பழக்குங்கள். தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று எப்போது யார் காசு தந்தாலும் முதலில் ஒரு பகுதியை உண்டியலில் போடப் பழக்குங்கள். எப்போதும்
Savings first, Spending next தான்! கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் ஒரு பகுதியைச் சேமிக்கவேண்டும்; மீதியை செலவு செய்ய வேண்டும். இது சின்ன வயதிலேயே மனதில் பதிந்துவிட்டால் ஈஸி! எப்படி சின்ன வயதிலேயே பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், அபாகஸ் க்ளாஸ் அனுப்புகிறோமோ அப்படியே சேமிக்கும் பழக்கத்தையும் ஆரம்பித்துவிடவேண்டும். சின்ன வயதில் ஆரம்பித்துவிட்டால் அது தன்னிச்சை செயல்போல ஆகிவிடும். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். தொட்டில் பழக்கம்... பழமொழி தெரியும்தானே!

வங்கிக் கணக்கை ஆரம்பியுங்க!
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கு ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்துவிடுங்கள். இப்போது குழந்தைகளுக்கான சேவிங்க்ஸ் அக்கவுன்ட் எல்லா வங்கிகளிலும் கிடைக்கிறது. பெற்றோரை கார்டியனாகக்கொண்டு மைனர் குழந்தைகளுக்கு அக்கவுன்ட் ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு செக்புக் வசதி, பாஸ்புக், 10 வயதுக்கு மேல் என்றால் ஏ.டி.எம். கார்டு வசதி என்று பெரியவர்களைப்போல் அவர்களுக்கும் ஒரு 'செட்' கிடைக்கும். விளையாட்டாக உண்டியலில் சேர்த்தது போக, பேங்கிலேயே அக்கவுன்ட் இருப்பது குழந்தைகளை சேமிப்பு விஷயத்தில் சீரியஸ் ஆக்கும். தங்கள் பெயரில் பேங்கில் இருந்து அடிக்கடி லெட்டர் வீட்டுக்கு வருவது, பேங்குக்குப் போய் பணம் கட்டுவது இதெல்லாம் அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும். மேலும், சேமிக்கத் தூண்டும்.

வங்கிக்கு அழைச்சுகிட்டுப் போங்க!
ஆறாம் வகுப்பு தாண்டிய குழந்தைகள் எனில், நீங்கள் வங்கிக்குப் போகும்போது அவர்களையும் முடிந்தவரை கூடவே அழைத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை குலதெய்வம் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுபோய் சாமி கும்பிடப் போகிற மாதிரி, மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுகிற மாதிரி, வங்கிக்கும் அழைத்துச் செல்லுங்கள். நம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா? நம் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா? வங்கியில் எங்கே பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, செக் போடுவது... இப்படி எல்லா விஷயத்தையும் சொல்லித் தந்து, அவர்களைவிட்டே செய்யச் சொல்லுங்கள். தவறு செய்வார்கள், பரவாயில்லை. அடித்தல் திருத்தல் இருக்கும், தப்பே இல்லை. தவறு செய்யாமல் யாரும் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அதனால், பொறுமையாகச் சொல்லிக் கொடுங்கள். டெபாசிட், வித்டிராவல், செக், அக்கவுன்ட், ஃபிக்ஸட் டெபாசிட், வட்டி போன்ற வார்த்தைகள் எல்லாம் பழகட்டும். எப்படி புகார் செய்வது என்று உங்களை கவனித்து தெரிந்து கொள்வார்கள்.
இதெல்லாம் தெரிந்துகொண்டால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். அனாவசிய பயம் குறையும். நம் பணத்தை வங்கியிடம் தருகிறோம். அவர்கள் சேவை திருப்தியாக இருந்தால்தான் தொடருவோம். இதில்
  பயப்படவேண்டிய அவசியம் என்ன என்று தைரியம் வரும். குழந்தையாக வெகுளியாக இருந்தவர்கள் உலக நடப்புகள் எல்லாம் தெரிந்தவர்கள் ஆகிவிடுவார்கள். 

நிதி நிலைமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
வீட்டு நிதி நிலைமையைப் பத்தி அவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். 'நீ சின்னப் பையன், உனக்கு ஒண்ணும் தெரியாது, பெரியவங்க பேசும்போது குறுக்கே வராதே' என்று சொல்லாதீர்கள். வருமானம் எப்படி எல்லாம் வருகிறது, மாதச் செலவுகள் என்ன? எதிர்காலச் செலவுகள் என்னென்ன என்று அவர்களுடன் விவாதியுங்கள். எதிர்பாராத திடீர் செலவுகளும் நிறையவரும்; சமாளித்தாக வேண்டும் என்பதைப் புரியவையுங்கள். 

அவர்களை சமமாக மதித்துப் பேசுகிறீர்கள் என்றாலே ரொம்ப பெருமையாக உணர்வார்கள். பொறுப்பு உணர்வு அதிகரித்துவிடும். தங்களையும் குடும்பத்தில் முக்கியமான டீம் மெம்பராக நினைத்து தன்னால் முடிந்த பங்குக்கு உதவி செய்வார்கள். அப்படி என்றால்? ஃபேன், லைட்டை நிறுத்தாமல் அறையைவிட்டு வெளியே போவது குறையும். வீண்செலவு செய்வது குறையும். நம்மையும் வீண்செலவு செய்யவிடமாட்டார்கள். சில சமயம் நம் மனம் அலைபாய்ந்து சில பொருட்களை வாங்க முயலும்போது தடுப்பார்கள். நமக்கே 'தகப்பன் சாமியாக' மாறி நம் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். நல்ல 'டீம் வொர்க்' குடும்பத்தில் அமையும். சந்தோஷம் பெருகும். 

முடிவாக, நான் சொல்ல விரும்புவதெல்லாம், இந்தக் காலத்து குழந்தைகளை கம்மியாக எடைபோடாதீர்கள்!  அவர்கள் படுஸ்மார்ட். நாம் கோடு போட்டால் ரோடே போடுவார் கள். அவர்களிடம் பொறுப்பு தந்து பாருங்கள்; தாங்களும் கற்றுக்கொண்டு புதுப்புது விஷயங் களைத் தேடிப் படித்து நமக்கும் சொல்லித் தருவார்கள். 
நீங்கள் சிறுகச் சிறுக சேமித்து 20 லட்சம் ரூபாயைச் சேர்த்து உங்கள் குழந்தை கையில் கொடுப்பதைவிட நல்லது, அவர்களை சின்ன வயதில் இருந்தே காசு விஷயத்தில் உஷாராக இருக்க பழக்குவது. சேர்த்து வைத்த சொத்து அழிந்துபோகும். ஆனால், கல்வி அழியாது. சேமிக்க பழக்குங்கள். பணம் பற்றிய அறிவை அவர்களிடம் ஏற்படுத்தினால், அவர்களைப் பற்றி ஆயுசு முழுக்க கவலைப்பட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 7 மே, 2017

சிசுக்களை அழவைக்கும் டயப்பர் டார்ச்சர்!


தாரிணிக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகிறது. குழந்தை லேசாகத் தும்மினால்கூட தாரிணியும் அவர் கணவரும் பதைபதைத்துப்போவார்கள். திடீரென ஒருநாள் குழந்தையின் பின்புறத்திலும் தொடை இடுக்கிலும் சிவப்பு நிறத்தில் திட்டுத் திட்டாகத் தோன்ற... பயந்துபோய் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் ஓடினர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், 'குழந்தையின் மலத்தில் இருந்த கிருமிகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கின்றன' என்று சொல்லி இருக்கிறார்.
மலத்தில் இருந்த கிருமிகள் சருமத்தில் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்தின?
குழந்தையை மெத்தையில் படுக்கவைக்கும்போது சிறுநீர், மலம் கழித்தால் மெத்தை வீணாகிவிடும் என்பதால் டயப்பர் அணிவித்து இருக்கிறார்கள். ஒன்றிரண்டு முறை குழந்தை மலம் கழித்ததை உடனே கவனிக்காமல் விட்டுவிட, அதில் உள்ள கிருமிகள் சருமத்தினுள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.


குழந்தையுடன் வெளியில் கிளம்பும்போது அணிவிக்கும் டயப்பரை, மறுபடியும் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை பல அம்மாக்கள் அகற்றுவதில்லை. குழந்தை சிறுநீர் கழித்தாலும், 'டயப்பர்தான் ஈரத்தை உறிஞ்சிவிடுமே' என்று அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். வேறு சில அம்மாக்களோ குழந்தையை இரவு தூங்கவைக்கும்போது அணிவிக்கும் டயப்பரை, காலையில்தான் கழட்டுகிறார்கள். டயப்பரைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அலசுகிறார்கள் குழந்தை நல மருத்துவர் ராமச்சந்திரனும்
  தோல் சிகிச்சை நிபுணர் ஜானகியும்.
'நம்மூரில் வீட்டில் இருக்கும் பழைய துணியைக் கிழித்துக் கோவணம்
  கட்டுவார்களே... அதுதான் டயப்பருக்கான ஆரம்பம்.  வெளிநாட்டினர் அதில் சில மாற்றங்களைச் செய்து தற்காலத்துக்கு ஏற்றபடி நாகரிகமாக டயப்பர், நாப்கின் என்று விளம்பரப்படுத்தி விற்றுவருகின்றனர். உண்மையில் நம்முடைய கோவணம் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உடை. காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. மறுபடியும் துவைத்துப் பயன்படுத்தலாம். காற்றோட்டமாக இருக்கும். குழந்தை சிறுநீரோ, மலமோ கழித்தால் வெளியில் தெரியும். உடனே மாற்ற முடியும். ஆனால், வெளியில் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும்போது அடிக்கடி துணி மாற்றும் நிர்பந்தம் ஏற்படுவது கோவணம் ஏற்படுத்தும் அசவுகரியம். இதன் காரணமாகவே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஈரத்தை உறிஞ்சக்கூடிய வகையிலான டயப்பர் வந்தது.
பொதுவாக, குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். டயப்பர் அணிவிக்கப்படும் பகுதிகள் காற்றோட்டம் இல்லாமல் ஈரத்தன்மையுடன் காணப்படும். இதனால், தோலில் உள்ள சில பாக்டீரியாக்கள் வியர்வையுடன் வினைபுரிந்து காரத்தன்மையை அதிகமாக்கிவிடும். இது தொற்றுக்களை எளிதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் சருமத்தை மாற்றிவிடும். எனவே, இந்தச் சமயத்தில் குழந்தை சிறுநீர், மலம் கழித்தபிறகு கவனிக்காமல் விட்டுவிட்டால் கிருமிகள் உட்புகுந்து சருமத்தில் அரிப்பு, புண், எரிச்சல், சிவந்துபோதல், தோல் உரிதல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். இந்தப் பிரச்னைகளை 'டயப்பர் டெர்மடைட்டிஸ்' (Diaper Dermatitis) என்பார்கள். இதனால், குழந்தை அழுதுகொண்டே இருக்கும். சரியாகத் தூங்காது, சாப்பிடாது. ஒருவித உறுத்தல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை சற்றுக் குறைவாக இருக்கும். காரணம், தாய்ப்பாலில் அதிக அமிலத்தன்மை இருக்கிறது. இதனால், பாக்டீரியாவும் வியர்வையும் சேர்வதால் உண்டாகும் காரத்தன் மையை இது சமப்படுத்தும். ஆனால், புட்டிப்பாலில் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால், அதைப் பருகும் குழந்தைகளுக்கு டயப்பர் தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
டயப்பரிலேயே குழந்தை சிறுநீர், மலம் கழித்தால் வெளியில் தெரியாது. எனவே, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை டயப்பரைக் கழற்றி சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். குழந்தை முகம் சுளித்தாலோ, மலம் கழித்த வாடை தெரிந்தாலோ டயப்பரைக் கழற்றிப் பார்க்க வேண்டும். ஒருவேளை மலம், சிறுநீர் கழித்திருந்தால் டயப்பரைக் கழற்றி அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஈரம் போக நன்றாகத் துடைத்துவிட்டு புதிய டயப்பர் அணிவிக்கலாம்.
குழந்தை மலம், சிறுநீர் கழிக்காவிட்டால் எவ்வளவு நேரம் டயப்பரைப் பயன்படுத்தலாம் என்ற கேள்வி இப்போது எழலாம். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே டயப்பரைப் பயன்படுத்தலாம். அதுவும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஐந்து நிமிடங்கள் டயப்பரைக் கழற்றி, காற்றோட்டமாக இருக்கும்படி விட்டுவிட வேண்டும். வியர்வை இருந்தால் நன்றாகத் துடைத்துவிட்டு மறுபடியும் அணிவிக்கலாம்.

எலாஸ்டிக், ஒட்டக்கூடிய டேப் என இரண்டு வகைகளில் டயப்பர்கள் கிடைக்கின்றன. குழந்தையின் உடலுடன் ஒட்டி இறுக்கமாக இருக்கும், ஈரம் வெளியில் கசியாது என்பதால் பல பெற்றோர்கள் எலாஸ்டிக் வகை டயப்பரைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், இந்த எலாஸ்டிக் வகை டயப்பர் சில சமயங்களில் குழந்தையின் சருமத்தில் அழுத்தமாகப் பதிந்து பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பாதிப்பைத் தவிர்ப்பதற்கு எனப் பிரத்யேகமாக உள்ள கிரீம்களைப் பயன்படுத்தலாம். டேப் வகை டயப்பர்களில் இந்தப் பிரச்னை இருக்காது. மேலும், ஓரளவு காற்றோட்டமும் இருக்கும். எளிதாக அகற்றவும் முடியும்.
டயப்பர்களைப் பொருத்தவரை, தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். தற்போது சூப்பர் அப்சர்வ் காட்டன் டயப்பர்கள் கிடைக்கின்றன. இவை ஈரத்தை நன்றாக உறிஞ்சும். மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வகை டயப்பர்களில் 'எமோலியன்ட்' (Emollient) என்கிற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதனால் எரிச்சல் இருக்காது.
டயப்பர் அணிவிக்கும் உடல் பாகத்தில், ஈரம் இல்லாமல் துடைத்து உலர்வாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம்!'


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 5 மே, 2017

ஆராரோ ஆரிராரோ’

பெரும்பாலானவர்கள் தூங்குவதை, நேரத்தை வீணாக்கும் செயல் என்று கருதுகின்றனர். ஆறு மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால் ஒன்றும் ஆகிவிடாது என்று நம்புகிறவர்கள் அதிகம். என்றாவது ஒரு சில நாட்கள் மிகக் குறைவான நேரம் தூங்கினால், பெரிய பிரச்னை வராது. ஆனால், நீண்ட காலமாகக் குறைந்த நேரம் தூங்கினால், அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும்.



போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால்...
தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு இதய நோய், மாரடைப்பு, இதயச் செயல் இழப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல் பருமன்
போதுமான அளவு தூங்காமல், டி.வி பார்ப்பவர்கள், கம்ப்யூட்டர் முன்னால் மணிக்கணக்கில் நேரம் செலவிடுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் 6 முதல் 8 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கிறது.
இதய நோய்
போதுமான நேரம் தூங்காதவர்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 100 சதவிகிதம் அதிகம்.

தூக்கம்... சில தகவல்கள்!
நம்முடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். உடற்பயிற்சி, உணவுபோல தூக்கமும் மிகவும் அவசியமானது.
20-ல் ஒருவருக்கு ஸ்லீப் ஆப்னியா பிரச்னை உள்ளது.
ஒரு மனிதனால் 10 நாட்கள் வரை தூங்காமல் இருக்க முடியும். அதற்கு மேல் தூங்காமல் இருந்தால், மரணம் நிகழும் வாய்ப்பு உள்ளது.
தூக்கத்தை ஒத்திப்போடும் ஒரே உயிரினம் மனிதன்தான்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 3 மே, 2017

அதிகாலை வெந்நீர்,ஆஹா பலன்கள்!

குளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு.  'எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்' எனச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
உணவு, உடை, இருப்பிடம்போலவே நம் அன்றாட வாழ்வுக்கு தண்ணீர் மிக அவசியம். உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க, நச்சுக்களை அகற்ற... என நீர் ஏராளமான வேலைகளை நமக்குள் செய்கிறது. இரண்டு ஆக்ஸஜனும் ஒரு ஹைட்ரஜனும் சேர்ந்தது நீர் எனப் படித்திருப்போம். அது மட்டுமல்ல, நாம் அருந்தும் நீரில் சோடியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம் எனப் பல்வேறு தாதுஉப்புக்கள் கலந்திருக்கின்றன. இப்படி, பல நன்மைகளை அள்ளித் தரும் நீரைக் கொதிக்கவைத்து அருந்தலாமா, எவ்வளவு சூடாக அருந்தலாம், அதனால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.



கழிவுகளை நீக்கும் வெந்நீர்
காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம், நம் உடல் எதிர்கொள்ளும் பெரும்பான்மையான நோய்களுக்குக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. வெந்நீரோ, சூடான பொருளோ நம் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும்; உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது. இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.

வெந்நீர் குடிக்க உகந்த நேரம்
எல்லா நேரமும் வெந்நீர் அருந்தலாம். இருப்பினும், அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது.
  அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, வெந்நீருடன் கலக்கும். ஓசோன் என்பது, சூப்பர் ஆக்சிஜன். அது நம் உடலின் சக்தியைத் தூண்டிவிடும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்தால், செரிமானத்தைத் தூண்டும்.

செரிமான மண்டலம் மேம்பட...
நமது இரைப்பையானது, புரத செரிமானத்துக்குத் தேவையான பெப்ஸின், ரெனின் முதலான என்ஸைம்களைக் கொண்டுள்ளது. இவை இரைப்பையில் இருக்கும். தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. அன்றைய தினம் முழுக்க செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.

செல்கள் புத்துணர்வு பெறும்
வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும். செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். இதனால் நம் உடல், பலவிதமான தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது.
போதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.

வெந்நீரும் உலோகங்களும்!
வெண்கலம், தாமிரப் பாத்திரங்களில் வெந்நீர் காய்ச்சி அருந்துவது நல்லது. இந்தப் பாத்திரங்கள் இல்லாதவர்கள், எவர்சில்வர் பாத்திரத்தில், நான்கு டம்ளர் தண்ணீர்விட்டு, 60 கிராம் தாமிரத்தட்டு / கட்டியைப் போட்டு, நன்கு கொதிக்கவிட்டு அருந்தலாம் அல்லது தாமிர டம்ளரில் அருந்தலாம். இதேபோல, வெள்ளி, தங்கத்தைப் போட்டும் தண்ணீரைக் காய்ச்சி அருந்தலாம். இதனால்...
நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், கீழ் வாதம், மன அழுத்தம் போன்றவை கட்டுப்படும்.
உணவு மண்டலம், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் குணமாகும்.
சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை போன்றவற்றில் உள்ள கோளாறுகள் சரியாகும்.

மற்ற பயன்கள்!
இருமல் மற்றும் சளி ஏற்பட்டால், நம் தொண்டையின் டான்சிலில் அதிக வலி ஏற்படும். அப்போது, வெந்நீர் குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும்; நீர்மமாக உள்ள சளியைக் கெட்டியாக்கி வெளியேற்றும். நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, ரத்தக் குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலின் ரத்த ஓட்டமும் மேம்படும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 1 மே, 2017

விளையாட்டா... விபரீதமா? விஷமாகும் பொம்மைகள்!

குழந்தைகளைக் காப்பது எப்படி?

குழந்தைகளின் முதல்  நண்பன் பொம்மை.  குழந்தைகளுக்குப் பொம்மைகளோடு விளையாடுவதும்  உறவாடுவதும் அலாதியான ஆனந்தம். பார்க்கும் ஒவ்வொரு பொம்மையையும் வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிக்காத குழந்தைகளே இல்லை. தூங்கும்போது, குளிக்கும்போது என நாள் முழுக்க பொம்மைகளை உடன் வைத்திருந்தாலும் அவர்களின் ஆசை தீராது.
விலங்குகளை, பறவைகளை, பொருட்களை... மொத்தத்தில் வெளி உலகை குழந்தைகள் தெரிந்துகொள்ள உதவும் முதல் சாதனம் பொம்மைகளே. அந்தக் காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். இப்போதோ, பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொம்மைகள்தான் குழந்தைகள் கைகளில் தவழ்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளில் அதிக அளவில் காரீயம் உள்ளிட்ட நச்சுக்கள் கலந்திருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகள்.
பொம்மைகளில் எது பாதுகாப்பானது, எது ஆபத்தானது எனக் கண்டறிந்து வாங்குவது அவசியம். விலை மலிவானது, எளிதில் கிடைக்கக்கூடியது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எது குழந்தைக்கு அவசியம் என அறிந்து, வாங்கிக் கொடுக்க வேண்டும்.


குழந்தைகளைக் கவரும் பொருட்கள்
பிரபல கார்ட்டூன் வடிவங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பைகளில், தாலேட்ஸ் (Phthalates) என்ற ரசாயனம் 3,000 பி.பி.எம் என்ற அளவுக்குக் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த
  பிளாஸ்டிக் பொருளாக இருந்தாலும் அதில், 1,000 பி.பி.எம் வரைதான் தாலேட்ஸ் கலந்திருக்க அனுமதி உள்ளது. 'பாக்பேக்' எனும் பைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன்களை அச்சிட்டு, அதன் முன் வடிவத்தில் தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் இந்தப் பொம்மையைப் பயன்படுத்தும்போது, வாயில்வைக்க வாய்ப்பு உள்ளது.  எனவே தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்பட்ட பைகளைத் தவிர்ப்பது நல்லது.
குழந்தைகள் குளிக்கும் வாட்டர் டப்பில் ரப்பர் வாத்துகளை நீந்தவிடுவது உண்டு. குழந்தைகளைக் குளிக்கவைக்க பெற்றோர் செய்யும் யுக்தி இது. இந்த வாத்து பொம்மையில் 1,400 பி.பி.எம் தாலேட்ஸ் கலக்கப்படுகிறது.

இரும்பை ஈர்க்கும் அல்லது ஒட்டிக்கொள்ளும் காந்தங்களில் (Magnet) செய்யப்பட்ட பொம்மைகளைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. மிகச்சிறிய பொம்மைகளில்கூட இப்போது, காந்தம் இருக்கிறது. இதைக் குழந்தைகள் விழுங்கிவிட வாய்ப்புள்ளது. காந்தம் மற்றும் காந்தத்தால் தயாரிக்கப்படும் பொம்மைகளை 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குத் தரலாம்.
குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் கிளிப்கள், பிரேஸ்லெட், மேலாடைகளில் தகதகவென மினுங்கும் ஜிகினா மற்றும் ஜிமிக்கிகள் பதிக்கப்பட்டு இருக்கும். இவை கை, முகம், ஆடைகளில் ஒட்டி அலர்ஜியை ஏற்படுத்தலாம். தெரியாமல் கண், வாயில் பட்டால், எரிச்சல் உணர்வும் ஏற்படும்.

ஃபர் பொம்மை பாதுகாப்பானதா?
ஃபர் பொம்மைகளில் தூசு அதிகமாகப் படிய வாய்ப்பு இருக்கிறது. இதை வைத்து குழந்தைகள் விளையாடும்போது தும்மல், வீசிங் அலர்ஜி, சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். ஃபர் பொம்மை தூசுகளை ஈர்த்து வைத்துக்கொள்ளும். அதைத் தொடும்போதும் உதறும்போதும் தும்மல் மூலமாக நுரையீரல் வரை தூசுகள் செல்லும்.
குழந்தைகள், ஃபர் பொம்மைகளை வாயில் கடித்து, பஞ்சு போன்ற அதன் நூலைச் சப்பி விழுங்கவும்கூடும். இது, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். சாலையோரக் கடைகளில் வாங்கும் ஃபர் பொம்மைகள், தரமானவையாக இருக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நாளடைவில் பஞ்சு போன்ற முடிகள் வீடு முழுதும் பரவி, உணவு, நீர் போன்றவற்றிலும் கலந்து, பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதாலும் இதே பிரச்னை வரும். விலங்குகளின் முடி, மூக்கு, வாய் மூலமாக உடலுக்குள் சென்று ஆஸ்துமா, வீசிங், நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்.
கிரயான், கலர் பெயின்டிங்சீனாவில் தயாரிக்கப்படும் கிரயானில் ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) எனும் பிளாஸ்டிக் கெமிக்கல் உள்ளது. இது, காற்றில் பரவி குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பானப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்தும்போது, நுரையீரல் வீக்கம், புற்றுநோய் வரலாம் என்கிறது அமெரிக்க
  சுகாதார நிறுவனம் (U.S. Occupational Safety and Health Administration (OSHA)).
தொடர்ந்​து, பிளாஸ்டிக் பொம்மைகளை வாயில் வைப்பதால், அதிலிருக்கும் பெயின்ட் உரிந்து, வாய்க்குள் செல்லலாம். இந்தப் பழக்கத்தைக் குழந்தை தொடர்ந்து செய்தால், ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்ற உள் உறுப்புகள் பாதிக்கக்கூடும்.

பொம்மைகளை அருகில் வைத்து விளையாடலாம். ஆனால், வாயில் வைக்கக் கூடாது என்பதைக் குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது நல்லது.
பொம்மைகளை வாங்கும்போது பிராண்டட் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம். CE Mark, BS EN 71, Lion Mark போன்ற முத்திரைகள் கொண்ட வெளிநாட்டு பொம்மைகள் ஓரளவுக்குப் பாதுகாப்பானவை.
​ஃபர் பொம்மைகளின் நூல் இழைகள் உதிர்கின்றனவா என உதறிப்பார்த்து வாங்கலாம். நூல் உதிராத பொம்மைகள் என்றாலும்,
  சாலை ஓரங்களில் வாங்குவதைவிட பொம்மைக் கடையில் வாங்குவது பாதுகாப்பானது. ஃபர் பொம்மையைத் தவிர்த்து, நூலிழைகள் இல்லாத, சாஃப்ட் துணியில் வரும் பொம்மைகளை வாங்கலாம். பிளாஸ்டிக் பொம்மைகளில் 2, 3 அல்லது `V', 7  எனப் பொறிக்கப்பட்டிருக்கும் எண்கள் இருந்தால், அவற்றை அவசியம் தவிர்க்கவும். எண் 1, 2, 4, 5 எண்கள்கொண்ட பொம்மைகளை வாங்கலாம். எடை இல்லாத மரபொம்மைகள் வாங்கலாம். இதில், செதில்கள் இருக்காது. புரியாத மொழியில் லேபிள் இருப்பவற்றைத் தவிர்க்கலாம்.

ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள்
இரும்பு ஸ்பிரிங், எலாஸ்டிக் ரப்பர் பாண்டு, எலாஸ்டிக் கயிறு கட்டிய பொம்மைகளைக் குழந்தைகள் இழுத்து விளையாடும்போது, கண், கை, கால்களில் சுளீரென அடிபட நேரலாம்.
குட்டி பொம்மைகள், அழகான வடிவில் இருக்கும் மெழுகு பொம்மைகளைக் குழந்தைகள் விழுங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கூர்மையான முனைகள்கொண்ட பொம்மைகளால் ஆபத்து ஏற்படலாம். கண் போன்ற முக்கிய உறுப்புகள் பாதித்தால், குழந்தையின் எதிர்காலமும் மோசமாகும்.
பாலிஸ்டர், நைலான் துணிகளால் ஆன கைவினைப் பொம்மைகளைக் குழந்தைகள் வாயில்வைத்துச் சப்பினால், அந்த சாயங்கள் வயிற்றுக்குள் சென்றுவிடும்.
காரீயம், பாதரசம், காட்மியம் போன்ற உலோகங்கள் கலந்த பொம்மைகளை முற்றிலும் தவிருங்கள்.
பிஸ்பீனால் ஏ (Bisphenol A), வினைல் குளோரைடு (Vinyl chloride), டையாக்சின் (Dioxin), மற்றும் தாலேட்ஸ் (Phthalates) கலந்த பிளாஸ்டிக் பொம்மைகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
வயதுக்கேற்ற பொம்மைகள்
0-3 மாதங்கள் - கண்களால் மட்டுமே பார்க்கும் வயது. அடர் நிறங்கள்கொண்ட திரைச்சீலைகள், ஊஞ்சலில் கட்டிவிடும் பொம்மைகள், பெரியவர் கை வைத்து அழுத்திச் சத்தம் ஏற்படுத்தும் பொம்மைகளைத் தரலாம்.
3-6 மாதங்கள் - தலைகுப்புற விழுந்து, நகர்ந்து செல்வதால், மென்மையான பொம்மைகள், நகர்ந்து செல்லும் பெரிய பொம்மைகளைத் தரலாம். பல் மருத்துவர் ஆலோசனையுடன், பற்களின் வளர்ச்சிக்கு உதவும் 'டூத் டாய்ஸ்' வாங்கித் தரலாம்.
6-9 மாதங்கள் - உட்கார்ந்து, நிற்கும் குழந்தைகளுக்கு, நடைவண்டி, பெரிய பந்து ஆகியவற்றைத் தரலாம்.
9-12 மாதங்கள் - நடப்பது, ஒடுவது எனச் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு, கியூப்ஸ் விளையாட்டுப் பொருட்கள், பெரிய படங்கள் பதிந்த கதைப் புத்தங்கள், எடையில்லாத, அடுக்கிவைக்கும் பொம்மைகளைத் தரலாம்.
12- 18 மாதங்கள் - வண்ணம் தீட்டும் புத்தகம், படங்கள் இருக்கும் புத்தகங்களைக் கொடுக்கலாம். கலர் பென்சிலைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கற்றுத்தருவது நல்லது.
பொம்மைகள்... கவனம்!
பிராண்டட் பொம்மைகள் மற்றும் பெயின்ட் உதிராத பொம்மைகளைக் கொடுக்கலாம்.
சாஃப்ட் டாய்ஸ்களைத் தரலாம். பி.வி.சி இல்லாத பொம்மைகள் ஓரளவுக்குப் பாதுகாப்பானவை.
நூலிழைகளால் செய்யப்படும் பொம்மைகள், எளிதில் தீப்பிடிக்கக்கூடியவை. இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
பெயின்ட் அடித்த பொம்மைகளாக இருந்தால், அது காரீயம் (Lead) கலக்காத பொம்மையாக இருக்க வேண்டும்.
எடை குறைவான பொம்மைகளைத் தேர்ந்து எடுக்கலாம்.
வண்ணம் தீட்டும் விளையாட்டுப் பொருட்களில், கெமிக்கல்கள் கலந்திருக்கக் கூடாது.
பெரிய பொம்மைகளை வாங்கித் தரலாம். இதனால், வாயில் வைத்து விழுங்குவது தடுக்கப்படும்.
குட்டிப் பந்து, கோலி போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. அல்லது இந்தப் பொருட்களைப் பெற்றோர் பார்வையில் விளையாட அனுமதிக்கலாம்.
பேட்டரி பொருத்தப்பட்ட பொம்மைகள் என்றால், பேட்டரியைக் கழற்றாதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும்.
மர பொம்மைகளில் செதில் செதிலாக வந்தால் அவற்றைத் தரவே கூடாது. நன்கு மோல்டு செய்யப்பட்ட பொம்மைகளைத் தரலாம்.
மெட்டல் பொம்மையில் துரு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இயன்றவரை மெட்டல் பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.
கார், பைக் போன்ற பொம்மைகளைவிட பந்து, மனித வடிவில் உள்ள பொம்மைகளை வாங்கித் தரலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சிங்கமும், புலியும் சண்டை போட்டால் எது ஜெயிக்கும் என்று பார்க்கலாம்.

காட்டின் ராஜாவான சிங்கம் எப்போதும் பெண் புலி , சிங்க குட்டிகள் என குடும்பத்துடன் கூட்டமாகத் தான் வாழும். ஆனால் புலி தனிமையில் வாழும். அ...

Popular Posts