லேபிள்கள்

ஞாயிறு, 7 மே, 2017

சிசுக்களை அழவைக்கும் டயப்பர் டார்ச்சர்!


தாரிணிக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகிறது. குழந்தை லேசாகத் தும்மினால்கூட தாரிணியும் அவர் கணவரும் பதைபதைத்துப்போவார்கள். திடீரென ஒருநாள் குழந்தையின் பின்புறத்திலும் தொடை இடுக்கிலும் சிவப்பு நிறத்தில் திட்டுத் திட்டாகத் தோன்ற... பயந்துபோய் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் ஓடினர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், 'குழந்தையின் மலத்தில் இருந்த கிருமிகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கின்றன' என்று சொல்லி இருக்கிறார்.
மலத்தில் இருந்த கிருமிகள் சருமத்தில் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்தின?
குழந்தையை மெத்தையில் படுக்கவைக்கும்போது சிறுநீர், மலம் கழித்தால் மெத்தை வீணாகிவிடும் என்பதால் டயப்பர் அணிவித்து இருக்கிறார்கள். ஒன்றிரண்டு முறை குழந்தை மலம் கழித்ததை உடனே கவனிக்காமல் விட்டுவிட, அதில் உள்ள கிருமிகள் சருமத்தினுள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.


குழந்தையுடன் வெளியில் கிளம்பும்போது அணிவிக்கும் டயப்பரை, மறுபடியும் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை பல அம்மாக்கள் அகற்றுவதில்லை. குழந்தை சிறுநீர் கழித்தாலும், 'டயப்பர்தான் ஈரத்தை உறிஞ்சிவிடுமே' என்று அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். வேறு சில அம்மாக்களோ குழந்தையை இரவு தூங்கவைக்கும்போது அணிவிக்கும் டயப்பரை, காலையில்தான் கழட்டுகிறார்கள். டயப்பரைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அலசுகிறார்கள் குழந்தை நல மருத்துவர் ராமச்சந்திரனும்
  தோல் சிகிச்சை நிபுணர் ஜானகியும்.
'நம்மூரில் வீட்டில் இருக்கும் பழைய துணியைக் கிழித்துக் கோவணம்
  கட்டுவார்களே... அதுதான் டயப்பருக்கான ஆரம்பம்.  வெளிநாட்டினர் அதில் சில மாற்றங்களைச் செய்து தற்காலத்துக்கு ஏற்றபடி நாகரிகமாக டயப்பர், நாப்கின் என்று விளம்பரப்படுத்தி விற்றுவருகின்றனர். உண்மையில் நம்முடைய கோவணம் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உடை. காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. மறுபடியும் துவைத்துப் பயன்படுத்தலாம். காற்றோட்டமாக இருக்கும். குழந்தை சிறுநீரோ, மலமோ கழித்தால் வெளியில் தெரியும். உடனே மாற்ற முடியும். ஆனால், வெளியில் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும்போது அடிக்கடி துணி மாற்றும் நிர்பந்தம் ஏற்படுவது கோவணம் ஏற்படுத்தும் அசவுகரியம். இதன் காரணமாகவே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஈரத்தை உறிஞ்சக்கூடிய வகையிலான டயப்பர் வந்தது.
பொதுவாக, குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். டயப்பர் அணிவிக்கப்படும் பகுதிகள் காற்றோட்டம் இல்லாமல் ஈரத்தன்மையுடன் காணப்படும். இதனால், தோலில் உள்ள சில பாக்டீரியாக்கள் வியர்வையுடன் வினைபுரிந்து காரத்தன்மையை அதிகமாக்கிவிடும். இது தொற்றுக்களை எளிதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் சருமத்தை மாற்றிவிடும். எனவே, இந்தச் சமயத்தில் குழந்தை சிறுநீர், மலம் கழித்தபிறகு கவனிக்காமல் விட்டுவிட்டால் கிருமிகள் உட்புகுந்து சருமத்தில் அரிப்பு, புண், எரிச்சல், சிவந்துபோதல், தோல் உரிதல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். இந்தப் பிரச்னைகளை 'டயப்பர் டெர்மடைட்டிஸ்' (Diaper Dermatitis) என்பார்கள். இதனால், குழந்தை அழுதுகொண்டே இருக்கும். சரியாகத் தூங்காது, சாப்பிடாது. ஒருவித உறுத்தல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை சற்றுக் குறைவாக இருக்கும். காரணம், தாய்ப்பாலில் அதிக அமிலத்தன்மை இருக்கிறது. இதனால், பாக்டீரியாவும் வியர்வையும் சேர்வதால் உண்டாகும் காரத்தன் மையை இது சமப்படுத்தும். ஆனால், புட்டிப்பாலில் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால், அதைப் பருகும் குழந்தைகளுக்கு டயப்பர் தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
டயப்பரிலேயே குழந்தை சிறுநீர், மலம் கழித்தால் வெளியில் தெரியாது. எனவே, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை டயப்பரைக் கழற்றி சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். குழந்தை முகம் சுளித்தாலோ, மலம் கழித்த வாடை தெரிந்தாலோ டயப்பரைக் கழற்றிப் பார்க்க வேண்டும். ஒருவேளை மலம், சிறுநீர் கழித்திருந்தால் டயப்பரைக் கழற்றி அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஈரம் போக நன்றாகத் துடைத்துவிட்டு புதிய டயப்பர் அணிவிக்கலாம்.
குழந்தை மலம், சிறுநீர் கழிக்காவிட்டால் எவ்வளவு நேரம் டயப்பரைப் பயன்படுத்தலாம் என்ற கேள்வி இப்போது எழலாம். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே டயப்பரைப் பயன்படுத்தலாம். அதுவும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஐந்து நிமிடங்கள் டயப்பரைக் கழற்றி, காற்றோட்டமாக இருக்கும்படி விட்டுவிட வேண்டும். வியர்வை இருந்தால் நன்றாகத் துடைத்துவிட்டு மறுபடியும் அணிவிக்கலாம்.

எலாஸ்டிக், ஒட்டக்கூடிய டேப் என இரண்டு வகைகளில் டயப்பர்கள் கிடைக்கின்றன. குழந்தையின் உடலுடன் ஒட்டி இறுக்கமாக இருக்கும், ஈரம் வெளியில் கசியாது என்பதால் பல பெற்றோர்கள் எலாஸ்டிக் வகை டயப்பரைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், இந்த எலாஸ்டிக் வகை டயப்பர் சில சமயங்களில் குழந்தையின் சருமத்தில் அழுத்தமாகப் பதிந்து பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பாதிப்பைத் தவிர்ப்பதற்கு எனப் பிரத்யேகமாக உள்ள கிரீம்களைப் பயன்படுத்தலாம். டேப் வகை டயப்பர்களில் இந்தப் பிரச்னை இருக்காது. மேலும், ஓரளவு காற்றோட்டமும் இருக்கும். எளிதாக அகற்றவும் முடியும்.
டயப்பர்களைப் பொருத்தவரை, தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். தற்போது சூப்பர் அப்சர்வ் காட்டன் டயப்பர்கள் கிடைக்கின்றன. இவை ஈரத்தை நன்றாக உறிஞ்சும். மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வகை டயப்பர்களில் 'எமோலியன்ட்' (Emollient) என்கிற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதனால் எரிச்சல் இருக்காது.
டயப்பர் அணிவிக்கும் உடல் பாகத்தில், ஈரம் இல்லாமல் துடைத்து உலர்வாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம்!'


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts