தோலை உரிக்கும் நிகழ்வு உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்று என்றாலும் பாம்பு சட்டை உரிப்பது மிகவும் விசேஷமானது. உடலில் விஷத்தை வைத்திருக்கும் பாம்பின் சட்டையிலும் நஞ்சு இருக்கும் என்ற பயமும் பலருக்கு உண்டு.
மனிதர்களாகிய நமது சருமத்தில் இருக்கும் தோல் திசுக்களும் அவ்வப்போது வெளியில் வந்துக் கொண்டு தானே இருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் தோல் உரிதலில் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.
பாம்புகளின் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் சட்டை இருக்கும். பாம்பு சட்டை உரித்தல் Ecdysis அல்லது moulting என்று அழைக்கப் படுகிறது.
பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது சட்டையை அகற்றத் தொடங்கும்.
தனது தோலை உரிப்பதற்கு முன் பாம்புகள் தண்ணீரில் நீந்தும் என்று கூறப்படுகிறது. சருமத்தில் இளக்கத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த செயல்முறையை பாம்பு செய்யும். அதன்பிறகு, தனது மூக்கை ஒரு கடினமான பாறையிலோ அல்லது மரத்திலோ வைத்து பாம்பு தேய்க்கும்போது, அதன் தோல் உரியத் தொடங்கும்.
இளம் பாம்புகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தோலை உரிக்கும் என்றால், வயதான பாம்புகள் ஆண்டுக்கு 4 முதல் 8 முறை சட்டையை உரிக்கும். அதிக வயதான பாம்புகள் வருடத்திற்கு ஒரு முறை தோலை உரிக்கும். தோலை உரிக்கும் தன்மை என்பது வெப்பத்தைப்பொறுத்தும், அவற்றின் இரை எடுக்கும் தன்மையைப் பொறுத்தும் மாறும்.
ஆனால், தனது தோலை உரிப்பதற்கு முன்னரே உணவைத் தவிர்த்துவிடும் பாம்புகள் பாதுகாப்பான இடத்தில் பதுங்கிவிடும். பாம்பின் உரித்த சட்டை முழுவதுமாக இருந்தால், அது ஆரோக்கியமான பாம்பின் சட்டை என்று கருதப் படுகிறது.
--