லேபிள்கள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

மாஸ்டர் ஹெல்த் செக்கப் ஏன்? எதற்கு? எப்படி? டோட்டல் கைடு…

கூட்டுக் குடும்பங்கள் பெருகி இருந்த அந்த காலக் கட்டத்தில், ஒருவருக்கு ஏதேனும் உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டால், வீட்டில் உள்ள மூத்தவர்களின் கைவைத்தியமும், முதலுதவியும், அக்கம்பக்கத்தினரின் அணுகுமுறையும்ஒடுங்கி இருந்தவரை உற்சாகமாகத் துள்ளி எழவைத்துவிடும். மேலும், வீட்டுக்கு ஒரு குடும்ப டாக்டர் என்ற ஒரு நல்ல அமைப்பால், தனிப்பட்ட மனிதர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்னைகள் முழுவதையும் அவ்வப்போதே தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இன்றோ குடும்ப அமைப்பே மாறி, கூட்டுக் குடும்பங்களே இல்லாத நிலைமை. இதனால், 'குடும்ப மருத்துவர்' என்பதே மறைந்துவருகிறது.

தலைவலி வந்தால்கூட மூளை சிறப்பு மருத்துவரையும், நெஞ்சுவலி என்றால் இதய சிகிச்சை நிபுணரையும் தேடி ஓடி, ஆயிரக்கணக்கில் செலவு செய்வது வழக்கமாகிவிட்டது. ஒவ்வோர் மருத்துவரும் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட நோய்களை மட்டும் சிறப்பாகக் கவனித்துவிட்டு, மற்றவற்றை விட்டுவிடுகிறார்கள். ஒவ்வோர் உடல் உறுப்பின் பாதிப்புக்கும் அந்தந்தத் துறை மருத்துவரை அணுகவேண்டிய கட்டாய நிலை.

இரண்டு மணி நேரம் காத்திருக்கும் நோயாளியை மேலும் ஒரு மணி நேரம் பரிசோதித்து முழுவதையும் பார்ப்பதற்கு மருத்துவருக்கும் நேரம் இல்லை; அவ்வாறு முழுப் பரிசோதனைக்காகக் காத்திருக்க நோயாளிகளுக்கும் அவகாசம் இல்லை.

'முழு உடல் பரிசோதனைக்குப் பணம் அதிகம் தேவைப்படுமே. வியாதியே இல்லாதப்ப, எதற்கு செக்கப்?' என்கிற பொருமல்களுக்கும் குறைவே இல்லை.

ஆரோக்கியமான வாழ்வுக்கு முழு உடற் பரிசோதனை மிகவும் முக்கியம். பல்லாயிரக்கணக்கான

வர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து அவர்களுக்கு எளிய வாழ்க்கை முறை மாற்றம் மூலம் உயிர் காப்பது முழு உடல் பரிசோதனைத் திட்டம்தான்.

யாரெல்லாம் செய்து கொள்ளவேண்டும்?
அனைவரும் செய்துகொள்ளலாம். உயிர் மேல் அக்கறையும் குடும்பத்தின் மேல் பாசமும், உடலின் [img]நலனைப் பாதுகாக்கவும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

அதிகம் செலவாகுமா?
முழு உடல் பரிசோதனையை உடல் நலன் காக்க செய்யப்படும் நல்ல முதலீடாகக்கூடக் கருதலாம். முன்பே கவனிக்காமல்விட்டுவிட்டதால், நோய் வந்த பிறகு ஏற்படும் பணக் கஷ்டம், மனக் கஷ்டம், வலி, வேதனை இவற்றுடன் ஒப்பிடும்போது, முதலிலேயே செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்கு செய்வது மிகக் குறைந்த செலவுதான்.

அரசுப் பொது மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் 3,500 முதல் 50,000 ரூபாய் வரை மினி பரிசோதனை, மாஸ்டர் பரிசோதனை, இதயப் பரிசோதனை, வயிறு, மூளை, நரம்பு, எலும்புப் பரிசோதனை சிறப்புப் பரிசோதனை மற்றும் அதிசிறப்புப் பரிசோதனை, எனப் பல்வேறு பேக்கேஜ்களில் கிடைக்கின்றன. உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு உடல் பரிசோதனைக்கானக் கட்டணத்தையும் தந்துவிடுகின்றன.

யார் யாருக்கு என்னென்ன பரிசோதனை?
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வரும் கோளாறுகள், மரபணு மூலமாக வரும் வியாதிகள் போன்றவற்றைக் கண்டறிய என ஹெல்த் செக்கப் பேக்கேஜ்கள் உள்ளன.

பள்ளியில் சேருவதற்கு முன்பு, குழந்தைகளுக்கு நோய்த் தொற்று உள்ளதா? தடுப்பு ஊசியால் தடுக்கப்பட வேண்டிய நோய்கள் ஏதேனும் வந்துள்ளனவா? பல்லில் சொத்தை, சொறி சிரங்கு, அலர்ஜி, தேமல், தோல் நோய்கள், காது, மூக்கு, தொண்டை, டான்சில், அடினாய்டு நோய்கள், மூளை வளர்ச்சி, கண் பார்வைத் திறன், படிப்புத் திறன் குறைபாடுகள், இதயம், நுரையீரல், வயிறு, குடல் நோய்கள், சிறு நீரக நோய் தொற்றுகள் போன்றவை பற்றித் தெரிந்துகொள்ளலாம். மேலும் உடல் வளர்ச்சி சீராக உள்ளதா என்பதையும் அறியலாம்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு என்றே சிறப்பு முழு உடல் பரிசோதனைகளும் கிடைக்கின்றன.

பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பரிசோதனைக்கான செலவுத் தொகையை முதல் மாத சம்பளத்திலேயே கொடுத்துவிடுகின்றன. ஆனாலும் பலர் எந்த சோதனைகளும் செய்யாமலேயே மருத்துவர்களிடம் (பொய்) சான்று பெற்று வருவதும் வேதனை. இது நம் உடலுக்கு நாமே வேட்டு வைப்பதுபோலத்தான்.

போலீஸ், ராணுவம், ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்பவர்கள், மருத்துவப் பணியாளர்கள் வருடாவருடம் உடல் நலத் தகுதிச் சான்று பெறவேண்டியது கட்டாயம்.

முழு உடற்பரிசோதனை செய்துகொள்ளக்கால இடைவெளி என்ன?
30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மூன்று வருடத்துக்கு ஒரு முறையும்,

40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும்,

50 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருடத்துக்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.

பரிசோதனைக்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
முழு உடல் பரிசோதனைக்கு நீங்கள் முன்பதிவு செய்வது அவசியம்.

உங்களிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்து சில கேள்விக்கான பதில்களை எழுதச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் ஆம் அல்லது இல்லை என்பது போன்ற பதில்களாக இருக்கும்.

கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பசி, தூக்கம், பல், நாக்கு, மார்பு, இதயம், வயிறு, பிறப்பு உறுப்பு நோய்கள், உடலில் மதமதப்பு, மரத்துப்போதல், வலி, கூச்சம், பெரியதாகும் மச்சம், ஆறாத புண்கள் பற்றிய கேள்விகளாகவும் இருக்கும். எளிதில் விடையளிக்கக்கூடியவையே.

சந்தேகம் இருந்தால் கேட்டுவிட்டுப் பதில் எழுதுங்கள். அந்தக் கேள்விகளை வைத்துத்தான் உங்கள் உடலில் எந்த இடத்தில் என்ன நோய் வர வாய்ப்பிருப்பதாக நினைக்கிறார்களோஅதற்கான கூடுதல் பரிசோதனைகள் செய்வார்கள்.

வீட்டில் உங்கள் பெற்றோரிடம், நீங்கள் சிறு வயதில் போட்டுக்கொண்ட தடுப்பு ஊசி, செய்துகொண்ட அறுவை சிகிச்சைகள், ஒத்துக்கொள்ளாத மருந்துகள், இதற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் வீட்டில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு, வலிப்பு, சில பரம்பரை வியாதிகளான ஹீமோஃபீலியா போன்றவை இருந்தால், அதுபற்றிய விவரங்களையும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதளவில் எப்படித் தயாராவது?
இரவு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கி எழவேண்டும்.

காலையில் பல் துலக்கியதும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

பரிசோதனை முடியும் வரை டீ, காபி, பால், உணவு எதுவும் சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றோடுதான் பரிசோதனைக்கு வர வேண்டும்.

ப‌ரிசோதனையின்போது உணவு வயிற்றில் இருக்கலாமா?
சர்க்கரை, கொலஸ்ட்ரால், நல்ல கொழுப்பு ஹெச்.டீஎல், கெட்ட கொழுப்பு எல்.டீ.எல் மற்றும் வீ.எல்.டீ.எல், ட்ரைகிளிசரைடு போன்றவற்றை அளவிடவேண்டும். உணவு வயிற்றில் இருந்தால், அளவு மாறி அது வியாதியால் ஏற்பட்ட பாதிப்பா அல்லது சாப்பிட்ட உணவா எனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், பித்தப் பையில் இருக்கும் பித்த நீர், உணவைச் செரிமானம் செய்ய வயிற்றுக்குள் சென்றுவிடும். பித்தப்பை காலியாக இருந்தால், அதில் கல் ஏதாவது இருக்கிறதா என்பதும் தெளிவாகத் தெரியாது.

இரைப்பைக்குக் கீழே கணையம் இருப்பதால், உணவு இரைப்பையில் இருந்தால் கணையம் தெரியாது. சர்க்கரை நோய்க்குக் கணையத்தில் ஏற்படும் கல், கட்டி, அழற்சி ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.

பரிசோதனைகளுக்கு முன்பு ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருந்தால் மட்டுமே வயிற்றின் உள் உறுப்புகளை ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.

தண்ணீர் குடித்ததும், சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பி இருந்தால் மட்டுமே ஆண்களுக்குப் ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் வியாதிகளையும்; பெண்களுக்கு, கர்ப்பப்பை குறைபாடுகளையும், நீர்க்கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள் ஆகியவற்றையும் தெளிவாக ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.

சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்குச் சிறுநீர் கழித்த பிறகும் உள்ளே சிறுநீர் தேங்கி இருக்கிறதா, எந்த அளவில் அது இருக்கிறது என்பன பற்றி தெரிந்துகொள்ள மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்ப்பார்கள்

பரிசோதனைக்கு வரும் தினத்தன்று கடைப்பிடிக்க வேண்டியவை?
கோட், சூட், டை, ஷூ, சாக்ஸ், ஜீன்ஸ், இறுக்கமான பனியன் போன்ற ஆடைகளைத் தவிர்த்து எளிதில் கழற்றக்கூடிய தளர்வான ஆடைகள் அணிவது நல்லது. கையில் இரண்டு கைக்குட்டைகள் வைத்துக் கொள்ளவேண்டும்.

பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிவது வசதியானது.
மாதவிலக்கு சமயங்களில் பரிசோதனையைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்ய முடியாமல் வேறு ஒரு நாள் திரும்பச் செல்ல நேரிடும்.

பரிசோதனைக்கு முந்தைய இரவு விருந்தும் வேண்டாம்; பட்டினியும் வேண்டாம்.

மது, புகை, வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்றவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். புகைபிடித்த அடுத்த 30 நிமிடங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்.

அளவான சாப்பாடும் நல்ல தூக்கமும் தேவை.

நாக்கைப் பரிசோதித்து ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், சாதாரணப் புண், புற்று நோய், எய்ட்ஸ், டைஃபாய்டு, தைராய்டு குறைபாடுகள், மூளை பாதிப்புகள், ஈறு, பல்லில் ஏற்பட்டுள்ள நோய்கள், எச்சில் சுரப்பி சம்பந்தமான நோய்கள் என 40க்கும் மேற்பட்ட நோய்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால், வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்ற பொருட்களை உபயோகித்தால், வியாதிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் போகும்.

உதட்டைப் பரிசோதித்து இதயம், நுரையீரல், வெண் புள்ளிகள், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியும். எனவே பரிசோதனைக்குப் போகும்போது லிப்ஸ்டிக் போட வேண்டாம்.

குறைந்தது 8 முதல் 12 மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்டுருக்க வேண்டியது அவசியம்.

அதிக வாசனை உள்ள பவுடர், சென்ட், பூக்கள் பயன்படுத்த வேண்டாம்.

நகத்தில் வெடிப்பு, அதன் வளைவுகள், புள்ளிகள், கோடுகள், நிறம், குழிகள் போன்றவற்றைப் பரிசோதித்து, என்ன வியாதி எனக் கண்டுபிடிக்க முடியும். அதனால், நகச் சாயமும், மருதாணியும் பரிசோதனையின்போது வேண்டாம்.

செல்போனை சைலன்ட் மோடில் வைத்துவிடுங்கள் அல்லது அணைத்தும் விடலாம்.

உங்கள் உடலில் எங்கேனும் பெரியதாகி வரும் மச்சம், தழும்பு, மரு, படை, சிவப்புத் திட்டு, தடிப்பு, கட்டி, அரிப்பு, கண்கட்டி, முகத்தில் தேமல், நகச்சுத்தி, நீண்ட நாட்களாக ஆறாத புண், அவ்வப்போது வந்து போகும் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, நாவறட்சி, கண் இருண்டு போதல் எனத் தொந்தரவுகள் ஏதேனும் இருந்தால், குறித்து வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சொல்லுங்கள். நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகள் ஏதாவது இருந்தால், அது பற்றிய குறிப்புகளையும் சொல்லுங்கள்.

மாஸ்டர் ஹெல்த் செக்கப் பற்றி டாக்டர் விரிவாக பேசுகின்றனர்.

என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?
ரத்தப் பரிசோதனை
ரத்தத்தில் அணுக்கள் எண்ணிக்கை
ரத்தத்தில் சர்க்கரை அளவு
ரத்தத்தில் கொழுப்பு அளவு
ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், பிளுருபின், யூரிக் அமிலம் அளவுகள்
ரத்த அழுத்தம்
வயிறு மற்றும் செரிமான மண்டலம் ஸ்கேன்
சிறுநீர் பரிசோதனை
நெஞ்சக எக்ஸ்ரே
இ.சி.ஜி, எக்கோ
ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பரிசோதனை
பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை
மருத்துவர்கள் மற்றும் உணவு ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனை

ரத்த பரிசோதனை
ரத்த செல் பரிசோதனை

ரத்த வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் மற்றும் ரத்த வகை, ஆர்.எச் டைப் எது எனப் பரிசோதிக்கப்படும்.

இந்த பரிசோதனையின் மூலம் ரத்தச் சோகை, ரத்தத்தில் நோய்த் தொற்று, ரத்தம் உறைதலில் பிரச்னை, ரத்தப் புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு போன்றவற்றைக் கண்டறியலாம்.

ரத்தச் சிவப்பு அணுக்கள்தான் ஆக்சிஜனை உடலில் உள்ள செல்களுக்கு சுமந்து செல்கிறது. ரத்த செல்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களுக்கு அனீமியா போன்ற பிரச்னை இருப்பதைக் கண்டறிந்துவிட முடியும். அதேபோல ஹீமோகுளோபின் அளவும் பரிசோதிக்கப்படும். ரத்தச் சிவப்பு அணுக்களின் அளவு, ரத்தத்தில் அதன் பரப்பு போன்றவையும் பரிசோதிக்கப்படும்.

ரத்த வெள்ளை அணுக்கள்தான் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியின் போர் வீரர்கள். நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுபவை இவைதான். இதில் மீயூட்டோபில், லிம்போசைட், மோனோசைட், இயோசினோபில் என்று பல வகைகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை எப்படி உள்ளது என்று பரிசோதிக்கப்படும்.

விரலில் சின்னக்காயம் பட்டாலும் ஒரு சில நிமிடங்களில் அது காயத் தொடங்கிவிடுகிறது. இதற்கு ரத்தத் தட்டு அணுக்கள்தான் காரணம். ரத்தத் தட்டு அணுக்கள் போதுமான அளவில் இல்லை என்றால், ரத்தம் உறையாமை பிரச்னை ஏற்படும். டெங்கு காய்ச்சலின் போது தட்டு அணுக்கள் எண்ணிக்கை குறையும்.

ரத்த கெமிஸ்ட்ரி டெஸ்ட்
ரத்தத்தில் சர்க்கரை அளவு, கால்சியம், எலக்ட்ரோலைட், கொலஸ்டிரால், சிறுநீரக செயல்திறன் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ரத்தத்தில் சர்க்கரை
முதலில் எடுக்கப்படும் ரத்த மாதிரியைக்கொண்டு சாப்பிடுவதற்கு முன்பு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கண்டறியப்படும்.

சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்யப்படும். சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பது கண்டறியப்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு எச்பிஏ1சி பரிசோதனை செய்யப்படும். இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினைப் பரிசோதித்து கடந்த மூன்று மாதங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைத் துல்லியமாகக்காட்டும்.

கால்சியம் பரிசோதனை
நம் உடலின் மிக முக்கியமான தாது உப்பு, கால்சியம். ரத்தத்தில் கால்சியம் அளவு இயல்பு நிலைக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால், சிறுநீரகம், எலும்பு, தைராய்டு, புற்றுநோய், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்னைகள் இருக்கலாம்.

எலக்ட்ரோலைட் பரிசோதனை
உடலின் நீர் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவது சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட், குளோரைட் ஆகிய தாது உப்புக்கள். இதை, 'எலக்ட்ரோலைட்' என்பர். இதன் அளவில் மாறுபாடு இருந்தால், நீரிழப்பு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கலாம். இதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை உதவுகிறது.

சிறுநீரக செயல்திறன் பரிசோதனை
ரத்தத்தில் உள்ள யூரியா நைட்ரஜன் மற்றும் கிரியாட்டினின் அளவைக்கொண்டு சிறுநீரகத்தின் செயல்திறன் எப்படி உள்ளது என்று பரிசோதிக்கப்படும்.

ரத்த என்சைம் பரிசோதனை
நம் உடலில் ரசாயனங்களின் ஆற்றல் அல்லது வினை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய, இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக மாரடைப்புக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை இந்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

இதய நோய்களைக் கண்டறிய உதவும் ரத்தப் பரிசோதனை
இதில் 'லிப்போபுரோட்டீன்' பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு கண்டறியும் பரிசோதனை. இதன் மூலம் இதய ரத்தக் குழாய் நோய்க்கான வாய்ப்பைக் கண்டறியலாம்.

பொதுவாக மொத்தக் கொழுப்பு 200க்கு கீழும், நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல் ஆண்களுக்கு 45க்கு மேலும், பெண்களுக்கு 50க்கு மேலும், கெட்டக் கொழுப்பான எல்.டி.எல் 100க்கு கீழாகவும், ட்ரைகிளிசரைடு 150க்கு கீழாகவும் இருக்க வேண்டும்.

இந்தப் பரிசோதனையைத் தனியாகவும் செய்யலாம். அதற்கு பரிசோதனை செய்வதற்கு 8 முதல் 12 மணி நேரத்துக்கு முன் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

ரத்தம் உறைதல் பரிசோதனை
ரத்தம் உறைதலில் பிரச்சனை இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு, இந்தப் பரிசோதனை பிரத்யேகமாகச் செய்யப்படும்.

ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் 140/90 மிமி மெர்க்குரி இருந்தால் சரியான அளவு. இதற்கு மேல் இருந்தால், உணவில் உப்பைக் குறையுங்கள். புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்த்து மீண்டும் பரிசோதித்துப் பாருங்கள். குறையவில்லை என உறுதிப்படுத்திய பிறகு, வாழ்க்கைமுறை மாற்றம், உடல் உழைப்பு, உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் மாத்திரைகள் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

சிறுநீர் பரிசோதனை
பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்கும்போதே சிறுநீரையும் பரிசோதனைக்குத் தரும்படி அறிவுறுத்துவார்கள்.

சிறுநீரைக் கொண்டு 100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்ய முடியும்.

உடல் பரிசோதனையின்போது அதன் நிறம் எப்படி உள்ளது, நோய்த் தொற்று ஏதேனும் உள்ளதா, இகோலை தொற்று இருந்தால் சிறுநீரின் நாற்றம் அதிகமாக இருக்கும்.

ஏதேனும் தொற்று உள்ளதா, அதன் பி.எச் அளவு, சர்க்கரை, புரதம் போன்றவை வெளிப்படுகிறதா, கால்சியம், பாஸ்பேட், ரத்த சிவப்பணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள் ஏதேனும் வெளியேறுகிறதா? என்றெல்லாம் பரிசோதிக்கப்படும்.

மலம் பரிசோதனை
சில மருத்துவமனைகளில் முந்தைய நாளே ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பா கொடுத்து வீட்டிலேயே காலையில் சிறிதளவு மலத்தை அதில் எடுத்து வரும்படி சொல்லுவார்கள். சில மருத்துவமனைகளில் மருத்துவமனையிலேயே மலத்தைப் பரிசோதனைக்குத் தரும்படி கூறுவார்கள்.

இதன் மூலம் வயிற்றில் புழுக்கள், அமீபா, டைபாய்டு தொற்றுகள், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், ஆசனவாய் நோய்த் தொற்றுகள், புற்றுநோய் பாதிப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய முடியும்.

உணவுக் குழாயில் ரத்தக் கசிவு இருந்தால், மலம் கருப்பு நிறத்தில் வெளிவரும். அகல்ட் பிளட் (Occult Blood) பரிசோதனை மூலம் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிந்துவிட முடியும்.

எக்ஸ்ரே
நுரையீரல் நோய்களான நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, ரத்தம், நீர், சீழ், காற்று உள்ளே கோர்த்து மூச்சடைப்பை ஏற்படுத்துதல், இதய வீக்கம், இதய வால்வு நோய்கள், இதயச் சவ்வு, கட்டி, புற்று நோய்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் பற்றி தெரிந்து கொள்ள லாம்.

இ.சி.ஜி
இ.சி.ஜி என்னும் இதயச் சுருள் வரைபடம் மூலம், இதயத் துடிப்பின் எண்ணிக்கை, கால அளவு, மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, இதயத் தசை வீக்கம், மின்னோட்ட அமைப்பில் ஏற்படும் கோளாறுகள் என சுமார் 120 வகையான வியாதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

உயரம்
உடலின் உயரத்தைப் பரிசோதித்து, சரியான வளர்ச்சி, உயரக் குறைபாடு, மிக அதிக உயரம் அல்லது குறைந்த உயரம் உள்ளவர்களுக்கு, வேறு ஏதேனும் ஹார்மோன் குறைபாடுகள் காரணமா என்று அறியலாம்.

எடை
உயரத்தை சென்டிமீட்டரில் குறித்துகொள்வார்கள். அதிலிருந்து 100ஐக் கழித்தால் வருவது உங்கள் ஆரோக்கியத்திற்கான எடை. அத்துடன் அதிகபட்சமாக 5 கிலோ கூடக் குறைய இருக்கலாம். உங்கள் எடையைக் கூட்டவோ குறைக்கவோ, மருத்துவ நிபுணரும், உணவியல் நிபுணரும் ஆலோசனை தருவார்கள்.

இடை அளவு
இடுப்பு மற்றும் அதற்கு மேல் தொப்புள் மேலே வைத்து இடை, இடுப்பு அளவுகளைக் கணக்கிடுவார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் வர இருக்கும், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம். உடல் பருமன் போன்ற வியாதிகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். அவை வராமல் தடுக்க ஆலோசனை பெறலாம். இடையளவு கூடக்கூட ஆயுள் அளவு குறையக்கூடும்.

ஆண்களுக்கு 90 செ.மீ.க்கு கீழும் பெண்களுக்கு 80 செ.மீ.க்கு கீழும் இருப்பது நலம்.

மார்பு விரியும் தன்மையைப் பரிசோதித்து, நுரையீரல் நோய்கள், மார்பு எலும்பு வடிவம் (கூன், கோணல், குழிவு, பீப்பாய், குறுகிய அகன்ற மார்பு) ஆகியவற்றில் ஏற்படும் வியாதிகளை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

வயிற்று ஸ்கேன்
இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள், குடல், ரத்தக் குழாய்கள், சவ்வுகள், சிறுநீர்ப்பை, ப்ராஸ்டேட் சுரப்பி, கர்ப்பப்பை, என வயிற்றின் அனைத்து உள்உறுப்புகள் பற்றியும், அவற்றின், எடை, அளவு, அமைப்பு, ரத்த ஓட்டம், செயல்பாடு, 1 மி.மீட்டருக்கு மேல் உள்ள நீர்க் கட்டிகள், புற்று நோய், நோய்த் தொற்றுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கல்லீரல் பரிசோதனை
கல்லீரலானது, குளுக்கோஸ், ஆல்புமின் புரதங்கள், ரத்தத்தை உறையவைக்கும் முக்கியப் பொருட்கள், மருந்துகளைச் செரிமானம் செய்து வெளியேற்றுதல், உணவில் கொழுப்புப் பொருள்களைச் செரிமானம் செய்தல், புரத, மாவு, கொழுப்புச் சத்துக்களைச் சேர்த்துவைத்தல் போன்ற உயிர் காக்கும் மிக அத்தியாவசியமான பணிகளைச் செய்துவருவதால், கல்லீரல் செயல்பாட்டைப் பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது. அதில் ஏதாவது நோய்த் தொற்று, சேதம், காமாலை, அறிகுறி இருக்கிறதா எனப் பரிசோதித்து அறிவார்கள்.

சிறுநீரகப் பரிசோதனை
இரண்டு சிறுநீரகங்களின் அளவு, ரத்த ஓட்டம், செயல்திறன், உடலின் கழிவுகளை வெளியேற்றும் திறன் போன்றவற்றை, யூரியா, கிரியேட்டினின் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வார்கள்.

கண்
பார்வைத்திறன் குறைபாடுகளான கிட்டப் பார்வை, தூரப் பார்வை, நிறக் குருடு, மாலைக்கண் நோய், கண்புரை, விழித்திரைக் குறைபாடுகள், நாள்பட்ட சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

காது
கேட்கும் திறன், சவ்வின் தன்மை, தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, தள்ளாட்டம், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், தொண்டை, மூக்கில் சதை வளர்ச்சி, நோய்த் தொற்றுகள் பற்றி ஆராய்ந்து சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்கள்.

தோல்
சொரி, சிரங்கு, தேமல், படை, அரிப்பு, தடிப்பு, நிறம் மாறிய இடங்கள், வெண்மை, கருமை, சிவப்புப் புள்ளிகள், மருக்கள், சொரசொரப்பான முதலை அல்லது மீன் செதில் போன்ற தோல், நிறம் மாறுதல், முகப்பரு, கால் ஆணி, போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் அனைத்திற்கும், தோல் நோய் நிபுணர் ஆலோசனை தருவார்.

ஸ்கேன் சிடி ஸ்கேன்
சிடி ஸ்கேன் என்பது கம்ப்யூடட் டோமோகிராபி என்பதன் சுருக்கம். முப்பரிமாணம் உள்ள உறுப்பைப் பல கோணங்களிலும் படம் எடுத்து, அதை ஒருங்கிணைத்து, இரு பரிமாணப் படங்களாகத் தருவதுதான் சிடி ஸ்கேன் செய்யும் பணி.

மென்மையான திசுக்கள், இடுப்புப் பகுதி, ரத்தக் குழாய்கள், நுரையீரல், வயிறு, எலும்புகள் மற்றும் மூளை போன்ற பகுதிகளில், அதிக அளவு விவரங்கள் தேவைப்படும் சமயத்தில், சிடி ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது.

பலவகை புற்றுநோய்களையும், கட்டிகளையும் கண்டறிவதற்கு ஸ்கேன் பேருதவியாக இருக்கும். ஒரு கட்டியின் துல்லியமான அளவு மற்றும் இருப்பிடம், அது எந்த அளவுக்கு அருகில் இருக்கும் திசுக்களைப் பாதித்திருக்கிறது என்பன போன்ற விவரங்கள் சிடி ஸ்கேன் மூலம் தெரியும்.

உள்உறுப்புகள் மற்றும் ரத்தக் குழாய்களில் வீக்கமோ அல்லது கட்டிகளோ இருப்பதையும் சிடி ஸ்கேன் காண்பிக்கும்.

கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் காயங்களோ, கட்டிகளோ இருந்தால் தெரிந்துவிடும். கதிரியக்கம் அளிக்க வேண்டிய இடத்தையும், பையாப்சி எனப்படும் திசு அகழ்வு செய்ய வேண்டிய இடத்தையும் துல்லியமாகக் காட்டிவிடும்.

புற்றுநோய், நிமோனியா மற்றும் மூளையில் அடிபட்டு ரத்தக் கசிவு, உடைந்துபோன எலும்புகள் போன்றவற்றை ஆய்வு செய்ய சிடி ஸ்கேன் சிறந்தது.

எலும்பு நோய்கள், எலும்பு அடர்த்தி, மற்றும் முதுகெலும்பின் தன்மை ஆகியன தெரியவரும். பக்கவாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, போன்றவற்றுக்குக் காரணமான குறைபாடுள்ள ரத்தக் குழாய்களின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

எம்.ஆர்.ஐ ஸ்கேன்
எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்பது மேக்னடிக் ரிசோனன்ஸ் இமேஜிங் என்பதன் சுருக்கம். இதுவும் சிடி ஸ்கேன் போன்றதுதான் என்றாலும், சில வேறுபாடுகள் உள்ளன.

எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் காந்தமும் ரேடியோ அலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

எலும்புகளையும் தசைகளையும் இணைக்கும் நாண்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேனில்தான் தெரியும்.

முதுகுத் தண்டுவட ஆய்வு, மற்றும் மூளைக்கட்டி போன்றவற்றிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சிறந்தது.

பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி
˜ பெட் ஸ்கேன் என்று அழைக்கப்படும் இந்தப் பரிசோதனை முறையில் பாதிப்பு இல்லாத சிறிய அளவில் கதிர்வீச்சை வெளியிடும் பொருள் உடலின் உள்ளே செலுத்தப்படும். இந்த கதிர்வீச்சானது எஃப்.டி.ஜி என்ற ஒரு வகையான சர்க்கரை.

உடலில் செல்கள் இயங்க சர்க்கரைத் தேவை. புற்றுநோய் உள்ளிட்ட உடலின் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு சர்க்கரையின் தேவை இயல்பைவிட மிக அதிகமாக இருக்கும்.

இப்படி பாதிப்பு உள்ள இடங்களில் இந்த சர்க்கரையானது ஒன்றுசேர்ந்து கதிர்வீச்சை வெளியிடும். அதை கம்ப்யூட்டர் உதவியுடன் வரைபடம் ஒன்றைத் தயாரித்து எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறியலாம்.

இந்தக் கருவியின் மூலம் புற்றுநோய் பாதிப்பை மட்டுமின்றி, உறுப்புக்களின் தோற்றம், அவற்றின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ஆக்சிஜன் பயன்பாடு, சர்க்கரை பயன்பாடு உள்ளிட்டவற்றையும் கண்டறியலாம்.

உடலினுள் செலுத்தப்பட்ட கதிர்வீச்சு வெளியிடும் சர்க்கரையானது ஒன்றரை மணி நேரத்தில் செயல் இழந்துவிடும். 12 மணி நேரத்தில் இது உடலில் இருந்து வெளியேறிவிடும்.

கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், குழந்தைகள் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் இந்த ஸ்கேன் செய்யலாம்.

புற்றுநோய் கண்டறியும் ரத்தப் பரிசோதனை
ஒரே ஒரு துளி (3மி.லி.) ரத்தம் போதும். அதைக்கொண்டு கர்ப்பபை புற்றுநோய், கருமுட்டை, பெருங்குடல், கணையம், பித்தப்பை, கல்லீரல், தைராய்டு, ரத்தம், ப்ராஸ்டேட், மார்பகம், எலும்பு, வயிறு, சிறுநீரகம், ரத்தக் குழாய் உள்ளிட்ட 25 வகையான புற்றுநோய்கள் ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்.

புற்றுநோய் மார்க்கர் என்று ஒன்று உள்ளது. பிராஸ்டேட் புற்றுநோய் உள்ளதா என கண்டறிய பி.எஸ்.ஏ என்ற மார்க்கர் உள்ளது. பொதுவாக ரத்தப் பரிசோதனையில் இதன் அளவு 5க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால் ஆறுக்கு மேல் சென்றால், ஏதோ ஒரு பிரச்னை உள்ளது என்று அர்த்தம்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, நோய்த் தொற்று காரணமாகவும் இந்த அளவு அதிகரிக்கலாம். எனவே, ஆன்டிபயாட்டிக் கொடுத்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும். இப்படி ஆரம்ப நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிவதன் மூலம் மிகப்பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.

கருமுட்டைக்கு சிஏ125, பெருங்குடலுக்கு சி.ஈ.ஏ, வயிறுக்கு சி.ஏ72.4 என்று மார்க்கர்கள் உள்ளன. இவற்றைக்கொண்டு புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை எளிதில் கண்டறிந்துவிடலாம். அப்படியே புற்றுநோய் இருப்பது தெரியவந்தால் அதை உறுதிப்படுத்த, மேற்கொண்டு பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

மகளிருக்கான சிறப்புப் பரிசோதனை பேப் பரிசோதனைகள்
ஓரிரு நிமிடங்களில் பெண் உறுப்பு மற்றும் கர்ப்பப்பையின் திசுக்களைச் சேகரித்து ஆய்வு நடைபெறும்.

பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பப்பைப் புற்றுநோய் மற்றும் இதர நோய்த் தொற்றுகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியலாம்.

21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.

மேம்மோகிராம்
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறியும் பரிசோதனை இது. மார்பகத்தை எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதிப்பார்கள். வலி இருக்காது.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. இப்படிப் பரிசோதித்துக்கொள்ளும் பெண்களில் சுமார் 10% பேருக்குத்தான் மேல்சிகிச்சை தேவைப்படும். அதிலும் மிகச் சிலருக்குத்தான் மார்பகப் புற்றுநோய் இருக்கும். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது எளிது.

கவனிக்க
அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு ஒரு பொது மருத்துவ நிபுணர் உங்களைப் பரிசோதித்து தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவார்.

உணவு ஆலோசகரின் பங்கு முழு உடல் பரிசோதனையில் மிகவும் முக்கியமானது. அநேகமாக எல்லோரும் அவரின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டியிருக்கும்.

முழு உடல் பரிசோதனை மூளைக்கு இல்லையா?
முழு உடல் பரிசோதனையில், எல்லாப் பரிசோதனைகளும் செய்கிறார்கள். ஆனால், மூளைப் பரிசோதனை மட்டும் ஏன் செய்வதில்லை? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழதான் செய்யும்.

"மூளை நன்கு செயல்படுபவர்கள் மட்டும்தான் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள்." என்றார் டாக்டர்.

மருத்துவர் சொல்வதுபோல், எல்லோருமே சிந்தித்து செயல்படவேண்டிய முக்கியமான விஷயம் இது. நிச்சயம் ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும். நோய் வருமுன் காப்போம். செலவைக் குறைப்போம்.

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=158&t=42504


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts