லேபிள்கள்

வியாழன், 16 ஏப்ரல், 2015

பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)

பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)


01) மாதவிடாய் (ஹைளு)ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் பெண்களிடமிருந்து இயற்கையாக வெளிப்படும் இரத்தத்தையே இது குறிக்கின்றது. மாதவிடாயானது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது உடல் ஆரோக்கியம், சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடலாம்.
(ويسئـلونك عن المحيض قل هواذى فاعـتزلواالنساءفى المحيض ولاتـقربوهن حتى يـتهرن (2:222)
'இன்னும் மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள், நீர் கூறும்'அது தூய்மையற்ற நிலை ஆகவே மாதவிடாய் காலத்தில் பெண்களைவிட்டும் விலகி இருங்கள் மேலும், அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்'
எனவே அல்லாஹ் இங்கு மாதவிடாயானது தூய்மையற்ற நிலை என்றும், அவள் சுத்தமாகும் வரை அவளுடன் உடலுறவு கூடாது என்றும் கூறுகிறான். அத்துடன் இதற்கான கால எல்லையை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறாததால் ஒவ்வொரு பெண்ணும் தாம் முழுமையாக சுத்தமாகும் வரை தொழுகை, நோன்பு, உடலுறவு போன்றவைகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்.
மாதவிடாய் உண்டான பெண்ணுக்கு எந்த வகையான நோன்பும் நோற்க அனுமதி இல்லை, ஆனால் விடுபட்ட பர்ளான நோன்பை சுத்தமானதும் கட்டாயம் நோற்க வேண்டும். விடுபட்ட தொழுகையை தொழ வேண்டியதில்லை.
'நாம் இதனை(மாதவிடாய் காலத்தை)க் கடந்தோம், அப்போது நாம் எமது நோன்பை பூர்த்தி செய்யும்படி பணிக்கப்பட்டோம் ஆனால், தொழுகையை பூர்த்தி செய்ய வேண்டும் எனப் பணிக்கப்படவில்லை'.(முஸ்லிம்)
'மாதவிடாய் உண்டான பெண்ணும் ஜனாபத்துடன் இருக்கும் ஒருவரும் குர்ஆனிலுள்ள எதையும் ஓதக் கூடாது' எனும் ஹதீஸ் பலயீனமானது. இதை ஆதாரமாக எடுத்து செயல்பட முடியாது.குர்ஆன் ஓத கூடாது என்றிருந்தால் நபி(ஸல்) அவர்கள் தடை செய்திருப்பார்கள், அல்லாஹ்வோ, அவனது தூதரோ தடை செய்யாததை எமக்கு தடை செய்ய முடியாது,
'எனக்கு மாதவிடாய் உண்டாகியிருந்த போது நபி(ஸல்) அவர்கள் என் மடியில் சாய்ந்திருந்து குர்ஆன் ஓதினார்கள்' (புகாரி 297)
மாதவிடாய் உண்டான பெண்கள் தவாஃப் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அன்னை ஆயிஷா(ரலி) ஹஜ்ஜின் போது மாதவிடாய் உண்டாகி இருந்தார்கள். அவர்களை பார்த்து நபி(ஸல்) இவ்வாறு கூறினார்கள், 'ஒரு யாத்ரீகர் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யுங்கள் ஆனால் கஃபாவை வலம் வருவதை மாத்திரம் நீங்கள் சுத்தமாகும் வரை செய்யாதீர்கள்'
 (புகாரி)
பள்ளிவாயலில் மாதவிடாய் பெண்கள் தங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
'மணமாகாத இளம் கன்னிகளும், மாதவிடாய் உண்டான பெண்களும், பெருநாள் தினத்தில் நற்காரியங்களில் பங்கெடுக்க வேண்டும்' என கூறிய நபி(ஸல்) அவர்கள், 'ஆனால்இ,மாதவிடாய் உண்டான பெண்கள் முஸல்லாவை (தொழும் இடத்தை) விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்' என முடித்தார்கள். (புகாரி)
கணவர் தன் மாதவிடாய் உண்டான மனைவியுடன் தடுக்கப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளை முத்தமிடவும், கொஞ்சிக் குலாவவும் அனுமதியுண்டு.
' அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள், நபியவர்கள் (எனது மாதவிடாயின் போது) ஓர் இஷாரை (இடைக்கு கீழ் அணியும் ஆடை) அணிந்து கொள்ளும்படி கட்டளையிட்டு, அதன் பின் என்னுடன் குலாவுவார்கள்' (புகாரி)
மாதவிடாய் உண்டான பெண் கணவனுக்குறிய கடமைகளை செய்ய வேண்டும்
'ஒருவர் 'தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?' என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா 'அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்' என்றார்" என ஹிஷாம் அறிவித்தார்.(புகாரி)

ஒருவர் தனது மனைவியை மாதவிடாய் உண்டாகி இருக்கும் போது விவாகரத்து செய்யமுடியாது.

(
إِذَاطَـلّقْـتُمُ النِّسـاءفَطلّـقوهُنَّ لِعِدّتِهِنَّ (65:01) 

'நீங்கள் பெண்களை விவாகரத்து செய்வீர்களாயின் அவர்களின் இத்தா (காலத்தை நிர்ணயிக்க) வசதியாக
 விவாகரத்து செய்யுங்கள்.

அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்கள், மாதவிடாய் உண்டாகி இருந்த தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவிக்கிறார்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறுகின்றார். 'அப்போது நபி(ஸல்) அவர்கள், அவருக்கு (உங்கள் மகனுக்கு) கட்டளையிடுங்கள், அவளை திரும்ப எடுத்து, அவள் சுத்தமாகும் வரை வைத்திருக்க வேண்டும். பின்னர் அடுத்த மாதவிடாய் உண்டாகி சுத்தமாகும்வரை காத்திருக்கும்படி கூறுங்கள். அதன் பின்னர் அவர் அவளை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பினால், அவ்வாறு செய்துகொள்ளலாம். சிலவேலை அவர் அவளை விவாகரத்து செய்ய விரும்பினால் அவளுடன் உடலுறவுகொள்வதற்கு முன்னர் விவாகரத்து செய்யலாம். இதுதான் ஒரு பெண்ணை விவாகரத்து செய்வதற்கு அல்லாஹ்
 விதித்துள்ள கால வரையாகும்'. (புகாரி)
தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் பொறுத்திருக்க வேணடும். (2:228)
இத்தாவுடைய பாடத்தில் விரிவாக பார்க்கலாம் (இன்ஷா அல்லாஹ்)

02).இஸ்திஹாதாத்
இது மாதவிடாயிலிருந்து வித்தியாசமாகும். இஸ்திஹாதாத் என்பது ஒரு பெண்ணுக்கு தொடராக வெளிவரும் இரத்தம். இந்நிலையில் அவள் மீது தொழுகை, நோன்பு, கடமையாகும் என்பதனை அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கும் பின்வரும் ஹதீஸின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
'எனக்கு (மாதவிடாய் காலங்களில்) நிற்காது இரத்தம் வெளிவருகின்றது. ஆதனால் நான் சுத்தமாக இல்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா? என பாத்திமா பின்த் அபீ ஹுபைஸ் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' அது ஓர் இரத்த நாலத்தலிருந்து வருவதாகும். நீர் வழமையாக மாதவிடாய்உண்டாகும் நாட்களுக்கு மட்டும் தொழுகையை விட்டுவிடும் பின்னர் குளித்துவிட்டு தொழுகையை மேற்கொள்ளும்' என்றார்கள்(புகாரி)

உதிரப்போக்குடைய பெண் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள், "இப்படிப்பட்ட பெண் அவள் மாதவிடாய் என்று தீர்மானித்த நாட்களில் தொழுகையை விட்டு விடுவாள். பின்னர் குளித்து ஒவ்வொரு தொழுகைக்கும் உளுச் செய்து கொள்ளவேண்டும்" என்று கூறினார்கள். (நூற்கள்: அபூதாவூத், இப்னுமாஜா)

எனவே உதிரப்போக்குடையவள் வழமையாக மாதவிடாய் காலத்தை தவிர்ந்த ஏனைய காலங்களில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளுச் செய்து கொள்ளவேண்டும்
03. நிஃபாஸ்
பிரசவத்திற்கு பின்னோ அல்லது பிரசவத்திற்கு சற்று முன்னோ வெளியாகும் இரத்தத்தையே நிஃபாஸ் என்பர். பிரசவ இரத்தம் வெளிப்படும் பெண்களுக்கும் மாதவிடாய்ப் பெண்களுக்குள்ள சட்டங்கள்தான். இவ்வாறு வெளியாகும் இரத்தம் இத்தனை நாட்கள்தான் என்று குறிப்பிட்டு கூற முடியாது. பிரசவத்திற்கான காலவரை 40 நாட்கள் என்று பதிவாகியுள்ள ஹதீஸ் பலவீனமானதாகும். ஒரு முஸ்லிம் ஆதாரமான ஹதீஸ்களை மாத்திரம் பின்பற்ற வேண்டும் என்பதால் இதன் படி செயற்பட முடியாது எமக்கு எப்போது இரத்தம் வெளிவருவது நிற்கின்றதோ அப்போது முதல் எமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அது 30, 40, 60, 80, நாட்களாகவோ இருக்கலாம். 40 எடுத்தல் என்ற பெயரில் பல சடங்குகளை ஏற்படுத்தி இருக்கின்றோம்.
• 40 கழியும் வரை உ றவினர் வீட்டுக்கு அழைக்காமை
அவ்வாறு யாரும் சென்றால் அந்த வீட்டைக் கழுவுதல்
• 40 ஆம் நாள் சாப்பாடு

இவையெல்லாம் இஸ்லாம் காட்டித்தராத வழி முறைகள். இவைகளை கட்டாயமாக புறக்கனிக்க வேண்டும்.
04.கடமையான குளிப்பு

மாதவிடாய் உண்டான ஒரு பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமானதும் குளிப்பது கட்டாயக் கடமையாகும்.

'மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டுத் தொழுது கொள்' என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
எவ்வாறு குளிப்பது?

மர்மஸ்தலத்தை கழுவவேண்டும் பின்னர் தொழுகைக்கு உழூச் செய்வது போன்று செய்துவிட்டு கால்களை கழுவ முன் குளித்துவிட்டு சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவவேண்டும்.
 
'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உழூச் செய்வது போன்று உழூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
 (புகாரி 249)
கடமையான குளிப்பு குளிக்கும் போது தலையையும் உடலையும் நன்றாக தேய்த்துக் குளிக்க வேண்டும். கஸ்தூரி எமக்கு கிடைப்பது அறிதாகவுள்ளதால் வாசனையுள்ள சோப் (soap) பயன்படுத்திக்கொள்ளலாம்
'உங்களில் ஒவ்வொருவரும் ஸித்ர் மரத்தின் (இலைகள் கலந்த) நீரைப் பயன்படுத்தி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அவள் தனது தலையில் நீரை ஊற்றி மயிரின் வேரை சென்றடையும் வரை நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் அவள் தனது தலையில் (நீரை) ஊற்றிக்கொள்ள வேண்டும். அதற்குப்பிறகு கஸ்தூரி கலந்த பருத்தித் துன்டொன்றை எடுத்து அதன் மீது சுத்தம் செய்து கொள்ள வேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்இ அப்போது 'அதைக் கொண்டு எவ்வாறு சுத்தம் செய்வது? என்று வினவினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ் என்று அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். இரத்த அடையாளங்கள் நீங்கும் வரை சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்'(ஸஹீஹ் முஸ்லிம்)


'அன்ஸாரிப் பெண்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'மாதவிடாயில் இருந்த நான் சுத்தமாவதற்காக எவ்வாறுக் குளிக்க வேண்டும்?' எனக் கேட்டார். 'கஸ்தூரி கலந்த பஞ்சை எடுத்து நீ சுத்தம் செய்' என மூன்று முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர்கள் வெட்கப்பட்டுத் தங்களின் முகத்தைத் திருப்பினார்கள். அல்லது 'அதைக் கொண்டு நீ சுத்தம் செய்' என்று கூறினார்கள். அப்போது நான் அந்தப் பெண்ணைப் பிடித்து என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்பதை அவளுக்கு விளக்கினேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.(புகாரி)

மாதவிடாய் உண்டான பெண் தனது தலை முடியின்; அடிப்பாகம் வரை நீர் செல்வதை தடுக்கும் வகையில் முடியை நெருக்கமாக பின்னிடாத வரையில் முடியை அவிழ்த்து விடுவது கடமையில்லை.
'நான் தலை முடியை நெருக்கமாக பின்னிவிட்ட ஒரு பெண் எனவே உடலுறவு கொள்வதனால் (மாதவிடாய் உண்டான) குளிப்பதற்கு பின்னிவிடப்பட்ட முடியை அவிழ்த்து விட வேண்டுமா? என்றுகேட்டேன். இல்லைநீங்கள்' மூன்று முறை கை நிறைய நீரை எடுத்து உங்கள் தலையில் ஊற்றிக் கொண்டால் போதுமானது. பின்னர் உங்கள் மீது நீரை ஊற்றுங்கள். இவ்வாறு நீங்கள் சுத்தம் அடைவீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
மாதவிடாய் உண்டான ஒரு பெண் குறிப்பட்ட தொழுகைக்குறிய வேலையில் சுத்தமடைவாளாயின் உடனே குளித்து தொழுது கொள்ள வேண்டும். சில வேலை பயணத்தில் இருக்கின்றால் நீர் கிடைக்கவில்லை அல்லது நீரை பயன்படுத்தினால் தீங்கு(நோய்) ஏற்படும் என்ற அச்சம் இருந்தால் அவள் தயம்மும் செய்துகொள்ளலாம்.
குளிரான ஓர் இரவில் அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களுக்குக் குளிப்புக் கடமையானபோது அவர்கள் தயம்மும் செய்து 'உங்கள் ஆத்மாக்களை நீங்கள் கொலை செய்தீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களின் மீது இரக்கமுடையவனாக இருக்கிறான்" (திருக்குர்ஆன் 04:29) என்ற இறைவசனத்தை ஓதினார்கள். இந்த விஷயத்தை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது அவர்கள், அவரை குறையேதும் கூறவில்லை. (புகாரி)


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts