லேபிள்கள்

ஞாயிறு, 13 ஜூலை, 2014

உடலுக்கு குளிர்ச்சி... மனதுக்கு மலர்ச்சி! வாசம் வீசும் மலர்களின் ஜாலம்...இயற்கை தரும் இளமை வரம்!

உடலுக்கு குளிர்ச்சி... மனதுக்கு மலர்ச்சி! வாசம் வீசும் மலர்களின் ஜாலம்...இயற்கை தரும் இளமை வரம்!





முல்லை, ஜாதி, இருவாச்சி... மல்லிகையின் வரிசையைச் சேர்ந்த இந்தப் பூக்களின் வாசம், அழகு ஆகியவை நம் மனதை மயக்கும். அதுமட்டுமல்ல... உடலுக்குக் குளிர்ச்சியையும் குதூகலத்தையும் ஒருங்கே அள்ளித் தரும் அற்புத மலர்கள் இவை. நம் தேகத்துக்குப் புத்துணர்ச்சி யூட்டி, பொலிவைத் தரும் வல்லமையும் இவற்றுக்கு உண்டு.

இந்தப் பூக்களின் அழகுப் பலன்களை ஆராய்வோமா?
வெயிலால் ஏற்படும் வியர்வை நாற்றம், வியர்க்குரு ஆகியவற்றை விரட்டியடித்து, உடலைக் குளிர்ச்சியாகவும், கூந்தலை பளபளப்பாகவும் வைக்கும் முல்லைத் தைலம் மற்றும் குளியல் பவுடர் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோமா?

தைலம் தயாரிக்க...
செம்பருத்தி இலை - 5, முல்லை மொட்டு - 10... இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரை கப் தேங்காய் எண்ணெ யைக் காய்ச்சி, அரைத்த விழுதை அதில் சேர்த்து மீண்டும் காய்ச்சுங் கள். 'சடசட'வென்ற ஓசை அடங்கியதும் இறக்குங்கள். இந்த எண்ணெயை வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து, குளியல் பவுடரால் அலசுங்கள்.

குளியல் பவுடர் தயாரிக்க...
உலர்ந்த முல்லைப் பூ, வெந்தயம், புங்கங்காய் - தலா 100 கிராம், கடலைப்பருப்பு - கால் கிலோ... இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்தால், குளியல் பவுடர் தயார். முல்லைத் தைலம் தேய்த்துக் குளிக்கும்போது, இந்த பவுடரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நீங்கும். கூந்தல் சூப்பர் சுத்தமாகிவிடும். தோலும் பளபளப்புடன் வாசனையாக இருக்கும்.

வியர்க்குரு, பருக்களால் முகம் பொலிவிழந்து இருக்கிறதா?
ஜாதிப்பூ மொட்டு, முல்லை மொட்டு - தலா 10 பூக்கள்.... இவற்றுடன் 2 டீஸ்பூன் பாலை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதைக் கொண்டு பருக்களை மூடுங்கள். முகத்திலும் பூசுங்கள். பருக்கள் மறைந்துவிடும். நிறமும் பொலிவும் கூடும்.

முகம் 'ப்ளீச்' செய்ததுபோல் பிரகாசமாக ஜொலிக்க...
ஏடு இல்லாத தயிர் - 2 டீஸ்பூன், செம்மரத்தூள் - அரை டீஸ்பூன், உலர்ந்த ஜாதிப் பூ - அரை கப்... இந்த மூன்றையும் அரைத்து முகத்தில் பூசி, 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் கண்ணாடி போல் மின்னும்.
உடலுக்கு குளிர்ச்சி, மலர்ச்சி தந்து... அயற்சி போக்கும் ஜாதிப் பூ தைலம்!


கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சவும். ஒரு கப் உலர்ந்த ஜாதி மல்லிப்பூவை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி, காய்ச்சிய எண்ணெயில் போடுங்கள். மறுநாள் மூட்டையை நன்றாகப் பிழிந்து எடுத்து விடுங்கள். இந்த எண்ணெயைத் தலை முதல் பாதம் வரை தேய்த்து சீயக்காய் போட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படிக் குளித்து வந்தால்... உடம்பும் மனசும் உற்சாக வெள்ளத்தில் மிதக்கும்.

நகங்கள் கறுத்து, உடைந்து, நிறம் மாறியிருந்தால்...
முல்லை, ஜாதி, இருவாச்சி மலர்களை சம அளவு எடுத்து அரைத்து வடிகட்டுங்கள். இந்த எசென்ஸை ஒரு பாட்டிலில் வைத்து, அவ்வப்போது பஞ்சினால் தோய்த்து நகங்களில் பூசுங்கள். உடைந்த நகம் வளரும். நகம் சிப்பியைப் போல் பளபளக்கும்.

தலையில் பேன், பொடுகு தொல்லை தீர...
தலா ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய், விளக்கெண்ணெயுடன் இருவாச்சி மல்லியின் வேரைப் பொடித்து சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை வெந்நீரில் குழைத்து தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசுங்கள். பேன், பொடுகு ஓடிவிடும்.

வாசனையான ஹென்னா!
மருதாணி பவுடர் - ஒரு கப், ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, டீ டிகாஷன் - ஒரு கப், ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறு... இவற்றுடன் மொட்டு முல்லை, ஜாதி, இருவாச்சி மல்லி மூன்றையும் அரைத்த விழுது ஒரு கப் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்த ஹென்னாவை தலைக்குப் போடுவதால் முட்டை வாசனை மறைந்து, பூக்களால் கூந்தல் வாசம் வீசும்.

இலையே கிருமிநாசினி!
டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:

ஜாதி மல்லி குளிர்ச்சியைத் தரும். இருவாச்சி கண் நோய்க்கு மிகவும் நல்லது. முல்லை மணம் வீசும். இந்த மலர்களிலிருந்து வாசனைத் திரவியங்கள் எடுக்கப்படுகின்றன.
முல்லை செடியின் இலை துவர்ப்பாக இருக்கும். இந்த இலையை வாயில் போட்டு மெல்வதால் வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து கிருமிநாசினியாக செயல்படும்.

இந்தப் பூக்களை தலையில் சூடிக் கொள்வதால் சூடு குறைந்து, நல்ல மனநிலை ஏற்படும்.

ஜாதி மல்லி மரத்தின் கட்டையைத் தண்ணீர் விட்டுக் இழைத்து, அதை நாக்கில் தடவுவது... விஷத் தாவரங்களின் நஞ்சைக் கூட முறிக்கும்.

தொடைப் பகுதி குண்டாக இருப்பவர்களுக்கு நடக்கும்போது கால்கள் உரசுவதால் புண்ணாகிவிடும். முல்லை (அ) இருவாச்சி மலரை அரைத்து அந்த இடங்களில் பூசினால் குணமாகும்.

முல்லைப்பூவின் சாறு, சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.

காட்டுமல்லி இலையை அரைத்து, வெண்குஷ்டத்தின் மேல் பூசினால்... தோலின் நிறம் மாறும்.

தொண்டைப் புண் இருந்தால் முல்லைப்பூவின் இலையை நெய்யில் வறுத்து, அரைத்து, தொண்டைப் பகுதியில் பத்து போடுங்கள். வலியும் வீக்கமும் குறைந்து நிவாரணம் கிடைக்கும்.



--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts