லேபிள்கள்

ஞாயிறு, 17 மார்ச், 2019

சமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்!

சமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்!

கோடையில் புதிதாக வற்றல், வடாம் போட ஆரம்பித்துவிடுவோம். சென்ற ஆண்டில் மீந்த, தூளான, நொறுங்கிய வடாம்களை என்ன செய்வது?

தூளான, நொறுங்கிய வடாம்களைத் தேவையான அளவு எடுத்து ஒரு தட்டில் போட்டு அது மூழ்கும் அளவு கைபொறுக்கும் சூட்டில் வெந்நீரை ஊற்றிவைக்கவும். இடையிடையே நன்கு கிளறிவிடவும். அரை மணி நேரம் கழிந்த பின் வடாம் நீரில் ஊறி மென்மையாகிவிடும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, இதனுடன் ஒரு தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன் போட்டு வதக்கவும். பிறகு, ஊறிய வடாம்களைச் சேர்த்து வதக்கி, ஈரம் வற்றியதும் 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான தூள் வடகப் பொரியல் தயார். இது சாம்பார், ரசம், மோர் சாதங்களுக்குத் தொட்டுச் சாப்பிட ஏற்றது.

தூள் வடாம்களை எண்ணெய் ஊற்றி வறுத்து எண்ணெயை வடியவிட்டு தனியே வைக்கவும். கால் கப் தேங்காய்த் துருவல், சிறிதளவு புளி, 3 வறுத்த காய்ந்த மிளகாய், கால் கப் கொத்தமல்லித்தழை சேர்த்து, முதலில் வறுத்த வடகங்களை ஒரு சுற்று மிக்ஸியில் சுற்றி, பிறகு மற்ற பொருள்களைச் சேர்த்து, தேவையான அளவு நீர்விட்டு அரைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். சுவையான சட்னி தயார். இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்குத் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

வீட்டில் நாம் தயாரிக்கும் பிஸ்கட், கேக், சிப்ஸ் போன்றவை நமுத்துப் போகாமல் எப்படிப் பாதுகாப்பது? நமுத்துவிட்டால் என்ன செய்வது?
 

பிஸ்கட் நமுத்துப் போகாமல் இருக்க பிஸ்கட் வைக்கும் டப்பாவில் முதலில் ஃபிளாட்டிங் பேப்பரைப் போட்டுவிட்டு அதன்மேல் பிஸ்கட்டுகளை வைத் தால் பிஸ்கட்டுகள் பல நாள்கள் மொறுமொறுவென்று இருக்கும்.

சிப்ஸ், பிஸ்கட் நமுத்துப் போய் இருந்தால் அதை ஒரு தட்டில் கொட்டி நாம் சமைக்கும்போது அடுப்பின் அடியில் வைத்தால் அந்த அனலிலேயே மொறுமொறுப்பு மீண்டும் வந்துவிடும்.

கேக், பிஸ்கட் செய்து முடித்தபின் அவன் (oven) நீண்ட நேரம் சூடாக இருக்கும். அப்போது அந்தச் சூட்டிலேயே நமுத்துப் போயிருக்கும் பிஸ்கட், அப்பளம் போன்றவற்றை அவனில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் புதிது போல மொறுமொறுவென்று இருக்கும்.

சிப்ஸ், பிஸ்கட் போன்ற அயிட்டங் களை டப்பாவில் போட்டுவைப்பதைவிட ஹாட்பேக்கில் போட்டு வைத்தால் நீண்ட நாள்கள் நமுத்துப் போகாமல் இருக்கும்.

தோசைக்கல்லில் தோசை மாவு ஒட்டிக்கொண்டு தோசையை எடுக்க முடியாமல் போவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு சின்ன துணியில் கல் உப்பைக் கட்டித் தோசைக்கல்லைத் துடைக்கவும். வெட்டின வெங்காயத்தால் துடைத்தாலும் போதும்.
தோசைக்கல்லை உபயோகம் முடிந்தவுடன் கழுவக் கூடாது. எண்ணெய் தடவி வைத்திருந்து உபயோகப்படுத்தும் போது கழுவினால் போதும்.
சூடான கல்லில் குளிர்ந்த தண்ணீர் தெளித்து பிறகு எண்ணெய் தடவி தோசை மாவு விட வேண்டும்.

உணவை வாழை இலையில் பொட்டலம் கட்டும்போது இலை பிரிந்து உணவு வெளியே வராமல் எப்படி கட்டுவது?
 

உணவைப் பொட்டலம் கட்டும்போது வாழை இலையை வெந்நீரில் நனைத்துவிட்டுக் கட்டலாம்.
வாழை இலையைச் சிறிது நேரம் வெயில் வைத்திருந்து லேசாக வதங்கியதும் எடுத்துக் கட்டலாம். அல்லது வாழை இலையைத் தணலில் காட்டி லேசாக வதங்கியதும் எடுத்து உணவைப் பொட்டலமாகக் கட்டினால் இலை பிரிந்து உணவு வெளியே வராமல் இருக்கும்.

சம்மரில் டூர் செல்லும்போது எடுத்துச் செல்லும் அயிட்டங்கள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமலிருக்க சின்னச் சின்ன டிப்ஸ் ஃப்ளீஸ்...
 

சட்னிக்குப் பொட்டுக்கடலை வைத்து அரைப்பதற்குப் பதிலாக கடலைப்பருப்பை வறுத்து அரைத்துத் தேங்காயுடன் சட்னி அரைத்தால் விரைவில் கெட்டுப்போகாது. அல்லது உளுத்தம்பருப்பை வறுத்து, தேங்காயுடன் சேர்த்துக் கெட்டியான துவையலாக அரைக்கலாம். துவையல் அரைக்கும்போது சிறிதளவு வெல்லமும் சேர்த்து அரைக்கவும். இது நீண்ட நேரம் கெடாமலிருக்க உதவும்.

மிளகாய்ப்பொடியுடன் எண்ணெய் சேர்த்து இட்லிக்குத் தொட்டுக்கொள்ள எடுத்துச் செல்லும்போது எண்ணெய்க்குப் பதிலாக நெய்யை உருக்கி மிளகாய்ப் பொடியில்விட்டு எடுத்துச் சென்றாலும் நீண்ட நேரம் கெடாது.

சர்க்கரை போடாமல்தான் ஃபிளாஸ்கில் காபி, டீயை ஊற்ற வேண்டும். சர்க்கரையைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டு குடிக்கும் போது ஃபிளாஸ்கில் இருந்து குவளைகளில் ஊற்றும்போதுதான் சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் காபி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

மாங்காய்த் தொக்கு, தக்காளி ஊறுகாய் எடுத்துச் செல்வதைவிட எலுமிச்சை ஊறுகாய் எடுத்துச் சென்றால் நீண்ட நாள்கள் கெடாது.

வற்றல்குழம்பு செய்தால் மணத்தக்காளி, சுண்டைக்காய் வற்றல்கள் மட்டும் சேர்க்க வேண்டும்.

தோசை எடுத்துச் சென்றால் கனமாக வார்த்து எடுத்துச் செல்ல வேண்டும். மெலிதாக வார்த்து எடுத்துச் சென்றால் தோசை காய்ந்து தொண்டையைவிட்டு இறங்காது.

சப்பாத்தி எடுத்துச் சென்றால் ஓரங்களில் எண்ணெய்விடாமல் தணலில் மேல் வலையைப் போட்டுச் சுட்டு எடுத்துச் செல்லலாம்.

தயிர் சாதம் எடுத்துச் சென்றால் பாலை நிறைய ஊற்றி (ஒரு பங்கு பால் என்றால் கால் பங்குக்கும் குறைவாகத் தயிர் ஊற்றி) எடுத்துச் செல்ல வேண்டும். பால் தயிரில் உறைந்து நாம் சாப்பிடும்போது புளிக்காமல் சரியான பதத்தில் இருக்கும்.

புளி சாதம் செய்து எடுத்துச் சென்றால் புளிக்கரைசலுக்குப் பதில் புளிப்பேஸ்ட்டில் செய்து எடுத்துச் சென்றால் விரைவில் கெடாது.

இனிப்புக் குழிப்பணியாரம் எடுத்துச் செல்லும்போது வெல்லத்தைப் பாகு காய்ச்சி பிறகு மாவில் கலந்து, குழிப்பணியாரம் செய்யும்போது ஓரங்களில் லேசாக நெய் விட்டு (எண்ணெய்க்குப் பதில்) செய்யலாம். இது விரைவில் கெடாது.

சாலட்கள் பக்குவமாகச் செய்வது எப்படி?
காய்கறிகள் நறுக்கி சாலட் செய்யும் போது நறுக்கியவுடன் எலுமிச்சைச்சாறும் உப்பும் அதில் சேர்க்கக் கூடாது. அவற்றைச் சாப்பிடும்போதுதான் சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் சாலட் தண்ணீர் விட்டுக்கொள்ளும். அப்படியும் தண்ணீர் விட்டுவிட்டால் பிரெட் துண்டுகளைப் போட்டுவிட்டால் தண்ணீரை உறிஞ்சிவிடும். அந்த பிரெட் துண்டுகளைக் காய்கறிகளில் இருந்து தனியே எடுத்தும் சுவைக்கலாம்.

 ரவா தோசை மொறுமொறு என்று இருக்க என்ன செய்ய வேண்டும்? 
ரவா தோசை செய்யும்போது ஒரு கப் ரவைக்கு ஒரு கரண்டி கடலை மாவு சேர்த்துக் கலந்து செய்தால், தோசை நன்கு மொறுமொறுவென்று இருக்கும்.
http://pettagum.blogspot.com/2018/06/blog-post_65.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts