லேபிள்கள்

ஞாயிறு, 19 நவம்பர், 2017

பிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்! உண்மை சம்பவம்

பிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்! உண்மை சம்பவம்
 பலர் தங்களது பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஊர், உறவு குடும்பம் என்று அணைத்தையும் துறந்து செல்கின்றனர். பெரும்பாலும் வெளிநாடு சென்றவர்கள் முடிந்த வரை தங்களது கடின உழைப்பால் நன்றாக சம்பாரிக்கின்றார்கள்.
தங்களது குடும்பத்தின் நிலமையை மனதில் வைத்து தங்களது உறக்கம் ஓய்வு மற்றும் உள்ள ஆசைகளைத் துறந்து பார்ட் டைம் ஓவர் டைம் என்று சம்பாரிக்கிறார்கள்.  சம்பாரித்த பணத்தை அப்படியே தன் பெற்றோருக்கோ மனைவிக்கோ அனுப்பி விட்டு சில ரியால்களையே வெள்ளியையே கையில் வைத்து சிக்கனமாக தங்களது வாழ்க்கையை கடத்துகின்றார்கள்.

இப்படியே பல ஆண்டுகள் கழிந்து விடுகின்றன. சரி நாமும் இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு விட்டோமே ஊர் சென்று பிள்ளை குட்டிகளுடன் நிம்மதியாக இருக்கலாம் என்ற தங்களது யோசனையை ஊரில் தெரிவிக்கும் போது பெரிய புயலே உருவாகி விடுகின்றது.
ஏன் என்ன உனக்கு வயதாகி விட்டது. இங்கே வந்து இருந்தால் விலைவாசி ஏற்றத்தில் குடும்பம் எப்படி ஓடும் என்று அறிவான பல விதாங்கள் அவன் முன் வைக்கப்படும்.
வெளிநாட்டில் தங்களது வாழ்க்கையை தொலைத்த பலர்களது அனுபவம் தான் இது. காரணம் இவர்களின் கஷ்டங்கள் ஊரில் உள்ளவர்கள் அறிவது இல்லை. அலலது இவன் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை!
 அந்த வீட்டுக்காரி இப்படி செய்கிறாள் இந்த வீட்டுக்காரி இப்படி உடுத்துகிறாள் என்று தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு இவன் அனுப்பும் அணைத்தையும் செலவு செய்து காலியாக்கி வட்டிக்கு கடனும் பெற்று செலவு செய்கிறார்கள்.
திறமை என்பது சம்பாரிப்பதில் இல்லை. மாறாக அதை எப்படி பிரயோணமாகப் பயன்படுத்துவது என்பதில் தான் உள்ளது. நாளையை கொஞ்சம் சிந்தித்து ஒரு தொழில் செய்வதற்கு ஒரு ஏற்பாட்டைச் செய்யலாம். நிலம், நகை போன்றவற்றில் சில முதலீடு செய்யலாம். அதேபோல் நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு முடிந்த உதவி செய்யலாம்.
பெண்கள் நிச்சயமாக இவர்களின் கஷ்டங்களை உணர வேண்டும். அக்கறை காட்ட வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் மீது அக்கறை கொள்ள வேண்டும். அல்லாஹ்விற்கு பயந்து நடப்பவகள் பலர் மிக சிறந்த முறையில் நடந்து கொள்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான கண்ணீர் மடல்களில் ஒன்று தான் கீழே உள்ள கடிதம் படித்து மாற்றிக் கொள்வோமாக!
வீடு திரும்ப விடை கிடைக்குமா ?
1980-ஒரு சிலர் மட்டும் நமதூரில் வெளிநாட்டில் இருந்தார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களை துன்பப்படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் கூற என் மனம் படபடத்தது. ஏனென்றால்  எனக்கு வெளிநாடு செல்ல விசா ரெடியாக உள்ள நேரம், என்ன செய்வதென்று தெரியாமல் நான் குற்றாலத்தில் போய் ஒளிந்து இருந்தேன். எனது நண்பர் ஒருவருக்கு நான் இருக்கும் இடம் தகவல் அறிய என்னை அணுகி நீ இனி வெளிநாடு போக வேண்டாம் என மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்து வந்து, பின்பு வீட்டிலுள்ளவர்கள் என்னை சமாதனம் செய்து விசா வந்தாச்சு என்ன செய்வது ஒரு வருடம் முடிந்தவுடன் ஊர் வந்துவிடு என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.
சென்னை வந்து சேர்ந்ததும் ரயில் நிலையத்தில் மக்கள் நெரிசலை கண்டேன். மனம்  படபடத்தது. அழைத்து வந்த agent என்னை ஒன்னும் பயப்பட வேண்டாம் நாம் பம்பாய் தான் போறோம் என்று சற்று புன்னகையுடன் கூற நான் மன பதட்டத்தில் அமைதியாக இருந்தேன். இரண்டு நாள் ரயில் பயணம் கழித்து பம்பாய் வந்து சேர்ந்தேன். ஒரு ரிக்சா வண்டியில் பயணம் செய்து ஒரு பள்ளிவாசலை அடைந்தோம். அங்கு ஏராளமான தமிழ் பேசும் நண்பர்களை கண்டேன். சற்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது. மறுநாள் காலை agent என்னை பார்க்கவேண்டும் என்றார். காலையில் அவசர அவசரமாக வாய் மாத்திரம் கொப்பளித்து விட்டு பேண்டை மாட்டிக்கொண்டு agent -  பார்க்க சென்றோம்.
காலை 11- மணி அளவில் அவரை பார்த்தேன். நாளை காலை உனக்கு பிளைட் என்றார். நானும் என்னை அழைத்து வந்தவரும் வெளிய வந்து டீ சாப்பிட்டதும் போய் பிளைட் டிக்கெட்டை வாங்கிகொண்டு தங்கி இருந்த பள்ளிவாசலை அடைந்தோம். காலையும், மதியமும் சாப்பிடவில்லை. கண்கள் செய்வதறியாது கலங்கியதை கண்டு ஒரு வெளிஊர் நண்பர் சாப்பிட்டாயா என்று கேட்டவுடன் கண்கள் இல்லை என்று கூற, வார்த்தைகளில் ஆமாம் என்று கூறினேன். இதை புரிந்து கொண்ட நண்பர் என்னை ஹோட்டலுக்கு அழைத்து சென்று வயரும், மனமும் நிறைய சாப்பாடு வாங்கி தந்தார். என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் அதுவும் ஒன்று .
மறுநாள் அல்லாஹ்வின் கிருபையால் நான் சவூதி அரேபியா வந்து சேர்ந்தேன். வந்து பார்த்ததும் அனைத்து இடங்களிலும் மணல், மலை தூரத்திற்கு ஒன்று மட்டும் கண்களில் தென்படும் அளவுக்கு இருந்தது சவூதி அரேபியா. நான் என்னுடைய அரபியை பார்பதற்கு இரண்டு நாட்கள் ஆனது. இரண்டு நாட்களும் விமான நிலையத்தில் தான் இருக்க நேரிட்டது. காரணம் என்னை அழைப்பதற்கு யாரும் வரவில்லை. இரண்டு நாள்களுக்கு சாப்பாடு நான் ஊரில் இருந்து வரும்போது என் மனைவி கொடுத்தனுப்பிய அவல் எனக்கு கை கொடுத்தது. பின்பு  ஒரு காவல்துறை அதிகாரி என்னுடைய அரபியை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து என்னை அவரிடம் ஒப்படைத்தார். எனக்கு வாய்த்த அரபியோ ஒரு நல்லவர் எனக்கு வேண்டிய எல்லா தேவைகளையும் செய்து கொடுத்தார். எனக்கு வேலை மளிகை கடை போன்ற ஒரு கடையில். இங்கு இதை பக்காலா என்பார்கள் .
நான் ஊரிலிருது வரும்போது எனக்கு மூன்று பெண் குழந்தைகள். நான் இங்கு வருகின்ற சமயத்தில் தென்காசி சென்று என் குடும்பத்தாருடன் எடுத்த கருப்பு வெள்ளை போட்டோவை என் கையோடு கொண்டு வந்தேன். இரவு வேலை முடிந்து வந்தவுடன் என் குடும்பத்தாருடன் எடுத்த போட்டோவை நான் பார்த்தேன் என் கண்களில் மளமளவென கண்ணீர் வழிந்தது. யாரும் இல்லாத  ரூமில் நான் சப்தமிட்டு அழுதேன். என்னையே  பிரமிக்க வைத்தது. அன்று கலங்கிய கண்கள் சிறுது காலங்களுக்கு பிறகு நான் நாடு போய் வந்த பின்பு எனக்கு மீண்டும் இரண்டு குழந்தைகள் பிறந்தன அதில் ஒன்று ஆண்மகன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .
இத்தனை காலங்கள் நான் இங்கு கழித்து நான் தேடிய செல்வங்களில் என்னுடைய அனைத்து பெண் குழந்தைகளை சிறப்பாக வாழக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு நல்ல கணவர் அமைத்து கொடுத்தேன். என் மகனையும் பட்ட படிப்பு படிக்க வைத்தேன். ஆனாலும் எனக்கு இன்னும் சுமை குறையவில்லை. என் மகன் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்தேன். அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிவதாக  என்  மனைவி என்னிடம் கூறினாள். காலங்கள் கடந்தால் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்த என் மகனும் கை கொடுக்கவில்லை. தயவுசெய்து என் மகனை போன்று எந்த ஆண்மகனும் இருந்து விடாதீர்கள் .
இப்போது சவூதி அரேபியா 6-ஆண்டுகளுக்கு அதிகமாக இருப்பவர்கள் ஊர் திரும்பவேண்டும் என்று ஓர் உத்தரவு பிறப்பித்தவுடன் எப்படி வெளிநாடு வேண்டாம் என ஓடி ஒழிந்தேன் அன்று இருந்த மனநிலை போன்று இன்றும் எனக்கு இருக்கிறது. காரணம் என்று பார்த்தால் சேமிப்பு இல்லாத வாழ்க்கை. தற்போது நமதூர் நண்பர்கள் ஊருக்கு போய் வரும்போது பிற நண்பர்களிடம் தன்னை பெருமையடிதுக் கொள்வதை பார்த்திருக்கிறேன், எப்படி என்றால் நான் லீவில் 50 ஆயிரம் செலவு செய்தேன் ஒரு லட்சம் செலவு செய்தேன் என்று சொல்கிறார்கள். ரிஸ்க் என்பது ஒரு குறிப்பிட்ட காலங்களில் தான் வரும் நாம் அதை சரிவர பயன்படுதிக்கொள்ளவில்லை என்றால் அல்லாஹ் அதன் பரக்கத்தை நிறுத்திவிடுவான். முறையான திட்டமிதுதல் இல்லாமல் இனி வரும் காலங்களில் என்னை போன்று இருக்காமல் முறையாக திட்டமிட்டு உங்களுடைய வரவுகளையும், செலவுகளையும் அமைத்துக்கொள்ளுங்கள்.
அன்பான சகோதரர்களே, நண்பர்களே இது என்னுடைய வாழ்கையில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு, இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மேலும் என்னுடைய ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்களுடைய வரவுகளையும், செலவுகளையும் முறையாக திட்டமிட்டு எதிர்கால வாழ்க்கைக்காக சேமிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் .
அல்லாஹ் உங்கள் குடும்பத்திற்கும், என் குடும்பத்திற்கும் நல் அருள் புரிவானாக ! ஆமீன் .
இப்படிக்கு ..  கண்ணீரோடு …!  நானும் ஒரு சபுராளி


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts