லேபிள்கள்

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

வேலையிலிருந்து விலகுபவர்கள் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

திறமையும் அனுபவமும் இருந்தால் ஒரு நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவது என்கிற போக்கு இன்றைக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 'நிறுவனத்துக்கு விசுவாசமாக இருப்பது என்கிற போக்கு' இப்போது கிடையாது. எல்லாமே கார்ப்பரேட் மயம். எனது பணிக்கு இவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கிறேன் என்று தெளிவாக சொன்னால்தான் நிறுவனங்கள் வேலை கொடுக்கின்றன. முன்பு போல ஒருவரே எல்லா வேலையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வதில்லை. குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்தால் போதும் என்கிற 'ஸ்பெசாலிட்டி' கான்செப்ட் வந்துவிட்டது.
ஒரு நிறுவனத்தில் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் இருப்பதே அபூர்வமாக பார்க்கப்படுகிறது. அதேபோல அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்கிறது இந்த ஐடி யுகம். ஆண்டு சம்பள உயர்வை எதிர்பார்த்து வேலை செய்வதை விட, அனுபவத்தைக் கொண்டு அடுத்தடுத்த நிறுவனங்கள் மாறும்போது ஊதிய அளவும் இரண்டு மடங்கு உயர்ந்து விடுகிறது. வேலை மாறுவதில் இப்போதைய டிரண்ட் இதுதான் என்கின்றன மனிதவள நிறுவனங்கள்.        
 
புதிய நிறுவனத்தில் பணிக்கு சேரும்போது நம் மீதும், நமது வேலையின் மீதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த எதிர்பார்ப்புகளை அறிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்வோம். ஆனால் வேலையை விட்டு விலகுகிறோம் என்று முடிவெடுக்கும் பணியாளர்கள் பக்குவமாக நடந்து கொள்வதில்லை என்கிறது ஒரு ஆய்வு. அதாவது வேலையை விட்டு விலக முடிவெடுக்கும் பணியாளர் தன்னிடம் உள்ள நிறுவன வேலைகளை முடித்து கொடுக்காமல் இருப்பது அல்லது வேலைகள் குறித்த விவரங்களை எடுத்துக் கொள்வது, கடைசி நாட்களில் ஆர்வமில்லாமல் வேலை பார்ப்பது என்பதாக இருக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

'வேலையை விட்டு விலகும் முடிவு எடுத்துவிட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற குழப்பம் இருக்கவே செய்யும். இந்த நேரங்களில் பொறுப்பாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்கின்றனர் மனிதவள துறையினர். இது குறித்து ஸ்ரீஹெச்.ஆர் கன்சல்டிங் இயக்குநர்
 
விக்னேஷ்வரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
  

''ஒரு நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு விலகும் முடிவு எடுத்துவிட்டால் அதை வெளிப்படையாக அறிவிப்பதும், வேலையிலிருந்து விலகும் நாள் வரை கொடுக்கபட்ட வேலையை முடித்து கொடுப்பதும் அவசியம். குறிப்பாக நிறுவனத்திலிருந்து விலகும் எண்ணம் கொண்ட பணியாளர் தற்போது பார்த்துவரும் வேலைகளை புதியவர்களிடம் ஒப்படைப்பது கூட அவர்களது கடமை என்று உணர வேண்டும். நிறுவனத்திலிருந்து சுமூகமாக வெளியேறுவதன் மூலம் துறை சார்ந்தவர்களிடம் உங்கள் நற்பெயர் நிலைக்கும். எனவே வேலையை விடும் சூழலில் நற்பெயரோடு வெளியேறுங்கள் என்றவர். இது போன்ற சூழலில் செய்யக்கூடாத 10 தவறுகள் என்ன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
 

திருடுவது அல்லது சேதப்படுத்துவது
வேலையை விடப்போகிறோம் என்று முடிவெடுத்தவுடன், நிறுவனத்தின் மீது அல்லது சக பணியாளர்கள் மீது பழிவாங்கும் உணர்ச்சிகளுக்கு ஆட்படுவார்கள். வரவேண்டிய சம்பளம் அல்லது பிற பலன்கள் நிறுத்தப்படுகிறது என்பதற்காக சொத்துக்களை சேதப்படுத்துவது அல்லது திருடுவது போன்ற செயல்களையும் செய்வார்கள். இதுபோன்ற செயல்கள் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

உணர்ச்சிவசப்படுதல்
நிறுவனத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலையில், உங்களிடமிருந்து நிறுவனம் தொடர்ச்சியான உதவியை எதிர்பார்க்கலாம். இதுபோன்ற நிலைமைகளில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமை காக்க வேண்டும். வெளியேறப்போகிறோம் என்பதற்காக கோபப்படுவதோ அல்லது வேலைகளை புறக்கணிப்பதோ கூடாது. நீங்கள் அந்த வேலையில் ஏற்கனவே காட்டிய முனைப்பு, சாதனைகள் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டாம்.
 

மனம் தளரக்கூடாது
வேலையிலிருந்து விலகி கொள்ள அறிவித்து விட்டீர்கள். கடைசி நாட்கள் நெருங்கி வருகிறது. ஏற்கனவே நீங்கள் பார்த்து வரும் வேலைகளை உங்கள் சக பணியாளர்கள், உங்கள் பங்களிப்பு இல்லாமல் பணியாற்ற தொடங்கலாம். இதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வாய்ப்பு இருக்கும்போது கடைசி நாளாக இருந்தாலும் உங்கள் பங்களிப்பைப் கொடுக்க வேண்டும்.
 

மாற்றத்தைத் திட்டமிடல்
வேலையிலிருந்து வெளியேறியப் பிறகும் உங்கள் உதவி நிறுவனத்துக்கு தேவைப்படும். உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு புராஜெக்டிலிருந்து நீங்கள் திடீரென விலகியிருக்கலாம். அதுபோன்ற நிலைமையில் உங்களுக்கு பின்னால் வருபவர்களுக்கு நிலைமையை சமாளிக்க உங்களது அனுபவம் தேவைப்படும். இதற்கு ஏற்ப உதவி மற்றும் ஆலோசனைகள் கொடுக்கல் வேண்டும். அவசரத்துக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண், இமெயில் முகவரிகள் கொடுப்பது நல்லது. இது உங்கள் மீது நன்மதிப்பை உயர்த்தும்.
பணி விலகல் கடிதம்
பணியைவிட்டு வெளியேற முடிவெடுத்த பிறகு, அந்த நிறுவனத்தில் நீங்கள் மேற்கொண்ட வேலை தொடர்புடையை அனைத்து ஆவணங்களையும் முறையாக ஒப்படைக்க வேண்டும். மேலும், நிறுவனத்தில் நீங்கள் சம்பந்தபட்ட அனைத்து துறைகளுக்கும் தெரியப்படுத்தி எந்த நிலுவையும் இல்லை என சான்றிதழ் வாஙகிக்கொள்ள வேண்டும். அதாவது ஹெச்.ஆர்., அக்கவுண்ட்ஸ், ஐடி, மற்றும் உங்களது அணி தலைவர் என அனைவரிடமிருந்தும் உங்கள் தனிப்பட்ட மெயில் ஐ.டி.க்கு இந்த சான்றிதழ் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
 

நிலுவைத் தொகைகள்
நிறுவனத்திலிருந்து உங்களுக்கு வரவேண்டிய நிலுவைகளளை பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக பயணப்படி, மெடிக்கல் பில், நிலுவை ஊதியம் அனைத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட புராஜெக்டிற்காக வெளியிலிருந்து பெற்றுத்தர வேண்டுமெனில் அதற்கு முன்பணம் அல்லது பின் தேதியிட்ட காசோலை வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது குறிப்பிட்ட தேதிக்குள் செட்டில்மெண்ட் செய்து கொள்வது போல எழுதி வாங்கி கொள்ள வேண்டும்.
 

எஃக்ஸிட் இண்டர்வியூ
எஃக்ஸிட் இன்டர்வியூ என்கிற நடைமுறை சில நிறுவனங்களில் இருக்கும். இதில் கலந்து கொண்டு உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். இந்த நேர்காணலில் அளவறிந்து, தேவையறிந்து மட்டும் பேசினால் போதும். வேலையின் மீதும், தனிநபர்கள் மீதும் குற்றம் சாட்டும் விதமாக இல்லாமல், நீங்கள் பார்த்த வேலையில் அடைந்த திருப்தி, அதை மேம்படுத்த செய்ய வேண்டியது என்ன என்பதாக இருக்க வேண்டும் அல்லது அந்த அணி, வேலை சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
 

பி,எஃப் கணக்கு
நிறுவனத்திலிருந்து வெளியேறும் முன் உங்களது சேமநல நிதி கணக்கு விவரங்களை தெளிவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த வேலையில் சேர காலதாமதம் ஆகும்பட்சத்தில், சேமநல நிதி தொகையை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இது உங்கள் ஓய்வுகால சேமிப்பு என்பதால் அவசரப்பட்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். இது உங்களது சேமிப்பு அல்லது சொத்து என்று கருதிக் கொள்ளுங்கள். அடுத்த நிறுவனத்தில் சேர்ந்தாலும் சேமநல நிதி கணக்கை அப்படியே மாற்றிக் கொள்ளலாம் .
எதிர்காலம் குறித்து விவாதம் வேண்டாம்
தற்போது இணைந்து வேலைபார்க்கும் சக பணியாளர்களுடம் உங்களது எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அடுத்த வேலையில் சேரும் நாள் வரையிலும் உங்களது அடுத்த திட்டம் குறித்து பேசக் கூடாது. வேலை உறுதியான பிறகு, அதாவது அடுத்த வேலைக்கான உத்திரவாதமான கடிதம் வந்த பிறகு சொல்லுங்கள். அதுவும்கூட பிரமாதமான வேலை என்கிற ரீதியில் இருக்க கூடாது. இது அதிருப்தி அல்லது எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும். அல்லது எதிர்பாராதவிதமாக அந்த வேலை கைவிட்டுப் போகிறது எனில் நீங்கள் கேலி பேச்சுக்கு ஆளாகலாம்.

தன்விவர குறிப்பு
உங்களுடைய தன்விவரக் குறிப்பு உண்மை கொண்டதாக இருக்க வேண்டும். புதிய வேலையை எடுத்துக் கொள்வதற்காக உத்வேகம் கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை மற்றும் அதில் காட்டிய ஈடுபாடு, சாதனைகள் குறிப்பிடுவதாக இருந்தால் போதும். தெரியாத வேலைகள் குறித்து தகவல்கள் இருக்கக்கூடாது. பெரும்பாலான நிறுவனங்கள் தன்விவர குறிப்பை, அதற்கென்று உள்ள ஆய்வு நிறுவனங்கள் மூலம் சோதிக்கின்றன. அவர்களின் அறிக்கை அடிப்படையிலேயே வேலைவாய்ப்பை வழங்குகின்றன. தவிர 'குயிக் ரெஃபரன்ஸ்' என்கிற அடிப்படையில் நீங்கள் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனத்திலும் விசாரிப்பார்கள். இந்த குயிக் ரெஃபரன்ஸ் அறிக்கையின் அடிப்படையிலும் புதிய வேலைவாய்ப்பு தீர்மானமாகலாம்" என்றார்.

பணியாற்றிய காலத்தில் எத்தனை நல்ல பெயர் எடுத்திருந்தாலும், வேலையை விடுவது என முடிவெடுத்த பிறகு எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களது நல்ல பெயர் நிற்கும். எனவே இந்த தவறுகளை தவிர்த்தால், நிறுவனத்தின் கடைசி நாளிலும் கைக்குலுக்கி விடை பெறலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts