லேபிள்கள்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

அசத்தல் வெற்றி வியூகங்கள்


ந்தியாவை நிர்வகிக்கும், அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது குடியுரிமைப் பணித் தேர்வுகள் (Civil Services Examination). இந்தத் தேர்வுகளில், தமிழர்களால் அழுத்தமான முத்திரைப் பதிக்க முடிவது இல்லை என்ற வருத்தங்களுக்கு இடையே, இந்தியாவுக்குத் தேவையான பெரும்பாலான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஒரு தமிழர் என்பது எத்தனை நகைமுரண். அந்தத் தமிழர், ராசிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன்!

டெல்லியில் ரவீந்திரன் நடத்திவரும் 'வாஜிராம் அண்ட் ரவி ஐ.ஏ.எஸ் இன்ஸ்டிட்யூட்'தான் இந்தியாவின் நம்பர் ஒன் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையம் என்று வட இந்திய ஊடகங்கள் கொண்டாடுகின்றன. இந்த வருடம் சிவில் சர்வீசஸ் தேர்வில், டாப் 10 இடங்களில் முதல் இடம் பிடித்த மாணவர் உட்பட 8 பேர் இங்கே பயிற்சி பெற்றவர்களே. அதோடு முதல் 100 ரேங்க் பிடித்தவர்களுள் 70 மாணவர்கள் ரவீந்திரனின் தயாரிப்புதான். ஆனால், ரவீந்திரனிடம் ஒரு இ-மெயில் ஐ.டி-கூட இல்லை. கணினி, வாட்ஸ்-அப் போன்ற தவிர்க்க முடியாத தொழில்நுட்பங்களுக்குள் தன்னைப் புகுத்திக்கொள்ள முடியாத அளவுக்கு வேலை பளு. கடந்த 35 வருடங்களில் 5,000 சிவில் சர்வீசஸ் அதிகாரிகளை உருவாக்கியிருக்கிறார் என்றால், அந்தப் பளுவின் வீரியத்தை உணர முடிகிறது. சென்னை வந்திருந்த ரவீந்திரனை, தேநீர் இடைவேளை ஒன்றில் சந்தித்தேன்...

''நாமக்கல் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமம் எனக்குச் சொந்த ஊர். பஞ்சாயத்து போர்டு, அரசாங்கப் பள்ளிகளில்தான் படிப்பு. வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் பட்டம். எம்.ஏ அரசியல், எல்.எல்.பி படிக்க டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். ஏஷியன் ஆப்பிரிக்கன் கன்சல்டன்ட் கமிட்டியில் சட்ட ஆலோசனை நிபுணராக இருந்த வேலாயுதம்தான் 1976-ல் இந்த இன்ஸ்டிட்யூட்டை ஆரம்பித்தார். நூலகத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு நான் சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டிருந்தேன். அந்த அனுபவம்தான் வேலாயுதம் இன்ஸ்டிட்யூட்டில் என்னைச் சேர்த்தது. 48 வருடங்களுக்கு முன் சின்ன அறை ஒன்றில் மிகச் சில மாணவர்களோடு ஆரம்பித்தோம். இப்போது 25 ஆயிரம் சதுர அடிக்கு பரந்து விரிந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் புகலிடமாக இருக்கிறது எங்கள் இன்ஸ்டிட்யூட். பொது அறிவு, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், புவியியல், சமூகவியல், உளவியல், வணிகவியல்... இந்த எட்டுப் பாடங்களுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கிறோம்.

எங்கள் மையத்தில் சேர, தகுதி தேர்வு எதுவும் கிடையாது. அது கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், மாற்றுத்திறனாளிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு சிறப்புச் சலுகைகளும் உண்டு!'' என்றவரிடம் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராவது தொடர்பான கேள்விகளை அடுக்கினேன்.

''சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு எப்படித் தயாராவது?''
'''எப்படிப் படிப்பது, எதைப் படிப்பது' என்பதில்தான் இந்தத் தேர்வின் சூட்சுமமே அடங்கி இருக்கிறது. எப்படிப் படிப்பது எனத் தெரியாமல் எதைப் படித்தாலும் பயன் இல்லை. 'எப்படிப் படிப்பது?' என்பதைப் புரிந்துகொள்ள, 'ப்ரிசிஸ் ரைட்டிங்' (Precis writing) எனப்படும் சுருக்கமாக எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். 300 வார்த்தைகள் உள்ள ஒரு பத்தியில் இருக்கும் செய்தியை, அதன் சுவாரஸ்யமும் உண்மைத்தன்மையும் குலையாமல் 100 வார்த்தைகளுக்குள் சுருக்கி எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்தத் திறமை இருந்தாலே எந்தத் தேர்வையும் எளிதில் சமாளிக்கலாம்.

ஒரு புத்தகத்தைப் படித்தால், அதன் அனைத்து பக்கங்களில் இருக்கும் செய்திகளையும் பதிந்துகொள்ள நம் மூளை, கம்ப்யூட்டர் இல்லை. குறிப்பிட்ட சில முக்கியமான தகவல்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளும். அதனால் நாமே ஒரு செய்தி அல்லது கட்டுரையின் சாரம்சத்தை மட்டும் புரிந்துகொண்டு, அதை மட்டும் நினைவில் நிறுத்தப் பழக வேண்டும். பிறகு, அந்த நினைவுக் குறிப்புகளைக்கொண்டே, நான்கு பக்கக் கட்டுரையோ, நாலாயிரம் வார்த்தை கட்டுரையோ எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை திறமையைத்தான் முதலில் எங்கள் பயிற்சி மைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்போம்!

அடுத்து, 'என்கொய்ரிங் மைண்ட்' பயிற்சி கொடுப்போம். அதாவது கேள்வி கேட்டு, அதற்குப் பதில் கண்டுபிடிப்பது. எதைப் படித்தாலும் அதில் சரியான இடத்தில் சரியான கேள்வி கேட்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி, என்ன - இந்தக் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடித்தால் தெளிவு அதிகரிக்கும். இதில் ஒரு கேள்விக்குப் பதில் கண்டுபிடித்துவிட்டால் அது இன்னொரு கேள்விக்குக் கொண்டுபோகும். அந்தக் கேள்விக்கான பதில் மூன்றாவது, நான்காவது கேள்விகளுக்கு அழைத்துச்செல்லும். இப்படித் தெளிவு ஏற்படுத்திக்கொண்டு படித்தால் தேர்வில் வெற்றி சுலபம்.
ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வு என்பது, ஒரே நேரத்தில் மூன்று முதுகலைப் பட்டத்துக்கான தேர்வுகளை எழுதுவதுபோல சிரமமானது. அவ்வளவு பாடங்களைப் படிக்கும்போது அதில் எதைப் படிக்க வேண்டும்,

எதைப் படிக்கக் கூடாது என்ற தெளிவு வேண்டும்!''
''சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் புதிய பாடத் திட்டம், தமிழக மாணவர்களைத் திணறச்செய்கிறதே?''
''திணறுகிறார்கள் என்று சொல்ல வேண்டாம்; சின்னத் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிசாட் சிலபஸ் புதுசு, ஜெனரல் ஸ்டடீஸ் மதிப்பீட்டு முறைகள் புதுசு என்பதால் இந்தச் சிக்கல் இருக்கலாம்! அதற்கு முதல் காரணம் யூ.பி.எஸ்.சி கொண்டுவந்த Civil Services Aptitude Test (CSAT)  என்ற புதிய பாடத் திட்டம்தான். இரண்டாவது காரணம், முதல் நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டடீஸுக்கு முக்கியத்துவம் அளித்து, விருப்பப் பாடத்தின் மதிப்பைக் குறைத்துவிட்டார்கள். ஆனால், இந்தத் தற்காலிகத் தொய்வில் இருந்து தமிழக மாணவர்கள் விரைவில் பிக்-அப் ஆவார்கள். சிசாட் கஷ்டமாக இருக்கும் என்பது ஒரு மாயை. அந்தப் பாடத் திட்டத்தின் தரம் 10-ம் வகுப்பு பாடத் திட்டத்துக்கு ஒப்பானது.

முதல் நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டடீஸுக்கு 200 மார்க். சிசாட்-க்கு 200 மார்க். இதில் இரண்டிலும் சேர்த்து 250 மார்க் வாங்கினால், முதல் நிலைத் தேர்வை கிளியர் செய்துவிடலாம். ஜெனரல் ஸ்டடீஸில், 100 கேள்விகளுக்கு 200 மார்க். அதற்கு 2 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். சிசாட்டில் 80 கேள்விகளுக்கு 200 மார்க். அதே இரண்டு மணி நேரம்தான். ஆனால், 70 சதவிகித மாணவர்கள், அந்தப் பேப்பரை எழுதி முடிப்பது இல்லை. சிசாட்டில் 65 முதல் 72 கேள்விகளுக்கேனும் கண்டிப்பாகப் பதில் எழுதியாக வேண்டும். அப்போதுதான் தேர்ச்சிபெற முடியும். ஏனெனில், ஜெனரல் ஸ்டடீஸில் சராசரியாக 110 மதிப்பெண்கள் வரைதான் வாங்க முடியும். ஆனால், முதல் நிலைத் தேர்வை கிளியர் செய்ய குறைந்தபட்சமே 210 மதிப்பெண்கள் தேவை. எனவே, சிசாட்டில் 120 மதிப்பெண்களேனும் பெற முயற்சிக்க வேண்டும். சிசாட்டில் 55 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்க முடிந்தால், தேர்வு அறையிலேயே நமது ரிசல்ட்டைக் கணித்துவிடலாம்! சிசாட்டில் ஜெயிக்க நிறையப் பயிற்சி, கடுமையான முயற்சி மூலம் பதில் அளிக்கும் வேகத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். வாரம் மூன்று நாட்களேனும் சிசாட் தேர்வுக்குப் பயிற்சியெடுக்க வேண்டும். எத்தனை இன்ஸ்டிட்யூட் பேப்பர்களை வாங்கி பயிற்சி எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு சிசாட் தேர்ச்சி எளிமையாக இருக்கும்!''

''ஜெனரல் ஸ்டடீஸுக்கு எந்த மாதிரி உழைக்க வேண்டும்?''
''இந்திய வரலாறு, இந்தியா மற்றும் உலகப் புவியியல், இந்தியப் பொருளாதாரம், பொது அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடங்களின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான என்.சி.ஆர்.டி பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இதே தலைப்புகளில் கிராஜுவேட் லெவல் புத்தகங்களையும் ஊன்றிப் படிக்கலாம். செய்தித்தாள்களை தினமும் வாசிக்க வேண்டும். பாடப் புத்தக அறிவை மட்டுமே கொண்டு ஜெனரல் ஸ்டடீஸ் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாது. நடப்பு விஷயங்களைச் சம்பந்தப்படுத்தித்தான் கேள்வித்தாள்களையே அமைப்பார்கள். உதாரணமாக, 'முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்' என்று செய்தி வந்தால், 'முன்ஜாமீன் என்றால் என்ன, யாரெல்லாம் முன்ஜாமீன் கொடுக்க முடியும், முன்ஜாமீனுக்கான நிபந்தனைகள் என்ன, யாருக்கு எல்லாம் முன்ஜாமீன் தர முடியாது?' போன்ற கேள்விகள் கேட்கப்படலாம்!''

''நேர்முகத் தேர்வுக்கான டிப்ஸ்?''
''அது இன்டர்வியூ மட்டுமல்ல... உங்கள் ஆளுமையை முழுமையாகப் பரிசோதிக்கும் பெர்சனாலிட்டி டெஸ்ட்டும்கூட. நேர்முகத் தேர்வில் பொய் சொல்லக் கூடாது. ஏனென்றால், ஜீனியஸ் அறிவாளியாக இருந்தாலும் உங்களின் அடிப்படை குணநலன்கள் சரியில்லை என்றால், தேர்வு செய்ய மாட்டார்கள். அதனால் தெரிந்ததைச் சொல்ல வேண்டும். தெரியாவிட்டால் 'தெரியவில்லை' என நேர்மையாகச் சொல்லிவிட வேண்டும். 'இதுவாகத்தான் இருக்கும்' என யூகம் செய்துகொண்டு பதில் சொல்லக் கூடாது. குடிமைப்பணிகளுக்கு இரக்க மனப்பான்மை, உதவும் குணம் அவசியம். அதனால், எளியவர்களுக்கு உதவும் மனம் உள்ளவர்கள் என்று நினைப்பவர்களைத் தேர்ந்தெடுக்கத்தான் முன்னுரிமை அளிப்பார்கள்.

'ஐ.ஏ.எஸ்-ல் ஏன் சேர வேண்டும் என நினைக்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு, 'சேவை செய்வதற்காக' என்று நீங்கள் பதில் அளித்தால், 'எந்தப் பிரிவில் சேவை செய்ய விருப்பம்?' என்று அடுத்த கேள்வி எழும். 'ஊரக வளர்ச்சி' என்று பதில் அளித்தால், அது தொடர்பான ஆழமான கேள்வி கேட்கப்படும். ஆக, பொய் சொன்னால், ஒரு கட்டத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.

நேர்முகத் தேர்வு நடத்தும் உறுப்பினர்களுக்கு வணக்கம் சொல்வது, நீங்கள் இருக்கையில் அமரும் பாங்கு, பதில் தெரியாவிட்டால் அதை வெளிப்படுத்தும் தன்மை... என உங்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் அங்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும். நேர்முகத் தேர்வு கமிட்டியில் ஓர் ஆண் சேர்மனாக இருந்தாலும், பெண் உறுப்பினர் ஒருவர் இருந்தால், அந்தப் பெண் உறுப்பினருக்குத்தான் முதலில் வணக்கம் சொல்ல வேண்டும். இப்படியான நுணுக்கமான விஷயங்கள் முதல் தேர்வு முடிந்து நீங்கள் வெளியேறும் போக்கு வரை அனைத்துக்கும் அங்கு மதிப்பெண் உண்டு. ஆகவே, சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராவது என்று முடிவெடுத்துவிட்டால், உங்களுக்கே நீங்கள் உண்மையாக இருங்கள். அதுதான் வெற்றிக்கான ஒரே வழி!''

''சிவில் சர்வீசஸ் தேர்வுப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் தமிழ்நாடு வரமுடியவில்லையே ஏன்?''
''இந்த வருடம் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு, முதல் இடத்தைக்கூடப் பிடித்தது. நாலைந்து வருடங்களுக்கு முன்பு அகில இந்திய அளவில் 90 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் தமிழகத்தில் இருந்தே 18 பேர் தேர்வானார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தின் பங்களிப்பு சற்றே குறைவு என்பது உண்மைதான்!''

''சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு எங்கே தடுமாற்றம் ஏற்படுகிறது?''
''கல்லூரி பட்டப்படிப்பு வரையில் தமிழ் மாணவர்கள் ஒரு போட்டித் தேர்வைக்கூட எதிர்கொள்வது கிடையாது. தமிழ்நாட்டுக் கல்வித் திட்டம் அதுமாதிரியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது இல்லை. ஆனால், வட இந்தியாவில் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டால்தான் பட்டப்படிப்புகளில் சேர முடியும். இதனால் அவர்கள் போட்டித் துடிப்பை மிக இளம் வயதில் இருந்தே ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

அதனால் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதும்போது அது அவர்களுக்கு பாரமாகத் தெரிவது இல்லை. ஆனால், தமிழ் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகே, போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தம் ஆகிறார்கள். அதனாலேயே முதல் அட்டெம்ப்ட் அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. இதையும் சுலபமாகச் சமாளிக்கலாம்.

11-ம் வகுப்பில் இருந்தே செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இணையத்தில் கிடைக்கும் போட்டித் தேர்வு கேள்வித்தாள்களை அவர்களாகவே நிரப்பி, திருத்தி தங்கள் தகுதிகளை அளவிட்டுக்கொள்ள வேண்டும். லோக்சபா சேனலில் வரும் பேனல் டிஸ்கஷன், பி.பி.சி உலகச் செய்தி, டிஸ்கவரி சேனல், அனிமல் பிளானெட் ஆகியவற்றைத் தொடர்ந்து பார்க்க வேண்டும். அதில் புதுப் புது விஷயங்களைப் பற்றிய விவாதமோ, செய்திகளோ ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும். போட்டித் தேர்வை எதிர்கொள்ளாத தமிழ் மாணவர்கள், இப்படித் தங்கள் பொழுதுபோக்கின் மூலமும்

பொது அறிவை வளர்த்துக்கொள்வது நிச்சயம் கை கொடுக்கும்!''
''சமீபமாக தமிழ் இலக்கியம் படித்தவர்கள் அதிகளவில் வெற்றி பெறுகிறார்களே?''
''தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, எல்லா விருப்பப் பாடங்களும் ஒரு வருடத்தில் நல்ல மார்க் வாங்கும். அடுத்த வருடம் தேர்ச்சியே கிடைக்காமல் போகும். 2012-ல் பொது நிர்வாகத்தில் 300-க்கு 90 என இரட்டை இலக்க மதிப்பெண்கள்தான் பெற்றார்கள். ஆனால், அதற்கு முன்பு பொது நிர்வாகம் நல்ல மார்க் வாங்கிக் கொடுத்தது. விருப்பப் பாடத்தின் டிரெண்ட் மாறிக்கொண்டேதான் இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் தமிழ் இலக்கியம் நல்ல ஸ்கோர் கொடுத்திருக்கிறது. அதை எல்லாம் மனதில்கொண்டு நாம் விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுக்க முடியாது. ஒரு மாணவனின் ஆர்வம், பரிச்சயத்தைக்கொண்டே விருப்பப் பாடத்தைத் தீர்மானிக்க வேண்டும்!''

''முழுக்கவே தமிழ் வழியில் தேர்வு எழுதி, சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?''
''தற்கும் அடிப்படை ஆங்கில அறிவு அவசியம். ஏனென்றால், தமிழில் எல்லாப் புத்தங்களும் கிடைப்பது இல்லை. ஆங்கிலப் புத்தங்களை மொழிபெயர்த்துப் படிக்கவேண்டிய நிலையே இருக்கிறது. பயிற்சி மையங்களிலும் ஆங்கிலவழி வகுப்புகள்தான் உண்டு. எனவே, அடிப்படை ஆங்கில அறிவு இல்லாமல் தேர்வில் வெற்றிபெறுவது மிக மிகக் கடினம். ஆனால், பள்ளிப் பாடத் திட்ட அளவுக்கான ஆங்கிலப் பரிச்சயம் இருந்தால்கூட, எளிதில் தேர்ச்சி பெறலாம். ஆங்கிலம் சரளமாகப் பேச வேண்டும் என்பது அவசியம் இல்லை. பேசினால் புரிந்துகொள்ளக்கூடிய, வாசித்தால் அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்கான புலமை இருந்தால் போதும்.

தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்வழியில் பயிற்சியளிக்க பயிற்சி நிறுவனங்களுக்குப் பொருளாதாரப் பலன் இல்லை. அதோடு தேர்வின் பாடத் திட்டங்களை தமிழில் எழுத ஆசிரியர்கள் முன்வருவதும் இல்லை. கவலைகொள்ள வேண்டாம். ஜெனரல் ஸ்டடிஸுக்குத் தேவையான அளவுக்குத் தமிழில் புத்தங்கள் கிடைக்கின்றன.

'நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா' என்ற அரசு பதிப்பகம், நல்ல புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து விற்கிறது. இந்திய அரசின் வெளியீடான 'யோஜனா' என்ற பத்திரிகை 'திட்டம்' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. அதில் அருமையான ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். இந்திய அரசியல் சாசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை தமிழக அரசே வெளியிட்டிருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிறைய வரலாற்றுப் புத்தகங்ளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. ஆல் இந்தியா ரேடியா தினமும் இரவு 9.15 மணி முதல் 9.30 வரை 'நியூஸ் அனலைஸ்' நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறது. அதை அவசியம் கேட்கலாம். இணையதளத்தில் அந்த நிகழ்ச்சியின் ஆடியோ பதிவுகள் உள்ளன. இந்த நியூஸ் அனலைஸ் தகவல்கள் தேர்வுகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்
http://www.pettagum.blogspot.in/2014/09/blog-post_44.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts