லேபிள்கள்

சனி, 7 மே, 2016

செல்போன், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு, இன்டர்நெட்.... எங்கேயும் எப்போதும் உஷார் உஷார்..!

'மக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்பிருக்கிறது' என்றபடி காவல்துறையைக் குவித்தது... 'திருடர்கள் ஜாக்கிரதை' என்று புகைப்படங்களை ஒட்டியது... எல்லாம் அந்தக் காலம். வீட்டில் இருந்தபடியே லேப்டாப், செல்போன் இவற்றைக் கொண்டே உலகின் எந்த மூலையிலும் கொள்ளையடிக்க முடியும்... பற்பல குற்றங்களை அரங்கேற்ற முடியும் என்பது இந்தக் காலம். எல்லாம், 'டெக்னாலஜி பகவான்' கடைக்கண் பார்வையால் ஏற்பட்டிருக்கும் 'வளர்ச்சியே!'

'நீங்கள், ஒரு ஷாப்பிங் மால் அல்லது திருவிழா கூட்டத்தில் நிற்கும்போது, உங்களுக்குத் தெரியாமலேயே உங்களுடைய மொபைல், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றில் இருக்கும் தகவல்கள் மொத்தத்தையும் திருடி, அதை வைத்தே ஒட்டுமொத்தமாக நொடிகளில் உங்களை மொட்டையடிக்க முடியும்' என்று சொன்னால், அதிர்ச்சியாவீர்கள்தானே! ஆனால், இதுதான் உண்மை!
''ஆம்... இவன்தான் குற்றவாளி என்று அறிந்துகொள்ளக்கூட முடியாதபடி, நம் அருகிலோ, பக்கத்து வீட்டிலோ, பக்கத்து ஊரிலோ, வேறு நாட்டிலோ உலாவும் இந்த 'டெக் குற்றவாளிகள்', மிகவும் சிக்கலானவர்கள். இவர்களை நெருங்குவதுகூட பெரும்பாலும் கடினமே! ஆக, தொழில்நுட்ப வளர்ச்சி நம்முடைய வேலைகளை மட்டும் சுலபமாக்கவில்லை... திருடர்களின் வேலையையும்தான்! ஆக, மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருப்பதே, அவர்களிடமிருந்து நம்மையும், நம் பணம் மற்றும் பொருட்களையும் தற்காத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி'' என்கிறார், சென்னையைச் சேர்ந்த 'சைபர் செக்யூரிட்டி' அமைப்பின் நிறுவனர் ராமமூர்த்தி.

செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் போன்றவற்றில் நாம் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாகவே பேசினார், ராமமூர்த்தி.

செல்போன் இணைப்பு...  மக்கள்தொகையைவிட அதிகம்!
''இந்தியாவின் மக்கள்தொகை இன்று 120 கோடிக்கு மேல். இந்த ஆண்டு இறுதிக்குள் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120 கோடியைவிட அதிகமாகக் கூடும் என்கிறது ஒரு தகவல். அந்தளவுக்கு இன்று அலைபேசி இணைப்புகள் மிகச்சுலபமாகக் கிடைக்கின்றன. ஆக, 110 ரூபாய் முதலீட்டில் ஒரு சிம் வாங்கிவிட்டால் போதும்... ஏன், இலவச சிம் கார்டுகளும்கூட வந்துவிட்டன. இவற்றைப் பயன்படுத்தி செய்யவேண்டிய குற்றப் பணிகளைச் செய்துவிட்டு, அந்த எண்ணைத் தூக்கி எறிந்துவிடலாம். சரியான தகவல்கள் பெறாமல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இணைப்புகளை வழங்கும் அலைபேசி நிறுவனங்களால், இத்தகைய குற்றவாளிகளைக் கண்டறிவது சாத்தியமில்லாமல் போகிறது. இதுவே சில வெளிநாடுகளில், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை உறுதிபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.

ஏமாற்று வேலைகள் பலவிதம்!
நம்மில் பலரும், 'நாங்க டுபாக்கூர்டெல் நெட்வொர்க்ல இருந்து பேசுறோம். உங்க அட்ரஸ், நேம் கன்ஃபர்ம் பண்ணணும்... ப்ளீஸ் சொல்லுங்க' என்கிற ரீதியில் வரும் அலைபேசி அழைப்புகளைக் கடந்திருப்போம். உண்மையில் அலைபேசி நிறுவனங்களிடம் நம்மைப் பற்றிய தகவல்கள் ஏற்கெனவே இருக்கும் என்பதால், அவர்கள் நம்மிடம் கேட்க மாட்டார்கள். நம்மைப் பற்றிய விவரங்களை அவர்களே சொல்லி, 'சரியா?' என்றுதான் கேட்பார்கள். எனவே, உங்களைப் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் என்று அழைப்பு வந்தால், துண்டித்துவிடுங்கள். உங்கள் பெயர், முகவரியைப் பெற்று, மோசடி வேலையில் இறங்கக்கூடும்.

என்னென்ன குற்றங்கள்?
சரி, நம்முடைய அலைபேசி எண் மற்றும் நம்மைப் பற்றிய விவரங்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
ஒருவர் 10 ஆயிரம் தொலைபேசி எண்கள், சம்பந்தப்பட்டவர்களின் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு அனைத்து விவரங்களையும் பல குறுக்கு வழிகள் மூலமாகச் சேமித்து வைத்திருக்கிறார் என்றால், அவற்றை க்ரைம் மூளைகொண்ட ஒரு குழுவுக்கு விற்பனை செய்யலாம். அந்தக் குழு, பணக் கொள்ளையில் இருந்து குழந்தைகள் கடத்தல் வரை அந்த விவரங்களை வைத்தே திட்டங்களைத் தீட்டலாம். அல்லது, நம்முடைய பெயர் மற்றும் முகவரியில் ஒரு குற்றவாளி தனக்குத் தேவையான அலைபேசி எண் வாங்கவோ, வங்கிக் கணக்கு தொடங்கவோ முடியும்.
விளம்பர 'எஸ்.எம்.எஸ்'கள் அனுப்பும் ஏஜென்ஸிகளுக்கு, நம் பெயரும் அலைபேசி எண்களும் தரப்பட, அவர்களின் தொல்லை நம்மை துரத்திக்கொண்டே இருக்கும். 'வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் வேலை' என்று வரும் ஒரு விளம்பர 'எஸ்.எம்.எஸ்'ஸை நம்பி அவர்கள் செல்லும் முகவரிக்குச் செல்லும் நபர்களிடம் 'முன் பணமா 1,000 கட்டுங்க' என்று வசூலித்துக்கொண்டு, கம்பி நீட்டுவதில் தொடங்கி, நம் எண்ணுக்கு வரும் மோசடி 'எஸ்.எம்.எஸ்'கள் பல ரகம்.  

'பரிசு விழுந்திருக்கு!'
'உங்களுக்கு இலவசமாக 10 லட்ச ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் கிடைத்திருக்கிறது', 'உங்கள் அலைபேசி எண் 2,500 டாலர் பரிசுத் தொகையைப் பெற்றுள்ளது', 'நான் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்கள். அதனால், 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ஒன்றரை கோடி ரூபாய்) மதிப்புள்ள எங்களது சொத்தை உடனடியாக வேறொருவர் வங்கிக் கணக்குக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால், அது யாருக்கும் கிடைக்காமல் போய்விடும். அதனால் உடனடியாக உங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றுகிறேன். இந்தப் பணத்தை வைத்து, பொதுச்சேவையாற்றலாம். இதற்கான சேவைக் கட்டணமாக 500 டாலர் (30 ஆயிரம் ரூபாய்) மட்டும் நீங்கள் அனுப்பி வைத்தால் போதும். வருகிற மொத்தப் பணத்தில் பாதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்' என்றெல்லாம் ஆசையைத் தூண்டும் அழைப்புகளும், 'எஸ்.எம்.எஸ்'களும் இப்போது அதிகம் உலாவுகின்றன! இவற்றைஎல்லாம் புறக்கணியுங்கள். இல்லாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கு எண் வரை கேட்டு வாங்கி, உங்களை மொட்டைஅடித்துவிடுவார்கள்.

தகவல் கொள்ளை!
நம் செல்போன்களில் உள்ள தகவல்களை நாம் அறியாமலேயே ஸ்கேன் செய்யும் வசதிகொண்ட 'ஸ்கேனர்'கள் இன்றைக்கு வந்துவிட்டன. 10 ஆயிரம் ரூபாய் விலையிலேயே இவை கிடைக்கின்றன. ஷாப்பிங் மால், திரையரங்கம், விழாக்கள் என மக்கள் கூடும் இடங்களில் சதிகாரர்கள் நம் அருகில் நின்று, அந்த ஸ்கேனர் மூலமாக நம் செல்போன்களில் உள்ள தகவல்களை ஸ்கேன் செய்துவிடுவார்கள். சிலர் அலைபேசியில் வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம் பின் நம்பர் முதற்கொண்டு சேமித்து வைத்திருப்பார்கள். இவையெல்லாம் சதிகாரர்களுக்கு கிடைத்தால்... அவர்களுக்கு கொண்டாட்டம்தானே! செல்போனில் இருக்கும் தகவல்கள், புகைப்படங்களைத் திருடி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். வங்கிக் கணக்கு தகவல்களை வைத்து, பணத்தைக் கொள்ளையடிப்பார்கள். எனவே, ஷாப்பிங் செல்லும்போது எடுத்துச் செல்லும் ஏ.டி.எம். கார்டுக்குரிய வங்கிக் கணக்கில் தேவையான அளவு பணத்தை மட்டுமே வைத்திருப்பதுதான் பாதுகாப்பு.

எந்தவொரு சதிகாரருக்கும் நிச்சயம் உதவி செய்யக்கூடிய மறைமுக சதிகாரர்கள் இருப்பார்கள். அப்படித்தான் நம் பண விவரங்கள் முதல் ஏ.டி.எம் பின் நம்பர் வரை குற்றவாளிகளின் கைக்குக் கிடைக்க, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பணியாளர்களே சமயங்களில் காரணமாகிறார்கள். ஒருவேளை அத்தகைய பணியாளரை வங்கி மேலதிகாரி கண்டுபிடித்துவிட்டாலும், அதிகபட்சமாக வேலையை விட்டு நீக்குவார்கள். ஏனென்றால், அவர் செய்த தவறு வெளியில் தெரிந்துவிட்டால், வங்கியின் பெயர் கெட்டுவிடும். வாடிக்கையாளர்கள் குறைந்துவிடுவார்கள் என்பதுதான். பணியாளரும் வேலை பறிபோனதை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல், தன் சதிவேலையை வேறொரு வங்கியில் சென்று தொடர்வார்.

இதற்கெல்லாம் என்னதான் முடிவு?!
இதுபோன்று தொழில்நுட்பக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 99.9 சதவிகிதம் பேர் புகார் கொடுப்பதில்லை. அப்படியே புகார் கொடுக்கச் செல்லும் 0.1 சதவிகிதம் பேரின் புகார்களை அவ்வளவு சீக்கிரத்தில் காவல் நிலையங்களும் ஏற்பதில்லை. அப்படியே ஏற்றாலும் பெரும்பாலும் நடவடிக்கைகள் இருப்பதில்லை. காரணம், டெக் குற்றங்களை கண்டறிவதற்கான போதிய வசதிகள் இல்லாமை. இதுவே குற்றவாளிகள் தொடர்ந்து குற்றங்கள் செய்ய தூண்டுகோலாக இருக்கிறது என்று சொல்லலாம்'' என்று தெள்ளத்தெளிவாக எடுத்து வைத்த ராமமூர்த்தி,
''இதுகுறித்தெல்லாம் எங்கள் அமைப்பு மூலமாக அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியிருக்கிறோம். இதுவரையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அலைபேசி எண் முதல் வங்கிக் கணக்கு வரை ஒருவரின் விவரங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் 'டேட்டா பிரைவசி ஆக்ட்' என்பதை அமெரிக்கா போன்ற நாடுகள் நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. அதனால் அங்கே அவ்வளவாக இதுபோன்ற குற்றங்கள் நடப்பதில்லை. இதை நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தினால், டெக் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த சட்டங்கள் எல்லாம் வருவதற்குள் நாம் கொள்ளை போகாமலிருப்பது... நம் கைகளில்தான் இருக்கிறது'' என்று அக்கறையுடன் சொன்னார்.
ஆம், நம் பாதுகாப்பு, நம் கைகளில் என்பதுதானே எக்காலத்திலும் உண்மை!

பாடம் சொல்லும் குறும்படம்!
தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் ஏமாற்று வேலைகளை செய்யலாம் என்பதை சொல்லக்கூடிய குறும்படம், 'நான்காவது குற்றத் தருணம்'. ராபி இயக்கியுள்ள இப்படம், 14 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதில் நண்பர்கள் இருவர் 'ஏ.டி.எம்'மில் இருந்து பணம் எடுத்து வெளியே வரும் நபரிடமிருந்து பறித்துக்கொண்டு ஓடுவதை தொழிலாக வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில், 'இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது. எங்கயாவது ரூமுக்குள்ளயே உட்கார்ந்துட்டு திருடுற மாதிரி ஐடியா இருந்தா சொல்லு' என்று ஒரு நண்பன் கேட்க, 'நான் ஒரு பொய்யான வெப்சைட் உருவாக்கியிருக்கேன். அதுல பல எம்.என்.சி கம்பெனிகளோட லோகோ டீடெய்ல்ஸ் எல்லாமே போட்டிருக்கேன். வேலை வேணும்னு இன்டர்நெட்ல தேடுறவங்க நம்ம பக்கத்துக்கு வர்ற மாதிரியும், ரிஜிஸ்டர் பண்றதுக்கு ஒருத்தருக்கு 200 ரூபாயும் நம்ம அக்கவுன்ட்ல கிரெடிட் ஆகுற மாதிரி புரோகிராம் பண்ணிருக்கேன்' என்கிறான் மற்றொரு நண்பன். தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி எப்படிஎல்லாம் கொள்ளையடிக்கலாம் என்பதை எச்சரிக்கும்விதமாகச் சொல்லியிருக்கும் இந்தப் படத்தைப் பார்க்க... https://www.youtube.com/watch?v=R1dhNZGtF34 என்ற லிங்கை டைப் செய்யுங்கள்.

லக்கி டிரா... உஷார்!
மெயில் அனுப்பும்போது பிசிசி (bcc) என்கிற வகையில் அனுப்பினால், ஒருவரின் ஐ.டி மற்றவருக்குத் தெரியாது. டூ (to) மற்றும் சிசி (cc) மூலமாக அனுப்பினால், அனைவருக்கும் மற்றவர்களின் மெயில் ஐ.டி தெரிந்துவிடும். அதை அவர்கள் தங்களின் நட்பு வட்டத்துக்கு ஃபார்வர்டு செய்யும்போது, முகம் தெரியாத பலரின் பார்வைக்கும் அனைவரின் 'ஐ.டி'யும் சென்று சேரும். இது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்க வாய்ப்பு உண்டு.
அலைபேசியில் உள்ள 'ப்ளூ டூத்' வசதியை தேவைப்படும்போது மட்டும் ஆன் செய்து, பின் மறக்காமல் 'ஆஃப்' செய்துவிட வேண்டும். மறந்தால், அனைத்து விவரங்களும் மற்றவர்களின் அலைபேசிகளுக்கு தானாகவே செல்லக்கூடும்.
டெபிட்/கிரெடிட் கார்டு ஆகியவற்றின் பின்பக்கத்தில், அவற்றின் பின் நம்பரை எழுதாதீர்கள். பெட்ரோல் பங்க், கடைகள் என்று எங்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினாலும், கார்டை பணியாளரிடம் கொடுத்து, கையோடு திரும்பப் பெறுங்கள். ஏனெனில், டெபிட்/கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடும் ஸ்கேனர்கள் நிறைவே இருக்கின்றன.  
தியேட்டர், மால்கள், திருவிழாக்கள் என்று பல இடங்களிலும் நின்று கொண்டு, 'லக்கி டிரா... உங்கள் மொபைல் எண், இ-மெயில் ஐ.டி மட்டும் சொல்லுங்கள்' என்று கேட்டு சிலர் நின்று கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் இதைச் செய்து கொண்டிருப்பார்கள். என்றாலும், நீங்கள் அவர்களிடம் கொடுத்த தகவல்கள், அடுத்தவருக்குச் செல்லாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

வலைதளத்தை யார் வேண்டுமானாலும் உருவாக்கமுடியும் என்பது போலிகளுக்கு வசதியாக இருக்கிறது. 'வேலை வாங்கித் தருகிறோம்... கடன் தருகிறோம்... தொழில்கற்றுத் தருகிறோம்...' என்று எப்படி வேண்டுமானாலும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடமுடியும். உஷார்... உஷார்.
ஒரு வங்கி அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தின் வலைதளம் போலவே போலியான வலைதளத்தை உருவாக்கி, நம்முடைய வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை திருடும் 'ஃபிஷிங்' வேலைகளும் அதிகரித்துள்ளன. சம்பந்தப்பட்ட வலைதளத்துக்குள் நீங்கள் சென்றதுமே... முகவரி இருக்கும் பகுதியில் பூட்டு வடிவம் ஒன்று தோன்றுவதுடன், முகவரி மற்றும் அந்த பூட்டு இருக்கும் பகுதியின் பின்புலமானது பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். இதை வைத்தே, ஒரிஜினல் என்று உறுதி செய்யலாம்.

டூப்ளிகேட் ஏ.டி.எம் மெஷின் அறிவீர்களா?!
இன்றைக்கு சந்துபொந்துகளில்கூட ஏ.டி.எம் மெஷின்கள் உள்ளன. அதில் சில, நாம் கேள்விப்படாத வங்கியின் பெயரில் இருக்கும். அவற்றில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பது கூடாது. காரணம், ஒருவேளை அது மோசடி ஏ.டி.எம் ஆகவும் இருக்கக் கூடும். அதில் நம் டெபிட் கார்டை செருகினால், பணம் வரும், அல்லது மெஷினில் பணம் இல்லை என்கிற தகவல் வரும். ஆனால், அடுத்த 15 நிமிடங்களுக்குள், நம் கார்டை ஒருவித 'ஸ்கேனர்' மூலம் சதிகாரர்கள் ஸ்கேன் செய்து, டூப்ளிகேட் கார்டு உருவாக்கிவிடுவார்கள்.
நம் அக்கவுன்டில் உள்ள பணம் அத்தனையும் கொள்ளையடிக்கப்படும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீரில் நடந்த ஒரு பெரும் நிகழ்ச்சியின்போது, இத்தகைய ஏ.டி.எம் அமைக்கப்பட்டு, கொள்ளை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
http://pettagum.blogspot.in/2014/07/blog-post_4874.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts