லேபிள்கள்

ஞாயிறு, 15 ஜூன், 2014

தேநீரா, பால்தேநீரா, கிறீன் தேநீரா

தேநீரா, பால்தேநீரா, கிறீன் தேநீரா

கிறீன் ரீ மோகம் இப்பொழுது பலரையும் ஆட்டிப் படைக்கிறது. அதிலும் முக்கியமாகப் பெண்களும் யுவதிகளும் அடிக்கடி கிறீன் ரீ பற்றிக் கேட்கிறார்கள். அதிலும் முக்கியமாக எடையைக் குறைக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர்கள் கேட்கிறார்கள். பலர் குடிக்கவும் செய்கிறார்கள்.
இது பல வர்த்தகர்களையும் தொழில் அதிபர்களையும் தங்கள் பொக்கற்றுகளை நிரப்பவும் வர்த்தக முயற்சிகளை மேம்படுத்தவும் உதவியுள்ளது. ஊடகங்களில் அமோகமாக கிறீன் ரீ பற்றி நிதமும் வரும் விளம்பரங்கள் அதைக் குடியாதவர்களையும் குடிக்க வைத்திருக்கிறது. வியாபாரம் அமோகமாகிறது.
ஆனால் அதைக் குடித்தும் பெரும்பாலாரோனது எடை குறைவதாகக் காணோம்.

அதற்குக் காரணம் கிறீன் ரீயின் குறைபாடு அல்ல. குடிப்பவர்களின் சோம்பேறித்தனம்தான். கிறீன் ரீயைக் குடிப்பதால் மட்டும் தங்கள் எடை குறைய வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பது, உடற் பயிற்சி செய்வது போன்ற சுய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்பதே முக்கிய காரணம்.

புதிய ஆய்வு ஒன்று விஞ்ஞான சஞ்சிகைளில் வெளியாகியுள்ளது. அதைப் பற்றிய செய்தி பரவியதும் பலர் பிளேன் ரீக்கு மாறிவிடக் கூடும்.

ஆய்வு

தேநீரில் தியோப்ளேவின், தியோரூபிஜினிஸ் (theaflavins and thearubigins)    போன்ற பொருட்கள் அதிகளவில் உள்ளன. இவை உணவுக் கால்வாயிலிருந்து கொழுப்பு பொருட்கள் உறிஞ்சப்படுவதைக் குறைக்கின்றன என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதை ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்தனர். journal of Nutrition ல் அது வெளியானது. இது எலிகளில் செய்யப்பட்ட ஆய்வு. கொழுப்பு அதிகமுள்ள உணவு கொடுக்கப்பட்ட எலிகளுக்கு தேயிலையிலிருந்து பெறப்பட்ட தியோப்ளேவின், தியோரூபிஜினிஸ் ஆகியவற்றைக் கொடுத்தபோது அவற்றின் எடை அதிகரிக்கவில்லை.

அத்துடன் அவற்றின் உடலில் சேர்ந்திருந்த கொழுப்பு கரையவும் செய்தது. எலிகளின் ஈரலில் படிந்திருந்த கொழுப்பும் குறைந்ததாக ஆய்வு கூறுகிறது.

தியோப்ளேவின், தியோரூபிஜினிஸ் ஆகியவற்றால் உணவுக் கால்வாயிலிருந்து கொழுப்பு உறிஞ்சப்படுவது குறைந்தால், குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதும் குறையும். அத்துடன் எடை அதிகரிப்பதையும் குறைக்கும் அல்லவா?

மனிதர்களில்

ஆனால்; தேநீரை அதிகம் உட்கொள்ளும் பிரித்தானியா நாட்டினரிடையே ஏன் கொலஸ்டரோல் பிரச்சனையும், அதீத எடைப் பிரச்சனையும் குறையவில்லை என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
இதற்குக் காரணம் தேநீரில் கலக்கப்படும் பால் என்கிறார்கள். பால் எனும்போது பசுப்பால், ஆட்டுப்பால், பால்மா யாவும் அடங்கும். தேநீருடன் பாலைச் சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும், அத்துடன் பாலில் மிகச் சிறந்த உயிரியல் வலுவுள்ள புரதம் இருப்பதால் அதன் போசனை வலுவும் அதிகரிக்கும் எனத் பால்த் தேநீர் அருந்துபவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் நடப்பது என்ன?

பாலானது தேநீரில் உள்ள தியோப்ளேவின், தியோரூபிஜினிஸ் ஆகியவற்றுடன் சேரும்போது பாலில் உள்ள புரதங்களுடன் சிக்கலான கலவையாக மாறித் திரைந்து போகிறது.

இதனால் பால்த் தேநீர் அருந்துவதால் பாலிலுள்ள சிறந்த புரதத்தின் போசனை கிட்டாமல் வீணாகிப் போவது மட்டுமின்றி தேநிரீல் உள்ள தியோப்ளேவின், தியோரூபிஜினிஸ் ஆகியவற்றால் கொழுப்பு உறிஞ்சப்படுவதைத் தடுக்கவும் முடியாமல் போகிறது. எனவே பால்த்தேநீர் அருந்துவது ஆரோக்கிய ரீதியாக நல்லதல்ல. அப்படிக் குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

ஆயினும் முழுமையான தாவர போசனையாளர்களுக்கு எதாவது ஒரு மிருகப் புரதம் அவசியம். அவர்களால் அதனைப் பாலில் இருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
அத்தகைய நிலையில் பாலைத் தனியாக அருந்துவதே சிறந்தது. ஏனையவர்களும் பால் அருந்த விரும்பினால் தேநீர் கலக்காத பாலாக அருந்த வேண்டும்.

கிறீன் ரீயும் ப்ளேன் ரீயும்
சாதாரண தேயிலை fermentation   ஊடாகப் பதப்படுத்தப்படுகிறது. ஆனால் கீரீன் ரீ பதப்படுத்தப்படுவதில்லை. பதப்படுத்தாமல் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன என்கிறார்கள்.

மற்ற விடயங்கள் எப்படியோ, கொழுப்பானது உணவுக் கால்வாயில் உறிஞ்சப்படுவதைத் தடுப்பதில் நாம் வழமையாக அருந்தும் சாதாரண கறுப்புத் தேநீரானது கிறீன் ரீயை விட கூடியளவு பயன் தரக் கூடியது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். எனவே ஆரோக்கிய காரணங்களுக்காக கிறீன் ரீயை நாடுவதை விட சாதாரண ரீயை பால் கலக்காமல் குடிப்பது நல்ல பலன் தரும் என நம்புகிறார்கள் ஆராச்சியாளர்கள்.

பிளேன் ரீ குடிக்கும் பலர் அதிக சீனி போட்டுக் குடிப்பதுண்டு. பிளேன் ரீக்கு சீனி போட்டுக் குடிப்பதின் நன்மை தீமைகள் பற்றிய ஆய்வுகள் வந்திருப்பதாக நான் அறியவில்லை.
இருந்தபோதும் அதிக இனிப்பு நல்லதல்ல என்று சொல்வதற்கு பெரிய ஆய்வுகள் எதுவும் வேண்டியதில்லை. அதிக இனிப்பானது எடையை அதிகரிக்கும், நீரிழிவை கொண்டுவரும். கொலஸ்டரோலையும் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே ப்ளேன் ரீ குடியுங்கள் அது ஆரோக்கியத்திற்கு நல்லது எனலாம்.

எந்த நேரம் குடிப்பது.

பொதுவாக நாம் உணவுக்கு இடைப்பட்ட வேளைகளில்தான் தேநீரைக் குடிக்கிறோம். அப்படியான இடைநேரங்களில் குடிப்பதால் தங்கள் சோம்பல் குறையும். உற்சாகம் அதிகரிக்கிறது எனப் பலரும் நம்புகிறார்கள். சிலர் வேலைக் களைப்பு என்று சொல்லிக் குடிக்கிறார்கள்.

உணவின் பின் தேநீர் குடிப்பது வேறு சிலரது வழக்கம். ஆனால் தேநீரானது உணவிலுள்ள இரும்புச் சத்தை உணவுக்குழாயால் உறிஞ்சப்படுவதைப் பாதிக்கிறது. எனவே உணவுடன் அல்லது உணவு உண்ட சிறிது நேரத்திற்குள் தேநீர் அருந்துவது நல்ல முறையல்ல.
கிறீன் ரீ. வழமையான தேயிலை இரண்டுமே Camellia sinensis என்ற தேயிலைச் செடியின் இலைகளில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கிறீன் ரீயானது நீராவியால் பதனிடப்படுகிறது. ஆனால் ப்ளக் ரீயானது
Fermentation
முறையில் பதப்படுத்தப்படுகிறது.

இவை இரண்டும் பற்றி ஏற்கனவே பல ஆய்வுகள் வந்துள்ளன. அவை பற்றிய சில செய்திகளையும் அறிந்திருப்பது நல்லது.

முன்னைய ஆய்வுகளில் கிறீன் ரீ

கிறீன் ரீயானது மூளைச் சோர்வடையச் செய்யாது உசாரக வைத்திருக்கும் என்பதில் உண்மை உண்டு. அதற்குக் காரணம் அதிலுள்ள இராசாயனமான கபேன் ஆகும். இது ப்ளக் ரீக்கும் பொருந்தும்.
கிறீன் ரீயானது மார்பு புற்றுநோய், குடல் புற்று நோய் மற்றும் சருமநோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது எனவும் அவை பெருகுவதைத் தாமதப்படுத்தும் நல்லது என பாரம்பரியமாக நம்பப்பட்டாலும், ஆய்வு முடிவுகள் திடமான முடிவுகளைக் கொடுக்கவில்லை.

எடையைக் குறைக்கும், கொலஸ்டரோலைக் குறைக்கும் சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் என சில ஆரம்ப ஆய்வுகள் கூறினாலும், அவையும் திடமாக நிரூபிக்கப்படவில்லை.

முன்னைய ஆய்வுகளில் ப்ளக் ரீ

இதுவும் கிறீன் ரீ போலவே மூளைச் சோர்வடையச் செய்யாது உசாராக வைத்திருக்கும் என்பதற்கு அதிலுள்ள கபேன் காரணமாகிறது.

உட்கார்ந்த நிலையிலிருந்து எழும்போது சிலருக்கு தலைச்சுற்று ஏற்படுவதுண்டு. இது நிலைசார்ந்த இரத்த அழுத்தக் குறைவு காரணமாகவே ஏற்படும். அதனைப் பிளேன் ரீ தடுக்கும் எனச் சில ஆய்வுகள் கூறுகின்றன.

ப்ளேன் ரீயானது மாரடைப்பு வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும், மாரடைப்பு வந்தாலும் அதன் தீவிரத்தைக் குறைக்கும் என்பதை சில ஆய்வுகள் சொல்லியுள்ளன.

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைக் குறைக்கும் தன்மை ப்ளக் ரீக்கு இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

பார்க்கின்சனஸ் நோய் ஏற்படுவதற்கான சாத்தியத்தை குறைக்கும் ஆற்றல் கபேனுக்கு இருப்பதாக வேறு ஆய்வுகள் கூறுகின்றன. கபேனானது தேநீர் உட்பட கோப்பி, கொக்கோ போன்றவற்றிலும் உள்ளது தெரிந்ததே.
இறுதியாக

புதிய ஆய்வு மட்டுமின்றி முன்பும் பல ஆய்வுகளும் வழமையான ப்ளக்ரீ அருந்துவது பற்றி நல்ல முடிவுகள் தந்திருப்பதைக் கண்டீர்கள். அதன் அர்த்தம் கிறீன் ரீ கூடாது என்பதல்ல. நீண்டகாலமாக பலராலும் தேநீர் அருந்தப்படுவதால் ஆய்வுகள் அதிகமாக இருக்கலாம்.

கிறீன் ரியிலும் நல்ல பண்புகள் உள்ளன. எதிர்காலத்தில் மேலும் தகவல்கள் வரலாம்.

ஆனால் இன்றுள்ள நிலையில் சாதாரண பாவனைக்கு ப்ளேன் ரீ நல்லது என்றே தோன்றுகிறது. விலை குறைந்தது, இலகுவில் கிடைக்கக் கூடியது. பலகாலம் அருந்தி எமக்கு அது பழக்கமானது. பக்கவிளைவுகள் பெருமளவு இல்லை.

ஆனால் பால் சேர்க்காமல், குறைந்தளவு இனிப்புடன் அருந்துங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0.0


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts