லேபிள்கள்

திங்கள், 29 ஏப்ரல், 2013

இஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி!


ஸ்பெக்ட்ரம் சுடுகாடு சவப்பெட்டி பேர்பர்ஸ்

இவை எல்லாம் என்ன? தி.மு.க அதிமுக பாரதீய ஜனதா காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஊழல் பட்டியல்கள். இந்த கட்சிகள் அனைத்தும் தங்களது கொள்கைகளில் நேரெதிராக இருந்தாலும் ஊழல் செய்வதில் ஒருவருக்கு மற்றொருவர் சற்றும் சளைத்தவர்கள் அல்ல எனபது ஒவ்வொரு நாளும் செய்திகளின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. ஏன் இப்படி நடக்கிறது? இவர்கள் அனைவரும் பத்தரைமாற்று தங்கங்கள் என்றல்லவா இத்தனை நாளும் காவடி தூக்கினோம்? இவர்களை இதய தெய்வம் என்று பூஜித்து வந்த தனது தொண்டர்களை ஏமாற்ற எப்படி மனது வந்தது? என்ன காரணம்? என்பதை சற்று இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு பார்ப்போம்.
 ஆட்சியாளர்களுக்குரிய தகுதி
 முகமது நபிக்கு பிறகு ஆட்சியாளராக பதவி ஏற்ற ஜனாதிபதி அபுபக்கர் தனது மக்களிடம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
 'மனிதர்களே! உங்கள் தலைவனாக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். நான் உங்கள் எல்லோரையும் விடவும் சிறந்தவன் என்று நான் எண்ணவில்லை. நான் சத்தியம் தவறாது நடந்தால் நீங்கள் எனக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் பிழை செய்தால் நீங்கள் என்னைத் திருத்த வேண்டும். உங்கள் விவகாரங்களில் நான் இறைவனின் கட்டளைப்படி நடந்து கொள்ளும் போது நீங்கள் எனக்கு கட்டுப்பட வேண்டும். இறைவனின் தூதர் சென்ற வழியில்தான் நானும் செல்வேன். நான் நேர்மையை கைக் கொண்டு ஒழுகினால் நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் கோணல் வழி சென்றால் என்னை நேர்வழிப்படுத்துங்கள்.' ஹூகூகல் இன்ஷான், பக்கம் 160
 இப்படிப்பட்ட ஒரு சிறந்த ஆட்சியாளரை உருவாக்கிய முகமது நபியை இங்கு நாம் நினைவு கூறுகிறோம். நம் நாட்டு தற்போதய ஆட்சியாளர்களையும் இங்கு ஒப்பிட்டு பார்க்கிறோம்.
 அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி உமரைப் பற்றி பார்ப்போம்:
 உமருடைய ஆட்சி காலத்தில் பஹ்ரைனின் ஆளுநராக அபுஹூரைராக நியமிக்கப்டுகிறார். ஆட்சியில் அமர்ந்த சில காலங்களிலேயே மிகப் பெரிய செல்வந்தராக ஆகி விட்டார் அபுஹூரைரா. இந்த விஷயம் ஜனாதிபதி உமரின் கவனத்துக்கு வருகிறது. அபுஹூரைராவை வரவழைத்து விசாரிக்கிறார் உமர்.
 ஜனாதிபதி உமர்: உம்மை பஹ்ரைனுக்கு அதிகாரியாக நியமித்தபோது உமது காலில் அணிய செருப்பும் இருக்கவில்லை.
இப்பொழுது நீர் 1600 தீனார் கொடுத்து ஒரு குதிரை வாங்கியுள்ளதாய் அறிகிறேன்.
 அபுஹூரைரா: ஆம். எங்களுக்கு ஒன்றல்ல. பல குதிரைகள் உண்டு. நமக்கு ஏராளமான சன்மானங்கள் கிடைக்கின்றன.
 ஜனாதிபதி உமர்: உமக்கு உணவுக்கும் ஏனைய தேவைகளுக்கும் போதிய பணத்தை அரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொள்ள நாம் ஏற்பாடு செய்திருந்தோமே!
 அபுஹூரைரா: அப்படியானால் எனக்குக் கிடைத்த சன்மானங்களை எல்லாம் உம்மிடம் ஒப்படைக்கவா சொல்கிறீர். அது முடியாது.
 ஜனாதிபதி உமர்: முடியாது. இறைவன் மீது ஆணையாக உமது முதுகை உரிப்பேன். (எழுந்து தம் கையிலிருந்த சாட்டையால் அபுஹூரைராவின் முதுகில் அடித்து) எங்கே அந்த பணம்?
 அபு ஹூரைரா: நான் அவற்றை எல்லாம் தர்மம் செய்யப் போகிறேன்.
 ஜனாதிபதி உமர்: நீர் சம்பாதித்து நேர்மையான முறையில் பொருள் திரட்டி அவற்றை உமது இஷ்டம் போல் தர்மம் செய்யலாம். நீர் வசூலித்த பணம் அரசுக்கு சேர வேண்டிய பணம்.
 என்று கடுமையாக கூறி அவரது சம்பளத்தை கணக்கிட்டு உபரியாக உள்ள சொத்துக்களை எல்லாம் அரசு கஜானாவில் சேர்க்கிறார் உமர். பின்னால் தனக்கு ஏற்பட்ட சிறிய சஞசலத்தை உணர்ந்த அபு ஹூரைரா உமரின் நியாயமான வாதங்களை ஏற்றுக் கொள்கிறார்.
 அடுத்து எகிப்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த அம்ருப்னுல் ஆஸ் என்பவரும் உமரின் விசாரணையிலிருந்து தப்பவில்லை. ஒரு முறை எகிப்து ஆளுனருக்கு ஜனாதிபதி உமர் கடிதம் ஒன்று எழுதுகிறார்.
 'உமக்கு அளவுக்கதிகம் பொருட்களும் கால்நடைகளும் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். நீர் அங்கு பதவியேற்கச் சென்றபோது அப்படி ஒன்றும் இருக்கவில்லையே!'
 இதற்கு அம்ருப்னுல் ஆஸ் அனுப்பிய பதில்:
 'இது விவசாயமும் வர்த்தகமும் மலிந்த செல்வம் கொழிக்கும் நாடு. தேவையை விடக் கூடுதலாக வருவாய் நமக்குக் கிடைக்கிறது'
 அந்த கடிதத்துக்கு ஜனாதிபதி உமர் எழுதிய பதில் கடிதம்:
 'பல தீய அதிகாரிகளின் செயல்களிலிருந்து நான் நிறைய அனுபவம் பெற்றுள்ளேன். உமது பதிலும் ஏதோ பயந்தவன் எழுதியது போல் தெரிகிறது. நான் உம் மீது சந்தேகம் கொள்கிறேன். உமது சொத்துக்களைப் பரிசீலனை செய்ய முஹம்மது பின் மஸ்லமாவை அனுப்புகிறேன். அவர் கேட்கும் சகல விபரங்களையும் நீர் கொடுக்க வேண்டும்.'
 ஜனாதிபதியின் உத்தரவுக்கு கீழ்படிந்த எகிப்து ஆளுநர் அந்த அதிகாரியிடம் தமது சொத்து விபரங்களை எல்லாம் ஒப்படைக்கிறார். – -ஹூகூகல் இன்ஷான், பக்கம்46
ஒரு நாட்டின் ஆளுநராக இருப்பவர்களும் ஜனாதிபதியின் கட்டளைக்கு அடி பணிய வைத்தது உளப்பூர்வமான இறை பக்தி. அது இரு தரப்பும் இருந்ததால்தான் ஊழலற்ற ஆட்சியை அவர்களால் கொடுக்க முடிந்தது. இறப்புக்கு பிறகு ஒரு வாழ்வு இருக்கிறது. அங்கு நாம் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் இவர்களை நீதியின் பக்கம் நிற்க வைத்தது.
அடுத்து ஒரு சம்பவம்
 ஜனாதிபதி நோய்வாய்பட்டபோது ஜனாதிபதி உமருக்குப் பிறகு யார் வருவது என்ற பிரச்னை வருகிறது. அரச சபையில் சில பேர்களை தேர்வு செய்து ஜனாதிபதி உமரிடம் கொடுக்கின்றனர். அந்த பட்டியலில் உமருடைய மகனின் பெயரும் இருந்தது. அந்த பட்டியலில் இருந்தவர்களில் தலைமைத்துவத்துக்கு மிகவும் ஏற்றவராக உமரின் மகன் இருந்தார். இருந்தும் தனது மகன் என்ற ஒரே காரணத்துக்காக அவரை அந்த பட்டியலிலிருந்து நீக்கி மற்றவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க உமர் பணிக்கிறார்.எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை! இந்த எண்ணம் எத்தனை ஆட்சியாளர்களிடத்தில் இருக்கும்? இன்று வாரிசுகள் புகாத அரசியல்வாதிகளை பார்க்க முடிகிறதா? இன்று நமது நாட்டின் அத்தனை ஊழல்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பவர்கள் அரசியல்வாதிகளின் வாரிசுகளே!
 முன்பு ஜெயலலிதாவின் மீது கோர்ட்டு தண்டனை கொடுத்த போது தமிழகம் எத்தனை பிரச்னைகளை ஏற்கொண்டது. இன்னும் இரண்டொரு நாட்களில் வேறு யாரும் கைதானால் என்னென்ன ரகளைகள் நிறைவேறுமோ தெரியவில்லை.
எனது நாட்டை சுயநலமிகளிடமிருந்து இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.
நன்றி:சுவனப்பிரியன்


--
*more articles click*
www.sahabudeen.com



சனி, 27 ஏப்ரல், 2013

வெற்றிக்கு முதல் படி…! எது முக்கியம், தம்பி?


வாழ்வில் எது முக்கியம் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
யாராவது புதிய மனிதர்களை எங்காவது சந்தித்தோமானால் முதலில் நமது பெயரைக் கேட்கிறார்கள். அடுத்து அவர்கள் என்ன கேட்கிறார்கள்?
"என்ன செய்கிறீர்கள்? எங்கே வேலை பார்க்கிறீர்கள்?" என்பதைத்தான்.
'என்ன வேலை செய்கிறோம், எங்கே வேலை பார்க்கிறோம்' என்பதிலிருந்து நம்மைப் பற்றி ஒரு அனுமானத்திற்கு வர முயல்கிறார்கள். நாம் செய்யும் வேலை தொழில் நம்மை அடையாளம் காட்டுகிறது.
ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. நம்மை நம்பி பெற்றோரும் மனைவி மக்களும் இருக்கிறார்கள். எனவே "வாழ்வில் எது முக்கியம்" என்று நூற்றுக்கணக்கான பேரை சர்வே செய்தபோது, "தொழில் தான் முக்கியம்" என்றார்கள்.
நீங்கள் கொஞ்சம் சொல்லிப் பாருங்கள்.. "நான் ரசிகர் மன்றம் வைத்திருக்கிறேன்!" என்று. அல்லது நான் "கட்சியில் இருக்கிறேன்" என்று. அது ஒரு தொழிலா என்று கொஞ்சம் நீங்களே யோசித்துப் பாருங்கள்!
எப்படி நல்ல வேலையைப் பெறலாம்? நல்ல தொழிலில் இறங்கலாம்?
நல்ல படிப்பு வேண்டும். எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். ஊர் உலக வரலாறு தெரிய வேண்டும். நமது ஊர், நமது மாவட்டம், மாநிலம், நாடு, உலகம் என்று உலகியல் தெரிய வேண்டும். அறிவியல் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட கல்வியை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோமோ, அவ்வளவு நாம் எடுக்கும் வேலையைத் திறமையுடன் செய்ய முடியும். படிப்புக்கேற்றபடி சம்பளம் கிடைக்கிறது.
இந்தியா முன்னேறும்
இந்தியா முன்னேறும் என்று சொல்பவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். அதாவது இந்தியர்கள் தங்கள் குழந்தைகளைப் "படி படி" என்று சொல்லி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் இன்று அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, அவர்கள் குழந்தைகள் பெரிய ஆபிசராகவோ, கலெக்டராகவோ, விஞ்ஞானியாகவோ நாளை ஆவார்கள். இந்தியா முன்னேறிவிடும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
பள்ளிப் படிப்பு என்பது ஒன்றும் கஷ்டமானதல்ல. கோடிக்கணக்கானவர்கள் உலகம் முழுவதும் செய்கிற வேலையைத்தான் நாமும் செய்கிறோம். அப்படியே படிப்பு வராவிட்டாலும் குறைந்தது எழுதப் படிக்கவாவது நமக்குத் தெரிய வேண்டும். அன்றாடப் பத்திரிக்கையைப் படிக்கிற அளவுக்கு பிறருக்கு ஒரு கடிதம் எழுதுகிற அளவுக்கு நமக்கு படிப்பு தேவை. பத்திரிக்கை படிக்கும்போது நாம் உலக ஞானம் பெறுகிறோம். ஊர் உலகம் இப்படிப் போகிறது என்று தெரிந்துகொள்ளும்போது நாமும் பயப்படாமல் இறங்கி பிழைத்துக்கொள்ள முடியும். இன்று இருக்கும் பெரிய தொழிலதிபர்கள் சிலர் அதிகம் படிக்காதவர்கள்தான். ஆனால், எதையும் சமாளிக்கும் உலக ஞானம் அவர்களிடம் நிறைய உண்டு.
அவர்கள் எல்லாம் வாழ்வில் ஒரு குறிக்கோளை, "நான் பெரிய பணக்காரனாக ஆகப் போகிறேன், நான் பெரிய கலெக்டராக ஆகப் போகிறேன்; பெரிய கம்பெனி வைத்து நடத்தப் போகிறேன்" என்று சின்ன வயதிலேயே ஆசைப்பட்டவர்கள்.
அவர்கள் சினிமா மோகத்திலோ, பெண்ணாசையிலோ, கள்ளச் சாராயம் காய்ச்சுவதிலோ, குடிப்பதிலோ இறங்குவதில்லை.
அவர்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று தெரியும். கண்ணுக்குப் பட்டை போட்ட குதிரை எப்படி நேர் சாலையைப் பார்த்துக் கொண்டு ஓடுகிறதோ அதைப் போல கண்ணுங் கருத்துமாக தங்கள் தொழிலில், தாங்கள் முன்னுக்கு வருவதில்தான், கவனம் செலுத்துவார்கள்.
ரசிகர் மன்றங்கள்
நமது நாட்டில் தமிழ் நாட்டில்தான் சினிமா ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட இதெல்லாம் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதெல்லாம் இல்லை; சினிமா நடிகர்களையும் நடிகைகளையும் "ஆகாஓகோ!" என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் இளைஞர்கள் இங்குதான் ஏராளம். தான் காதல் கொண்ட நடிகர், நடிகை நடித்த முதல் காட்சிக்கு அவர் படத்தின் முன் தூப தீப ஆராதனை எல்லாம் செய்கிறார்கள். ஒரு நாலு ஊரில் ஒரு ரசிகர் மன்றம் இருந்தால்கூட, "அகில உலக" ரசிகர் மன்றம் என்று பெயர் வைப்பார்கள்!
தங்கள் நேரத்தை, பணத்தை, உழைப்பை எல்லாம் இந்த ரசிகர் மன்றத்துக்கு வீணடிப்பார்கள். பிற நாடுகளில் இப்படி இருக்கிறதா? இல்லை! இல்லவே இல்லை!!
அங்கெல்லாம் அவர்களுக்கு அவர்கள் தொழில்தான் முக்கியம். அவர்கள் குடும்பம் மனைவி மக்கள்தான் முக்கியம். வீட்டில் சினிமாக்காரர்கள் படமோ, அரசியல் தலைவர்கள் படமோ மாட்டப்பட்டிருக்காது. மாறாக குடும்பப் படம், அவர்களை வளர்த்த அவர்களின் பெற்றோர் படம் இவைதான் இருக்கும்.
சினிமா நடிகர் என்பவர் பஸ் டிரைவரைப் போல, ஓட்டல் சர்வரைப் போல ஒரு தொழில் செய்கிறார், அவ்வளவுதான். ஒரு ஓட்டல் சர்வர் பிரமாதமாக நல்ல காப்பி போட்டுத் தருகிறார் என்று நாம் அவருக்கு ரசிகர் மன்றம் வைக்க முடியுமா? ஒரு பஸ் டிரைவர் மிக நன்றாக ஓட்டுகிறார் என்பதற்காக ஒவ்வொரு முறை பஸ் புறப்படும்போது அவருக்கு மாலை போட்டு தீபம் காட்டி அவரை வழி அனுப்புகிறோமா?
செய்வதில்லை!
அதுபோலத்தான் ஒரு நடிகரும் சரி, அரசியல்வாதியும் சரி. அவர்கள், அவர்கள் வேலையை தொழிலைச் செய்கிறார்கள். நாம் நம் தொழிலில் கவனம் செலுத்தினால்தான் நாம் பிழைக்க முடியும்; நமக்கு சாப்பாடு கிடைக்கும்!
சினிமா கனவு!
நமது ஊரில் இளைஞர்கள் எல்லாரும் சினிமாவில் சேர்ந்து நடிகராகிவிடலாம், கை நிறைய சம்பாதித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். வீட்டுக்கு வீடு எல்லாரும் நடிகர்களும் நடிகைகளுமாக மாறி விடுகிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உங்கள் அப்பா, நீங்கள், உங்கள் தம்பி, உங்கள் அம்மா, அத்தை, தங்கை எல்லாரும் நடிகர்கள் நடிகைகள் என்று யோசித்துப் பாருங்கள்!
பக்கத்து வீட்டிலும் இப்படியே! ஊர் முழுவதும் எல்லாரும் இப்படி ஆசைப்பட்டு தமிழ்நாடு நடிகை, நடிகர்களால் நிறைந்திருக்கிறது என்றால் பிழைப்பு எப்படி நடக்கும்?
வீட்டிலுள்ள எல்லாரும் உழைத்து அதிகமான நெல்லையோ, வாழைக்காயையோ, மல்லிகைப் பூவையோ உற்பத்தி செய்தால், மிகுந்ததை வெளி நாடுகளுக்கு அனுப்பி நாம் பணம் பெற முடியும். அந்தப் பணத்தை வைத்து நாம் நமக்கு வேண்டிய வெளிநாட்டுப் பொருளை வாங்கிக்கொள்ள முடியும்.
மாறாக, நம் நாடு நடிகர்களாலேயும் வழக்கறிஞர்களாலும், டாக்டர்களாலும், ஆசிரியர்களாலும், காப்பிக் கடைகாரர்களாலும், பார்பர் கடையினாலும் நிறைந்திருக்கிறதென்றால் என்ன ஆகும்? இந்தத் தொழில் எல்லாம் முதலில் கூறிய உற்பத்தி செய்கிறவர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கு, குடும்பத்திற்கு உதவுகிற தொழில்கள்தான். அதாவது பிறருக்குத் தொண்டு செய்கிற தொழில்கள். ஆகவேதான் பொருளாதாரத்தை "உற்பத்தி செய்கிற இனம்" என்றும் அவர்களுக்கு உதவியாக "தொண்டு செய்கிற இனம்" என்றும் இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள்.
நம் நாட்டில் உற்பத்தி என்றைக்கு அதிகமாகிறதோ அன்றுதான் எல்லாரும் அதிகமான வளத்தைக் காண முடியும். எல்லாரும் அந்த அதிக விளைச்சலைப் பங்கு போட்டுக் கொள்ள முடியும். நம் வருமானம் அதிகமாகும்.
எல்லா நாடுகளிலும் உற்பத்திக்கும் தொண்டு வேலைக்கும் ஒரு விகிதம் இருக்க வேண்டும். தொண்டு வேலைக்கு ஆள் அதிகம் இருக்கிறார்கள். உற்பத்திக்குப் போதிய ஆள் இல்லை. நாம் எல்லாரும் வசதியுடன் வாழ வேண்டுமானால் நம் நாடு நிறைய உற்பத்தியாளர்களால் நிறைய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு பணக்கார நாடாக, பஞ்சாப் போல, குஜராத் போல ஆக முடியும்.
நமது வருமானம் போல இரண்டரைப் பங்கு சம்பளம் அதிகமாக அங்கே பஞ்சாபில் இருப்பவர்கள் பெறுகிறார்கள். அதனால் தான் அந்த மாநிலத்து மக்கள் சொந்த வீடு வைத்துக் கொண்டும், மோட்டார் சைக்கிள், கார் வைத்துக் கொண்டும், நல்ல வேட்டி சட்டை போட்டுக் கொண்டும், வசதியுடன் வாழ்கிறார்கள். நாமோ, நமது ஊர்காரர்களோ அவர்களுக்கு வேலை செய்ய டெல்லிக்கும் பம்பாய்க்கும் போய்க் கொண்டிருக்கிறோம்!
சினிமா! சினிமா!
சமீபத்தில் நான் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். ஒரு புத்தக வெளியீட்டாளரான இளைஞர் சொன்னார் :
"ஐயா! எத்தனையோ நல்ல புத்தகங்கள் போட்டேன். விற்பனை இல்லை; வாங்குவோர் இல்லை. சில மாதம் முன் "சினிமாவில் சேருவது எப்படி?" என்று ஒரு புத்தகம் எழுதினேன். சின்னப் புத்தகம்தான். ஆனால், சில மாதங்களில் அது மூன்று பதிப்பு வெளி வந்துவிட்டது. விற்பனை 'ஓகோ!' என்று போகிறது!" என்றார்.
"சுயமாக உழைத்து முன்னேறுவது எப்படி?", "நீங்களும் எப்படி ஒரு தொழில் அதிபர் ஆகலாம்?" என்று நான் ஒரு இருபது ஆண்டுகளாக தன் முன்னேற்ற நூல்கள் எழுதி வருகிறேன். இப்போது நிறைய பேர் இப்படி எழுதி வருகிறார்கள். இந்தப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன என்று பதிப்பாளர்கள் சொல்கிறார்கள்.
இருந்தாலும் "சினிமாவில் சேருவது எப்படி?" ஓராண்டிற்குள் மூன்று பதிப்பு விற்பனை ஆகிறதென்றால், நம் இளைஞர்கள் உழைத்து முன்னேறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? நிரந்தரமாக வெற்றி பெறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? அல்லது திடீர்ப் பணக்காரராவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? அல்லது நிரந்தரமில்லாத ஒரு தொழிலில் மோகம் கொண்டு திண்டாட முன் வருகிறார்களா, யோசித்துப் பாருங்கள்!
வாழ்வில் எது முக்கியம், எது சரியான வழி என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தொழில் நிர்வாகத்தில் மெத்தப் படித்தவர்கள் தொழில் வெற்றி பெறுவதன் இரகசியம் "எது முக்கியம்?" என்பதை உணர்வதுதான். அதைத்தான் ஆங்கிலத்தில் 'பிரையாரிட்டி' (Priority) என்று அடிக்கடி சொல்வார்கள். நீங்களும் 'எது முக்கியம்?' என்று நாலுமுறை சொல்லிப் பாருங்கள் ஒரு வேலை தொடங்குவதற்கு முன்னால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
- டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி


--
*more articles click*
www.sahabudeen.com



வியாழன், 25 ஏப்ரல், 2013

செருப்பு வாங்கும் போது


செருப்பை தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.
செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால் தான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது. விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும்.
தோல் செருப்புகளை, தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைத்தால், செருப்பின் ஆயுளும் குறையும், பாதங்களுக்கு பொருத்தம் இல்லாமல் அழகும் கெட்டு விடும். தரையில் வழுக்காமல், கிரிப் உள்ள செருப்புகளையே பயன்படுத்த வேண்டும். மேலும், அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருதுவாகவும் செருப்பு இருக்க வேண்டும்.

மழைக்காலத்தில், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது. ஏனென்றால், அது நடக்கும்போது, வழுக்கி விடுவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும். வயதான பெண்கள், வாதநோய் ஏற்பட்டவர்களும், குளிரான இடங்களிலும், ஈரத்தன்மைஉள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.
பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மையானவை. ஆதலால், ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது. அப்படி அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். பிளாஸ்டிக் செருப்புகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும். மேலும், அதிக வியர்வையும் தோன்றும். எனவே, பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷூக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா? என பார்த்து அணிய வேண்டும். செருப்பு, ஷூக்களுக்கு அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால், செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது, செருப்பில் இருக்கும் ஈரத் தன்மையும் நீங்கி விடும்.

உங்களுக்கு செருப்பு வாங்குவதற்காக, அளவை கொடுத்து, இன்னொருவரை அனுப்பாதீர். நீங்களே சென்று தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.
அடுத்தவர்களின் செருப்புகளை அணியக் கூடாது. இதனால், தோல் நோய் ஏற்படும். ரப்பர், பிளாஸ்டிக் செருப்புகளை அணியும் பெண்கள், அவற்றை தினமும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.


--
*more articles click*
www.sahabudeen.com



செவ்வாய், 23 ஏப்ரல், 2013

நபிகளின் நல்லுரைகள்

அழிவில்லாத கல்வி

நபிகளின் நல்லுரைகள்

* சன்மார்க்க கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண் மீதும் கட்டாயக் கடமையாகும்.

* மார்க்க கல்வியை கற்றுக் கொள்வதற்காக எவர் ஒரு ஊருக்கு புறப்பட்டு விடுகிறாரோ அவர் அதனைக் கற்று மீண்டும் ஊர் திரும்பும்வரை சன்மார்க்க வழியில் ஈடுபட்டவராகவே கருதப்படுவார்.

* இஸ்லாத்தை உயிர்ப்பிப்பதற்காக ஒருவன் கற்றுக்கொண்டு வரும்
சமயத்தில் மரணித்து விடுவானேயானால் சொர்க்கத்தில் நபிமார்களுடன் இருக்கும் நற்பதவியை கிடைக்கப் பெற்றவனாகிவிடுகிறான்.

* மார்க்கக்கல்வியை தேடிப்புறப்பட்டவர் திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார்.

* மனிதன் கல்விக்காக செய்கிற தருமம் அவன் மரணித்த பிறகும் நன்மை பொழியும்.

* கற்றுக்கொடுப்பவரும் கற்றுக் கொள்பவரும் நேர்வழியில் இருக்கின்றனர். இந்த நிலை அற்றவர்களிடம் எந்த நல்வழியுமில்லை.

* அல்லாஹ்வின் சேவைக்கல்லாமல் (உலக வாழ்வின்) நோக்கத்திற்காக கல்வி கற்பவன் நரகத்தை இருப்பிடமாகக் கொள்ளட்டும்.

* எந்த ஒரு அடியானை இறைவன் இழிவுபடுத்த விரும்புகிறானோ அவனை மார்க்க கல்வியை கற்றுக்கொள்வதை விட்டு நீக்கி விடுகிறான்.

* மார்க்க கல்வி நபிமார்களின் உரிமைப் பொருள். செல்வம் பிர்அவ்னின் உரிமைப் பொருள். அதிகமாக வணக்கம் புரிவதைவிட அறிவை அதிகமாக்கிக் கொள்வதே மேலாகும்.

* கல்விக்கு அழிவே இல்லை. அதுபோன்று அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவே இல்லை.

* எனக்குப்பின் மார்க்கக்கல்வி வெகுவிரைவில் அகன்றுவிடும். பின்பு குழப்பங்கள் வெளிப்பட்டுவிடும். அறியாமை மிகைத்துவிடும். அதனால் மக்கள் மத்தியில் கட்டாயக் கடமையான விஷயங்களில் கூட (சண்டை) சச்சரவுகள் உண்டாகிவிடும். அவர்களை சமாதானம் செய்து வைக்கும் அளவுக்கு அறிவுள்ளவர் அப்போது இருக்கமாட்டார்கள்.

* எனது உம்மத்தினரை நாசப்படுத்தும் வஸ்துக்கள் இரண்டு; 1. கல்வி கற்பதை விட்டுவிடுவது 2. பொருள்களை சேர்ப்ப தில் முழு நேரத்தையும் செலவு செய்வது.

* நம்மிடத்தில் ஒரு ஹதீஸை அல்லது ஒரு சட்டத்தைக் கேட்டு அறிந்து கொள்வது ஆயிரம் ரகஅத் நபில் தொழுவதை விட மேலானதாகும். ஏனென்றால் அவர் மார்க்க கல்வி கற்கும் நிலையில் அவருக்கு மரணம் வருமேயானால் (ஷஹீதாக) வீரத்தியாகியாக மரணிக்கிறார்.

* உங்களுக்கு மார்க்க கல்வியை கற்றுக் கொடுத்தவரை கண்ணியப்படுத்துங்கள்.

* அல்லாஹ்வின் சேவைக்கு அல்லாமல் வேறு (உலக வாழ்வின்) நோக்கத்திற்காக கல்வி கற்பவன் நரகத்தையே தன் இருப்பிடமாகக் கொள்வான். 

பிராணிகளிடம் அன்பு செலுத்துங்கள்

விலங்குகளிடத்தில் நபிகள் நாயகம் அதிக அக்கறை கொண்டிருந்தார். அவைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.

ஒரு முறை, நபிகள் நாயகம் ஒரு வழியில் சென்றபோது கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஒட்டகத்தைப் பார்த்துச் சென்றார். மீண்டும் அவ்வழியே வந்தபோது ஒட்டகத்தின் உரிமையாளரை பார்த்து "இந்த ஒட்டகத்திற்கு தீனி போட்டீரா?' என்று கேட்டதற்கு, அவர் "இல்லை' என்றார். ""அறிந்துகொள்ளும். நாளை கியாம நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் இந்த ஒட்டகம் வழக்காடும்,'' என்று எச்சரித்தார். ஆடு, மாடு, மற்றும் கால்நடைகளுக்கு துன்பம் செய்பவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகிறது. ஈயின் இறக்கைகளில் ஒன்றில் விஷமும் மற்றொன்றில் அவ்விஷத்திற்கு மருந்தும் உள்ளது. ஈ, உங்கள் பானம் உள்ள பாத்திரங்களில் விழும்போது மருந்துள்ள இறக்கையை மேல் துõக்கியும், விஷமுள்ள இறக்கையை (பானத்தில்) முக்கியவாறே விழும். ஆகவே நீங்கள் அவ்விரு இறக்கைகளையும் முக்கிய பின் வெளியே எடுத்து விடுங்கள்,'' என்ற தகவலையும் சொல்லியுள்ளார். அவர் ஆடுகள் பற்றி கூறும்போது, "" செம்மறி ஆடுளை அன்புடன் நடத்துங்கள். அவற்றை பாதுகாத்து வாருங்கள். ஏனென்றால் சொர்க்கத்தில் உள்ள நாலுகால் பிராணிகளில்அவையும் உள்ளன,'' என்றார்.

ஒரு மனிதன் ஒரு குருவியை அடித்தால் கூட, கியாம நாளில் அதைப்பற்றி விசாரணை செய்யப்படுவான். நீங்கள் ஒரு சிறிய சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டுவீர்களானால் அல்லாஹ் உங்கள் மீது அன்பையும் அருளையும் பொழிவார். நீங்கள் சேவல் கூவுவதைக் காதில் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளை வேண்டுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அது (அந்த நேரம்) வானவரைக் கண்டுள்ளது. அதல்லாமல் நீங்கள் கழுதையின் சப்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு கேளுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அது ஷைத்தானைக் கண்டுள்ளது. எவராவது வீட்டில் நாயை வளர்ப்பாராயின், அவருடைய நன்மைகளில் ஒவ்வொரு தினமும் ஒரு கிராத் அளவு நன்மை குறைந்துவிடும். வேட்டைநாய் அல்லது வயல்களை காவல்புரியும் நாய் அல்லது கால்நடைகளை காவல் புரியும் நாய்களுக்கு இது பொருந்தாது.

மார்க்க விதிகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனக்கூறிய நாயகம், ""என்னுடைய உம்மத்தவர்களில் கருத்து வேற்றுமையும் பிரிவினைகளும் விரைவில் ஏற்படும். நல்ல வார்த்தைகளும் கெட்ட பழக்கங்களும் உடைய ஒரு கூட்டத்தினர் குர்ஆன் ஓதுவார்கள். அது அவர்களுடைய தொண்டையைக் கடக்காது. எய்யப்பட்ட பிராணியிலிருந்து வெளியேறும் அம்புபோல் அவர்கள் தங்களுடைய சன்மார்க்கத்திலிருந்து வெளியேறி வருவார்கள்,'' என்கிறார்.



--
*more articles click*
www.sahabudeen.com



ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஃப்ரிட்ஜ் - கூல்! கூல்!


அத்தியாவசிய வீட்டுச் சாதனங்களில் ஒன்றாகிவிட்டது ஃப்ரிட்ஜ். சரி, ஃப்ரிட்ஜை முறையாக, முழுமையாக எப்படிப் பயன்படுத்துவது என்று  தெரிந்துகொள்ளலாமா?

'நம் ஊரின் அறை வெப்ப நிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட். ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் ஃப்ரீஸரின் வெப்ப நிலை ஜீரோ டிகிரி பாரன்ஹீட். ஃப்ரீஸர் தவிர்த்த மற்றப் பகுதிகளை ரெஃப்ரிஜிரேட்டர் என்கிறோம். இதன் வெப்ப நிலை 37 - 40 டிகிரி ஃபாரன்ஹீட்'' என்று தொடங்கினார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா முத்துக்குமார்.

''ஃப்ரீஸரில் ஐஸ் க்ரீம், ஐஸ் கட்டி, அசைவ உணவுகள் போன்றவற்றை வைக்கலாம். ஃப்ரீஸருக்குக் கீழே உள்ள பகுதி 'சில்லர்' எனப்படும். இதில் பால் பாக்கெட், தண்ணீர் பாக்கெட் போன்றவற்றை வைக்கலாம். அடுத்து உள்ள பகுதிகளில் மாவு, பூ எனப் பாதுகாக்க வேண்டிய எந்தப் பொருட்களையும் வைக்கலாம். காய்கறி மற்றும் பழங்கள் வைப்பதற்காகத் தனிப் பெட்டி இருக்கும். அதில் மட்டுமே காய்கறி, பழங்களை வைக்க வேண்டும். கதவுப் பகுதியில் தண்ணீர் பாட்டில், ஜூஸ் பாட்டில், மருந்துப் பொருட்கள், சாக்லேட், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றை வைக்கலாம். 

பொதுவாக ஃப்ரிட்ஜுக்குள் பொருட்களை வைக்கும்போது அது எந்தப் பொருளாக இருந்தாலும் தனித் தனி பாலிதீன் அல்லது துணிப் பைக்குள் வைத்துத்தான் வைக்க வேண்டும். ஆனால், அந்தப் பைகளில் சிறிய சிறிய துளைகள் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் ஈரப்பதம் சரியாகப் பராமரிக்கப்படும்.

மாவு, துவையல் மற்றும் பூ, இஞ்சி, பூண்டு விழுது போன்ற வாசனைப் பொருட்களைக் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்துவைக்கலாம். இப்படி வைக்கும்போதுதான் ஒரு பொருளில் உள்ள வாசனை அடுத்த பொருளுக்குப் பரவாது. மேலும், சில பொருட்களுக்கு வாயுவை உண்டாக்கக்கூடிய தன்மை இயல்பாக இருக்கும். அப்படி உருவாகும்போது, அது மற்ற பொருட்களையும் பாதிக்கும். உதாரணமாக, ஆப்பிளுக்கு ஈதரை உருவாக்கக் கூடிய தன்மை உண்டு. மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளோடு ஆப்பிளையும் சேர்த்துவைக்கும்போது எல்லாமே கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. கேக் வகைகளுக்குப் பிற பொருட்களின் மணத்தை எளிதில் ஈர்த்துக்கொள்ளும் தன்மை இருப்பதால், அலுமினியம் ஃபாயில் பேப்பரால் நன்றாகச் சுற்றிவைக்க வேண்டும்'' என்றவர், எந்தப் பொருட்களை எத்தனை நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம் என்பதையும் விரிவாகச் சொன்னார்.

'பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்களைப் பொருத்தவரை, பிரிக்காமல் இருக்கும்பட்சத்தில் அதில் அச்சிடப்பட்டு உள்ள தேதி வரையிலும் வைத்துப் பயன்படுத்தலாம். பிரித்துவிட்டால், சில நாட்களுக்குள் முழுவதையும் பயன்படுத்திவிட வேண்டும். இல்லை என்றால், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஸ்பூனைப் பயன்படுத்தி எடுக்கும்போது, அதன் வழியாகக் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.

பிஸ்கட், பிரெட் போன்றவற்றை அறை வெப்ப நிலையிலேயே வைத்திருக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் வெப்ப நிலை குறைந்து வறண்ட நிலைக்கு மாறிவிடும். காய்கறி, பழங்களைப் பொருத்தவரை மொத்தமாக வாங்கிவைத்துப் பயன்படுத்தும்போது, முதலில் நீர்ச் சத்து அதிகம் உள்ளவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதால், சத்துக்களின் அளவில் மாற்றமோ அல்லது வேறு பிரச்னைகளோ கிடையாது. குறிப்பிட்ட தேதியையும் தாண்டிப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஃப்ரிட்ஜை அசுத்தமாகவைத்திருப்பது, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது மற்றும் வெப்ப நிலை மாறுவது போன்ற சூழ்நிலைகளில்தான் ஃப்ரிட்ஜுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஏற்கெனவே சமைத்த உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜுக்குள் வைத்திருந்துவிட்டு திரும்பவும் பயன்படுத்தினால், மறுபடியும் 140 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலைக்கு சூடுபடுத்திய பிறகே சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் பாக்டீரியா தொற்று அழியும். சமைத்த பொருட்களை அடிக்கடி ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து சூடுபடுத்தி மறுபடியும் ஃப்ரிட்ஜுக்குள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி வெப்ப நிலை மாறுவதால் உணவின் தரமும் சுவையும் மாறுவதோடு தொற்றுகளும் ஏற்படலாம்'' என்று எச்சரிக்கிறார் திவ்யா.
'ஃப்ரிட்ஜை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?' என்ற கேள்வியை மெக்கானிக் சரவணன் முன்வைத்தோம்.

'மாதத்துக்கு ஒரு முறை ஆறு மணி நேரம் ஃப்ரிட்ஜைப் பயன்படுத்தக் கூடாது. ஃப்ரிட்ஜில் உள்ள எல்லாப் பொருட்களையும் வெளியில் எடுத்துவிட்டு, சோப் தண்ணீரில் துணியை நனைத்து ஃப்ரிட்ஜை சுத்தமாகத் துடைக்க வேண்டும். பின்னர் இரண்டு எலுமிச்சம் பழங்களை எட்டுத் துண்டுகளாக வெட்டி, ஃப்ரிட்ஜுக்குள் வைக்க வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜுக்குள் உள்ள கெட்ட வாசனை நீங்கும். சில சமயம் ஃப்ரிட்ஜினுள் வைத்த பொருள் ஏதேனும் கெட்டுப்போக நேரிடலாம். அந்தச் சமயத்தில் கெட்டுப்போன பொருளை வெளியில் எடுத்துவிட்டு எலுமிச்சையை வெட்டிவைத்தால் அழுகல் வாசம் போய்விடும்.

பொதுவாக ஃப்ரிட்ஜ் குளிர்ச்சியாக இருப்பதால் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்ந்துவிடும். இதை ஆவியாக்கும் வசதி ஃப்ரிட்ஜிலேயே உள்ளது. அதற்கென உள்ள பொத்தானை அழுத்தினால் அந்தத் தண்ணீர் இரண்டு மணி நேரத்தில் ஆவியாகிவிடும். ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பட்டனை அழுத்தித் தண்ணீரை ஆவியாக்காமல்விட்டால், கொஞ்ச நாளிலேயே ஃப்ரிட்ஜுக்குள் இருந்து தண்ணீர் வெளியே கசியும்.

கிரைண்டருக்கு அருகில் ஃப்ரிட்ஜை வைக்கக் கூடாது. மாவில் உள்ள ஈரப் பதம் ஃப்ரிட்ஜில் தொடர்ந்து படும்போது விரைவிலேயே துருப்பிடித்துவிடும். ஃப்ரிட்ஜுக்குக் குளிர்ச்சியைக் கொடுப்பதற்காக அம்மோனியா, குளோரோ ஃபுளூரோ கார்பன் போன்ற வாயுக்கள் முன்பு பயன்படுத்தப்பட்டன. இவை ஓசோன் படலத்தில் துளையை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், தற்போது ஃப்ரியான், ஆர்134ஏ போன்ற வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன' என்கிறார் சரவணன்.

'தற்போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், ஃப்ரிட்ஜின் வெப்ப நிலை ஒரே சீராக இருப்பது இல்லை. இதனால் அதற்குள் இருக்கும் பொருட்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டு, வீணாகிவிடும். அந்தப் பொருட்களைச் சாப்பிடும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல், செரியாமை போன்ற பிரச்னைகளும் உண்டாகும். சமயங்களில் உணவு நஞ்சாகும் சாத்தியமும் உண்டு. எனவே இரண்டு நாட்களுக்கு மேல் உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜுக்குள் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். முடிந்த வரை ஃப்ரெஷ்ஷாகச் சாப்பிடுவதே நல்லது' என்கிறார் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் துணைக் கண்காணிப்பாளரும், பொது மருத்துவருமான கே. சிவசுப்ரமணியன்.
உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜினுள் வைத்துப் பயன்படுத்தும் கால அளவுகள் இதோ:
 புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், பொரியல் போன்ற சமைத்த பொருட்கள் -
ஒரு நாள்
 புளிக் குழம்பு, காரக் குழம்பு -
இரண்டு நாட்கள்
 உப்பு, காரம் சேர்த்த சமைக்காத அசைவ உணவுப் பொருட்கள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது, துவையல் - ஒரு வாரம்
 கேக் வகைகள் - மூன்று நாட்கள்
தயிர், மோர் - நான்கு நாட்கள்
(புளிக்காத தயிர் என்றால் ஒருநாள் மட்டும்)
 சீஸ் - ஆறு மாதங்கள்
 முட்டை, பழங்கள், காய்கறிகள் -
மூன்று வாரங்கள்
http://pettagum.blogspot.in/2012/08/blog-post_8351.html

--
*more articles click*
www.sahabudeen.com



வெள்ளி, 19 ஏப்ரல், 2013

சிசேரியன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் !



'சென்னையைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளைவிட, இப்போது சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது!'

- அதிர்ச்சி தர வேண்டிய இச்செய்தி, 'அப்படியா..?' என்கிற சம்பிரதாய விசாரணையுடன் அடுத்த வேலையை நோக்கி நகர வைக்கிறது. அந்தளவுக்கு சிசேரியன் பிரசவத்துக்குப் பழகிவிட்டார்கள் மக்கள்!

''முன்பெல்லாம் பதினைந்து, இருபது சதவிகித சிசேரியன் கேஸ்களை அட்டெண்ட் பண்ணிட்டு இருந்த நாங்க, இப்ப ஐம்பது சதவிகித கேஸ்களை அட்டெண்ட் பண்றோம்'' என்று சிசேரியனின் 'விஸ்வரூபம்' பேசும் சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவ நிலையத்தின் முண்னாள் இயக்குநர் டாக்டர் மோகனாம்பாள்,

''சிசேரியன் பிரசவங்கள் அதிகரிச்சு இருக்குனு சொல்ற அதேநேரத்துல, பிரசவ சிக்கல்களால ஏற்படுற தாய், சேய் இறப்பு சதவிகிதம் இப்போ ரொம்பவே குறைஞ்சுருக்கு. அதேபோல, சிரமமான பிரசவங்களால ஃபோர்செப்ஸ் போட்டு குழந்தையை எடுக்கறது, சிலசமயம் குழந்தையோட மூளைவளர்ச்சி பாதிப்படைய காரணமா ஆயிடும். இப்போ, அதுமாதிரியான குழந்தைகளின் சதவிகிதமும் குறைஞ்சுருக்கு. இதுக்கெல்லாம் சிசேரியன் மருத்துவ சிகிச்சைக்குதான் நன்றி சொல்லணும்'' என்றும் நெகிழ்கிறார்.

'பிரசவம் என்பதே, பிற உயிரினங்களைப் போல, இயல்பாகத்தான் நடக்க வேண்டும். அப்படியிருக்க... எதற்காக அது சிசேரியனாக மாறவேண்டும்?' என்பதைப் பற்றி பேசிய டாக்டர்,

''தாய்க்கு நீர்வற்றிப் போறது, குழந்தை பெருசா இருப்பது, அம்மாவோட இடுப்பு எலும்பு விரிவடையாம இருப்பது, கர்ப்பவாய் திறக்காமல் இருப்பது, அம்மாவின் வயது 35-க்கும் மேல் இருப்பது, டயாபடீஸ், பி.பி. இருப்பது... இதுபோன்ற காரணங்களில் ஏதாவது ஒன்றினால், சுகப்பிரசவ வாய்ப்பு ஆபத்தாகும். அப்படிப்பட்ட சமயங்கள்லதான் சிசேரியன் மூலமா குழந்தை பத்திரமா வெளியில எடுக்கப்படுது'' என்று காரணங்களை விளக்கினார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் மோகனாம்பாள், ''மருத்துவக் காரணங்கள் தவிர, வேறு சில காரணங்களும் இப்போ சிசேரி யனைத் தீர்மானிக்குது. சில மருத்துவர்கள், சிரத்தை எடுத்து சுகப்பிரசவம் பார்க்கறதுக்கு... சுலபமா சிசேரியன் பண்ணிடலாம்னு நினைக்கறாங்க. அதில் கிடைக்கிற பணமும் அவங்களோட இந்த போக்குக்குக் காரணம். கூடவே, இப்போ எல்லாம் பிரசவ நேரத்துல பெண்ணோட அம்மா, மாமியார், கணவர்னு யாராவது ஒருத்தரை லேபர் வார்டுக்குள்ள விடலாம்னு அரசாங்கமே சொல்லுது. அப்படி வர்றவங்க அந்தப் பொண்ணோட பிரசவ வேதனையைப் பார்க்க முடியாம, 'ஐயோ வேண்டாம்... சிசேரியனே பண்ணிடுங்க...'னு டாக்டர்களை வற்புறுத்துறது பல இடங்கள்ல நடக்குது. இப்படி குடும்பத்தினரோட வேண்டுகோள், வற்புறுத்தலால சுகப்பிரசவமா நிகழவேண்டியது... சிசேரியன் ஆயிடுற ஹிஸ்டரி நிறைய'' என்றார் கவலையுடன்.

'பிரசவ வலி என்பதை, இன்றைய பெண்கள் எதிர்கொள்ள மறுக்கிறார்கள்' என்றொரு குற்றச்சாட்டு இங்கே பரவியிருப்பது பற்றி மகப்பேறு மருத்துவர் கீதாஹரிப்பிரியாவிடம் கேட்டபோது... ''பிரசவ வலி என்பது உச்சகட்ட வலி. என்றாலும், அது பொறுத்துக் கொள்ளக்கூடிய வலிதான். இல்லைனா நம்ம பாட்டிகளும், அம்மாக்களும் எப்படி இத்தனை குழந்தைகள் பெத்திருக்க முடியும்..? கர்ப்ப காலத்துல 
இருந்தே பெண்களுக்கு, 'அது பீரியட்ஸ் நேரத்தில் அனுபவிக்கிற வலியைப் போலவே கொஞ்சம் பெரிய வலி...'னு பிரசவவலி குறித்த அச்சத்தை அகற்றி, 'அதிகபட்சம் 12 மணி நேர வலியைப் பொறுத்துக்கிட்டா... ஒரே நாள்ல எழுந்து நடந்துடலாம், சிசேரியன்னா... மூணு மாசத்துக்கு ஓய்வு எடுக்கறதோட, அறுவை சிகிச்சையோட பின்விளைவுகளையும் அனுபவிக்கணும்'னு அதைப் பத்தின விழிப்பு உணர்வை ஏற்படுத்தணும். இப்போ பிரசவங்கள் நவீனமாயிடுச்சு. சுகப்பிரசவத்துக்கே வலியைக் குறைக்க முதுகுல ஒரு ஊசி போடப்படுது. அதனால, சீரான உடல் நிலையோட, 'நம்மால் முடியும்' என்ற மனவலிமையை வளர்த்துக்கிட்டா, சுகப்பிரசவம் சாத்தியம்!'' என்று எளிதாக புரிய வைத்தார்.

''கர்ப்ப காலத்துல இருந்தே உணவுல சில வரைமுறைகளைக் கடைப்பிடிச்சா, தாய் - சேய் நலம் சீரா இருக்கிறதோட, அது சுகப்பிரசவத்துக்கும் வழி வகுக்கும்!'' என்று சொல்லும் கடலூர், மூலிகை வைத்தியர், அன்னமேரி பாட்டி... அந்த உணவுகளில் சிலவற்றை பட்டியலிட்டார் இப்படி -
''ஆரம்ப மாதங்கள்ல வாய்வு அதிகம் உள்ள பதார்த்தங்களான வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் எல்லாம் சாப்பிடக் கூடாது. கர்ப்பமான நாள் முதல், பிரசவமாகுற வரைக்கும்... முருங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் எல்லாத்தையும் சேர்த்து சூப் வெச்சு சாப்பிட்டு வந்தா... சுகப்பிரசவமாகும். மூணாவது மாசம் முதல், பிரசவமாகற வரைக்கும் வெந்தயக்கஞ்சி சாப்பிடறது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். வெந்தயம் ஒரு ஸ்பூன், அரிசி ரெண்டு ஸ்பூன் உடைச்சுப் போட்டு கஞ்சியா காய்ச்சி... பால் சேர்த்து, மூணு நாளைக்கு ஒரு தடவை சாப்பிடலாம்.

5-வது மாசத்துல இருந்து எலுமிச்சை அளவு வெண்ணெயை, ஒரு டம்ளர் கொதிநீர்ல கலந்து காலை அல்லது மதிய வேளையில சாப்பிடலாம். 7-வது மாசத்துக்குப் பிறகு, வடகத்தை பொரிச்சி, அதில ஒரு டம்ளர் தண்ணிவிட்டு கொதிக்க வெச்சு அரை டம்ளரானதும் குடிக்கலாம். இதை வாரத்தில 2 நாள் செஞ்சுட்டு வந்தா சுகப்பிரசவமாகும்.

கர்ப்ப காலங்கள்ல சிலருக்கு கை - கால் வீக்கம் வரும். இதுக்கு நெல்லிக்காய்,முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள்ஸ்பூன் பெருஞ் சீரகத்தை சட்டியில போட்டு வறுத்து வெடிச்சதும் தண்ணிவிட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். பத்து குப்பைமேனி இலையை மென்னு சாப்பிடலாம்... இதெல்லாம் வீக்கத்தை வடிச்சுடும். இந்த நேரத்துல கருஞ்சீரகம், அன்னாசிப்பழம், வெல்லம் சாப்பிடக் கூடாது. அது கருவைக் கலைக்கலாம்.

பிரசவ நாள் நெருங்கினதும் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அது சாதாரண வலியா இருக்கலாம். அஞ்சு வெத்திலை, ஒரு ஸ்பூன் ஓமம், 3 பூண்டு எடுத்து, ஓமத்தை வறுத்து அது வெடிச்சதும் நசுக்கிய பூண்டு, பிய்த்துப்போட்ட வெத்திலை எல்லாத்தையும் போட்டு ஒண்ணரை டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வெச்சி, முக்கா டம்ளரானதும் எலுமிச்சை அளவு வெண்ணெய் இல்லைனா பனைவெல்லத்தை சேர்த்துக் குடிச்சா... சாதாரண வலியா இருந்தா நின்னுடும். வலி தொடர்ந்தா, ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய நேரம் வந்தாச்சு!'' என்று அழகாகப் பேசி முடித்தார் அன்னமேரி பாட்டி!


--
*more articles click*
www.sahabudeen.com



Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts