லேபிள்கள்

புதன், 27 பிப்ரவரி, 2013

வழுக்கை – ஒரு விளக்கம்


தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். வந்தால் மலை, போனால் மயிர்என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாகச் சொல்கிறார் டாக்டர் முகேஷ் பாத்ரா. மும்பை மருத்துவரான பாத்ரா, கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஹோமியோபதி மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். இன்டர்நெட்டிலேயே ஐந்து லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை அளித்து லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் டாக்டர் பாத்ரா.

‘‘நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால், நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.
நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை. ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும்.
தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.
ஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது நார்மலான விஷயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15_20 முடிகள் உதிரலாம். பெண்கள் குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.
தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு.
முதலாவது, அனெகன். இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும்.
இரண்டாவது நிலை, கேடகன்  நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும்.
மூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.
தலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.
1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.
2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.
3. அலோபேசியா ஏரியாட்டா.
ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு, முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம். மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும். சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும். சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம்.
நம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம். பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.
சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு ஓவரியைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.
ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.
கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.
அலோபேசியா ஏரியாட்டா:
வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.
இப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு. உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை; அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.
என்ன மருந்து?
ஹோமியோபதி மருத்துவத்தில் எல்லோருக்கும் ஒரே மருந்து என்று சொல்ல முடியாது. நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலை, அறிகுறிகள் போன்ற விஷயங்களை வைத்துத்தான் மருந்து கொடுப்போம். இந்த மூன்று வகை நோய்களுக்கும் அறுவை சிகிச்சையோ, தலையில் முடிகளை நடுவதோ எல்லாம் கிடையாது. மருந்துகளின் மூலம், உடல் தன்மையை மாற்றுவதன் மூலம் தலையில் முடி முளைப்பதை நிச்சயமாக அதிகரிக்க முடியும். தலைமுடி பிரச்னை இருப்பவர்களுக்கு தனித்தனியாக நாங்கள் சிகிச்சை அளித்தாலும், என்னைத் தேடி வந்தவர்களுக்கு அந்தப் பிரச்னையிலிருந்து நிச்சயமான தீர்வைக் கண்டிருக்கிறேன்’’ என்கிறார் டாக்டர் பாத்ரா.
நன்றி குமுதம் -  ஏ.ஆர். குமார்

திங்கள், 25 பிப்ரவரி, 2013

குழந்தைகளில் இருமல் மருந்துகள் தேவையா? எப்போது?


குழந்தைகள் என்றால் அழுவது சகசம். அதே போல  குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருவதும் உண்டு. இருமல் என்பது நோயல்ல.

சுவாசக் குழாயில் காற்றானது தடையின்றி போய்வருவதை உறுதி செய்வதற்கு உடல் தன்னச்சையாக எடுக்கும் நடவடிக்கை எனலாம். அதாவது தடைசெய்யும் சளியை அல்லது கிருமியை அகற்றுவதற்கு உடல் எடுக்கும் பாதுகாப்புச் செயற்பாடு எனலாம்.

·                     பிறந்த ஒரு மாதம் ஆகாத குழந்தைகளைக்கு கூட இருமல் வரக்கூடும். அத்தகைய குஞ்சுக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பதறியடித்து வருவார்கள்.
·                     மருந்து வேணடும் என்று நட்டுப் பிடிப்பார்கள்.
·                     இருமல் என்றால் நியூமோனியா போன்ற ஆபத்தான நோயாக இருக்கலாம் என்ற பயமே அவர்கள் ஓடி வருவதற்குக் காரணம்.
பெரும்பாலும் குழந்தைகளின் இருமல் ஆபத்தானதல்ல. மருந்துகள் இன்றியே தாமாகக் குணமடைந்து விடக் கூடும்.

நீங்களாக மருந்து கொடுக்க வேண்டாம்

சிலர் மருத்துவரிடம் செல்லாமல், தாங்களாகவே பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்தில் சிறிதளவு கொடுத்துப் பார்ப்பதுண்டு. அதைவிட ஆபத்து எதுவும் இருக்க முடியாது. பக்கவிளைவுகள் அதிகம் இருக்கும். அமெரிக்காவின்
 Food and Drug Administration (FDA) ஆனது 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பதையிட்டு எச்சரித்துள்ளது. 

இந்த எச்சரிக்கையானது
1.        பெரியவர்களுக்கான இருமல் மருந்தை குழந்தைகளுக்குக் கொடுப்பதையிட்டு மட்டுமல்ல,
2.        குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதையிட்டும் ஆகும்.
அத்தகைய பல மருந்துகளைத் தடைசெய்தும் உள்ளனர்.

குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கே கொடுக்கும்போதும்  ஆபத்துக்கள் ஏற்படுவது ஏன் ?
1.        லேபலில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட பெரும்பாலும் அதிகமாக வழங்கிவிடுகிறார்கள்.
2.        அல்லது குறைந்த நேர இடைவெளிகளில் மருந்தைக் கொடுப்பதால் மருந்தின் அளவு அதிகமாகிவிடுகிறது.
3.        இரண்டு மூன்று இருமல் மருந்துகளை மாறி மாறிக் கொடுப்பதால் மருந்தில் உள்ள சில கூறுகளின் அளவு அதிகரித்து விடும்.
எனவே குழந்தைகளுக்கு அவசரப்பட்டு இருமலுக்கென மருந்துகள் கொடுக்க வேண்டாம். ஆனால் அதற்குப் பதிலாக வீட்டில் செய்யக் கூடிய சாதாரண நடைமுறைச் சிகிச்சைகளை முயலுங்கள்.

·                     மூக்கில் உள்ள சளியை சுத்தமான வெள்ளைத் துணியினால் துடைத்து எடுப்பது,
·                     சேலைன் மூக்குத் துளிகளை உபயோகிப்பது,
·                     ஆவி பிடிப்பது

போன்ற சாதாரண வீட்டுச் சிகிச்சைகள் போதுமானதாக இருக்கும்.
மருத்துவரை நாடவேண்டியது எப்போது?

ஆனால் எல்லா இருமல்களுக்கும் அவை போதுமானவையல்ல. சில வகையான இருமல்களுக்கு மருத்துவரை நாடுவது அவசியமாகும்.
·                     மேற்கூறிய சாதாரண சிகிச்சைகள் செய்தும் இருமல் குணமாகாது அதிகரித்துச் சென்றால் மருத்துவரை நாட வேண்டும்.
·                     இருமலுடன் காச்சலும் அதிகமாக இருந்தால். சாதாரண தடிமன் காய்ச்சலுடனும் இமுமல் வரலாம் அல்லது நியுமோனியா போன்ற கடுமையான நோயுடனும் வரலாம் என்பதால் மருத்துவரைக் காண வேண்டியதாயுள்ளது.
·                     மூச்சு எடுப்பதில் குழந்தைக்குச் சிரமம் இருந்தால்.
·                     குழந்தை மிகவும் சோர்வுற்று இருந்தால், அல்லது சினமுற்று தொடர்ந்து அழுதால்.
·                     பால் குடிப்பது குறைந்தால், அல்லது உணவு உட்கொள்ள மறுத்தால்.
·                     இருமல் கடுமையாக இல்லாவிடினும், நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தால் மருத்துவரைக் காண வேண்டும். ஆஸ்த்மா, சயரோகம், அல்ர்ஜி ஆகியவற்றால் ஏற்படும் இருமல்கள் நீண்ட நாட்கள் தொடரலாம்.

சில விசேட இருமல்கள்

சில இருமல்கள் ஆபத்தானவை. சில உடனடி ஆபத்து இல்லாவி;டாலும் அவசியம் மருத்துவரை நாட வேண்டிவையாகும். இவற்றில் பலவற்றை, இருமல்களின் ஒலியிலிருந்தே பகுத்தறிந்து கண்டறிய முடியும்.
இருமலின் ஒலி வேறுபாடுகள்

குரைப்பு இருமல்

குரல் அடைத்து சத்தம் சிரமப்பட்டு வெளியே வருவது போன்ற இருமல் சற்று ஆபத்தானது. மூச்சுத் திணறுவது போலவும் இருக்கும்.
 Stridor முச்சுக் குழாயின் மேற்பகுதியில் குரல் வளையுள்ளது. இது வைரஸ் கிருமித் தொற்றால் சுருங்குவதால் இவ்வாறான இருமல் ஏற்படுகிறது. முகக்pயமாக 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்படும். ஆதற்குக் காரணம் அந்த வயதில் அவர்களது சுவாசப் பாதை இயல்பாகவே ஒடுக்கமாக இருப்பதேயாகும்.

ஏங்கிருந்து வந்தததெனத் தெரியாதவாறு திடீரென ஏற்பட்டால் மருத்துவரைக் காண்பது அவசியம்.

குக்கல் இருமல் (Whooping Cough)
குக்கல் இருமல் தனித்துவமானது. ஆனால் இப்பாழுது காண்பது அரிதாகிவிட்டது. காரணம் குழந்தைகளுக்கு அவர்களின் 2ம், 4ம், 6ம் மாதங்களில் போடப்படும் தடுப்பூசியில் pநசவரளளளை  பக்றீரியாவிற்கு எதிரான மருந்து இருப்பதுததான்.
குக்கல் இருமலின் போது குழந்தையானது ஒரு இருமலுக்கும் அடுத்த இருமல்களுக்கும் இடையே மூச்சு விடமுடியாதபடி தொடர்ந்து இருமும். அவ்வாறு தொடர்ந்து இருமி மூச்சடைத்து கண்கள் பிதுங்குவது போல வருவதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.

அதன் இறுதியில் நீண்ட கூகூகூகூ என்ற ஒலி எழும்பும். இதை வைத்தே நோயைக் கண்டுபிடித்துவிடலாம். ஒருவர் இருமும்போது வெளியேறும் சளியின் நுண்துளிகள் ஊடாக மற்றவர்களுக்கு விரைவில் பரவக் கூடியது. ஆயினும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒழுங்காகத் தடுப்பூசிகள் போடப்படுவதால் அதிகம் காணப்படுவதில்லை.
இழுப்பு இருமல் (Wheeze)

·                     இந்நோயாளர்களின் சுவாச ஒலியை ஆஸ்த்மாவின் கீதம் எனலாம். மூச்சை உள்ளெடுப்பதில் சிரமம் இருக்காது.
·                     ஆனால் வெளியே விடுவது சிரமமாகவும் இசையொலி போலவும் இருக்கும்.
·                     மோசமான நிலை எனில் வெளிப்படையாகக் கேட்கும்.
·                     இல்லையேல் ஸ்டெதஸ்கோப் ஊடாகக் கேட்கும்.
·                     நிறையச் சளி உள்ளே இருப்பது போலவும் ஆனால் இருமியபோதும் அது வெளியே வராது உள்ளே 'கொள கொள' எனக் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

ஆஸ்த்மாவில் மட்டுமின்றி சில வைரஸ் தொற்று நோய்களிலும் இந்த இசை ஒலி இருமல் ஏற்படலாம்.
இருமலின் காலநேர வேறுபாடுகள்

இருமல் ஒலிகள் சில நோய்களைக் குறிப்பதைப் போலவே, இருமல் எந் நேரத்தில் வருகிறது அல்லது அதிகரிக்கிறது என்ற காலநேரமும் அந்த இருமல் எதனால் ஏற்படுகிறது எனச் சுட்ட உதவக் கூடும்.

இரவு இருமல்

பகல் முழவதும் உற்சாகமாக ஓடியாடித் திரியும் சில குழந்தைகள் இரவில் கடுமையாக இருமிக் கொண்டிருக்கும். இது பெற்றோரின் தூக்கத்தையும் நிம்மதியையும் குலைக்கும்.
·                     சாதாரண தடிமனின் போது அல்லது சைனஸ் தொல்லையின்போது அவற்றிலிருந்து சளியானது தொண்டைப் பகுதியில் இறங்குவதால் இவ்வாறு இருமல் வருகிறது.
·                     ஆஸ்த்மா தொல்லை உள்ளவர்களுக்கும் இரவில் இருமல் வருவதுண்டு. இதற்கு படுக்கையில் இருக்கும் படுக்கைத்தூசிப் பூச்சியானது காரணமாலாம்.
·                     ஆனால் முக்கிய காரணம் இரவுநேரத்தில் ஏற்படும் சுவாத்திய மாற்றமாகும். அத்தகைய சிலருக்கு அதிகாலையில் இருமல் அதிகரிப்பதும் அவ்வாறான சுவாத்திய மாற்றம்தான்.
பகல் நேர இருமல்
·                     பகல் நேரத்தில் இருமல் அதிகரிப்பது சுற்றுச் சுழலில் உள்ள தூண்டல் காரணிகள்தான்.புகை முக்கியமாக அந்த அறையில் யாராவது சிகரட் புகைப்பது

·                     சமையலறைப் புகை மற்றும் சமைக்கும்போது எழும் காரமான மணங்கள்.
·                     வாசனைத் திரவியங்கள்,          air freshener
·                     வளர்ப்புப் பிராணிகளது முடிகள்

இவை சுவாசத் தொகுதியைத் தூண்டுவதால் இருமல் ஏற்படலாம்.

இருமலுடன் வாந்தி

பல குழந்தைகளுக்கு இருமலுடன் வாந்தியும் வருவதுண்டு. இது பொதுவாகக் கடுமையான இமலுடன் ஏற்படுவதுண்டு.
·                     ஆஸ்த்மா போன்ற கடுமையான இருமலுடனும் வாந்தி வரலாம்.
·                     தடிமன், காய்ச்சல், போன்ற வைரஸ் தொற்று நோய்களுடன் வரும் இருமலுடனும் வாந்தி வரலாம்.
இத்தகைய வாந்திகள் பயப்பட வேண்டியவை அல்ல. இருந்தபோதும் வாந்தி தொடர்ந்தால் மருத்துவரை நாடவேண்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

சனி, 23 பிப்ரவரி, 2013

தவிர்ப்போம் சஹர் நேரத்தில் டிவி ப்ரோகிராம்களை..!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
 நள்ளிரவு நேரம்..!
 சாதாரண நாட்களில் நம்மில் பலர் தூங்கி விடுவது உண்டு. வெகுசிலரே நள்ளிரவு நேரமான தஹஜ்ஜத் நேரத்தில் எழுந்து அதை தொழுகிறோம். நைட் ஷிப்டில் இருக்கும் போது மட்டும் எனக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். நம்மில் பலர் மற்ற ஐந்து வேலை நேர தொழுகைகளை அதன் அதன் நேரத்தில் சரியாக நிறைவேற்றுபவர்கள் கூட தஹஜ்ஜத் கடமையான தொழுகை இல்லாததால் அதில் அவ்வப்போது கவனக்குறைவாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

தஹஜ்ஜத் என்ற நள்ளிரவு தொழக்கூடிய தொழுகை மற்ற ஐந்து வேலை தொழுகைகள் மற்றவைகளுக்கு கடமை ஆவதற்கு முன்னரே அல்லாஹ் தான் தூதருக்கு மட்டும் இஸ்லாமிய பிரச்சாரத்தின் ஆரம்ப நாட்களிலேயே அதனை கடமை ஆக்கி இருந்தான்..! அதுபற்றிய குர்ஆன் வசனங்கள்...

73:1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
73:2. இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
73:3. அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
73:4. அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.

தஹஜ்ஜூத் என்ற அத்தியாயத்தில் வரும் சில ஹதீஸ்கள்..!

நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள்.

ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
புஃஹாரி-1136

நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதக் கூடிய நேரம் ஒரு ஸஜ்தாச் செய்வார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஃபஜ்ருத் தொழுகைக்காக முஅத்தின் அழைக்கும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார். புஃஹாரி-1123.

சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு (இரவில்) நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது 'நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?' என்று கேட்பார்கள். (முகீரா(ரலி) அறிவித்தார். புஃஹாரி 1130

நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ, இரண்டு இரவுகளோ தொழவில்லை.
ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.1124

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை (வக்த் வந்திருக்குமோ என்று அதன் நேரத்தை) பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்" என்று கூறினார்கள்.
 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்புஃஹாரி 990.

இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: 
"இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்'.
 
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
 புஃஹாரி 998.
ரமலானின் இரவுத்தொழுகை ஜமாஅத்  தொழ-தொழவைக்க ஆக சிறந்த நேரம் எது..?

வருடம் பூராவும் நள்ளிரவில் சுன்னத்தான நபிவழி தொழுகையாக அதிக நன்மைக்காகவேண்டி... தொழ வேண்டிய  தஹஜ்ஜத் தொழுகையை ரமளானில் இஷா ஜமாஅத் முடித்த உடனேயே தொடந்து தராவீஹ் என்ற பெயரில் இமாம் ஜமாத்தோடு தொழுதுவிட்டு தூங்கிவிடுகிறோம். தூய இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் இயக்கங்கள் உட்பட இதே வழிமுறையைத்தான் ஜமாஅத் விஷயத்தில் பின்பற்றுகின்றன. ஆனால், ஹதீஸ்களில் இந்த தொழுகையை நபி ஸல் அவர்கள் இஷா தொழுதுவிட்டு தூங்கிவிட்டு நள்ளிரவில் எழுந்துதான் தொழுது உள்ளார்கள் என்று பல ஹதீஸ்கள் மூலம் அறிகிறோம்.

ரமலானின் இரவுத்தொழுகை ஜமாஅத் பற்றி வந்துள்ள ஹதீஸ்கள்...!

புஃஹாரி 2010. அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!" என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர்.
இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார்.

புஃஹாரி 2012. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள்.
"நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!" என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

சஹர் நேரத்தில் டிவி ப்ரோகிராம்கள் தேவையா...?

இந்நிலையில்.... ரமளானில் கடமையான நோன்பை நோற்க ரஹ்மத்தான சஹர் உணவை சாப்பிட எப்படியும் துயில் எழுந்து விடுகிறோம். அதற்கு ஒரு மணி நேரம் முன்னர் எழுந்து நம்மில் பலர் தஹஜ்ஜத் தொழலாம். மற்ற நாட்களை விட ரமளானில் இது இலகு. ஆனால் அதை செய்யாமல்... ஸஹர் நேரத்தில் முன்னரே எழுந்து இப்போது டிவிக்கு முன்னர் அமர்ந்து விடுகிறோம். காரணம்...? எல்லா இயக்கங்களும் எக்கச்சக்க சஹர் ப்ரோகிராம்கள் போடுகின்றன. இதனை அவசியம் பார்க்க சொல்லி ஏகப்பட்ட விளம்பரங்கள் வேறு. அதிலும் இசையுடன் கூடிய ஏகப்பட்ட வர்த்தக விளம்பரங்கள். குறைந்த நேரமே இருந்தும், அதில் தட்டை பார்த்து சாப்பிடாமல்... டீவியை பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறோம். ஒரே டிவியில் முடிந்த வரை விளம்பர இடைவெளியில் சில நிகழ்ச்சிகளை காண்கிறோம்.

ஏன்..?

கொஞ்சம் பொறுத்தால்... அதே உரை சிடியாக நமக்கு கிடைக்க போகிறது..! அல்லது ஃப்ரீ டவுன்லோடு ஆப்ஷன் அவர்கள் வெப்சைட்டில் வைக்கிறார்கள்..! அல்லது ரமளான் முடிந்தவுடன்  தங்கள் வழமையான மாலை/இரவு நேர ப்ரோகிராம்களில் மறுஒளிபரப்பு செய்ய போகிறார்கள்...! அப்போது ஆற அமர அமர்ந்து பார்ப்பதைவிட்டுவிட்டு... எதுக்கு நாம் நமது நன்மையை... அதுவும்  வணக்கத்திற்கு சிறந்த ஆயிரம் மாதங்களை விட சிறப்பான லைலத்துல் கத்ர் எல்லாம் வரப்போகிற ரமளானில்... அதுவும்... துவா கேட்கும் சிறந்த நேரத்தை.... ஏன் இழக்கனும்..?   சிந்திக்கவும் சகோஸ்..!

பிரார்த்தனையும் வணக்கமே..!

அல்லாஹ் நம்மை பிரார்த்திக்கவும் சொல்கிறான் எனபதை அறிவோம்.
நபி (ஸல்) அவர்களும் கூட, "பிரார்த்தனையே வணக்கமாகும்" எனக் கூறியுள்ளார்கள்.

இறைவனை வணங்கும் வணக்கத்திற்கு நிகராகக் கருதப்படும் "பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட குறிப்பிட்ட சில நேரங்கள் உள்ளன" என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மக்கள் உறக்கத்திலும் உலக இன்பங்களிலும் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறான் என்று புரியலாம்.

அல்லாஹ் நமக்கு ஒரு பிரத்தியேகமான பதிலளிக்கும் நேரம் ஏற்படுத்தி தூக்கத்தை வென்று அவனிடம் தமது எல்லாவித தேவைகளை கேட்பவர்களுக்கு அருள நாடுகின்றான் என்றும் புரியலாம்.

பிரார்த்தனைக்கு ஆக சிறந்த நேரம் எது...?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லை; இது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது." (முஸ்லிம் : 757)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் தமது வணக்கத்தின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்க வாய்ப்புள்ள நேரம் இரவின் இறுதி பகுதி நேரம் ஆகும். ஆகையால் உங்களால் அந்நேரத்தில் இறைவனை நினைவுகூர்ந்து வணங்குபவர்களில் ஒருவராக இருக்க இயன்றால் அதை செய்யுங்கள். (அம்ரு இப்னு அபஷ் அவர்கள் அறிவிக்கிறார்கள்:  திர்மிதி, நஸாயீ

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒவ்வோர் இரவின் இறுதியில் மூன்றாம் பகுதியில் நமது இரட்சகனும் ரப்புமாகிய அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கிவருகிறான். மேலும், 'என்னை அழைப்பவர் உண்டா?, நான் அவருக்கு பதிலளிப்பேன். என்னிடம் தமது தேவைகளை கேட்பவர் உண்டா? நான் அவருக்கு வழங்கக் கூடும். என்னிடம் பாவமன்னிப்பு கேட்பவர் உண்டா? நான் அவர்களை மன்னிக்கக்கூடும்' என்று கூறுகின்றான்" (அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள்:ஸஹீஹ் புகாரி)

அந்த நேரம்..., இரவுத்தொழுகைக்கான நேரம் அல்லவா..? அதைவிட அல்லாஹ்வே வலியுறுத்திய துவா கேட்க சிறப்பான நேரம் அல்லவா..? அந்த நேரத்தை எந்த ஜமாஅத்தும் ஜமாஅத் தொழுகையில் ஹயாத் ஆக்கக்காணோம்...! ஆனால், நம்மை துவா கேட்கவும் விடுவதாக இல்லையே..? இது சரியா..?

ஆகவே, அந்த நேரம் தஹஜ்ஜத் தொழும் நேரம். தொழுதுகொண்டே சஜ்தாவில்... அல்லது தொழுதுவிட்டு இருகரம் ஏந்தி... மனம் ஒருமித்து.... நமது தேவைகளை நாம் கேட்கும் துவாவுக்கான அல்லாஹ் ஏற்படுத்தி தந்த சிறந்த நேரம். இதை பாழ்படுத்துகின்றன இந்த சஹர் நேர ப்ரோகிராம்கள்..!

எவரும் இதை சஹர் நேரத்தில் மக்களுக்கு சொல்வதில்லை. சொன்னால் அது அவர்களுக்கே நஷ்டம். நாம் தான் நம்மிடையே இதை பரப்பிக்கொள்ள வேண்டும்..! யார் அதிக நேரம் ப்ரோகிராம் போடுவது... எந்த இயக்கத்துக்கு முன்னணி சேனல்கள் கிடைத்தன... எவ்வளவு விளம்பரம் வருகின்றன.... டிஆர்பி ரேட் எப்படி.... என்பதிலேயே போட்டி... இவற்றில் லீடிங் என்றால் அது பெருமை..!

(குறிப்பு: இது ஐந்து - ஆறு வருடங்களுக்கு முன்னர் உள்ள நிலை. இப்போது என்ன நிலை என்று தெரியவில்லை. ஏனெனில், நான் ஸஹர் நேரத்தில் டிவி போட்டு ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன.)

"என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்." (அல்குர்ஆன் 4:60)

ஆகவே.... இஸ்லாமிய தாவா நோக்கத்தில் அமைந்த சொற்பொழிவு என்றாலும்... அந்த  ஸஹர் நேர டிவி ப்ரோக்ராம்களை எல்லாம் ஒதுக்கி விட்டு... நாம் நமக்கான நன்மையை சரியான நேரத்தில் தொழுது சிறப்பான நேரத்தில் பிரார்த்தித்து பெற்றுக்கொள்ள முயல்வோமாக. வல்ல நாயன் அல்லாஹ் அதற்கு நமக்கு கிருபை செய்வானாக. ஆமீன்.

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts