லேபிள்கள்

சனி, 8 அக்டோபர், 2011


பன்றியின் மாமிசம் சாப்பிடுவது குறித்து அல்-குர்ஆன் மற்றும் பைபிள் கூறுவது என்ன?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 2, ஸூரத்துல் பகரா (பசு மாடு) வசனம் 173 ல் கூறுகிறான்:
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -
அத்தியாயம் 5, ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை) வசனம் 3 ல் கூறுகிறான்:
(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) – இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். 
அல்குர்ஆன் கூறுவது பன்றியின் மாமிசத்தைப் புசக்கக் கூடாது என்று தான். அதுவும் ஒருவர் வேண்டும் என்று இல்லாமல் பசிக்கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு புசித்தால் அவர் மீது தவறில்லை என்கின்றது. ஆனால் பைபிளின் பழைய ஏற்பாடோ அதற்கு ஒரு படி மேலே சென்று பன்றியின் மாமிசத்தை சாப்பிடத் தடைச் செய்ததோடல்லாமல் பன்றியே அசுததமானது, அதன் உடலைக் கூடத் தொடக் கூடாது என்று கூறுகிறது.
பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்
இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.  – பைபிள் பழைய ஏற்பாடு, லேவியராகமம்,  அதிகாரம் 11,  வசனம் 7 & 8
பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. -பைபிள் பழைய ஏற்பாடு, உபாகமம் , அதிகாரம் 14,  வசனம் 8

புதன், 5 அக்டோபர், 2011

வீட்டுல பட்ஜெட் போடுங்க சந்தோசமா இருங்க! ரொம்ப சுலமமுங்கோ!



போன வாரம்தான் மத்திய நிதி அமைச்சர் டி.வி-யில் பட்ஜெட் படிச்சிட்டுப் போனாரு. எவ்வளவு பெரிய நாடு, எத்தனை வியாபாரங்கள், எத்தனை கோடி மக்கள், எவ்வளவு வரவு, செலவு... ரொம்ப கஷ்டமான வேலை இந்த நிதிஅமைச்சரோட வேலைனு நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை! நான் மட்டும் ஃபைனான்ஸ் மினிஸ்டரா இருந்தேன்னா இதைவிட சூப்பரா பட்ஜெட் போடுவேன். அவங்களுக்கு என்ன, முதல்ல செலவு கணக்கு போட்டுக்கலாம்.

அப்பறமா அதுக்குத் தகுந்த மாதிரி யாருகிட்டயிருந்து எப்படி, எவ்வளவு வரி வசூலிக்கலாம்னு கணக்குப் போட்டு, சம்பாதிச்சுக்கலாம்! செலவுக்கு ஏத்த மாதிரி வரவுங்கிற பாக்கியம் வேற யாருக்குக் கிடைக்கும், இல்ல?

அதுவே நம்ம வீட்டு பட்ஜெட்டைப் பாருங்க... வரவு ஒரு குறிப்பிட்ட தொகைதான். மாத ஆரம்பத்துல சம்பளமா வரும். வருஷா வருஷம் ஏதோ சம்பள உயர்வு கிடைக்கும். ஆனா, மாசா மாசம் செலவு மட்டும் ஏறிக்கிட்டே போகும்! இதுல அத்தியாவசியச் செலவுகளை செஞ்சிட்டு, மீதியை மிச்சம் பிடிச்சு சேமிச்சு வெச்சு, எதிர்காலத் தேவைகளுக்கு முதலீடு பண்ணி குடும்பம் நடத்துற நாமதான் உண்மையிலேயே சூப்பர் ஃபைனான்ஸ் மினிஸ்டர்ஸ்!

இருந்தாலும் சில பேருக்கு பட்ஜெட் போடறதுன்னா வேப்பங்காயா கசக்கத்தான் செய்யுது. பட்ஜெட் போடறதுங்கறது கொஞ்சம் போரடிக்கிற விஷயம்தாங்க. ரொம்ப கணக்குப் பார்த்து பார்த்து வாழ்ந்தா சந்தோஷமே இல்லாம போயிடுது. பட்ஜெட் போட உட்கார்ந்தா நமக்கு நம்ம மேலேயே கொஞ்சம் குற்ற உணர்ச்சி வருது. கணவன் மனைவிக்குள்ள சண்டையே வந்துடுது. அதுனாலயே பட்ஜெட் போடலாமேன்னா பதறிப்போயிடுறாங்க. அப்படியெல்லாம் பயப்பட வேண்டாம்... சுலபமா ஜாலியா எப்படி பட்ஜெட் போடறதுன்னு பார்க்கலாம்...

மொதல்ல நல்ல விஷயத்திலிருந்து ஆரம்பிக்கலாம். அதான் வருமானத்திலிருந்து ஆரம்பிக்கலாம்... ஒரு பேப்பர்ல அதை எழுதுங்க. சம்பளம், வியாபாரம்னா அதுலேர்ந்து வர்ற பணம், வாடகை ஏதாவது வருதா, நிலத்திலிருந்து ஏதாவது வரவு இருக்கா, வங்கி வட்டி, டிவிடெண்ட் ஏதாவது வர வேண்டியது இருக்கா? எல்லாத்தையும் எழுதுங்க. மாசா மாசம் வரக்கூடிய வரவுகளைத் தனியாவும், வருஷத்துக்கு ஒரு தடவை போனஸ் மாதிரி கிடைக்கிற வருமானத்தை தனியாவும், மூணு மாசத்துக்கோ, ஆறு மாசத்துக்கோ வட்டி, டிவிடெண்ட் மாதிரி வரக்கூடிய வரவுகளைத் தனியாவும் குறிச்சு வையுங்க... எல்லாத்தையும் சேர்த்தா ஒரு வருஷத்துல நமக்கு எவ்வளவு வரவு வரும்னு கணக்குப் போடுங்க. எவ்வளவு சம்பாதிக்கறோம்னு தெரிஞ்சா கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். இருக்கா? சூப்பர்!

அடுத்து, அதே பேப்பர்ல இன்னொரு பக்கம் எவ்வளவு பணம் மாசா மாசம் கடன் கட்டுகிறோம்னு குறியுங்க... அதாவது வீட்டுக் கடன், கார் கடன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டு கடன், வேற கடன் ஏதாவது வாங்கியிருந்தோம்னா அதுக்கெல்லாம் சேர்த்து எவ்வளவு கட்டறோம்னு எழுதுங்க. அதையும் ஒரு வருஷத்துக்கு கணக்குப் போடுங்க.. இந்த தொகை உங்க வரவுல ஒரு பகுதியா இருக்கும். உதாரணத்துக்கு, உங்க வரவு எல்லாம் சேர்ந்து ஒரு வருஷத்துல ஒரு லட்ச ரூபாய்னு வையுங்க. கடன் செலவுகள் 20,000 முதல் 45,000 வரைக்கும் இருக்கலாம். உங்க வயசைப் பொறுத்து இந்த சதவிகிதம் மாறலாம். சாதாரணமா கீழ கொடுத்திருக்கற அட்டவணைப்படி உங்க கடன் விகிதம் இருந்தா நல்லது.

இது வரைக்கும் சரியா போகுதா? வெரி குட்! அடுத்து, ஒரு வருஷத்துல கட்ட வேண்டிய இன்ஷூரன்ஸ் பிரீமியம், ஆர்.டி., வருமான வரி விலக்குக்கான முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், பி.பி.எஃப்., சீட்டு மற்ற முதலீடுகள் எவ்வளவு பண்றீங்கன்னு ஒரு கணக்குப் போடுங்க. கொஞ்சம் ஃபைல் ஓபன் பண்ணி, பேப்பர் எல்லாம் புரட்ட வேண்டியிருக்கும். இந்த தொகை உங்கள் சம்பாத்தியத்துல குறைஞ்சது 10% ஆவது இருந்தா நல்லது. அதை விட அதிகம் இருந்தா சந்தோஷம். இதுவும் வயது, வாழ்க்கையின் எந்த கட்டத்துல இருக்கீங்க என்பதைப் பொறுத்து இருக்கு. ஆக இப்போ கடன் கணக்கு, முதலீடுகள் கணக்கு முடிஞ்சாச்சு!

அடுத்து, ஒரு மாசத்துல நிச்சயம் செய்ய வேண்டிய செலவுகள் என்னென்ன - வீட்டு வாடகை, பிள்ளைகள் பள்ளிக் கட்டணம், பலசரக்கு, காய்கறி, தொலைபேசி - மின்சாரக் கட்டணம், வீட்டு வேலை பார்ப்பவர்களுக்கான சம்பளம், போக்குவரத்து செலவுகள்னு கண்டிப்பா செய்ய வேண்டிய செலவுகள் என்னென்னனு ஒரு கணக்குப் போடுங்க. இதையும் வருஷத்துக்கு எவ்வளவுனு பாருங்க. இதோட வருஷத்துக்கு ஒரு முறையோ, மூணு அல்லது ஆறு மாசத்துக்கு ஒருமுறையோ கண்டிப்பா செய்ய வேண்டிய செலவுகள் அதான்... கார்/மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பிரீமியம், சொத்து/தண்ணீர் வரி, வாகன பராமரிப்பு செலவுகளையும் சேர்த்துக்கோங்க. இதுவும் எழுதிட்டீங்களா? இதுல சில செலவுகள் நடுத்தர மக்கள் எல்லோருக்கும் கிட்டதட்ட ஒரு அளவுலதான் இருக்கும். எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் நாலு பேர் இருக்கற வீட்டுல பலசரக்கு சாமான் செலவு சுமாரா 5,000 ரூபாய்தான் இருக்கும். ஆனா, இதர செலவுகள் லைஃப் ஸ்டைலை பொறுத்து கூடவோ குறையவோ இருக்கலாம். இது சாதாரணமா உங்க வரவுல 25-35 சதவிகிதமாக இருக்கலாம்.

கடைசியா போட வேண்டிய கணக்கு ஒரு மாசத்துல, அவ்வப்போது என்ன செலவு பண்றோம்ங்கிறதை. வெளியில போய்ச் சாப்பிடுறது, சினிமா, அவுட்டிங், பியூட்டி பார்லர், ஹேர் ஸ்டைலிங், உடைகள், திடீர் பயணம் அப்படின்னு முன்னரே பிளான் பண்ணாம நினைச்ச மாத்திரத்தில் என்னென்ன செலவுகள் பண்றோம்னு ஒரு மாசம் மட்டும் எழுதி வச்சுக்கோங்க. இல்ல, உங்களுக்கு இப்பவே ஒரு ஐடியா இருந்தா அதை இந்த பேப்பர்லயே எழுதுங்க. இது ஒவ்வொருத்தர் லைஃப் ஸ்டைலைப் பொறுத்து மாறும். எந்த ஊருல இருக்காங்க, அப்பா அம்மா கூட இருக்காங்களா, என்ன மாதிரி வேலை செய்றாங்க என்கிறதைப் பொறுத்து இருக்கு.

சரி, இப்போ இந்த பயிற்சி முடிஞ்சாச்சு. என்ன சம்பாதிக்கிறோம், என்ன செலவு பண்றோம்னு ஒரு ஐடியா வந்திருக்கும். இதை வச்சு என்ன பண்ணுறது? அதை ரெண்டு மூணு தடவை திருப்பி பார்த்தீங்கன்னா, எங்கேயாவது செலவை டிரிம் பண்ணலாமேனு தோணும். சில செலவுகள் தெரிஞ்சு செய்வோம், குழந்தைங்க ஸ்கூல், புத்தகம் அப்படின்னு சில செலவுகள் ஜாஸ்தியா இருக்கலாம். ஆனா அதை நாம குறைக்க விரும்ப மாட்டோம். சேமிப்புக்கான முதலீட்டையும் குறைக்கக் கூடாது. இப்பவே சொல்லிட்டேன். சில செலவுகளைக் குறைக்கலாம் ரொம்ப பெரிய காம்பரமைஸ் இல்லாமல். உதாரணத்துக்கு, வெளியே வாரா வாரம் சாப்பிடப் போறத்துக்குப் பதிலா மாசம் ரெண்டு தடவையா குறைச்சுக்கலாம். கடன் திரும்ப கட்டுறதுக்கான வட்டி செலவு அதிகமாகுதுன்னா குறைந்த வட்டிக் கடனுக்கு மாத்தலாம். ஆடைகளுக்கான செலவு அதிகம்னு தோணுச்சுன்னா ஆடி தள்ளுபடியில வாங்கி தீபாவளிக்கு வச்சுக்கலாம். இதையெல்லாம் யோசிச்சா உங்களுக்கே புரியும். நான் சொல்ல வேண்டியதில்லை.

ஆனா ஒரு விஷயம், எல்லா செலவுகளையும் குறைக்கனும்னு நினைக்காதீங்க. எந்தச் செலவைக் குறைச்சா மிக அதிகமா செலவு குறையும்னு பார்த்து அதுல கவனம் செலுத்துங்க. என்னோட அனுபவத்தில பெட்ரோல் செலவைக் குறைச்சது மிக பெரிய சேமிப்பா அமைஞ்சது. எதுக்கெடுத்தாலும் காரை எடுக்கிற எங்களோட லைஃப் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி பெட்ரோல் செலவை சுமார் 50% வரை குறைச்சிட்டோம்.

அதேசமயம் ஓட்டலுக்கே இனிமே போறதில்லை, சினிமாவுக்கே போறதில்லைனு முடிவு எடுக்கக் கூடாது. ரெண்டு மூணு மாசம் கழிச்சு அப்படி எடுத்த முடிவை கடைப்பிடிக்க முடியலையேனு வெறுப்புதான் மிஞ்சும். அப்புறம், 'பட்ஜெட்லாம் சும்மா வேஸ்ட், ரொம்ப கஷ்டம்’ அப்படின்னு சொல்லி விட்டுருவோம். அதுக்குப் பதிலா 'சாப்பாட்டுச் செலவுகளை 50% குறைக்கணும்’ அப்படினு ஒரு குறிக்கோள் வச்சுக்கிட்டு அதுக்கு ஒரு மூணு மாசம் டைம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டு வந்தோம்னா சுலபமா இருக்கும். முதல் மாச இலக்கு, 1,500 ரூபாயா இருக்கிற செலவை 1,200-ஆகக் குறைப்பது. அடுத்த மாசம் 1,000 ரூபாயா ஆக்கணும். அதுக்கு அடுத்த மாசம் 750-ஆகக் குறைச்சுக்கலாம். அப்போ மூணு மாசத்துல 50% செலவு குறைஞ்சிடும்.

பட்ஜெட் அப்படிங்கிறது எல்லாம் பெரிய ராக்கெட் அறிவியல் இல்ல. 'தேவை இல்லாத செலவுகள் செஞ்சு மத்தவங்களைப் பணக்காரங்களா ஆக்குறதை விட, செலவைக் குறைச்சு என்னை நானே பணக்காரனா ஆக்குவேன்’ அப்படிங்கிற உறுதி இருந்தா போதும்... செலவுங்கிற அசூரனை அழிச்சிட்டு குபேரனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்.

இனிமேயாவது பட்ஜெட் போட்டு சந்தோஷமா இருங்க

குழந்தை சாப்பிட மறுப்பதற்கு...



இன்றைக்கு பெரும்பாலான வீட்டின் பெற்றோர்கள் தம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று "குழந்தை சாப்பிட மறுக்கிறது டாக்டர், எவ்வளவுதான் திட்டி, அடிச்சாலும், அல்லது பாராட்டி, வீதிக்கு சென்று ஊட்டினாலும் சாப்பிட மறுக்கிறது. இதற்காக நாங்கள் கஷ்டப்படுகிறோம். ஏதாவது பசி எடுக்கிற மாதிரி மருந்து கொடுங்கள்" என்கின்றனர். 

பொதுவாக குழந்தை வளரும் பருவத்தில் உடல்நலமும் மனநலமும் பெற்றிருந்தால்தான், பிற்கால வாழ்க்கை மகிழ்ச்சியும் பயனும் நிறைந்ததாக இருக்கும். மாறாக குழந்தைப் பருவத்தில் ஏதாவது சிக்கல் ஏற்படின் அது மனநலத்தை அப்பருவத்திலும் பிற்கால வாழ்க்கையிலும் வெகுவாகப் பாதிக்கிறது. இதைப் பெற்றோரும் மற்றோரும் அவர்களது அனுபவங்கள் வாயிலாக அறியலாம்.
 

இத்தகைய பாதிப்புகள் அன்றாடச் செயல் குறைபாடுகள், நடத்தைக் குறைபாடுகள், இசைவின்மைப் பழக்கங்கள், என்று கொண்டு செல்லும் என்கிறார். தமிழ்நாடு மாநில மனநல சங்கத்தின் தலைவர் எஸ்.எம். பதூர் மொய்தீன் அவர் மேலும் கூறியதாவது:-
 

உணவு உண்பதில் சில குழந்தையிடம் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை இருவகைப்படும். அவை உண்ணமறுப்பது, அளவுக்கதிகமாக உண்பது.
 

உடல்நோய் ஏதுமில்லாமல் இருக்கும்போது குழந்தை உணவு உண்ண மறுத்தால் நிச்சயமாக மனம் சம்பந்தப்பட்ட காரணமாகத்தான் அது இருக்க முடியும்.
 

பெரும்பாலும் இதற்கடிப்படையானது, பெற்றோர் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொண்டுள்ள கோட்பாடுகளும் குழந்தைகளைக் கையாளும் முறைகளுமேயாகும். பசியின்மை என்று சொல்லுவதற்கும், உண்ண மறுப்பதற்கும் முக்கிய காரணங்கள், கவன ஈர்ப்பு, எதிர்ப்பு மனப்பான்மை, பகற்கனவு, பயம், பதற்றம், பெற்றோரின் மனோபாவம்.
 

கவன ஈர்ப்பு என்பது பெற்றோரின் கவனத்தை உண்ண மறுப்பதின் மூலம் ஈர்க்க எண்ணுவது அல்லது இதன் மூலமாகப் பெற்றோரையும் மற்றோரையும் தன் வசப்படுத்த நினைப்பதேயாகும். உண்ண மறுப்பது மறைமுகமாகத் தனது எதிர்ப்பு மனப்பான்மையை காட்டுவதேயாகும். இரண்டு வயதில் இருந்து மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் இது மிகவும் சாதாரணம். இதனால்தான் இப்பருவம் எதிர்ப்பு பருவம் எனக்கூறப்படுகிறது.
 

பகற்கனவு என்பது குழந்தை தனியாக அமர்ந்து கொண்டு ஏதாவது ஒன்றைப் பற்றி மிகப்பிரமாதமாகக் கற்பனையில் மூழ்குவதாகும். பயம், பதற்றம், கவலை அல்லது பெற்றோரின் மனோபாவத்தைப் பொறுத்தும் குழந்தை உணவு உண்ண மறுக்கலாம். குழந்தையை கேலி செய்தல், அதிக அளவில் செல்லம் கொடுத்தல், எதற்கெடுத்தாலும் பயமுறுத்துதல், எதிர்ப்புத் தெரிவித்தல் போன்ற காரணங்களால் குழந்தைக்கும் பெற்றோருக்கும் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் உருவாகின்றன.
 

எவ்வளவுக் கெவ்வளவு மன இறுக்கமும், உணர்ச்சியும் மிகுந்தவர்களாகப் பெற்றோர்கள் இருக்கிறார்களோ, அவ்வளவுக் கவ்வளவு ஏற்படுகிறது. இத்தகைய குழந்தைகளைப் பெற்றோர்கள் மிகவும் கவனமாக கையாளவேண்டும். உணவளிக்கும் போது குழந்தையை அடித்தோ பயமுறுத்தியோ, அழவைத்து சாப்பிட வைக்கக்கூடாது. அதன் போக்கில் விட்டு சாப்பிட வைக்கவேண்டும்.
 

குழந்தைக்கு ஏதாவது மனக்கஷ்டமோ, பிரச்சினைகளோ இருப்பின் அவைகளை அறிந்து மனநல மருத்துவர் துணையோடு பெற்றோர்கள் கையாண்டால் இப்பிரச்சினைக்கு மிக எளிதில் தீர்வு கண்டு விடலாம் என்கிறார் மருத்துவர் எஸ்.எம். பதூர் மொய்தீன்.
எப்போதும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுங்க, அது அவர்களை நல்லவர்கள் ஆக்கும் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சி முடிவு. 

குழந்தைகளின் வளர்ச்சியில் குறுக்கிடும் குடும்பங்களின் பழக்க வழக்கங்கள் பற்றி அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதன் முடிவில் கூறிய அம்சங்கள்:
 

பெற்றோர் எப்போதும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். அதனால், குடும்பப் பின்னணியைக் குழந்தைகள் அறிந்து கொள்ள வழி ஏற்படும். அதன்மூலம் அதிக தன்னம்பிக்கை, அடுத்தவருடன் பேசும் முறை, நட்பை வெளிப்படுத்தும் திறன், பல்வேறு கருத்துகளைச் சகித்துக் கொள்ளும் தன்மை ஆகியவற்றைக் குழந்தைகள் அறிந்து கொள்ள முடியும். சேர்ந்து சாப்பிடுவதால் குடும்பப் பாசம், விட்டுக் கொடுக்கும் தன்மை, உதவும் குணம் ஆகியவை அதிகரிக்கும்.
 

அதேபோல, குடும்பத்தில் ஏற்படும் இறப்பு, நெருக்கடி போன்ற எதிர்மறை விளைவுகளைக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மனம் திறந்து விவாதிப்பதால் உணர்ச்சி கரமான சூழலைக் கையாளும் திறனைக் குழந்தைகள் பெறமுடியும். மொத்தத்தில் பெற்றோரின் நெருக்கம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் நல்லவர்களாக உருவாவது நிச்சயம்.

அம்மாக்கள் கவனிக்க…




குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படாமல் இருக்க அம்மாக்கள் செய்ய வேண்டியவை:-
  • குழந்தைகள் அவசர அவசரமாக உணவு சாப்பிடுவதை தவிர்க்க உதவுங்கள்.
  • வாயு தொந்தரவு தரும் உணவுகளை குறைத்துக் கொடுங்கள்.
  • குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப் படுத்தாதீர்கள்.
  • காரம் மிகுந்த உணவுகளை அதிகம் கொடுக்காதீர்கள்.
  • சுத்தம், சுகாதாரம் இல்லாத இடங்களில் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்காதீர்கள்.
  • குழந்தைகளை தினமும் சரியான நேரத்திற்கு சாப்பிட வையுங்கள்.
  • நிறைய சத்து கிடைக்கும் என்று எண்ணி அதிகமாக பசும்பால் கொடுப்பது தவறானது என்பதை உணருங்கள்.
  • நிறைய தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்துங்கள். குழந்தைகள் தினமும் நான்கு அல்லது ஐந்து தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வையுங்கள். சாப்பிட்ட உடன் தூங்கிவிடாமல் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வைப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • என்ன உணவு கொடுக்கலாம்?


  • இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

    என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

    குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

    குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

    பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

    திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

    குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.

வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.

பலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.
  • குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்

    வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

    ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

    அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
    அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.

    பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.

    சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்
ஒவ்வாமை

குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

உணவு சாப்பிட மறுத்தால்

சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.

சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும் வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.

எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

உங்கள் குழந்தைக்கு ஜீரணக் கோளாறா? -காரணமும்… நிவாரணமும்…!




காலை உணவு கட்டாயம்:

பள்ளி செல்லும் நிறைய குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அல்லது அவசர அவசரமாக அள்ளி விழுங்கி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இந்த இரண்டுமே அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

காலை உணவு தான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும் குழந்தை சாப்பிட மறுக்கிறது என்று நினைத்து அவர்கள் சாப்பிடாமல் சென்றாலும் கண்டு கொள்வதில்லை.

உண்மையில் உடலானது குறிப்பிட்ட நேரத்துக்கு பசிக்கத் தொடங்கும். அதே போல குறிப்பிட்ட நேரத்தில் உணவு கொடுத்து பழக்கம் ஏற்படுத்திவிட்டால் சில நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும். எனவே குழந்தைகள் காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு பழக்கம் வருவதற்காக கட்டாயமாக சாப்பிட வைத்தால் பிறகு தானாகவே காலை 7 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும். சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

நிதானமாக சாப்பிடுதல்:

காலையில் ஏதாவது `ஹார்ன்’ சத்தம் கேட்டாலே பள்ளி பஸ் வந்துவிட்டதோ என்று எண்ணும் குழந்தைகளும், பெற்றோரும் ஏராளம். அதனால் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு பள்ளி வாகனத்தைப் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள்.

அவசர கோலத்தில் சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிடும் போது தான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.

செலியாக் நோய்:

அஜீரணத்தை உருவாக்கும் ஒரு நோய் செலியாக். கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் `குளூட்டன்’ என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் `செலியாக்’ எனப்படுகிறது.

இதன் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கெட்டவாடை வீசும். வயிறு உப்புசம் உருவாகும். இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். உடல் எடை குறையும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க அந்த புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு:

அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. உணவு சாப்பிடும் பழக்கம் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது. கோடைகாலங்களில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.

பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள் பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். இப்படி பால் ஒத்துக் கொள்ளாத பிரச்சினையை
 `லாக்டோஸ் இன்டால ரன்ஸ்’ என்று குறிப்பிடுவார்கள்.

வயிற்று வலி:

நாம் பொதுவாக வயிற்றில் எங்கு வலித்தாலும் வயிற்று வலி என்று சொல்கிறோம். ஆனால் வயிற்றின் ஒவ்வொரு பாகத்தில் ஏற்படும் வலிக்கும் வேறு வேறு காரணங்கள் உண்டு. அதிக பசியாலும், வயிற்று எரிச்சலாலும் தொப்புள் பகுதிக்கு மேல்புறமாக வலிக்கும். காலை உணவு சாப்பிடாவிட்டாலும், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடு பவர்களுக்கும் மேற்கண்டதுபோலவே வலி ஏற்படும்.

அஜீரண கோளாறாலும் வயிற்று வலி ஏற்படும். பயறு, கோஸ், பீன்ஸ் போன்ற உணவுகள் நைட்ரஜன் சத்து அதிகம் கொண்டவை. இவை அஜீரணத்தை ஏற்படுத்தும்.

காரம் அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, வாயு தொந்தரவு தரும் உணவுகளை தவிர்த்தால் வயிற்று வலியை தவிர்க்கலாம். அஜீரணத்தை தடுக்கலாம்.

துரித உணவுகள்:

குழந்தைகளுக்கு பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக பசிக்காது. அதேபோல `ஜங் புட்’ எனப்படும் உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது. துரித உணவுகள் எளிதில் வயிற்றை நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது. மேலும் ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது.

குழந்தை பசியின்மையாக இருந்தால் பிரச்சினைக்கான காரணத்தை தெரிந்து சரி செய்யப் பாருங்கள். உங்களுக்கு காரணம் தெரியாவிட்டால் மருத்துவரை அணுகுங்கள்.

பெரும்பாலும் குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப்படுத்தாதீர்கள்.
   அவர்கள் அந்த உணவின் ருசிக்கு அடிமைப்பட்டுப் போய்விடுவார்கள். அதனால் வீட்டில் எவ்வளவு ருசியாக உணவு சமைத்தாலும் அதை விரும்பமாட்டார் கள். எனவே எப்போதாவது ஓட்டல் உணவு, எப்போதுமே வீட்டு உணவு என்று பழக்கப் படுத்துங்கள்.
தண்ணீர்:

தண்ணீர் பருகுவது பலவித பிரச்சினைகளை தடுக்கும். போதுமான தண்ணீர் பருகா விட்டால் ஜீரணம் பாதிக்கும். ஜீரணம் சரியாக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் அதிகரித்தால் மலத்தோடு கோடு போல ரத்தம் வெளியேறும். இது மலத்துவாரத்தின் கீழ்ப்பகுதி கிழிவதால் ஏற்படுகிறது. இதனால் `ஆனல் பிஷர்’ நோய் உண்டாகும்.

தண்ணீர் அதிகம் குடிக்காமல் சாப்பிடுவது, பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் `டாய்லெட்’ செல்லப் பழக்க வேண்டும். பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வைக்க வேண்டும்.

குழந்தை நல குறிப்புகள்!




நோய்த்தடுப்பு:-

தற்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்றால் அவ்வீட்டில் ஒரு 'மினி மெடிக்கல் ஷாப்' உருவாகிவிடுகிறது என்றே கூறலாம். காய்ச்சல், சளி, வயிற்றுவலி ஆகியவைகளுக்கு மருந்து கொடுப்பது போன்றே ஒவ்வொறு காலகட்டத்திலும் பலவிதமான நோய்த் தடுப்பூசிகள் குழந்தைகளுக்குத் தருதலும் பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.
 

குழந்தை பிறந்தது முதல் மூன்று ஆண்டுகள் வரை நோயிலிருந்து பாதுகாத்து எடுப்பதே பெற்றோர்களுக்கு சிரமம் ஆகிவிடுகிறது. சற்று அசாதாரணமாக கவனிக்காமல் இருந்துவிட்டால் சில சமயங்களில் விளைவுகள் விபரீதமாகவும் நடந்துவிடுகிறது. குழந்தைகள் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு பல மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை பெற்றோர்கள் செயல்படுதல் மிகஅவசியம். குறிப்பாக குழந்தைகளுக்குத் தரப்படும் தடுப்பூசிகளில் கவனம் கொள்வது மிகவும் அவசியம்.
 

காசநோய் மற்றும் போலியோ:-

குழந்தை பிறந்த இருவாரங்களுக்குள் காசநோய் தடுப்பு மருந்தைக் கொடுக்கவேண்டும். போலியோ சொட்டு மருந்தை பிறந்ததும் ஒருமுறை, ஆறு, பத்து மற்றும் பதினான்காவது வார இறுதியில் ஒவ்வொரு முறை, ஒன்றரை வயதில் ஒருமுறை, நான்கரை வயதில் ஒருமுறை என்றாக முறையே இந்தத் தடுப்பு மருந்தை அளிக்க வேண்டும். பெரியம்மை நோய்க்கு அடுத்ததாக உலகிலிருந்தே ஒழிக்கப்படவேண்டிய நோய் என்று உலக சுகாதார நிறுவனம் தேர்ந்தெடுத்திருப்பது போலியோவைத்தான்.
 

முத்தடுப்பு ஊசி:-
 

டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ் ஆகிய மூன்று கடுமையான நோய்களைத் தடுக்கிறது. இதையும் ஐந்து முறை அளிக்கவேண்டும். 6, 10, 14 ஆவது வாரங்களின் இறுதியில் ஒவ்வொரு முறையும், 18 மாதம் முடியும்போது ஒரு முறையும் ஐந்து வயதை நிறைவு செய்யும்போது ஒருமுறையுமாக அளிக்கவேண்டும்.
 

ஹெபடிடிஸ் 'பி':-

எய்ட்ஸைவிட அதிகம் பேர் இறப்பது ஹெபடிடிஸ் 'பி' எனப்படும் மஞ்சள் காமாலை நோய்ப் பிரிவில்தானாம். நல்லவேளையாக இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டார்கள். குழந்தைக்கு எவ்வளவு வயதாக இருந்தாலும் இந்தத் தடுப்பு மருந்தை அளிக்கலாம். முதல் டோஸ் அளிக்கப்பட்ட அடுத்த மாதத்தில் இரண்டாவது டோஸும், முதல் டோஸ் அளித்த ஆறாவது மாதம் மூன்றாம் டோஸையும் கொடுக்க வேண்டும். ஹெபடிடிஸ் 'ஏ' விற்கும் இப்போது தடுப்பு மருந்து வந்துவிட்டது. ஒரு வயதில் ஒருமுறையும், பிறகு ஒன்றரை வயதில் அடுத்த முறையும் இதற்கான தடுப்பு மருந்து அளிக்கலாம்.
 

தட்டம்மை மற்றும் எம்.எம்.ஆர்:-

குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் ஆனபிறகு தட்டம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்தையும், ஒன்றேகால் வயதானபிறகு எம்.எம்.ஆர். எனும் தடுப்பு மருந்தையும் அளிக்கவேண்டும். இரு வருடங்களுக்குப் பிறகு டைபாய்டுக்கான தடுப்பு மருந்தையும் பத்து மற்றும் பதினாறு வருடங்களின் முடிவில் டி.டி. (டெடனஸ்) நோய்க்கெதிரான தடுப்பு மருந்தையும் அளிக்கலாம்.
 

முன்னெச்சரிக்கை:-

தடுப்பு மருந்தை அளிப்பதற்கு முன் உங்கள் பரம்பரையில் யாருக்காவது வலிப்புநோய் வந்திருந்தால் அதை டாக்டரிடம் மறக்காமல் கூறுங்கள். அதேபோல் வயிற்றுப்போக்கு, அதிக ஜுரம் போன்றவை குழந்தைக்கு அப்போது இருந்தால் அதையும் மறக்காமல் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அப்போது ஒருவேளை டாக்டர் இந்தத் தடுப்பு மருந்தை அளிப்பதை தள்ளிப்போடலாம். காரணம், சிலவகை தடுப்பு மருந்துகளுக்கு பக்கவிளைவுகள் உண்டு.
 

குழந்தைகளின் சின்னச் சின்ன உடல் அசௌகரியங்களுக்கு வீட்டிலேயே சில நிவாரணிகள்.
 

தலைக்குள் நீர் கோர்த்துக் கொள்ளுதல்:-

நீலகிரி தைலம் எனப்படும் யூகலிப்டஸ் எண்ணெயின் ஆவி பயனளிக்கும். மிகவும் சிறிய குழந்தை என்றால் தலையணையைச் சுற்றி யூகலிப்டஸ் எண்ணெய் நனைக்கப்பட்ட துணி உருண்டைகளை வைக்கலாம்.
 

காய்ச்சல்:-

க்ரோசின், ப்ரூஃபென் போன்ற மாத்திரைகளை நாடுவதற்கு முன் நீரினால் ஸ்பான்ஞ் பாத் கொடுங்கள். நேரடியாக ஐஸ் தண்ணீரில் உடலை ஒத்தியெடுக்கக்கூடாது. குளிரால் நடுக்கம் வந்துவிடலாம். சாதாரணமான தண்ணீரில் ஈரத்துணியை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும். டர்க்கி டவலாக இருந்தால் மேலும் நல்லது. முக்கியமாகப் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ள அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் நன்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பதினைந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும்.
 

தசைப்பிடிப்புகளும் சுளுக்கும்:-

விரல்களால் அந்தப் பகுதியை அழுத்தி நீவுவது, எண்ணெயைக் கொதிக்க வைத்து அந்தப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது என்பதெல்லாம் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி அந்தப் பகுதியில் ஒத்தி ஒத்தியெடுங்கள். பெரும்பாலும் சரியாகிவிடும். (ஐஸ் கட்டியை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவேண்டாம்).
 

விஷப்பூச்சிக்கடி:-

டாக்டரிடம் குழந்தையை எடுத்துச் செல்லுங்கள். ஆனால் அதற்குமுன் கடிவாய்ப் பகுதியை பலமுறை சோப்புத் தண்ணீரால் நன்கு கழுவிவிடுங்கள். இது அவசியமான முதலுதவி.
 

கீழே விழுந்து அடி:-

பஞ்சு மற்றும் பாண்டேஜ் துணி ஆகியவற்றால் மட்டும் அந்தப் பகுதியை அழுத்திக் கட்டினால்போதும். பெரிய காயம் என்றால் மருத்துவ உதவி தேவை. (மஞ்சள் பொடி, சர்க்கரை, காபி பொடி என்று அப்புவது வேண்டாம்.)
 

குழந்தை மருத்துவம் - தொகுப்பு




குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக கிடைக்கும் மருத்துவ கட்டுரைகள், ஆலோசனைகள், மற்றும் தகவல்களை இங்கே தொகுத்தளிக்க இருக்கிறேன். 

குழந்தைக்கு எது நல்லது?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.
 

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
 

நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.
 

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.
 

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.
 

குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.
 

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.
 

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

குழந்தை வளர்க்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:




குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சூப், ஜுஸ், போன்றவைகளுக்குப் பதிலாக பச்சைக் காய்கறிகள் பழங்களை அதிகமாக சாப்பிடக் கொடுங்கள். இது நல்ல செரிமானத்தை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். 

எப்போதும் குழந்தைகளை விமர்சிக்கும் போது நெகடி
வ் அணுகுமுறையைக் கையாளாதீர்கள். அவர்களூடைய பலங்களை எடுத்து சொல்லி இன்னும் சிறப்பாக என்னென்ன செய்யலாம் , என்னென்னவற்றைத் தவிர்க்கலாம் என்று எடுத்து சொல்லி ஊக்கம் கொடுங்கள். 

அதே சமயத்தில் ஊக்கம் கொடுத்து, உற்சாகப்படுத்துவது அவசியம் எ
ன்பதற்காக சின்ன சின்ன விஷயங்களை ஏதோ உலக சாதனை போல் புகழ்ந்து தள்ளாதீர்கள். உங்கள் பாராட்டு என்பது, தேவையான அளவிலான நிஜமான பாராட்டாக இருக்க வேண்டும். 

வீட்டில் வேலை செய்பவர்களை ஒரு போதும் மரியாதை குறைவாக பேசாதீர்கள். குழந்தைகளும் அதையே பி
ன்பற்றுவார்கள். இது ரொம்ப தவறு. சக மாணவர்கள் தொடங்கி, எல்லோரிடமும் அன்பாய் இருக்கவும், அதே சமயம் மதிக்கவும் கற்றுத் தாருங்கள்.
குழந்தைகள் மட்டுமே குறிப் பிட்ட அறையை பயன்படுத்தினால், அந்த அறை வண்ணமயமாகக் காட்சி தர வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்தவை கலர் கலரான பொருட்கள். நம் ஆசைகளை சிறிது விலக்கி விட்டு, குழந்தைகள் ஆசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவரவர் குழந்தைகள் எதை விரும்புகின்றனரோ அந்த சூழலைத் தர நாம் முயற்சிக்கலாம். 

இதன் மூலம் குழந்தைகள் தங்களின் பாடங்களை அல்லது வேலைகளை குறிப்பிட்ட இடத்தில் செய்யப் பழகுவர்.
 

குழந்தைக்கு "கார்ட்டூன்' இஷ்டம் என்றால் அந்த படங்களைப் போடலாம்.
 

இயற்கையை விரும்பினால் அது சம்பந்தமான படங்களைப் போட்டு அழகுபடுத்தலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்ட குழந்தைகளை, விளையாட்டு வீரர்களின் படங்களைப் போட்டு அவர்களை மகிழ்விக்கலாம்.
 

இப்படியாக, குழந்தைகளின் எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் தருவதன் மூலம் அதை தங்களின் அறையாக பாவித்து பாடங்களை கருத்துடன் படிக்க ஆரம்பிப்பர். படிப்பில் மட்டும் நாட்டம் கொண்ட குழந்தைகளாக இருந்தால் உலகப் படங்கள் போன்ற கல்வி சம்பந்தமான சாதனங்களை வைத்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்.
 

ஓரளவு வசதியிருந்தால், இரண்டு குழந்தைகள் இருக்கும் அறையில் "பங்க் பெட்' என்று சொல்லக்கூடிய அடுக்குக் கட்டில் போன்ற அமைப்பைத் தரலாம். "டிரெயின்' பர்த் போல் ஆசையுடன் படுத்து உறங்குவர்.
 

குழந்தைகளுக்கென தனி ஷோகேஸ், ரீடிங் டேபிள், வார்டுரோப், லான் கார்ப்பெட் என அனைத்தும் கிடைக்கின்றன. தனி இடம் இருந்தாலும் அவரவர் பட்ஜெட் படி அமைத்துக் கொள்ளலாம்.
 

அலமாரிகளில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, கதைப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், விளையாட்டுச் சாமான்கள், தினமும் பயன்படுத்தும் துணிகள், புதிய துணிகள், யூனிபார்ம் வகைகள் என்று பிரித்து தனித் தனியாக அடுக்கித் தரலாம். இதன் மூலம் அறை வெளியில் மட்டுமல்லாமல், அலமாரியின் உள்ளேயும் திறக்கும் பொழுதெல்லாம் அழகாக சுத்தமாக இருக்கும்.
 

இடம் சிறியதாக இருப்பவர்கள் இதுபோல் பல்வேறு வேலைகளை ஒரே இடத்தில் வசதியுடன் செய்வதோடு கலையம்சத்தையும் காட்ட முடியும்.
 

ஒரு சிறிய அறையை பேச்சலர்ஸ் ரூமாக, குழந்தைகள் அறையாக, ரீடிங் ரூமாக, ஆபீஸ் ரூமாக அமைப்பதுடன் விருந்தினர் வந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

நம் வீட்டின் அமைப்பு, நம் குடும்ப நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தான் அமைகிறது. என்றோ வரும் விருந்தினர்களை நாம் கணக்கிட முடியாது. அனைத்து அம்சங்களும் கொண்ட அறையில், இரண்டு அல்லது மூன்று குஷன் மற்றும் நல்ல கவர்கள், நல்ல தரமான படுக்கை விரிப்புகள் கைவசம் வைத்துக் கொண்டால் போதும். எப்பொழுது விருந்தினர் வந்தாலும் ரெடிமேட் "பெட்' தந்து விடலாம். கீழே ஒரு சிறிய ஜமக் காளம், அதன் மேல் ஒரு மெத்தை, நல்ல ஒரு "சாடின்' விரிப்பை போட்டு விட்டு இரண்டு அதே கலர் கவர் போட்ட குஷன்களை வைத்தால் போதும். பகலில் உட்காரவும், இரவில் படுக்கவும் பயன்படுத்தலாம்.
 

இதேபோல் இட வசதியோ, போதிய பண வசதியோ இல்லாதவர்கள் நல்ல "ஐடியா'வுடன் ரசனையோடு செயல்பட் டால் எந்த இடத்தையும் சுத்தமாக அழகாகக் காட்ட முடியும்.
 

1) குழந்தைகள் அறையில் மருந்து, மாத்திரைகளை கைக்கு எட் டாத இடத்தில் வைப்பது நல்லது.
 

2) கேசட், "சிடி' போன்றவைகளை ஒரு ஸ்டாண்டு வாங்கித் தந்து சிறிய குழந்தைகளை அடுக்கச் செய்து பழக்கினால் சிறு வயதிலேயே அவர்கள் பொருட்களை சரிவர வைக்கக் கற்றுக் கொள்வர்.
 

3) படிக்கும் குழந்தைகள் வாரம் ஒருமுறை தன் அலமாரிகளை தானே துடைத்து பொருட் களை அடுக்கவும், புத்தகங் களை வரிசைப் படுத்தவும் சொல்லித் தரலாம்

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts